உழவில்லையேல் உணவில்லை!
أَفَرَأَيْتُمْ مَا تَحْرُثُونَ
أَأَنْتُمْ تَزْرَعُونَهُ أَمْ نَحْنُ الزَّارِعُونَ لَوْ نَشَاءُ لَجَعَلْنَاهُ حُطَامًا
நீங்கள் விதைக்கின்ற இந்த விதையைப் பற்றி (எப்போதாவது) நீங்கள் சிந்தித்ததுண்டா? இதன் மூலம் பயிர்களை நீங்கள் விளைவிக்கின்றீர்களா? அல்லது நாம் விளைவிக்கின்றோமா? நாம் நாடினால் இவற்றை பதற்களாய் ஆக்கிவிட்டிருப்போம். திருக்குர்ஆன்:- 56:63, 64, 65
டிசம்பர் 23 உலக விவசாயிகள் தினம்
விவசாயம் மனிதன் வாழ்வதற்கு மட்டுமின்றி உயிரினங்கள் அனைத்துக்கும் தேவையான ஒன்றாகும். எனவே தான், இறைவன் விவசாயத்தைத் தன் அருட்கொடைகளில் ஒன்றாக குறிப்பிடுவான்.
விவசாயத்தின் மூலம் மனிதர்களும் மற்ற உயிரினங்களும் பலன்களைப் பெறுவதுடன் நீர் வளம், நில வளம் பெருகுவதற்கும் அது காரணமாக அமைந்துள்ளது. எனவே, விவசாயம் செய்பவர் பல்லுயிர்க்கும் உதவி செய்பவராக ஆகிவிடுகிறார்.
விவசாயத்தால் உடலுழைப்பும் மக்களுக்கு உபகாரம் செய்கின்ற உயர்ந்த பண்பும் ஏற்படுவதுடன், அல்லாஹ்வின் பரந்து விரிந்த கருணையையும், அவனுடைய அளப்பரிய ஆற்றலையும் அறிவையும் சிறிதளவு விளங்குகின்ற ஞானமும் கிடைக்கப் பெறுவதால், அது பொருளீட்டுவதற்கு சிறந்த வழியாக கூறப்பட்டுள்ளது. விவசாயமோ வியாபாரமோ எதுவாயினும் இஸ்லாமிய சட்டங்களைப் பேணிப் பொருளீட்டினால் அது உலகத்திற்கே நன்மை பயக்கக் கூடியதாக ஆகிவிடும்.
மக்காவைச் சுற்றி பல நகரங்கள் இருந்தபோதும் அல்லாஹ், அண்ணல் நபி (ஸல்) அவர்களை விவசாய பூமியாக விளங்கிய மதீனா நகருக்கே புலம்பெயர்ந்து செல்லுமாறு ஆணையிட்டான். காரணம், அண்ணலார் விவசாயத்தின் அவசியத்தை அறிந்து, அகிலத்தாருக்கும் அதனை அறிவிக்கவேண்டும் என்பதற்காகத்தான்.
மேகத்திலிருந்து மிக பாக்கியமுள்ள மழையை நாம் பொழியச் செய்து, அதைக் கொண்டு பல சோலைகளையும் (விவசாயிகள்) அறுவடை செய்யும் தானிய மணிகளையும் உற்பத்தி
செய்கின்றோம். திருக்குர்ஆன்:- 50:9
நிலத்தை உழுது பண்படுத்தி, விதை விதைத்து, நாற்று நட்டு, நீர்பாய்ச்சி, களை எடுத்து வேளாண்மை வேலைகளை முறையாகவும் சரியாகவும் செய்வது தான் மனிதனின் வேலை. அதனை உற்பத்தி செய்து, வெளிப்படுத்தி, உணவுப் பொருட்களாக ஆக்கித் தருவது அல்லாஹ்வின் சக்தியிலும் அவன் நாட்டத்திலும் உள்ளது. வேளாண்மை செய்வதிலும் முழுமையான நம்பிக்கை அவன் மீதே இருக்க வேண்டும் என்பதை தான் மேற்காணும் திருவசனங்கள் தெளிவுபடுத்துகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَا مِنْ مُسْلِمٍ يَغْرِسُ غَرْسًا أَوْ يَزْرَعُ زَرْعًا فَيَأْكُلُ مِنْهُ طَيْرٌ أَوْ إِنْسَانٌ أَوْ بَهِيمَةٌ إِلاَّ كَانَ لَهُ بِهِ صَدَقَةٌ ) முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு அல்லது விதையை விதைத்து விவசாயம் செய்து, அதிலிருந்து (அதன் விளைச்சலை அல்லது காய்கனிகளை) ஒரு பறவையோ, ஒரு மனிதனோ, ஒரு பிராணியோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்கும். அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-2320, முஸ்லிம்-3164
முஸ்லிம் (3159) நூலின் மற்றொரு அறிவிப்பில் “அதிலிருந்து களவாடப்பட்டதும் அவருக்கு தர்மமாக அமையும்” என்று வருகிறது.
இறைத்தூதர்கள் பார்வையில்...
சல்மான் அல்பார்சீ (ரலி) அவர்கள் கூறியதாவது. (நான் ஒருவருக்கு அடிமையாய் இருந்தேன். அப்போது ஒருநாள்) கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் என்னிடம் ( كَاتِبْ يَا سَلْمَانُ ) "சல்மானே! (அடிமைத்தளையிலிருந்து விடுபட) விடுதலைப் பத்திரம் எழுதி வாங்கிக் கொள்" என்றார்கள். நான், என் எஜமானரிடம் 300 பேரீச்சம் மரக்கன்றுகளை நட்டு அவற்றை உயிர்ப்பித்து விளைவித்துத் தருகிறேன்; மேலும் நாற்பது ஊக்கியா (40×126.8=5360 கிராம்) தங்கமும் தருகிறேன்" எனக் கூறி விடுதலை பத்திரம் எழுதி வாங்கினேன். இதை அறிந்த அண்ணலார் தம் தோழர்களிடம், ( أَعِينُوا أَخَاكُمْ ) "உங்கள் சகோதரருக்கு உதவுங்கள்" என்று கூறினார்கள். தோழர்கள் அவரவர்கள் தங்கள் சக்தி தகுந்தாற்போல் பேரிச்ச மரக்கன்றுகள் கொடுத்து உதவினர். முடிவில் எனக்கு முன்னூறு மரக்கன்றுகள் சேர்ந்து விட்டன.
அப்போது அண்ணலார், ( اِذْهَبْ
يَا سَلْمَانُ فَفَقِّرْ لَهَا فَإِذَا فَرَغْتَ فَائْتِنِي أَكُنْ أَنَا أَضَعُهَا
بِيَدِي ) "சல்மானே! நீ சென்று அவற்றிற்கு குழித் தோண்டு. அவற்றைத்
தோண்டி முடித்ததும் என்னிடம் வா. நான் அவற்றை எனது கரத்தால் நடுகிறேன்" என்று
கூறினார்கள். நானும் மற்ற தோழர்களும் சேர்ந்து குழித்தோண்டி முடித்ததும் அண்ணலாரிடம்
தெரிவித்தேன். பிறகு அண்ணலார் தமது திருக்கரத்தால் மரக்கன்றுகளை நட்டு முடித்தார்கள்.
அல்லாஹ்வின் மீதாணையாக! அவற்றில் ஒரு மரக்கன்றுகூட அழிந்து போகவில்லை. முன்னூறு மரக்கன்றையும்
(நட்டு விளைத்து) என் எஜமானருக்கு நிறைவேற்றினேன். அதன்பிறகு அண்ணலார் என்னிடம் கோழி
முட்டை அளவு போன்று (நாற்பது ஊக்கி) தங்கம் கொடுத்தார்கள். நான் அதைக்கொண்டு போய் என்
எஜமானரிடம் கொடுத்து விடுதலைப் பெற்றேன். நூல்:-
அல்பிதாயா வந்நிஹாயா
நபி ஆதம் (அலை) என்ற முதல் மனிதரே ஒரு விவசாயிதான். அன்று
தொடங்கிய விவசாயத் தொழில் இறுதிநாள் வரை தொடரும் என்பதில் ஐயமில்லை. அது
அல்லாஹ்வின் அடிப்படை நியதி.
தொடக்கக்
காலத்தில், முதல் நாள் பயிரிட்டால் மறுநாள் அறுவடை
செய்யலாம் எனக் காலத்தைச் சுருக்கி வைத்திருந்தான் இறைவன். காலம் செல்லச் செல்ல
காலம் விரிந்தது. மூன்று முதல் நான்கு மாதங்கள் அறுவடை செய்யக் காத்திருக்க
வேண்டிய நிலை உருவானது.
இறைத்தூதர் யூசுஃப் (அலை) அவர்கள் நாட்டில் எதிர்வரும் வறுமையை சமாளிக்க தன்னை வேளாண்மைத்துறை அமைச்சராக நியமிக்கும்படி கேட்டுக்கொண்டார்கள் என திருக்குர்ஆன் (12:55) இயம்புகிறது.
எகிப்து நாட்டில் யூசுஃப் (அலை) அவர்கள் வேளாண்மைத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு, விவசாயத்தை முறையாக செய்து அதில் வரும் தானியங்களை முறையாக பாதுகாத்து எதிர் வந்த ஏழாண்டு கால கடும் பஞ்சத்தால் நிகழ்ந்த வறுமையை சமாளித்தார்கள் என்பதை திருக்குர்ஆனின் யூசுஃப் அத்தியாயம் விவரிக்கிறது.
இறைத்தூதர் சுலைமான் (அலை) அவர்கள் காலத்தில் ஒருவருடைய ஆடுகள் மற்றொருவருடைய விவசாயத்தில் மேய்ந்து நாசமாக்கி விட்டது. இதைப்பற்றி அந்த விவசாயி சுலைமான் (அலை) அவர்களிடம் முறையிட்டார். அப்போது நபியவர்கள், ஆடுகளுக்குரியவர் நாசமாகிவிட்ட விவசாயத்தை மீண்டும் பசுமையாக்கி தரவேண்டும். அதுவரை அந்த ஆடுகள் அந்த விவசாயியிடம் தான் இருக்கும்" என்று ஓர் அழகான தீர்ப்பு வழங்கியதைப்பற்றி திருக்குர்ஆன் (21: 78,79) இயம்புகிறது.
இந்நிகழ்வு, விவசாயம் செழித்தோங்க வேண்டும் என்பதில் சுலைமான் (அலை) அவர்களுக்கு இருந்த அக்கறையை எடுத்துரைக்கிறது.
ஆம்! நாட்டில் ஏற்படும் வறுமையைப் போக்க, நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல, விவசாயம் செழித்தோங்கி, அதன்மூலம் விளைந்த உணவுபொருட்கள் முறையாக பாதுகாக்கப்பட்டு, மக்களுக்கு முறையாக விநியோகிப்பட வேண்டும்.
விவசாயத்தில் புரட்சி
தல்ஹா பின் உபைதுல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது. பேரிச்ச மரங்கள் உள்ள தோட்டத்தில் கடந்து சென்ற அருமை நாயகம் (ஸல்) அவர்களுடன் நானும் சென்றேன். மரங்களின் மேலிருந்து விவசாயிகள் மகரந்தச்சேர்க்கை செய்துகொண்டிருந்தார்கள். அப்போது அண்ணலார், ( مَا يَصْنَعُ هَؤُلاَءِ ) "இவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?" என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், "பெண் மரங்களுடன் ஆண் மரங்களை இணைத்து ஒட்டுச் சேர்க்கை செய்து (பெண் மரங்களை) சூல்கொள்ளச் செய்கின்றனர்" என்று கூறினர். அப்போது அண்ணலார், ( مَا أَظُنُّ ذَاكَ يُغْنِي شَيْئًا ) "இதனால் பயனேதும் ஏற்படும் என நான் கருதவில்லை" என்று கூறினார்கள்.
அண்ணலார் இவ்வாறு கூறியதைப் பற்றி (மதீனா விவசாயிகளிடம்) தெரிவிக்கப்பட்ட போது, அவர்கள் ஒட்டு சேர்க்கை செய்வதை விட்டுவிட்டனர். மரங்களிலிருந்து இறங்கிவிட்டனர். (அந்த ஆண்டில் அவர்களுக்கு விளைச்சல் பாதிக்கப்பட்டது) இது குறித்து அண்ணலாருக்குச் செய்தி எட்டியது. அப்போது அண்ணலார், ( إِنَّمَا هُوَ ظَنٌّ إِنْ كَانَ يُغْنِي شَيْئًا فَاصْنَعُوهُ فَإِنَّمَا أَنَا بَشَرٌ مِثْلُكُمْ وَإِنَّ الظَّنَّ يُخْطِئُ وَيُصِيبُ ) "அவ்வாறு செய்வதனால் அவர்களுக்குப் பயன் ஏற்படுமானால் அவ்வாறு செய்து கொள்ளட்டும். ஏனெனில் நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான். யூகம் தவறாகவும் ஆகலாம்; சரியாகவும் ஆகலாம்" என்று கூறினார்கள். நூல்:- முஸ்லிம்-4711, இப்னுமாஜா-2461, முஸ்னது அஹ்மத்
இது மதீனாவாசிகள் செய்தது ஒரு விவசாய நடைமுறை. ஒரே இனத்தைச் சேர்ந்த இரு செடிகளின்
தண்டுகளை, அல்லது இரு மரங்களின்
கிளைகளைப் பக்கவாட்டில் சீவிவிட்டு, ஒன்றின்மேல் மற்றொன்று பொருந்தி வளரும்படிச் செய்து வீரிய இனத்தை உருவாக்குதல் என்பதே மதீனாவாசிகள் கையாண்ட முறையாகும். இதை அரபியில்
"தல்கீஹ்" அல்லது "தஃபீர்" என்பர்.
அல்லாஹ் நாடினால், இதைச் செய்யாமலேயே
நல்ல விளைச்சல் தர முடியுமே என்று அண்ணலார் கருதியிருக்கலாம். விவசாயத் துறையில் அண்ணலாருக்கு
முன் அனுபவம் இருந்ததில்லை. பின்னர் தோழர்கள் விளைச்சல் குறைந்ததைச் சுட்டிக்காட்டிய
பின்னர் தமது கருத்தை மாற்றிக்கொண்டு, இதுவொன்றும் அல்லாஹ் சொன்ன உத்தரவன்று; என் சொந்தக் கருத்துதான் என்பதைத் தெளிவுபடுத்தினார்கள்.
நூல்:- தக்மிலா
விதைகள் விதைத்த பிறகு அதன்மூலம் பலன்பெற சில மாதங்கள் காத்திருக்க வேண்டும். இது
இறைவனின் நியதி. ஆனால் மனிதன் அவனது அவசரப் புத்தியால் குறுகிய
நாட்களுக்குள் நிறைய பலன் பெற வேண்டும் என்றெண்ணி, விவசாயத்தில் புரட்சி
செய்கிறோம் என்று சொல்லி கொண்டு மரபணு மாற்று விதைகளை கண்டுபிடித்தான். அதன் மூலம்
அவனது நோக்கம் நிறைவேறுகிறது.
சிறிய அளவில் இருக்கும் காய்கறி மற்றும் பழங்களை பெரிய அளவில் விளைவிப்பதற்காகவும், அதன் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்காகவும் மரபணு
மாற்று விதைகள் பயன்படுத்தப்படுகிறது. இதனால் காலப்போக்கில் நிலம்
பாழ்பட்டு, மலட்டுத்தன்மை அடைந்துவிடும் என்பதே உண்மை. மீண்டும் அந்த நிலத்தில் இயற்கை
முறையில் விவசாயம் செய்வது சிரமமாகிவிடும்.
இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பலவிதமான நோய்களுக்கு ஆட்படுவதற்கு,
மரபணு மாற்று விதைகள் மூலம் விளைந்த உணவுபொருட்களை உண்ணுவதே காரணம் என ஆய்வாளர்கள்
தெரிவித்துள்ளனர்.
நெல், கத்தரிக்காய், தக்காளி, கடுகு, வாழைப்பழம், பப்பாளிப்பழம் போன்ற அத்தியாவசிய உணவு பொருட்கள் மரபணு மாற்று விதைகள் மூலம் விளைவிக்கப்பட்டு, அந்த உணவு பொருட்கள் சந்தையில் அமோகமாக விற்பனையாகிக்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதை விவசாய வளர்ச்சி என்பதா? அல்லது விவசாய அழிவு என்பதா?
அனுமதி உண்டு
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ أَمْسَكَ كَلْبًا فَإِنَّهُ يَنْقُصُ كُلَّ يَوْمٍ مِنْ عَمَلِهِ
قِيرَاطٌ إِلاَّ كَلْبَ حَرْثٍ أَوْ مَاشِيَةٍ ) எவர் நாய் வைத்திருக்கிறாரோ
அவரது நற்செயல்களில் இருந்து ஒவ்வொரு நாளும் ஒரு "கீராத்" அளவுக்கு (அவற்றின்
நன்மை) குறைந்து போய்விடும்; விவசாய பண்ணையையோ
கால்நடைகளையோ (திருடு போய் விடாமல்) பாதுகாப்பதற்காக வைத்திருக்கும் நாய்களைத் தவிர.
அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-2322, முஸ்லிம்-3211
இஸ்லாத்தில் நாய் வளர்ப்பது தடை செய்யப்பட்டதாகும். என்றாலும், விவசாயிகளின் பாதுகாப்பு நலன் கருதி விவசாயப் பண்ணைகளில்
நாய் வளர்த்துக்கொள்ளலாம் என இஸ்லாம் இயம்புகிறது. அதாவது விவசாய விஷயத்தில் ஹராம்,
ஹலால் ஆகின்றது.
சொர்க்கத்திலும் தொடரலாம்
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது ஒருமுறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "சொர்க்கவாசிகளில் ஒரு மனிதர், தம் இறைவனிடம் விவசாயம் செய்ய அனுமதி கேட்பார். அதற்கு இறைவன் அவரிடம், ( أَلَسْتَ فِيمَا شِئْتَ ) "நீ விரும்பிய (இன்பமான) நிலையில் (இப்போது) நீ வாழ்ந்து கொண்டிருக்கவில்லையா?" என்று கேட்பான். அதற்கு அவர், ( بَلَى وَلَكِنِّي أُحِبُّ أَنْ أَزْرَعَ ) “ஆம். (நான் விருப்பப்படியே இன்பமான நிலையில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.) ஆனால், நான் நிலத்தை உழுது பயிரிட விரும்புகிறேன்" என்று கூறுவார். (இறைவனும் அவருக்கு அனுமதியளிப்பான்.)
அந்த மனிதர் விதை தூவி விடுவார். கண் இமைக்கும் நேரத்திற்குள் அந்தப் பயிர் வளர்ந்து
முதிர்ந்து அறுவடைக்குத் தயாராகி விடும்; மலைகளைப் போல் விளைந்து குவிந்து விடும். அப்போது இறைவன், ( دُونَكَ يَا ابْنَ آدَمَ فَإِنَّهُ لاَ يُشْبِعُكَ شَيْءٌ )
"எடுத்துக் கொள் ஆதமின் மகனே!
உன்னை எதுவுமே திருப்திப்படுத்தாது" என்று கூறுவான். (அந்த சபையில் இருந்து இதைச்
செவியுற்ற) ஒரு கிராமவாசி, "அல்லாஹ்வின் மீதாணையாக!
அந்த மனிதர் குறைஷியாகவோ (மக்காவாசியாகவோ) அன்சாரியாகவோ (மதீனாவாசியாகவோ)தான் இருக்க
முடியும். அவர்கள் தான் விவசாயிகள். நாங்களோ விவசாயிகள் அல்லர்" என்று கூறினார்.
இதைக்கேட்ட அண்ணலார் சிரித்து விட்டார்கள். நூல்:- புகாரீ-2348
விவசாயம் என்பது இந்த உலகத்துடன் முடிந்துவிடக்கூடியதல்ல. விரும்பினால் சொர்க்கத்திலும் தொடரலாம் என விளங்குகிறது.
புன்செய், நன்செய் நிலங்களாக மாறின
கொடி படர்ந்த (தோட்டங்களையும்), கொடி படராத (தோட்டங்களையும்), பேரீச்ச மரங்களையும், பலதரப்பட்ட உணவு தானியங்களையும், (தோற்றத்தில்) ஒன்றுபட்டு (சுவையில்) வேறுபட்ட ஆலிவ் மற்றும் மாதுளை மரங்களையும் அவனே உருவாக்கினான். அவை பலன் தரும் போது, அவற்றின் பலனை உண்டு (அனுபவித்துக்) கொள்ளுங்கள். அவற்றை அறுவடை செய்யும் நாளில் அவற்றுக்கான உரிமையை (ஸகாத்தை) வழங்கி விடுங்கள். விரயம் செய்யாதீர்கள். விரயம் செய்வோரை அவன் நேசிப்பதில்லை. திருக்குர்ஆன்:- 6:42
கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ كَانَتْ لَهُ أَرْضٌ فَلْيَزْرَعْهَا أَوْ لِيَمْنَحْهَا أَخَاهُ
فَإِنْ أَبَى فَلْيُمْسِكْ أَرْضَهُ ) எவரிடம் நிலம் இருக்கிறதோ
அவர் அதைத் தாமே பயிரிடட்டும்; அல்லது அதை தம் முஸ்லிம்
சகோதரர் எவருக்காவது (பிரதிபலன் எதிர்பார்க்காமல் இலவசமாகப் பயிர் செய்யக்) கொடுத்து
விடட்டும். இவ்வாறு செய்ய அவர் மறுத்தால் தமது நிலத்தை அப்படியே (பயிரிடாமல்) வைத்திருக்கட்டும்.
அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-2341, இப்னுமாஜா-2443
நிலம் வைத்திருப்பவர் அவர் அதில் பயிரிட வேண்டும். அல்லது மற்றச் சகோதரருக்கு அந்த நிலத்தை வழங்கி, அவர் பயிர் செய்து பிழைத்துக்கொள்ள வழி வகுக்க வேண்டும் இரண்டும் இல்லாமல் நிலத்தை வீணாகப் போட்டுவைக்கக் கூடாது. இரண்டில் ஒன்றைச் செய்ய மறுத்தால் அவரே வைத்துக்கொள்ளவும் என்று கூறியது, தானும் பலன் அடையாமல் பிறரையும் பலன் பெறவிடாமல் தடுத்து வைத்துக் கொள்வது மிகக் கெட்ட பண்பு என்று அவருக்கு எச்சரிக்கை செய்வதற்காகக் கூறப்பட்டதாகும்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. ( مَنْ أَعْمَرَ أَرْضًا لَيْسَتْ لأَحَدٍ فَهْوَ أَحَقُّ ) "எவர் யாருக்கும் சொந்தமில்லாத ஒரு நிலத்தை பயிரிடுகிறாரோ அதைச் சொந்தமாக்கிக் கொள்ள அவரே அதிக உரிமையுடையவர் ஆவார்" என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
"உமர் (ரலி) அவர்கள் தமது ஆட்சிக்காலத்தில் இதை ஆதாரமாகக் கொண்டே தீர்ப்பளித்தார்கள்" என்று உர்வா (ரஹ்) அவர்கள் கூறினார்கள். நூல் புகாரீ-2335
ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் தமது ஆட்சி காலத்தில் ( مَنْ أَحْيَا أَرْضًا مَيِّتَةً فَهْيَ لَهُ ) "எவர் ஒரு புன்செய் (தரிசு) நிலத்தை (பயிரிட்டு) உயிராக்குகிறாரோ அது அவருக்கே சொந்தம்" என அறிவித்தார்கள். நூல் புகாரீ-2334
“அதே சமயம் விவசாயம் செய்யும் நோக்கத்தோடு நிலத்தைக் கையகப்படுத்தி மூன்றாண்டுகள் ஆன பின்பும் எந்த நடவடிக்கையிலும் இறங்கவில்லை எனில், அரசு அந்நிலத்தை மறுபடியும் பெற்றுக்கொள்ளும்” என்றும் அறிவித்தார்கள். இவ்வறிப்பின் காரணமாகப் புன்செய் நிலங்கள் எல்லாம் வெகு விரைவில் பலனளிக்கும் நன்செய் நிலங்களாக மாறிவிட்டன. நூல்:- அல்ஃபாரூக்
நிலத்தை உயிர்ப்பித்தல் என்பது, அதில் விவசாயம் செய்வது அல்லது மரம் நடுவது அல்லது கட்டிடம் கட்டுவது என்பதாகும்.
இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ள பல நபிமொழிகளின் கருத்து என்னவென்றால், ஒருவரிடம் சிறிதளவு விவசாய நிலம் இருந்தாலும் அதில் பயிர் செய்து தனக்கும் பிறருக்கும் பயனுள்ளதாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்பதுதான்.
குத்தகைக்கு விடுதல்
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கைபர்
பகுதியில் உள்ள நிலங்களை யூதர்களுக்கு, "அவர்கள் அவற்றில் உழைத்து விவசாயம் செய்து கொள்ளலாம்.
அதிலிருந்து கிடைக்கும் விளைச்சலில் பாதி அவர்களுக்குரியது (மீதிப் பாதியை மதீனாவின்
இஸ்லாமிய அரசுக்கு கொடுத்துவிட வேண்டும்)" என்னும் நிபந்தனையின் பேரில் கொடுத்தார்கள்.
நூல்:- புகாரீ-2331, முஸ்லிம்-3153
மரங்கள் உள்ள தோப்பு வைத்திருக்கும் ஒருவர், அதை தம்மால் பராமரிக்க முடியாத நிலையில் இருப்பார். வேறொருவர் தோட்ட வேலைகள் தெரிந்தவராகவும் அதற்கான வாய்ப்பு உள்ளவராகவும் இருப்பார்; அதே நேரத்தில், தோப்பு அவருக்கு இருக்காது. இப்போது இவர்கள் இருவரும் இணைந்தால் இருவருக்கும் நன்மை.
இதனால் தோப்பின் உரிமையாளர் தோட்டவேலை தெரிந்த விவசாயிடம் தோப்பைப் பராமரிக்கும்
பொறுப்பை ஒப்படைப்பார். அவர் மரங்களுக்கு நீர் பாய்ச்சி, அவற்றைச் செப்பனிட்டுப் பராமரித்துப் பாதுகாப்பார்.
கிடைக்கும் பலனில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் அவருக்கு வழங்கப்படும். இவ்வாறு தோப்பைக்
குத்தகைக்கு விடுவதே அல்முசா(க்)காத் ஆகும். இதற்கு 'முஆமலா' என்ற பெயரும் உண்டு. இரு தரப்பின் நன்மையையும் அவசியத்தையும்
கருதி இந்த முறையை மார்க்கம் அனுமதிக்கிறது என்பதே பெரும்பான்மை அறிஞர்களின் கருத்தாகும்.
நூல்:- இர்ஷாதுரஸ் ஸாரீ, தக்மிலா
தவிர்க்க வேண்டும்
ஹுமைத் ப் அபீஹுமைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. அனஸ் (ரலி) அவர்கள், ( أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ بَيْعِ ثَمَرِ النَّخْلِ حَتَّى تَزْهُوَ ) "அருமை நாயகம் (ஸல்) அவர்கள், மரத்திலுள்ள பேரீச்சங் கனிகள் பக்குவம் அடையாத வரை அவற்றை விற்பதற்குத் தடை விதித்தார்கள்" என்று கூறினார்கள். நாங்கள் அனஸ் (ரலி) அவர்களிடம் "பக்குவம் அடைதல் என்றால் என்ன?" என்று கேட்டோம். "அது சிவப்பு நிறத்தையும் மஞ்சள் நிறத்தையும் அடைவதாகும்" என்று கூறிவிட்டு, ( أَرَأَيْتَكَ إِنْ مَنَعَ اللَّهُ الثَّمَرَةَ بِمَ تَسْتَحِلُّ مَالَ أَخِيكَ ) "அல்லாஹ் மரத்திலுள்ள கனிகளைத் தடுத்து விட்டால், நீ எந்த அடிப்படையில் உன் சகோதரரின் பொருளை எடுத்துக் கொள்ள முடியும் சொல்" என்றார்கள். நூல்:- முஸ்லிம்-3167
விவசாயம் செய்வதிலும் அனுமதிக்கப்பட்ட (ஹலாலான) முறையைப் பேண வேண்டும். இக்காலத்தில் அனுமதிக்கப்படாத (ஹராமான) பல வழிமுறைகள் கலந்து செயல்படுத்தப்படுகின்றன. பெரும்பாலோர் அதனை கவனிப்பதே இல்லை. குத்தகை என்ற பெயரில் பிறரிடம் நிலத்தைக் கொடுத்துப் பயிரிடச் செல்வதில் பல தவறான முறைகள் பின்பற்றப்படுகின்றன. குத்தகைக்கு விடுவதில் எந்த முறை கூடும் எது கூடாது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
மா மரம், தென்னை மரம், பலா மரம் போன்றவற்றை, அவற்றில் காய்கள் காய்ப்பதற்கு முன்னதாகவே மூன்று அல்லது நான்கு வருடத்திற்கு குத்தகைக்கு விடுவதும்; குளத்திற்குள் இருக்கும் மீன்களை ஏலம் விடுவதும் பிறரை ஏமாற்றுவது போன்றதாகும். பொருட்கள் கண்முன் இல்லாமல், அவற்றின் மதிப்பீடு தெரியாமல் கொடுக்கல் வாங்கல் செய்வதோ, ஏலம் விடுவதோ கூடாது. இதுவே மார்க்கத் தீர்ப்பாகும்.
அக்கரை வேண்டும்
நிச்சயமாக அல்லாஹ் கொட்டைகளையும் விதைகளையும் பிளக்கிறவன். திருக்குர்ஆன்:- 6:96
ஒரு மனிதர் ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களிடம் வந்து, "எனக்கு சொந்தமான நிலங்கள் சிரியாவில் உள்ளன. அவ்வழியாகச் சென்ற உங்களுடைய படை அதனைச் சீரழித்து விட்டது” என்று முறையிட்டார். உடனடியாக அப்போதே உமர் (ரலி) அவர்கள், அம்மனிதருக்கு பத்தாயிரம் வெள்ளிக்காசுகள் பரிகாரமாக வழங்க ஆணையிட்டார்கள். நூல்:- கிதாபுல் கர்ராஜ் இமாம் அபூயூசுஃப்
ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களுக்கு விவசாயத்தில் இருந்த அக்கரையை மேற்கண்ட நிகழ்வின் மூலம் அறியலாம்.
ஒருமுறை ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் தங்களுடைய மாநில ஆளூநர்களுக்கு, ( اِتَّقُو اللّٰهَ بِالفَلَّاحِ ) "விவசாயிகள் விஷயத்தில் அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்" என்று கடிதம் எழுதினார்கள்.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( فَلاَ يَغْرِسُ الْمُسْلِمُ غَرْسًا فَيَأْكُلَ مِنْهُ إِنْسَانٌ وَلاَ
دَابَّةٌ وَلاَ طَيْرٌ إِلاَّ كَانَ لَهُ صَدَقَةً إِلَى يَوْمِ الْقِيَامَةِ ) ஒரு முஸ்லிம் ஒரு மரத்தை நட்டு அதிலிருந்து ஒரு
மனிதனோ அல்லது ஒரு கால்நடையோ அல்லது ஒரு பறவையோ உண்டால், மறுமை நாள்வரை அது அவருக்கு ஒரு
தர்மமாகவே அமையும். அறிவிப்பாளர்:- ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-3162
அபூதர்தா (ரலி) அவர்கள் தனது முதுமைப் பருவத்தில் ஒருமுறை மரக்கன்றுகளை நட்டுக்கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்த ஒருவர், ( أتَغْرِسُ هذِه وأنتَ شَيخٌ كبيرٌ وهذهِ لا تطعَمُ إلا في كَذا وكذا عامًا ) "(அபூதர்தா (ரலி) அவர்களே!) இந்த வயதான காலத்தில் மரக்கன்று நடுகிறீர்களா? இதிலிருந்து நீங்கள் எதையும் சாப்பிட முடியாதே! அப்படியே சாப்பிட வேண்டுமானால் இத்தனை இத்தனை வருடங்கள் ஆகுமே" என்று கூறினார். அப்போது அன்னார், ( مَا عَلَيَّ أَنْ يَكُونَ لِي أَجْرُهَا وَيَأْكُلُ مِنْهَا غَيْرِي ) "இதன் மூலம் நான் பயன்பெறாவிட்டாலும், (எனக்கு பின்னால் வரும்) மற்றவர்கள் இதிலிருந்து சாப்பிடுவார்களே அதன் நன்மை எனக்கு கிடைக்கும்" என்று பதிலளித்தார்கள். நூல்:- முஹிய்யிஸ் ஸுன்னா
அல்லாஹ் தன்னுடைய அடியார்களுக்கு நோய் நிவாரணியை மருத்துவர்கள் மூலம் வழங்குவது போல், அல்லாஹ் தன்னுடைய அடியார்களுக்கு உணவுகளை விவசாயிகள் மூலமாக தான் வழங்குகிறான். எனவே, விவசாயிகள் அல்லாஹ்வின் உணவுத் தரகர்கள் என்றால் மிகையாகாது.
சம்பாத்தியத்தில் விவசாயமே மிகச் சிறந்ததாகும் என மார்க்க அறிஞர்கள் கூறுகிறார்கள்.
இந்தியாவின் பிதா மகன் அண்ணல் காந்தி அவர்கள், "இந்தியாவின் முதுகெலும்பு அதன் கிராமங்கள் தான்" என்றார். அதாவது, கிராமங்களில் செய்யப்படும் விவசாயம் தான் இந்தியாவின் வாழ்வாதாரம் என்பதாகும்.
சிகரெட் இல்லாமல் நம்மால் வாழ முடியும். ஆனால், அதை தயாரிப்பவன்
கோடிஸ்வரனாக இருக்கிறான். மது இல்லாமல் நம்மால் வாழ முடியும். ஆனால், அதை தயாரிப்பவன் கோடிஸ்வரனாக இருக்கிறான். சாப்பாடு
இல்லாமல் நம்மால் வாழவே முடியாது. ஆனால், (இந்தியாவைப் பொறுத்தவரை)
அதை தயாரிப்பவன் (விவசாயி) பிச்சைக்காரனாக இருக்கிறான்.
இந்திய விவசாயிகள் தம் வேளாண்மைப் பொருள்கள்மூலம் சம்பாதிக்கின்ற பணத்திற்கு வரி கட்டத் தேவையில்லை என்பது சட்டம். இருப்பினும் இந்திய விவசாயிகள் பலர் ஏன் ஏழ்மை நிலையிலேயே இருக்கிறார்கள்? ஏன் தற்கொலை செய்துகொள்கிறார்கள்?
பெரும்பாலான விவசாயிகள் வட்டிக்குக் கடன் வாங்கியே விவசாயம் செய்கிறார்கள். அவர்களுக்கு மகசூல் நல்லவிதமாகக் கிடைக்கின்றபோது வாங்கிய கடனை வட்டியோடு திரும்பச் செலுத்துகிறார்கள். அதேநேரத்தில் மழை பெய்யாமல் பயிர்கள் கருகிப் போனாலோ, இயற்கைச் சீற்றத்தால் அழிந்து போனாலோ, அந்த விவசாயி வாங்கிய கடன் தள்ளுபடி ஆகாது. அதைத் திரும்பச் செலுத்தித்தான் ஆகவேண்டும். மேலும் வாங்கிய கடனுக்கு வட்டி ஏறிக்கொண்டிருக்கும். இதனால்தான் விவசாயிகள் பலர் ஏழைகளாகவே உள்ளனர்; சிலர் தம்மை மாய்த்துக்கொள்கின்றனர். இந்நிலை மாற வேண்டுமெனில் விவசாயிகளுக்கு வட்டியில்லாக் கடன் வழங்க வேண்டும். திருப்பிச் செலுத்த அவகாசம் வழங்க வேண்டும்.
மேலும் இயற்கைச்
சீற்றத்தால் பயிர்கள் அழிந்துவிட்டால், அப்போது வாங்கிய கடனைத் தள்ளுபடி
செய்துவிட வேண்டும். இதுதான் இந்திய அரசு விவசாயிகளுக்குச் செய்ய வேண்டிய
முதற்கடமையாகும். நாட்டு நலனில் அக்கறைகொண்ட ஆட்சியாளர்கள் இதைத்தான் முதலில்
செய்வார்கள்.
விவசாயத்தையும், விவசாயியையும் கண்ணியப்படுத்தும் அரசால் மட்டும் தான் நாட்டை முன்னேற்றப் பாதையில் செல்ல முடியும்.
நமது நாட்டில் விவசாயிகளும் விவசாயமும் செழித்தோங்கி, அனைத்து மக்களும் பசியாற
உண்டு, நிம்மதியாக வாழ அல்லாஹுத்தஆலா அருள்புரிவானாக! ஆமீன்!
மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951
No comments:
Post a Comment