துக்கத்தின்போது...
الَّذِينَ إِذَا أَصَابَتْهُمْ مُصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ
وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
அவர்கள் தமக்குத் துன்பம் ஏதேனும் நேர்ந்தால் "நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; அவனிடமே நாங்கள் திரும்பிச் செல்பவர்கள்" என்று கூறுவார்கள். திருக்குர்ஆன்:- 2:156
கேரளா வயநாட்டில் ஏற்பட்ட இயற்கை பேரிடர் மூலம் இறப்பின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இது இறைநம்பிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய துக்கத்திற்குரியது. இந்நேரத்தில் நம்மால் முடிந்தவரை மீட்புக்குழுவினருடன் சேர்ந்து ஒத்துழைப்பது, பொருளாதார ரீதியாக உதவிகள் புரிதல் மற்றும் அவர்களின் இயல்பு நிலைக்காக பிரார்த்தித்தல் அவசியமாகும்.
இறைநம்பிக்கையாளர்களாகிய நாம், பயம் வறுமை நோய் மற்றும் உயிரிழப்பு செல்வ இழப்பு ஆகியவற்றால் சோதனையை சந்திக்கும்போது புலம்பித் திரியக்கூடாது. அது (களா கத்ரு எனும்) இறைவனின் தீர்ப்புக்கு எதிரானது. ஆகவே, பொறுமையோடு இருந்து அல்லாஹ்வை நம்பிய நிலையில் திருக்குர்ஆனின் கூற்றுக்கேற்ப "நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள் அவனிடமே நாங்கள் திரும்பிச் செல்பவர்கள்" என்ற இறைவசனத்தை ஓதிக் கொண்டே இருக்க வேண்டும்.
இதன்மூலம் தான் நாம் மன அமைதி பெற முடியும். இந்தப் பொறுமைக்கு ஈடாக அதைவிடச் சிறந்ததுமான
இறைவனின் மன்னிப்பும் கருணையும் கிடைக்கும் என்கிறது (2:157) திருக்குர்ஆன்.
சொர்க்கமே கூலி
அம்ரு பின் ஷுஐப் (ரஹ்) அவர்கள் அப்துல்லாஹ் பின் அப்திர் ரஹ்மான் பின் அபீ ஹுசைன் (ரஹ்) அவர்களுக்கு இறந்துவிட்ட அவர்களின் புதல்வர் குறித்து இரங்கல் தெரிவித்துக் கடிதம் எழுதினார்கள்.
அக்கடிதத்தில் அவர்கள், ( اِنَّ اللهَ لاَ يَرْضَي لِعَبْدِهِ الْمُؤْمِنِ اِذَا ذَهَبَ بِصَفِيِّهِ مِنْ اَهْلِ اْلاَرْضِ فَصَبَرَ وَاحْتَسَبَ وَقَالَ مَا اُمِرَ بِهِ بِثَوَابٍ دُوْنَ الْجَنَّةِ ) "இறைநம்பிக்கை கொண்ட ஓர் அடியாருக்கு இப்பூமியில் அவருக்குப் பிரியமான (குழந்தை, பெற்றோர், மனைவி, சகோதர சகோதரிகள், நண்பர்கள் போன்ற)வர்கள் இறந்துபோய், அதற்காக அவர் பொறுமையைக் கடைபிடித்து (அல்லாஹ்விடம்) நன்மையை எதிர்பார்த்து, அவருக்கு கட்டளையிடப்பட்ட (இன்னாலில்லாஹி... என்ப)தைச் சொன்னால் அவருக்குச் சொர்க்கத்தைத் தவிர வேறு எதையும் கூலியாக வழங்கு அல்லாஹ் விரும்புவதில்லை" என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக தன் பாட்டனார் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள் எனக் குறிப்பிட்டிருந்தார்கள். நூல்:- நஸாயீ-1848
அபூசினான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. இறந்து போன என் மகன் சினானை நான் அடக்கம்
செய்தேன். அப்போது மண்ணறையில் இருந்த என்னை அபூதல்ஹா அல்கவ்லானீ (ரஹ்) அவர்கள், எனது கையைப் பற்றித் தூக்கி வெளியேற்றிவிட்டு, "நான் உமக்கு ஒரு நற்செய்தி
சொல்லட்டுமா?" என்று கேட்டார்கள். நான் சரி (சொல்லுங்கள்) என்றேன்.
அவர் கூறினார். அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது. "(ஓர் அடியாரின் குழந்தை
இறந்து விட்டால்) அல்லாஹ் (உயிரைப் பறிக்கும் வானவரை அழைத்து), ( يَا مَلَكَ الْمَوْتِ
قَبَضتَ وَلَدَ عَبْدِي؟ قَبَضْتَ قُرَّة عَيْنِهِ وَثَمَرَةَ فُؤَادِهِ؟ ) “மரணத்தின் வானவரே! என் அடியாரின் குழந்தையைக் கைப்பற்றினீரா? அவரது கண்குளிர்ச்சியை, அவரது இதயக்கனியைக் கைப்பற்றினீரா?" என்று கேட்பான். அதற்கு அவர், "ஆம்" என்பார். "அப்போது என் அடியார் என்ன
கூறினார்?" என்று அல்லாஹ் கேட்பான். அதற்கு, (இறைவா!) அவர் உன்னை புகழ்ந்தார். அத்துடன் 'இன்னாலில்லாஹி வ இன்னா
இலைஹி ராஜிஊன்' என்று கூறினார்" என்பார். அப்போது, அல்லாஹ்
( ابْنُو لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ
وَسَمُّوهُ بَيتَ الْحَمْدِ ) “என் அடியாருக்காகச் சொர்க்கத்தில்
ஒரு மாளிகை எழுப்புங்கள்; அதற்குப் 'புகழ் இல்லம்' எனப் பெயரிடுங்கள்" என்று (வானவர்களிடம்) கூறிவான்” என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்:-
முஸ்னத் அஹ்மத், தஃப்சீர் இப்னுகஸீர் அல்பகரா வசனம் 157
எல்லோரும் வந்து விட்டால்...
ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது. அகழ் வெட்டும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கடும் பசியுடன் இருப்பதை அறிந்தேன். எனவே, நான் அண்ணலாரிடம் சென்று (இரகசியமாக), "நாயகமே! நான் உங்களுக்காக என்னிடம் இருந்த ஒரு ஆட்டுக்குட்டியை அறுத்து சமைத்து வைத்துள்ளேன். அதனுடன் சில ரொட்டிகளையும் சமைத்து வைத்துள்ளேன். நீங்கள் என்னுடன் என் இல்லத்துக்கு வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்றேன். நான், என்னுடன் அண்ணலார் மட்டும் வரவேண்டும் என்று நாடினேன். ஆனால் நான் இதனை அண்ணலாரிடம் கூறியபோது அண்ணலார் "ஆம் (வருகிறேன்)" என்று கூறி அழைப்பாளரிடம் (அழைப்பு கொடுக்குமாறு) உத்தரவிட்டார்கள். அவ்வழைப்பாளர், "அண்ணலாருடன் ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்களின் இல்லத்திற்குத் திரும்புங்கள்" என்று அழைப்பு விடுத்தார்.
நான் (இதைச் செவியுற்றதும்) "இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்" என்று (வியப்புடன்) கூறினேன். பிறகு அண்ணலாருடன் மக்களும் சேர்ந்து புறப்பட்டனர். அண்ணலார் (என் இல்லத்திற்கு வந்து) அமர்ந்தார்கள். அண்ணலாருக்கு அவ்வுணவை கொண்டு வந்து வைத்தோம். அண்ணலார் அருள்வளத்திற்காக பிரார்த்தித்து, அல்லாஹ்வின் பெயரைக் கூறி உட்கொண்டார்கள். அதனை தொடர்ந்து (அங்கு வந்த) மக்கள் அனைவரும் (அவ்வுணவிலிருந்து) உட்கொண்டு திரும்பினர். நூல்:- சீரத் இப்னு ஹிஷாம், முஸ்னது அஹ்மத், அல்பிதாயா வந்நிஹாயா
ஜாபிர் (ரலி) அவர்கள் வீட்டில் இருந்த சிறிதளவு உணவுப் பொருட்களை வைத்து ஓரிரு பேர் உண்ணுவதற்குண்டான அளவு தான் சமைக்க முடிந்தது. எனவே, அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மட்டுமாவது வயிறாற உண்ணட்டும் என்றெண்ணி அவ்வாறு கூறினார். ஆனால், அண்ணலார் உணவு உண்ண அனைவரும் வாருங்கள் என அழைப்பு விடுத்ததும் ஜாபிர் (ரலி) அவர்களுக்கு தர்ம சங்கடமாகிவிட்டது. எல்லோரும் வந்து விட்டால் அந்த உணவிலிருந்து அண்ணலார் வயிறாற உண்ண முடியாதே என்ற கவலையில் தான் அவர் "இன்னாலில்லாஹி" என்று துக்கத்தின்போது சொல்லப்படும் வார்த்தையைக் கூறினார்.
எனவே, மனதில் சிறிதளவு கவலை ஏற்பட்டாலும் "இன்னாலில்லாஹி" ஓதினால்போதும் அது சரியாகிவிடும்.
ஆட்சி அதிகாரம்
(கலீஃபா எனும்) ஆட்சியாளர் சுலைமான் பின் அப்துல் மலிக் என்பவர் எழுதிய ஆவணத்தில்
உள்ளவை: எனக்குப் பிறகு உமர் பின் அப்துல் அஸீஸ் அவர்களை முறைப்படி கலீபாவாக நியமிக்கிறேன்.
அவருக்குப் பிறகு அப்துல் மலிக்கின் குடும்ப வாரிசு கலீஃபாவாக நியமிக்கப்பட வேண்டும்
என்று எழுதப்பட்டிருந்தது. சுலைமான் பின் அப்துல் மலிக்கின் இறப்புக்குப் பின் மக்கள்
மன்றத்தில் ரஜாஅ பின் ஹய்வா (ரஹ்) அவர்கள் இந்த ஆவணத்தை வாசித்தபோது, உமர் பின் அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்கள் இன்னல் ஏற்படும்போது
சொல்லும் "இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்" என்ற வார்த்தையை அதிர்ச்சியுடன்
உச்சரித்துவிட்டு அப்படியே அமர்ந்து விட்டார்கள்.
சுலைமான் பின் அப்துல் மலிக்கின் உடலை நல்லடக்கம் செய்யும் பணிகள் முடிந்து திரும்பி
வரும்போது உமர் (ரஹ்) அவர்களின் பணியாள், "தாங்கள் கவலை தோய்ந்த முகத்துடன் காணப்படுகிறீர்களே
ஏன்? என்று கேட்டார். உமர் (ரஹ்)
அவர்கள், ஆட்சி பொறுப்பு என்பது
பளு நிறைந்தவை. இதுப்பற்றி மறுமையில் என்னிடம் விசாரிக்கப்படும். ஆகவே தான் கவலையுடன்
இருக்கிறேன்"என்று பதிலளித்தார்கள்.
பிறகு அன்னார் தன் தாடி கண்ணீரால் நனைந்திருந்த நிலையில் வீட்டுக்குள் நுழைந்தார்கள். இதைப்பார்த்துப் பதைத்துப்போன அன்னாரது மனைவியார் உடல் நலம் குறித்துக் கேட்டார். அன்னார், "மக்கள் அனைவருடைய சுமையும் என் தோள்மீது சுமத்தப்பட்டுள்ள நிலையில் எப்படி நலமாக இருக்க முடியும்? இந்தப் பணிச்சுமை குறித்து மறுமைநாளின் விசாரணையின்போது ஏற்படும் தோல்வி பயம் தான் கண்ணீருக்கான காரணம்" என்று விவரித்தார்கள்.
நோவினை தரும் காரியம்
ஒருநாள் இரவில் அருமை நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கு அணைந்தது. உடனே அண்ணலார், "இன்னாலில்லாஹி..." என்று கூறினார்கள். அப்போது
( أمُصِيبَةٌ هِيَ
) இதுவும் துன்பமா? என்று கேட்கப்பட்டது. அண்ணலார், ( نَعَمْ كُلُّ شَيْءٍ يُؤْذِي المُؤْمِنَ فَهو لَهُ مُصِيبَةٌ ) "ஆம்! இறைநம்பிக்கையாளருக்கு நோவினை தரும் ஒவ்வொரு காரியமும்
துன்பமாகும்" என்று கூறினார்கள். நூல்:- தஃப்சீர் ராஸீ
சஈத் பின் முசய்யிப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. ஒருமுறை ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களின்
செருப்பின் நடு வார் அருந்துவிட்டது. அப்போது அன்னார், "இன்னாலில்லாஹி..." என்று கூறினார்கள். அங்கிருந்தோர், ( یَا اَمِیرَالمُومِنِینَ اَتَستَرجِعُ فِی قِبَالِ نَعلِكَ ) "ஜனாதிபதி அவர்களே! செருப்பு வார் அருந்துவதற்கும்
இன்னாலில்லாஹி கூறுகிறீர்களே?"
என்று வினவினர். உமர் (ரலி)
அவர்கள், ( اِنَّ کُلَّ شَیءٍ یُّصِیبُ المُؤْمِنَ یَکرَهُهُ فَهُوَ مُصِیبَةٌ )
“ஓர் இறைநம்பிக்கையாளரை
வருந்தச் செய்யும் ஒவ்வொரு செயலும் அவருக்குத் துன்பம் தான்" என்று கூறினார்கள்.
நூல்:- கன்ஸுல் உம்மால், பைஹகீ, ஹயாத்துஸ் ஸஹாபா பாகம்-2 பக்கம்-799
மரண செய்தியைக் கேள்விப்பட்டால் மட்டும் தான் “இன்னாலில்லாஹி” என்று சொல்ல
வேண்டும் என்று சிலர் எண்ணுகிறார்கள் அது தவறு. மனதிற்கு சிறு வருத்தத்தைத் தரும்
ஒரு காரியம் நடந்துவிட்டாலும்கூட அதற்கும் “இன்னாலில்லாஹி...” என்று கூறியே
இறைவனிடம் மன ஆறுதலைத் தேடவேண்டும்.
மார்க்க அறிஞர்கள் கூறுகிறார்கள். ஒருவர் ஏதேனும் ஒரு பொருளை எங்காவது வைத்து மறந்து
விட்டு தேடிக்கொண்டிருக்கும்போது “இன்னாலில்லாஹி...” ஓதினால் காணாமல் போனவை கிடைத்துவிடக்கூடும்.
ஒருநாள் உமர் (ரலி) அவர்கள் தங்கள் தோட்டத்திற்கு சென்றார்கள். திரும்பி வந்து பார்க்கும்போது அசர் தொழுகையின் ஜமாஅத் முடிந்து மக்கள் கலைந்து சென்றுக்கொண்டிருந்தனர். இதைக்கண்ட உமர் (ரலி) அவர்கள் "இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்" எனக்கு அசர் தொழுகை ஜமாஅத் தவறிவிட்டதே! அந்த தோட்டத்தினால் தானே எனக்கு இந்நிலை ஏற்பட்டது. அத்தோட்டத்தை ஏழைகளுக்கு தர்மம் செய்து விட்டேன் என்பதற்கு மக்களே! நீங்கள் சாட்சியாக இருங்கள்" என்று கூறினார்கள். நூல்:- அல்கபாஇர் இமாம் தஹபீ
நாம் வழமையாக செய்து வந்த ஒரு இறைவழிபாடு தவறும் போது அதற்கு நம்முடைய போடுபோக்குத்தனம்
என்ற பாவம்தான் காரணம் என்று விளங்க வேண்டும். நம்மிடம் ஏற்பட்ட பாவம் என்பது நாம்
வருத்தப்பட வேண்டிய ஒரு துக்கமான காரியமே. அதை நாம் எண்ணும்போது "இன்னாலில்லாஹி..."
என்று சொல்வது இயல்பாகிவிடும்.
அதைவிடச் சிறந்தது
அன்னை உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒரு முஸ்லிமுக்கு ஏதேனும் துன்பம் நேரும்போது அவர் அல்லாஹ்வின் கட்டளைக்கேற்ப (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்) “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்” என்றும், ( اللَّهُمَّ أْجُرْنِي فِي مُصِيبَتِي وَأَخْلِفْ لِي خَيْرًا مِنْهَا ) “இறைவா! எனக்கு ஏற்பட்ட இத்துன்பத்திலிருந்து என்னைக் காப்பாற்றுவாயாக! இதற்கு மாற்றாக இதைவிடச் சிறந்ததை எனக்கு வழங்குவாயாக!” என்றும் கூறினால், அதற்கு ஈடாக அதைவிடச் சிறந்ததை அவருக்கு அல்லாஹ் வழங்காமல் இருப்பதில்லை" என்று அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
என் முதல் கணவர் அபூ சலமா (ரலி) அவர்கள் இறந்தபோது நான் "அபூ சலமா விட முஸ்லிம்களில்
சிறந்தவர் எவர் இருக்கமுடியும்? அண்ணலாரிடம் முதன்முதலில்
நாடு துறந்து வந்த குடும்பம் (அவருடைய குடும்பம் தான்)" என்று எனக்கு நானே கூறி
கொண்டேன். ஆயினும் (அண்ணலாரின் கூற்றுக்கேற்ப) இன்னாலில்லாஹி... என்று நான் சொன்னேன்.
பிறகு எனக்கு அண்ணலாரையே மணந்து கொள்ளும் பாக்கியம் கிடைத்தது. அல்லாஹ் அபூசலமாவுக்கு
மாற்றாக, அவரைவிடச் சிறந்தவராகிய அண்ணலாரையே எனக்கு (இரண்டாவது
கணவராக) வழங்கி விட்டான். நூல் முஸ்லிம்-1674,
இப்னுமாஜா-1437
அலாஇ (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மரண நேரம் நெருங்கியதும்
(அவர்களின் மகளார்) பாத்திமா (ரலி) அவர்கள் அழுதார்கள். அப்போது அண்ணலார், ( لَا تَبکِی یَا بُنَیَّةُ قُولِی اِذَا مَا مُتُّ إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ فَاِنَّ لِکُلِّ اِنسَانٍ بِهَا مِن کُلِّ مُصِیبَةٍ
مَّعُوضَةً ) "என் அருமை மகளே! அழாதே. மாறாக, நான் மரணித்துவிட்டால்
'இன்னாலில்லாஹி…' கூறுவாயாக! ஏனெனில், அவ்வாறு கூறும் ஒவ்வொரு மனிதனுக்கும் அவனின் எல்லாவிதமான
நஷ்டத்திற்கும் பகரம் கிடைத்துவிடும்" என்று கூறினார்கள். உடனே ஃபாத்திமா (ரலி)
அவர்கள், ( وَمِنكَ یَا
رَسُولَ اللّٰهِ ) "நாயகமே! உங்களை இழந்தாலும் பகரம் கிடைக்குமா?
என்று வினவினார்கள். அதற்கு
அண்ணலார், ( وَمِنِّی )
"ஆம்! என்னை இழந்தாலும்,
இக்கலிமாவை கூறினால் பகரம்
கிடைக்கும்" என்று கூறினார்கள். நூல்:- தபகாத் இப்னு சஅத், ஹயாத்துஸ் ஸஹாபா பாகம்-2 பக்கம்-430
மரணச் செய்தியை கேட்டால் வாயால், "இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்" என்று சொல்ல வேண்டுமே தவிர வாட்ஸாப்பில் எழுதி அனுப்புதல் அல்லது அதன் போட்டோவை (PDF) அனுப்புதல் சரியல்ல. இது குறித்து குர்ஆனின் கட்டளையாதெனில், அதை நாவால் சொல்லவேண்டுமே தவிர, எழுத்தால் எழுதுவதையல்ல.
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ أُصِيبَ بِمُصِيبَةٍ فَذَكَرَ مُصِيبَتَهُ فَأَحْدَثَ اسْتِرْجَاعًا-
وَإِنْ تَقَادَمَ عَهْدُهَا- كَتَبَ اللَّهُ لَهُ مِنَ الأَجْرِ مِثْلَهُ يَوْمَ أُصِيبَ ) ஒருவருக்கு ஒரு துன்பம் ஏற்பட்டது (பிற்காலத்தில்)
அவர் தமக்கு ஏற்பட்ட துன்பத்தை நினைவுகூர்ந்தார். அப்போதும் அவர் புதிதாக இன்னாலில்லாஹி...
என்று கூறினால், அத்துன்பம் ஏற்பட்டு நீண்ட காலம் ஆகியிருந்தாலும்
அத்துன்பம் ஏற்பட்ட (முதல்) நாளில் அவருக்கு வழங்கப்பட்டதைப் போன்ற அதே நன்மையை அவருக்கு
அல்லாஹ் எழுதுகிறான். அறிவிப்பாளர்:- ஹுசைன் பின் அலீ (ரலி) அவர்கள் நூல்:- இப்னுமாஜா-1589, முவத்தா மாலிக்-497, தாரிமீ-84,85, தப்ரானீ
இஸ்லாம், மனிதன் சஞ்சலத்தில்
இருக்கும்போது அதற்கு ஒத்தடமாக, ஆறுதலுக்கான அருள்மொழிகளைக்
கூறுமாறு இயம்புகிறது. எனவே, நம்முடைய இக்கட்டான
நேரத்தில் அந்த அருள்மொழிகளை தியானித்து, இறையருளைப் பெறுவோமாக! ஆமீன்!
மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951
No comments:
Post a Comment