Search This Blog

Tuesday, 12 October 2021

செல்லப்பிராணிகள்

 

செல்லப்பிராணிகள்

اذْهَبْ بِكِتَابِي هَذَا فَأَلْقِهْ إِلَيْهِمْ ثُمَّ تَوَلَّ عَنْهُمْ فَانْظُرْ مَاذَا يَرْجِعُونَ

(இறைத்தூதர்  சுலைமான் - அலை அவர்கள் தாம் வளர்த்த ஹுத்ஹுத் எனும் கொண்டலாத்தி பறவையிடம்) “என்னுடைய இக்கடிதத்தைக் கொண்டு போய் அவர்களின் முன் எறிந்துவிட்டு அவர்களைவிட்டு விலகி (மறைவாக இருந்து கொண்டு) அவர்கள் என்ன முடிவுக்கு வருகிறார்கள் என்பதை நீ கவனித்து வா!” என்று கூறினார். திருக்குர்ஆன்:- 27:28


ஏப்ரல் 11 ஆம் தேதி (National Pet Day) தேசிய செல்லப்பிராணிகள் தினம்


மனிதர்கள் துணைக்காக, மகிழ்ச்சிக்காக, பயணத்திற்காக, உணவிற்காக என்று பிராணிகளைத் தங்களுடன் வைத்து வளர்க்கத் தொடங்கினர். இதில் துணைக்காகவும், மகிழ்ச்சிக்காகவும் வளர்க்கப்படும் பிராணிகளை செல்லப்பிராணிகள் என்கின்றோம்.


நட்புடன் பழகும் நாய், பூனை, ஆடு, மாடு, கழுதை, ஒட்டகம், குதிரை போன்ற விலங்குகளை நாம் வீட்டில் வளர்த்து மகிழலாம். சிங்கம், புலி, கரடி போன்ற விலங்குகள் நட்புடன் பழகா. இவை காட்டில் வளரும்.


செல்லப்பிராணிகள் வளர்ப்பதில் மனிதர்களுக்கு ஏற்படும் சந்தோசத்திற்கு அளவே இல்லை என்றே சொல்லலாம். பூனைக்குட்டியோ, நாய்க்குட்டியோ எதுவாக இருப்பினும் அதைக் குட்டியிலிருந்து வளர்க்கும் போது அதனுடைய ஒவ்வொரு செயல்களும் நமக்குள் ஒரு புத்துணர்வையும் சந்தோசத்தையும் ஏற்படுத்தும். நாய், பூனை, முயல் மற்றும் பலவிதமான பறவைகள் போன்ற செல்லப்பிராணிகள் வளர்ப்பது நம் மனதுக்கும் உடலுக்கும் சந்தோசத்தைக் கொடுக்கின்றது. அவற்றுடன் ஆனந்தமாக நேரத்தை செலவழிக்கும்போது நம் கவலைகள், துன்பங்களை மறந்துபோக வாய்ப்பிருக்கிறது என்கிறது ஓர் ஆய்வு.


மனிதனுக்கும் பிராணிகளுக்குமான உறவு அறிவியல், புவியியல், வரலாறு என எல்லாவற்றிலும் விவரிக்கப்பட்டுவிட்ட ஒன்று.


பறவைகள்


இறைத்தூதர் சுலைமான் (அலை) அவர்கள் (ஹுத்ஹுத் எனும்) கொண்டலாத்தி பறவை ஒன்றை வளர்த்து வந்தார்கள். அப்பறவை பூமிக்கு அடியில் கண்ணுக்குத் தெரியாமல் ஓடும் நீரோட்டத்தின் அறிவைப் பெற்றிருந்தது. சுலைமான் (அலை) அவர்கள் படைகளோடு எங்கு சென்றாலும் பயணத்தின் வழியில் நீர்நிலைகளை கண்டறிய அந்தப் பறவையை பயன்படுத்திக்கொள்வார்கள். ஒருமுறை அவ்வாறு வெளியூர் பயணத்தின் போதுதான் அந்தப் பறவை “சபா” நகரத்தின்மீது பறந்து சென்று அங்கு நடைபெற்ற சில காட்சிகளை தம்மை வளர்த்துவரும் எஜமான் சுலைமான் (அலை) அவர்களிடம் விவரித்தது. இதைப்பற்றியே திருக்குர்ஆன் அத்தியாயம் அந்நம்ல்  20 முதல் 28 ஆகிய வசனங்கள் பேசுகிறது.


அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. எனக்கு (என் தாய் வழியில்) 'அபூ உமைர்' எனப்படும் ஒரு சகோதரர் இருந்தார். அவர் பால்குடி மறந்தவராக இருந்தார். அருமை நாயகம் (ஸல்) அவர்கள் (எங்கள் வீட்டுக்கு) வந்தால் என் சகோதரரைப் பார்த்து, ( يَا أَبَا عُمَيْرٍ مَا فَعَلَ النُّغَيْرُ ) "அபூ உமைர்! பாடும் (உனது) சின்னக் குருவி என்ன செய்கிறது?" என்று கேட்பார்கள். என் சகோதரர் அந்தக் குருவியை வைத்து விளையாடிக்கொண்டிருப்பார். நூல்:- புகாரீ-6129, முஸ்லிம்-4348, அபூதாவூத்- அல்அதபுல் முஃப்ரத்-


அனஸ் (ரலி) அவர்களின் தாய்வழிச் சகோதரரே அபூ உமைர் (ரலி) அவர்கள் அபூ உமைர் சிறுவராக இருந்த போது "புள்புள்" பறவையை வைத்து விளையாடுவதுண்டு. ஒருநாள் அவரது பறவை செத்துவிட்டது. இதனால் அவர் சோகமாக இருந்ததைப் பார்த்த அண்ணல் நபி (ஸல்) அவர்கள் காரணம் கேட்டார்கள். விவரம் சொல்லப்பட்ட போது அவரைப் பார்த்து "அபூ உமைர் உனது சின்னக்குருவி என்னவாயிற்று?" என பரிவோடு கேட்டார்கள். நூல்:- ஃபத்ஹுல் பாரீ, அல்மின்ஹாஜ்


ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) அவர்கள் கூறியதாவது. நபித்தோழர்கள் பறவைகளை கூண்டுகளில் வைத்து அடைத்த வண்ணம் சுமந்து சென்று கொண்டிருப்பார்கள். நூல்:- அல்அதபுல் முஃப்ரத்-383


புறா, கிளி, குருவி போன்ற சில பறவைகளை செல்லப் பிராணிகளாக வளர்க்கலாம்.


குழப்பமான மனநிலையில் இருக்கும் பொழுது குழந்தைகளுடனும் வளர்ப்புப் பிராணிகளுடனும் சிறிது நேரம் விளையாடினால் மனம் தெளிவுபெறும் என்பது பல்வேறு ஆராய்ச்சிகளில் நிரூபித்துள்ள ஒன்று.


பூனைகள்


கப்ஷா பின்த் கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது. என் (மாமனார்) அபூ கத்தாதா (ரலி) அவர்கள் என் வீட்டிற்கு வந்தார்கள். அவர்கள் (உளூ எனும்) அங்கத்தூய்மை செய்வதற்கு நான் தண்ணீர் கொண்டு வந்து ஒரு பாத்திரத்தில் ஊற்றினேன். அப்போது பூனை ஒன்று வந்து அந்தத் தண்ணீரைக் குடிக்கலாயிற்று. உடனே கத்தாதா (ரலி) அவர்கள் அந்த பூனை குடித்து முடிக்கும்வரை அந்தப் பாத்திரத்தை சரியாக பிடித்தார்கள். நான் அதை (வியப்புடன்) உற்றுப் பார்த்துக் கொண்டிருந்ததைக் கண்ட அபூ கத்தாதா (ரலி) அவர்கள், "உளூச் செய்யும் தண்ணீரை குடிப்பதைக் கண்டு ஆச்சரியப்படுகிறாயா?" என்று கேட்டார்கள். நான், "ஆம்" என்றேன். அதற்கு அவர்கள், "அருமை நாயகம் (ஸல்) அவர்கள் ( إِنَّهَا لَيْسَتْ بِنَجَسٍ إِنَّمَا هِيَ مِنَ الطَّوَّافِينَ عَلَيْكُمْ أَوِ الطَّوَّافَاتِ ) 'பூனைகள் அசுத்தமான பிராணிகள் அல்ல. அவையெல்லாம் உங்களைச் சுற்றிச் சுற்றி வரக்கூடியவை ஆகும்' என்று கூறினார்கள் என்றார்கள்" நூல்:- திர்மிதீ-85, நசாயீ-67 


மிகப் பிரலமான நபித்தோழர் அபூஹுரைரா (ரலி) அவர்கள் எப்பொழுதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் தான் இருப்பார். அவர் தம்முடன் எப்போதும் ஒரு பை வைத்திருப்பார். அதற்குள் ஒரு ஆண் பூனைக்குட்டி இருக்கும். அந்த பூனை அவரைவிட்டும் எங்கும் செல்லாது. சென்றாலும் மீண்டும் அவரிடமே வந்துவிடும். அந்தளவு அந்த பூனையிடம் மிகுந்த பாசம் வைத்திருந்தார். அதற்கு தேவையான உணவும் தண்ணீரும் அவ்வப்போது வழங்குவார்.


அவரிடம் பூனைக்குட்டி எப்பொழுதும் இருப்பதால் நபியவர்கள் அவரை “அபூஹுரைரா” அதாவது “பூனையின் தந்தை” என்று புனைப்பெயர் வைத்து அழைத்தார்கள். அதனால் அவரின் அசல் (அப்துல்லாஹ் என்பது) மறைந்து இந்த புனைப்பெயரே இன்று நாள் வரை நிலைத்து விட்டது.


அரபு மொழியில் “ஹிர்ரா” என்றால் “ஆண் பூனை” என்று பெயர். “ஹுரைரா” என்றால் “ஆண் பூனைக்குட்டி” என்று பொருள்.


பூனையின் எச்சில் பட்ட தண்ணீர் அசுத்தமாகாது. பூனை உட்கார்ந்த இடத்தில் நாம் தொழலாம். அந்த இடம் சுத்தமானதே! எனவேதான், பெரும்பாலான முஸ்லிம் வீடுகளில் பூனையை வளர்க்கிறார்கள்.


ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது. ( نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ثَمَنِ الْكَلْبِ وَالسِّنَّوْرِ ) நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் நாய் மற்றும் பூனை விற்ற காசு தடை விதித்தார்கள்.


பூனை விற்ற காசு அனுமதிக்கப்பட்டதன்று என அறிஞர்கள் சிலர் கூறுகின்றனர். வேறு சிலர் அதற்கு அனுமதி உண்டு என்கின்றனர். இதுவே, இமாம் அஹ்மத் பின் ஹம்பல் (ரஹ்), இஸ்ஹாக் பின் ராஹவைஹி (ரஹ்) ஆகியோரின் கூற்றாகும். நூல்:-  திர்மிதீ-1200


பூனை, அது ஒரு செல்லப்பிராணி ஆகும். பூனையை வளர்ப்பதில் தவறில்லை. எனவே, பூனையை அன்பளிப்பாகவோ, இலவசமாகவோ வழங்கலாமே தவிர, காசுக்கு விற்பது நல்லதன்று. இந்தக் கருத்திலேயே பூனை விற்பனைக்குத் தடை வந்துள்ளது. எலிகளைப் பிடித்தல் போன்ற பயன்பாட்டிற்குப் பயன்படுவதாக இருந்தால், பூனைகளை விற்கலாம் என்று சில மார்க்க அறிஞர்கள் கூறுகின்றனர். நூல்:- அல்மின்ஹாஜ், துஹ்ஃபத்துல் அஹ்வதீ


உலகிலுள்ள மற்ற பிராணிகள் கண்ட இடங்களில் மலம் கழித்துவிட்டு அப்படியே போய்விடும். ஆனால், பூனை மட்டும் முதலில் மலம் கழிக்க இடம் தேடும். பின்பு அதன் மலத்தை மண்ணால் மூடிவிட்டு சென்றுவிடும். மற்ற பிராணிகளுக்கு இல்லாத ஒரு அறிவை இறைவன் பூனைக்கு மட்டும் கொடுத்திருக்கிறான்.


பூனை வளர்க்கப்படும் வீடுகளில் பல்லி, பூச்சி, எலி போன்றவற்றின் தொல்லைகள் இருப்பதில்லை.


பூனை ஒரு வித உறுமலை ( Cat Purr ) வெளிபடுத்தி கொண்டே இருக்கும். அந்த உறுமலானாது ஒரு வித அதிர்வலைகளை வெளியிடுகிறது அந்த அதிர்வலைகளின் அளவு அதிகபட்சமாக, 20 Herz முதல் 140 Herz வரை இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.


அந்த அதிர்வலைகளை மனிதன்மீது படும்போது அவனில் எண்ணற்ற மாற்றங்கள் உடலில் ஏற்படுவதாக ஆய்வில் கண்டு பிடித்திருக்கிறார்கள்.


1. மனதின் மற்றும் மூளையில் அதிக இறுக்கம் அழுத்தம் இருந்தால் அவை நீங்கி விடும்.

2.  மூச்சு திணறல் உள்ளவர்கள் பூனை வளர்த்தால் மூச்சு திணறல் நீங்கும்.

3. குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள் பூனை வளர்த்தால் அதன் அதிர்வலையின் காரணமாக இரத்த அழுத்தம் சீராகும்.

4. பூனை வளர்ப்பவர்களின் எலும்பு வலுவடையும். மேலும் எலும்பு முறிவு ஏற்பட்டவர்களுக்கு பூனையின் அதிவர்லையின் காரணத்தால் எலும்பு சீக்கிரம் இணைந்து குணமாகும்.

5. பூனை வளர்ப்பவர்கள் (ஹார்ட் அட்டாக் எனும்) இதய அடைப்பு  வருவதை விட்டும் 40 சதவீத ஆபத்திலிருந்து பாதுக்காக்கப்படுகிறார்கள். அதாவது பூனை வளர்ப்பவர்களுக்கு ஹார்ட் அட்டாக் பெரும்பாலும் வருவதில்லை.

6. உடலில் ஏதாவது காயம் ஏற்பட்டிருந்தால் பூனையின் அதிர்வலை காரணமாக அவை சீக்கிரம் குணமாகும்.

7. சதைப்பிடிப்பு மற்றும் சதை வலுவிழந்து இருந்தால் சதைப்பிடிப்பு நீங்கி, சதை வலுவடையும். உடலில் ஏதாவது வலி இருந்தால் பூனையை வளர்ப்பதால் வலி குணமாகும்


என்ன ஆச்சிரியம் பூனையின் அதிர்வலைகள் மிகுந்த மருந்துவ பலனை கொடுப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். பார்க்க இணையத்தளம்: power-of-cat-purrs-infographic


நாய்கள்


(நபியே) வேட்டையாடும் பிராணிகளில் எவற்றுக்கு நீங்கள் பயிற்சி அளித்து அல்லாஹ் உங்களுக்குக் கற்றுத் தந்தவற்றைக் கற்றுக் கொடுக்கின்றீர்களோ அவை (வேட்டையாடியவை)களும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன எனக் கூறுவீராக!  திருக்குர்ஆன் 5:4


கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لاَ تَدْخُلُ الْمَلاَئِكَةُ بَيْتًا فِيهِ كَلْبٌ وَلاَ صُورَةُ تَمَاثِيلَ ) நாயும், உருவப் படங்களும் உள்ள வீட்டினுள் வானவர்கள் நுழைய மாட்டார்கள். அறிவிப்பாளர்:- அபூதல்ஹா (ரலி) அவர்கள் நூல்:-  புகாரீ-3225


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِذَا وَلَغَ الْكَلْبُ فِي الإِنَاءِ فَاغْسِلُوهُ سَبْعَ مَرَّاتٍ وَعَفِّرُوهُ الثَّامِنَةَ فِي التُّرَابِ ) பாத்திரத்தில் நாய் வாய் வைத்து விட்டால் ஏழு தடவை (தண்ணீரால்) கழுவிக் கொள்ளுங்கள். எட்டாவது தடவை மண்ணிட்டுக் கழுவுங்கள். அறிவிப்பாளர்:-  அப்துல்லாஹ் பின் அல்முஙஃப்பல் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-473, திர்மிதீ- 84


அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ أَمْسَكَ كَلْبًا فَإِنَّهُ يَنْقُصُ كُلَّ يَوْمٍ مِنْ عَمَلِهِ قِيرَاطٌ إِلاَّ كَلْبَ حَرْثٍ أَوْ مَاشِيَةٍ ) எவர் நாய் வைத்திருக்கிறாரோ அவரது நற்செயல்களில் இருந்து ஒவ்வொரு நாளும் ஒரு "கீராத்" அளவுக்கு (அவற்றின் நன்மை) குறைந்து போய்விடும்; விவசாய பண்ணையையோ கால்நடைகளையோ (திருடு போய் விடாமல்) பாதுகாப்பதற்காக வைத்திருக்கும் நாய்களைத் தவிர. அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-2322, முஸ்லிம்-3211


ஒருமுறை கண்பார்வையற்ற அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, "நாயகமே! நான் தொழுகைக்காகவும் வேறு தேவைகளுக்காகவும் வெளியே சென்று வருகிறேன். அப்போது பாதையில் பல்வேறு இடையூறுகள் ஏற்படுகிறது. எனவே,  என்னிடம் ஒரு நாய் உள்ளது. அதை நான் துணைக்கு அழைத்துச் செல்கிறேன். இதுபோன்ற தேவைக்காக நான் அதைப் பயன்படுத்திக்கொள்ளலாமா? வினவினார். அப்போது நபியவர்கள் அவ்வாறு பயன்படுத்தி கொள்ளலாம் என அவருக்கு அனுமதியளித்தார்கள்.


அபூமஸ்வூத் அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது. ( أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ ثَمَنِ الْكَلْبِ ) அருமை நாயகம் (ஸல்) அவர்கள் நாய் விற்ற காசை தடை செய்தார்கள். நூல்:- புகாரீ-2237, முஸ்லிம்-3191, அபூதாவூத்-, திர்மிதீ-1200


அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது. ( نَهَى عَنْ ثَمَنِ الْكَلْبِ إِلاَّ كَلْبَ الصَّيْدِ ) (அண்ணல் நபி - ஸல் அவர்கள்) வேட்டை நாயைத் தவிர மற்ற நாய்களை விற்ற காசுக்கு  தடை விதித்தார்கள். நூல்:- திர்மிதீ-1202


நாயை விற்பதும், நாய் விற்ற காசைப் பயன்படுத்துவதும் கூடாது. ஆனால், வீட்டுக் காவல், தோட்டக் காவல், வேட்டையாடல் போன்ற பயன்பாடுகளுக்காக உள்ள நாய்களை விற்பதும் வாங்குவதும் செல்லும் என்றும், அவற்றை விற்று காசு செல்லும் என்றும் சில மார்க்க அறிஞர்கள் கூறுகிறார்கள். ஏனெனில், மேற்சொன்ன நோக்கங்களுக்காக நாய்களைப் பயன்படுத்த அனுமதி உண்டு. எனவே, அவற்றை விற்பதும் செல்லும்; இந்த நபிமொழியில் தடைசெய்யப்பட்டது வேறு நோக்கங்களுக்காக (அதாவது செல்லப்பிராணி, பொழுதுபோக்கு) பயன்படுத்தப்படும் நாய்களுக்கே பொருந்தும் என்பது இவர்களின் கருத்தாகும். நூல்:- அல்மின்ஹாஜ், தக்மிலா


இஸ்லாத்தில் நாய் வளர்ப்பது (ஹராம் எனும்) தடுக்கப்பட்டவையாகும். என்றாலும், கண் பார்வையற்றவர்கள் கூடவே வரக்கூடிய நாய்கள் அவர்களுக்கு சில நேரங்களில் சரியான வழியை அறிவிக்கிறது. இப்படியான சில நன்மைகளை கருதி, நாய் வளர்ப்புச் சட்டங்களில் சிலருக்கு சலுகைகள் வழங்குகிறது இஸ்லாம்.


தோழமை நாய்கள், பாதுகாவல் நாய்கள், வேட்டை நாய்கள், பணி நாய்கள், துப்பறிவு நாய்கள் இவ்வாறு பல பயன்பாடுகள் உண்டு.


துப்பறிவுக்காகவும், வேட்டைக்காகவும் வீடு, தோட்டம், கால்நடைகள் ஆகியவற்றின் பாதுகாப்பிற்காகவும், பணிகளுக்காகவும் (பனி பிரதேசங்களில் வண்டி இழுக்க நாய்கள் உதவுகிறது) ஆகியவற்றுக்காக மட்டும் நாய்கள் வளர்க்கலாம்.


நாய்கள் மனிதர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகின்றன. வெறுமனே ஒரு செல்லப்பிராணியாக வளர்க்காமல் பல்வேறு வகையான வேலைகளைச் செய்யப் பழக்கப்படுத்தப்பட்டதாய் இருக்க வேண்டும். காவல் துறை, துப்பறியும் துறை போன்றவற்றில் நாய்களின் பங்கு இன்றமையாதது. “ஷெப்பர்ட்” இன நாய்கள் ஆடு மேய்க்கப் பயன்படுகின்றன. மோப்ப நாய்கள் குற்றவாளிளை கண்டறிதல், வெடிபொருள்களைக் கண்டறிதல் போன்றவற்றிற்குப் பயன்படுகின்றன.


இவ்வாறு வளர்க்கும் போது அந்த நாய்களைத் தொட வேண்டிய நிலை அவசியம் ஏற்பட்டால் தொடுவது தவறல்ல. “நாயின் எச்சில் கடுமையான அசுத்தம்” என்று நபிமொழி எச்சரிக்கிறது. எனவே, அதனுடைய எச்சில் நம்மீது படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இது போன்ற தேவைகளின்றி செல்லப்பிராணியாக நாய்களை வளர்க்கக் கூடாது. நாயை செல்லப்பிராணியாக வளர்ப்பது பாவக்காரியமாகும்.


அவசியத் தேவைகளுக்காக நாய் வளர்த்தாலும், நடுவீட்டில் வைத்து (அதாவது நமது படுக்கையறை வரை வரும் அளவுக்கு மிகுந்த செல்லம் கொடுத்து) வளர்க்கக்கூடாது. வீட்டின் ஒரு ஓரத்தில் அல்லது கொல்லைப்புறத்தில் வைத்து வளர்க்கலாம். அது நம்மை அல்லது நமது குழந்தைகளை தொடவோ, நக்கவோ அனுமதிக்கக்கூடாது.


பாசத்திற்குரியவர்களை தள்ளிவைத்துவிட்டு செல்லப் பிராணிகளை பஞ்சணையில் பக்கத்தில் வைத்துக்கொள்ளும் பைத்தியங்கள் வாழும் காலமிது.


தம்மை அறிவுஜீவிகள் என்று சொல்லிக்கொள்ளக்கூடிய மேலை நாட்டினரில் சிலர் தமது செல்லப்பிராணிகளுக்கு தமது கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்களை எழுதி வைக்கிறார்கள். இது அந்த செல்லப்பிராணிகளுக்கு விளங்குமா?


பெயரிடுதல்


அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. ( كَانَتْ نَاقَةٌ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تُسَمَّى الْعَضْبَاءَ، وَكَانَتْ لاَ تُسْبَقُ ) அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம் "அள்பாஃ" என்று (பெயரிட்டு) அழைக்கப்பட்ட ஒட்டகம் ஒன்று இருந்தது. அது பந்தயத்தில் எவராலும் வெல்ல முடியாத (அளவுக்கு விரைவாக ஓடக்கூடிய)தாக இருந்தது. நூல்:- புகாரீ-6501


மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் கூறியதாவது. ஹுதைபியா உடன்படிக்கை நடைபெற்ற காலகட்டத்தில் (மக்காவை நோக்கி உம்ரா மேற்கொள்ள) நபிகள் பெருமானார் ஸல் அவர்கள் புறப்பட்டார்கள். பாதையில் சென்றுகொண்டிருந்தபோது (மிரார் எனுமிடத்தில்) நபியவர்களுடைய வாகனம் (கஸ்வா என்று பெயரிட்டு அழைக்கப்பட்ட ஒட்டகம்) மண்டியிட்டு அமர்ந்து கொண்டது. மக்கள் (அதை எழுப்பி நடக்க வைப்பதற்காக) "ஹல்ஹல்" என்று அதட்டினார்கள். அது எழும்ப மறுத்து முரண்டு பிடித்தது. உடனே மக்கள், ( خَلَأَتِ الْقَصْوَاءُ، خَلَأَتِ الْقَصْوَاءُ ) "கஸ்வா பிடிவாதம் பிடிக்கிறது, கஸ்வா பிடிவாதம் பிடிக்கிறது" என்று கூறினார்கள்.


நபியவர்கள், ( مَا خَلَأَتِ الْقَصْوَاءُ، وَمَا ذَاكَ لَهَا بِخُلُقٍ، وَلَكِنْ حَبَسَهَا حَابِسُ الْفِيلِ  )"கஸ்வா பிடிவாதம் பிடிக்கவில்லை; பிடிவாதம் பிடிப்பது அதன் குணமுமில்லை. ஆனால், (யமன் நாட்டு மன்னன் அப்ரஹா தலைமையில் யானைப்படை கஅபாவை இடிக்க வந்தபோது) யானையைத் தடுத்த (இறை)வனே அதையும் தடுத்து வைத்திருக்கிறான்" என்று கூறினார்கள். நூல் அல்பிதாயா வந்நிஹாயா


அபூதல்ஹா (ரலி) அவர்கள் தமது குதிரைக்கு "மன்தூப்" என்று பெயரிட்டிருந்தார்கள். (அல்அதபுல் முஃப்ரத்)


உக்காஷா (ரலி), ஸாபித் (ரலி) ஆகிய இருவரும் வேகமாக குதிரையில் பயணம் செய்யக்கூடிய சிறந்த குதிரை வீரர்கள். உக்காஷா (ரலி) அவர்கள் தாம் வளர்த்த குதிரைக்கு "அர்ரஸ்ஸாம்" என்றும், ஸாபித் (ரலி) அவர்கள் தாம் வளர்த்த குதிரைக்கு "அல்மிஹ்பர்" என்றும் பெயரிட்டிருந்தார்கள்.


அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் சில ஒட்டகங்கள் இருந்தன. அவற்றிற்கு நபியவர்கள் பெயரிட்டிருந்தார்கள். அன்றைய அரபியர், தாம் வளர்க்கும் வளர்ப்புப் பிராணிகளுக்கு பெயரிடுவது வழக்கம்.


செல்லப்பிராணிகளுக்கு பெயரிட்டு அழைக்கலாம். செல்லப்பிராணிகளுக்கு மொழி, அர்த்தம் எதுவும் புரியாது என்றாலும், ஓசையை எளிதாகப் புரிந்து கொள்ளும் திறன் கொண்டவை. அந்த ஓசை அவைகள் விரும்பும் வண்ணம் இருக்க வேண்டும். ஒரு சில பெயர்களை, அதாவது ஓசையை செல்லப்பிராணிகள் குறிப்பாக நாய்கள் பெரிதும் விரும்புகின்றன என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. அப்படி பெயரிடும்போது, குட்டியில் இருந்து ஒரே பெயரை பயன்படுத்த வேண்டும். அடிக்கடி பெயர்மாற்றம் செய்யக்கூடாது.


நோவினை செய்யக்கூடாது


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முற்காலத்தில்) பெண்ணொருத்தி (தாம் வளர்த்த) பூனையை அது (பசியால் துடித்துச்) சாகும் வரை அடைத்து வைத்திருந்தாள். அதன் காரணத்தால், அவள் (நரகத்தில்) வேதனை செய்யபபட்டாள். அவள் அதைக் கட்டி வைத்து, அதற்கு தீனி போடவுமில்லை; தண்ணீர் தரவுமில்லை; அது பூமியிலுள்ள புழு பூச்சிகளைத் தின்று (பிழைத்துக்) கொள்ளட்டும் என்று அதை அவிழ்த்துவிடவுமில்லை. அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-3482, முஸ்லிம்-5112                              


திருக்குர்ஆனின் பிரபலமான விரிவுரையாளர் பேரறிஞர் ஸமக்சரீ (ரஹ்) அவர்கள் தமது சிறுபிராய நிகழ்வொன்றைக் கூறுகிறார்கள். அதாவது நான் சிறுவனாக இருக்கும்போது ஒரு சிட்டுக்குருவியை வளர்த்து வந்தேன். அந்த குருவின் காலில் ஒரு நூலைக் கட்டி அதனுடன் நான் விளையாடுவது வழக்கமாகும். ஒருமுறை அந்தக் குருவி ஒரு பொந்தில் நுழைந்து கொண்டது. குருவியின் காலில் கட்டியிருந்த நூலைப் பிடித்து பலமுறை மெதுவாக இழுத்துப்பார்த்தேன். அது வெளியே வரவில்லை. இறுதியாக, பலம் கொண்டு அந்த நூலை வேகமாக வெளியே இழுத்தேன். அப்போது அந்த நூலோடு குருவியின் ஒரு கால் மட்டும் ஒடிந்து கொண்டு வந்துவிட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த என் தாயார் என்னை மிகவும் கண்டித்தார்கள்.


பிராணிகள், பறவைகள் மற்றும் மீன்களை வீட்டில் வைத்து வளர்க்கலாம். ஆனால், அதன் உணவு, பானம் போன்ற அவசியத் தேவைகளை நிறைவேற்றி, அவைகளுக்கு இடையூறு ஏற்படாதவாறு வளர்ப்பது தவறல்ல.


ஐந்து வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்குத்தான் செல்லப்பிராணியை அறிமுகப்படுத்த வேண்டும். அதற்கு முன்பு அவர்களுக்கு அவைகளிடம் எப்படி பழக வேண்டும் என்ற தெளிவு இருக்காது. தங்கள் கோபம் அழுகை போன்றவற்றை சட்டென பிராணிகளிடம் காட்டலாம் என்பதில் கவனம் தேவை என்கிறது ஓர் ஆய்வு.


குழந்தைகளுடன்...


குழந்தைகளிடம் அன்பு, பாசம், கருணை போன்ற நற்குணங்களை வளர்த்தெடுக்க செல்லப்பிராணி வளர்ப்பு தூண்டுகோலாக அமைகிறது பொம்மைகள் எத்தனை இருந்தாலும் செல்லப்பிராணிகளிடம் குழந்தைகளுக்கு உருவாகும் பிடிப்பு உயிரோட்டமானது. அதை கவனித்துக் கொள்ளும்போது குழந்தையும் ஒரு தாயாக / தந்தையாக மாறிவிடுகின்றனர்.


செல்ல பிராணிகள், குழந்தைகளுக்கு பொறுப்புணர்வைக் கற்றுத்தருகின்றன. இதன்மூலம், பொறுப்பின்மையால் ஏற்படும் பின்விளைவுகள் குழந்தைகளுக்கு தெரியவருகிறது. உதாரணமாக, நமது குழந்தை, செல்லப்பிராணிக்கு உணவளிக்க மறந்துவிட்டால், அதனால், அந்த செல்லப்பிராணி படும் துன்பத்தை நேரடியாக உணர்ந்து, நமது குழந்தை பொறுப்புணர்வைக் கற்றுக்கொள்கிறது.


வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணியை கவனித்துக் கொள்ளுதல், அதற்கு உணவளித்தல் மற்றும் அதற்கு தேவையான அனைத்தையும் செய்தல் உள்ளிட்ட செயல்கள், நமது குழந்தைக்கு தன்னம்பிக்கையை அளிப்பதாக உள்ளன.


செல்லப்பிராணி வளர்ப்பு, ஆர்வம் நிறைந்த ஒரு செயல் மட்டுமல்ல; உடல் நலம், மன நலம், சமூக நலம் ஆகியவற்றை ஒன்றாகக் கொண்டது. நமது குழந்தையின் உலகத்தில் கைப்பேசிகளை கொடுத்து இயந்திரமாக மாற்றுவதை காட்டிலும் செல்லப்பிராணிகளுடன் பழக விடுவது பல மடங்கு சிறந்தது.


இன்றைய (செல்போன் லேப்டாப் போன்ற)  எலக்ட்ரானிக் யுகத்தில் குழந்தைகள் பலரும், வீடியோ கேம் உள்ளிட்ட எலக்ட்ரானிக் விளையாட்டுகளிலும் இணையத்தளங்களிலும் மூழ்கி கிடக்கிறார்கள். அவர்கள், உயிருள்ள அம்சங்களைவிட, உயிரற்ற அம்சங்களுடன்தான் அதிகநேரம் செலவிடுகிறார்கள். இதனால், அவர்களின் மூளை தேவையான வளர்ச்சியின்றி ஒரு தேக்க நிலையை அடைகிறது. மன பாதிப்புகள் மட்டுமின்றி, உடல்ரீதியான பல பாதிப்புகளும் ஏற்படுகின்றன. மேலும், அவர்களின் கற்பனைத்திறன் பாதிக்கப்படும் மற்ற செயல்பாடுகளிலும் விருப்பமின்றி இருப்பர். இப்படிப்பட்ட குழந்தைகளுக்கு செல்லப்பிராணிகள் நல்ல பலன் தரும்.


எனவே, இந்த சூழலில், வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள், உங்கள் குழந்தைகளை, அத்தகைய எலக்ட்ரானிக் உபகரணங்களை விட்டு அகலுமாறு செய்து, அவர்களை ஓடியாடி விளையாட வைக்கிறது. நன்றாக சிரிக்க வைக்கிறது. மற்றும் அவர்களுக்கு ஒரு உயிர்ப்புள்ள அனுபவத்தைத் தருகிறது. இதன்மூலம், மனோரீதியாகவும், உடல்ரீதியாகவும் நமது குழந்தை பெரியளவு நன்மையடைகின்றனர்.


பிற உயிர்களின் மீது அன்பு செலுத்த வேண்டுமென்பது ஒரு மானுட தத்துவம். வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளால், நம்முடைய குழந்தை, நடைமுறை ரீதியில் அந்த உயரிய மானுட பாடத்தைக் கற்றுக்கொள்கிறது.


மூடநம்பிக்கைகள்


மனிதனுக்கு ஏற்படும் திருஷ்டி தோஷங்களை வளர்ப்புப் பிராணிகள் தனக்குள் ஈர்த்துக்கொண்டு வளர்பவனுக்கு தாம் துன்பப்பட்டாலும் அரணாக நிற்கும் என்று சொல்லப்படுவதும் அறியாமையே!


வண்ண மீன்கள் வளர்த்தால் கண்திருஷ்டி நீங்கும் என்பது மூடநம்பிக்கையே! வாஸ்து மீன் வளர்ப்பு எனக்கூறி, ஒரு மீனை ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு விற்கின்றனர். இது மக்களை ஏமாற்றும்செயலே!


செய்வினை, சூனியம், பேய், பிசாசு போன்ற தீய சக்திகளை கண்டறியும் ஆற்றல் வளர்ப்புப் பிராணிகளுக்கு உண்டு என்றும், மேலும் மேற்கண்ட தீய சக்திகளால் விளையும் தீய சக்திகளை தடுத்து நிறுத்தும் சக்தியும் வளர்ப்பு பிராணிகளிடம் உண்டு என்றும் எண்ணுவது அறியாமையே!


ஒரு வீட்டிற்கு வரும் எதிர்பாராத தீயதை தடுப்பதற்காக அந்த தீய சக்தியை தனக்குள் உள்வாங்கிக்கொண்டு வளர்ப்பு மிருகங்கள் இறந்துவிடும்" என்று சொல்லப்படுவதும் அறியாமையே!


கவனிக்க வேண்டியவை


வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்ப்பதில் பல சுகாதார அம்சங்களும் அடங்கியுள்ளன என்பதை மறக்கலாகாது. தற்போதைய காலங்களில், பல குழந்தைகள், ஆஸ்துமா பிரச்சினைகளுடன் பிறக்கின்றன. அதுபோன்ற நிலையில், வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளின் உரோம மயிர்களால், அந்தப் பிரச்சினை மேலும் தீவிரமாகும்.


செல்லப்பிராணிகளின் கழிவுகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும் அவை தங்குமிடத்தை தினமும் (ஆன்டிசெப்டிக் லோஷன் எனும்) கிருமி நாசினி பயன்படுத்தி சுத்தப்படுத்துவது அவசியம்


செல்லப் பிராணிகளின் சுத்தம் விசயத்தில் மிகுந்த கவனம் தேவை. அவைகளுக்கு ஏற்படும் உடல்நலப் பிரச்சினைகளை உடனடியாக கவனிப்பது மிகவும் முக்கியம்.


எதிரியைவிட ஆபத்தானவை


ஒரு பெண் செல்லப்பிராணியாக ஒரு மலைப்பாம்பை வளர்த்து வந்தார். அது அந்த பெண்ணின் மேல் எப்போதும் பரவி திரியும். திடீரென்று சில நாட்களாக அந்த மலைப்பாம்பு உணவு உண்பதை நிறுத்திவிட்டதையும், அத்துடன் புதிய வழக்கமாக இரவில் அந்த பெண் தூங்கும்போது, அவள்மீது படுத்து கொள்வதையும் கவனித்தாள்.


அவளுக்கு மிகுந்த கவலை வந்துவிட்டது. என்ன என்னவோ செய்து பார்த்தும் அந்த பாம்பு எதையும் உண்ணவில்லை. இறுதியாக அந்த மலைப்பாம்பை ஒரு கால்நடை மருத்துவரிடம் கொண்டு சென்று பரிசோதித்தாள். பரிசோதித்து முடித்தவுடன் அந்த மருத்துவர் கவலையுடன் அந்த பெண்ணிடம் ஒரு அதிர்ச்சியான தகவலை தெரிவித்தார்.


"உங்கள் பாம்பு உங்களை கொன்று விழுங்க தயாராகிக்கொண்டிருக்கிறது. உங்களுடைய நீள அகலத்தை இரவுகளில் நீங்கள் தூங்கும்போது அளக்கிறது. அது உங்களை அதனுடைய இரையாக்க முடிவு செய்த மறுகணமே உங்களை விழுங்க வசதியாக தன்னுடைய வயிற்றை காலி செய்துக்கொண்டிருக்கிறது. உடனடியாக அதனை கொல்லுங்கள்" என்றார்.


இது இணையத்தளத்தில் இருந்து வாசிக்கப்பட்டவை.


நமது நாட்டில் சிலர் வனவிலங்கான யானையை வளர்ப்புப் பிராணியாக வளர்க்கிறார்கள். “யானைக்கு மதம் பிடித்ததால் பல உயிர் பலியாகிவிட்டது; அது பாகனையே கொன்று விட்டது; பல்லாயிரக்கணக்கான மதிப்புள்ள பொருட்கள் நாசமாக்கி விட்டது” என்றெல்லாம் தினசரிகளில் பலமுறை வாசித்துள்ளோம்.


அரபு நாடுகளிலும், மேலை நாடுகளிலும் சிலர், சிங்கம் புலி போன்ற ஆபத்தான வனவிலங்குகளை செல்லப்பிராணியாக வளர்க்கிறார்கள். அதைப் பெருமையாகவும் கருதுகிறார்கள். வனவிலங்குகளால் அதை வளர்ப்பவருக்கு என்ன ஆபத்து எப்போது நிகழும் என்று யாராலும் கணிக்க இயலாது. எனவே, சிங்கம், புலி, யானை போன்ற வனவிலங்குகள் எப்போதும் வளர்ப்புப் பிராணிகளாக ஆகாது. அவைகளை மனிதர்கள் தம் பக்கத்தில் வைத்துக்கொள்வது ஆபத்தில் தான் முடியும்.


வெளிநாட்டில் வரைமுறைகள்


நாய் போன்ற செல்லப்பிராணிகள் வளர்ப்பவர்களுக்கு வெளிநாட்டில் வரைமுறைகள் உள்ளன. (License) உரிமம் பெற்றுதான் வளர்க்கவேண்டும். உரிமம் பெற நிறைய நிபந்தனைகளுக்கு அவர்கள் உள்படவேண்டும். பொது இடத்தில் அது அசுத்தம் செய்தால், வளர்ப்பவர் தான் அதை சுத்தம் செய்ய வேண்டும். மற்றவர்களுக்கு அது தொந்தரவு கொடுத்தால் எஜமானர் அதற்கான அபராதத்தை செலுத்தியாகவேண்டும். இதையெல்லாம் மீறி செல்லப்பிராணி அவர்களோடு மகிழ்ச்சியாக இருக்கிறதா, ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதும் கண்காணிக்கப்படும். பராமரிப்பு திருப்தி தராவிட்டால், நாய் வளர்ப்புக்காக அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் உரிமம் ரத்து செய்யப்பட்டுவிடும்.


மனிதர்களோடு சேர்ந்து செல்லப்பிராணிகள் வாழ்வது சவாலான விஷயம் தான். பொதுவாக செல்லப்பிராணிகள் தனிமையை விரும்பாது. நாய், பூனை, காதல் பறவைகள் (லவ் பேர்ட்ஸ்), புறா, கிளி என்று எதுவானாலும் தன் உறவுகளோடு சேர்ந்திருக்கவே விரும்பும். ஒரே ஒரு நாயை வளர்ப்பது என்பது அதன் இனத்திலிருந்து அதனைத் தனிமைப்படுத்துவது போன்றது தான். இந்த உண்மைகளை எல்லாம் புரிந்துகொண்டு, நன்றாக சிந்தித்து பிராணிகளை வளர்க்க முன்வர வேண்டும். நானும் வளர்க்கிறேன் என்ற பேருக்காக அதை செய்யகூடாது. ஏன் என்றால், அவைகளும் மனிதர்களைப் போல் உயிர் உள்ளவை. உணர்வும் உள்ளவை!


பிற உயிரினங்களை அழகிய முறையில் பராமரித்து இறையருளைப் பெறுவோமாக! ஆமீன்!


மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை.

 

No comments:

Post a Comment

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...