Search This Blog

Monday, 31 May 2021

தினந்தோறும்…

 

தினந்தோறும்

اِنَّ الصَّلٰوةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِيْنَ كِتٰبًا مَّوْقُوْتًا 

நிச்சயமாகத் தொழுகையோ குறிப்பிட்ட நேரத்தில் (தவறாமல்) இறைநம்பிக்கையாளர்கள் நிறைவேற்ற வேண்டிய கடமையாகவே இருக்கின்றது.                                          திருக்குர்ஆன்:-4:103

இறைவனைத் தொழ வேண்டும் என்பதை இஸ்லாம் தன்னை பின்பற்றுவோருக்குக் கட்டாயக் கடமையென ஆக்கியுள்ளது. அடிப்படை கடமைகளுள் ஒன்றாக இது ஆக்கப்பட்டுள்ளது. மனிதனை மாபெரும் சக்தியாளனான அல்லாஹுதஆலாவோடு இணைக்கின்ற பாலமாக திகழ்கின்றது தொழுகை.

முஸ்லிமான  ஒவ்வொருவரும் தொழுகையை மனம் விரும்பி நேரம் தவறாமல் நிறைவேற்றுகின்றபோது அவனது வாழ்க்கைத் தூய்மையடைகின்றது. மனம் பலமடைகின்றது. உடல் ஆரோக்கியமடைகின்றது.

பருவமெய்திய ஆண், பெண் அனைவரும் மீதும் அவர்களின் இறப்பு காலம் வரை தொழுகை கட்டாயக் கடமை. ஆனால் நோன்பு, ஸகாத், ஹஜ் போன்ற கடமைகள் சிலர் மீது விதிவிலக்கு உண்டு. மனித வாழ்வில் தொழுகைக்கு விடுமுறை கிடையாது. தன் நிலை அறியாத புத்தி பேதலித்தவர்களுக்கு மட்டும் தான் தொழுகை விதிவிலக்காகும்.

மகத்துவம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (லா தீன லிமன் லா சலாத லஹு) "எவர் தொழுகையைப் பேணவில்லையோ அவருக்கு சன்மார்க்கத்தில் இடம் கிடையாது.                           அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் நூல்:- தப்ரானீ, முக்தசர் அத்தர்ஙீபு வத்தர்ஹீபு- 100

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். தொழுகை மார்க்கத்தின் தூண் ஆகும்.                      அறிவிப்பாளர்:- உமர் (ரலி) அவர்கள்                                       நூல்:- ஹில்யத்துல் அவ்லியா, ஜாமிஉஸ் ஸஙீர்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். தொழுகை சொர்க்கத்தின் திறவுகோல்      அறிவிப்பாளர்:- ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள்                   நூல்:- முஸ்னது அஹ்மத்

அப்துல்லாஹ் பின் குர்து (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "மறுமை நாளில் ஒவ்வொரு முஸ்லிமிடமும் கேள்வி கணக்குக் கேட்கப்படுவதில் முதலாவது விஷயம் அவனது தொழுகையைப் பற்றித்தான்! அவனிடம் தொழுகை சீராக இருந்தால் அவனது மற்ற நற்செயல்கள் அனைத்தும் சீராக இருக்கும். அந்த தொழுகை சீர்குலைந்து இருந்தால், அவனது மற்ற நற்செயல்கள் அனைத்தும் சீர்குலைந்து இருக்கும்" என்று கூறினார்கள்.  நூல்:- தப்ரானீ, முக்தசர் அத்தர்ஙீபு வத்தர்ஹீபு- 98

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். தொழுகைக்காக நடந்து செல்லும் ஒவ்வொரு கால் எட்டுக்கும் தர்மத்தின் நன்மை உண்டு.                அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள்            நூல்:- முக்தசர் அத்தர்ஙீபு வத்தர்ஹீபு-83

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. பனூ சலிமா குலத்தார் (மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலுக்குத் தொலைவில் இருந்த) தம் குடியிருப்புகளை இடம் மாற்றி அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு அருகிலேயே குடியேற விரும்பினர். மதீனா (நகரின் இதரப் பகுதிகள்) காலியாவதை அண்ணலார் வெறுத்தார்கள். எனவே (பனூ சலிமா குலத்தாரே! "அலா தஹ்த்தசிபூன ஆஸாரக்கும்") உங்கள் கால் எட்டுகளின் அளவுக்கு நீங்கள் நன்மையை எதிர்பார்க்க மாட்டீர்களா?" என்று வினவினார்கள்.                           நூல்:- புகாரீ-656

ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் தனது ஆளுநர்களுக்கு கடிதம் எழுதும்போதெல்லாம் "தொழுகை என்பது மிக முக்கியமானதாகும். அதை பாதுகாத்தவர் தனது மார்க்கத்தை பாதுகாத்தவராவார். அதை வீணடித்தவர் மற்ற அனைத்தையும் வீணடித்தவராவார்" என்ற வாசகத்தை எழுதிய பிறகு தான் மற்ற விஷயங்களை எழுதுவார்கள்.

 வறுமையை ஒழிக்க

(நபியே) தொழுது வருமாறு நீங்கள் உங்கள் குடும்பத்தினரை ஏவுங்கள். நீங்களும் அதன் மீது உறுதியாக இருங்கள். (இதற்காக) நாம் உங்களிடம் யாதொன்றையும் கேட்கவில்லை. உங்களுக்கு வேண்டிய எல்லா வாழ்வாதாரத்தையும் நாமே கொடுக்கிறோம்.                                      திருக்குர்ஆன்:- 20:132

அதிக மக்கள் தொகையே வறுமைக்கு காரணம் என்று கூறி நமது நாட்டில் வறுமையை ஒழிக்க "நாம் இருவர் நமக்கு இருவர். பிறகு நாம் இருவர் நமக்கு ஒருவர். பிறகு நாமே குழந்தை நமக்கு ஏன் குழந்தை?" என்று விளம்பரப்படுத்தி குடும்பக் கட்டுப்பாட்டை வலியுறுத்துகிறார்கள். இதனால் வறுமை ஒழிந்ததா? என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும்.

இறைவன் வறுமையை ஒழிக்க ஒரு திட்டத்தை கூறியுள்ளான். குடும்பத்தினர் அனைவரும் முறையாக நேரம் தவறாமல் தொழுகையைப் பேணி வந்தால் போதும் வறுமையே வராது.

கண்ணியமானவர்கள்

அபூ உமாமா (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கைபரிலிருந்து திரும்பி வந்தார்கள். அப்போது அண்ணலாருடன் இரண்டு அடிமைகள் இருந்தனர். அலீ (ரலி) அவர்கள் எங்களுக்கு பணிவிடை செய்வதற்காக ஒரு அடிமையைக் கொடுங்கள் என்று கேட்டார். இவ்விருவரில் நீர் விரும்பியவரை எடுத்துக் கொள்! என்று அண்ணலார் கூறினார்கள்.

தாங்களே தேர்ந்தெடுத்துத் தாருங்கள் என்று அலீ (ரலி) அவர்கள் கூற அண்ணலார் அவ்விருவரில் ஒருவரின் பக்கம் சைகை செய்து இவரை எடுத்துக் கொள்! ஆனால் இவரை அடிக்காதீர். ஏனெனில் கைபரிலிந்து திரும்பி வரும் போது இவர் தொழக் கண்டேன். (இன்னீ கது நஹைத்து அன் ளர்பி அஹ்லிஸ் ஸலாத்தி) "தொழுகையாளிகளை அடிப்பது எனக்குத் தடுக்கப்பட்டுள்ளது" என்று அண்ணலார் கூறினார்கள்.                 நூல்:- முஸ்னது அஹ்மது, தப்ரானீ, மஜ்மஉஸ் ஸவாயித்

பேணுதலுள்ள தொழுகையாளிகளாக இருக்கும் தனது பணியாட்களின் சிறு சிறு தவறுகளை மன்னித்து விட வேண்டும். அவர்களைத் திட்டுவது, குத்திப் பேசுவது, அடிப்பது நல்ல முதலாளிக்கு அழகல்ல. காரணம் தொழுகையாளிகள் அல்லாஹ்வின் பார்வையில் கண்ணியமானவர்கள்.

பேணுதலுள்ள தொழுகையாளியை நல்லவர் கெட்டவர் அனைவரும் மதிப்பார்கள். தீய வார்த்தை பேசுவோர்கூட இவரைக் கண்டால் அமைதியாகி விடுவர். தீய செயல் செய்வோர்கூட இவரைக் கண்டால் வெட்கமுற்று ஒதுங்கிப் போவர்.

ஜமாஅத் தொழுகை

மேலும் அவர்கள் தங்கள் தொழுகைகளை (குறித்த காலத்தில் முறையோடு) பேணிப் பாதுகாப்பவர்கள். திருக்குர்ஆன்:- 23:9

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஜமாஅத் தொழுகையில் கலந்து கொள்ளாத வீட்டாரை அவர்களுடைய வீடுகளுடன் சேர்த்து எரித்துவிட வேண்டும்  என நான் எண்ணியதுண்டு.                            அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள்           நூல்:-புகாரீ- 644, முஸ்லிம்- 1154

சமுதாயத்தின் மீது அதிக கவலை கொண்ட கருணை நாதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிலரை இவ்வாறு வீடுகளுடன் சேர்த்து தீ வைத்து கொன்றிட எண்ணினார்கள் என்றால் ஜமாஅத் தொழுகையில் கலந்து கொள்ளாமல் இருப்பது எவ்வளவு பெரிய பாவச் செயல் என்று விளங்குகிறது.

அபூபக்ர் (ரலி) அவர்கள் "நான் பலநூறு தடவை குர்ஆனை ஓதி முடித்த பிறகும் அதன் நன்மைகள் எனக்கு தர மறுக்கப்பட்டுவிட்டாலும் நான் வருத்தப்பட மாட்டேன். ஆனால் ஜமாஅத் தொழுகையில் முதல் தக்பீரை இமாமுடன் சேர்ந்து பெற்றுக்கொள்ளாவிடில் மிகவும் வருந்துவேன்" என்று கூறினார்கள்.

குர்ஆனின் ஒவ்வொரு எழுத்துக்கும் பத்து நன்மைகள் இருக்கிறது என்பது நபிமொழி. அவ்வாறாயின் முழு குர்ஆனையும் ஓதி முடித்தால் எத்தனை லட்சம் நன்மைகள் கிடைக்கும் என்பதை நாம் யூகிக்க முடியும். ஒருமுறை குர்ஆன் முழுவதையும் ஓதி முடித்தால் இவ்வளவு நன்மைகள் என்றால் பலநூறு முறை குர்ஆன் முழுவதையும் ஓதி முடித்தால் எவ்வளவு நன்மைகள் கிடைக்க வேண்டும்? இவ்வளவு நன்மைகளையும் இழப்பது ஒரு பொருட்டாக அபூபக்கர் (ரலி) அவர்களுக்கு தோன்றவில்லை. இதைவிட ஜமாஅத் தொழுகையில் முதல் தக்பீரை இழப்பதே பேரிழப்பாக அன்னாருக்கு தோன்றுகிறது. நபித்தோழர்கள் தொழுகைக்கு தந்த முக்கியத்துவம் இது தான்!

ஒருநாள் உமர் (ரலி) அவர்கள் தங்கள் தோட்டத்திற்கு சென்றார்கள். திரும்பி வந்து பார்க்கும்போது அசர் தொழுகையின் ஜமாஅத் முடிந்து மக்கள் கலைந்து சென்றுக்கொண்டிருந்தனர். இதைக்கண்ட உமர் (ரலி) அவர்கள் "இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்" எனக்கு அசர் தொழுகை ஜமாஅத் தவறிவிட்டதே! அந்த தோட்டத்தினால் தானே எனக்கு இந்நிலை ஏற்பட்டது. அத்தோட்டத்தை ஏழைகளுக்கு தர்மம் செய்து விட்டேன் என்பதற்கு மக்களே! நீங்கள் சாட்சியாக இருங்கள்" என்று கூறினார்கள்.                 நூல்:- அல்கபாஇர் இமாம் தஹபீ

ஒரு ஊரில் பள்ளிவாசல் இருப்பது அந்த ஊரில் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள் என்பதன் அடையாளம். அந்த பள்ளியும் முஸ்லிம்கள் தொழுவதற்காகத்தான். நோன்பு, ஸகாத் போன்ற மற்ற கடமையான வணக்கங்கள் புரிய பள்ளிவாசல் தேவையில்லை. ஒரு தலைமையின் கீழ் மக்கள் ஒன்றுபடுவது என்ற ஒற்றுமையை ஜமாஅத் தொழுகை தான் கற்றுத் தருகிறது.

சலுகைகள் இருந்தாலும்...

அவர் தன் இறைவனின் திருப்பெயரை நினைவுகூறி கொண்டும் தொழுது கொண்டுமிருப்பார். திருக்குர்ஆன்:- 87:15

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் மரண நோயால் பீடிக்கப்பட்டிருந்தபோது (உடல் பலஹீனத்தால் கால்கள் ஊன்ற முடியாமல்) தம் இரு கால்களும் பூமியில் இழுபட (அப்பாஸ்-ரலி, அலீ-ரலி ஆகிய) இரு மனிதர்களுக்கிடையே தொங்கியபடி தொழுகைக்கு புறப்பட்டார்கள். அறிவிப்பாளர்:- ஆயிஷா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-665

நபித்தோழிகளுக்கு மாதவிடாய் காலம் வந்தால், அது நின்று சுத்தமாகும் கட்டத்தில் இரவு நடுநிசியிலெல்லாம் கண் விழித்து, தாம் சுத்தமாகி விட்டோமா என்பதை கவனிப்பார்களாம். சுத்தமாகியிருந்தால் இஷா தொழுகையை களா (நேரம் தவறித் தொழுதல்) ஆகாமல் இரவே தொழுது விடலாம் என்ற ஆவலில்!

மார்க்கத்தில் இவ்வளவு சிரமம் எடுக்க வேண்டியதில்லை என்றாலும் அவர்கள் தொழுகை 'களா' ஆவதை பொறுத்து கொள்ள இயலவில்லை.

பாத்திமா பின்த் அபீஹுபைஷ் (ரலி) அவர்களுக்கு மாதவிடாய் காலத்தில் மட்டுமல்ல மற்ற காலத்திலும் இரத்தப்போக்கு தொடர்ந்து வந்தது. இந்நிலையில் தொழுவது கூடுமா? என்ற கவலை அப்பெண்ணை வாட்டியது. (தொழ வேண்டிய நேரங்களில் தொழாமல் இருப்பது எப்படி? என்ற கவலை அவர்களை வாட்டியது.) அப்பெண் அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம் விரைந்து வந்து சட்டம் கேட்டபோது அண்ணலார் மாதவிடாய் அல்லாத இரத்தத்தைக் கழுவிவிட்டு தொழுது கொள் ! என்று தீர்ப்பளித்தார்கள். (அப்போது தான் அப்பெண்ணுக்கு மனம் அமைதியானது.)                   நூல்:- புகாரீ-228, முஸ்லிம்-553

தாபியீன்களில் ஒருவரும், சட்ட மேதையும், நபிமொழி அறிவிப்பாளருமாகிய ரபீஉ பின் ஹைதம் (ரஹ்) அவர்கள் பக்கவாத நோயினால் உடலின் ஒரு பக்கம் இயங்க முடியாமல் கஷ்டப்பட்டார்கள். அப்படியிருந்தும் இருவரின் உதவியினால் ஜமாஅத் தொழுகைக்கு சென்று வருவார்கள். நோயாளி வீட்டில் தொழுதுக் கொள்ளலாம் தானே! என்று வினவப்பட்டதற்கு, ஆம் ! வீட்டில் தொழலாம் தான்! ஆனால் தொழுகைக்கு விரைந்து வாருங்கள்! என்று சப்தம் கேட்ட பிறகு நான் வீட்டில் தொழுவது முறையாகுமா? என்று கூறினார்கள்.       நூல்:- அல்கபாஇர் இமாம் தஹபீ

தடுக்கக் கூடாது

அவர்கள் தங்கள் தொழுகையைத் தவறாது தொழுது வருவார்கள்.                  திருக்குர்ஆன்:- 70:23

அகழ் போரின் போது அசர் தொழுகை 'களா' ஆகும் அளவுக்கு போர் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது அருமை நாயகம் (ஸல்) அவர்கள் (மலஅல்லாஹு அலைஹிம் புயூத்தஹும் வக்குபூரஹும் நாரன் கமா ஷஙலூனா அனிஸ் ஸலாத்தில் வுஸ்த்தா ஹத்தா ஙாபத்திஷ் ஷம்ஸு) "எதிரிகளின் வீடுகளையும், மண்ணறைகளையும் அல்லாஹ் நெருப்பால் நிரப்புவானாக! ஏனெனில் அவர்கள் சூரியன் மறையும் வரை நடுத்தொழுகை (யான அசர் தொழுகை)யிலிருந்து நமது கவனத்தை திசை திருப்பி விட்டார்கள்" என்று சபித்தார்கள்.                                                                           அறிவிப்பாளர்:- அலீ (ரலி) அவர்கள்  நூல்:- புகாரீ-4111,அபூதாவூத்-346

அருள்மொழி கூறும் அண்ணலாரின் திருநாவு தொழவிடாமல் தடுத்தவர்களுக்கு எதிராக அமில வார்த்தைகளை அள்ளி வீசியிருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.

தனது பணியாளர்களையும், அலுவலகங்களில் தனக்கு கீழ் வேலை செய்பவர்களையும் தொழுகை நேரம் வந்த பிறகும்கூட பிறகு தொழுது கொள்! சேர்த்து தொழுது கொள்! முதலில் வேலையை செய்! பிறகு தான் எல்லாம்! என்று கூறி தொழக்கூடியவர்களையும் தொழ விடாமல் தடுக்கக்கூடிய முதலாளிகள், உயர் பதவிகளில் இருப்பவர்கள் அனைவரும் அண்ணலாரின் இந்த சாப வார்த்தைக்கு உரியவர்களேயாகும்.

தொழக்கூடிய பணியாளர்களுக்கு தொழுவதற்கு வசதி செய்து தரக்கூடிய முதலாளிகள் வாழ்க்கையில் அருள்வளம் காண்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

கற்ப்பித்தல் அவசியம்

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். தொழுகையை விட்ட மனிதன் அவன் மீது அல்லாஹ் கடுங்கோபம் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வை சந்திப்பான்.                                  அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் நூல்:- பஸ்ஸார், தப்ரானீ, மஜ்மஉஸ் ஸவாயித்

நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உங்கள் குழந்தைகளை ஏழு வயதில் தொழும்படி கூறுங்கள். அவர்கள் பத்து வயதில் தொழாவிட்டால் அடியுங்கள்.                                                                       அறிவிப்பாளர்:- அம்ரு பின் ஷுஐப் (ரலி) அவர்கள்   நூல்:- அபூதாவூத்- 495

இணைவைப்புக்கு அடுத்த மிகப்பெரிய பாவம் தொழுகையை உரிய நேரத்தில் தொழாமல் பிற்படுத்துவதாகும் என்பது இமாம் இப்னு ஹிஸ்ம் (ரஹ்) அவர்களின் தீர்ப்பாகும்.            நூல்:- அல்கபாஇர் இமாம் தஹபீ

குழந்தைகளின் ஏழு வயதிற்கு முன்பாகவே அவர்களுக்கு தொழுகையின் சிறப்புகளையும், தொழுகைக்குரிய பாடங்களையும் கற்றுக் கொடுக்க வேண்டியது பெற்றோரின் கடமையாகும். இவைகளைக் கற்றுக்கொடுத்தப் பிறகும் பத்து வயதில் அந்த குழந்தைகள்  தொழாவிட்டால் அவர்களை அடிப்பதின் மூலம் தண்டித்து அறிவுத்தலாம். குறிப்பிட்ட வயதுக்கு பிறகும் தொழாமல் இருப்பது கடுந்தண்டனைக்குரியக் குற்றமாகும்.

குடும்ப தலைவர் தனது மனைவி மக்களை தொழாத குற்றத்திற்காக அடிக்கலாம் தவறில்லை என்கிறது இஸ்லாம்.

கால தாமதம் வேண்டாம்

குற்றவாளிகளை நோக்கி உங்களை நரகத்தில் புகுத்தியது எது? என்று கேட்பார்கள். அதற்கவர்கள் நாங்கள் தொழவில்லை என்பார்கள்.                                   திருக்குர்ஆன்:- 74:42,43

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். தொழுகையை அலட்சியப்படுத்தியவன் மறுமை நாளில் பிர்அவ்ன், ஹாமான், காரூன், உபைய்யி பின் கலப் ஆகிய தீயோருடன் (நரகில்) இருப்பான்.     அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) அவர்கள்              நூல்:- முஸ்னது அஹ்மது, தப்ரானீ, இப்னு ஹிப்பான்

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் இந்நால்வர்களின் பெயர்களையும் குறிப்பிட்டுக் கூறியதன் காரணம் என்னவெனில் பொருளீட்டல், அதிகாரம் செலுத்துதல், அரசு ஊழியம் செய்தல், வியாபாரம் செய்தல், ஆகியவைகளினால் யாராவது தொழுகையை விட்டிருந்தால் ஆட்சி அதிகாரத்தில் காலத்தைக் கழிப்பவன் பிர்அவ்னுடனும், அரசு ஊழியத்தில் காலத்தைக் கழிப்பவன் ஹாமானுடனும், பொருளீட்டுவதில் காலத்தைக் கழிப்பவன் காரூனுடனும், வியாபாரத்தில் காலத்தைக் கழிப்பவன் உபைய்யி பின் கலப்புடனும் இருப்பர் எனச் சுட்டிக்காட்டுவதற்கேயாகும் என்கின்றனர் அறிஞர்கள்.              நூல்:-அல்கபாஇர் இமாம் தஹபீ

அல்லாமா இக்பால் அவர்களின் கவிதை வரிகள்:-                  "படுக்கையிலிருந்து எழுந்து பள்ளிக்குச்  செல்ல முடியாத நீ....                   கப்ரிலிருந்து எழுந்து சுவனத்துக்குச்செல்ல ஆசைப்படுகின்றாயே?!"

தொழுகையை முறையாகப் பேணாத முஸ்லிம்கள் தான் தொழாமல் இருப்பதற்கு பல காரணங்களைக் கூறுகின்றனர். இப்பொழுது என்ன வயதாகிவிட்டது? முடிகள் நரைக்கட்டும் பிறகு தொழலாம் என்று எண்ணுவோரும் உண்டு. தொழ வேண்டும் என்று ஆசையாகத்தான் இருக்கிறது. என்ன செய்ய தொழ முடியாத அளவுக்கு பிசியாக இருக்கிறேன். இந்த வயதில் தான் சம்பாதிக்க முடியும். காற்றுள்ள போதே தூற்றிக்கொள்வது தானே புத்திசாலித்தனம் என்று வியாக்கியானம் பேசுவோரும் உண்டு.

பாவத்தைப் போக்கத்தானே பள்ளிக்கு சென்று தொழனும்! நானென்ன பாவமா செய்கிறேன்! பள்ளிக்கு சென்று தொழ! அப்படியே தொழுதாகணும் என்றாலும் நான் மனதுக்குள்ளேயே தொழுது கொள்வேன் என்பது சிலரின் வேதாந்தம்.

நான் தொழுவதற்கு அல்லாஹ்வின் நாட்டம் இன்னும் வரவில்லை. அவனது நாட்டம் வரட்டும் பிறகு தொழுவோம். என்று கிண்டல் அடிப்போரும் உண்டு.

மரணம் என்பது குழந்தைப் பருவம், வாலிபப் பருவம், வயோதிகப் பருவம் என அனைத்து நிலைகளிலும் வருகிறது என்பது நாம் அறிந்ததே! மரணத்திற்கு பருவங்களும், காலங்களும் கிடையாது. அது எப்போது யாருக்கும் வேண்டுமானாலும் வரலாம். மரணத்தின் வருகையை மிக துல்லியமாக யாரும் கணிக்க முடியாது.

மனிதன் தயாரிக்கும் பொருட்களுக்கு கலாவதி தேதி (Expire Date) கணிக்க முடியும் உண்டு. ஆனால் மனித உயிர்களுக்கு அதை கணிக்க முடியுமா? பிறகு ஏன்? தொழுகை விஷயத்தில் மெத்தனப் போக்கு?

வேலைப்பளுவால் தொழ நேரமில்லை என்றால் தொழுகை என்பதும் ஒரு முக்கியமான வேலை தான் என்பதை உணர வேண்டாமா? வேலை வெட்டி இல்லாதவர்கள் தான் தொழ வேண்டுமா?

நான் என்ன பாவமா செய்துள்ளேன் தொழுவதற்கு என்றால்? தொழுகையை முறையாகப் பேணி வந்த இறைத்தூதர்கள், நபித்தோழர்கள், நல்லோர்கள் எல்லோரும் பாவிகளா என்ன? தொழுகையைப் பேணாமல் இருப்பதே பெரும் பாவம் என்பதை உணர வேண்டாமா?

அல்லாஹ்வின் நாட்டம் என்பது விலை கொடுத்து வாங்கிக் கொள்ளும் கடைசரக்கா? என்ன? அல்லது புதையலா என்ன? திடீரென கிடைப்பதற்கு? யோசிக்க வேண்டாமா? அப்படியல்ல! தொழுகையை முறையாகப் பேணி இறையன்பைப் பெற வேண்டும் என்று நாம் நாடினால் தான் அல்லாஹ்வும் நாடி அதற்கு உதவி புரிவான் என்று விளங்க வேண்டுமே?

மனிதர்கள் (தங்கள் தீய நடத்தையைவிட்டு) தங்களை மாற்றிக் கொள்ளாத வரையில் நிச்சயமாக அல்லாஹ்வும் (அவர்களை) மாற்றி விடுவதில்லை.                                         திருக்குர்ஆன்:- 13:11

ஆரோக்கியம்

அமெரிக்காவில் உள்ள பின்ஹாம்டன் பல்கலைக்கழகப் பேராசிரியர் முஹம்மது கஸாவென் கூறுகிறார். தொழுகை முறையின் ஒவ்வொரு அசைவுகளும் யோகா மற்றும் உடற்பயிற்சி முறைகளையே வெளிப்படுத்துகின்றன. இந்த முறையை தினமும் பின்பற்றும் போது முதுகு வலி குறைவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

மேலும் தரையில் தலை வைத்து வணங்கும் முறை லோவர் பேக் பெயின், மூட்டு மற்றும் தசைப் பகுதிகளில் உள்ள வலிகள் குணமடைவதற்கு உதவுகின்றன. அதேப்போன்று உடலமைப்பு முறையிலும் நல்ல ஒரு மாற்றம் ஏற்படுகின்றன என்கிறது ஒரு ஆய்வு.

Dr.அர்னால்டு எஹ்ட், Dr. சூ, மற்றும் மாக்குலிஸ் ஆகியோர் தொழுகை முறைகள் உடல், மனம், ஆன்மா ஆகியவற்றை பரிசுத்தமாக்கி புத்துணர்வு அடையச் செய்கின்றன என தெரிவிக்கின்றனர்.

Dr. காரிகார் மைக்கேல் பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினைகள் சரியாவதற்கு தொழுகை முறைகள் சிறந்த நவீன உடற்பயிற்சியாக இருக்கின்றன என்கிறார்.

தொழுகையில் நெற்றி, இருகைகள், இரண்டு மூட்டு கால்கள், இரண்டு கால்கள், ஆகிய ஏழு உறுப்புகள் பூமியில் படுமாறு சஜ்தா செய்ய வேண்டும் (மண்டியிட்டு வணங்க வேண்டும்) என்பது மார்க்கச் சட்டம்.

தொழுகையின்போது தரை மீது தொடர்பு கொள்ளும் ஏழு உறுப்புகள் காந்த ஈர்ப்பு சக்தி பெறுகிறது. பூமி காந்த கதிர்களை நமது உடலில் உள்ள சிகப்பணுக்களுக்கு செலுத்துகிறது. இதன் பயனாக இரத்தத்தின் கழிவுகள், யூரிக் அமிலம் ஆகியவை வெளியேற்றப்படுகின்றன. சுவாச உறுப்புகள் நன்றாக வேலை செய்கின்றன. காற்றிலுள்ள மின்சக்தி அயான்கள் (நேர்மின் அயான்கள், எதிர்மின் அயான்கள்) உடலுக்கு வேண்டிய மின்சக்தியை நுரையீரலுக்கு வழங்குகின்றன. அவைகள் நுரையீரல் திசுவின் நரம்புகள் மீது ஊடுருவிச் சென்று மத்திய நரம்பு மண்டலத்தையும், மூளையையும் சுறுசுறுப்படைய செய்து நல்ல நிலையில் செயல்படத் தூண்டுகின்றன.  உடல் பலகீனத்தைப் போக்கும் மின்சக்தி பெற தொழுகை சிறந்த பயிற்சியாக திகழ்கிறது.

எனவே எல்லா வகையிலும் நலவைத் தருகின்ற தொழுகையை நேரம் தவறாமல் முறையாக பேணி தொழக்கூடிய நற்பாக்கியத்தை நமக்கு இறைவன் தந்தருள்புரிவானாக! ஆமீன்!

மௌலவி, மு. முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை,  சென்னை.

 

No comments:

Post a Comment

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...