Search This Blog

Wednesday, 26 May 2021

மனம் விரும்புதே...

 

மனம் விரும்புதே...

وَيُؤْثِرُونَ عَلَى أَنْفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ

தமக்கே தேவையிருந்தும்கூட தம்மை விடப் பிறருக்கே அவர்கள் முன்னுரிமை வழங்குவார்கள்.    திருக்குர்ஆன்:- 59:9


உலக வாழ்வில் தங்களுக்குக் கிடைத்த வாழ்வாதாரத்தில் பிறருக்கு முன்னுரிமை வழங்குதல் என்பது அவ்வளவு சாதாரணமான விஷயமல்ல. சுயதேவை இருந்தும் பிறருக்கு முன்னுரிமை வழங்குவது என்பது உன்னதமான நற்பண்பாகும். இது இறையச்சத்தின் உச்சநிலை. சாதாரணமாக, இந்நிலையை அடைவது சிரமம். இறை உவப்பையும் மறுமை வெற்றியையும் மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படும் இறையடியார்களால் மட்டுமே இது இயலும்.


இஸ்லாமியத் தலைவர் நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்கள், நபித்தோழர்கள், அவர்கள் வழிவந்த நல்லவர்களிடம் இந்த நற்பண்பு குடிகொண்டிருந்தது. மறுமையில் இறைவனிடம் கிடைக்கும் நற்பரிசைப் பெறுவதில் அவர்கள் காட்டிய ஆர்வமே அதற்குக் காரணம். இப்பண்பு, வலுவான நம்பிக்கை  அசைக்க முடியாத உறுதி மனிதநேயம் துன்பங்களை தாங்கிக் கொள்ளுதல் ஆகிய நற்பண்புகளை உருவாக்குகிறது.


ஜனாதிபதி அபூபக்ர் (ரலி) அவர்கள் தனது இறுதிநேரத்தில் அடுத்த ஜனாதிபதியாக வரப்போகின்ற உமர் (ரலி) அவர்களை அழைத்து கூறியதாவது: உமரே! அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய தேவையைவிட நம்முடைய தேவைக்கு முதலிடம் கொடுப்பார்கள். அவர்களிடமிருந்து நமக்கு வந்தவைகளில் மீதமானவை அவர்களின் குடும்பத்தாரிடம் நாம் அனுப்பிவைப்போம். (அதன்பின் தன் தேவைகளை பூர்த்தி செய்வார்கள்) என்பதை தாங்கள் பார்த்திருப்பீர்கள். நூல்:- ஸஹாபா பாகம்-2 பக்கம்-145


தன்னைவிட...


ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் அபூலுஃலுஆ ஃபைரோஸ் என்பவனால் குத்தப்பட்டு குற்றுயிரும் குலையுயிருமாக இருந்தார்கள். இந்தச் செய்தியை அறிந்த ஆயிஷா (ரலி) அவர்கள் தனது வீட்டில் அழுதுகொண்டு அமர்ந்திருந்தார்கள். அப்போது  அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அங்கு சென்று அன்னையவர்களை நோக்கி! "என் தந்தை உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் தங்களுக்கு சலாம் கூறுகிறார். (உங்கள் வீட்டில் தான் அருமை நாயகம்-ஸல் அவர்களும், அபூபக்ர்-ரலி அவர்களும் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். எனவே, அந்த) தம்முடைய இரு தோழர்களுடன் (உங்கள் வீட்டில்) தம்மையும் அடக்கம் செய்வதற்கு தங்களிடம் அனுமதி கேட்கிறார்" என்று கூறினார்.


அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், ( كُنْتُ أُرِيدُهُ لِنَفْسِي، وَلأُوثِرَنَّ بِهِ الْيَوْمَ عَلَى نَفْسِي ) "எனக்காக அ(ந்த இடத்)தை (ஒதுக்கிக் கொள்ள) நான் நினைத்திருந்தேன். (இப்போது அங்கு அடக்கம் செய்யப்படுவதற்கு) இன்று என்னைவிட அவருக்கே முதலிடம் கொடுத்துவிட்டேன். (அவரையே அந்த இடத்தில் அடக்கிக் கொள்ளுங்கள்)" என்று கூறினார்கள்.             அறிவிப்பாளர்:- அம்ர் பின் மைமூன் (ரஹ்) அவர்கள் நூல்:- புகாரீ-3700


தனது ஜோடியைவிட...


இவர்கள் (தங்கள்) நேர்ச்சைகளையும் நிறைவேற்றுவார்கள். நீண்ட வேதனையுடைய (மறுமை) நாளை பயந்து கொள்வார்கள். மேலும், அல்லாஹ்வின் மீதுள்ள அன்பின் காரணமாக ஏழைகளுக்கும், அனாதைகளுக்கும், சிறைப்பட்டவர்களுக்கும் உணவளிப்பார்கள். திருக்குர்ஆன்:- 76:7,8


அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருமுறை அலீ (ரலி) அவர்களும் ஃபாத்திமா (ரலி) அவர்களும் நேர்ச்சை நோன்பை வெறும் தண்ணீரை மட்டும் பருகிய நிலையில் நோற்கத் துவங்கினார்கள். அப்போது வீட்டில் உணவு ஏதும் இல்லை. அன்று அலீ (ரலி) அவர்கள் ஒரு யூதனிடம் வேலை செய்து ஒரு மரக்கால் கோதுமை கூலியாக வாங்கி வந்தார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்கள் அதை அரைத்து மாவாக்கி ரொட்டி சுட்டார்கள். அந்த ரொட்டியைக் கொண்டு நோன்பு துறக்க எண்ணினார்கள். அப்போது வாசலில் ஒரு யாசகர் வந்து, "நான் ஒரு ஏழை. எனக்கு ஏதேனும் சாப்பிடத் தாருங்கள்" என்று கேட்டார்.  இதனை செவியுற்ற அந்த குடும்பத்தினர் யாசித்தவருக்கு தான் சமைத்த ரொட்டியைக் கொடுத்து விட்டு பட்டினியாக இருந்தனர்.


இதே நிலையில் இரண்டாவது நாள் நோன்பு நோற்று, அலீ (ரலி) அவர்கள் அதே யூதனிடம் வேலை செய்து ஒரு மரக்கால் கோதுமை கூலியாக வாங்கி வந்தார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்கள் அதை அரைத்து மாவாக்கி ரொட்டி சுட்டார்கள் அந்த ரொட்டியைக் கொண்டு நோன்பு துறக்க எண்ணினார்கள். அப்போது வாசலில் ஒரு யாசகர் வந்து, "நான் ஒரு அநாதை. எனக்கு ஏதேனும் சாப்பிடத் தாருங்கள்" என்று கேட்டார்.  இதனை செவியுற்ற அந்த குடும்பத்தினர் யாசித்தவருக்கு தான் சமைத்த ரொட்டியைக் கொடுத்து விட்டு பட்டினியாக இருந்தனர்.


இதே நிலையில் மூன்றாவது நாள் நோன்பு நோற்று, அலீ (ரலி) அவர்கள் அதே யூதனிடம் வேலை செய்து ஒரு மரக்கால் கோதுமை கூலியாக வாங்கி வந்தார்கள். பாத்திமா (ரலி) அவர்கள் அதை அரைத்து மாவாக்கி ரொட்டி சுட்டார்கள் அந்த ரொட்டியைக் கொண்டு நோன்பு துறக்க எண்ணினார்கள். அப்போது வாசலில் ஒரு யாசகர் வந்து, "நான் ஒரு கைதி. எனக்கு ஏதேனும் சாப்பிடத் தாருங்கள்" என்று கேட்டார். இதனை செவியுற்ற அந்த குடும்பத்தினர் யாசித்தவருக்கு தான் சமைத்த ரொட்டியைக் கொடுத்து விட்டு பட்டினியாக இருந்தனர்.


அந்நேரம் தம் மகள் ஃபாத்திமா (ரலி) அவர்கள் வீட்டுக்கு வந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மகள் வீட்டாரின் பசிக்கொடுமை அறிந்ததும் மகளை நெஞ்சோடு கட்டியணைத்து அல்லாஹ்விடம் இறைஞ்சினார்கள். இந்த குடும்பத்தாரின் தொடர்பாகவே மேற்காணும் (76:8) திருவசனம் அருளப்பட்டது.  நூல்:- தஃப்சீர் துர்ருல் மன்ஸூர்


தனது பிள்ளைகளைவிட...


அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது.  (ஒருமுறை என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள், பள்ளிவாசலுக்குச் சென்றார்கள். அங்கு ஒருவர் யாசித்துக் கொண்டிருந்தார். உடனே என்னுடைய கையில் இருந்த ஒரு ரொட்டித் துண்டை என்னிடமிருந்து வாங்கி, யாசிப்பவருக்குக் கொடுத்தார்கள்.      நூல்:- அபூதாவூத்-1422


ஃபாத்திமா (ரலி) அவர்கள் தமக்கு உதவ ஒரு பணிப்பெண் வேண்டும் என்று தம் தந்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்க எண்ணினார்கள். இதற்காக அவர்கள் தம் தந்தையை சந்திக்க சென்றபோது அண்ணலார் தம் தோழர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்கள் அவர்கள் திரும்பி விட்டார்கள். பிறகு அலீ (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அண்ணலாரிடம் வந்து, “நாயகமே! உங்கள்  மகளுக்கு பணிப்பெண் ஒருவரை தாருங்களேன்” என்று கேட்டார்கள்.


அதற்கு அண்ணலார், “தம் தோழர்களில் பலர் உண்ண உணவுகூட இல்லாமல் வாடும்போது உங்களுக்கு பணிப்பெண் எதற்கு? என்னுடைய தோழர்களின் நிலை சீராகும் வரை எம்மால் ஒன்றும் செய்ய இயலாது” என்று சொல்லிவிட்டார்கள். நூல்:- ஃபத்ஹுல் பாரீ


அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது. அன்சாரித் தோழர் ஒருவரிடம் இரவில் விருந்தாளி ஒருவர் வந்தார். அப்போது அத்தோழரிடம் தமக்கும் தம் குழந்தைகளுக்கும் தேவையான உணவைத் தவிர வேறெதுவும் இல்லை. எனவே அவர் தம் மனைவியிடம், ( لاِمْرَأَتِهِ نَوِّمِي الصِّبْيَةَ وَأَطْفِئِي السِّرَاجَ وَقَرِّبِي لِلضَّيْفِ مَا عِنْدَكِ ) "குழந்தைகளை (எப்படியாவது சமாதானப்படுத்தி) தூங்க வைத்துவிடு. விளக்கை (ஏற்றி விடுவது போல் பாவனை செய்து) அணைத்து விடு. உன்னிடம் உள்ள உணவை விருந்தாளிக்கு அருகில் வைத்து விடு" என்று கூறினார். இது தொடர்பாகவே (தலைப்பில் காணும் 59:9) திருவசனம் அருளப்பெற்றது.         நூல்:- புகாரீ-4889, முஸ்லிம்-4176, திர்மிதீ-3216


அஸ்லம் (ரலி) அவர்கள் கூறியதாவது. உமர் (ரலி) அவர்களிடம் (உணவு வைக்கும்) ஒன்பது தட்டுகள் இருந்தன. (அவ்வபோது) அவற்றில் பழ வகைகள் அல்லது ஏதேனும் மற்ற பொருள்களை வைத்து அண்ணல் நபி (ஸல்) அவர்களின் மனைவியர்களுக்கு அனுப்பி வந்தார்கள். தன் மகளும் அண்ணலாரின் மனைவியுமான ஹஃப்சா (ரலி) அவர்களுக்கு இறுதியாக அனுப்புவார்கள். (இறுதியில்) ஏதேனும் குறைந்துவிட்டால் ஹஃப்சா (ரலி) அவர்களுடைய பாகத்தில்தான் குறைவு ஏற்படும்.


ஒருமுறை உமர் (ரலி) அவர்களுக்கு அன்பளிப்பாக ஒரு ஒட்டகம் வந்தது. உமர் (ரலி) அவர்கள் அதை அறுக்குமாறு கூறினார்கள். நான் அறுத்து விட்டேன். இந்த ஒன்பது தட்டுகளிலும் அந்த ஒட்டக இறைச்சி வைத்து அதை அண்ணலாரின் மனைவியருக்கு அனுப்பினார்கள். அதில் மீதமிருந்த இறைச்சியை சமைக்க கட்டளையிட்டார்கள். அது சமைக்கப்பட்ட பின்னர் முஹாஜிர்களையும், அன்ஸார்களையும் (அதை உண்பதற்கு) அழைத்தார்கள்.   நூல்:-  முவத்தா மாலிக்


உமர் (ரலி) அவர்கள், தனது மகள் ஹஃப்சா (ரலி) அவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களின்  மனைவியாக இருந்தாலும், தனது மகளைவிட அண்ணலாரின் பிற மனைவியருக்கு முன்னுரிமை கொடுப்பதை விரும்புகிறார்கள்.


ஒருமுறை ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் பொது நிதியிலிருந்து குடிமக்கள்  ஒவ்வொருவருக்கும் அவரவர்கள் தரத்திற்கு ஏற்ப நிதி வழங்கிக்கொண்டிருந்தார்கள்.  அதில் தனது மகன் அப்துல்லாஹ் (ரலி) அவர்களுக்கு 3000 வெள்ளிக்காசுகள் என்று நிர்ணயித்தார்கள். அப்போது அவர், "என் தந்தையே! "உசாமாவுக்கு 4000 மும்,  எனக்கு 3000 மும் நிர்ணயத்துள்ளீர்களே காரணம் என்ன?" என்று வினவினார். அதற்கு உமர் (ரலி) அவர்கள்,   ( اِنَّ اَبَاهُ كَانَ اَحَبَّ اِلَي رَسُولِ اللّٰهِ صلعم مِّن اَبِيكَ وَهُوَ كَانَ اَحَبَّ اِلَي رَسُولِ اللّٰهِ صلعم مِّنكَ ) "உன் தந்தையை விட அவரின் தந்தை அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு பிரியமானவராகும். மேலும், அவர் (உசாமா பின் ஸைத்) உன்னைவிட அண்ணலாருக்கு மிகப் பிரியமானவராகும்" என்று கூறினார்கள்.   நூல்:- ஹயாத்துஸ் ஸஹாபா பாகம்-2, பக்கம்-275


நம்மை விட நம்முடைய குடும்பத்தைவிட பிறருக்கு நாம் செய்யும் உபகாரங்கள் மிக சிறந்த தியாகங்களேயாகும். எனவே, இது போன்ற தியாயங்களை மனத்தூய்மையுடன் செய்யும் வாய்ப்பை அல்லாஹ் நம் அனைவருக்கும் வழங்குவானாக! ஆமீன்!


மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

No comments:

Post a Comment

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...