Search This Blog

Tuesday, 2 November 2021

சரியான புரிதல் வேண்டும்

 

சரியான புரிதல் வேண்டும்  

           

وَكُلُوْا وَاشْرَبُوْا حَتّٰى يَتَبَيَّنَ لَـكُمُ الْخَـيْطُ الْاَبْيَضُ مِنَ الْخَـيْطِ الْاَسْوَدِ مِنَ الْفَجْرِ‌ؕ

 

இருள் விலகி விடியலின் (வெளிச்சம் எனும்) வெள்ளைக் கயிற்றை (இருள் எனும்) கறுப்புக் கயிற்றிலிருந்து பிரித்தறியும் வரை (அதிகாலை எனும் சஹர் உணவை) உண்ணுங்கள், பருகுங்கள்.    திருக்குர்ஆன்:- 2:187

 

மார்க்க விஷயத்திலும், உலக விஷயத்திலும் முறையான விளக்க சக்தி உடையவர்கள் வாழ்க்கையில் அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டே இருப்பார்கள். இவர்கள் மூலம் பிற மக்களுக்கும் பலாபலன் கிடைக்கிறது.

 

எந்த ஒன்றையும் மேலோட்டமாக பார்ப்பதைவிட அதன் உள்ளர்த்தம் என்ன? என்பதை விளங்க முயற்சிக்க வேண்டும். அப்போது தான் நமது அறிவு வளர்ச்சி அடையும்.

 

கருப்பு வெள்ளைக் கயிறு

 

அதீ பின் ஹாத்தம் (ரலி) அவர்கள் கூறியதாவது. (2:187 வசனம் அருளப்பட்டதும்) நான் வெள்ளைக் கயிறு ஒன்றையும், கருப்புக் கயிறு ஒன்றையும் எடுத்துக் கொண்டு இரவின் ஒரு பகுதி கழிந்தவுடன் (அவற்றை) உற்றுப் பார்த்தேன். ஆனால் அவற்றை பிரித்தறிந்து கொள்ள முடியவில்லை. காலையானதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து இதனை தெரிவித்து (2:187 ஆவது) வசனத்திலுள்ள கயிறுகள் (அல்கைத்) என்ற சொல் உண்மையிலேயே இரண்டு கயிறுகளை தான் குறிக்குமா? என்று வினவினேன். அதற்கு அண்ணலார்  ( لاَ بَلْ هُوَ سَوَادُ اللَّيْلِ وَبَيَاضُ النَّهَارِ ) "(அதன் பொருள்) அதுவல்ல. மாறாக அது இரவின் கருமையும், பகலின் வெண்மையுமாகும்" என்று பதிலளித்தார்கள்.   நூல்:- புகாரீ-4509, 4510

 

சஹல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது. (2:187 ஆவது) வசனத்தின் ஒரு பகுதி அருளப்பட்டதும், அப்போது மக்கள் சிலர் நோன்பு நோற்க நாடினால் தங்கள் இரு கால்களிலும் (ஒன்றில்) வெள்ளைக் கயிற்றையும், (மற்றொன்றில்) கருப்புக் கயிற்றையும் கட்டிக் கொண்டு இரண்டும் பார்வைக்குத் தெளிவாகப் புலப்படும் வரை (சஹர் உணவை) உண்டு கொண்டிருப்பார்கள்.

 

ஆகவே அதற்கு பிறகு அல்லாஹ் "மினல் ஃபஜ்ரு" (விடியல் வரை) எனும் சொல்லையும்  (அந்த வசனத்துடன்) சேர்த்து அருளினான். அப்போது அவர்கள் அதிகாலையையும், இரவையும் தான் (அல்கைத் எனும் சொல்) குறிக்கிறது என்று அறிந்து கொண்டனர்.        நூல்:-புகாரீ-4511

 

"அல்கைத்" என்பதற்கு கயிறு, நூல் என்பன சொற்பொருளாகும். இவ்வசனத்தில் "கைத்" என்ற சொல் உண்மையான கயிற்றை குறிக்கவில்லை. இரவின் இருட்டு என்பதற்கு (கைத்துல் அஸ்வத்) கருப்புக் கயிறு எனும் சொல்லையும், விடியல் வெளிச்சம் என்பதற்கு (கைத்துல் அப்யள்) வெள்ளைக் கயிறு எனும் சொல்லையும் திருக்குர்ஆன் கையாண்டுள்ளது.

 

திருமறை வசனத்தின் கருத்துப் பொருளை அறியாத சில நபித்தோழர்கள் வெள்ளை மற்றும் கருப்புக் கயிறுகளை எடுத்து வைத்துக்கொண்டு அவை இரண்டுக்குமிடையே வித்தியாசம் தெரியும் நேரம் வரும் வரை சஹர் உணவு உண்ணலாம், பருகலாம் எனப் புரிந்து கொண்டு அவ்வாறு செய்து பார்த்ததில் ஃபஜ்ரு (விடியல்) வரை கருப்பு வெள்ளைக்கிடையே வித்தியாசம் தென்படவில்லை. பிறகு "அல்கைத்" என்ற சொல்லுக்கு கருத்துப் பொருள் கிடைக்கப் பெற்றதும் தெளிவுப் பெற்றார்கள்.

 

போதும் போதும் என்று கூறும்

 

அருமை நாயகம் (ஸல்) கூறினார்கள். (நரகவாசிகள் நரகத்தில் போடப்பட்டு கொண்டேயிருப்பார்கள். அப்போதும்) நரகம் (வயிறு நிரம்பாமல்) "இன்னும் அதிகம் இருக்கிறதா?" என்று கேட்டுக் கொண்டேயிருக்கும். இறுதியில் கண்ணியத்தின் அதிபதியான இறைவன் தனது ( قَدَمَهُ ) பாதத்தை அதில் வைப்பான். அப்போது அது போதும் போதும் உன் கண்ணியத்தின் மீதாணையாக! என்று கூறும். அறிவிப்பாளர்:- அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள்     நூல்:- முஸ்லிம்-5472

 

இப்னு ஹஜர் அஸ்கலானி (ரஹ்) அவர்கள் கூறியதாவது. அல்லாஹ் நரகத்தை பணிய வைத்து போதும் என்று சொல்ல வைப்பதையே "பாதத்தை வைத்தல்" என உருவகப்படுத்தி இங்கே கூறப்பட்டுள்ளது. அல்லது நரகவாசிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகப்படுத்திக் கொடுப்பதையே மாற்று வார்த்தையால் இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது.   நூல்:- ஃபத்ஹுல் பாரீ

 

எகிப்தைச் சேர்ந்த முஹம்மத் அல்கஸ்ஸாலி அவர்கள் தனது நூல் ஒன்றில் குறிப்பிடுகிறார். இமாம் குர்துபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது. இந்த நபிமொழியில் ( قَدَمَهُ ) "கதமஹு" என்று படித்தால் "இறைவனின் பாதம்" என்று பொருளாகி விடும். ஆகவே இது சரியல்ல. மாறாக ( قِدَمَهُ ) "கிதமஹு" என்று படிக்க வேண்டும். ( قِدَمَهُ ) "கிதமஹு" என்பதன் பொருள் "அவனது பூர்வீக அறிவு" அதாவது இறைவன் தனது பூர்வீக அறிவால் யாரை முடிவு செய்திருந்தானோ அவர்கள் அனைவரையும் அதில் போடுவான். அப்போது வயிறு நிரம்பிய நரகம் போதும் போதும் என்று கூறும்.

 

முஸ்லிம் நூலில் (5471) வரும் அபூஹுரைரா (ரலி) அவர்களின் அறிவிப்பில் இறைவன் தனது ( رِجْلَهُ"ரிஜ்லஹு" காலை அதில் வைப்பான். அப்போது அது போதும் போதும் என்று கூறும் என இதே நபிமொழி சிறிது மாற்றத்துடன் வருகிறது.

 

நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நபி அய்யூப் (அலை) அவர்கள் திறந்த மேனியுடன் குளித்துக் கொண்டிருந்த போது தங்கத்தாலான ( رِجْلُ جَرَادٍ ) "ரிஜ்லு ஜராதின்" வெட்டுக் கிளிகளின் கூட்டம் அவர்கள் மீது வந்து விழுந்தது. உடனே அவர்கள் தமது ஆடையில் அள்ளத் தொடங்கினார்கள்.               அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள்          நூல்:- புகாரீ-7493

 

இந்த நபிமொழியில் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பெருங்கூட்டம் என்பதற்கு ( رِجْلُ"ரிஜ்லு" என்ற சொல்லை கையாண்டுள்ளார்கள். ஆகவே ( رِجْلُ"ரிஜ்லு" என்ற சொல்லுக்கு "பெருங்கூட்டம்" என்றும் பொருள் இருப்பதால், மேற்கண்ட நபிமொழியில் வரும் ( رِجْلَهُ"ரிஜ்லஹு" என்ற சொல்லுக்கு "அவனது கால்" என்று பொருள் கொள்ளாமல் "அவனது பெருங்கூட்டம்" என்று பொருள் கொள்ள வேண்டும்.

 

சிலர் மேற்கண்ட நபிமொழியில் வரும் ( رِجْلَهُ"ரிஜ்லஹு" என்பதற்கு அவனது பாதம் என்று பொருள் கொண்டு, மேலும் இது போன்ற சில  நபிமொழிகளுக்கு தவறான பொருள் கொண்டு அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு என்று வாதிடுகின்றனர். அல்லாஹ்வுக்கு படைப்பினங்களைப் போன்று உறுப்புகள் இருக்கின்றன என்று எண்ணுவதும், சொல்லுவதும் மாபெரும் தவறாகும். எனவே அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு என்று வாதிடுபவர்கள் நிச்சயமாக இணைவைப்பவர்களாக ஆகிவிட்டனர் என்பதில் சந்தேகமில்லை.

 

சில நேரங்களில் திருக்குர்ஆனையும், நபிமொழிகளையும் முறையாக விளங்கவில்லையெனில், அதுவே அவர்களை இறைநிராகரிப்பின் பக்கம் அழைத்து சென்று விடும். அதனால் தான் திருக்குர்ஆனையும், நபிமொழிகளையும் முறையாக விளங்கிக்கொள்வதற்கு நபித்தோழர்கள், இமாம்கள் மற்றும் உலமாக்கள் ஆகியோர்களின் விளக்கங்களையும் படிக்க வேண்டும்.

 

சொத்து வேண்டும்

 

(நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மறைவுக்கு பிறகு அண்ணலாரின் அருமை மகள்) ஃபாத்திமா (ரலி) அவர்கள் ஜனாதிபதி அபூபக்ர் (ரலி) அவர்களிடம் ஆளனுப்பி அண்ணலார் வசமிருந்த நிலத்திலிருந்து தங்களுக்கு சேர வேண்டிய சொத்தை கேட்டார். அதற்கு ஜனாதிபதி அவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ( لاَ نُورَثُ، مَا تَرَكْنَا صَدَقَةٌ، إِنَّمَا يَأْكُلُ آلُ مُحَمَّدٍ صلى الله عليه وسلم فِي هَذَا الْمَالِ ) "(இறைத்தூதர்களாகிய) எங்கள் சொத்துக்களுக்கு வாரிசாக யாரும் வர முடியாது. நாங்கள் விட்டு செல்பவையெல்லாம் தர்மம் செய்யப்பட வேண்டியவை ஆகும். இந்த செல்வத்திலிருந்துதான் முஹம்மதின் குடும்பத்தினர் உண்பார்கள் என்று சொல்லக் கேட்டுள்ளேன்" என்று கூறி விட்டு நான் இவ்விதமே செயல்படுவேன் இதற்கு மாற்றமாக செயல்பட முடியாது என்று பதிலளித்து விட்டார்கள்.

 

ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் அவற்றில் எதையும் ஒப்படைக்க ஜனாதிபதி அவர்கள் மறுத்து விட்டார்கள். இதனால் ஜனாதிபதி அபூபக்ர் (ரலி) அவர்கள் மீது மன வருத்தம் கொண்டு இறக்கும் வரை அவர்களுடன் ஃபாத்திமா (ரலி) அவர்கள் பேசவில்லை.  நூல்:- புகாரீ-4240, 4241

 

ஃபாத்திமா (ரலி) அவர்கள் இறக்கும் வரை ஜனாதிபதி அபூபக்ர் (ரலி) அவர்களிடம் பேசவில்லை என்பதன் பொருள் என்னவென்றால் ஃபாத்திமா (ரலி) அவர்கள் இறக்கும் வரை  தனது தந்தையின் அந்த சொத்து விஷயமாக மீண்டும் ஜனாதிபதி அபூபக்ர் (ரலி) அவர்களிடம் பேசவில்லை என்பதே சரியான விளக்கமாகும். இதுவே அவர்களின் கண்ணியத்திற்குரிய விளக்கமாகும் என சில மார்க்க அறிஞர்கள் கூறுகின்றனர்.

 

குணக்குன்றாக விளங்கிய ஃபாத்திமா (ரலி) அவர்கள் உலகத்தின் அற்ப பொருள்களுக்காகவெல்லாம் கோபித்து கொண்டு எவரிடமும் பேசாமல் இருந்ததில்லை. "இறைத்தூதர்களின் சொத்துக்களுக்கு எவரும் வாரிசாக முடியாது" என்ற நபிமொழியை ஃபாத்திமா (ரலி) அவர்கள் இதற்கு முன் அறியவில்லை. இந்த நபிமொழியை முன்பே அறிந்திருந்தால் "தனக்கு சேர வேண்டிய சொத்தை தாருங்கள்" என விண்ணப்பித்திருக்க மாட்டார்கள்.

 

தல்பீஸு இப்லீஸ்

 

இப்னு ஜவ்ஸீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ( رَسُولُ اللهِ صَلَّی اللهُ عَلَیهِ وَسَلَّم اَنَّهُ نَهَی اَنْ يَّسْقٰی الرَّجُلُ مَاءَهُ زَرْعَ غَیْرِهِ ) ஒரு மனிதன் தனது தண்ணீரை அடுத்தவரின் பயிரில் பாய்ச்சுவதை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள். (நூல்:- அபூதாவூத், திர்மிதீ, புலூகுல் மராம்-1148) என்பது இந்த நபிமொழியின் நேரடிப் பொருள்.

 

ஒரு சபையில் இந்த நபிமொழியை ஒருவர் கூறினார். இதைக் கேட்டவுடனே அச்சபையில் இருந்தவர்கள் "ஆஹா நாங்கள் தவறிழைத்து விட்டோமே! பலமுறை எங்கள் வயலுக்குத் தேவையான தண்ணீர் போக மீதமுள்ள தண்ணீரை பக்கத்து வயலுக்கு திருப்பி விட்டிருக்கிறோமே! எங்களை அல்லாஹ் மன்னிப்பானாக!" என்று கூறி வருத்தப்பட்டனர்.

 

ஆனால், இந்த நபிமொழியின் மூலம் "கர்ப்பமுற்றிருக்கும் அடிமைப்பெண்ணை விலைக்கு வாங்கியவர் அவளை அதே நிலையில் உடலுறவு கொள்வது கூடாது" என்பது தான் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் கருத்தாகும். ஆனால் இந்த கருத்தை நபிமொழியை போதித்தவரும் உணரவில்லை. கேட்டவர்களும் உணரவில்லை.       நூல்:- தல்பீஸு இப்லீஸ்- பாபுஸ் ஸாதிஸ்

 

ஹதீஸ் கலை வல்லுனர் இமாம் கத்தாபீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.  ஹதீஸ் கலை பேராசிரியர் ஒருவர் ( رَسُولُ اللهِ صَلَّی اللهُ عَلَیهِ وَسَلَّم اَنَّهُ نَهَی عَن الحَلَق قَبْلَ الصَّلَاةِ يَومَ الْجُمْعَةِ )" என்ற இந்த நபிமொழியில் "ஹல்க்" என்று தவறாக வாசித்து அதற்கு) "ஜும்ஆ உடைய நாளில் தொழுகைக்கு முன்னர் சவரம் செய்வதை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள்." என்று (இந்த நபிமொழிக்கு பொருள் வைத்து) கூறி விட்டார்.

 

மேலும் இந்த நபிமொழியை கூறிவிட்டு, வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கு முன்னர் தலை முடி எடுப்பது, சவரம் செய்வது கூடாது என்று அண்ணலார் கூறியுள்ளார்கள் என விளக்கமளித்துவிட்டு, நான்  40 ஆண்டுகளாக இந்த நபிமொழியின்படி செயல்பட்டு வருகிறேன் என்றும் கூறினார்.

 

இதை செவியுற்ற இமாம் கத்தாபீ (ரஹ்) அவர்கள் ஆசிரியர் அவர்களே! இந்த நபிமொழியில் "ஹல்க்" என்று இல்லை "ஹலக்" என்று தான் உள்ளது. (ஹல்க் என்றால் சவரம் செய்தல். ஹலக் என்றால் வட்டமாக அமருதல்.) எனவே அண்ணலார் ஜும்ஆ தொழுகைக்கு முன்னர் பள்ளிவாசலில் வட்டமாக அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதைத் தான் தடை செய்துள்ளார்கள். ஏனெனில் அந்த நேரம் சுன்னத் தொழுவதற்கும், குத்பா எனும் பிரசங்கம் கேட்பதற்கும் உரிய நேரமாகும்" என்று இந்த நபிமொழியின் சரியான விளக்கத்தை நான்  கூறிய போது அந்த பேராசிரியர் பெரிதும் வியந்தார். தவறைச் சுட்டிக் காட்டியதற்கு நன்றியும் கூறினார்.          நூல்:- தல்பீஸு இப்லீஸ்-பாபுஸ் ஸாதிஸ்

 

சில நபிமொழிகளை எல்லோராலும் சரியான முறையில் விளங்க இயலாது. எனவே தான் நபிமொழி துறை நிபுணர்களின் விளக்கங்கள் தேவைப்படுகிறது. உலகத்திலுள்ள எந்த துறையாக இருந்தாலும் அந்தந்த துறையின் நிபுணர்களின் விளக்கங்களின்றி அதனை சரியான முறையில் விளங்க இயலாது.

 

அறிவார்ந்த கேள்வி

 

அபூஹுரைரா (ரலி) அவர்கள் ( الْوُضُوءُ مِمَّا مَسَّتِ النَّارُ )நெருப்பு தீண்டிய (சமைத்த) பொருளை உண்ட பின்னர் (புதிதாக) உளூ எனும் அங்கத்தூய்மை செய்ய வேண்டும் என்பது நபிமொழியாகும் என்று கூறினார்கள். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ( يَا أَبَا هُرَيْرَةَ أَنَتَوَضَّأُ مِنَ الْحَمِيمِ ) அபூஹுரைராவே! வெந்நீர் பருகினாலும் உளூ செய்ய வேண்டுமா?” (அதுவும் நெருப்பில் சமைக்கப்பட்டது தானே) என்று கேள்வி கேட்டார்கள்.      நூல்:- திர்மிதீ-74

 

இங்கே இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் நபிமொழியை மறுக்கவில்லை. அதற்கு எதிராக விவாதம் செய்யவுமில்லை. மாறாக அந்நேரத்தில் முறையாக கேள்வி கேட்டு நபிமொழியைப் பற்றி சரியான புரிதலை உண்டாக்கினார்கள். எந்த நபிமொழியையும் அதன் உள்ளே புகுந்து நுணுகி ஆராய வேண்டும். மேலோட்டமாக பார்த்து பொருள் செய்யக் கூடாது என்றும் கற்பித்தார்கள்.

 

ஒருவர் நெருப்பால் சமைக்கப்பட்ட பொருளை சாப்பிட்டால் அவர் உளூ செய்த பின்னரே தொழ வேண்டும் என்பது பழைய சட்டமாகும். இது காலாவதியாகி விட்டது. எனவே இந்த சட்டம் மாற்றப்பட்டு சமைத்த பொருளை சாப்பிடும் ஒருவர் ஏற்கனவே உளூ செய்திருந்தால் புதிதாக உளூ செய்யாமலேயே தொழலாம் என்ற விதி நடைமுறைக்கு வந்தது என்று இமாம் நவவி (ரஹ்) அவர்கள் விவரிக்கிறார்கள்.

 

ஓதிப்பார்த்தல், தாயத்து கட்டுதல்

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِنَّ الرُّقَى وَالتَّمَائِمَ وَالتِّوَلَةَ شِرْكٌ ) ஓதிப்பார்த்தல், தாயத்து கட்டுதல் இணைவைப்பாகும்.  நூல்:- அபூதாவூத்-3883

 

 

சிலர் இது போன்ற நபிமொழிகளை ஆதாரமாக கொண்டு சரியான புரிதலின்றி  ஓதிப்பார்த்தல், தாயத்து கட்டுதல் இணைவைப்பாகும் என்று தவறாக பரப்புரை செய்கின்றனர். எந்த செயலையும் மார்க்கத்தின் தக்க சான்று இன்றி “இது இணைகற்பிக்கும் செயல்” என்று சொல்வது மாபெரும் தவறாகும். எல்லாவற்றையும் இணைவைப்பு என சொல்லி ஆகுமான விஷயங்களைக்கூட தவிர்ந்து கொள்வது அறியாமையே!

 

அறியாமைக் காலத்தில் அரபியர் நோய்வாய்ப்பட்டு விட்டால் ஜோதிடர்களிடமும், சூனியக்காரர்களிடமும் சென்று ஓதிப்பார்ப்பார்கள். அவர்கள் அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்கும் சொற்களை மந்திரங்களாக உச்சரிப்பார்கள். இஸ்லாம் வந்த பிறகு ஜோதிடர்களிடம் சென்று ஓதிப்பார்ப்பதையும், அவர்களிடம் தாயத்து வாங்கி அணிந்து கொள்வதையும் இணைவைத்தல் ஆகும் என்று கூறி அதற்கு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தடைவிதித்தார்கள் என்று நபிமொழி விரிவுரையாளர்கள் விவரிக்கிறார்கள்.

 

கண்ணேறு, விஷக்கடி, ஜின் தொல்லை மற்றும் நோய்நொடிகள் ஆகியவற்றுக்காக திருக்குர்ஆன் வசனங்கள், நபிமொழிகளிலும் வந்துள்ள துஆக்களைக் கொண்டு  ஓதிப்பார்த்தல், தாயத்து போடுதல் அனுமதிக்கப்பட்ட செயலே என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அவைகளைக் கொண்டு தமக்கு தாமே ஓதிப்பார்த்துள்ளார்கள். பிறருக்கும் ஓதிப்பார்த்துள்ளார்கள் என்பதற்கும் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.

 

அவ்ஃப் பின் மாலிக் அல்அஷ்ஜஈ (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்று நாயகமே! நாங்கள் அறியாமைக் காலத்தில் ஓதிப்பார்த்து வந்தோம். எனவே இது குறித்து தாங்கள் என்ன கருதுகிறீர்கள் என்று வினவினோம். அதற்கு அண்ணலார் எங்களிடம் ( اعْرِضُوا عَلَىَّ رُقَاكُمْ لاَ بَأْسَ بِالرُّقَى مَا لَمْ يَكُنْ فِيهِ شِرْكٌ ) "நீங்கள் ஓதிப்பார்ப்பதை என்னிடம் சொல்லிக் காட்டுங்கள். (இறைவனுக்கு) இணைகற்பிக்கும் வாசகம் அதில் இல்லையானால் ஓதிப்பார்த்தலில் எந்த குற்றமும் இல்லை" என்று கூறினார்கள்.        நூல்:- முஸ்லிம்-4427

 

ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது. நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்த போது எங்களில் ஒருவரை தேள் கொட்டிவிட்டது. அப்போது ஒரு மனிதர் நாயகமே! நான் ஓதிப்பார்க்கட்டுமா? என்று கேட்டார். அதற்கு அண்ணலார் ( مَنِ اسْتَطَاعَ مِنْكُمْ أَنْ يَنْفَعَ أَخَاهُ فَلْيَفْعَلْ )  "உங்களில் ஒருவர் தம் சகோதரருக்கு பயனளிக்க முடிந்தால் அவ்வாறே செய்யட்டும்" என்று கூறினார்கள்.         நூல்:- முஸ்லிம்-4424

 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. தம் வீட்டாரில் யாரேனும் நோய்வாய்ப்பட்டு விட்டால், அவருக்காக பாதுகாப்புக் கோரும் 113 வது, 114 வது அத்தியாயங்களை ஓதி ஊதுவார்கள்.       நூல்:- புகாரீ-5735, முஸ்லிம்-4413, 4414

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِذَا فَزِعَ أَحَدُكُمْ فِي النَّوْمِ فَلْيَقُلْ أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ غَضَبِهِ وَعِقَابِهِ وَشَرِّ عِبَادِهِ وَمِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ وَأَنْ يَحْضُرُونِ ‏.‏ فَإِنَّهَا لَنْ تَضُرَّهُ )உங்களில் ஒருவர் தூக்கத்தின்போது திடுக்கமடைந்தால், “அஊது பிகலிமாத்தில்லாஹித் தாம்மாத்தி மின் ஙலபிஹி வஇக்காபிஹி வஷர்ரி இபாதிஹி வமின் ஹமஸாத்திஷ் ஷயாத்தீனி வஅய் யஹ்ளுரூன்” (பொருள்: பரிபூரணமான அல்லாஹ்வுடைய வார்த்தையைக் கொண்டு அவனுடைய கோபத்தை விட்டும், அவனுடைய வேதனையை விட்டும் ஷைத்தான்கள் என்னிடம் வருவதை விட்டும் (அல்லாஹ்விடம்) பாதுகாப்பு தேடுகிறேன்) என்று ஓதிக் கொள்ளவும். நிச்சயமாக அந்த கனவு அவருக்கு எந்த தீங்கையும் ஏற்படுத்தாது" என்று கூறினார்கள்.

 

அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) அவர்கள் தனது பிள்ளைகளில் (சொல்வதை விளங்கிக் கொள்ளும்) வயது வந்தவர்களுக்கு இந்த துஆவை கற்றுக் கொடுப்பார்கள். விவரம் அறியாத சிறு பிள்ளைகளுக்கு இந்த துஆவை எழுதி அவர்களின் கழுத்துகளில் (தாயத்து போன்று) தொங்க விடுவார்கள்.  அறிவிப்பாளர்:- அம்ரு பின் ஷுஐப் (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்-3893, திர்மிதீ-3441

 

அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது. உங்களில் ஒருவர் ஏதேனும் நோயிலிருந்து நிவாரணம் பெற விரும்பினால், அல்லாஹ்வின் வேதத்திலிருந்து ஒரு வசனத்தை ஒரு தட்டில் எழுதி, மழை நீரால் அதை கழுவட்டும். பின்னர் தம் மனைவி மனமுவந்து அளிக்கும் ஒரு திர்ஹத்தைப் பெற்று அதைக் கொண்டு தேன் வாங்கி, அதனுடன் அருந்தட்டும். இது (அனைத்து வகையிலும்) நிவாரணமாகும்

 

மற்றொரு வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்: நாம் இந்த  குர்ஆனில், இறை நம்பிக்கையாளர்களுக்கு நிவாரணமாகவும் அருளாகவும் உள்ளவற்றை அருளியிருக்கிறோம். (17:82)

 

மற்றொரு வசனத்தில் "நாம் வானிலிருந்து வளம் பொருந்திய (மழை) நீரை பொழியச் செய்தோம்" (50:9) என்று அல்லாஹ் கூறுகிறான்.

 

இன்னொரு வசனத்தில் "அதில் எதையேனும் அவர்கள் மனமுவந்து உங்களுக்கு விட்டுக் கொடுத்தால் அதை மனநிறைவுடன் மகிழ்வுடனும் உண்ணுங்கள்" (4:4) என்று அல்லாஹ் கூறுகிறான்.

 

தேனைப் பற்றி "அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது" என்று அல்லாஹ் கூறுகிறான். (16:69) நூல்:- தப்சீர் இப்னுகஸீர் அந்நஹ்ல் வசனம்-69

 

பொதுவாக எல்லா நோய்களுக்கும் குறிப்பாக கண்ணேறு, விஷக்கடி, ஜின் ஷைத்தானின் சேட்டைகள் ஆகியவற்றுக்கு திருமறை வசனங்கள் மற்றும் நபிமொழிகளில் வந்துள்ள துஆக்களைக் கொண்டு ஓதிப்பார்க்கலாம் அதனை எழுதி தாயத்தாக அணிந்து கொள்ளலாம். அதனை எழுதி கரைத்துக் குடிக்கலாம். ஆனால் இவைகளில் இணைகற்பிக்கும் வார்த்தைகள் கலந்து விடக்கூடாது. நமது மார்க்கத்தின் முன்னோர்களிடம் இந்த வழமை இருந்திருக்கிறது.

 

ஓதிப்பார்ப்பதற்கும், எழுதி தாயத்து அணிந்து கொள்வதற்கும் சில நிபந்தனைகள் உண்டு என மார்க்க அறிஞர்கள் கூறுகிறார்கள்.

 

1) இன்னது தான் ஓதப்படுகிறது, எழுதப்பட்டுள்ளது என்று தெளிவாக புரிய வேண்டும். அதில் அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்கும் வார்த்தைகளும், அர்த்தம் புரியாத வார்த்தைகளும் இருக்கக்கூடாது.

 

 

2) ஓதிப்பார்த்தல் மற்றும் தாயத்து மூலமாக கண்டிப்பாக பலன் ஏற்படும் என்று கருதக்கூடாது. சிலவேளைகளில் பலனளிக்காது போனால் அவைகளை தவறான எண்ணக்கூடாது.

 

3) இவைகள் மூலம் நேரடியாக குணம் ஏற்படுவதில்லை. மாறாக அல்லாஹ் தான் குணமளிக்கிறான். இதை மருந்தைப் போன்று ஒரு காரணியாக ஆக்கியுள்ளான். இவைகள் சிகிச்சையின் ஒரு வகை தான். அது பலனளிக்கலாம் அல்லது பலனளிக்காமலும் போகலாம் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும்.

 

4) ஓதிப்பார்ப்பவர் அதற்கான முறையை தெரிந்து வைத்திருக்க வேண்டும். எதையாவது ஓதிக் கொண்டு மக்களை ஏமாற்றக் கூடாது. மேலும் அந்நியப் பெண்களுக்கு தனிமையில் ஓதிப்பார்க்கக்கூடாது.

 

5) முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாதவர் யாராக இருந்தாலும் சரியே திருக்குர்ஆன் வசனங்களை அவர்கள் உதாசீனப்படுத்துவார்கள் என்றிருந்தால் அவர்களுக்கு திருக்குர்ஆன் வசனங்களை எழுதி கொடுக்கக் கூடாது. அவர்கள் அதை கண்ணியமாக வைத்துக்கொண்டால் பரவாயில்லை.

 

மாந்திரீகம் செய்யும் பிற சமயத்தவர்களிடமும் மற்றும் குறிப்பிட்ட இன்னார் ஏகத்துவத்திற்கு எதிரான கருத்துகள் உள்ள வாசகங்களை கொண்டு செயல்படுகிறார் என்று உறுதியாக அறிந்திருந்தால் அவரிடமும் செல்லக்கூடாது. இது போன்றவர்கள் மூலம் பலன் ஏற்படுதல் என்பது இவர்கள் சத்தியத்தில் உள்ளனர் என்பதற்கு ஆதாரமல்ல. ஷைத்தான் இவர்களுக்கு உதவியாக இருக்கிறான் என்றே விளங்க வேண்டும்.

 

நாற்பது ஆண்டுகள்

 

சயீது பின் முசய்யிப் (ரஹ்), அபுல் முஃதமர் (ரஹ்) மற்றும் சில தாபியீன்கள் (நபித்தோழர்களை நேரில் பார்த்த முஸ்லிம்கள்)  40 ஆண்டுகள் இஷா தொழுகையையும், ஃபஜ்ரு தொழுகையையும் ஒரே உளூவைக் கொண்டு தொழுது வந்தார்கள் என அபூதாலிப் மக்கீ (ரஹ்) அவர்கள் கூறியதாக இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் எழுதியுள்ளார்கள்.

 

மேலும் இமாம் அபூஹனீஃபா (ரஹ்) அவர்களும் ( قَدْ صَلَّی الْفَجْرَ بِٶُضُوْءِ الْعِشَاءِ اَرْبَعِیْنَ سَنَةً ) 40 ஆண்டுகள் இவ்விதமே தொழுது வந்தார்கள். நூல்:- தஹ்தீபுத் தஹ்தீப்,  அல்கைராத்துல் ஹிசான் இமாம் தஹபீ,  துர்ருல் முக்தார்

 

சிலர் இந்த வரலாற்றுச் செய்தியை படித்து விட்டு சந்தேகத்தின் அடிப்படையில் அது எப்படி இந்த இமாம்கள் 40 ஆண்டுகள் இஷாவையும் பஜ்ரையும் ஒரே உளூவைக் கொண்டு தொழுதிருக்க முடியும்? அப்படி என்றால் இந்த இமாம்கள் இரவில் தூங்கவே இல்லையா? மனைவியுடன் உடலுறவில் ஈடுபடவே இல்லையா? இவர்களுக்கு இரவின் இடையில் காற்று பிரியவே இல்லையா? மலம் ஜலம் கழிக்கவே இல்லையா? என்றெல்லாம் கேள்விக் கேட்டு கேலி கிண்டல் செய்கின்றனர்.

 

இந்த வரலாற்றுச் செய்திகள் அந்த இமாம்களைப் பற்றி பெருமிதமாக சொல்லப்பட்ட ஒரு தகவல் என்றே எண்ண வேண்டும்.

 

40 ஆண்டுகள் என்றால் அதில் ஒரு இரவுக்கூட கண்ணயரவில்லை, மலம் ஜலம் கழிக்கவில்லை, குடும்பத்தினருடன் உறவாடவில்லை என்று பொருளல்ல. இதனை சாமானியர்களும் புரிந்து கொள்வார்கள்.

 

நான் 20 ஆண்டுகளாக வெளிநாட்டில் இருக்கிறேன் என்றால் அவர் தன் சொந்த ஊருக்கு ஒருமுறை கூட போனதில்லை என்று அர்த்தமல்ல. அதை எப்படி எடுத்து கொள்வோமோ அந்த அடிப்படையில் தான் இமாம்களைப் பற்றிய இந்த செய்தியையும் விளங்க வேண்டும்.

 

40 ஆண்டுகள் இஷாவையும் பஜ்ரையும் ஒரே உளூவைக் கொண்டு தொழுது வந்தார்கள் என்று கூறினால் அதிகபட்ச காலம் இவ்வாறு தொழுது வந்துள்ளார்கள் என்று தான் அதனை விளங்க வேண்டும். இம்மாதிரியான பேச்சுகள் சாமானிய மக்களின் வழக்கத்திலும் உள்ள ஒன்று தான். ஆனால் இதை கேலி கிண்டல் செய்யும் இவர்களுக்கு புரியாமல் போனது, இந்த இறைநேசர்களின் வரலாற்றின் மீதுள்ள வெறுப்பினாலா? அல்லது போதிய விளக்க சக்தி இல்லாததாலா? என்று புரியவில்லை.

 

சமையல் புத்தகம் 

 

ஒரு நூலை வாசிக்கும்போது அந்த நூல் ஆசிரியர் என்ன கருத்தை சொல்கிறார் என்பதையும் விளங்கி வாசிப்பதே சிறந்தாகும். மாறாக நூலில் உள்ள எழுத்துக்களை மட்டும் வாசித்து கொண்டே போனால் ஒன்றும் புரியாது. வாசிப்பதின் நோக்கமும் நிறைவேறாது.

 

ஒருவனுக்கு பாயாசம் சாப்பிட ஆசை ஆனால் அவனுக்கு பாயாசம் சமைக்க தெரியாது. உடனே புத்தகக் கடைக்கு சென்று "பாயாசம் சமைப்பது எப்படி ?" என்ற ஒரு நூலை விலைக்கு வாங்கி வந்து அதில் எழுதப்பட்டுள்ளபடியே அடுப்பில் சட்டியை வைத்து ஒவ்வொரு பொருளாக போட்டுக்கொண்டே வந்தான். "இறுதியாக ஏலம் போட்டு இறக்கவும்" என்று எழுதப்பட்டிருந்தது. அவனும் இறுதியாக "பாயாசம் ஒரு தரம், பாயாசம் இரண்டு தரம், பாயாசம் மூன்று தரம்" என்று சப்தமாக ஏலம் போட்டு இறக்கினான்.

 

சமையலுக்கு பயன்படுத்தும் சுவைக்கூட்டு பொருளான (ஏலக்காய்) ஏலத்தை போடுவது தான் நூல் ஆசிரியரின் நோக்கம். ஆனால் அந்நூலை வாசித்தவன் தவறாக விளங்கிக் கொண்டான். இவனைப் போன்று தான் இஸ்லாமை தூய வடிவில் போதிக்கிறோம் என்று தற்காலத்தில் கிளம்பியுள்ள சில மேதாவிகளின் நிலையும் இருக்கிறது.

 

புகார் செய்கிறாள்

 

இமாம் ஷுஅபி (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஒருமுறை ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களிடம் ஒரு பெண் வந்து ஜனாதிபதி அவர்களே! எனது கணவர் பகலெல்லாம் நோன்பு நோற்றுக் கொண்டும், இரவெல்லாம் தொழுதுக் கொண்டும் இருக்கிறார் என்று கூறினாள். இதை செவியுற்ற ஜனாதிபதி அவர்கள், ( جَزَاكِ اللهُ خَیْرًا فَقَدْ اَحْسَنْتِ الثَّنَاءَ ) “அல்லாஹ் உனக்கு சிறந்த நற்கூலி வழங்குவானாக! உனது கணவரைப்பற்றி மிக அழகிய முறையில் புகழ்த்து கூறுகிறாய்” என்று அப்பெண்ணை பாராட்டினார்கள். உடனே அப்பெண் திரும்பிச் சென்றுவிட்டாள்.

 

இதை கவனித்த கஅப் பின் சவார் (ரலி) அவர்கள் ( یَا اَمِیرَ الْمُٶْمِنِیْنَ لَقَدْ اَبْلَغَتْ اِلَیْكَ فِي الشَّکْوَی ) ஜனாதிபதி அவர்களே! (தாங்கள் அப்பெண்ணின் வார்த்தையை கவனிக்கவில்லை என்றே எண்ணுகிறேன்.) உங்களிடம் வந்து அவள் தனது கணவரை புகழவில்லை. மாறாக புகார் செய்கிறாள். ("அதாவது அவளது கணவர் இரவு பகல் பாராமல் எல்லா நேரமும் இறைவழிபாட்டில் ஈடுபடுகிறார். அவர் மனைவிக்கு செய்ய வேண்டிய கடமைகளை ஒழுங்காக நிறைவேற்றுவதில்லை என்று சொல்ல நினைக்கிறாள்" என்று கூறினார்.) பிறகு ஜனாதிபதி அவர்கள் அப்பெண்ணிடம் விசாரித்த போது தான் கஅப் (ரலி) அவர்களின் கணிப்பு சரியானது தான் என்று விளங்கிக் கொண்டார்கள்.

 

பிறகு ஜனாதிபதி அவர்கள் கஅப் (ரலி) அவர்களிடம் ( اقْضِ بَیْنَھُمَا اِنَّكَ قَدْ فَطِنْتَ اِلَی مَالَمْ اَفْطَنْ لَّهُ ) நீயே அவ்விருவருக்கிடையே தீர்ப்பு வழங்கு! நான் புரிந்துகொள்ளாத ஒரு விஷயத்தை நீர் புரிந்துகொண்டீர். (அதனால் நீயே தீர்ப்பு வழங்கு!) என்று கூறினார்கள்.

 

உடனே கஅப் (ரலி) அவர்கள் அல்லாஹ் ஒரு ஆணுக்கு அதிகபட்சமாக நான்கு பெண்களை மணமுடித்துக் கொள்ள அனுமதித்துள்ளான். (திருக்குர்ஆன்:- 4:3) இந்த வசனத்தின் பிரகாரம் இந்த பெண்ணின் கணவர் மூன்று நாட்கள் இறைவணக்கத்தில் ஈடுபடலாம். ஆனால் நான்காவது நாள் கண்டிப்பாக இவர் தனது மனைவியோடு வந்து தங்கியே ஆக வேண்டும் என்று தீர்ப்பளித்தார்கள்.

 

(இதன்படி ஒருவர் நான்கு பெண்களை மணமுடித்தால் அவர் ஒவ்வொரு மனைவியிடமும் நான்கு நாட்களில் ஒரு நாள் தங்க வேண்டும். இதுவே ஒவ்வொரு மனைவியின் பங்கு-உரிமை என்று ஆகிறது என்று கஅப் (ரலி) அவர்கள் விளக்கமளித்தார்கள்.)

 

இந்த தீர்ப்பை செவியுற்ற ஜனாதிபதி அவர்கள், ( لِهٰذَا اَعْجَبُ اِلَيَّ مِنَ الْاَوَّلِ ) உன்னுடைய இந்த தீர்ப்பு, அப்பெண்ணின் வார்த்தையை முதலில் நீ புரிந்து கொண்டதைவிட அதிக ஆச்சரியமாகவும், அற்புதமாகவும் இருக்கிறது என வியந்து பாராட்டி, கஅபு (ரலி) அவர்களை பசரா நகரின் நீதிபதியாக நியமித்தார்கள்.     நூல்:- அல்இஸ்தீஆப், இப்னு அபீஷைபா, ஹயாத்துஸ் ஸஹாபா 2/937

 

 நம்மிடம் பிறர் ஏதேனும் சொல்லும்போது அதன் மூலம் அவர் சொல்ல நினைக்கின்ற கருத்தையும் விளங்கிக் கொள்ள நாம் முயற்சிக்க வேண்டும். அப்போது தான் நமது வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிப்பது இலகுவாகும்.

 

சாமானிய மக்கள் குர்ஆன் மற்றும் நபிமொழியின் நேரடியான கருத்துகளை விளங்கி கொள்வார்கள். ஆனால் மார்க்க அறிஞர்கள் அது கூறும் உள்ளார்ந்த கருத்துக்களையும் விளங்கிக் கொள்வார்கள்.

 

சிரம் பணிந்து விழுவது

 

கைஸ் பின் சஃத் (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் ஹீரா என்ற பகுதிக்கு சென்றிருந்தேன். அந்த பகுதி மக்கள் தங்களுடைய தலைவருக்கு மரியாதை நிமித்தமாக சஜ்தா எனும் சிரம் பணிந்து விழுந்ததை கண்டேன். இந்த தலைவரைவிட (மரியாதை நிமித்தமாக) சிரவணக்கம் செய்யப்படுவதற்கு தகுதியானவர் இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம் என்று மனதில் சொல்லிக் கொண்டேன்.

 

நான் மதீனாவுக்கு திரும்பி வந்ததும் அண்ணலாரிடம் சென்று ( إِنِّي أَتَيْتُ الْحِيرَةَ فَرَأَيْتُهُمْ يَسْجُدُونَ لِمَرْزُبَانٍ لَهُمْ فَأَنْتَ يَا رَسُولَ اللَّهِ أَحَقُّ أَنْ نَسْجُدَ لَكَ ) "நான் ஹீரா பகுதிக்கு சென்றிருந்தேன் அங்குள்ளவர்கள் தங்களின் தலைவருக்கு சிரவணக்கம் செய்வதைக் கண்டேன். அப்படியிருக்க, நீங்கள் இறைத்தூதர். எனவே, நீங்கள் தான் சிரவணக்கம் செய்யப்படுவதற்கு உண்மையிலே முழுத் தகுதி உடையவர்கள்" என்று கூறினேன். அதற்கு அண்ணலார் ( فَلاَ تَفْعَلُو ) "அவ்விதமாக செய்ய வேண்டாம்" என்றார்கள்.  நூல்:- அபூதாவூத்-2140

 

பெற்றோர்கள், பெரியவர்கள், மற்றும் ஆசிரியர்கள் கால்களில் சிறியவர்கள் மரியாதைக்காகவும், ஆசிர்வாதத்திற்காகவும் விழுகின்ற பழக்கம் இந்து மக்களின் கலாச்சாரமாகும். ஆனால் இஸ்லாம் இதனை பெரும் பாவம் என்று கூறி தடை செய்கிறது. ஏனென்றால் பிறர் காலில் விழும் கலாச்சாரம் ஷிர்க் எனும் இணைவைத்தல் பக்கம் அழைத்து சென்றுவிட கூடும் என்றே இஸ்லாம் அஞ்சுகிறது.

 

நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவே மாட்டான். இது அல்லாத (குற்றத்)தை தான் விரும்பியவர்களுக்கே மன்னிப்பான். ஆகவே எவரேனும் அல்லாஹ்வுக்கு இணைவைத்தால், அவர் வெகுதூரமான வழிகேட்டில் தான் இருக்கின்றார்.     திருக்குர்ஆன்:- 4:116

 

சிலர் இது போன்ற நபிமொழிகளை முறையாக விளங்காமல் பிற மனிதனின் காலில் விழுவதை இணைவைத்தல் ஆகும் என்று கூறி தவறான பரப்புரை செய்கிறார்கள். இணைவைத்தல் என்பது வேறு. பெரும் பாவம் என்பது வேறு. இரண்டையும் ஒரே தரத்தில் வைக்கக்கூடாது. காரணம் பெரும் பாவத்திற்கு இறை மன்னிப்பு கிடைக்கலாம். ஆனால் இணைவைத்தல் என்பதற்கு இறை மன்னிப்பு அறவே கிடையாது. பெரும் பாவியை இணைவைப்பவன் என்று எண்ணவோ, அழைக்கவோ கூடாது.

 

ஒரு முஸ்லிம் மரியாதைக்காகவோ, அச்சத்தினாலோ பிற மனிதனின் காலில் விழுந்தால், அதனை பெரும் பாவமாக கருதப்படுமே தவிர இணைவைத்தலாக கருதப்படாது என்பதே மார்க்க அறிஞர்களின் தீர்ப்பாகும்.

 

கைஸ் (ரலி) அவர்கள் அருமை நாயகம் (ஸல்) அவர்களின் காலில் விழுவதை உச்சக்கட்டமான மரியாதையாக கருதினாரே தவிர அதனை இறைவழிபாடாக கருதவில்லை. அதனால் தான் அதற்கு அவர் அண்ணலாரிடம் அனுமதி கேட்டபோது அண்ணலார் சிறிதளவுக்கூட கோபப்படாமல் எனக்கு அந்தளவுக்கு மரியாதை செய்யாதீர் என்ற அடிப்படையில் "அவ்விதமாக செய்ய வேண்டாம்" என்று அவருக்கு அன்பாக பதிலளித்தார்கள்.

 

பின்னர் நாம் வானவர்களிடம் "ஆதமுக்கு (சிரம்) பணியுங்கள்" எனக் கட்டளையிட்டோம். இப்லீசைத் தவிர (மற்ற வானவர்கள் அனைவரும் அவருக்கு)ப் பணிந்தார்கள். அவன் பணியவில்லை.  திருக்குர்ஆன்:- 7:11

 

அவர்கள் (எகிப்தின் அதிபதியாக இருந்த நபி யூசுப்-அலை) அவருக்கு (அக்கால வழக்கப்படி) சிரம் பணிந்து விழுந்தார்கள்.    திருக்குர்ஆன்:- 12:100

 

ஆதிமனிதர் ஆதம் (அலை) அவர்கள் காலம் முதல் சில இறைத்தூதர்கள் காலம் வரை சிரம் பணிந்து விழுவது மரியாதையின் அடிப்படையில் அனுமதிக்கப்பட்டிருந்தது. பிறகு சிரம் பணிந்து விழுவது கூடாது என்று சட்டம் மாற்றி அமைக்கப்பட்டு விட்டது.

 

சிரம்பணிந்து விழுவது என்பது இணைவைப்பின் ஒருவகை என்று இருந்திருந்தால் அல்லாஹ் அதனை எந்த காலத்திலும் அனுமதித்திருக்க மாட்டான். அல்லாஹ் தனக்கு இணைவைத்தலை எந்த காலத்திலும் விரும்புவதில்லை.

 

சிரம்பணிந்து விழுவது கூடாது என்று சட்டம் மாற்றப்பட்டுவிட்டதால் அதனை ஒரு மனிதன் இப்பொழுது செய்தால் அது பெரும் பாவமாக ஆகுமே தவிர இணைவைத்தலாக ஆகாது.

 

திருக்குர்ஆன், நபிமொழிகள் மற்றும் நல்லோர்களின் வரலாறுகளை முறையாக விளங்கவும், அதன்படி செயல்படவும் நமக்கு அல்லாஹ் அருள்பாலிப்பானாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை. சென்னை.

 

No comments:

Post a Comment

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...