Search This Blog

Wednesday, 13 October 2021

சிரவணக்கம் புரிவோம்!

 

சிரவணக்கம் புரிவோம்!


وَأُلْقِيَ السَّحَرَةُ سَاجِدِينَ قَالُوا آمَنَّا بِرَبِّ الْعَالَمِينَ


அந்தச் சூனியக்காரர்கள் சிரம்பணிந்து, “அனைத்துலகங்களின் இறைவன்மீது (அல்லாஹ்வின்மீது) நாங்கள் நம்பிக்கை (ஈமான்) கொண்டுவிட்டோம்” என்று கூறினார்கள். திருக்குஆன்:- 7:120,121


இறைவழிபாட்டில் தொழுகையே அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானதாகும். அந்தத் தொழுகையில் சஜ்தா எனும் சிரவணக்க நிலை தான் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானதாகும்.


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( أَقْرَبُ مَا يَكُونُ الْعَبْدُ مِنْ رَبِّهِ وَهُوَ سَاجِدٌ فَأَكْثِرُوا الدُّعَاءَ ) ஓர் அடியான் தன்னுடைய இறைவனுடன் அதிகம் நெருக்கமாக இருக்கும் நிலை, சிரவணக்கம் செய்யும் நிலைதான். எனவே, அப்போது அதிகமாகப் பிரார்த்தனை செய்யுங்கள். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-832


ஏழு உறுப்புகள் தரையில் படவேண்டும்


அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. "ஓர் அடியார் சிரவணக்கம் (சஜ்தா) செய்யும்போது, அவருடன் ஏழு உறுப்புகள் சிரவணக்கம் செய்கின்றன; அவருடைய முகம், இரு உள்ளங்கைகள், இரு முழங்கால்கள், இரு பாதங்(களின் நுனி)கள் ஆகியவையே அவை" என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன். நூல்:- முஸ்லிம்-848, திர்மிதீ-252


அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஏழு உறுப்புகள் தரையில் படுமாறு சிரவணக்கம் (சஜ்தா) செய்யும்படி அருமை நாயகம் (ஸல்) அவர்களுக்கு கட்டளையிடப்பட்டது. (சிரவணக்கத்தின் போது தரையில் படாதவாறு) தமது தலைமுடி, ஆடை  ஆகியவற்றைப் பிடித்துக் கொள்ள வேண்டாம் என்று அவர்கள் தடை விதிக்கப்பட்டார்கள். நூல்:- திர்மிதீ-253, முஸ்னத் அஹ்மத்-1826


நெற்றியை தரையில் வைக்கையில், நெற்றி முழுவதுமாக வைக்க வேண்டும். அத்துடன் மூக்கு தரையில் படுமாறும் வைக்க வேண்டும்.


நெற்றியில் சில பகுதி வைத்தால்கூடப் போதும். ஆனால், நெற்றியை அறவே தரையில் வைக்காமல் மூக்கை மட்டும் வைத்தால்தான் சஜ்தா நிறைவேறாது. மூக்கை தரையில் வைக்காமல் நெற்றியை மட்டும் தரையில் வைத்தாலே சஜ்தா நிறைவேறிவிடும் என்பது அறிஞர்களில் சிலரது கருத்தாகும். வேறு சிலர், வெற்றியுடன் மூக்கையும் சேர்த்தே வைக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.


இரு உள்ளங்கைகளைத் தரையில் வைக்கும் போது உள்ளங்கைகளை தரையில் பரப்பாமலும் விலாப் புறங்களுடன் ஒட்டாமலும் விலக்கி வைக்க வேண்டும். தொடைகளுடன் வயிறு ஒட்டாமல் அகற்றி வைத்திடவேண்டும். தரைக்கும் உடலுக்கும் நடுவே இடைவெளி இருக்க வேண்டும். நாய் அமரும்போது முன் கைகளைத் தரையில் பரப்பி வைப்பதைப் போன்று பரப்பக்கூடாது; ஒரேயடியாகக் கைகளை விலாவோடு சேர்த்து ஒட்டி வைத்துக் கொள்ளவும் கூடாது. நடுநிலையாகக் கையாள வேண்டும்.


அடுத்து தொழும்போது ஆடையோ தலைமுடியை கீழேபட்டுவிடக் கூடாது என்பதற்காக அவற்றைக் கையால் பிடித்துக் கொள்வது தடை செய்யப்பட்டதாகும். அவ்வாறே, நீண்ட தலைமுடி கீழே பட்டுவிடக் கூடாது என்பதற்காகத் தொழுகையிலோ தொழுகைக்கு முன்போ (ஆண்கள்) கொண்டை போட்டுக் கொள்வதற்கும் தடை வந்துள்ளது. ஏனெனில், சஜ்தா செய்யும்போது ஆடையும் தலைமுடியும் கூட தரையில் படுவதே பணிவுக்கும் அடக்கத்திற்கும் உகந்ததாகும். நூல்:- ஃபத்ஹுல் முல்ஹிம்,  மின்ஹாஜ், துஹ்ஃபத்துல் அஹ்வதீ


நன்றிக்கடனாக  


அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது. (ஒருமுறை) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஒரு தகவல் வந்தது. அதனால் மகிழ்ச்சியுற்ற அவர்கள் உடனே அல்லாஹ்வுக்காகச் சிரவணக்கத்தில் வீழ்ந்தார்கள்.


இந்த நபிமொழியின் அடிப்படையில், நன்றி தெரிவித்தலுக்கான சிரவணக்கம் (மார்க்கத்தில்) உண்டு என்று அறிஞர்கள் கூறுகின்றனர். நூல்:-  திர்மிதீ-1503


ஸாத் (எனும் 38வது) அத்தியாயத்தில் இடம்பெறும் ஓதலுக்கான சஜ்தா தொடர்பாக அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறுகையில், "நபி தாவூத் (அலை) அவர்கள் பாவமீட்சிக்காகச் சிரம் பணிந்தார்கள். நாம் நன்றி தெரிவிப்பதற்காகச் சிரம்பணிகிறோம்" என்று கூறினார்கள். நூல்:- நஸாயீ


அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒரு முறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பேரிச்சம் தோட்டத்திற்குள் சென்றார்கள். அங்கு சஜ்தா செய்தார்கள். அல்லாஹ் அவர்களின் உயிரைக் கைப்பற்றிவிட்டானோ என்று நான் பயப்படும் அளவுக்கு அவர்கள் நீண்ட நேரம் சஜ்தாவில் இருந்தார்கள். நான் அவர்களை உற்று நோக்கியவனாக நெருங்கி சென்றேன். 


அப்போது நபியவர்கள் தம் தலையை உயர்த்தினார்கள். "உமக்கு என்ன நேர்ந்தது? (கவலையுடன் காணப்படுகிறீரே)" என்றார்கள். எனக்குள் தோன்றிய அந்த பயத்தை நான் அவர்களிடம் கூறினேன். அப்போது நபியவர்கள் கூறினார்கள். "உங்கள்மீது யார் ஸலவாத் கூறி (அருள் வேண்டினா)ரோ அவர்மீது நான் அருள் புரிவேன். உங்கள்மீது யார் (அமைதி உண்டாகட்டும்! என) சலாம் கூறினாரோ அவர்மீது நானும் அமைதி அருள்வேன் என்று அல்லாஹ் உங்களின் விஷயமாக கூறியதை நான் உங்களுக்கு நற்செய்தியாகச் சொல்லட்டுமா?" என ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னிடம் கூறினார். நூல்:- முஸ்னது அஹ்மத், மிஷ்காத்-937


ஒரு இனிமையான செய்தி காதுக்கு வந்தபோது அதற்கான நன்றிக்கடனாக அண்ணலார் நீண்ட நேரம் சஜ்தா செய்துள்ளார்கள் என்பது இங்கு நமக்குரிய பாடமாகும்.


எதிர்பாராத நிலையில் திடீரென்று ஓர் அருட்கொடை கிடைக்கும் போதோ அல்லது ஒரு துன்பம் அகலும் போதோ படைத்த இறைவனுக்குச் செய்யும் சிரவணக்கமே இஸ்லாமிய வழக்கில் "சஜ்தா ஷுக்ர்" எனப்படும். இது அண்ணல் நபி (ஸல்) அவர்கள் காட்டிய வழி முறையாகும்.


துன்பத்தின்போது

 

இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது. கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களின் மனைவியரின் ஒருவர் (சஃபிய்யா அல்லது ஹஃப்சா) மரணித்து விட்டார்கள் என்று அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சொல்லப்பட்டது. உடனே அவர்கள் (சஜ்தா எனும்) சிரவணக்கத்தில் விழுந்தார்கள். அப்போது அவர்களிடம் (மரண செய்தி கேட்டு) சிரவணக்கம் செய்கிறீர்களே? என்று கேட்கப்பட்டது.

 

அதற்கு அவர்கள், ( إِذَا رَأَيْتُمْ آيَةً فَاسْجُدُوا ‏"‏ ‏.‏ وَأَىُّ آيَةٍ أَعْظَمُ مِنْ ذَهَابِ أَزْوَاجِ النَّبِيِّ صلى الله عليه وسلم ) "ஏதேனும் ஒரு சோதனை (துன்பத்தை) நீங்கள் கண்டால் (அல்லது கேட்டால்) சிரவணக்கம் செய்யுங்கள்" என்று நபியவர்கள் கூறினார்கள். நபியவர்களின் மனைவியர் இறப்பதைவிட பெரும் துன்பம் அளிக்கும் சோதனை வேறு எதுவாக இருக்க முடியும்?" என்று அவர்கள் கூறினார்கள். நூல்:- அபூதாவூத்-1012, திர்மிதீ-3826


புனித இரவை அடையாளப்படுத்த...


அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ரமளான் மாதம் இருபதாம்  நாள் காலையில் அதிகாலையில் (எங்களிடையே) சொற்பொழிவாற்றினார்கள். அதில் (பின்வருமாறு) குறிப்பிட்டார்கள். யார் என்னுடன் பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருந்தார்களோ அவர்கள் மீண்டும் இஃதிகாஃப் இருப்பதற்கு வரட்டும். நிச்சயமாக நான் லைலத்துல் கத்ரு இரவை கனவில் பார்த்தேன். நிச்சயமாக அதனை நான் மறைக்கும் படியாக செய்யப்பட்டேன். மேலும் அது கடைசி நாட்களில் ஒற்றைப்படை நாளில் அமைகிறது. ( وَإِنِّي رَأَيْتُ كَأَنِّي أَسْجُدُ فِي طِينٍ وَمَاءٍ ) நிச்சயமாக மண்ணும் தண்ணீரும் கலந்த தரையில் சிரவணக்கம் செய்வதை போன்று நான் கனவு கண்டேன். நூல்:- புகாரீ-813,  முஸ்லிம்-2168


லைலத்துல் கத்ரு எனும் ஓர் புனித இரவை அடையாளப்படுத்த அல்லாஹ் சிரவணக்கத்தைத்தான் முதன்மைப்படுத்துகிறான்.


ஷைத்தானின் புலம்பல்


'நீங்கள் ஆதமுக்கு சிரம்பணியுங்கள்' என்று நாம் வானவர்களிடம் கூறிய போது, (அங்கிருந்த) இப்லீஸைத் தவிர மற்ற அனைவரும் சிரம்பணிந்தனர். அவனோ கர்வங்கொண்டு மறுத்துவிட்டான். இறைமறுப்பாளர்களில் ஒருவனாகவும் அவன் ஆகிவிட்டான். திருக்குர்ஆன்:- 2:34


அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِذَا قَرَأَ ابْنُ آدَمَ السَّجْدَةَ فَسَجَدَ اعْتَزَلَ الشَّيْطَانُ يَبْكِي يَقُولُ يَا وَيْلَهُ- وَفِي رِوَايَةِ أَبِي كُرَيْبٍ يَا وَيْلِي- أُمِرَ ابْنُ آدَمَ بِالسُّجُودِ فَسَجَدَ فَلَهُ الْجَنَّةُ وَأُمِرْتُ بِالسُّجُودِ فَأَبَيْتُ فَلِيَ النَّارُ ) ஆதமின் மைந்தன் (மனிதன்) சஜ்தா (சிரவணக்கத்திற்கான) வசனத்தை ஓதி சிரவணக்கம் (சஜ்தா) செய்தால் ஷைத்தான் அழுதவாறே “அந்தோ எனக்கு வந்த நாசமே! ஆதமின் மைந்தன் சிரவணக்கம் செய்யும்படி கட்டளையிடப்பட்டான். அவன் சிரவணக்கம் செய்துவிட்டான். அவனுக்கு செர்க்கம் கிடைக்கப்போகிறது. ஆனால் (ஆதி மனிதர் ஆதமுக்குச்) சிரம்பணியும்படி எனக்கு கட்டளையிடப்பட்டது. நானோ மறுத்து விட்டேன். எனவே, எனக்கு நரகம் தான்” என்று கூறியபடி விலகிச் செல்கிறான். அறிவிப்பாளர்ர்:- அபூஹுரைரா (ரலி), நூல்:- முஸ்லிம்-133, இப்னுமாஜா-1042, முஸ்னது அஹ்மத்-9336


இறைவன், ஆதிமனிதர் ஆதம் (அலை) அவர்களுக்கு (சஜ்தா) சிரம்பணியுமாறு கோரியபோது, வானவர்கள் சிரம்பணிந்து வீழ்ந்தார்கள். அவர்கள் சஜ்தாவிலிருந்து தலையை உயர்த்தியபோது சஜ்தா செய்யாது நின்று கொண்டிருந்த இப்லீஸ் அகோரமான நிலையில்  இருப்பதைக் கண்டார்கள். உடனே வானவர்கள் தாங்களுக்கு இந்த நிலை வராது தப்பியதற்காக இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மீண்டுமொரு முறை சஜ்தா செய்தனர். 


இதனால் தான் தொழுகையில் ஒவ்வொரு ரக்அத்திலும் இரண்டு தடவை சஜ்தா செய்ய நம்மீது கடமையாக்கப்பட்டது.


அல்லாஹ் கட்டளையிட்ட ஒரு (சஜ்தா) சிரவணக்கத்தைச் செய்ய மறுத்ததே அவன் கருணையிலிருந்து இப்லீஸ் விரட்டப்படுவதற்கான காரணமாக அமைந்தது!


மஅதான் பின் அபீதல்ஹா அல்யஅமரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது. நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அடிமையான ஸவ்பான் (ரலி) அவர்களை சந்தித்து அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான ஒரு நற்செயலை எனக்குச் சொல்லுங்கள். அல்லாஹ் அதன் மூலம் என்னை சொர்க்கத்திற்குள் நுழைவிக்க வேண்டும் என்று கேட்டேன்.


அதற்கு ஸவ்பான் (ரலி) அவர்கள் (பதிலளிக்காமல்) அமைதியாக இருந்தார்கள். பிறகு நான் மீண்டும் (அதே கேள்வியைக்) கேட்டேன். அப்போதும் அவர்கள் அமைதியாகவே இருந்தார்கள். நான் மூன்றாவது முறையாக அவர்களிடம் கேட்டபோது, "இது பற்றி நபியவர்களிடம் நான் கேட்டேன். நபியவர்கள், ( عَلَيْكَ بِكَثْرَةِ السُّجُودِ لِلَّهِ فَإِنَّكَ لاَ تَسْجُدُ لِلَّهِ سَجْدَةً إِلاَّ رَفَعَكَ اللَّهُ بِهَا دَرَجَةً وَحَطَّ عَنْكَ بِهَا خَطِيئَةً ) 'அல்லாஹ்வுக்கு நீ அதிகமாக (சஜ்தா) சிரவணக்கம் செய்வாயாக! ஏனெனில், நீ அவனுக்காக ஒரு சஜ்தாச் செய்தால் அதற்காக அவன் உனது ஒரு தகுதியை உயர்த்தி, உன் குற்றங்களில் ஒன்றை அவன் மன்னிக்காமல் இருப்பதில்லை' என்று கூறினார்கள்" என்றார்கள். நூல்:- முஸ்லிம்-842


சஜ்தா வசனங்கள்


அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்கள் சஜ்தா வசனத்தை ஓதிக்காட்டும்போது அவர்கள் சஜ்தா செய்வார்கள். உடனே நாங்களும் சஜ்தா செய்வோம். அப்போது (ஏற்படும் இட நெருக்கடியால்) எங்களில் சிலருக்கு நெற்றி வைப்பதற்குக்கூட (போதுமான) இடம் கிடைக்காது. நூல்:- புகாரீ-1075, முஸ்லிம்-1005, அபூதாவூத்-1203


குர்ஆனில் சில வசனங்கள் உண்டு. அவற்றை ஓதுகின்றவர், ஓதி முடித்த பின்னர் ஒருமுறை சிரவணக்கம் (சஜ்தா) செய்ய வேண்டும் என நபிமொழிகளில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அந்த வசனங்களை தொழுகையில் ஓதினாலும் சாதாரணமாக ஓதினாலும் சஜ்தாச் செய்ய வேண்டும். ஓதுபவரும் கேட்பவரும் சஜ்தாச் செய்ய வேண்டும். இதற்கு "சஜ்தா திலாவத்" (குர்ஆன் வசனங்களை ஓதியதற்காகச் செய்யப்படும் சிரவணக்கம்) என்று பெயர்.


இவ்வாறு திருக்குர்ஆனில் 14 இடங்களில் சஜ்தா உடைய வசனங்கள் காணப்படுகின்றன. இவற்றில், "உங்களைப் படைத்த இறைவனுக்கு நீங்கள் சிரவணக்கம் செய்ய மாட்டார்களா?" என்ற பொருள் பொதுவாக காணப்படும்.


அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள். சஜ்தாவுடைய வசனமொன்றை நீர் ஓதினால் தக்பீர் கூறி, சஜ்தா செய்யவேண்டும். அதிலிருந்து தலையை உயர்த்தும் போதும் தக்பீர் கூறவேண்டும்.

 

குர்ஆனில் சஜ்தாவுடைய வசனங்களிலொன்றை ஓதியவரும், ஓதக் கேட்டவரும் தக்பீர் சொல்லி ஒரு சஜ்தா செய்வது சுன்னத்தாகும்.

 

சஜ்தா திலாவா என்பது, பெரும்பான்மையான அறிஞர்களின் கூற்றுப்படி (சுன்னத் முஅக்கதா எனும்) வலியுறுத்தப்பட்ட சுன்னத் ஆகும். ஹனஃபீ மத்ஹபில் மட்டும் வாஜிபாகும்.


ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்கள் இரவில் சஜ்தா வசனங்களை ஓதி சிரம்பணியும்போது, ( سَجَدَ وَجْهِي لِلَّذِي خَلَقَهُ وَشَقَّ سَمْعَهُ وَبَصَرَهُ بِحَوْلِهِ وَقُوَّتِهِ ) (பொருள்:) "என் முகத்தைப் படைத்து அதில் தன் அறிவாலும் ஆற்றலாலும் செவிப்புலனையும் பார்வைத் திறனையும் ஏற்படுத்திய (இறை)வனுக்கு என் முகம் பணிந்தது" என்று பலமுறை கூறுவார்கள். நூல்:- அபூதாவூத்-1205, திர்மிதீ-3337, நசாயீ-1117, முஸ்னது அஹ்மத், ஹாக்கிம், பைஹகீ


சஜ்தா திலாவத்தில் தொழுகையின் சஜ்தாவில் ஓதும் சுப்ஹான ரப்பியல் அஃலாஎன்பதை ஓதினாலும் குற்றமில்லை.


1, إِنَّ الَّذِينَ عِندَ رَبِّكَ لاَ يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِهِ وَيُسَبِّحُونَهُ وَلَهُ يَسْجُدُونَ سورة الأعراف

2, وَلِلَّهِ يَسْجُدُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ طَوْعًا وَكَرْهًا وَظِلَالُهُمْ بِالْغُدُوِّ وَالْآَصَالِ  سورة الرعد

3, وَلِلَّهِ يَسْجُدُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ مِنْ دَابَّةٍ وَالْمَلَائِكَةُ وَهُمْ لَا يَسْتَكْبِرُونَ  يَخَافُونَ رَبَّهُمْ مِنْ فَوْقِهِمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ سورة النحل

4, قُلْ آَمِنُوا بِهِ أَوْ لَا تُؤْمِنُوا إِنَّ الَّذِينَ أُوتُوا الْعِلْمَ مِنْ قَبْلِهِ إِذَا يُتْلَى عَلَيْهِمْ يَخِرُّونَ لِلْأَذْقَانِ سُجَّدًا وَيَقُولُونَ سُبْحَانَ رَبِّنَا إِنْ كَانَ وَعْدُ رَبِّنَا لَمَفْعُولًا وَيَخِرُّونَ لِلْأَذْقَانِ يَبْكُونَ وَيَزِيدُهُمْ خُشُوعًا  سورة الإسراء

5, أُولَئِكَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ مِنْ ذُرِّيَّةِ آدَمَ وَمِمَّنْ حَمَلْنَا مَعَ نُوحٍ وَمِنْ ذُرِّيَّةِ إِبْرَاهِيمَ وَإِسْرَائِيلَ وَمِمَّنْ هَدَيْنَا وَاجْتَبَيْنَا إِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُ الرَّحْمَنِ خَرُّوا سُجَّدًا وَبُكِيًّا  سورة مريم

6, أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ يَسْجُدُ لَهُ مَن فِي السَّمَاوَاتِ وَمَن فِي الأَرْضِ وَالشَّمْسُ وَالْقَمَرُ وَالنُّجُومُ وَالْجِبَالُ وَالشَّجَرُ وَالدَّوَابُّ وَكَثِيرٌ مِّنَ النَّاسِ وَكَثِيرٌ حَقَّ عَلَيْهِ الْعَذَابُ وَمَن يُهِنِ اللَّهُ فَمَا لَهُ مِن مُّكْرِمٍ إِنَّ اللَّهَ يَفْعَلُ مَا يَشَاء  سورة الحج

7, يَا أَيُّهَا الَّذِينَ آَمَنُوا ارْكَعُوا وَاسْجُدُوا وَاعْبُدُوا رَبَّكُمْ وَافْعَلُوا الْخَيْرَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ  سورة الحج

8, وَإِذَا قِيلَ لَهُمُ اسْجُدُوا لِلرَّحْمَنِ قَالُوا وَمَا الرَّحْمَنُ أَنَسْجُدُ لِمَا تَأْمُرُنَا وَزَادَهُمْ نُفُورًا سورة الفرقان

9, أَلَّا يَسْجُدُوا لِلَّهِ الَّذِي يُخْرِجُ الْخَبْءَ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَيَعْلَمُ مَا تُخْفُونَ وَمَا تُعْلِنُونَ  اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ  سورة النمل

10, إِنَّمَا يُؤْمِنُ بِآَيَاتِنَا الَّذِينَ إِذَا ذُكِّرُوا بِهَا خَرُّوا سُجَّدًا وَسَبَّحُوا بِحَمْدِ رَبِّهِمْ وَهُمْ لَا يَسْتَكْبِرُونَ  سورة السجدة

11, قَالَ لَقَدْ ظَلَمَكَ بِسُؤَالِ نَعْجَتِكَ إِلَى نِعَاجِهِ وَإِنَّ كَثِيرًا مِنَ الْخُلَطَاءِ لَيَبْغِي بَعْضُهُمْ عَلَى بَعْضٍ إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَقَلِيلٌ مَا هُمْ وَظَنَّ دَاوُودُ أَنَّمَا فَتَنَّاهُ فَاسْتَغْفَرَ رَبَّهُ وَخَرَّ رَاكِعًا وَأَنَابَ  سورة ص

12, وَمِنْ آَيَاتِهِ اللَّيْلُ وَالنَّهَارُ وَالشَّمْسُ وَالْقَمَرُ لَا تَسْجُدُوا لِلشَّمْسِ وَلَا لِلْقَمَرِ وَاسْجُدُوا لِلَّهِ الَّذِي خَلَقَهُنَّ إِنْ كُنْتُمْ إِيَّاهُ تَعْبُدُونَ فَإِنِ اسْتَكْبَرُوا فَالَّذِينَ عِنْدَ رَبِّكَ يُسَبِّحُونَ لَهُ بِاللَّيْلِ وَالنَّهَارِ وَهُمْ لَا يَسْأَمُونَ  سورة فصلت

13, فَاسْجُدُوا لِلَّهِ وَاعْبُدُوا  سورة النجم

14, وَإِذَا قُرِئَ عَلَيْهِمُ الْقُرْآَنُ لَا يَسْجُدُونَ  سورة الإنشقاق

15, كَلَّا لَا تُطِعْهُ وَاسْجُدْ وَاقْتَرِبْ  سورة العلق


7:206, 13:15, 16:50, 17:107, 19:58, 22:18,77, 25:60, 27:25, 32:15, 38:24, 41:37, 53:62, 84:21, 96:19

 

சஜ்தா திலாவத் என்று நடைமுறையில் உள்ள 14 வசனங்கள் இவை தாம்.

 

மேலே கூறப்பட்டதில் 14க்குப் பதிலாக 15 இருக்கிறது. இரண்டு வசனங்களில் இமாம்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு நிலவுவதே இதற்கான காரணம். 14 அல்லது 15 ஆகிய இரண்டுமே ஹதீஸ் அடிப்படையில் சரியானவையே.

 

மேலே நாம் கண்ட 15 வசனங்களில் ஹஜ் எனும் அத்தியாயத்தில் இரண்டு வசனங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

 

இமாம் அபூஹனீஃபா (ரஹ்) அவர்கள் "ஹஜ் அத்தியாயத்தில் ஒரேயொரு ஜ்தா வசனம் மட்டுமே உள்ளது" என்று கூறுகிறார்கள். ஆனால், அதே சமயம் ஸாத் எனும் அத்தியாயத்தில் வரும் வசனத்தை ஜ்தா வசனமாக எடுத்துக் கொள்கிறார்கள்.

 

ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் ஹஜ் அத்தியாயத்திலுள்ள இரண்டு வசனங்களையும் ஸஜ்தா வசனங்களாகக் கணக்கிடுகிறார்கள். ஆனால் ஸாத் அத்தியாயத்திலுள்ள வசனத்தைவிட்டு விடுகிறார்கள். 

 

ஆக இரண்டு இமாம்களுமே  14 வசனங்களை ஸஜ்தா வசனங்கள் என்று கூறுகிறார்கள். ஆனால், எந்தெந்த வசனங்கள் என்பதில் தான் இருவரிடமும் கருத்து வேறுபாடு உள்ளது.


ஜ்தா திலாவத் செய்யும்போது தக்பீர் கட்ட வேண்டியதில்லை. நிலை, ருகூஉ செய்ய வேண்டியது இல்லை. ஒருமுறை சஜ்தா செய்தால் போதும். இரண்டு முறை செய்ய வேண்டிய அவசியமில்லை. ஸலாம் கொடுக்க வேண்டியது இல்லை. இருப்பில் அமர வேண்டியது இல்லை.

 

ஜ்தா வசனங்களை ஓதினாலோ அல்லது ஓதக் கேட்டாலோ நேரடியாக ஒரு ஜ்தா செய்தால் போதுமானது. 


அந்த 14 சஜ்தா உடைய வசனங்களை ஓதி, தனித்தனியே சஜ்தா செய்துவிட்டு, பிறகு பிரார்த்தித்தால் அந்தப் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படும். நூல் :- நூருல் ஈளாஹ்


மார்க்க அறிஞர்கள் கூறுகிறார்கள். குர்ஆனில் உள்ள 14 ஸஜ்தா வசனங்களை 14 முறை ஓதி, தண்ணீர் அல்லது தேனில் ஊதி கொடுத்தால் முரண்டு பிடிக்கும் பிள்ளைகள் முரட்டுதனத்திலிருந்து விடுபட்டு சாந்தமாக நடந்து கொள்வார்கள். இரக்க  குணமற்றவர்கள்  இரக்க குணமுள்ளவராக மாறுவார்கள்.


அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "அந்நஜ்ம்" எனும் (53வது) அத்தியாயத்தை ஓதிய பின் சஜ்தா செய்தார்கள். அவர்களுடன் இருந்த (முஸ்லிம்கள் இணைவைப்பாளர்கள் ஆகிய) அனைவரும் சஜ்தா செய்தனர். அங்கிருந்த ஒரு வயோதிகன் (உமைய்யா பின் கலஃப்) மட்டும் (நெற்றியை பூமியில் வைத்து சிரம்பணிய மனமில்லாமல்) ஒரு கையளவு கூழாங்கற்களையோ அல்லது மண்ணையோ அள்ளித் தனது நெற்றிவரை கொண்டுசென்று (சஜ்தாச் செய்வதைப் போன்று பாவனை செய்து) விட்டு( يَكْفِينِي هَذَا ) "இது எனக்குப் போதும்" என்று (சஜ்தாவைக் கேலி செய்து) சொன்னான். பிறகு, ( لَقَدْ رَأَيْتُهُ بَعْدُ قُتِلَ كَافِرًا ) அவன் இறைமறுப்பாளனாகவே (பத்ருப் போரில்) கொல்லப்பட்டதை நான் கண்டேன். நூல்:- புகாரீ-1067, முஸ்லிம்-1007


சஜ்தா எனும் உயரிய வணக்கத்தை கேலி செய்ததால் என்னவோ அவனுக்கு இறைநம்பிக்கை கிடைக்கப்பெறவில்லை.


உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது. "ஃப சப்பிஹ் பிஸ்மி ரப்பிகல் அழீம்" (உம்முடைய மகத்துவமிக்க இறைவனின் திருப்பெயரைத் துதிப்பீராக!) எனும் வசனம் (56:74) அருளைப் பெற்றபோது, இந்த தஸ்பீஹை (சுப்ஹான ரப்பியல் அழீம்) உங்களது ருகூவில் வைத்துக் கொள்ளுங்கள் என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் கூறினார்கள். அவ்வாறே சப்பிஹிஸ்ம ரப்பிகல் அஃலா  (உம்முடைய உயர்வான இறைவனின் திருநாமத்தை துதிப்பீராக!) எனும் வசனம் (87:1) அருளப்பெற்றபோது இந்தத் தஸ்பீஹை (சுப்ஹான ரப்பியல் அஃலா) உங்களது சஜ்தாவில் வைத்துக் கொள்ளுங்கள் என நபியவர்கள் கூறினார்கள். நூல்:- அபூதாவூத்-, முஸ்னது அஹ்மத்


அடையாளம் காணப்படுவார்கள்


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (மறுமை நாளில்) இறைவன், தன் அடியார்களிடையே தீர்ப்பு வழங்கி முடித்தபின், அல்லாஹ்வைத்தவிர வேறு இறைவன் இல்லை என்று உறுதி கூறியவர்களில் தான் நாடிய சிலரை நரகத்தில் இருந்து வெளியேற்ற விரும்புவான்.


அப்போது (அல்லாஹ்) ( أَمَرَ الْمَلاَئِكَةَ أَنْ يُخْرِجُوهُمْ، فَيَعْرِفُونَهُمْ بِعَلاَمَةِ آثَارِ السُّجُودِ، وَحَرَّمَ اللَّهُ عَلَى النَّارِ أَنْ تَأْكُلَ مِنِ ابْنِ آدَمَ أَثَرَ السُّجُودِ، فَيُخْرِجُونَهُم ) அவர்களை வெளியேற்றுமாறு வானவர்களுக்கு ஆணையிடுவான். வானவர்கள் அவர்களை சஜ்தாவின் (சிரவணக்கத்தின்) அடையாளங்களை வைத்து இனங்கண்டுகொள்வார்கள். (ஏனெனில்,) அல்லாஹ் நரகத்திற்கு, மனிதனை அவனிலுள்ள சஜ்தாவின் அடையாளத்தில் தீண்டக் கூடாதென தடை விதித்துள்ளான். ஆகவே, வானவர்கள் அவர்களை நரகத்திலிருந்து வெளியேற்றுவார்கள். நூல்:- புகாரீ-6573


ஸகீஃப் குலத்தாரில் இருந்து ஒரு குழுவினர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தனர். அக்குழுவினருக்கு நபியவர்கள் இஸ்லாத்தின் மாண்புகளையும், அதன் கடமைகளையும் எடுத்துரைத்தார்கள். அப்போது அவர்கள், "தொழுகையை பொருத்தவரை, நாங்கள் சிரவணக்கம் செய்ய விரும்பவில்லை. ஏனென்றால், ஒரு மனிதனுடைய அடிபாகம் - ஆசன உறுப்பு அவனது தலையைவிட உயர்வாக (சிரவணக்கம் செய்யும்போது) இருப்பதை நாங்கள் வெறுக்கின்றோம்" என்றனர். அதற்கு நபியவர்கள், தொழுகையைப் பொருத்தவரை, அது இல்லையென்றால் இஸ்லாமிய மார்க்கத்தில் எந்த நன்மையும் இல்லை" என்று கூறினார்கள். அதற்கு அவர்கள், "அப்படியானால் நாங்கள் அதை வெறுத்த போதிலும் அதைச் செய்கிறோம்" என்று கூறினர்.


மரணம் புனிதமாகிவிட்டது


அல்லாமா இப்னு கல்கான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். யமன்வாசி ஒருவர் மதீனாவில் வாழ்ந்தார். அவருக்கு குர்ஆன் ஓதத் தெரியாது. தினந்தோறும் மஸ்ஜிதுந் நபவிக்கு வருவார். அங்கு யாராவது அமர்ந்திருப்பதைக் கண்டால் அப்போது இம்மனிதர் குர்ஆனை எடுத்து கொண்டுபோய் அமர்ந்திருப்பவரிடம் கொடுத்து விட்டு, "கொஞ்ச நேரம் குர்ஆனை ஓதுங்கள்; நான் கேட்கிறேன்" என்று விண்ணப்பிப்பார். அவருடைய விருப்பத்திற்கிணங்க அவருக்கு ஓதிக்காட்டப்படும். இவ்வாறே பல நாட்கள் நடந்தது.


ஒருநாள் இதுபோன்றே  அம்மனிதர் மஸ்ஜிதுந் நபவிக்கு வந்த போது ஒருவர் அமர்ந்திருந்தார். இம்மனிதர் குர்ஆனை எடுத்து கொண்டுபோய் அமர்ந்திருப்பவரிடம் கொடுத்து, "கொஞ்சம் ஓதிக்காட்டுங்கள்" என்றார். அவர் விருப்பத்திற்கிணங்க அமர்ந்திருப்பவர் குர்ஆனை ஓதிக்காட்டிக்கொண்டிருக்கும்போது சஜ்தாவுடைய வசனம் வந்தது. உடனே ஓதிக்கொண்டிருந்தவரும் கேட்டுக்கொண்டிருந்த அம்மனிதரும் சஜ்தா செய்தனர். சிறிது நேரத்திற்கு பிறகு ஓதிக்கொண்டிருந்தவர் சஜ்தாவில் இருந்து எழுந்தார். ஆனால், ஓதக்கேட்டுக்கொண்டிருந்தவர் எழவில்லை. மரணமடைந்துவிட்டார். அவருடைய மரணம் புனிதமாகிவிட்டது. நூல்:- வாக்கியத்துல் அஹ்யா


மருத்துவக் குணங்கள்


முறையாக சஜ்தா செய்வதன்மூலம் மனிதனுக்குக் கிடைக்கும் மருத்துவக் குணங்கள் ஏராளம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.


பூமிக்கு ஒரு நிலையான காந்த சக்தி உண்டு. இயற்கையில் தரையில் சராசரி 0.3 முதல் 0.47 காஸ் காந்த சக்தி உள்ளது. காந்தம் நமக்குத் தெரியாமலேயே உடலில் வியாபித்து நம்மை ஆட்சி செய்கிறது. நம் உடலிலுள்ள ஒவ்வொரு செல்லும் ஒரு குட்டி காந்தம். காந்தம் பூமியின் அடி பாகத்திலிருந்து ஆரம்பமாகிறது. தொழுகையின் சஜ்தா மூலம் நாம் பூமியுடன் தொடர்பு கொள்ளும் போது நாம் இழந்த காந்த சக்தியை மீண்டும் பெறுகிறோம்.


சஜ்தா செய்யும்போது தரைமீது தொடர்பு கொள்ளும் ஏழு உறுப்புகள் காந்த ஈர்ப்பு சக்தி பெறுகிறது. பூமி காந்த கதிர்களை நமது உடலில் உள்ள சிகப்பணுக்களுக்கு செலுத்துகிறது. இதன் பயனாக இரத்தத்தின் கழிவுகள் யூரிக் அமிலம் ஆகியவை வெளியேற்றப்படுகிறது. சுவாச உறுப்புகள் நன்றாக வேலை செய்கிறது. காற்றிலுள்ள மின்சக்தி அயனிகள் (நேர்மின் அயனிகள், எதிர்மின் அயனிகள்) உடலுக்கு வேண்டிய மின்சக்தியை நுரையீரலுக்கு வழங்குகின்றன. அவைகள் நுரையீரல் திசுவின் நரம்புகள்மீது ஊடுருவிச் சென்று மத்திய நரம்பு மண்டலத்தையும் மூளையையும் சுறுசுறுப்படைய செய்து நல்ல நிலையில் செயல்படத் தூண்டுகிறது.


சஜ்தா செய்யும் போது இந்த மின்சக்தி பலகீனங்களை மீட்டுத்தந்து சக்தி இழப்பிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. மின்சக்தி பெற சஜ்தா முறை சிறந்த பயிற்சியாக திகழ்கிறது.


தொழுகையின் சஜ்தா நிலை மிதமான ஆஸ்துமா தாக்கலுக்கு சிறந்த நிவாரணமாகும். தொடர்ந்து தொழுகை கடைபிடிப்பதால் நல்ல பலன்கிடைக்கும்.


ஆஸ்துமா நோயாளிகளுக்கு மூச்சு இழுப்பதில் சிரமம் இருப்பது இல்லை. மூச்சை வெளியே விட முடியாமல் தான் திணறுகிறார்கள். நுரையீரலில் உள்ள மெலிதான குழாய்கள் (டியூப்புகள்) சுருங்கி விட்டிருப்பதால்தான் திணறுகிறார்கள். சஜ்தா நிலை சுருங்கிய குழாயை விரிவுபடுத்துகிறது. மூச்சை வெளியேற்றும் ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது. காற்றை வெளியே தள்ளுகிறது. சஜ்தா நிலை உடனே ஆஸ்துமாவை குணப்படுத்தாது. அதை கட்டுப்படுத்தும். படிப்படியாக குணப்படுத்த வழி செய்யும். மூச்சை வெளியேற்ற உதவும் ஆசனத்தில் சஜ்தா நிலை மிகவும் சக்தி வாய்ந்தது.


ஆஸ்துமாவுடன் தொடர்ந்து முப்பது நாற்பது வருடங்கள் போராடும் நோயாளிகளுக்கு நுரையீரல் விரிந்து அதன் இயக்கம் சற்று பாதிக்கும் நிலை ஏற்பட்டுவிடும். அப்போது உடற்பயிற்சி தான் சிறந்த சிகிச்சை. சஜ்தா ஆசனம் இவர்களுக்கு மிகவும் உதவுகிறது. நல்ல முன்னேற்றம் தருகிறது.


பெண்கள் பருவம் அடைந்த 12 - 16 வயதுக்கு அவர்களின் நாளமில்லா சுரப்பிகள் (Endocrine Gland) சரிவர இயங்காததினால் மாதவிடாய் சரியாக வருவதில்லை. இன உறுப்பு வளர்ச்சியும் குன்றியிருக்கும். உடலில் போதிய சக்தியில்லாமையால் இப்படி ஏற்படுகிறது. இவர்களுக்கு தொழுகையில் சஜ்தா ஆசனப்பயிற்சி நல்லப் பலன் அளிக்கிறது.


மாதவிலக்கின்போது வலி அதிகமானால் தலைசுற்றும், இதயத்துடிப்பும் அதிகரிக்கும். தொழுகையின் சஜ்தா ஆசனப்பயிற்சி இவர்களுக்கு நல்ல குணமளிக்கும்.


நமது மூளைக்கு ஒரு நிமிடத்திற்கு 800 மில்லி இரத்தம் தேவைப்படுகிறது. நமது உடலுக்குள் வேண்டிய ஆக்சிஜன் தேவையை ஐந்தில் ஒரு பாகத்தை மூளையே அபகரித்துக் கொள்கிறது. தூங்கினாலும், விழித்தாலும் எப்போதும் “குளுக்கோஸ் குளுக்கோஸ்” என்று அலறும் ராட்சஸ குழந்தை நமது மூளை. மூளைக்கு இரத்த சப்ளை தொடர்ந்து இருக்கவேண்டும். பத்து வினாடிக்கு இரத்தம் வரவில்லை என்றால் நாம் மயக்கம் போட்டு விழுந்து விடுவோம்.


சில நிமிடம் உயிர் காற்று (ஆக்ஸிசன்) இல்லாவிட்டால் இறந்துவிட வேண்டியதுதான். தொழுகையில் சஜ்தா செய்யும் நிலை தலைக்கு இரத்த ஓட்டம் செல்வதை அதிகப்படுத்துகிறது. இதனால் ஞாபகசக்தி, கற்பனைத் திறன் அதிகமாகிறது.


கண்கள் திறந்த நிலையில் சஜ்தா செய்யும்போது கிட்டப்பார்வை, தூரப்பார்வை கண் கோளாறுகளை சரி செய்கிறது. மேலும் கண்ணாடி அணிபவர்களின் கண்பவர் (Power) அதிகமாவதை தடுக்கிறது என்பது முக்கியமான விஷயம்.


சஜ்தா செய்வதின்மூலம்  (முறைப்படி தலையை தரையில் வைத்து, கைகளை ஊன்றி, முழு உடலின் பாரத்தையும் தலைக்கு கொண்டுவரும்போது) இரத்த ஓட்டம் தலைக்கு சீராகப் பாய்வதால் ஒற்றைத்தலைவலி, மண்டைவலி நீங்குகிறது.


அறிஞர் முஹம்மது அலீ குதுப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். கனவில் குர்ஆனின் ஸஜ்தா அத்தியாயத்தை ஓதக் காண்பவருக்கு தொழுகையின் சஜ்தாவில் இருக்கும் போது மரணம் நிகழும். நூல்:- தலீலுல் ஹைரானி ஃபீ தஃப்சீரில் அஹ்லாம்


எனவே, அல்லாஹுத்தஆலா அதிகமாக சிரவணக்கம் புரிந்து இறையருளைப் பெறக்கூடிய நல்லடியர்களுடன் நம்மையும் சேர்த்து நல்லருள் புரிவானாக! ஆமீன்!


மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

No comments:

Post a Comment

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...