Search This Blog

Monday, 31 May 2021

பிரியமானவள்

 

பிரியமானவள்

وَاللّٰهُ عَزِيْزٌ حَكِيْمٌوَلِلرِّجَالِ عَلَيْهِنَّ دَرَجَةٌ


ஆயினும் ஆண்களுக்கு பெண்களைவிட ஓர் உயர்வு உண்டு. அல்லாஹ் மிகைத்தவனும், நுண்ணறிவு உடையவனுமாக இருக்கிறான்.           திருக்குர்ஆன்:- 2:228


பெண் பிள்ளைகளுக்கு மாப்பிள்ளைத் தேடும்போதே பெற்றோர், உடன்பிறந்தவர்கள், நெருங்கிய உறவினர்கள், மற்றும் திருமணத்தால் முந்திவிட்ட அவளது தோழிகள் போன்றோர் அவளுக்கு மார்க்க அறிவுரைகளையும் மற்றும் குடும்ப வாழ்க்கையில் தன்னுடைய அனுபவப் பாடங்களில் நல்லவற்றையும் எடுத்துரைக்க வேண்டும்.


பக்குவம் வேண்டும்


ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் (கன்னிப் பெண்ணை தவிர்த்து) ஒரு விதவைப் பெண்ணை தான் மணமுடித்தேன். அதற்கு காரணம் என்னவென்றால் என் தந்தை (உஹது போரில்) இறந்து விட்டார். (அவர் இறக்கும் போது) ஏழு பெண் பிள்ளைகளை விட்டுச் சென்றுள்ளார். வயதில் அந்த பெண் பிள்ளைகளைப் போன்ற ஒரு (இளம் வயது) பெண்ணை (மணமுடித்து) அவர்களிடம் அழைத்து செல்வதை நான் விரும்பவில்லை. ஆகவே நான் அவர்களைப் பாராட்டி சீராட்டி வளர்க்கும் (அனுபவமுள்ள) ஒரு பெண்ணை மணந்து கொண்டேன் என்றார்.


இதை செவியுற்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (பாரக்கல்லாஹு லக்க அவ் கைரன்) "அல்லாஹ் உனக்கு அருள்வளம் புரிவானாக! அல்லது நன்மையைப் பொழிவானாக!" என்று கூறினார்கள்.      நூல்:- புகாரீ-5367, முஸ்லிம்-2908


ஜாபிர் (ரலி) அவர்கள் தம் சகோதரிகளை சீராட்டி வளர்க்கின்ற பக்குவமுள்ள ஒரு விதவைப் பெண்ணை மணமுடித்து கொண்டார்கள். அதை வரவேற்று ஜாபிர் (ரலி) அவர்களின் நல்வாழ்வுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்துள்ளார்கள். கணவரின் சகோதரிகளை வளர்த்து ஆளாக்குவதில் மனைவி கணவனுக்கு ஒத்துழைப்பது ஓர் நற்செயல் என்பது தெளிவாகிறது.


மேலும் ஒரு பெண் ஒருவனுக்கு இரண்டாம் தாரமாக வாக்கப்பட்டு செல்லும் போது அங்கு ஏற்கனவே கணவரின் முதல் மனைவிக்கு பிறந்த பிள்ளைகள் இருந்தால், அவர்களை வளர்ப்பதிலும் கணவருக்கு ஒத்துழைப்பது ஓர் நற்செயலாகும். அப்பிள்ளைகளிடம் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் விரோதமாக நடந்து கொள்ளக் கூடாது.  அது தன் மீது கணவருக்கு வெறுப்பு ஏற்பட காரணமாகி விடும்.


பெரியவர்கள்


கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அல்பரக்கத்து மஅ அகாபிரிக்கும்) உங்களுடைய பெரியவர்களிடம் (பரக்கத்) அருள்வளம்  உள்ளது. அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள்           நூல்:- ஹாகிம்


எவருடைய வயது அதிகமாக இருந்து, அதன் காரணமாக நன்மைகளும் அதிகமாக இருக்குமோ அதில் நலவும் அருள்வளமும் இருக்கிறது என்பது நபிமொழியின் கருத்து.


"அம்மிக்கு குழவி முக்கியம். வீட்டுக்கு கிழவி முக்கியம்" என்பது கிராமத்து சொல் வழக்கு.


ஒரு பெண்ணுக்கு வீட்டு பெரியவர்களான மாமனார், மாமியார் சேர்ந்து வாழ்வதில் பாதுகாப்பும், அருள்வளமும் கிடைக்கப் பெறலாம். மேலும் கணவரின் பெற்றோருக்கு செய்யும் பணிவிடையின் மூலம் கணவரின் முழு அன்பையும் பெறலாம். கணவருக்கு அவரது பெற்றோரின் பொருத்தத்தில் சொர்க்கம் இருக்கிறது. மனைவிக்கு அவளது கணவரின் பொருத்தத்தில் சொர்க்கம் இருக்கிறது. இதில் ஒன்றுக்கொன்று தொடர்பு இருக்கிறது. இதை இல்லதரசிகள் உணர வேண்டும்.


கணவரின் பெற்றோருடன் வாழும் பெரும்பாலான பெண்கள் தனது மாமனார், மாமியாருக்கு பணிவிடை செய்வது குறைவு. பணிவிடை செய்யும் பெண்கள் அதை திருப்தியாக செய்வது மிகக் குறைவு. சில புதுமணப் பெண்கள் திருமணம் முடிந்த கையோடு குடும்பத்தில் அது இது குறை என்று கூறி தன் மாப்பிள்ளையை தனி குடித்தனத்திற்கு அழைத்து செல்வதில் அதிக கவனம் செலுத்துகிறார்கள்.


ஏதோ தன் மாப்பிள்ளை வானத்திலிருந்து நேரடியாக குதித்து, தன்னை மணமுடித்து கொண்டதைப் போல் எண்ணலாமா? தனக்கு மட்டும் உரிமைக் கொண்டாடக்கூடிய பொருளா இவன்? மாமனார், மாமியார் பெற்று வளர்த்து ஆளாக்காமலா இவன் வாலிபனானான்? என்றெல்லாம் புதுப்பெண் புரிந்து கொள்ள வேண்டுமே!


மருமகளாக வருபவள் புகுந்த வீட்டிலுள்ள மாமனார், மாமியார், நாத்தனார் ஆகியோருடன் நற்பண்புகளுடன் நடந்து கொள்ள வேண்டும். தனிக்குடித்தனம் வா! என்று கணவரிடம் வம்பு செய்யக் கூடாது. அதனால் கணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவளை வெறுக்கக்கூடும்.


தனிகுடித்தனம் எனும் பெயரில் கணவனை அவன் பெற்றோரிடமிருந்து பிரிப்பது இரக்கமற்ற செயல் என்பதை பெண் விளங்க வேண்டும். புதிதாக திருமணமான ஒரு பெண் தன் கணவனைவிட அவனது பெற்றோரை பெரிதும் கவர்ந்து இழுத்துக் கைக்குள் போட்டுக் கொள்ள வேண்டும். இந்த அடிப்படையில் உரிமையை உணர்ந்த பெண்கள் நற்பெயருடன் காலத்தை ஓட்டுகிறார்கள். அதை நினைத்து கணவன் வெளியில் விரும்பாதது போல் காட்டிக் கொண்டாலும் உள்ளூர மிகவும் விரும்புவான்.


பணிவிடை புரிதல்


ஒருமுறை அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம் வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து "நாயகமே! இதோ (உங்கள் அன்பு மனைவி) கதீஜா (ரலி) அவர்கள் தம்முடன் ஒரு பாத்திரத்தில் உணவு எடுத்துக் கொண்டு உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறார். அவர் உங்களிடம் வந்தவுடன் அவருக்கு அவருடைய இறைவனின் தரப்பிலிருந்தும், என் தரப்பிலிருந்தும் சலாம் கூறி அவருக்கு சொர்க்கத்தில் உயர்தரமான முத்து மாளிகை ஒன்று தரப்படவிருப்பதாக நற்செய்தி சொல்லுங்கள்" என்று கூறினார்கள். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள்  நூல்:- புகாரீ-3820, முஸ்லிம்


இந்த நிகழ்வு அருமை நாயகம் (ஸல்) அவர்கள் ஹிரா குகையில் இருக்கும் போது நடந்ததாகும் என இப்னு ஹஜர் அஸ்கலானீ (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.


ஐம்பது வயதை கடந்துவிட்ட ஒரு பெண்ணான கதீஜா (ரலி) அவர்கள் மிக உயர்ந்த மலையிலுள்ள ஒரு குகைக்கு தலையில் உணவு பாத்திரத்தை சுமந்தவாறு கரடுமுரடான மலைப்பாதையில் நடந்து சென்று அதனால் ஏற்படும் சிரமங்களை சகித்துக் கொண்டு தனது அன்பு கணவர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு உணவு கொடுக்க சென்றுள்ளார்கள். காரணம் தனது அன்பு கணவருக்காக பல சிரமங்களை சகித்துக்கொண்டு பணிவிடை செய்வதை பாக்கியமாக கருதினார்கள் என்பதில் சந்தேகமில்லை.


அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒரு பெண் தன் கணவனின் உரிமையை அறிந்து கொண்டால், அவன் தன் பகல் உணவையோ, இரவு உணவையோ சாப்பிட்டு முடிக்கின்ற வரை (அவள்) சாப்பிட அமரமாட்டாள்.   அறிவிப்பாளர்:- முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள்  நூல்:- தப்ரானீ, பஸ்ஸார்


ஒரு பெண் தன் கணவருக்கு பணிவிடை செய்வதை பாக்கியமாக கருதி செயல்பட்டால் அவளுக்கு இல்லற வாழ்க்கை இன்பமாகவும், மறுமை வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் அமையலாம். மேலும் அல்லாஹ்வின் அன்பும், அருளும் கிடைக்கலாம்.


ஒரு பெண் தன் கணவனின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்வதை  தன்னால் இயன்ற அளவுக்கு அவனுக்கு பணிவிடை செய்வதில் ஆர்வம் காட்டுவதின் மூலம் நிரூபிக்க வேண்டும்


உதவி ஒத்தாசை


பத்ரு போரில் கைதானவர்களில் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் மருமகன் (அதாவது அண்ணலாரின் மூத்த மகள் ஸைனப் - ரலி அவர்களின் கணவர்) அபுல் ஆஸ் அவர்களும் ஒருவராவார். அவர் விடுதலை பெறுவதற்காக மக்காவில் இருந்து அவரது மனைவி ஸைனப் (ரலி) அவர்கள் தனது தாய் கதீஜா (ரலி) அவர்கள் தனக்கு அன்பளிப்பு அளித்த தங்க கழுத்து மாலையை ஈட்டுத் தொகையாக கொடுத்து அனுப்பினார்கள்.    நூல்:- அர்ரஹீகுல் மக்தூம்


ஸைனப் (ரலி) அவர்கள் தனது கணவருக்கு பொருளாதார பிரச்சனை என்று செய்தி அறிந்ததும் தன் தாயின் நினைவாக தன்னிடம் இருந்த உயர்ந்த பொருளான அந்த தங்க கழுத்து மாலையை கொடுத்து அனுப்பி கணவரின் நெருக்கடியை நீக்கினார்கள்.


கணவனுக்கு ஏதேனும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் போது மனைவி அவளிடம் இருக்கும் காசு பணங்களையும், நகைகளையும் கொடுத்து கணவனுக்கு உதவி ஒத்தாசை செய்ய வேண்டும். இதற்காக அவள் தனது பெற்றோரிடம், உடன்பிறந்தவர்கள் மற்றும் உறவினர்களிடம் உதவி கேட்கலாம் தவறில்லை.


கதீஜா (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மணமுடிக்கும்போது பெரும் செல்வ சீமாட்டியாக இருந்தார்கள். அம்மையார் பொருளாதாரத்தில் உயர்ந்திருந்த போதிலும், தனது கணவரிடம் கர்வமாக நடந்து கொண்டதில்லை. தனது அன்பு கணவருக்காக பொருளாதாரம் அனைத்தையும் தியாகம் செய்தார்கள். அம்மையார் இறுதி நாட்களில் உணவுக்கும்கூட சிரமப்பட்டார்கள். அப்போது கூட அம்மையாருக்கு தனது அன்பு கணவர் மீது கடுகு அளவுகூட வெறுப்பு ஏற்பட்டதில்லை. அவர்கள் தனது அன்பு கணவருக்கு எல்லா விதத்திலும் உதவி செய்து அன்பிற்கும், கண்ணியத்திற்கும் மிக பெரும் சான்றாக விளங்கினார்கள். இதனால் தான் அண்ணலார் தம் வாழ்நாள் முழுவதும் அம்மையாரை நினைவு கூர்ந்து கொண்டே இருந்தார்கள்.


கணவன் பொருளாதார ரீதியாக கஷ்டப்படும்போது, மனைவி எனக்கு என்ன வந்தது? என்றும், அல்லது என் வீட்டார் எனக்கு சீதனமாக கொடுத்த நகைகளை கொடுத்து உதவ முடியாது என்றும் கணவன் மீது அக்கறையின்றி இருப்பது இல்லற வாழ்க்கையில் விரிசலை ஏற்படுத்தும். கணவனுக்கு பொருளாதார ரீதியாக உதவி செய்த பின்னர் அதை சொல்லிக் காட்டுவதும், அல்லது கணவனை மதிக்காமல் ஏளனம் செய்வதும் தவறாகும்.


நச்சரிக்கக் கூடாது


ஒருமுறை அலீ (ரலி) அவர்கள் தனது அன்பு மனைவி பாத்திமா (ரலி) அவர்களிடம் "உனக்கு ஏதேனும் சாப்பிட விருப்பம் உள்ளதா? வேண்டுமெனில் சொல்! நான் வாங்கித் தருகிறேன்" என்றார்கள்.


அதற்கு ஃபாத்திமா (ரலி) அவர்கள் நமது திருமணத்தில் உங்களிடம் என்னை அனுப்பும்போது எனது தந்தை அருமை நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம் "மகளே! உனது கணவரிடம் அது வேண்டும் இது வேண்டும் என்று கேட்டு தொல்லை கொடுக்காதே. உனது ஆசை அபிலாசைகளை அல்லாஹ்விடமே கேட்டு வாங்கிக் கொள்!" என்று உபதேசம் செய்துள்ளார்கள். அதனால் எனக்கு வேண்டியதை அல்லாஹ்விடமே கேட்டு வாங்கிக் கொள்கிறேன். எனக்காக தாங்கள் சிரமப்பட வேண்டாம் என்று அன்பாகக் கூறிவிட்டார்கள்.


மனைவி கணவனிடம் அதை இதை வாங்கி தா! என்று நச்சரித்து அவனை துன்பத்தில் ஆழ்த்துவது இஸ்லாமிய பெண்ணுக்கு அழகல்ல. ஒரு பெண் தன் கணவனிடம் அது இது வேண்டும் என்று கேட்பதற்கு முன் கொஞ்ச நேரம் யோசிக்க வேண்டும். அந்த பொருள் நமக்கு தேவைதானா? அந்த பொருள் இல்லாமல் வாழ முடியாதா? அப்படி வாங்கினால் நிஜமாகவே அது நமக்கு மகிழ்ச்சியைக் கொடுக்குமா? என்றெல்லாம் மனதுக்குள் அலச ஆரம்பித்தாலே தேவையில்லாத பொருட்களை வாங்கி வீட்டில் குவிப்பது குறையும். காசும் நிறைய மிச்சமாகும்.


ஒரு பெண் தான் நினைத்ததை வாங்கியே ஆக வேண்டும் என்ற எண்ணம் தான் அவளுடைய கணவனை கடன், வட்டி மற்றும் தவறான பாதையில் விழ செய்கிறது. இதில் விழுந்த கணவன் சில நேரங்களில் எழ முடியாமல் சிரமப்படுகிறான். தவறான வழியில் வரும் வருமானத்தால் இல்லறத்தில் இன்பம் காண முடியாது.


"விரலுகேற்ற வீக்கம் வேண்டும்" என்று தமிழ் பழமொழி. இதை உணர்ந்து கணவனின் வரவு அறிந்து செலவு செய்தால் அவளே சிறந்த மனைவியாவாள்.


தேவைக்காக அழைக்கும்போது


அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒருவர் தம்முடைய மனைவியை படுக்கைக்கு அழைக்கும்போது அவள் வர மறுத்து விட்டால், அவளைப் பொழுது விடியும் வரை வானவர்கள் சபித்துக் கொண்டேயிருக்கின்றனர்.  அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள்   நூல்:- புகாரீ-5194, முஸ்லிம்-2829


அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒட்டகத்தின் மீது (பயணத்திற்காக) அமர்ந்திருக்கும் ஒரு பெண்ணை அவளது கணவன் (உடலுறவுக்காக) அழைத்தாலும் அவள் அதை மறுக்கக்கூடாது. (உடனே அதற்கு இணங்க வேண்டும்)          அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் நூல்:- இப்னுமாஜா-1843, முஸ்னது அஹ்மது


அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒருவன் தன் மனைவியைத் தன் தேவைக்காக அழைத்தால் அவள் அடுப்பில் வேலை செய்து கொண்டிருந்தாலும் அவள் அவனிடம் செல்ல வேண்டும்.             அறிவிப்பாளர்:- தல்க் பின் அலீ (ரலி) அவர்கள்    நூல்:- நசாயீ, முஸ்னது அஹ்மது


ஒருவன் தன் மனைவியை படுக்கைக்கு அழைக்கும்போது சரியான காரணமின்றி மறுத்து வெறுத்தால் கணவன் கோபமடைவது இயல்பு. தாம்பத்திய உறவுக்கு பெரும்பாலும் கணவனிடமிருந்தே முதல் முயற்சி தொடங்கும்.


கணவனுக்கு மனைவி மீது ஏற்படும் நியாயமான ஆசைகள் மனைவியால் மறுக்கப்பட்டால் அதன் பின்விளைவுகள் விபசாரம், அந்நிய பெண்ணிடம் பாலியல் பலாத்காரம் என விபரீத விளைவுகளை தூண்டும் அபாயம் ஏற்படும். எனவே தம்பதியருக்குள் மனஸ்தாபம் ஏற்பட்டிருந்தாலும் அதற்காக பழி தீர்க்க எண்ணி படுக்கையை வெறுப்பது கூடாது என்று இஸ்லாம் போதிக்கிறது.


தனக்கும் தனது கணவனுக்கும் இடையே பிரச்சனை ஏற்படும் போது பெரும்பாலான பெண்கள் அவனை தண்டிப்பதாக எண்ணிக் கொண்டு அவனுக்கு இல்லற சுகத்தை கொடுக்க மறுத்து விடுகின்றனர். சில வேளை இதனால் பெரும் தீங்குகள் ஏற்படும். அதாவது கணவன் தவறான வழிக்கு சென்று விடலாம். அவன் விவகாரத்தைப் பற்றி சிந்திக்கும் மனநிலைக்கு வந்து விடலாம். கணவன் அவளுக்கு எதிராக இன்னொருத்தியை மணப்பதைப் பற்றி வினயமாக சிந்திக்கத் தலைபடலாம்.


இதனால் தான் கணவன் மனைவியை படுக்கைக்கு அழைக்கும்போது அதற்கு கீழ்படிந்து விரைவாக அந்த அழைப்பை ஏற்றுக்கொள்வது மனைவியின் மீது பெரும் கடமையாகும்.


கற்பை காத்துக்கொள்வது தான் திருமணத்தின் முக்கிய நோக்கமாகும். எனவே ஒருவன் தன்னுடைய காம உணர்வைத் தணித்துக்கொள்ள மனைவியிடம் மட்டுமே சென்று தன் கற்பை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் இயம்புகிறது. ஆனால் மனைவி கணவனுக்கு இணங்க மறுத்தால் அவள் வானவர்களின் பெரும் சாபத்திற்கு ஆளாகிவிடுவாள்.


கணவன் தன் மனைவி மாதவிடாய், பிரசவத்தீட்டு உள்ளவளாகவோ, நோயாளியாகவோ, நிறைமாத கர்ப்பிணியாகவோ அல்லது வேறு ஏதேனும் துக்கத்திலோ, மன புளுக்கத்திலோ இருந்தால் இது போன்ற நிலைகளில் அவளை இல்லற சுகத்திற்கு நிர்பந்திக்கக் கூடாது. சூழ்நிலை கருதி கணவன் பொறுமையாக இருக்க வேண்டும்


மனஸ்தாபங்கள்


அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். எந்தப் பெண் தன் கணவர் தன்மீது மனநிறைவு கொண்டிருக்கும் நிலையில் இறக்கிறாளோ அந்தப்ப பெண் சொர்க்கம் செல்வாள்.   அறிவிப்பாளர்:- உம்மு சல்மா (ரலி) அவர்கள்     நூல்:- திர்மிதீ-1081


ஒருமுறை அலீ (ரலி) அவர்களுக்கு அவரது மனைவி பாத்திமா (ரலி) அவர்களுக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டது. உடனே அலீ (ரலி) அவர்கள் வீட்டிலிருந்து வெளியேறி பள்ளிவாசலுக்கு வந்து படுத்துவிட்டார்கள். அந்நேரத்தில் கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் தனது மகள் பாத்திமா (ரலி) அவர்கள் வீட்டுக்கு வந்தார்கள். அம்மையாரிடம்  தனது மருமகனைப் பற்றி விசாரித்தபோது அம்மையார் அண்ணலாரிடம் நடந்ததை எடுத்துரைத்துவிட்டு தனது கணவர் பள்ளிவாசலில் இருப்பார் என்று கூறினார்கள்.


அண்ணலார் பள்ளிவாசலுக்கு சென்ற போது அங்கு அலீ (ரலி) அவர்கள் தனது முதுகில் மண் ஒட்டிக்கொண்டிருக்கும் நிலையில் படுத்திருந்தார். அப்போது அண்ணலார் (இஜ்லிஸ் யா அபாதுராப்) "எழுந்து அமருங்கள் அபூதுராப் (மண்ணின் தந்தை) அவர்களே!" என்று கூறினார்கள். பிறகு அண்ணலார் அலீ (ரலி) அவர்களை சமாதானம் செய்து வீட்டுக்கு அழைத்து வந்தார்கள்.


பிறகு தம்பதியரை அமர வைத்து தனது அருமை மகளை நோக்கி "மகளே! உனது பேச்சால் புண்பட்டுப் போயிருக்கும் உன் கணவரிடம் மன்னிப்பு கேள்! உன் கணவர் அதிருப்தி கொண்ட நிலையில் உனக்கு மரணம் வந்துவிடுமாயின் நீ சொர்க்கத்தின் நறுமணத்தைக்கூட நுகர்ந்து பார்க்க இயலாதவளாய் ஆகியிருப்பாய்! அல்லாஹ் உன்னை மன்னித்து விட்டான்" எச்சரித்தார்கள்.


தம்பதியர் இடையே சிறு சிறு மனஸ்தாபங்கள் வருவது இயற்கையே! அது பெரும் பிரளயமாக மாறும் அளவுக்கு விட்டு விடக்கூடாது. உடனுக்குடன் அவர்களுக்குள் சமாதானமாகிவிட வேண்டும். அல்லது அவர்களின் குடும்பப் பெரியவர்கள் ஒன்று சேர்ந்து அவர்களை சமாதானப்படுத்த வேண்டும்.


அவ்வப்போது எழும் மனஸ்தாபங்களை ஊதி பெரிதாக்கி வேடிக்கை பார்க்கக் கூடாது. ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து வாழ்வதே வசந்தமான வாழ்க்கையாகும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். சுருங்கக்கூறின் கணவனின் பொருத்தத்தில் இறைவனின் பொருத்தமும், சொர்க்கமும் இருக்கிறது என்பதை மனைவி கவனத்தில் கொள்ள வேண்டும்.


நல்லுபதேசம்


ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. (என்னைப்பற்றி அவதூறு பரவியதை என் கணவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாயிலாக நான் செவியுற்றதும் அதை நினைத்து என் வீட்டுக்கு வந்து) நான் அழுதேன். என் தந்தை வீட்டின் மேல் பகுதியில் இருந்து (குர்ஆன்) ஓதிக்கொண்டிருந்தார். என் அழும் குரல் கேட்டு கீழே இறங்கி வந்து என் தாயிடம் ஆயிஷாவுக்கு என்ன ஆனது? என்று வினவினார். அவளுக்கு (அவதூறு) விஷயம் தெரிந்து விட்டது. (அதனால் அழுகிறாள்) என்று என் தாய் பதிலளித்தார்.


அப்போது (என் தந்தையின்) கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. "என் அருமை மகளே! நீ உன் வீட்டுக்கே திரும்பிச் செல்ல வேண்டும்" என்று சத்தியமிட்டு கூறினார். நான் (நபியின் வீட்டுக்கு) திரும்பி விட்டேன்.  நூல்:- திர்மிதீ-3180


ஒரு பெண் தன்னுடைய கணவன் வீட்டில் தனக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் அதை தன்னுடைய பெற்றோர் வீட்டுக்கு வந்து பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் தான் சொல்லி புலம்புவாள். இது உலக நடைமுறை.


அப்போது அவளின் பெற்றோர் அல்லது உறவினர்கள் என்ன பிரச்சனை என்று தீர விசாரிக்க வேண்டும். அதன் பிறகு அவளுக்கு புத்திமதி சொல்லி அவளுடைய கணவன் வீட்டுக்கே அவளை கொண்டு போய் விடவேண்டும்.


தன் மகள் சொல்வதை நம்பிக்கை கொண்டு ஒருதலை பட்சமாக சிந்தித்து இனிமேல் அந்த கொடுமைக்காரனின் வீட்டுக்கு போக வேண்டாம் மகளே! உனக்கு நாங்கள் இருக்கிறோம் என்றெல்லாம் சொல்லி அவளை மேலும் உசுபேத்திவிடக்கூடாது. பிரச்சனை என்று பிறந்த வீட்டுக்கு வந்த பெண் பிள்ளையை, பெற்றோர் நீண்ட நாட்களாக தன் வீட்டிலேயே அவளை தங்க வைத்துக் கொண்டால் தன் மகள் வாழ்க்கை தான் பாழாய் போகும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.


மனைவி தன்னுடைய கணவனின் நல்ல கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு அவனுக்கு பிரியமானவளாக ஆக வேண்டும். அப்போது தான் அவள் சிறந்த இல்லதரசி ஆவாள். இல்லறத்தில் மனைவியின் கடமை மற்றும் கணவனின் உரிமை ஆகியவற்றை மணப்பெண்ணுக்கு திருமணத்திற்கு முன்பும் பின்பும் அவளைச் சேர்ந்தவர்களால் போதிக்கப்பட வேண்டும்.


இஸ்லாம் கூறும் நல்லுபதேசங்களை ஏற்று செயல்படுத்துவோரே சிறந்த முஸ்லிம் ஆவார். அல்லாஹ் நம்மை சிறந்த முஸ்லிம்களாக வாழச் செய்வானாக! ஆமீன்!


மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

No comments:

Post a Comment

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...