அல்லாஹ்வின்மீது நல்லெண்ணம்
قال رسول الله صلى الله عليه وسلم : إِنَّ حُسْنَ الظَّنِّ بِاللّٰهِ مِنْ حُسْنِ عِبَادَةِ اللّٰهِ
அருளாளன் அல்லாஹ்வின் மீது நல்லெண்ணம் கொள்வதென்றால் அல்லாஹ்வின் விதிகள் அனைத்தும்
நன்மைக்கே என எண்ணுவதும் ,நம்புவதுதான். நமக்கு
ஏதேனும் கடுமையான துன்பம் ஏற்படும்போது நிராசையடையாமல், இதெல்லாம் என் தலைவிதி என சலிப்படையாமல் அல்லாஹ்வின்
செயல்கள் அனைத்தும் நன்மைக்கே என எண்ண வேண்டும்.
வாழ்க்கையில் ஏற்படும் சிரமங்களால் மரணமே வந்தாலும் அல்லாஹ்வின்மீது நிராசையாகாமல்
அவன் மீது நல்லெண்ணம் வைத்த நிலையில் மரணிக்க வேண்டுமே என்ற கவலை, மறுமையின் மீது உறுதியான நம்பிக்கை உள்ளவர்களுக்கு தான் ஏற்படும்.
قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنْفُسِهِمْ لَا تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللَّهِ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ
“என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வின் அருள்மீது நம்பிக்கை இழந்து விடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் அனைத்தையும் மன்னிக்கிறான். நிச்சயமாக அவனே மன்னிப்பவனும் கருணையாளனும் ஆவான்” (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக. திருக்குர்ஆன்:- 39:53
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِنَّ حُسْنَ الظَّنِّ بِاللّٰهِ مِنْ حُسْنِ عِبَادَةِ اللّٰهِ ) அல்லாஹ்வைப் பற்றி நல்ல எண்ணம் கொள்வது, அதுவே ஒரு அழகிய இறைவழிபாடாகும். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-3523
அல்லாஹ் குற்றங்களை மன்னிப்பான் என எண்ணுவது அல்லாஹ்வைப் பற்றி நல்லெண்ணம் கொள்வதாகும். அவ்வித எண்ணம் அழகிய வழிபாட்டுக் கூறுகளில் அடங்கும்.
இறைவன் மீது நல்லெண்ணம் கொள்கிறேன் என்ற பெயரில் நல்லறங்கள் செய்யாதிருப்பதும், அல்லாஹ்வும் மன்னிப்பான் அருளாளன் என்று கூறிக்கொண்டு மட்டும் நம்பிக்கையை அமைத்துக் கொள்வதும் உகந்த செயல் அல்ல. இறையருளை எதிர்பார்த்து நல்லறங்கள் புரிவது வழிபாடுகளை சீராக்கும். இதுவே இறைவனிடம் ஏற்புடையதாகவும் இருக்கும்.
இறைவன் மீது நல்லெண்ணம் கொள்வதாக கூறிக்கொண்டு வழிபாடுகளை விட்டு விடுபவர் ஏமாற்றமடைவார்.
நல்லெண்ணத்துடன் இறைவணக்கத்தில் ஈடுபடுபவர், விவசாயம் செய்து
விட்டு அறுவடையை எதிர்பார்ப்பதற்கு ஒப்பானவர். வழிபாடு புரியாமல் நல்லெண்ணத்துடன் நிறுத்திக்
கொள்பவர், விவசாயமே செய்யாமல் பலனை எதிர்பார்ப்பது போன்றாவார்.
அனுபவமிக்கவர்கள்
(அவன் தான் அருளாளன் எனும்)
ரஹ்மான் (ஆவான்.) எனவே, அனுபவமிக்கவர்களிடம் அவனைப்பற்றி கேட்டறிந்து கொள்வீராக!. திருக்குர்ஆன்:- 25:59
இந்த திருவசனத்தில் "ஹபீர்" என்ற வார்த்தைக்கு வெறுமனே கற்றறிந்தவர்
என்பதல்ல; அனுபவமிக்கவர் என்று
பொருள்.
அல்லாஹ்வின் மீது நல்லெண்ணம் ஏற்பட அவனைப் பற்றி நன்கு அறிய வேண்டும். ஆகவே,
அவனைப் பற்றி அதிகம் அறிந்தவர்கள்
இறைத்தூதர்கள் தான் என்பதில் சந்தேகமில்லை.
அதற்கவர், என்னுடைய சஞ்சலத்தையும் கவலையையும் அல்லாஹ்விடமே முறையிடுகிறேன். அல்லாஹ்விடமிருந்து, நீங்கள் அறியாதவற்றை நான் அறிவேன் (என்று நபி யஃகூப் -அலை அவர்கள் கூறினார்கள்.) திருக்குர்ஆன்:- 12:86
நெருக்கடியான நேரத்தில் அல்லாஹ்வின் மீதான நல்லெண்ணத்துடன் அவன் பக்கம் உண்மையான
முறையில் அடைக்கலமாகும்போதும், ஒன்றிணையும்போதும் நெருக்கடி நீங்குவதை எதிர்பார்க்கலாம்.
அவர் பணிவுடன் வேண்டினார்: “என் அதிபதியே! என்
எலும்புகளோ நலிவடைந்துவிட்டன. மேலும், நரையினால் என் தலை மினுமினுத்துவிட்டது. மேலும், என் அதிபதியே! நான் உன்னிடம் பிரார்த்தனை புரிந்து
ஒருபோதும் ஏமாற்றம் அடைந்ததில்லை. திருக்குர்ஆன்:- 19:4
நிராசையின் அறிகுறிகள் இறைத்தூதர் ஸகரிய்யா (அலை) அவர்களிடம் தோன்றியதும் அவர்களின்
எலும்புகளோ நலிவடைந்துவிட்டன. மேலும், நரையினால் அவர்களின் தலை மினுமினுத்துவிட்டது , அவர்களின் மனைவி கர்ப்பம் தரிக்க முடியாதவராக இருந்தார் எனினும் அவர் தனது இரட்சகனின் மீது கொண்டிருந்த
நல்லெண்ணத்தின் வலிமை (நிராசையின்) வலையத்தை தகர்த்தது.
அண்ணல் நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் மக்காவிலிருந்து மதீனாவிற்கு புலம்பெயர்ந்து வரும் பொழுது வழியில் ஒரு மலைக் குகையில் தஞ்சம் அடைகின்றனர். குகைக்கு வந்ததும் அண்ணலார் அபூபக்ர் (ரலி) அவர்களின் மடிமீது தலைவைத்து தூங்கி விட்டார்கள். ஆனால் அங்கும் எதிரிகள் தேடி வந்து விட்டனர். குகைக்குள் இருந்த அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு அதிர்ச்சி கலக்கம் அச்சத்துடனேயே அண்ணலாரிடம் கூறினார்: நாயகமே! குகை வாசலில் எதிரிகள் குனிந்து பார்த்தால் நம் கதி என்னாவது?
அண்ணல் நபி (ஸல்) அவர்கள், "அபூபக்ரே! நாம் இரண்டு பேரும் இருக்கும் இடத்தில் மூன்றாவதாக இறைவன் இருக்கிறான் என்ற என்னுடைய எண்ணம் குறித்து நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?
இருவரைத் தவிர யாரும் இல்லாத தனிமைக் குகையில் இறைவன் நம்மோடு இருக்கிறான் என்ற நல்லெண்ணம் அவர்களைக் காப்பாற்றியது. அபூபக்ர் (ரலி) அவர்களே கலக்கமடைந்தபோதும் குகை வாசலில் எதிரிகள் காத்திருக்கும் வேளையிலும் குகைக்கு உள்ளே தோழரின் மடியில் தலை வைத்து தூங்கும் அளவுக்கு அண்ணலாருக்கு மன நிம்மதியை பெற்றுத் தந்தது எது? இறைவனைக் குறித்த நல்லெண்ணம் தான்.
குருட்டு நம்பிக்கையல்ல! தேவையான ஏற்பாடுகளைச் செய்த பின்னரே இறைவனை நம்ப வேண்டும். நியாயமான வழி முறைகளைக் கையாண்ட பின்னரே இறைவன் குறித்த நல்லெண்ணம் கொள்ள வேண்டும். அதுதான் உண்மையான நல்லெண்ணம். எவ்வித முன்னேற்பாடுகளையும் செய்யாமல், "இறைவா! நீயே கதி!" என்று இறை சந்நிதானத்தில் கதவைத் தட்டினால் அது ஒருபோதும் திறக்காது.
உமர் (ரலி) அவர்கள்
இப்ராஹீம் பின் அஸ்ரக் (ரஹ்) அவர்கள் அறிவிப்பதாவது. ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள்
கூறுகிறார்கள். ( مَا أُصِبتُ بِمُصِيبَةٍ إِلَّا وَرَأَيتُ لِلّٰهِ عَلَيَّ فِيهَا ثَلَاثَ
نِعَم
) எனக்கு எந்த துன்பம் வந்தாலும் அதில் அல்லாஹ்வின்
மூன்று கருணையைப் பார்க்கிறேன்.
( اَلأُولَى أَنَّ اللّٰهَ
هوَّنها عَلَيَّ فَلَم يُصِبنِي بِأَعظَمَ مِنهَا وَهُوَ قَادِرٌ عَلَى ذٰلِكَ
) முதலாவது: அல்லாஹ் என் மீது இலேசான துன்பத்தைத் தான் தந்துள்ளான். அவன் நினைத்தால்
இதைவிட கடுமையான துன்பத்தைத் தந்திருக்கலாம். அப்படி செய்தவற்கு அவன் ஆற்றலுள்ளவன்தான்.
( اَلثَّانِيَةُ أَنَّ اللّٰهَ
جَعَلَهَا فِي دُنيَايَ وَلَم يَجعَلهَا فِي دِينِي وَهُوَ قَادِرٌ عَلى ذٰلِكَ
) இரண்டாவது: இந்தத் துன்பத்தை என்னுடைய உலக விஷயத்தில் ஏற்படுத்தியுள்ளான். மாறாக,
எனது மார்க்க விஷயத்தில் இந்த சோதனை ஏற்படுத்தவில்லை. அவ்வாறு செய்வதற்கு அவன் சக்தியுள்ளவன்.
( وَالثَّالِثَةُ أَنَّ
اللّٰهَ يُؤجِرُنِي بِهَا يَومَ القِيَامَة ) மூன்றாவது: இந்தத் துன்பத்திற்கு அல்லாஹ் மறுமையில் நற்கூலி
வழங்குவான். நூல்:- தஸ்ஹீலுல் மனாஃபிஉ
இவ்வாறே எதிர்காலத்தைப் பற்றி கவலைப்பட்டு இப்படி ஆகிவிடுமோ, அப்படி ஆகிவிடுமோ என சிந்திக்கவும் கூடாது. நிச்சயமாக
அல்லாஹ் நன்மையை செய்வான் என நம்பவேண்டும்.
எண்ணப்படி
(இறைவன்) அவனை சோதித்து அவனுடைய பொருளை அவனுக்குக் குறைத்துவிட்டால், எனது இறைவன் என்னை இழிவுபடுத்தி விட்டான் என்று
(மனிதன் குறை) கூறுகின்றான். திருக்குர்ஆன்:- 89:16
கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( قَالَ اللَّهُ أَنَا عِنْدَ ظَنِّ عَبْدِي بِي
) அல்லாஹ் கூறுகின்றான்: என் அடியான் என்னைப் பற்றி என்ன நினைக்கிறானோ அதற்கேற்ப அவனிடம்
நான் நடந்து கொள்வேன். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-7505, திர்மிதீ-2310
நம்முடைய இறைவனைக் குறித்து நாம் என்ன எண்ணுகின்றோமோ அதுவாகவே நாம் அவனை காணலாம். அவன் நம்மை ஒருபோதும் கைவிட மாட்டான். நம்மை பாதுகாத்துக் கொள்வான். நம்மீது கருணை காட்டுவான். நம் இறைவனை குறித்த எண்ணங்கள் எதுவாக இருந்தால் அதுவாகவே அவனைக் காணலாம். அதுவே நமது வாழ்வில் நடைபெறும்.
மாறாக, நம்மை அவன் விரும்புவதில்லை. நம்மீது கருணை காட்டமாட்டான். நம்மை கைவிட்டு விடுவான். என்று எண்ணினால் அதுவாகவே அவனை காணலாம் அதுவே ஏற்படும்
பேரறிஞர் இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்களிடம், "அல்லாஹ்வின் மீது நாம் எப்போது தவறான எண்ணம் கொண்டவர்களாக
ஆகின்றோம்?" என்று வினவப்பட்டது.
அதற்கு அன்னார், "நமக்கு (வஸ்வஸா எனும்)
மனதில் ஊசலாட்டம் ஏற்படும்போதும், ஏதேனும் ஆபத்து நேர்ந்துவிடுமோ
என்ற பயத்திலேயே இருக்கும்போதும், (இறைவன் அருளிய) அருட்கொடைகள்
நீங்கி விடுவதை எதிர்பார்க்கும் போதும் கருணையாளன் அல்லாஹ்வின் மீது தவறான எண்ணம் ஏற்பட்டு
விடுகிறது" என்று பதிலளித்தார்கள்.
நமக்கு சோதனை வந்து விட்டால் இறைவன் நம்மை கேவலப்படுத்தி விட்டான் என்றோ நம்மை வெறுத்து விட்டான் என்றோ எண்ணுவது மாபெரும் தவறு என்று விளங்க வேண்டும்.
நாம் சோதனையில் சிக்கிக்கொள்ளும்போது, அல்லாஹுத்தஆலா இதன் மூலம் நம்முடைய பாவங்களை மன்னிப்பதற்காக பரிசோதிக்கிறான்.
அல்லது நம்முடைய அந்தஸ்தை உயர்த்த பரிசோதிக்கிறான் என்றே அல்லாஹ்வின் மீது நல்லெண்ணம்
கொள்ள வேண்டும்.
நோயாளி
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்கள் (நோயுற்றிருந்த) ஒரு கிராமவாசியிடம், அவரை நலம் விசாரிக்கச் சென்றார்கள். அண்ணலார் ஒரு நோயாளியிடம் நலம் விசாரிக்கச் சென்றால் "கவலைப்பட வேண்டாம். இறைவன் நாடினால் (இது உங்கள் பாவத்தை நீக்கி) உங்களைத் தூய்மைப்படுத்திவிடும்" என்று கூறுவார்கள். (தமது அந்த வழக்கப்படியே) அண்ணலார் அக்கிராமவாசிகளிடம், ( لاَ بَأْسَ طَهُورٌ إِنْ شَاءَ اللَّهُ ) "கவலை வேண்டாம் இறைவன் நாடினால் (இது) உங்களைத் தூய்மைப் படுத்தும்" என்று கூறினார்கள்.
இதைக் கேட்ட அந்த கிராமவாசி, "நான் தூய்மை பெற்று விடுவேனா? முடியாது. இதுவோ வயது முதிர்ந்த பெரியவரைப் பிடிக்கின்ற சூடாகிக் கொதிக்கின்ற காய்ச்சலாகும். அது அவரை மண்ணறைகளைச் சந்திக்க வைக்கும்" என்று சொன்னார். உடனே அண்ணலார், ( فَنَعَمْ إِذًا ) "அப்படியென்றால் ஆம். (அப்படித்தான் நடக்கும்.) என்று கூறினார்கள். நூல்:- புகாரி-3616
அதன்படியே அந்த கிராமவாசி அடுத்த நாள் இறந்து போனார். நூல்:- இர்ஷாதுஸ் ஸாரீ
நாம் எந்த நோயில் அகப்பட்டுக்கொண்டாலும் அதற்குரிய சிகிச்சை செய்து கொண்டு என்னுடைய இந்த நோயை என் இறைவன் குணப்படுத்துவான் என்று அல்லாஹைப்பற்றி நல்லெண்ணம் கொள்ள வேண்டும். இதற்கு எதிராக எண்ணக்கூடாது.
பிறர் நம்மிடம் எப்படி இருக்கிறீங்க? என்று நலம் விசாரிக்கும்போது “சோதனைக்கு மேல் சோதனை சொல்லிகொள்ளும்படியாக ஒன்றுமில்லை. ஏதோ இருக்கிறேன்” என்று சலிப்புடன் கூறுவது, நாம் அல்லாஹ்வின் மீது தவறான எண்ணம் கொண்டதாக ஆகிவிடும். அவ்வாறு சொல்லக்கூடாது. அல்லாஹ் இவரை இப்படி சோதிக்கிறானே! அல்லாஹ்வுக்கு இரக்கம் இல்லையா? என்று பிறர் உள்ளத்தில் அல்லாஹ்வைப்பற்றி தவறான எண்ணங்கள் ஏற்பட நாம் காரணமாகிவிடக்கூடாது.
மாறாக, “நான் அல்லாஹ்வின் பேரருளாலும், கண்ணியத்தாலும் மிகவும் சிறப்பாக இருக்கிறேன்” என்று அல்லாஹ்வின் மீது நல்லெண்ணம் கொண்டு அழகான வார்த்தைகளை பிறரிடம் சொல்ல வேண்டும். அதன்மூலம் நாம் அல்லாஹ்வின் மீது நல்லெண்ணம் கொண்டுள்ளோம் என்று பிறருக்கு புரிய வைக்க வேண்டும். நாம் சொல்லும் வார்த்தையின் மூலம் பிறர் உள்ளத்திலும் அல்லாஹ்வைப்பற்றி நல்லெண்ணம் ஏற்படவேண்டும். நமது சோதனைக் காலத்திலும்கூட இவ்வாறான வார்த்தைகளைச் சொல்லும்போது இறைவன் நமது சோதனைகளை நீக்கக்கூடும்.
நம்முடைய வியாபாரத்தில் அல்லது தொழில் துறையில் ஏதேனும் நஷ்டம் ஏற்பட்டு விட்டாலும்கூட, எனது இறைவன் எனக்கு மீண்டும் செழிப்பான வாழ்க்கையைத் தருவான் என்றும், இழந்ததையெல்லாம் மீட்டித்தருவான் என்றும் இறைவன் மீது நல்லெண்ணம் வைக்க வேண்டும்.
பாவமன்னிப்பு தேடினால்
என்னுடைய அருட்கொடை அனைத்தையும்விட மிக விரிவானது. திருக்குர்ஆன்:- 7:156
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஓர் அடியார் ஒருபாவம் செய்துவிட்டார். பிறகு
"இறைவா! நான் ஒரு பாவம் செய்து விட்டேன். எனவே, என்னை மன்னித்து விடுவாயாக" என்று பிரார்த்தித்தார்.
உடனே அவரின் இறைவன். "என் அடியான் எனக்கோர் இறைவன் இருக்கிறான் என்றும்,
அவன் பாவங்களை மன்னிப்பான்.
(அல்லது) அதற்காகத் தண்டிப்பான் என்றும் அறிந்துள்ளானா? (நல்லது) நான் என் அடியானை மன்னித்துவிட்டேன்"
என்று சொன்னான்.
பிறகு அந்த அடியார் (சிறிது காலம்) அல்லாஹ் நாடிய வரை அப்படியே இருந்தார். பிறகு
மீண்டும் ஒரு பாவத்தைச் செய்தார். அப்போது அந்த மனிதர் (மீண்டும்) "என் இறைவா!
நான் மற்றொரு பாவம் செய்து விட்டேன். எனவே, என்னை மன்னித்து விடுவாயாக" என்று பிரார்த்தித்தார்.
உடனே இறைவன் (இம் முறையும்) "என் அடியான் தனக்கோர் இறைவன் இருக்கிறான் என்றும்,
அவன் பாவங்களை மன்னிப்பான்.
(அல்லது) அதற்காகத் தண்டிப்பான் என்றும் அறிந்துள்ளானா? (நல்லது) நான் என் அடியானை மன்னித்துவிட்டேன்"
என்று சொன்னான்.
பிறகு அல்லாஹ் நாடிய வரை அந்த மனிதர் அப்படியே (சிறிது காலம்) இருந்தார். பிறகும்
(மற்றொரு) பாவம் செய்தார். (இப்போதும் முன்பு போன்றே) "என் இறைவா! நான் இன்னொரு
பாவம் செய்து விட்டேன். எனக்காக அதை மன்னித்து விடுவாயாக" என்று பிரார்த்தித்தார்.
அதற்கு அல்லாஹ் "என் அடியான் தனக்கோர் இறைவன் இருக்கிறான் என்றும், அவன் பாவங்களை மன்னிப்பான். (அல்லது) அதற்காகத்
தண்டிப்பான் என்றும் அறிந்துள்ளானா? (அப்படியானால்) நான் என் அடியானை மூன்று முறையும் மன்னித்து விட்டேன். இனி அவன்
நாடியதைச் செய்து கொள்ளட்டும்" என்று சொன்னான். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-7507
நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஓர் அடியான் ஒரு பாவத்தை எண்ணி ஒரு முறை பாவமன்னிப்பு தேடினால், அப்போது அல்லாஹுத்தாஆலா, "என் அடியான் ஒரு முறை பாவ மன்னிப்பு கேட்டுவிட்டான். இனிமேல் அவனை மன்னிக்காமல் இருப்பதற்கு எனக்கு வெட்கமாக உள்ளது" என்று வானவர்களிடம் கூறுகின்றான்.
சுருங்கக்கூறின், நாம் அறிந்தோ அல்லது அறியாமலோ பாவமிழைத்துவிட்ட பின்னர், “இறைவா! இனிமேல் இந்த பாவச்செயலில் ஈடுபடமாட்டேன் என்றும் என்னுடைய பாவங்களையும் மன்னித்து எனக்கும் சொர்க்க வாழ்க்கையை தருவாயாக!” என்றும் அல்லாஹ்வின் மீது நல்லெண்ணம் கொண்ட மனநிலையில் பிரார்த்திக்க வேண்டும்.
பாவம் செய்வது மனிதன் அதற்காக வெட்கப்படுவது அல்லாஹுத்தஆலா என்பது இங்கே கவனிக்கத்தக்கது.
மறுமை நாளில்
உங்களுடைய இறைவன் மிக விசாலமான அன்புடையவன் தான். திருக்குர்ஆன்:- 6:147
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. மறுமை நாளில் ஒரு மனிதர் நரகத்திற்கு இழுத்து வரப்படுவார். அவர், ( يَا رَبِّ مَا كَانَ هَذَا الظَّنُّ بِكَ ) "இறைவா! உன்னை பற்றி இவ்வாறு நான் நினைத்திருக்கவில்லை" என்று கூறுவார். இறைவன், ( فَمَا كَانَ ظَنُّكَ ) "(என்னைப் பற்றி) நீ எத்தகைய எண்ணம் கொண்டிருந்தாய்?" என்று கேட்பான்.
அவர், ( أَنْ تَسَعني رَحْمَتُكَ ) "உன் அருள் என் விஷயத்தில் விசாலமாக இருக்கும்" என்றே கருதினேன் என்பார். அப்போது இறைவன், ( أَرْسِلُوا عَبْدِي ) "என் அடியாரை விடுவித்து விடுங்கள்" என்று உத்தரவிடுவான். நூல்:- தஃப்சீர் தபரீ, தஃப்சீர் இப்னு கஸீர் அல்ஃபுர்கான் வசனம்-12
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஓர் அடியான் நரகத்தில் "யா ஹன்னான், யா மன்னான்" (பரிவுமிக்கவனே! பெருங்கொடையாளனே!) என்று ஆயிரம் ஆண்டுகள் அல்லாஹ்வை அழைத்துக் கொண்டு இருப்பான். அப்போது அல்லாஹுத்தஆலா வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்களிடம், ( اِذْهَبْ فَآتِنِي بِعَبْدِي هَذَا ) "நீர் சென்று என்னுடைய இந்த அடியான் (நரகத்தில்) இன்ன இடத்தில் இருக்கிறான் அவனை என்னிடம் அழைத்து வாரும்" என்று கட்டளையிடுவான். ஜிப்ரீல் (அலை) அவர்கள் அவனை அல்லாஹ்வின் சமூகத்தில் கொண்டு வந்து நிறுத்துவார்கள்.
அவனிடம் அல்லாஹ், ( يَا عَبْدِي، كَيْفَ وَجَدْتَ مَكَانَكَ وَمَقِيلَكَ؟ ) "அடியானே! உனது தங்குமிடமும் ஓய்விடமும் எவ்வாறு உள்ளது?" என வினவுவான். அந்த அடியான், "என் இறைவா! அது மிகவும் மோசமான தங்குமிடமாகவும் ஓய்விடமாகவும் உள்ளது" என்று கூறுவான்.
அல்லாஹ், ( رُدُّوا عَبْدِي ) "என் அடியானை (நரகத்திற்கே) திரும்ப கொண்டு செல்லுங்கள்" என கட்டளையிடுவான். அந்த அடியான், ( يَا رَبِّ، مَا كُنْتُ أَرْجُو إِذْ أَخْرَجَتْنِي مِنْهَا أَنْ تَرُدَّنِي فِيهَا! فَيَقُولُ ) "என் இறைவா! நீ என்னை அந்த நரகத்தில் இருந்து வெளியேற்றியபோது மறுபடியும் அங்கு என்னைத் திருப்பி அனுப்புவாய் என்று நான் எதிர்பார்க்கவில்லை" என்று கூறுவான். வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், ( دَعَوْا عَبْدِي ) "என் அடியானை விட்டுவிடுங்கள்" என்று கூறி விடுவான். அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்னத் அஹ்மத், முஸ்னத் அபீயஃலா, தஃப்ஸீர் இப்னு கஸீர் அல்ஃபுர்கான் வசனம்-66
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களிடம் ஒருவர் வந்து, "மறுமை நாளில் மனிதர்களிடம் யார் கணக்கு வழக்கு கேட்பார்?"
என்று வினவினார். அன்னார்,
"அல்லாஹ்" என்றார்கள்.
அரபுப் பழங்குடி இனத்தவரான அவர், "கஅபாவின் இறைவன் மீது சத்தியமாக! நாம் தப்பித்து விடுவோம்" என்று கூறி நிம்மதியடைந்தார்.
ஹம்மாது பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். மறுமையில் என்னிடம் இப்படியொரு விருப்பம் தரப்பட்டால் அதாவது உங்கள் செயல்கள் பற்றி விசாரிக்க நீதிபதியாக உங்கள் பெற்றோர் இருப்பதை விரும்புவீர்களா? அல்லது உங்கள் இறைவன் இருப்பதை விரும்புவீர்களா? என்று வினவப்பட்டால், என்னுடைய செயல்களை பற்றி விசாரிக்கும் நீதிபதியாக என்னுடைய இறைவனை நியமிக்கப்படுவதையே விரும்புவேன்" என்றார்கள்.
மரண நேரத்தில்
(நபியே) நிச்சயமாக உம்முடைய இறைவன் மனிதர்கள் மீது அருளுடையவன் ஆவான். திருக்குர்ஆன்:-
27:73
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ் கருணையை நூறு வகைகளாகப் படைத்தான்.
அவற்றில் ஒரு வகையைத் தன் படைப்புகள் அனைத்துக்கும் வழங்கினான். ஜின்கள், மனிதர்கள், விலங்குகள் உட்பட அனைத்தும் அந்த ஒரு கருணையின்
மூலம் தான் தங்களிடையே அன்பைப் பரிமாறிக் கொள்கின்றன. மீதியுள்ள தொண்ணூறு ஒன்பது வகைகளைத்
தன்னிடமே வைத்துக் கொண்டான். அறிவிப்பாளர்:- ஜுன்துப் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள்
நூல்:- முஸ்னத் அஹ்மது தஃப்சீர் இப்னு கஸீர் அல்அஃராஃப் வசனம்-156
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لَا يَمُوتَنَّ أَحَدُكُمْ إِلَّا وَهُوَ يُحْسِنُ بِاللهِ الظَّنَّ ) உங்களில் எவரும் அல்லாஹ்வின் மீது நல்லெண்ணம் கொள்ளாமல் மரணிக்க வேண்டாம். அறிவிப்பாளர்:- ஜாபிர் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-5116
யூனுஸ் பின் மைசரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது. நாங்கள் யஸீத் பின் அஸ்வத் என்பவரை
நோய் விசாரிக்க சென்றிருந்தோம். அப்போது வாசிலா பின் அஸ்கஉ (ரலி) அவர்கள் அங்கு வந்தார்கள்.
அன்னாரை பார்த்ததுமே, யஸீத் தமது கைகளால் அன்னாரின் கையில் பிடித்து அதை தமது நெஞ்சிலும்
முகத்திலும் தடவிக் கொண்டார். அன்னார் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் திருக்கரம் பற்றி
(பைஅத் எனும்) உறுதி பிரமாணம் செய்து உள்ளார்கள் என்பதனால் இவ்வாறு செய்தார்.
அப்போது வாசிலா (ரலி) அவர்கள் யஸீதிடம், ( یَا یَزِیدُ کَیفَ ظَنُّكَ بِرَبِّكَ ) "உமது ரப்பின் விஷயமாக
நீர் என்ன நினைக்கிறீர்?" என்று கேட்டார்கள்.
அதற்கு அவர், ( حَسَنٌ )
"(அவன் என்னை மன்னிப்பான் என்று)
நல்லெண்ணம் வைத்துள்ளேன்" எனக் கூறினார்.
உடனே வாசிலா (ரலி) அவர்கள், ( يقول الله -عزَّ وجل-: أَنَا عِندَ ظَنِّ عَبدِي بِي، إِنَّ ظَنَّ خَيْرًا فَخَيْرٌ، وَإِنَّ ظَنَّ شَرًّا فَشَرٌّ ) "எனது அடியான் என்னைப் பற்றி எவ்வாறு நினைக்கிறானோ அவ்வாறே நடந்து கொள்வேன். என்னைப் பற்றி நல்லெண்ணம் வைத்தால் நானும் அப்படியே செய்வேன். என்னைப்பற்றி தீய எண்ணம் கொண்டால் நானும் அப்படியே செய்வேன் என்று அல்லாஹ் கூறுவதாக அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்" என்றார்கள். நூல்:- அல்ஹில்யா, ஹயாத்துஸ் ஸஹாபா பாகம்-2, பக்கம்-654
பல நபித்தோழர்களையும், நல்லோர்களையும் கொலை செய்த சர்வாதிகாரி ஹஜ்ஜாஜ் பின் யூசுஃபின் மரண நேரத்தில்
அவரது தாயார், “மகனே! உன்னுடைய வாழ்நாளில் பல பாவங்களை செய்துள்ளாய்.
இப்போது உன்னுடைய இறைவனைப்பற்றி எவ்வாறு எண்ணுகிறாய்?” என்று வினவினார். அதற்கு ஹஜ்ஜாஜ், "தாயே! அல்லாஹுத்தஆலா என்னையும் மன்னிப்பான் என்றே
எண்ணுகிறேன்" எனக் கூறினார்.
பேரறிஞர் அஹ்மத் பின் ஹம்பல் (ரஹ்) அவர்கள் மரண வேளையில் தங்களுடைய மகனை அழைத்து, "அல்லாஹ்வின் மீது நல்லெண்ணத்தை அதிகரிக்கச்செய்யும் நபிமொழிகளை எனக்கு படித்து காட்டுவாயாக!" என்று கூறினார்கள்.
அல்லாஹ்வின் மீதுள்ள அச்சத்தையும் ஆதரவையும் தனித்தனியாக விளங்கி, அச்சம் கொள்ள வேண்டிய நேரத்தில் அச்சப்பட வேண்டும். ஆதரவு வைக்க வேண்டிய நேரத்தில் ஆதரவு வைக்க வேண்டும். குறிப்பாக மரண நேரத்தில் அல்லாஹ்வுடைய அருளின் மீது ஆதரவு வைத்தல் அல்லாஹ்வின் மீது நல்லெண்ணம் கொள்ளுதல் அதிகமாக இருக்க வேண்டும்.
நாம் வாழும்போதும் அல்லாஹ் மீது நல்லெண்ணம் கொண்டவர்களாக வாழ்ந்து, இறக்கும்போதும் அல்லாஹ் மீது நல்லெண்ணம் கொண்டவர்களாக இறப்போமாக!
மேலும், நாம், எதிர்வரும் ரமளானை அடைந்து அதில் அனைத்து வகையான நல்லறங்களும் புரிந்து, அல்லாஹ்வின் அன்பைப் பெறும் நல்வாய்ப்பை வல்லோன் அல்லாஹ் நம் அனைவருக்கும் வழங்குவான் என்று அந்த அல்லாஹ்வின்மீது நல்லெண்ணம் கொண்டு, புனிதமிகு ரமளானை எதிர்பார்த்திருப்போமாக! ஆமீன்!
மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ
இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951
No comments:
Post a Comment