Search This Blog

Tuesday, 7 September 2021

தள்ளாடுபவர்கள்

 

தள்ளாடுபவர்கள்

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْأَنْصَابُ وَالْأَزْلَامُ رِجْسٌ مِنْ عَمَلِ الشَّيْطَانِ فَاجْتَنِبُوهُ لَعَلَّكُمْ تُفْلِحُونَ

இறைநம்பிக்கையாளர்களே! நிச்சயமாக மதுவும், சூதாட்டமும், சிலை வணக்கமும், அம்பெறிந்து குறி கேட்பதும் ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களில் உள்ளவையாகும். ஆகவே, இவைகளிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். (அதனால்) நீங்கள் வெற்றியடைவீர்கள். திருக்குர்ஆன்:- 5:90


சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினமாக ஜூன் 26ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.


மது மற்றும் புகையிலைப் பொருட்களை உபயோகிப்பது சர்வ சாதாரணமாகிவிட்ட நிலையில், கஞ்சா, அபின், கோகைன், பிரவுன்சுகர் ஆகியவை கரையான் புற்று போல் இளைஞர் சமூகத்தை அழித்து வருகின்றன. கட்டுக்கோப்பான உடலை வைத்திருக்க வேண்டிய இளமைப் பருவத்தில், நரம்பு தளர்ந்து, உடல் சோர்ந்து போய்க் கிடக்கும் கொடுமையை என்னவென்று சொல்வது? தனி நபரின் உடல், மனம் இரண்டையும் சிதைப்பதுடன், சமூகத்திற்கும் பெரும் ஆபத்தை விளைவிக்கின்றன இந்த போதைப் பொருட்கள். இந்தப் பழக்கத்திலிருந்து மீளவே முடியாது என்ற சூழலில் தற்கொலைகளில் போய் முடிகின்றன.


வேடிக்கை விளையாட்டாக மகிழ்ச்சியாகத் தொடங்கிய மது மற்றும் போதை பழக்கம், மெல்ல மெல்லப் பழகி அடிமைத்தனமாகி விடுகிறது. இந்தப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள், அந்த மது இல்லாமல் இருக்கமுடியாது.  உடலில் ஏற்படுகின்ற இரசாயன மாற்றத்தினால் மதுவை உபயோகிக்கின்ற அளவும் கூடி விடுகிறது. இதனால் எப்பொழுதும் மதுவை உபயோகிப்பது குறித்தே சிந்தித்துக் கொண்டிருப்பர். போதையால் மாறிப்போன வாழ்க்கை, பல குடும்பங்களை சின்னா பின்னமாகிச் சீரழித்துக் கொண்டு இருப்பதை நாம் தினசரி செய்திகளில் படித்துக் கொண்டே இருக்கிறோம்.


மனிதனுக்குள்ள தனித் தன்மையே சுய அறிவு தான். அந்த அறிவையே மழுங்க வைத்து, சுய நினைவை இழக்கச் செய்து, தனக்கு முன்னால் இருப்பது தாயா, தாரமா என்பதைக்கூட பிரித்துப் பார்க்க முடியாத மிருக நிலையை மது உருவாக்குகிறது. படைத்தவனை மறந்து, பொறுப்புணர்வை இழந்து சீரழிய வைக்கும் மதுவை அறிவுள்ள எவரும் அனுமதிக்கமாட்டார். பொருளாதாரச் சீரழிவு, உடல்நலம் பாதிப்பு, சமூக சீர்கேடுகள் என பல்வேறு இழப்புகளுக்கு இந்த மது காரணமாகிறது. எனவேதான் இஸ்லாம் அதற்குத் தடை விதித்தது.


இந்தியாவைப் பொருத்தவரை, உள்நாட்டு உற்பத்தியில் வளர்ச்சி இருக்கிறதோ இல்லையோ மதுப்பழக்கம் மட்டும் ஆண்டுக்கு 8% அதிகரித்துக் கொண்டிருப்பதாக பிரபல மனநல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.


மது அருந்தும் பெண்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் பெருகி வருவது சமூக ஆர்வலர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. சில நட்சத்திர ஓட்டல்களில் நவ நாகரீக மங்கையருக்கென தனி 'பார்'கள் நடத்துகின்றனர். உலக உற்பத்தியில், 50 சதவிகித, 'விஸ்கி'யை குடித்து தீர்ப்பது இந்தியர்கள் தானாம். மதுவின் கொடுமையால் ஏற்படும் புற்றுநோய் உட்பட பலவித நோய்கள், கடன் தொல்லை, மணமுறிவு, தற்கொலை சாலை விபத்து, பாலியல் வன்முறை போன்ற எதிர்மறையான சம்பவங்கள் அன்றாடம் நடப்பதை கண்கூடாக காண்கிறோம்.


இந்திய இளைஞர்களிடம் மதுப்பழக்கத்தை தூண்டுவதில் சினிமா மிகப்பெரிய பங்கு வகிப்பதாக, துபாயில் நடைபெற்ற இதய நிபுணர்கள் கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டிருக்கிறது. சினிமாவில் தங்கள் அபிமான நட்சத்திரங்களின் போலியான சாகசங்களை உண்மையான நம்பி, ஏமாந்து, தங்கள் சக்தியை வீணடித்துக் கொண்டிருக்கிறது இளைஞர் கூட்டம்.


மூன்று கட்டங்களாகத் தடைசெய்யப்பட்டது


அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது. மது மூன்று கட்டங்களாகத் தடைசெய்யப்பட்டது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (மக்காவில் இருந்து புலம்பெயர்ந்து) மதீனாவுக்கு வந்தபோது அங்குள்ள மக்கள் மது அருந்திக் கொண்டும் சூதாட்டத்தின் வருமானத்தை பயன்படுத்திக் கொண்டும் இருந்தனர். அப்போது மதுவைப் பற்றியும் சூதாட்டத்தைப் பற்றியும் அந்த மக்கள் அண்ணலாரிடம் (விளக்கம்) கேட்டனர். அப்போதுதான், "(நபியே!) மதுவைப் பற்றி உம்மிடம் வினவுகின்றனர். அவ்விரண்டிலும் பெரும் பாதிப்பும் மக்களுக்குச் சில பயன்களும் உள்ளன என்று கூறுவீராக" (2:219) எனும் வசனத்தை அல்லாஹ் அருளினான்.


அப்போது மக்கள், அவ்விரண்டும் நமக்குத் தடை செய்யப்படவில்லை. மாறாக, அவ்விரண்டிலும் பெரும் பாதிப்பும், மக்களுக்குச் சில பயன்களும் உள்ளன என்று அல்லாஹ் கூறுகிறான்" என சொல்லிக்கொண்டு, தொடர்ந்து மது அருந்தி வந்தனர்.


இறுதியில் ஒருநாள் (மக்காவிலிருந்து மதீனாவுக்கு புலம்பெயர்ந்து வந்த) முஹாஜிர்களில் ஒருவர் தம் தோழர்களுக்கு இமாமாக இருந்து மஃரிப் தொழுகை நடத்தினார். அதில் ஓத வேண்டிய குர்ஆன் வசனத்தில் அவர் தவறிழைத்தார். அதையடுத்து முந்திய வசனத்தை விட (2:219) கண்டிப்பான வசனம் ஒன்றை அல்லாஹ் அருளினான்.


இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் போதையில் இருக்கும் போது தொழுகையை நெருங்காதீர்கள்; (போதை தெளிந்து) நீங்கள் என்ன கூறுகிறீர்கள் என்பதை அறிந்து கொள்கின்ற வரை. (4:43)


அதன் பின்னரும் மக்கள் மது அறிந்து கொண்டுதான் இருந்தனர். ஆனால் அவர்களில் ஒருவர் தெளிந்த நிலையில் தொழுகைக்கு வரும் அளவுக்கு மட்டுமே மது அருந்துவார். பின்னர் இந்த வசனத்தை விட (4:43) கடுமையான வேறு ஒரு வசனம் அருளப்பெற்றது.


இறைநம்பிக்கையாளர்களே! மது, சூது, நட்டு வைக்கப்பட்ட சிலை (போன்ற)வை, (குறி பார்க்கும்) அம்புகள் ஆகியவை ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயலாகும். எனவே, அதைக் கைவிடுங்கள். (இதன் மூலம்) நீங்கள் வெற்றி பெறலாம். (5:90) எனும் இந்த வசனம் அருளப் பெற்றதும் மக்கள், "எங்கள் இறைவா! நாங்கள் விலகிக் கொண்டோம்" என்றனர். நூல்:- முஸ்னது அஹ்மத், தஃப்சீர் இப்னு கஸீர்


சிலர், ஹுதைபிய்யா சமாதான ஒப்பந்தம் கையெழுத்தான ஹிஜ்ரீ 6 ஆம்  (கி.பி.627) ஆண்டு முழு மதுவிலக்கு நடைமுறைக்கு வந்து விட்டது என்கின்றனர். வேறு சிலர், ஹிஜ்ரீ 8 ஆம்  (கி.பி.630) ஆண்டு  மக்கா வெற்றிப் போர் நடப்பதற்கு முன்புதான் முழு மதுவிலக்கு நடைமுறைக்கு வந்தது என்கின்றனர். நூல்:- ஃபத்ஹுல் பாரீ


கீழ்படிந்தோம்


அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. (ஒருநாள்) நான் எங்கள் வீட்டில் (என் தாயாரின் இளைய கணவர்) அபூ தல்ஹா (ரலி) அவர்களுக்கும் அபூஅய்யூப் (ரலி) அவர்களுக்கும் மற்றும் சில நபித்தோழர்களுக்கும் மது பரிமாறுவதில் ஈடுபட்டிருந்தேன். அப்போது ஒரு மனிதர் வந்து, "உங்களுக்கு அச்செய்தி எட்டியதா?" என்று கேட்டார். நாங்கள், 'இல்லை' என்றோம். அவர், "மது தடை செய்யப்பட்டு விட்டது" என்று தெரிவித்தார்.


அப்போது அபூ தல்ஹா (ரலி) அவர்கள், "அனஸே! இந்த மதுப் பீப்பாயைக் கீழே கொட்டி விடு" என்று கூறினார்கள். அந்த மனிதர் செய்தி தெரிவித்த பிறகு நபித்தோழர்கள் மதுவை திரும்பிப் பார்க்கவுமில்லை. (உறுதி செய்வதற்காக) மதுவைப் பற்றி வேறு யாரிடமும் கேட்கவுமில்லை. நூல்:- புகாரீ-4617, முஸ்லிம்-4007


அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். பொது அறிவிப்பாளர் ஒருவர், "அறிந்துகொள்ளுங்கள்! மது தடை செய்யப்பட்டுவிட்டது" என்று அறிவிப்புச் செய்து கொண்டிருந்தார். (இந்த அறிவிப்பைக் கேட்ட அனைவரும் மதுவை வீட்டுக்கு வெளியே ஊற்றினர்) மதீனாவின் தெருக்களில் மது (ஆறாக) ஓடியது. நூல்:- புகாரீ-2464, தஃப்சீர் இப்னு கஸீர்


மது விலக்கப்பட்ட ஒன்று; கைவிடப்பட வேண்டியது என்பதை பிரகடனப்படுத்தும் விதமாகவே அன்று அது சாலையில் கொட்டப்பட்டது.


நாம் இப்போது கொஞ்சம் குடித்துக்கொள்வோம். பிறகு அண்ணல் நபி (ஸல்) அவர்களிடமே நேரடியாக கேட்டு உறுதி செய்து கொண்ட பின்னர் விட்டு விடுவோம் என்று எண்ணுவது நம்மை போன்ற சாமானியர்களின் நிலைபாடு. ஆனால், அண்ணலாரை நேரடியாகக் கண்டு இறைநம்பிக்கை கொண்ட நபித்தோழர்களின் நிலை அவ்வாறல்ல. இறை உத்தரவை கேட்டவுடனேயே, அதற்கு அப்படியே கட்டுப்படக்கூடிய பண்பு அவர்களிடம் இருந்தது.


நினைவே வரக்கூடாது


அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்துல் கைஸ் தூதுக்குழுவினரிடம் சுரைக்காய் குடுவை, மண்சாடி, பேரீச்ச மரத்தின் அடிப் பாகத்தைக் குடைந்து தயாரிக்கப்பட்ட பாத்திரம், தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகியவற்றை உங்களுக்குத் தடை விதிக்கிறேன். வேண்டுமானால் தோல் பைகளில் (அனுமதிக்கப்பட்ட பானங்களை) அருந்திக் கொள்க. அதன் வாய்ப் பகுதியில் சுருக்கிட்டுக்கொள்க" என்று கூறினார்கள். நூல்:- முஸ்லிம்-4036


இஸ்லாத்திற்கு முன்பும் இஸ்லாத்திற்குப் பின்பும் சிறிது காலம் வரையிலும் மது ஊற வைப்பதற்கென்றே குறிப்பிட்ட சில பாத்திரங்களை மக்கள் பயன்படுத்திவந்தனர். சுரக்காய் குடுக்கை, தார் பூசப்பட்ட பாத்திரம், பேரீச்ச மரத்தின் அடிப் பாகத்தைக் குடைந்து தயாரிக்கப்பட்ட பாத்திரம், மண்சாடி ஆகியவை அவற்றில் அடங்கும். முழு மதுவிலக்கு நடைமுறைக்கு வந்தபோது இத்தகைய பாத்திரங்களில் எந்தப் பானத்தையும் ஊற்றிவைக்க வேண்டாம் என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.


மது ஊறவைக்கப்பட்டு வந்த பாத்திரங்களில் மதுவின் நெடி வீசலாம், அந்த பாத்திரங்களைப் பார்க்கும் ஒருவருக்கு மதுவின் நினைவு வரக்கூடும், இவற்றில் தண்ணீர் ஊற்றிவைத்துப் பருகினாலும், அறியாதோர் மது அருந்துவதாகவே எண்ணக்கூடும் என்பதுமே இத்தடைக்குக் காரணமாகும். எனவே, மது தடை செய்யப்பட்ட புதிதில் மதுப் பாத்திரங்களைப் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டது. பிற்காலத்தில் மதுவிலக்குச் சட்டம் மக்களிடையே பரவி, மதுவையே மக்கள் மறக்கும் நிலை ஏற்பட்டது. அப்போது இந்தப் பாத்திரங்களைப் பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. அத்துடன் நபித்தோழர்கள் இந்தப் பாத்திரங்கள் தமது உபயோகத்திற்கு தேவைப்படுவதாகவும் அண்ணலாரிடம் முறையிட்டனர். இதையடுத்து அண்ணலார் தடையை அகற்றி இப்பாத்திரங்களைப் பயன்படுத்த அனுமதி வழங்கினார்கள். நூல்:-  ஃபத்ஹுல் பாரீ, அல்மின்ஹாஜ்


மருந்துக்காக


வாயில் பின் ஹுஜ்ர் அல்ஹள்ரமீ (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம் தாரிக் பின் சுவைத் அல்ஜுஅஃபிய்யி (ரலி) அவர்கள் மது (தயாரிப்பதைப்) பற்றி கேட்டார்கள். அப்போது அண்ணலார் அ(வ்வாறு தயாரிப்ப)தைத் தடை செய்தார்கள்; அல்லது வெறுத்தார்கள். அப்போது தாரிக் (ரலி அவர்கள், "மருந்துக்காகவே அதைத் தயாரிக்கிறேன்" என்று கூறினார்கள். அண்ணலார், ( إِنَّهُ لَيْسَ بِدَوَاءٍ وَلَكِنَّهُ دَاءٌ ) "அது மருந்தல்ல; நோய்" என்றார்கள். நூல்:- முஸ்லிம்-4015


கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إنَّ اللَّهَ لَمْ يَجْعَلْ شِفَاءَ أُمَّتِي فِيمَا حَرَّمَ عَلَيْهَا ) அல்லாஹ் உங்களுக்கு எவற்றைத் தடை செய்திருக்கின்றானோ அவற்றில் அவன் உங்களுக்கு நோய் நிவாரணத்தை வைக்கவில்லை. அறிவிப்பாளர்:- உம்மு சல்மா (ரலி) அவர்கள் நூல்:- பைஹகீ, இப்னு ஹிப்பான், புலூகுல் மராம்-1277


அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ تَدَاوَى بِالْخَمْرِ فَلَا شَفَاهُ اللَّهُ ) எவர் மதுவால் சிகிச்சை மேற்கொண்டாரோ (அவருக்கு அதில்) அல்லாஹ்வின் நிவாரணம் கிடையாது. நூல்:- அத்திப்புந் நபவீ இமாம் இப்னு கய்யிம், அபூநயீம்


நோய்க்கு மருந்தாகக்கூட மது பயன்படாது; மாறாக, அது இருக்கிற நோயை மேலும் அதிகமாகவே செய்யும். இந்தக் கருத்தை நவீன அறிவியலும் உறுதிப்படுத்துகிறது.


ஒரு நோய்க்கு மதுவை விட்டால், வேறு மருந்தே கிடையாது என்ற நிலை மருத்துவ உலகில் கிடையாது என்கிறார்கள் ஆய்வாளர்கள். ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த டாக்டர் மிலர், "மது எந்த நோயையும் குணப்படுத்தாது" என்கிறார். ஆங்கிலேயரான டாக்டர் ஜான்சன், "மதுவை மருந்தாகப் பயன்படுத்தியே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை" என்று கூறுகிறார். டாக்டர் ஸ்மித், "மதுவின் காரணத்தால் உடம்பில் உள்ள வெப்ப நிலைக்கு பாதிப்பு ஏற்படும்; நோயிருக்கும்போது அந்தப் பாதிப்பு மேலும் அதிகமாகும்" என்று கூறுகிறார் டாக்டர் பாரிக்ஸ், ஹென்ரி மார்டிஸ் ஆகியோர், "மது நோயைக் குணப்படுத்தாது" என்று தெரிவித்துள்ளனர்.


1919 ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் நாள் அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் கூடிய சர்வதேச மருத்துவ மாநாட்டுத் தீர்மானத்தில் "நோயாளிக்கு வேறொரு மருந்தைக் கண்டறியாமல் மதுதான் மருந்து என்று பரிந்துரைக்கும் மருத்துவர் பத்தாண்டு காலம் பின்தங்கிய மருத்துவர் என இந்த மாநாடு கருதுகிறது" என்று குறிப்பிட்டிருந்தது. இந்த மாநாட்டில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த 250 மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.


பேணுதல்


அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மற்றும் அபூபக்ர் (ரலி), உஸ்மான் (ரலி) போன்றோர் தமது வாழ்நாளில் ஒருமுறைகூட மது அருந்தியதில்லை.


அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். மதுவிலக்கு சம்பந்தமாக குர்ஆன் வசனம் அருளப்பெற்றதும் நபித்தோழர்கள், "மது அருந்துவது இணைவைத்தலுக்கு (ஷிர்க்குக்கு) ஒப்பான பெரிய பாவம்" எனத் தெருத் தெருவாகக் கூறிக்கொண்டே போனார்கள். நூல்:- தப்ரானீ, ஹாக்கிம்


புரைதா பின் அல்ஹஸீப் அல்ஸ்லமீ (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் மது அருந்திக்கொண்டிருந்த என் தோழர்களிடம் வந்து அவ்வசனங்களை ஓதி காட்டினேன். அப்போது அவர்களில் சிலர் மதுக் கோப்பை அவர்களின் கையில் இருந்தது. அதில் சிறிதளவு குடித்து முடித்திருந்தனர். இன்னும் சிறிது குவளையில் மிச்சம் இருக்க, அதுவும் அவர்களது மேலுதட்டிற்குக் கீழே இருந்தது.


அ(ந்தக் காட்சியான)து குருதி உறிஞ்சி எடுப்பவர் (உறிஞ்சு குழாயை தமது வாயில்) வைத்திருப்பதைப் போன்று இருந்தது. அதையடுத்து தமது கண்ணாடிப் பாத்திரத்திலிருந்த மதுவைக் (கீழே) கொட்டிவிட்டு, ( اِنْتَهَيْنَا رَبَّنَا ) "நாங்கள் விலகிவிட்டோம் எங்கள் இறைவா!" என்று கூறினர். நூல்:- தஃப்சீர் தபரீ, தஃப்சீர் இப்னு கஸீர்


(நபித்தோழர்களில் இறுதியாக மரணமடைந்த) அபூதுஃபைல் (ரலி) அவர்கள் முஆவியா (ரலி) அவர்களை சந்திக்க வந்தார்கள். அந்த பயணத்தில் அன்னார் குதிரையிலிருந்து கீழே விழுந்ததால் அன்னாரின் கால் முறிந்துவிட்டது. முறிந்த கால் அகற்றப்பட வேண்டும் இல்லையென்றால் உடலுக்கு சேதாரம் அதிகமாகும் என்று அன்னாரிடம் மருத்துவ ஆலோசனை சொல்லப்பட்டது. அன்னார் அதற்கு சம்மதித்தார்கள்.


பிறகு, முறிந்த காலை எப்படி அகற்றுவது என்று மருத்துவர்கள் ஆலோசனை செய்தபோது, அன்னாருக்கு கொஞ்சம் மதுவை புகட்டி மயக்கத்தை ஏற்படுத்திவிட்டு, அந்த நேரத்தில் காலை அகற்றிவிடலாம். அப்போது  அன்னாருக்கு வேதனை தெரியாது என்றனர். இதைச் செவியுற்ற அபூதுஃபைல் (ரலி) அவர்கள், "தடுக்கப்பட்டவற்றில் நிவாரணம் இல்லை" என்ற நபிமொழியை அவர்களுக்கு நினைவுபடுத்திவிட்டு, நான் ஒருபோதும் மது அருந்த மாட்டேன். எனக்கு வேதனை தெரியாமல் இருக்க நான் தொழுகையில் ஈடுபட்டுவிடுகிறேன். (தொழுகைதான் எனக்கு போதை தருபவை.) அப்போது என் காலை அகற்றுங்கள் எனக் கூறிவிட்டு, அவர்கள் தொழுகையில் ஈடுபட, அவர்களின் கால் அகற்றப்பட்டது.


சேமிக்கலாம்


அப்துல் கைஸ் குலத்தாரில் அஸ்லம் (ரலி) அவர்களின் தலைமையில் நாற்பது பேர் அடங்கிய ஒரு குழு அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து இஸ்லாத்தை தழுவினார். அப்போது அண்ணலார், "இனிமேல் எந்த கை சேதமும் எந்த கேவலமும் உங்களுக்கு இல்லை" என்று கூறினார்கள். அதன்பிறகு அவர், "நாயகமே! எங்களுக்கு என்ன ஏவுகிறீர்கள்? என்று வினவினார். அண்ணலார், தொழ வேண்டும், நோன்பு நோற்க வேண்டும், அறப்போருக்கு அழைப்பு விடுக்கப்பட்டால் அதில் கலந்துகொள்ள வேண்டும் என்று, ஒவ்வொன்றாக கூறிக் கொண்டே வந்து, இறுதியாக மது தடை செய்யப்பட்டுவிட்டது. அத்துடன் அதற்காக பயன்படுத்தப்பட்ட பாத்திரங்களையும் பயன்படுத்தக் கூடாது" என்றார்கள்.


பிறகு ஊர் திரும்பிய அக்குழுவினர், தமது வீடுகளில் வைக்கப்பட்டிருந்த மது, மற்றும் அது சார்ந்த பாத்திரங்களையும் போட்டு உடைத்தனர். அதன்பிறகு அஸ்லம் (ரலி) அவர்கள் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குப் பின் அண்ணலாரை வந்து சந்தித்து பல லட்சம் திர்ஹங்களை (வெள்ளிக்காசுகளை) கொடுத்துவிட்டு, நாயகமே! இதை இஸ்லாத்திற்காக செலவழியுங்கள் என்றார்.


அப்போது அண்ணலார், "இது எப்படி கிடைத்தது?" என்றார்கள். அதற்கு அவர், "நான் என் குலத்தாரிடம் மது தடை செய்யப்பட்டுவிட்டது. எனவே, இனிமேல் மதுவுக்காக செலவழிக்கக்கூடிய காசுகளையெல்லாம் இந்த உண்டியலில் சேமியுங்கள் என்று கூறினேன். அவர்களும் சேர்த்து வந்தனர். அவ்வாறு சேர்க்கப்பட்டது தான் இந்த பணம்" என்றார்கள்.


மது பழக்கமுடையோர் அந்த பழக்கத்தை நிறுத்திவிட்டு, அதற்காக செலவழித்த பணத்தை சேமித்து வைத்தால், அவரின் குடும்பம் பயன்பெறலாம். பல ஏழைகளுக்கும், பல நற்காரியங்களுக்கும் பயன்படுத்தலாம்.


சந்தோஷத்திற்காகச் சம்பாதித்த பணத்தில் குடிப்பது. குடிப்பதற்காகச் சம்பாதிப்பது என்று சுழன்று கொண்டே இருக்கிறது இந்த போதை உலகம். குடிப்பவருக்கு ஆயிரம் காரணம் இருக்கும். குடிப்பவரைத் திருத்த குடும்ப உறுப்பினர்கள் படும்பாடு சொல்லி மாளாது. சுழலும் இந்த புயலில் சிக்கித் துன்பப்படுபவர்கள் அதிகம் பெண்கள் தான்.


குடிகாரன் பேச்சு விடிஞ்சாப் போச்சு


மதுவால் விளையும் விபரீதம் பற்றிய கவிதை வரி: ஒருவன் மது குடித்து விட்டு அந்த கண்ணாடி குடுவையை வீசியெறிந்தான் /  அப்போது அந்த மது குடுவை அவனைப் பார்த்து கூறியதாம் / என்னில் இருப்பதையெல்லாம் நீ குடித்து விட்டாய் அதனால் நான் காலி /  உனக்குள் நான் வந்து விட்டேன். இனிமேல் நீ காலி.


அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது. என் இரு ஒட்டகங்களையும் ஒரு அன்சாரித் தோழர் வீட்டின் அருகே படுக்க வைத்திருந்தேன். அந்த வீட்டில் (என் சிறிய தந்தை) ஹம்ஸா பின் அப்துல் முத்தலிப் (ரலி) அவர்கள் (மது) அருந்திக்கொண்டிருந்தார். அவருடன் ஓர் அடிமைப் பாடகியும் இருந்தாள். அவள், "ஹம்ஸா! கொழுத்த இந்தக் கிழம் ஒட்டகங்களுக்கு (நீயே போதும். ஒரு கை பார்ப்பாயாக!) என்று (யாப்பு வகைப் பாடலை) பாடினாள். உடனே, ஹம்ஸா (ரலி) அவர்கள் வாளுடன் அவ்விரு ஒட்டகங்களை நோக்கிப் பாய்ந்து அவற்றின் திமில்களை வெட்டிச் சாய்த்தார்; இவற்றின் இடுப்பைப் பிளந்து பின்னர் ஈரக்குலைகளை வெளியே எடுத்தார். என்னை அதிர்ச்சியடையச் செய்த இந்தச் செயலை நான் கண்டதும், உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததைத் தெரிவித்தேன். உடனே அண்ணலார் ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்களுடன் புறப்பட்டார்கள். அவர்களுடன் நானும் நடந்தேன். ஹம்ஸா (ரலி) அவர்களிடம் சென்று தமது கோபத்தை அண்ணலார் வெளிப்படுத்தினார்கள்.


அப்போது ஹம்ஸா தமது பார்வையை உயர்த்தி, ( وَهَلْ أَنْتُمْ إِلاَّ عَبِيدٌ لأَبِي ) "நீங்களெல்லாம் எம் மூதாதையரின் அடிமைகள்தாமே?" என்று கூறினார். இதைக்கேட்ட அண்ணலார், (ஹம்ஸா போதையில் இருக்கிறார் என்பதைப் புரிந்து கொண்டு திரும்பாமல்) அப்படியே பின்வாக்கில் நடந்து வந்து அவர்களைவிட்டு வெளியேறிவிட்டார்கள். நூல்:- புகாரீ-2375, முஸ்லிம்-4004


உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். ( وَالْخَمْرُ مَا خَامَرَ الْعَقْلَ ) மது மதியை மூடி மறைக்கக்கூடியதாகும். நூல்:- புகாரீ-5581

தண்ணீ அடித்திருப்பவரிடம் (மது அருந்தியிருப்பவரிடம்) பேசினால் தகராறு தான் ஏற்படும். அப்போது அவர்கள் சுயபுத்தியுடன் இருப்பதில்லை. யாரிடம் என்ன பேசுகிறோம் என்பதை அறிவதுமில்லை. அவர்களிடம் எதைப்பற்றியும் பேசாமல் இருப்பதே நன்று. அந்நிலையில் அவர்களிடம் எதையாவது பேசும்போது நமது மரியாதைக்கு பங்கம் ஏற்படலாம். எனவே,  அந்நிலையில் அவர்கள் நம்மை மரியாதையின்றி பேசிவிட்டால்கூட நாம் அதை பெரிதுபடுத்தக்கூடாது.


அவர்கள் தெளிவான பிறகு, “நீ போதையில் இருக்கும்போது ஏன் இப்படி பேசினாய்?” என்று கேட்டால், பேசக்கூடாததையெல்லாம் பேசிவிட்டு, நானா அப்படி பேசினேன்? நான் அப்படியெல்லாம் பேசியிருக்கமாட்டேனே என்று வாக்குவாதம் செய்வார்கள். இதைத்தான் கிராமத்தில் “குடிகாரன் பேச்சு விடிஞ்சாப் போச்சு” என்பார்கள்.


குடிகாரர்கள் கல்யாண வீடு என்றும் பார்ப்பதில்லை. கருமாதி வீடு என்றும் பார்ப்பதில்லை. அவர்களுக்கு போதையே பிரதானமானது. அவர்களுக்கு எதைப்பற்றியும் கவலையுமில்லை.


மது பழக்கம் முதலில் சாதாரணப் பழக்கமாகத்தான் ஆரம்பிக்கும். முதலில் பீர் உடம்புக்கு நல்லது என சமாதானம் கூறிக்கொண்டு தான் இந்த பழக்கம் ஆரம்பிக்கும். ஆரம்பிக்கும்போதே யாரும் முழு பாட்டிலையும் குடிப்பதில்லை, குடிக்கவும் முடியாது. சில மாதங்கள் அல்லது வருடங்களில் மூளையில் ஆல்கஹால் சில ரசாயன மாற்றங்களை ஏற்படுத்துவதன் காரணமாக, சாதாரண போதையைத் தருவதற்குக்கூட அதிக அளவு மது தேவைப்படும். இதனால்தான் ஆரம்பித்துச் சில வருடங்களில் பாட்டில் கணக்கில் குடிக்க ஆரம்பிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் குடியை விட முடியாத அளவுக்கு மனநோயாளியாகவே மாறி விடுகிறார்கள்.


பார்ட்டிகளில் குடித்தல் நாகரீகம் என்று சொல்லிக் குடிக்காதவர்களையும் குடிக்க வைப்பது, பின்னர் அவர்களில் பலருக்கு அதுவே குடிப்பழக்கத்திற்கு அடிமையாக்கி விடுகிறது.


அளவு முக்கியமல்ல


அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَا أَسْكَرَ كَثِيرُهُ فَقَلِيلُهُ حَرَامٌ ) எந்தப் பொருளை அதிக அளவு உட்கொள்வதன் மூலம் போதை உண்டாகுமோ, அதை குறைந்த அளவு உட்கொள்வதும் தடை செய்யப்பட்டதுதான். அறிவிப்பாளர்:-  ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-1788, அபூதாவூத், நசாயீ, இப்னுமாஜா


போதை தரும் பொருள் என்றால் அது அறவே தடுக்கப்பட்டதுதான். அதில் குறைந்த அளவு கூடுதல் அளவு என்கிற பாகுபாடெல்லாம் கிடையாது. சிலருக்குப் போதைப் பொருளைக் கூடுதல் அளவு உட்கொள்ளும்போதுதான் போதையே வரும். எனவே, அவரைப் பொறுத்து குறைந்த அளவு போதைப்பொருள் தடுக்கப்பட்டது அல்ல எனக் கூற இயலாது. போதை ஏற்படுகிறதா இல்லையா என்பது முக்கியமில்லை. அது போதைப் பொருளா என்பதுதான் முக்கியம். அது போதைப் பொருள் தான் என்றால், அதில் ஒரு துளி கூட தடுக்கப்பட்டதுதான்.


சாட்டையடி


அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. மது அருந்திய ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்ட போது, அவரை இரு பேரீச்ச மட்டைகளால் ஏறக்குறைய நாற்பது முறை அடிக்குமாறு உத்தரவிட்டார்கள். நூல்:- முஸ்லிம்-3512


மது அருந்துதல் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட ஒரு குற்றமாகும் என்பது ஒருமித்த கருத்தாகும். போதை தரும் பொருளை சிறிதளவு அதிக அளவு பயன்படுத்துவது குற்றம் ஆகும். இது தண்டனைக்குரிய (கிரிமினல்) குற்றமாகும். இந்தக் குற்றத்திற்கு மரண தண்டனை கிடையாது.


அண்ணல் நபி (ஸல்) அவர்களது காலத்தில், ஆரம்பத்தில் குடிக்கு ஒரு குறிப்பிட்ட தண்டனை இருக்கவில்லை. பேரீச்ச மட்டை, செருப்பு, துணி போன்ற பொருட்களால் குடிகாரனை அடிப்பர். பின்னர் அண்ணலார் நாற்பது முறை பேரீச்ச மட்டையால் அடிக்குமாறு உத்தரவிட்டார்கள். ஜனாதிபதி அபூபக்கர் (ரலி) அவர்களது ஆட்சி காலத்திலும் இது தொடர்ந்தது. ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களது ஆட்சிக்காலத்தில் குடிப்பழக்கம் அதிகரித்த போது அவர்கள் கலந்தாலோசனை செய்து எண்பது சாட்டையடிகளாக உயர்த்தினார்கள். நூல்:- முஸ்லிம்-3513, அல்மின்ஹாஜ்


சிலர் துணிச்சலாக மது அருந்தினர். இந்நிலையை மாற்றி அமைக்கவே, அதற்கு அதிக தண்டனை வழங்குவதுதான் உகந்தது என்று கருதியதால் எண்பது சாட்டையடி என்று சட்டம் மாற்றப்பட்டது.


உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். ( وَجَدْتُ مِنْ عُبَيْدِ اللَّهِ رِيحَ شَرَابٍ، وَأَنَا سَائِلٌ عَنْهُ، فَإِنْ كَانَ يُسْكِرُ جَلَدْتُهُ ) நான் என் மகன் உபைதுல்லாஹ்விடமிருந்து ஒரு பானத்தின் நெடி வரக் கண்டேன். அது குறித்து விசாரிப்பேன். அது போதை தருவதாக இருந்தால் அவருக்கு சாட்டையடி கொடுப்பேன். நூல்:- புகாரீ-5598 பாடம்: 'பாதக்' எனும் பானமும் போதை தரும் அனைத்துப் பானங்களுக்கும் தடை விதிப்போரின் கூற்றும்


ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களுடைய மகனார் உபைதுல்லாஹ் (ரலி) அவர்கள் ஒருமுறை தம் தோழர்களுடன் சேர்ந்து ஒரு பானத்தை அருந்தினார்கள். அது போதையூட்டாத "திலா" வகைப் பானம் எனக்கருதி அவர்கள் அருந்தியிருக்கலாம். இதை அறிந்த உமர் (ரலி) அவர்கள் இது குறித்து விசாரிக்கபோவதாகவும், அது போதை தரும் பானமாக இருப்பின் சட்டப்படி (80) கசையடி வழங்கப் போவதாகவும் அறிவித்தார்கள். விசாரணை செய்ததில் பானம் அருந்தியதை உபைதுல்லாஹ் (ரலி) அவர்கள் ஒப்புக்கொண்ட அதே நேரத்தில், அது போதையூட்டும் பானமே என மற்றவர்கள் தெரிவித்தார்கள். இதையடுத்துச் சட்டப்படி தம் மகனார் உபைதுல்லாஹ்வுக்கு உமர் (ரலி) அவர்கள் கசையடி வழங்கினார்கள். நூல்:- ஃபத்ஹுல் பாரீ


பிரார்த்திக்கலாம்


உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது. கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களின் காலத்தில் 'அப்துல்லாஹ்' என்றொருவர் இருந்தார். அவர் ஹிமார் (கழுதை) என்ற புனைப் பெயரில் அழைக்கப்பட்டு வந்தார். அவர் அண்ணலாரை (அவ்வப்போது) சிரிக்க வைப்பார். மது அருந்தியதற்காக அவரை அண்ணலார் அடித்துள்ளார்கள். (போதையிலிருந்த) அவர் ஒருநாள் (அண்ணலாரிடம்) கொண்டுவரப்பட்டார். அவரை அடிக்குமாறு அண்ணலார் உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவர் அடிக்கப்பட்டார்.


அப்போது (அங்கிருந்த) மக்களில் ஒருவர், "இறைவா! இவர் மீது உன் சாபம் ஏற்படட்டும்! இவர் (குடித்ததற்காக) எத்தனை முறை கொண்டுவரப்பட்டுள்ளார்!" என்று கூறினார். அப்போது அண்ணலார், ( لاَ تَلْعَنُوهُ، فَوَاللَّهِ مَا عَلِمْتُ أَنَّهُ يُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ ) "இவரை சபிக்காதீர்கள். ஏனெனில், அல்லாஹ்வின் மீதாணையாக! இவர் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறார் என்றே நான் அறிந்துள்ளேன்" என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-6780


அபூதாவூதில் (4480) உள்ள மற்றொரு அறிவிப்பில், ( وَلَكِنْ قُولُوا اللَّهُمَّ اغْفِرْ لَهُ اللَّهُمَّ ارْحَمْهُ )  "இவ்விதமாக கூறாதீர்கள். எனினும், இறைவா! இவருக்கு அருள்புரிவாயாக! இறைவா! இவரை மன்னிப்பாயாக! என்று கூறுங்கள்" என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


பாவமன்னிப்பு உண்டு


ஸதான் என்பவர் அன்றைய காலத்தில் பிரபலமான இசையமைப்பாளர். இவர், மது குடித்துவிட்டு பாடினால் அவ்வளவு இனிமையாக இருக்கும். இவரின் இனிய குரல் வளத்துடன் கூடிய பாட்டுக்கு அன்று பல ரசிகர்கள் இருந்தனர். ஒருமுறை இவர் மது குடித்துவிட்டு, மிக இனிமையாக பாடிக்கொண்டிருந்தார். அதன் வழியே சென்ற அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், "என் இறைவா! இவர் இந்த இனியக்குரலில் இறைமறையை  ஓதினால், கேட்பதற்கு எவ்வளவு இனிமையாக இருக்கும்?" ஏக்கத்துடன் என்று கூறி விட்டு சென்றார்கள்.


இந்தச் செய்தியை அறிந்த ஸதான், அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் ஓடோடி வந்து, "நபித்தோழரே! நான் மொடக்குடிகாரன். எனக்கும் இறைவனிடம் மன்னிப்பு உண்டா? என்று ஆச்சரியமாக  கேட்டார். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், "ஸதானே! உன்னைவிட பெரும் பாவிகளையெல்லாம் அல்லாஹ் மன்னித்து இருக்கிறான். உன்னை மன்னிக்க மாட்டானா?   நீ முறையாக பாவமன்னிப்புத் தேடினால் அல்லாஹ் உன்னையும் மன்னிப்பான்" என்று பதிலளித்தார்கள். உடனே அவர் முறையாக பாவமன்னிப்புக் கோரி திருந்தினார். பிறகு, உலக இறைநேசர்கள் பட்டியலில் இவருக்கென்று தனி இடம் உண்டு.


புதுப்பெயர்


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لَيَشْرَبَنَّ نَاسٌ مِنْ أُمَّتِي الْخَمْرَ يُسَمُّونَهَا بِغَيْرِ اسْمِهَا ) அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். எனது சமுதாயத்தில் சிலர் மது அருந்துவார்கள். அதற்கு மதுவின் பெயரல்லாத வேறு பெயர்களைச் சூட்டிக் கொள்வார்கள். அறிவிப்பாளர்:- அபூ மாலிக் அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்-3690, முஸ்னது அஹ்மத்


"பாதக்" என்பது கெட்டியாகும் அளவுக்கு காய்ச்சப்பட்ட திராட்சை பழச்சாற்றைக் குறிக்கும். பனூ உமைய்யாக்கள் காலத்தில் தயாரிக்கப்பட்ட புதுவகை பானம் என்று சொல்லப்படுகிறது. தடைசெய்யப்பட்ட மதுவகையிலிருந்து விலக்கு அளித்திட வேண்டும் என்பதற்காக இதற்கு "பாதக்" எனும் புதுப்பெயரை அவர்கள் சூட்டிக்கொண்டனர். ஆனாலும், பெயர் எதுவாயினும் போதை தருகின்ற பானங்கள் அனைத்துமே விலக்கப்பட்டவைத்தான் என்றே அறிஞர்கள் கருதுகின்றனர். எனவே, போதை தரும் இந்தப் பானமும் (பாதக்) தடை செய்யப்பட்டதே ஆகும். நூல்:- உம்தத்துல் காரீ


அபுல் ஜுவைரிய்யா (ரஹ்) அவர்கள் கூறியதாவது. நான் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களிடம் 'பாதக்' எனும் பானம் குறித்துக் கேட்டேன். அதற்கு அன்னார், "(இவர்கள் மதுவுக்கு) 'பாதக்' எனும் புதுப்பெயரைச் சூட்டுவதற்கு முன்பே (மது அனைத்தும் தடை செய்யப்பட்டதாகும் என)  முஹம்மத் (ஸல்) அவர்கள் தெரிவித்துவிட்டார்கள். ஆகவே, போதையூட்டும் எதுவாயினும் அது தடை செய்யப்பட்டதுதான்" என்று பதிலளித்தார்கள். நூல்:- புகாரீ-5598


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபச்சாரம் (புரிவது), (ஆண்கள்) பட்டுத் துணி (அணிவது), மது (அருந்துவது), இசைக்கருவிகள் (இசைப்பது) ஆகியவற்றை அனுமதிக்கப்பட்டவையாகக் கருதுவார்கள். அறிவிப்பாளர்:- அபூ மாலிக் அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-5590


இன்று குடிக்கின்ற மதுவுக்கு பீர், பிராந்தி, விஸ்கி, ரம், ஒயின், ஜீன் என ஏதேதோ பெயர் வைத்துக்கொண்டு குடிக்கின்றனர். அதுவெல்லாம் பெரிதாக போதை தராது. இவை "ஹெல்த் டானிக்" போன்றுதான் என்றும் வாதிடுகின்றனர். இதைத்தான் இந்த நபிமொழி கூறுகிறது.


ஒருவன் முஸ்லிம் மது குடிக்கும் போது இது, (அனுமதிக்கப்பட்டது) ஹலால் தான் என்று எண்ணிக் குடித்தால் அப்போதே அவன் இறைமறுப்பாளனாக (காஃபிராக) ஆகிவிடுவான். தடை செய்யப்பட்டதை, அனுமதிக்கப்பட்டது என்று வேண்டுமென்றே கருதினால் அவன் இறைமறுப்பாளனாகி விடுவான் என்பதே சட்டம்.


பெரும்பாலும் குடிப்பவர்கள் மற்றும் போதைக்கு அடிமையானவர்களைக் கேட்டால் தாங்கள் குடிப்பதற்கு ஒவ்வொருவரும் ஒரு காரணம் சொல்வார்கள். கூலி வேலைக்குச் செல்பவர்கள் தங்கள் உடல் வலியைப் போக்கக் குடிப்பதாகவும், இளம் வயதினரைக் கேட்டால் நண்பர்கள் கட்டாயப்படுத்துவதால் அல்லது ஜாலி மூடில் இருந்ததால் குடிப்பதாகவும், சிலர் கவலையை மறக்கக் குடிப்பதாகவும் காரணம் சொல்வார்கள். இப்படிப்பட்ட பல்வேறு சாக்குப்போக்குகள் தான் நாளடைவில் குடியைத் தொடர்வதற்குக் காரணமாகிவிடும்.


காதல் தோல்வி, குடும்பத்தில் பிரச்சனை, வேலையின்மை, குடிப்பது ஓர் நாகரீகம், கடன் சுமை, அதிக வேலையால் ஏற்படும் மன அழுத்தம். ஆனால் இவை எதுவும் உண்மை காரணமல்ல. தன்னை நியாயப்படுத்தி அடுத்தவர் தன்னில் பரிதாபப்படும்படி காரணத்தைக் கூறி குடிப்பதை நியாயப்படுத்தி குடியைத் தொடர்வதற்காகக் கூறப்படும் ஒரு காரணங்கள் இவை.


ஒரு பெரியவர் ஒரு மதுப்பிரியனை அழைத்து, "தம்பி! இதோ பாருங்கள் என்று கூறி, மது நிரப்பப்பட்ட ஒரு கோப்பையில் சில பூச்சிகளைப் போட்டார். மதுவில் விழுந்த அந்த பூச்சிகள் கொஞ்ச நேரத்தில் செத்துவிட்டது. தம்பி! இந்த பூச்சிகள் போன்று தான் நீங்களும் மதுவில் மூழ்கினால் (பல நோய்களுக்கு ஆளாகி) செத்துப்போவீர்" என்றார். மதுப்பிரியன், "பெரியவரே! நீங்கள் சொல்வது சரி தான். என் வயிற்றுக்குள் நிறைய பூச்சிகள் இருந்து கொண்டு என்னை பாடாய்ப்படுத்துகிறது. அந்த வயிற்றுப் பூச்சிகள் சாகத்தான் மது அருந்துகிறேன்" என்றான்.


மதுப்பழக்கத்தை நியாயப்படுத்த எவ்வளவு சாலாப்பு வார்த்தைகள்.


உலகில் பல வகையான மதுபானங்கள் விற்கப்படுகின்றன. அதில் சுத்தமான சாராயம் (ஆல்கஹால்)  எவ்வளவு கலந்துள்ளது என்பதை இங்கே பார்க்கலாம். 'பீர்' 4 முதல் 8 சதவிகிதம், 'ஒயின்' 10 முதல் 20 சதவிகிதம், 'விஸ்கி' 50 முதல் 55 சதவிகிதம், 'பிராந்தி' 45 முதல் 55 சதவிகிதம், 'ரம்' 50 முதல் 58 சதவிகிதம், 'ஜீன்' 50 முதல் 57 சதவிகிதம் ஆல்கஹால் கலந்துள்ளது எனக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.


வேடிக்கையாக சிலர் பீர் குடித்தால் ஒன்றும் ஆகாது என நினைத்து குடிக்கிறார்கள். இது தவறு. பீர் இதயத்தை விரிவடையச் செய்கிறது. இதைத்தான் "பீர் இதயம்" என்கிறார்கள். பீர் குடிப்பவர்கள் திடீர் மரணம் அடைகிறார்கள். இதை சுவிட்சர்லாந்து நாட்டு சுயக்கட்டுப்பாட்டு நீலச்சிலுவைச் சங்கம் ஆராய்ச்சியில் உறுதிபடுத்தி அறிவித்துள்ளது.


சில இளைஞர்கள் தமது திருமணத்திற்கு முன்பு "பேஜ்ஜுலர் பார்ட்டி" எனும் பெயரில் விருந்தளிக்கிறார்கள். அந்த விருந்தில் பெரும்பாலும் மதுவே பிரதானமாகப் பரிமாறப்படுகிறது. இது மேலைநாட்டு கலாச்சாரமாகும். திருமணத்திற்கு பிறகு அனுமதிக்கப்பட்ட உணவுகளை கொண்டு விருந்தளிப்பதுதான் இஸ்லாமிய கலாச்சாரமாகும்.


சிலர் பிறந்தநாள், திருமணநாள், வேலைகிடைத்த நாள், பண்டிகைநாள், புத்தாண்டு என, எதுவாக இருந்தாலும் மது பரிமாறப்படும் விருந்து வேண்டும். இதுவே (என்ஜாயிமெண்ட்) உலகத்தை அனுபவித்தல் என தவறான நிலைப்பாட்டில் வாழ்கிறார்கள்.


சந்தோஷத்திற்கும், சங்கடத்திற்கும் சாராயம் குடிப்பது சகோதர சமயத்தவர்களின் சடங்கு. இது இஸ்லாமியர்களுக்கு உகந்ததல்ல.  


பாவங்களின் தாய்


உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் கூறியதாவது. ( اِجْتَنِبُوا الْخَمْرَ فَإِنَّهَا أُمُّ الْخَبَائِثِ )மதுவை கைவிடுங்கள். ஏனெனில், அது தீமைகளின் அன்னை ஆகும். உங்களுக்கு முன்னர் (வாழ்ந்து) மறைந்தவர்களில் இறைவழிபாட்டாளர் ஒருவர் இருந்தார். அவர் மக்களை விட்டு ஒதுங்கி வாழ்ந்தார். நடத்தை கெட்ட பெண்ணொருத்தி அவரை அடைய விரும்பினாள்.


எனவே, (அவரை அழைத்து வர) தன் பணிப் பெண்ணை அவரிடம் அனுப்பி வைத்தாள். அவரிடம் வந்து சேர்ந்த பணிப்பெண், "நாங்கள் உம்மை (ஒரு வழக்கில்) சாட்சியம் அளிப்பதற்காக அழை(க்க வந்திரு)க்கிறோம் எனக் கூற" உடனே அந்தப்  பணிப்பெண்ணுடன் அவர் செல்லலானார். அவர் (அந்தப் பெண்ணின் வீட்டிலுள்ள) ஒவ்வொரு வாசலில் நுழையும்போதெல்லாம் அவரை உள்ளே விட்டு விட்டு அந்த வாசலை பணிப்பெண் அடைத்துக் கொண்டே வந்தாள்.


இறுதியில் அவர் எழில் கொஞ்சும் ஒரு பெண்ணிடம் வந்து சேர்ந்தார். அவளுக்கு அருகில் ஒரு சிறுவன் இருந்தான்; மது நிரம்பிய கண்ணாடி பாத்திரம் ஒன்றும் இருந்தது. அந்தப் பெண், "அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உம்மைச் சாட்சியம் அளிப்பதற்காகவெல்லாம் அழைக்கவில்லை. மாறாக, என்னுடன் நீர் உறவுகொள்ள வேண்டும்; அல்லது இந்த சிறுவனை கொல்ல வேண்டும்; அல்லது இந்த மதுவை அருந்த வேண்டும் என்பதற்காகவே அழைத்தேன்" என்றாள்.


அவர் (சற்று யோசித்து விட்டு), "எனக்கு ஒரு கோப்பை மதுவை ஊற்றி கொடு" என்றார். உடனே அவருக்கு ஒரு கோப்பை மதுவை ஊற்றிக் கொடுத்தாள். அவர், "இன்னும் கொஞ்சம் எனக்கு ஊற்றிக் கொடு என்றார். (போதை தலைக்கேறிய) சிறிதுநேரத்தில் அவளுடன் உறவு கொண்டுவிட்டார். அந்தச் சிறுவனை கொலையும் செய்து விட்டார்.


எனவே, ( فَاجْتَنِبُوا الْخَمْرَ فَإِنَّهَا لَا تَجْتَمِعُ هِيَ وَالْإِيمَانُ أَبَدًا إِلَّا أَوْشَكَ أَحَدُهُمَا أَنْ يُخْرِجَ صَاحِبَهُ )  நீங்கள் மதுவை விட்டு விலகி விடுங்கள். ஏனெனில், மதுவும் இறை நம்பிக்கையும் (ஏக காலத்தில்) ஒருவரிடம் ஒருபோதும் ஒன்று சேராது. அவற்றில் ஒன்று மற்றொன்றை வெளியாக்கியே தீரும். அறிவிப்பாளர்:- அப்துர் ரஹ்மான் பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் நூல்:- நஸாயீ, தஃப்சீர் இப்னு கஸீர் அல்மாயிதா வசனம்-90


இழிவுப்பிறவிகள்


மது மனிதனின் அறிவைப் போக்கி, ஒழுக்கத்தையும் நற்பெயரையும் குன்றச் செய்து விடுகிறது. எல்லா நாட்டிலும் குடியினால் குற்றங்கள் அதிகரிக்கின்றன என்பதைச் சட்டபூர்வமாக புள்ளி விவரங்களில் இருந்து தெளிவாக அறிந்துகொள்ளலாம். உயர்ந்த இலட்சியங்கள், நன்நோக்கங்கள் கொண்ட ஒரு மனிதனை, மிருகத்தனமான நிலைக்கு இந்த மது ஆக்கிவிடுகின்றது. அறிவீனமான இத்தகைய தீய செயலால் மனிதன் தனது பொருள், புகழ், மானம், மரியாதை, ஒழுக்கம் அனைத்தையும் இழந்து தீராப்பெரும் வியாதிகளையும், பாவத்தையும் சம்பாதித்துக் கொள்கின்றான். சுருங்கக்கூறின் "குடி குடியைக் கெடுக்கும்" என்பது முற்றிலும் உண்மையான வார்த்தையாகும்.


அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். ( لَا تَعُودُوا شُرَّابَ الْخَمْرِ إِذَا مَرِضُوا ) மது அருந்துபவர்கள் நோயுற்றுவிட்டால் அவர்களை உடல்நலம் விசாரிக்கச் செல்ல வேண்டாம். நூல்:- அல்அதபுல் முஃப்ரத்-529


அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மது அருந்துபவன் (இறை வேதங்களான) தவ்ராத், சபூர், இன்ஜீல், குர்ஆன் ஆகிய நான்கு வேதங்களிலும் சபிக்கப்பட்டவன் ஆவான். அவனுக்கு திருமணம் செய்து வைப்பதும், பிணியுற்றால் நலம் விசாரிக்கச் செல்வதும், மரணித்தால் ஜனாஸா தொழுகை நடத்துவதும் கூடாது. மது அருந்துவதற்கு கடன் உதவி புரிவது ஒரு உண்மை இறைநம்பிக்கையாளனை கொலை செய்வதற்குச் சமமாகும். மது அருந்துபவனுடன் பழகுபவனை மறுமையில் அல்லாஹ் குருடனாக எழுப்பி, கேள்வி கணக்குக் கேட்பான். நூல்:- துர்ரத்துந் நாஸிஹீன்


இமாம் அந்நவவீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். பாவத்தையும், (பித்அத் எனும் மார்க்கத்தில் முன்மாதிரி இல்லாத) நவீன செயல்களையும் பகிரங்கமாக செய்பவனைப் பற்றி புறம் பேச, மார்க்கத்தில் அனுமதி உண்டு.  அதாவது: மது குடிப்பது, மக்களை சுரண்டுவது, கொள்ளையடிப்பது, அநியாயமாக பிறர் சொத்துக்களை அபகரிப்பது, போன்ற பாவக் காரியங்களை பகிரங்கமாக செய்பவனை, அவனிடம் உள்ளது பற்றி கூறுவது கூடும். இது அல்லாத அவனுடைய மற்ற குறைகள் பற்றி பேசுவது கூடாது. நூல்:- ரியாளுஸ்ஸாலிஹீன்


குடும்பம் நடத்துவதற்கு போதிய பொருளாதாரம் தராமல் கடமை தவறுகின்ற,  தினந்தோறும் அடி உதை போன்ற நோவினை தருகின்ற குடிகார கணவனிடமிருந்து, மனைவி மணவிலக்கு (குலாஉ) கேட்கலாம் என்கிறது இஸ்லாம்.


உண்மையாகவே, குடிகாரனுடன் குடும்பம் நடத்துவது, தினந்தோறும் செத்துப்பிழைப்பது போன்றுதான். மதுவருந்திவிட்டு துர்நாற்றத்துடன் வரும் குடிகாரனிடமிருந்து அவன் பெற்ற குழந்தைகளும் வெரண்டோடுவார்கள்.


சபிக்கப்பட்டவர்கள்


கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لُعِنَتِ الْخَمْرُ بِعَيْنِهَا وَشَارِبِهَا، وَسَاقِيهَا، وَبَائِعِهَا، ومُبتَاعِهَا، وَعَاصِرِهَا، ومُعتَصِرِهَا، وَحَامِلِهَا، وَالْمَحْمُولَةِ إِلَيْهِ، وَآكُلِ ثَمَنِهَا ) மது சபிக்கப்பட்டது. அதை அருந்துபவர், அதை பரிமாறுபவர், அதை விற்பவர், அதை வாங்குபவர், அதைச் சுமப்பவர், யாருக்காகச் சுமந்து செல்லப்படுகிறதோ அவர், அதை பிழிபவர், அதைப் பிழியச் சொன்னவர், அதன் கிரயத்தை உண்பவர் ஆகிய அனைவரும் சபிக்கப்பட்டவர்கள் ஆவர். நூல்:- முஸ்னத் அஹ்மத், தஃப்சீர் இப்னு கஸீர் அல்மாயிதா வசனம்-90


அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருவர் அருமை நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஒரு தோல்பை (நிரம்ப) மதுவை அன்பளிப்பாக வழங்கினார். அவரிடம் அண்ணலார், ( هَلْ عَلِمْتَ أَنَّ اللَّهَ قَدْ حَرَّمَهَا ) "அல்லாஹ் மதுவைத் தடை செய்துவிட்டது உமக்குத் தெரியாதா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர், 'இல்லை' என்று கூறிவிட்டு, பிறகு (தம் அருகிலிருந்த) ஒரு மனிதரிடம் இரகசியமாக ஏதோ சொன்னார்.


உடனே அண்ணலார், ( بِمَ سَارَرْتَهُ ) "அவரிடம் இரகசியமாக என்ன சொன்னீர்" என்று கேட்டார்கள். அதற்கு அந்த மனிதர், "அதை விற்றுவிடச் சொன்னேன்" என்றார். அதற்கு அண்ணலார், ( إِنَّ الَّذِي حَرَّمَ شُرْبَهَا حَرَّمَ بَيْعَهَا ) "மது அருந்துவதற்கு தடைவிதித்த (இறை)வனே அதை விற்பதற்கும் தடை விதித்துள்ளான்" என்றார்கள். உடனே அம்மனிதர் தோல்பையைத் திறந்துவிட, அதிலுள்ளது (வழிந்தோடிப்) போனது. நூல்:- முஸ்லிம்-3220 நஸாயீ, முவத்தா மாலிக், தாரிமீ


போதைப் பொருட்களைப் பயன்படுத்துவது மட்டுமின்றி அவற்றைத் தயாரிப்பது, விற்பனை செய்வது, சேமித்து வைப்பது, அதற்காக உதவி செய்வது ஆகிய அனைத்து நடவடிக்கைகளும் தடை செய்யப்பட்டுள்ளன.


மது கடைகள் மற்றும் மது பரிமாறப்படும் 'பார்'களில் (அரசு அல்லது தனியார் நிறுவனமோ எதுவாக இருந்தாலும் சரி அங்கு) வேலைப்பார்ப்பவர்கள். மது ஆலைகளில் வேலைப்பார்ப்பவர்கள். மது புட்டிகளை வாகனத்தில் ஏற்றி செல்பவர்கள் அனைவரும் சாபத்திற்குரியவர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். சாபம் பெற்றவர்கள் வாழ்வில் வளம் காணுவதில்லை.


கணவனுக்கோ, பெற்றோருக்கோ, மற்றொருக்கோ யாருக்காக இருந்தாலும் சரி, மது வாங்கி வந்து கொடுக்கக்கூடாது. மேலும், மதுவை ஊற்றி கொடுப்பதும் அதற்காக டம்ளர், டேபிள் போன்றவற்றை எடுத்து வைத்து ஏற்பாடு செய்து கொடுப்பதும் கூடாது. இதுவெல்லாம் பணிவிடையல்ல. பாவக்காரியம்.


இறைநம்பிக்கையை இழக்க நேரிடும்


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( وَلاَ يَشْرَبُ الْخَمْرَ حِينَ يَشْرَبُهَا وَهْوَ مُؤْمِنٌ ) (மது அருந்துகிறவன்) மது அருந்தும்போது இறைநம்பிக்கையாளனாக இருக்கும் நிலையில் மது அருந்தமாட்டான். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-5578, திர்மிதீ-2546


ஓர் இறைநம்பிக்கையாளர் இந்தக் குற்றங்களைச் செய்யும்போது அவரிடமிருந்து 'இறை நம்பிக்கை' எனும் ஒளி விடை பெற்றுக்கொள்கிறது. குற்றத்தைவிட்டு விலகியபிறகு மீண்டும் அவரிடம் வந்து சேர்கிறது. தொடர்ந்து ஒருவர் இக்குற்றங்களைப் புரிந்து வந்தால் 'பாவம்' எனும் கரும்புள்ளி அவரது உள்ளத்தை ஆக்கிரமித்துக் கொண்டு விரிவடைந்து கொண்டே செல்லும். மேலும் அவருடைய இறை நம்பிக்கை தளர்ந்து விடும். மனம் வருந்தி பாவமன்னிப்புக் கோரினால் உள்ளம் பிரகாசமடையும். ஆக,  உண்மையான இறை நம்பிக்கையாளர் இந்தக் குற்றங்களைப் புரியமாட்டார்.


கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَن شَرِبَ الْخَمْرَ لَمْ يَرْضَ اللَّهُ عَنْهُ أَرْبَعِينَ لَيْلَةً، إِنْ مَاتَ مَاتَ كَافِرًا، وَإِنْ تَابَ تَابَ اللَّهُ عَلَيْهِ ) ஒருவர் மது அருந்தினால் நாற்பது நாட்கள் வரை அவர்மீது அல்லாஹ்  பிரியம் கொள்ளமாட்டான். (அந்நாட்களில்) அவர் இற(க்க நேர்ந்)தால் இறைமறுப்பாளராகவே இறப்பார். அவர் பாவமன்னிப்புக் கோரினால் அவரது பாவமன்னிப்புக் கோரிக்கையை அல்லாஹ் ஏற்பான். அறிவிப்பாளர்:-  அஸ்மா பின்த் யஸீத் அஸ்ஸகன் (ரலி) அவர்கள் நூல்:-  முஸ்னது அஹ்மத், தஃப்சீர் இப்னுகஸீர் அல்மாயிதா வசனம்-93


நபித்தோழர் அபூ மூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறினார்கள். மதுபானம் அருந்துவதற்கும் அல்லாஹ் அல்லாதவற்றை வணங்குவதற்கும் (இடையே) நான் வேற்றுமை காணவில்லை. நூல்:- நஸாயீ


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ مَاتَ وَهُوَ مُدْمِنُ الْخَمْرِ لَقِيَ اللَّهَ وَهُوَ كَعَابِدِ وَثَنٍ )  நிரந்தரமாக மது அருந்திய நிலையில் மரணிப்பவன் சிலை வணங்கியவனைப் போன்று அல்லாஹ்வைச் சந்திப்பான். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் நூல்:- தப்ரானீ, இப்னு ஹிப்பான், அல்பஸ்ஸார்


இறைநேசர் ஷைகு அப்துல் அஸீஸ் தீரீனி (ரஹ்) அவர்கள் கூறியதாவது. நான் ஒரு நாள் பள்ளிவாசலுக்கு போய்க் கொண்டிருக்கும் போது, இடையில் ஒரு வீட்டில் பெண்கள் அழும் சப்தம் மிகுதியாக கேட்டது. இதனை செவியுற்ற நான் அருகில் சென்று அங்கிருந்தவர்களிடம், ஏன் இப்படி இவர்கள் அழுகிறார்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "இந்த வீட்டில் ஒருவருக்கு மரண வேதனை ஏற்பட்டு, அவர் படாதபாடு படுகிறார். அவருக்கு கலிமா சொல்லிக் கொடுத்தால் அவரது நாவில் கலிமா வர மறுக்கிறது. அதனால் இப்படி கைசேதப்பட்டு அழுது கொண்டிருக்கின்றனர்" என்று சொல்லப்பட்டது.


அப்போது என்னிடம் அவர்கள், "ஒருவேளை மார்க்க ஞானம் பெற்ற நீங்கள் அவருக்கு கலிமா சொல்லிக் கொடுத்தால் அவரது நாவு கலிமா சொல்லக்கூடும்" என்று கூறினர். உடனே நான் அந்த வீட்டிற்குச் சென்று மரணப்படுக்கையில் இருந்த அந்த மனிதனுடைய தலை மாட்டில் அமர்ந்து, அவரது காதருகில் அவருக்கு கலிமா சொல்லிக் கொடுத்தேன். இவ்வளவு நேரம் எவ்வித சொரணையும் இல்லாமல் கிடந்த அந்த மனிதர் நான் கலிமா சொல்லிக் கொடுத்ததும் தெளிவடைந்து கண் திறந்துப் பார்த்து, "நான் கலிமா சொல்ல மாட்டேன்" என்று பட்டவர்த்தனமாக சொல்லியவுடன் அவரின் உயிர் பிரிந்துவிட்டது.


உடனே, அவரின் உறவினர்களை அழைத்து, இவர் இறைமறுப்பாளராக மரணித்து விட்டார்" என்றேன். இவருக்கு இந்நிலை ஏற்பட என்ன காரணம்? என விசாரித்தேன். அப்போது அவர்கள், "இவர் குணசீலர் தான். இருந்தாலும், இவர் குடிகாரராக வாழ்ந்தார்" என்றனர். அப்போது நான், "குடிகாரர்களின் கடைசி நிலை இதுதான்" என்று கூறி விடைப்பெற்றேன். நூல்:- ஜவாஹிர்


மறுமை நிலை  


கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள், ( كُلُّ مُسْكِرٍ حَرَامٌ إِنَّ عَلَى اللَّهِ عَزَّ وَجَلَّ عَهْدًا لِمَنْ يَشْرَبُ الْمُسْكِرَ أَنْ يَسْقِيَهُ مِنْ طِينَةِ الْخَبَالِ ) "போதையளிக்கக்கூடிய ஒவ்வொன்றும் தடை செய்யப்பட்டதாகும். (இவ்வுலகில்) போதைப் பொருட்களை உட்கொள்பவருக்கு (மறுமையில்) 'தீனத்துல் கபாலை' நிச்சயமாக நான் புகட்டுவேன் என அல்லாஹ் உறுதிமொழி எடுத்துள்ளான்" என்று கூறினார்கள்.


மக்கள், "நாயகமே! 'தீனத்துல் கபால்' என்பது என்ன? என்று வினவினர். அதற்கு அண்ணலார், ( عَرَقُ أَهْلِ النَّارِ أَوْ عُصَارَةُ أَهْلِ النَّارِ ) "நரகவாசிகளின் வேர்வை அல்லது நரகவாசிகளின் சீழ்" என்று விடையளித்தார்கள்.  அறிவிப்பாளர்:- ஜாபிர் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-4075


அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لَا يَدْخُلُ الْجَنَّةَ منَّان وَلَا عَاقٌّ، وَلَا مُدْمِن خَمْرٍ ) செய்த உபகாரத்தைச் சொல்லிக் காட்டுபவன், பெற்றோரைப் புண்படுத்துபவன், குடிகாரன் ஆகிய மூவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் நூல்:- நஸாயீ, முஸ்னது அஹ்மத், தாரிமீ


அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( وَمَنْ شَرِبَ الْخَمْرَ فِي الدُّنْيَا فَمَاتَ وَهُوَ يُدْمِنُهَا لَمْ يَتُبْ لَمْ يَشْرَبْهَا فِي الآخِرَةِ ) யார் இவ்வுலகில் தொடர்ந்து மது அருந்தி, பாவமன்னிப்புத் தேடாமல் (திருந்தாமல்) குடிகாரராகவே இறந்துவிடுகிறாரோ அவர் மறுமையில் (சொர்க்க) மதுவை அருந்த மாட்டார். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-4076, அபூதாவூத்


இமாம் கத்தாபீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். மறுமையில் பானங்கள் அருந்த மாட்டார் என்பதன் பொருள்: சொர்க்கத்திற்குச் செல்ல மாட்டார் (என்பதாகும். ஏனெனில், சொர்க்கத்தில் தான் அனைத்து பானங்களும்  இருக்கின்றன.)


கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ شَرِبَ الْخَمْرَ لَمْ يَقْبَلِ اللَّهُ لَهُ صَلاَةً أَرْبَعِينَ صَبَاحًا ) ஒருவர் மது அருந்தினால் அவரது நாற்பது நாட்கள் தொழுகையை அல்லாஹ் ஏற்க மாட்டான். அவர் பாவமன்னிப்புக் கோரினால், அவரது பாவமன்னிப்புக் கோரிக்கையை அல்லாஹ் ஏற்பான். அண்ணலார் இவ்வாறு மூன்று முறை கூறிவிட்டு, நான்காவது தடவை அவர் மீண்டும் மது அருந்தினால், அப்போது அவரது நாற்பது நாட்கள் தொழுகையை அல்லாஹ் ஏற்பதில்லை. மேலும் அவர் பாவமன்னிப்புக் கோரினால், அவரது பாவமன்னிப்புக் கோரிக்கையையும் அல்லாஹ் ஏற்பதில்லை. அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் நூல்:-  அபூதாவூத், திர்மிதீ-1785, இப்னுமாஜா


அவரது நாற்பது நாட்கள் தொழுகையை அல்லாஹ் ஏற்க மாட்டான் என்பதன் பொருள்: அதற்குரிய நற்கூலியை வழங்கமாட்டானே தவிர, நீ ஏன் நாற்பது நாட்கள் தொழவில்லை என அல்லாஹ் அவனிடம் மறுமையில் விசாரிக்கமாட்டான். 


சில பயன்கள்


(நபியே) மதுவைப் பற்றியும் சூதாட்டத்தைப் பற்றியும் அவர்கள் உம்மிடம் வினவுகின்றனர். "அவ்விரண்டிலும் பெரும் பாதிப்பும், மக்களுக்குச் சில பயன்களும் உள்ளன. ஆயினும் அவற்றிலுள்ள பயனை விட பாதிப்பே மிகப் பெரியது" என்று கூறுவீராக. திருக்குர்ஆன்:- 2:219


இந்த வசனத்தில், "அவ்விரண்டிலும் பெரும் பாதிப்பும், மக்களுக்குச் சில பயன்களும் உள்ளன" என அல்லாஹ் கூறியுள்ளான். பாதிப்பு என்பது மார்க்க அடிப்படையில் ஏற்படக் கூடியதாகும். (அதாவது அது ஒரு பாவமாகும்.) ஆனால் பயன்களோ உலகியல் ரீதியானவை. மதுவைப் பொறுத்தவரை, அதில் உடலுக்குப் பயனுள்ளது. அது உணவைச் செரிக்க வைக்கும்; கழிவுகளை வெளியேற்றும்; சிலருடைய சிந்தனைகளை பட்டை தீட்டும். ஒருவித கிறக்கம் நிறைந்த களிப்பும் மதுவில் உள்ளது. மதுவை விற்பனை செய்வதும் அதன் வருமானத்தை அனுபவிப்பதும் உலகியல் பலன்களில் அடங்கும்.


இதைக் குறித்தே கவிஞர் ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்கள் தமது அறியாமைக் காலத்துக் கவிதையொன்றில் பின்வருமாறு பாடுகிறார்:

وَنَشْرَبُهَا فَتَتْرُكُنَا مُلُوكًا   وَأُسْدًا لَا يُنَهْنِهُهَا اللِقَاءُ

நாங்கள் மதுவருந்திவிட்டால் அது எங்களை அரசர்களாகவும் அரிமாக்களாகவுமே நிறுத்திவிடுகிறது. / போர்க் களம் காண எங்களுக்கு தடையாக அது இருப்பதில்லை.  நூல்:- தஃப்சீர் இப்னு கஸீர்


மேலைநாடுகளில் ஜலதோஷத்தால் மூக்கு ஒழுகும்போதும், பசி இல்லாத நேரத்திலும் மூன்று ஸ்பூன் பிராந்தியை சுடு தண்ணீரில் ஊற்றி குடிக்கிறார்கள். பயங்கரமான காய்ச்சலின்போதும், பயங்கரமாக வேர்க்கும்போதும், உடல் வலிக்கும்போதும் மூன்று ஸ்பூன் பிராந்தியை காபியில் கலந்து குடிக்கிறார்கள். சளி வராமல் இருமிக் கொண்டிருப்பவர்கள் மூன்று ஸ்பூன் பிராந்தியை தேனில் கலந்து குடிக்கிறார்கள். இவ்வாறு குடிப்பதால் சில நேரங்களில் அவர்களுக்கு பயனளிக்கிறது.


இயற்கையாகவே நம்முடைய உடலில் ஒரு கிராம் அளவுக்கு ஆல்கஹால் இருக்கிறது. நாம் ஒவ்வொரு முறை உண்டு முடித்ததும் ஓரளவு கார்போஹைட்ரேட்டு, ஸ்டார்ச், சர்க்கரை முதலியன ஆல்கஹாலாக (சாராயமாக) நமது இரத்த ஓட்டத்தில் கலக்கிறது. இதனால் நமக்கு எந்தவித கெடுதலும் இல்லை. மாறாக, உடலுறுப்புகள் நன்கு இயங்க இது உதவி புரிவதாக உள்ளது. என்ன ஆச்சரியம்... இதைத்தான் திருக் குர்ஆன் 'மனிதர்களுக்கு மதுவினால் சில பயன்களும் இருக்கின்றன' என்று கூறியிருப்பது மருத்துவ ஆய்வாளர்களுக்கு இன்றைய அளவு வியப்பு தருவதாக இருக்கிறது.


நோய்கள் நிச்சயம்


மருத்துவ அறிஞர் அப்கராத் அவர்கள் கூறுகிறார்கள். மது தலையில் மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாகும். ஏனென்றால் அது அங்குதான் மிக துரிதமாக சென்றடைகிறது. மேலும் அங்கு சென்றடைவதன்மூலம் உடலின் இயல்புகளைப் பாதிக்கின்றன. அதனால் அது மூளைக்குத் தீங்கிழைக்கிறது நூல்:- அத்திப்புந் நபவீ இமாம் இப்னு கய்யிம்


மது அருந்திய ஒருவரின் மூளை திசுக்கள் ஏழு மடங்கு வேகத்தில் அதை உறிஞ்சிக் கொள்கிறது. மது அருந்திய ஐந்து நிமிடத்தில் இரைப்பையிலிருந்து எந்த மாற்றமும் அடையாமல் நேரடியாக இரத்தத்தில் கலந்து பின் அரை முதல் ஒரு மணி நேரத்திற்குள் மதுவில் 90 சதவிகிதம் இரத்தத்தில் கலந்து விடுகிறது.


மது குடித்தவரின் உடல் கஷ்டப்பட்டு 10 சதவிகிதம் மதுவை எப்படியோ வியர்வை, சிறுநீர், மூச்சுக் காற்று ஆகியவற்றின் மூலம் வெளியேற்ற படாதபாடுபடுகிறது. பெரும்பாலான மது அதற்குள் மூளையை அடைந்து அதன் அரண்போல்கட்டி பாதுகாக்கக்கூடிய "மூளை பெருஞ்சுவரை" தாண்டி ஊடுருவி சென்று மது மூளை திசுக்களை கிளர்ச்சி அடைய செய்து பாதிக்கிறது. இதனால் குடிகாரர்கள் மதுவிற்கு நாளடைவில் அடிமையாகி விடுகின்றனர்.


அமெரிக்கா நாட்டில் புளோரிடா நகரத்தின் மருத்துவ பல்கலைக் கழகத்தில் நடத்திய ஓர் ஆய்வு கூறுகிறது: ஆரோக்கியமான சிலரைக் குடிக்க வைத்து அவர்களை தூங்க சொன்னார்கள். அவர்கள் உறங்கும் போது சுமார் பத்து வினாடிகளுக்கு ஒரு வினாடி அவர்கள் விடும் மூச்சு தடைபட்டுக் கொண்டேயிருக்கிறது என்றும் 10 வினாடிகளுக்கு ஒரு முறை நுரையீரலுக்கு செல்லவேண்டிய ஆக்சிஜன் (உயிர்காற்று) தடைபட்டு உள்ளே போகாததால் அதிகமாக குடித்துவிட்டு தூங்குபவர்களில் மூச்சு போய்க்கொண்டிருக்கிறது என கண்டுபிடித்தார்கள். அதிகமாக மது அருந்தியிருக்கும் போது, மூச்சு விட மறக்கும் நிலை (மூச்சு. அடைப்பு) ஏற்பட்டு உயிர் பிரிய கூடிய நிலை உருவாகிறது.


நமது உறுப்புக்களில் மூளைக்கு அடுத்தபடியாக உள்ள மிகப்பெரிய உறுப்பு கல்லீரல் ஆகும். (சராசரி ஒரு கிலோ முதல் ஒன்றரை கிலோ எடை இருக்கும்.) கல்லீரல் நமது உடலின் பரிசோதனைக் கூடம் எனலாம். இங்கேதான் உணவு ஜீரண வேலைகள், இரசாயன மாற்றங்கள் நடக்கின்றன. உடலில் செரிக்கச் செய்யும் உணவுகளை இங்கே நச்சு நீக்கம் செய்து கல்லீரல் அனுப்புகிறது. பாக்டீரியாக்கள் இங்கே அழிக்கப்படுகின்றன. கல்லீரலின் வேலையை அளவிடமுடியாது. மது முதலில் தாக்குவது கல்லீரலைத்தான். விளைவு கல்லீரல் அரிப்பு ஏற்படுகிறது.


தினமும் மது அருந்துவதால் மதுவின் அளவு இரத்தத்தில் உயர்ந்து விந்துப்பை சுருங்கி விடுகின்றன. ஆணுறுப்பு எழுச்சி குறைந்து சர்க்கரை வியாதி உடையவர்கள்போல் ஆண்மை குறைபாடு அடைகிறார்கள். குடிகாரர்கள் அதிகபட்சமாக மனச்சோர்வு அடைகிறார்கள். அதனால் சிலர் தற்கொலை எண்ணம் ஏற்பட்டு துன்பப்படுகின்றனர். பின்னர் தற்கொலையும் செய்துகொள்கிறார்கள்.


சர் விக்டர் ஹார்ஸ்லி  என்ற மேலைநாட்டு மருத்துவ நிபுணர் கூறுகிறார். மதுப்பழக்கத்தால் மயக்கம், புலம்பல், பைத்தியம், தூக்கமின்மை, நரம்புத்தளர்ச்சி, வலிப்பு, பக்கவாதம், தொண்டைப்புண், இரைப்பைப்புண், கல்லீரல் வீக்கம், மூத்திர நோய், இதய நோய், இரத்தக்குழாய் தடித்தல், சுவாசகாசம் பாதிப்பு, எலும்புருக்கி நோய், குடல் புண், கண்களில் உஷ்ணக் கொதிப்பு, விஷ ஜுரம் ஆகிய நோய்களை நிச்சயம் ஏற்படுத்தும் என்கிறார்.


மதுவினால் ஏற்படும் பயன்களைவிட பாதிப்பே அதிகம் என திருக்குர்ஆன் கூறுவது இப்பொழுது புரிகின்றதா?


சிகிச்சை முறைகள்


போதை பழக்கத்தினால் தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது. மனதளவில் தளர்ச்சி அடைதல், பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பல பாதிப்புகளைச் சந்திக்கக் கூடிய நிலை ஏற்படுதல் மூலமாக மன அழுத்தம் ஏற்பட்டு உடலையும், மனதையும் பாதிக்கிறது.


சிறிதளவில் குடிப்பவர் தனது குடியை உடனடியாக நிறுத்த முடியும். ஆனால் குடிக்கு அடிமையானவர் அப்படி ஒரு நாளில் நிறுத்துவது ஆபத்து. சிலருக்குப் பாதிப்பை தராவிட்டாலும் பலருக்கு பாதிப்பைத் தரும். எனவே, குறைத்துக் குறைத்து கொண்டு வந்து நிறுத்துவது நல்லது என்கின்றனர் ஆய்வாளர்கள்.


போதை பழக்கம் வராமல் தடுக்கவும், குடிக்கின்ற எண்ணங்கள் வராமல் இருக்கவும் சில மருந்துகள் உள்ளன. இந்த வகையான மருந்துகளை எடுத்த பின்பு குடித்தாலும் வாந்தி, குமட்டல் போன்றவற்றினை ஏற்படுத்தக்கூடிய மருந்துகள் உள்ளன. இவற்றினை நோயாளிகளுக்கு தெரிந்தோ, தெரியாமலோ டீ,காபி போன்றவற்றில் கலந்து கொடுக்கலாம். என்னதான் சிகிச்சை முறைகள் இருந்தாலும் அதற்கு நோயாளியின் ஒத்துழைப்பு அவசியம் தேவை.


நம்மையும் நம் சந்ததியினரையும், மது போன்ற போதை பொருட்களை பயன்படுத்துவதை விட்டும் அல்லாஹுத்தஆலா பாதுகாப்பானாக! ஆமீன்!

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

No comments:

Post a Comment

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...