Search This Blog

Monday, 24 May 2021

தலையெழுத்து

 

தலையெழுத்து

مَا أَصَابَ مِنْ مُصِيبَةٍ فِي الْأَرْضِ وَلَا فِي أَنْفُسِكُمْ إِلَّا فِي كِتَابٍ مِنْ قَبْلِ أَنْ نَبْرَأَهَا إِنَّ ذَلِكَ عَلَى اللَّهِ يَسِيرٌ  لِكَيْلَا تَأْسَوْا عَلَى مَا فَاتَكُمْ وَلَا تَفْرَحُوا بِمَا آتَاكُمْ وَاللَّهُ

பூமியில் ஏற்படுகின்ற அல்லது உங்களின் மீது நிகழ்கின்ற எந்தத் துன்பமானாலும் அதை நாம் உருவாக்குவதற்கு முன்பே அதைக் குறித்து ஒரு புத்தகத்தில் (அதாவது லவ்ஹுல் மஹ்ஃபூள் எனும் விதி ஏட்டில்) எழுதி வைக்காமல் இல்லை. நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு மிக எளிதானதே! (இவையனைத்தும்) எதற்காகவெனில், உங்களைவிட்டு தவறிப் போனதைப் பற்றி நீங்கள் கவலை கொள்ளாதிருக்கவும், (அல்லாஹ்) உங்களுக்கு கொடுத்ததைப் பற்றி, நீங்கள் கர்வம் கொள்ளாதிருக்கவும் (இதனை உங்களுக்கு அறிவிக்கின்றான்.) திருக்குர்ஆன்:- 57:22,23

இறைவனால் முன்கூட்டியே வகுக்கப்பட்டதும் மனிதனால் மாற்ற இயலாததுமான நியதிக்கே "விதி" என்பர். விதியை இறைவன் மட்டுமே அறிவான். ஒன்று நடந்து முடிந்த பிறகே மனிதனால் அதைத் தீர்க்கமாக அறியமுடியும். நடப்பதற்கு முன், சில அறிகுறிகளை வைத்து இப்படி நடக்கும் என மனிதனால் ஊகிக்க முடியும். விதியை ஏற்படுத்தியது இறைவன் என்பதால், அவனுக்கு அறிகுறிகள் அவசியமில்லை. அறிகுறிகளை உண்டாக்குவது கூட இறைவனின் செயலே.

மார்க்கத்தில் விதியை குறித்து "அல்கதர்" (இறைவனின் தீர்மானம்) மற்றும் "அல்களா" (தீர்ப்பு) ஆகிய இரு சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. சில அறிஞர்கள், “இரு சொற்களுக்கும் இடையே சிறிது வேறுபாடு உண்டு. அதாவது "அல்கதர்" என்பது இறைவன் ஆதியிலேயே முடிவு செய்துவிட்ட தீர்மானத்தைக் குறிக்கும்; "அல்களா" என்பது தீர்மானத்திற்கேற்ப ஒவ்வொன்றும் நடப்பதைக் குறிக்கும்” என்பர். ஆக, எது, எங்கே, எப்படி, எப்போது நடக்கும் என இறைவன் வகுத்த தீர்மானமான இறுதிமுடிவு "விதி" ஆகும். இதை நம்புவது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றாகும்.

மனிதனாகப் பிறப்பது மனிதன் கையில் இல்லை. ஆணாகவோ பெண்ணாகவோ பிறப்பதும் அவன் விருப்பத்தில் இல்லை. நிறம், இனம், உயரம், அழகு, அறிவு, குடும்பம் ஆகிய எதைத் தேர்ந்தெடுக்கும் உரிமையும் மனிதனுக்குக் கிடையாது. இவை எல்லாவற்றையும் முடிவு செய்வதும் தேர்ந்தெடுப்பதும் இறைவன்தான். அவன் தன் தீர்மானத்தின்படி ஒவ்வொன்றையும் செய்து முடிக்கின்றான். இத்தீர்மானமே "விதி" எனப்படுகிறது.

பொருந்திக் கொள்ளவேண்டும்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ( اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الصِّحَّةَ وَالْعِفَّةَ وَالأَمَانَةَ وَحُسْنَ الْخُلُقِ وَالرِّضَا بِالْقَدَرِ ) "இறைவா! உடல்நலத்தையும், பத்தினித்தனத்தையும், அமானிதம் பேணும் தன்மையையும், அழகிய நற்குணத்தையும், விதியை ஏற்றுக் கொள்ளும் தன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன்" என்று அதிகம் பிரார்த்தனை செய்பவர்களாக இருந்தார்கள். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் நூல்:- அல்அதபுல் முஃப்ரத்-307

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مِنْ سَعَادَةِ ابْنِ آدَمَ رِضَاهُ بِمَا قَضَى اللَّهُ لَهُ وَمِنْ شَقَاوَةِ ابْنِ آدَمَ تَرْكُهُ اسْتِخَارَةَ اللَّهِ وَمِنْ شَقَاوَةِ ابْنِ آدَمَ سَخَطُهُ بِمَا قَضَى اللَّهُ لَهُ ) மனிதனுக்குரிய (நன்மை) நற்பாக்கியம், தனக்காக இறைவன் விதியில் எழுதியதை மனநிறைவோடு ஏற்றுக்கொள்வதாகும். மனிதனுக்குரிய (தீமை) தூர்பாக்கியம், நல்லதைத் தனக்காக தேர்வு செய்யுமாறு இறைவனிடம் கோராமலிருப்பதாகும். மேலும் மனிதனுக்குரிய (தீமை) துர்பாக்கியம், தனக்காக இறைவன் விதியில் எழுதியதை வெறுப்பதாகும்.  அறிவிப்பாளர்:- சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் நூல்:-  திர்மிதீ-2077

தனக்கு எது நன்மையாகும், எது தீமையாகும் என்பது கூட மனிதனுக்கு உறுதியாகத் தெரியாது. மேலோட்டமாகவும் தற்காலிகமாகவோ கணக்குப் போடுபவனே மனிதன். ஆகவே, நல்லதைத் தனக்குத் தேர்வு செய்து கொடுக்குமாறு இறைவனிடமே மனிதன் கூற வேண்டும். பிறகு விதியின்படி எது வருகிறதோ அதை வெறுக்காமலும் எரிச்சலின்றியும் முழுமனதோடு ஏற்றுக் கொள்ள வேண்டும். இதுவே மனிதனின் நற்பாக்கியத்திற்கான அடையாளமாகும். விதியின் மீது வெறுப்படைவது துர்பாக்கியத்திற்கான அறிகுறியாகும்.

விதியை மனநிறைவோடு ஏற்றுக்கொள்ளாவிட்டால், விரக்தியும் துக்கமும் தான் மேலோங்கும். இதனால் மன அழுத்தம் ஏற்பட்டு, வாழ்க்கையில் பிடிப்பு தளர்ந்து எதிலும் (இறைவழிபாட்டில் கூட) மனம் ஒட்டாமல் போய்விடும். அத்துடன் விதியை வெறுப்பதால் இறைவனின் வெறுப்புக்கு ஆளாக நேரிடும் என்கிறது இந்த நபிமொழி.

முஹம்மது இப்னு கஅப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். மூசா (அலை) அவர்கள் அல்லாஹ்விடம்,  ( أَيْ رَبِّ أَيُّ خَلْقِكَ أَعْظَمُ ذَنْبًا )ரப்பே! உன்னுடைய படைப்பில் மிகப்பெரிய பாவத்திற்குரியவன் யார்?” என்று கேட்டார்கள். அல்லாஹ், ( الَّذِي يَتَّهِمُنِي ) “என் மீது சந்தேகம் அடைந்து, குழப்பம் செய்பவரே பாவத்தால் மிகப் பெரியவன்” என்று கூறினான்.

மூசா (அலை) அவர்கள் ( أَيْ رَبِّ وَهَلْ يَتَّهِمُكَ أَحَدٌ ) “உன்மீது ஒருவர் சந்தேகம் கொள்வாரா? என்று கேட்டார்கள். அல்லாஹ், ( نَعَمْ الَّذِي يَسْتَخْيِرُ بِي وَلَا يَرْضَى بِقَضَائِ ) “ஆம்! என்னுடைய தீர்ப்பை பொருந்தி ஏற்றுக் கொள்ளாமல், நலவை மட்டுமே தேடுபவன் மிகப்பெரிய பாவத்திற்குரியவன்” என்று கூறினான். நூல்:- இப்னு அபீதுன்யா

நபி மூசா (அலை) அவர்களுக்கும் இறைவனுக்கும் மத்தியில் நடைபெற்ற உரையாடலின் போது இறைவன், "யார் யார் எப்படி எப்படி நடப்பார்கள் என்பதை முன்கூட்டியே நான் தீர்மானித்துவிட்டேன். அதற்குரிய ஆய்வு முடிந்து விட்டது. என்னுடைய இந்தத் தீர்ப்பை ஏற்றுக் கொண்டவர்களுக்கு என் அன்பு உண்டு. வெறுப்பவர்களுக்கு என் வெறுப்பே பரிசாகும்" என்றான். நூல்:- இஹ்யா

விழிப்புணர்வு பறந்து விடும்

நீங்கள் எங்கிருந்தாலும் மரணம் உங்களை அடைந்தே தீரும்; (பாதுகாப்புக் கருதி விழிப்புணர்வோடு) உயர்ந்த வலுவான கோட்டைகளில் நீங்கள் இருந்தாலும் சரியே! திருக்குர்ஆன்:- 4:78

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். எந்த விழிப்புணர்வும் விதியிலிருந்து காப்பாற்றாது. நூல்:- முஸ்னத் அஹ்மத்

ஒருநாள் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். நபி சுலைமான் (அலை) அவர்களிடம் இருந்த கொண்டலாத்தி (ஹுத்ஹுத்) பறவை, நிலத்தடி நீரோட்டத்தை நபிகளாருக்குத் தெரிவிக்கும் நிபுணராக இருந்தது. நபிகளார் வனப்பகுதியில் இருக்கையில் அப்பறவைக்கு ஆணையிடுவார்கள். அது சென்று அவர்களுக்காக நிலத்தடி நீரை தேடிக் கண்டுபிடித்து அறிவிக்கும். ஒருநாள் இவ்வாறு சொல்லிக்கொண்டிருந்தார்கள். கூட்டத்தில் (வழிகெட்ட) காரிஜிய்யா கொள்கையுடைய “நாஃபிஉ பின் அல்அஸ்ரக்” என்பவர் இருந்தார். அவர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் அதிகமாக ஆட்சேபம் தெரிவிப்பவராவார்.

அவர், "இப்னு அப்பாஸே! சற்று நிறுத்துங்கள்! இன்று நீங்கள் சிக்கிக் கொண்டீர்கள்" என்றார். அன்னார், "ஏன்?" என்று வினவ, அம்மனிதர், ஹுத்ஹுத் நிலத்தடி நீரைக் கண்டுபிடித்து விடுமென்று கூறுகிறீர்கள். ஆனால், சிறுவன் ஒருவன் அதைப் பிடிக்க பொறி ஒன்றில் தானியங்களைப் போட்டு, அப்பொறியின் மீது மண்ணைத் தூவி விடுகிறான். அப்போது அந்த தானியங்களை உண்ண ஹுத்ஹுத் அங்கு வருகிறது. பொறியில் மாட்டிக்கொள்கிறது. சிறுவன் அதைப் பிடித்து விடுகிறான்" என்று கூறினார்.

(அதாவது மண்ணுக்கு அடியில் மறைந்துள்ள பொறியையே கண்டுபிடிக்க முடியாத அப்பறவை, நிலத்தடி நீரை எப்படி கண்டுபிடிக்கும்?)

அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ( لَوْلَا أَنْ يَذْهَبَ هَذَا فَيَقُولُ رَدَدْتُ عَلَى ابْنِ عَبَّاسٍ لَمَا أَجَبْتُهُ ) "இவர் இங்கிருந்து சென்று 'நான் இப்னு அப்பாஸ் கூறியதற்கு மறுப்பு தெரிவித்தேன். (அவரால் எனக்குப் பதில் கூற முடியவில்லை) என்று சொல்லமாட்டார் என்றிருந்தால், அவருக்கு நான் பதில் கூற மாட்டேன்" என்று சொன்னார்கள்.

பிறகு அவரிடம், ( وَيْحَكَ! إِنَّهُ إِذَا نَزَلَ القَدَر عَمِيَ الْبَصَرُ وَذَهَبَ الحَذَر )  "உமக்கு அழிவு தான்! விதி இறங்கிவிட்டால் கண் குருடாகி விடும். முன்னெச்சரிக்கை பறந்து விடும் (என்பது உமக்குத் தெரியாதா?)" என்றார்கள். (அதாவது பொறியில் பறவை சிக்கிக்கொள்ள விதிதான் காரணம்.)

அன்னாரிடம் நாஃபிஉ, "அல்லாஹ்வின் மீதாணையாக! இனிமேல் குர்ஆனில் எந்த விஷயத்தைப் பற்றியும் உங்களிடம் ஒருபோதும் தர்க்கம் செய்யவே மாட்டேன்" என்று கூறினார். நூல்:-  தப்ஸீர் இப்னு அபீ ஹாத்திம், இப்னு கசீர் அந்நம்ல் வசனம்-20

எழுதப்பட்டதே கிடைக்கும்

கணவன், மனைவி, மகன் ஆக மூன்று பேர் கொண்ட ஒரு குடும்பம் இருந்தது. இம்மூவருக்கும் போர்த்திக்கொள்ள ஒரே ஒரு போர்வை மட்டும் இருந்தது. அம்மூவரும் நபி மூசா (அலை) அவர்களிடம் வந்து, "இறைத்தூதரே! இறைவனிடம் எங்கள் சிரமத்தை எடுத்துக்கூறி, எங்களுக்கு மூன்று போர்வையில் கிடைக்க வழி செய்யுங்கள்" என்று வேண்டிக்கொண்டனர். மூசா (அலை) அவர்களும் அதற்கு சம்மதித்து,  "இறைவா! இம்மூவருக்கும் மூன்று போர்வைகள் கொடுத்து, கஷ்டம் இல்லாமல் இருக்க கருணை புரிவாயாக என பிரார்த்தித்தார்கள்.

இறைவன், “மூசாவே! அம்மூவருக்கும் ஒரே ஒரு போர்வை என்று ஆதியில் எழுதிவிட்டேன் அதை அழிக்க முடியாது” என்றான். மூசா (அலை) அவர்கள், “இறைவா! தயவுசெய்து அவர்களின் தேவையை நிறைவேற்றி சிரமத்தை நீக்குவாயாக!” என்று  மீண்டும் மீண்டும் இதையே பிடிவாதமாகப் பிரார்த்தித்துக் கொண்டே இருந்தார்கள்.

இறைவன், மூசா (அலை) அவர்களின் பிடிவாதம் கண்டு சம்மதித்து, "மூசாவே! நாளைய தினம் அம்மூவரும் தமக்கு வேண்டியதைக் கேட்டுப் பிரார்த்திக்கலாம். என் வல்லமையின் மீதாணையாக! அவர்கள் கேட்பதையெல்லாம் கட்டாயம் கொடுத்து விடுவேன். ஆனால் ஒவ்வொருவரின் முதல் பிரார்த்தனை ஒன்றையே ஏற்றுக் கொள்வேன்" என்று உறுதியளித்தான். மூசா (அலை) அவர்கள் இந்த நற்செய்தியை அம்மூவரிடமும் தெரிவித்தார்கள்.

மறுநாள் காலை கணவன், "இறைவனிடம் பிரார்த்திக்க ஆற்றில் போய் குளித்து விட்டு வருகிறேன்" என  கூறினான். மனைவி, "நீங்கள் இறைவனிடம் எதைக் குறித்து பிரார்த்திக்கப் போகிறீர்கள்? என்று  கேட்டாள். கணவன், "நான் அரசனாக வேண்டும் என இறைவனிடம் பிரார்த்திக்க போகிறேன்" என்று கூறிவிட்டு ஆற்றுக்கு சென்று விட்டான்.

மனைவி, தன் கணவன் அரசனாகி விட்டால் என்னை ஏறெடுத்தும் பார்க்க மாட்டான். என்னை கைவிட்டு விட்டு ஒரு அரசகுமாரியை  மணந்து கொண்டால், நான் என்ன செய்ய முடியும்? எனவே, நானே இளவரசி ஆகிவிட வேண்டும் என்று எண்ணினாள்.

எனவே அவள், "இறைவா! என் வயதை குறைத்து, என் உருவத்தை (மறைத்து) இளம் வயதுள்ள இளவரசியாக்கி, அழகு முகம் தந்து, இளவரசிக்குரிய ஆடையும் ஆபரணங்களும் தந்துவிடு" என்று பிரார்த்தித்தாள். அவளின் பிரார்த்தனை முடிந்த மறு வினாடியே அவள் பிரார்த்தித்தப்படியே மாறிவிட்டாள். அப்போது அவளுக்கு கிடைக்கப்பெற்ற உடல் அழகையும் ஆடை அலங்காரங்களையும் கண்டு மனம் பூரித்தவளாகத் தன் கணவனின் வருகையை எதிர்பார்த்து வெளியே நின்று கொண்டிருந்தாள்.

அப்போது வேட்டையாடி விட்டு தன் அரண்மனைக்கு திரும்பி கொண்டிருந்த ஓர் அரசன், வழியில் இவள் நிற்பதை பார்த்து இவர் மீது காதல் கொண்டு, தன்னுடைய அரண்மனைக்கு வரும்படி அழைத்தான். அவளும் தன் கணவன்தான் அரசனாக வந்து இருக்கிறான் என்றெண்ணி அவனுடன் சென்று விட்டாள்.

அவள் சென்று விட்ட சில நிமிடங்களுக்கு பின்னர் ஆற்றுக்கு குளிக்கச் சென்ற அந்தக் கணவன் குளித்துவிட்டுத் தன் குடிசைக்கு வந்தபோது, அங்கு தன் மனைவி இல்லாததை கண்டு, தன் மகனிடம் விசாரித்தான். அம்மகன் தன்னுடைய தாய் இளம் வயது இளவரசியாக மாறியதைப் பற்றியும், வழியில் வந்த ஒரு அரசனுடன் சென்று விட்டதையும் சொல்லி அழுதான். இதைக் கேட்டதும் அந்த கணவனுக்கு பெரும் ஆத்திரமும் கோபமும் வந்தது.

ஆகவே அவன், “இறைவா! அவள் எங்கிருந்தாலும் சரி, அவளை பன்றி உருவத்தில் மாற்றி விடு!" என்று (சபித்து) பிரார்த்தித்தான். அந்த அரசனுடன் இளவரசி உருவத்தில் சென்று கொண்டிருந்த அவள், தன் கணவனின் சாபத்தினால் பன்றியாக மாறி விட்டாள். இளவரசி பன்றியாக உருமாறியதை பார்த்த அந்த அரசன், இவள் பெண் அல்ல. ஏதோ ஒரு மாயை! அதனால்தான் ஒவ்வொரு வேளைக்கும் ஒவ்வொரு உருவமாக மாறுகிறாள் என்றெண்ணி பயந்து, அந்த பன்றியை அங்கேயே துரத்தி விட்டு சென்று விட்டான்.

நடுக்காட்டில் விடப்பட்ட பன்றி உருவத்தில் உள்ள அவள் மிகுந்த கவலையுடன், பேராசை கொள்வதால் ஏற்படும் கேடு எத்தகைய கடினமானது,  என்றெண்ணி கண்ணீர் வடித்தவளாகக் குடிசையை நோக்கித் திரும்பி வந்தாள்.

குடிசையின் வாசலில் ஒரு பன்றி அழுது கொண்டு நிற்பதை பார்த்த மகன், தன் தந்தையின் சாபத்தால் தன் தாய் பன்றி உருவத்தில் இருக்கிறாள் என்றெண்ணி கண்கலங்கி அம்மகன், "இறைவா! என் அன்பான அன்னையை பழைய உருவத்தில் மாற்றி அருள் புரிவாயாக!" என்று பிரார்த்தித்தான். அந்த பிரார்த்தனையின் மறுகணமே அவள் தன் பழைய உருவத்தை பெற்றாள். மூசா (அலை ) அவர்களுக்கு இறைவன் அளித்த வாக்குறுதியின்படி மூவரின் பிரார்த்தனைகளையும் ஏற்று அவர்கள் கேட்டபடியே கொடுத்துவிட்டான். என்றாலும் அவர்களுக்கு எஞ்சியது அந்த ஒரே ஒரு போர்வை தான்.

"உடம்பில் எண்ணெய் தேய்த்தே புரண்டாலும் ஒட்டுகிற மண் தான் ஒட்டும்" என்பது கிராமத்துச் சொல்வழக்கு

ஒருவன் திருமணம் முடித்த புது மனைவியிடம் உனக்கு என்ன சமைக்க தெரியும்? என்று வினவினான். அவள், "எனக்கு உப்புமா மட்டும் தான் சமைக்க தெரியும்" என்றாள். அவள், திருமணம் முடித்த முதல் நாள் மூன்று வேளையும் உணவாக உப்புமா சமைத்து வைத்தாள். கணவன், புது மனைவியின் சமையல் என்ற பூரிப்பில் அதை சுவைத்து சாப்பிட்டான்.

அதன்பிறகு இந்த உப்புமாவே மூன்று நாட்களும் தொடர்ந்தது. அதனால் கணவனுக்கு இதையே தொடர்ந்து சாப்பிட்டு சலிப்பு ஏற்பட்டது. சரி இன்று ஒரு பெரிய ஹோட்டலுக்கு போய் விரும்பிய உணவை மனைவியுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக சாப்பிடலாம் என்றெண்ணி, மனைவியை அழைத்து கொண்டு பக்கத்தில் உள்ள ஒரு பெரிய ஹோட்டலுக்குள் போய் அமர்ந்தான்.

அங்குள்ள மெனு கார்டை பார்த்து தேவையான உணவை ஆர்டர் செய்யவேண்டும். மெனு கார்டு ஆங்கிலத்தில் உள்ளது. ஆனால் இவனுக்கு ஆங்கிலம் தெரியாது. என்ன செய்வது என்று யோசித்துவிட்டு, நம்பர் 7 ல் உள்ள உணவு வேண்டும் என்றான். கொஞ்சம் நேரம் கழித்து வந்த உணவு உப்புமாவாக இருந்தது. அதாவது நம்பர் 7 ல் உப்புமா என எழுதப்பட்டிருந்தது. அவன் அறியவில்லை. இங்கு வந்தும் உப்புமாவை தான் ஆர்டர் செய்துள்ளேனா? இது என்ன கொடுமை என்று எண்ணினான்.

அந்த உணவை சாப்பிட்டாலும் சாப்பிடாவிட்டாலும் அதற்குரிய பணம் கொடுக்கவேண்டும். சரி, வேறு வழியில்லை சாப்பிடுவோம் என்றெண்ணி வெறுப்புடன் சாப்பிட்டனர்.  சாப்பிட்டு கொண்டிருக்கும்போதே அருகிலுள்ள டேபிளில் உள்ளவன் புரோட்டாவும் தலைக்கறி குளம்பும் சப்புக்கொட்டி சாப்பிட்டு முடித்துவிட்டு, ஒன்ஸ்மோர் என்றான். மீண்டும் அதே புரோட்டவும் தலைக்கறி குளம்பும் வந்தது. இதைப்பார்த்த இவன் இங்கு சுவைமிகு புரோட்டாவும் தலைக்கறி குளம்பும் வேண்டும் என்பதற்கு "ஒன்ஸ்மோர்" என்று சொல்ல வேண்டும் போலிருக்கிறது என்றெண்ணி, இவனும் "ஒன்ஸ்மோர்" என்றான். கொஞ்ச நேரம் கழித்து மீண்டும் அதே உப்புமா தான் வந்தது. “ஒன்ஸ்மோர்” என்ற ஆங்கிலச் சொல்லுக்கு “மீண்டும் இதுபோன்று வேண்டும்” என்பது தான் அர்த்தம் என்று அவன் அறியவில்லை.

உப்புமாவே வேண்டாம் என்று சுவைமிகு உணவு உண்ண ஹோட்டலுக்கே போனாலும் அங்கும் அதே தான் கிடைக்கிறது. அதாவது இன்றைக்கும் இவருக்கு உப்புமா தான்  உணவு என்பது விதியாகும்.

மாற்றலாம்

ஒவ்வொன்றுக்கும் தவணையும் (குறிப்பிட்டு) எழுதப்பட்டுள்ளது. எனினும் அல்லாஹ் (அதில்) தான் நாடுவதை அகற்றிவிடுகின்றான். (தான் நாடுவதை) இருக்கச்செய்கின்றான். மூல ஏடு (உம்முல் கிதாப்) அவனிடமே உள்ளது. திருக்குர்ஆன்:- 13:38,39

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لاَ يَرُدُّ الْقَضَاءَ إِلاَّ الدُّعَاءُ وَلاَ يَزِيدُ فِي الْعُمُرِ إِلاَّ الْبِرُّ ) தலைவிதியைப் பிரார்த்தனை தவிர வேறெதுவும் மாற்றி விடாது; நல்லறம் தவிர வேறெதுவும் ஆயுளை அதிகமாக்கி விடாது. அறிவிப்பாளர்:- சல்மான் அல்ஃபாரிசீ (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-2065, இப்னுமாஜா-87

விதி மாறும் என்பதற்கு அறிஞர்கள் இரண்டு விதமான விளக்கங்களை கூறியுள்ளனர்.

முதல் விளக்கம்: மேற்காணும் திருவசனத்தின் கூற்றின்படி இரண்டு வகை பதிவேடுகள் உள்ளன என தெரிகிறது. ஒன்று எல்லாவற்றின் முதல் கட்ட தவணைகள் பதிவு செய்யப்பட்டுள்ள ஏடு. இந்த ஏட்டில் உள்ள தவணைகள்தான் பொறுப்பிலுள்ள வானவர்களுக்கு முதலில் தெரியவரும். இந்த பதிவேடு மாற்றத்திற்குரியது.

இரண்டாவது வானவர்களுக்கும் தெரியாத இறுதிக்கட்ட தவணைகள் பதிவு செய்யப்பட்டுள்ள மூல ஏடு. இது அல்லாஹ்விடம் மட்டுமே இருக்கும். முந்திய பதிவேட்டில் உள்ளதும் அதில் வரும் மாற்றமும் இதில் பதிவாகியிருக்கும். முந்தியதை "கிதாப்" (பதிவு) என்றும் இரண்டாவதை "உம்முல் கிதாப்" (மூல ஏடு) என்றும் இவ்வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

ஒருவர் இன்ன வயதில் இன்ன இடத்தில் இன்ன சோதனையால் தாக்கப் படுவார் என்று முந்திய ஏட்டில் பதிவாகியிருக்கும். ஆனால், அவர் செய்யும் பிரார்த்தனையால் சோதனையிலிருந்து அவர் காக்கப்படுவார் என்பதும் சேர்த்து மூல ஏட்டில் பதிவாகியிருக்கும். அவ்வாறே இன்னவர் இந்த வயதில் இறப்பார் என முதல் ஏடு சொல்லும். ஆனால், அவர் செய்த தர்மத்தால் கூடுதல் ஆண்டுகள் வாழ்வார் என்பதையும் சேர்த்து இரண்டாவது ஏடு பதிவு செய்திருக்கும். "விதி மாறும்” என்பது முதலாவது ஏட்டையும் "விதி மாறாது” என்பது இரண்டாவது ஏட்டையும் குறிக்கும்.

இரண்டாவது விளக்கம்: விதி மாறும் என்றால், சோதனை வந்தாலும் அவர் செய்த பிரார்த்தனையின் பலனால் சோதனையின் தாக்கம் கடினமாக இருக்காது. சோதனையே வராததுபோல் அதனை அவர் எளிதாகச் சமாளித்து விடுவார். அவ்வாறே தானதர்மங்களாலும் நல்லறங்களாலும் கூடுதல் ஆண்டு வாழ்ந்தவரைப் போன்று நன்மைகளைப் பெறுவார். ஆக, விதியில் மாற்றமே வந்தாலும் அதுவும் அல்லாஹ்வுக்கு முன்பே தெரியும். அம்மாற்றமும் அவனால் உருவாகக்கூடியதே. நூல்:- துஹ்ஃபத்துல் அஹ்வதீ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( تَعَوَّذُوا بِاللَّهِ مِنْ جَهْدِ الْبَلاَءِ وَدَرَكِ الشَّقَاءِ وَسُوءِ الْقَضَاءِ وَشَمَاتَةِ الأَعْدَاءِ ) நீங்கள் அல்லாஹ்விடம் தாங்கமுடியாத சோதனை, அழிவில் வீழ்வது, விதியின் கேடு, எதிரிகளால் ஏற்படும் மன உளைச்சல் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்புக் கோருங்கள். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-6616,முஸ்லிம்-5246

அல்கதர்' என்பது அஸ்திவாரத்தைப் போன்றும், 'அல்களா' என்பது அதில் எழுப்பப்படும் கட்டடத்தைப் போன்றும் அமையும். கதர் (இறைவனின் தீர்மானம்) என்பது, 'களா'வாகி நடைமுறைக்கு வராத வரை அதை இறைவனே மாற்றுவதற்கு சாத்தியமுண்டு என விளங்குகிறது. நூல்:- இர்ஷாதுஸ்ஸாரீ

விதியை மாற்ற முடியாது என்றானபின், விதியின் கேட்டிலிருந்து இறைவனிடம் பாதுகாப்புக் கோருவதால் என்ன பலன் என எண்ணக்கூடாது. ஏனெனில், இன்னவருக்கு இன்ன சோதனை ஏற்படவிருந்தது; அவர் இறைவனிடம் மன்றாடிப் பிரார்த்தித்தார்; அதையடுத்து அச்சோதனையிலிருந்து அவர் காக்கப்பட்டார் என்றே விதியில் எழுதப்பட்டிருக்கும். எனவே பிரார்த்தனை செய்வது விதிக்கு எதிரானதன்று; மாறாக, விதிக்கேற்ப நடக்கும் ஒரு செயல்தான். நூல்:- ஃபத்ஹுல் பாரீ

ஒருவரது ஆயுள், பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் முன்பே தீர்மானிக்கப்பட்ட விட்டன. அல்லாஹ் தீர்மானித்த அந்த முடிவு ஒருபோதும் மாறாது. அதில் கூடுதல் குறைவு கிஞ்சித்தும் ஏற்படாது. உறவுகளைப் பேணி வாழ்ந்தால் ஆயுள் கூடும் என்பதும், தர்மம் செய்தால் பொருளாதாரம் அதிகரிக்கும் என்பதும் அல்லாஹ்வின் தீர்மானப்படி நடப்பதே ஆகும்.

பழிக்கக் கூடாது

அருமை நாயகம் (ஸல்) அவர்களுக்கு யூதப் பெண் மூலம் ஆட்டிறைச்சியில் விஷம் வைத்து கொடுக்கப்பட்டது. அதன்பின் அடிக்கடி அண்ணலாருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அண்ணலாரின் மனைவி உம்மு சல்மா (ரலி) அவர்கள் அண்ணலாரிடம் வந்து, "விஷம் கலக்கப்பட்ட இறைச்சியை நீங்கள் சாப்பிட்ட அதனால்தான் வருடந்தோறும் உங்களுக்கு ஏதேனும் நோவினை ஏற்படுகிறது" என்று கூறியபோது அண்ணலார், "இப்போது எனக்கு ஏற்பட்டுள்ள இந்த நோய் (ஆதி மனிதர்) ஆதம் (அலை) அவர்கள் மண்ணாக இருக்கும்போதே விதியில் எழுதப்பட்டு விட்டது" என்று கூறினார்கள். நூல்:- இப்னுமாஜா-

நடந்து முடிந்துவிட்ட ஒரு தவறை அல்லது ஒரு சருகுதலை எண்ணி அது சம்பந்தப்பட்டவரை திட்டிக்கொண்டே இருப்பதாலோ அல்லது அதை எண்ணி வருத்தப்பட்டுக்கொண்டே இருப்பதாலோ எந்த பலனுமில்லை. எல்லாம் விதிப்படியே நிகழ்கிறது என்றெண்ணி மனதை தேற்றிக்கொண்டு, மீண்டும் அதுபோன்ற தவறு நிகழ்ந்துவிடாமல் இருக்க முயற்சிக்க வேண்டும்.

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதம் (அலை) அவர்களும் மூசா (அலை) அவர்களும் தர்க்கம் செய்து கொண்டார்கள். அப்போது மூசா (அலை) அவர்கள் ஆதம் (அலை) அவர்களிடம், "உங்கள் பாவத்தின் காரணமாக மக்களைச் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றி அவர்களைத் துர்பாக்கியசாலிகளாய் ஆக்கியவர் நீங்கள்தானே!" என்று கேட்டார்கள்.

அதற்கு, ஆதம் (அலை) அவர்கள் மூசா (அலை) அவர்களிடம், “தன் தூதுச் செய்திகளை (மக்களிடம்) எடுத்துரைப்பதற்காகவும் தன்னுடன் உரையாடுவதற்காகவும் அல்லாஹ் தேர்ந்தெடுத்த மனிதர் நீங்கள் தானே? ( أَتَلُومُنِي عَلَى أَمْرٍ كَتَبَهُ اللَّهُ عَلَيَّ قَبْلَ أَنْ يَخْلُقَنِي ) என்னைப் படைப்பதற்கு முன்பே என் மீது அல்லாஹ் எழுதிவிட்ட ஒரு விஷயத்திற்காகவா நீங்கள் என்னைப் பழிக்கிறீரா?" என்று திருப்பிக் கேட்டார்கள்.

இதைக் கூறிவிட்டு அண்ணலார், ( فَحَجَّ آدَمُ مُوسَى ) ஆதம் (அலை) அவர்கள் (தமது இந்தப் பதிலால்) மூசா (அலை) அவர்களை தோற்கடித்துவிட்டார்கள் என்று கூறினார்கள். அறிவிப்பாளர்:-  அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-4738, முஸ்லிம்-5157, திர்மிதீ-2060

ஆதி மனிதர் ஆதம் (அலை) அவர்கள் அல்லாஹ்வால் படைக்கப்பட்டதும், சொர்க்கத்தில் தங்கியதும், அங்கு தடுக்கப்பட்டிருந்த ஒரு மரத்தின் கனியை உண்டதும், அதனால் சொர்க்கத்தில் தங்க முடியாத நிலை ஏற்பட்டு பூமிக்கு வந்ததும், அவருடைய சந்ததிகள் ஷைத்தானுக்கு கட்டுப்பட்டு பாவங்கள் புரிவதும்... எல்லாமே ஏற்கனவே அல்லாஹ் எழுதி முடித்த விதியில் உள்ளதாகும். விதி, நடந்து தானே ஆகும்! அதற்காக என்னைக் குறை கூறுகிறார்களே! என்று ஆதம் (அலை) அவர்கள் எதிர்க் கேள்வி கேட்டவுடன் மூசா (அலை) அவர்கள் வாயடைத்துப் போனார்கள்.

நடப்பவை எல்லாம் விதியில் உள்ளபடி தான். அதற்காக, “நான் என்ன செய்வேன் விதியின்படி குற்றம் புரிந்து விட்டேன்” என்று விதிமீது பழி போடக் கூடாது. சாலை விபத்தில் இறப்பதற்கு முன்னால் அதில் இறப்போம் என்பது யாருக்காவது தெரியுமா? தெரிந்தால் பயணம் புறப்படுவோமா? நடந்த பிறகு தானே விபத்து பற்றியே தெரியும். அவ்வாறுதான், தீமையைச் செய்வதற்கு முன் அது விதியில் உள்ளதா, இல்லையா என்பது மனிதனுக்குத் தெரியாது. எனவே, அறிவைப் பயன்படுத்தி நன்மை தீமையை பிரித்துப் பார்த்து, நன்மையை தேர்ந்தெடுத்து தீமையை தவிர்க்க வேண்டும்.

சிகிச்சை செய்வது

யஅமர் அஸ்ஸஅதீ (ரலி)  அவர்கள் கூறியதாவது ஒரு மனிதர் அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, "நாயகமே! (நோய் நொடிகளின் போது) நாங்கள் ஓதிப் பார்ப்பதும், மருத்துவ சிகிச்சை செய்வதும், (நோய் நொடிகள்) வரும்முன் காப்பதும் அல்லாஹ் ஏற்படுத்தியுள்ள விதியில் எதையும் தடுத்துவிடுமா? என்று கேட்டார். அதற்கு அண்ணலார், ( هِيَ مِنْ قَدَرِ اللَّهِ ) "இவையும் அல்லாஹ்வின் விதியின் உள்ளவைதான்" என்று பதிலளித்தார்கள். நூல் திர்மிதீ-2074

ஏன் மருத்துவம் செய்யவேண்டும்? அல்லாஹ் நாடினால் அந்த நோயை குணமாக்குவான் என்றெண்ணி, போதிய சிகிச்சை மேற்கொள்ளாமல் இருப்பது சரியல்ல. அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு நோய்நொடி ஏற்பட்டபோது அதற்கான சிகிச்சையை மேற்கொண்டுள்ளார்கள் என பல நபிமொழிகள் கூறுகிறது. ஒவ்வொரு நபிமொழி நூல்களிலும் நோய்நொடிகளுக்கான சிகிச்சை முறைகளைப்பற்றி தனி பாடமே உண்டு.

எனவே, நோய்நொடி ஏற்படின் ஓதிப் பார்ப்பதோ, மருத்துவம் பார்ப்பதோ, வருமுன் காக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையோ மேற்கொள்ளலாம். இவற்றால் குணம் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் இரண்டுமே விதிக்கு உட்பட்டவைதான். இறைவன் காரணங்களையும் காரியங்களையும் இணைத்தே விதித்துள்ளான். ஒரு காரியத்தை அதற்கான காரணத்துடன் சம்பந்தப்படுத்தியுள்ளான். இந்நோய்க்கு இம்மருந்தை உட்கொண்டால் குணமாகும் என்பதே இறைவனின் விதியாக இருக்கும். எனவே, மருந்து சாப்பிடும்போது குணம் ஏற்படுவது விதிக்கு அப்பாற்பட்டதன்று.  இன்ன மனிதர், தமக்கு நோய் ஏற்படும்போது இந்த சிகிச்சை மேற்கொள்வார்; அதையடுத்து அவர் குணமடைவார் என்று அவர் விதியில் எழுதப்பட்டிருக்கும். அல்லது சிகிச்சை செய்தாலும் குணம் கிடைக்காது என்று எழுதப்பட்டிருக்கும். ஆக, இந்நடவடிக்கைகள் விதியைத் தடுப்பவையோ அதற்கு முரணானவையோ அல்ல. நூல்:- சிந்தீ, துஹ்ஃபத்துல் அஹ்வதீ

எளிதாக்கப்படும்

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( كَتَبَ اللَّهُ مَقَادِيرَ الْخَلاَئِقِ قَبْلَ أَنْ يَخْلُقَ السَّمَوَاتِ وَالأَرْضَ بِخَمْسِينَ أَلْفَ سَنَةٍ ) அல்லாஹ், வானங்களையும் பூமியையும் படைப்பதற்கு ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே படைப்பினங்களின் விதிகளை எழுதிவிட்டான். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அம்ரு பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-5160

ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு என்று குறிப்பிடப்பட்டிருப்பது, அதிகமான ஆண்டுகளுக்கு முன்பு என்பதை உணர்த்துவதற்காகக் கூறப்பட்ட ஒரு குறியீடே தவிர, 50 ஆயிரம் என்ற எண்ணிக்கையை இங்கு குறிக்காது. ஏனெனில், படைப்புகளின் விதியைப் பற்றிய அல்லாஹ்வின் அறிவு, பூர்வீகமானது. அதற்குத் தொடக்கம் என்பதெல்லாம் கிடையாது.  நூல்:- அல்மின்ஹாஜ்

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஒரு உயிர்) தாயின் கருப்பையில் இருக்கும்போதே, இது ஆணா? அல்லது பெண்ணா? நற்பேறு பெற்றதா? அல்லது நற்பேறு அற்றதா? (இதற்கு வழங்கயிருக்கும்) வாழ்வாதாரம் எவ்வளவு? ஆயுள் எவ்வளவு? என்று அல்லாஹ்வால் எழுதப்பட்டுவிடும். அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- புகாரி 6595

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். என்னிடம் கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள், ( جَفَّ الْقَلَمُ بِمَا أَنْتَ لاَقٍ ) "நீர் (வாழ்க்கையில்) சந்திக்கவிருக்கின்ற அனைத்தையும் (ஏற்கனவே எழுதியாயிற்று. அவற்றை) எழுதிய எழுதுகோலும் கூடக் காய்ந்து விட்டது" என்றார்கள். நூல்:- புகாரீ-பாபு ஜஃப்பல் கலம்அலா இல்மில்லாஹ்

நடக்கப்போகும் அனைத்தையும் அல்லாஹ் "அல்லவ்ஹுல் மஹ்ஃபூள்" எனும் பாதுகாக்கப்பெற்ற பலகையில் எழுதி முடித்துவிட்டான். இனி எழுதுவதற்கு ஒன்றுமில்லை. அவன் விரும்பினால் அதில் மாற்றம் செய்வான். நூல்:- உம்தத்துல் காரீ

அருமை நாயகம் (ஸல்) அவர்கள், ( مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ مَا مِنْ نَفْسٍ مَنْفُوسَةٍ إِلاَّ وَقَدْ كَتَبَ اللَّهُ مَكَانَهَا مِنَ الْجَنَّةِ وَالنَّارِ ) "(உலகில்) பிறந்துவிட்ட எந்த உயிரும் தமது இருப்பிடம் சொர்க்கத்திலா அல்லது நரகத்திலா என்று அல்லாஹ்வால் எழுதப்படாமல் இருப்பதில்லை" கூறினார்கள். அப்பொழுது ஒரு மனிதர், "நாயகமே! நாங்கள் நல்லறங்கள் செய்யாமல், எங்கள் (தலை) எழுத்தின் மீது (பாரத்தைப் போட்டுவிட்டு) இருந்து விடமாட்டோமா?" என்று கேட்டார்.

அதற்கு அண்ணலார், ( مَنْ كَانَ مِنْ أَهْلِ السَّعَادَةِ فَسَيَصِيرُ إِلَى عَمَلِ أَهْلِ السَّعَادَةِ وَمَنْ كَانَ مِنْ أَهْلِ الشَّقَاوَةِ فَسَيَصِيرُ إِلَى عَمَلِ أَهْلِ الشَّقَاوَةِ )  “யார் (விதியில்) நற்பேறு பெற்றவராக இருப்பாரோ அவர் நற்பேறு பெற்றவர்களின் செயலுக்கு மாறுவார். யார் (விதியில்) நற்பேறற்றவராக இருப்பாரோ அவர் நற்பேறற்றவர்களின் செயலுக்கு மாறுவார்" என்று கூறினார்கள்.

மேலும் அண்ணலார், ( اِعْمَلُوا فَكُلٌّ مُيَسَّرٌ أَمَّا أَهْلُ السَّعَادَةِ فَيُيَسَّرُونَ لِعَمَلِ أَهْلِ السَّعَادَةِ وَأَمَّا أَهْلُ الشَّقَاوَةِ فَيُيَسَّرُونَ لِعَمَلِ أَهْلِ الشَّقَاوَةِ ) "நீங்கள் செயலாற்றுங்கள். (நல்லார் பொல்லார்) எல்லோருக்கும் அவரவர் செல்லும் வழி எளிதாக்கப்பட்டுள்ளது. நல்லவருக்கு நல்லவர்களின் செயலைச் செய்ய எளிதாக்கப்படும். கெட்டவருக்கு கெட்டவர்களின் செயலைச் செய்ய எளிதாக்கப்படும்" என்று கூறினார்கள். அறிவிப்பாளர்:- அலீ (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-5150

ஒருவன் சொர்க்கவாசியா? அல்லது நரகவாசியா? என்று மனிதனைப் பொறுத்த வரை, அவனுக்கு தெரியாது; மறுமையில் தான் தெரியும். ஆகவே, மனிதன் தன் அறிவையும் விருப்பத்தையும் பயன்படுத்தி நற்செயல்கள் புரிய எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு ஆர்வத்துடன் முயற்சிகள் மேற்கொள்ளும் போது நன்மைகள் கைகூடி வர இறைவன் அருள் புரிவான். இறைவனின் அருள் நிச்சயம் கிடைக்கும் என்ற முழு நம்பிக்கையுடன் முயற்சி செய்ய வேண்டும்.

அதை விடுத்து, "இதுதான் என் தலைவிதி" என்று சொல்லிக்கொண்டு உழைக்காமல் நல்லறம் புரியாமலும் ஒருவர் அமர்ந்து கொள்ள அனுமதி கிடையாது. ஏனெனில், அவரது தலைவிதி இதுதான் என்பது நடந்து முடிந்த பிறகே அவனுக்கு தெரியும். அதற்கு முன் அது ஓர் இரகசியம்; அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரிந்த இரகசியம். இறைவனுக்கு மட்டுமே தெரிந்த அந்த விதி, நடைமுறைக்கு வந்த பிறகே மற்றவர்களுக்குத் தெரியும் எனும்போது, எதைப் பற்றி தமக்கு அறிவே இல்லையோ அதைக் காரணம் காட்டி, நற்செயல் புரிவதில் பலனென்ன என்று விதண்டாவாதம் செய்வது அறிவுடைமை ஆகாது. எனவே, ஒவ்வொருவரும் தமக்கு முன்னுள்ள வாய்ப்பைப் பயன்படுத்தி உழைத்து நன்மை புரிந்து முன்னேற முயல வேண்டும். அதை விடுத்து, விதியின் மீது பழியைப் போட்டுத் தப்பிக்கவோ கடமை தவறவோ யாருக்கும் உரிமை கிடையாது. நூல்:- ஃபத்ஹுல் பாரீ, அல்மின்ஹாஜ், தக்மிலா

விதிப்படி நடக்கட்டும் என்று அலட்சியமாக அமர்ந்துவிடக் கூடாது என்பதை இங்கு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் உணர்த்துகிறார்கள்.

விதியை ஏற்று நல்லறம் புரிய முயலும்போது, வல்ல இறைவனிடம் உதவி கோர வேண்டும். நமது முயற்சி தோல்வியே கண்டு விட்டாலும், இறைவனின் ஏற்பாடு என்று கருதி மனதைத் தேற்றிக் கொள்ள வேண்டும். இதனால், ஜெயிக்கும் போது இறுமாப்பும், தோற்கும் போது விரக்தியும் ஏற்படுவதை தவிர்க்கலாம். இதனால் எல்லா நேரங்களிலும் இறைவனைச் சார்ந்து வாழ்கின்ற நிலை உருவாகும்.

நன்றாக இருந்திருக்குமே!

(நபியே! அவர்களிடம்) நீர், "அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர வேறு எதுவும் நிச்சயமாக எங்களை அணுகாது" என்று கூறுவீராக. திருக்குர்ஆன்:- 9:51

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( وَإِنْ أَصَابَكَ شَيءٌ فَلاَ تَقُلْ لَوْ أَنِّي فَعَلْتُ كَانَ كَذَا وَكَذَا وَلَكِنْ قُلْ قَدَرُ اللَّهِ وَمَا شَاءَ فَعَلَ فَإِنَّ لَوْ تَفْتَحُ عَمَلَ الشَّيْطَانِ ) உனக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும்போது, "நான் (இப்படிச்) செய்திருந்தால் அப்படி அப்படி ஆகி இருக்குமே! என்று (அங்கலாய்த்துக்) கூறாதே. மாறாக, "அல்லாஹ்வின் விதிப்படி நடந்துவிட்டது. அவன் நாடியதைச் செய்து விட்டான்" என்று சொல். ஏனெனில், ('இப்படி செய்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே' என்பதை சுட்டும்) 'லவ்' எனும் (அரபிச்) சொல்லானது ஷைத்தானின் செயலுக்கு வழிவகுக்கும். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-5178

மனிதன் தன்னுடைய சுயாதிகாரத்தைப் பயன்படுத்தி ஒன்றைத் தேடலாம்; செய்யலாம். ஆனால், மனிதனுக்குக் கிடைத்த இன்பமோ துன்பமோ, பாவமோ புண்ணியமோ விதியின் படியே கிடைத்துள்ளது என்று நம்பவேண்டும். விதியை மீறி அது கிடைத்ததாக எண்ணக்கூடாது. அல்லது கிடைக்க முடியாத ஒன்றைத் தன் ஆற்றலால் அடைந்துவிட்டதாக மனிதன் கருதக்கூடாது. அவ்வாறே, கிடைக்காமல் கைதவறிப்போன ஒன்று விதியின் படியே கிடைக்காமல் போனது என்றே நம்ப வேண்டும். விதியை மீறி அது வராமல்போகவில்லை. அல்லது வர இருந்த ஒரு துயரம், தன் எச்சரிக்கை உணர்வால் வராமல் தடுக்கப்பட்டது என்றும் மனிதன் எண்ணக்கூடாது. அதுவும் விதியின் படியே வராமல் தவிர்க்கப்பட்டது என்றே நம்ப வேண்டும். நூல்:- துஹ்ஃபத்துல் அஹ்வதீ

இறைவனின் ஏற்பாடான விதியைப்பற்றிய போதிய ஞானமில்லாதவர்கள் தான், நான் அல்லது நீ அல்லது அவன் இப்படி செய்யாதிருந்திருந்தால் அப்படி நிகழ்ந்திருக்காது என்று புலம்பித்திரிவார்கள்.

வீண் விவாதம்

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது. (ஒருநாள்) எங்களிடையே அருமை நாயகம் (ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்தார்கள். அப்போது நாங்கள் தலைவிதி குறித்து சர்ச்சை செய்து கொண்டிருந்தோம். அதைப்பார்த்து அண்ணலார் கோபப்பட்டார்கள். எந்த அளவுக்கென்றால் அவர்களின் கன்னங்களில் மாதுளையைப் பிளந்து வைத்ததைப் போன்று அவர்களின் முகம் (கடுமையாகச்) சிவந்துவிட்டது.

அப்போது அண்ணலார், ( أَبِهَذَا أُمِرْتُمْ أَمْ بِهَذَا أُرْسِلْتُ إِلَيْكُمْ إِنَّمَا هَلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ حِينَ تَنَازَعُوا فِي هَذَا الأَمْرِ عَزَمْتُ عَلَيْكُمْ أَلاَّ تَتَنَازَعُوا فِيهِ ) "இவ்வாறு விதி குறித்து விவாதிப்பதற்கு தான் உங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதா? அல்லது இதற்காகத்தான் உங்களுக்கு நான் தூதராக அனுப்பப்பட்டுள்ளனா? உங்களுக்கு முன்னிருந்தோர் அழிந்ததெல்லாம் இவ்விஷயத்தில் அவர்கள் சண்டையிட்டுக் கொண்டபோதுதான். இது தொடர்பாக நீங்கள் சர்ச்சை செய்ய வேண்டாமென உங்களுக்கு நான் உறுதியாகச் சொல்லிக் கொள்கிறேன்" என்றார்கள் நூல்:- திர்மிதீ-2059

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். விதி குறித்துப் பேசப்பட்டால் நீங்கள் நிதானத்தை கடைபிடியுங்கள். நூல்:- தப்ரானீ

விதியை நம்புவது கட்டாயக் கடமை. ஏக இறைவனான அல்லாஹ்தான் மனிதர்களையும் அவர்களின் செயல்களையும் படைத்தவன். அவர்கள் படைக்கப்படுவதற்கு முன்பே (லவ்ஹுல் மஹ்ஃபூள் எனும்) பாதுகாப்பு பலகையில் அனைத்தையும் இறைவன் எழுதிப் பதிவு செய்துவிட்டான். எல்லாம் அவன் நாட்டப்படியும் திட்டப்படியும் தான் நடக்கின்றன. விதி என்பது இறை இரகசியங்களில் ஒன்று. தான் எழுதியதை நெருக்கமான வானவருக்கோ தேர்ந்தெடுத்த நபிக்கோகூட அவன் தெரிவிப்பதில்லை.

விதியை மதியால் விவாதிப்பதோ ஆழமாக ஆய்வு செய்வதோ கூடாது. மாறாக அல்லாஹ்தான் படைப்புக்கள் அனைத்தையும் படைத்தான். அவர்களில் ஒரு பிரிவினரைச் சொர்க்கத்திற்காகவும் ஒரு பிரிவினரை நரகத்திற்காகவும் படைத்தான் என நம்ப வேண்டும். சிலரைச் சொர்க்கத்திற்கு அனுப்புவது அவனது கருணை என்றால், சிலரை நரகத்திற்கு  அனுப்புவது அவனது நீதியாகும். நூல்:- துஹ்ஃபத்துல் அஹ்வதீ

விதி குறித்து வாதமும் எதிர்வாதமும் புரிந்து கொண்டிருந்தால் இறைநம்பிக்கையை இழக்க நேரிடும் என்பதால் இத்தகைய சர்ச்சைக்கு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.

விதி என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரிந்த மறைவான விஷயங்களில் ஒன்றானதால் அல்லாஹ்வோ அவனுடைய தூதரோ சொல்லித்தந்த அடிப்படையிலேயே அதைப்பற்றி சிந்திக்க வேண்டும். நம் கணிப்புகளின் அடிப்படையில் விதி குறித்து விவாதித்துக் கொண்டிருக்க கூடாது. சுருங்கக்கூறின் விதி குறித்து அதிகமாக ஆய்வு செய்வதோ, பேசுவதோ நல்லதல்ல.

நம்பாதவர்கள்

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لِكُلِّ أُمَّةٍ مَجُوسٌ وَمَجُوسُ هَذِهِ الأُمَّةِ الَّذِينَ يَقُولُونَ لاَ قَدَرَ مَنْ مَاتَ مِنْهُمْ فَلاَ تَشْهَدُوا جَنَازَتَهُ وَمَنْ مَرِضَ مِنْهُمْ فَلاَ تَعُودُوهُمْ وَهُمْ شِيعَةُ الدَّجَّالِ وَحَقٌّ عَلَى اللَّهِ أَنْ يُلْحِقَهُمْ بِالدَّجَّالِ ) ஒவ்வொரு சமுதாயத்திலும் மஜூஸிகள் இருக்கின்றனர். இந்த சமுதாயத்தினரின் மஜூஸிகளோ, விதி என்று ஒன்றுமில்லை என்று கூறுபவர்களாவர். எனவே, அவர்களில் எவரேனும் இறந்து விடுவாராயின் அவரின் இறுதிச்சடங்கில் நீங்கள் கலந்து கொள்ளாதீர்கள். மேலும், அவர்களில் எவரேனும் நோய்வாய்ப்பட்டால் அவரை நீங்கள் உடல் நலம் விசாரிக்கச் செல்லாதீர்கள். இவர்கள்தான் தஜ்ஜாலுடைய கூட்டத்தினராவர். இவர்களைத் தஜ்ஜாலோடு சேர்த்து விடுவது அல்லாஹ்வின் மீது கடமையாகும். அறிவிப்பாளர்:- ஹுதைஃபா (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்-4692

நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, "இன்ன மனிதர் தங்களுக்கு முகமன் (சலாம்) கூறச் சொன்னார்" என்றார். அப்போது இப்னு உமர் (ரலி) அவர்கள், ( إِنَّهُ بَلَغَنِي أَنَّهُ قَدْ أَحْدَثَ فَإِنْ كَانَ قَدْ أَحْدَثَ فَلاَ تُقْرِئْهُ مِنِّي السَّلاَمَ ) "அந்த மனிதர் (விதியை மறுத்து மார்க்க அடிப்படையற்ற) நூதனமான கருத்தை கூறியுள்ளதாக எனக்குத் தகவல் கிடைத்துள்ளது. அவ்வாறு அவர் நூதனமான கருத்தை வெளியிட்டிருந்தால், அவருக்கு என்னுடைய பதில் சலாத்தைத் தெரிவிக்காதீர்.

ஏனெனில், அண்ணல் நபி (ஸல்) அவர்கள், ( يَكُونُ فِي هَذِهِ الأُمَّةِ الشَّكُّ مِنْهُ خَسْفٌ أَوْ مَسْخٌ أَوْ قَذْفٌ فِي أَهْلِ الْقَدَرِ ) 'இந்தச் சமுதாயத்தில் விதி தொடர்பாக (எதிர்மறையாக)ப் பேசுவோரிடையே பூமியில் புதைதல், உருமாற்றப்படுதல், கல்மாரி பொழிதல் ஆகியவற்றில் ஒன்று ஏற்படும்' என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்" என்றார்கள். நூல்:- திர்மிதீ-2078

உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கூறியதாவது. ( وَلَوْ أَنْفَقْتَ مِثْلَ أُحُدٍ ذَهَبًا فِي سَبِيلِ اللَّهِ مَا قَبِلَهُ اللَّهُ مِنْكَ حَتَّى تُؤْمِنَ بِالْقَدَرِ ) நீ, இறைவழியில் உஹது மலை அளவு தங்கத்தை தர்மம் செய்தாலும், நீ (நன்மை தீமை அனைத்தும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடைப்பெறுகிறது எனும்) விதியை  நம்பாதவரை, அல்லாஹுத்தஆலா உன்னிடமிருந்து அ(ந்தத் தர்மத்)தை ஏற்றுக் கொள்ளமாட்டான்.  அறிவிப்பாளர்:- இப்னு தைலமிய்யி (ரஹ்) அவர்கள் நூல்:- அபூதாவூத்-4699

திருக்குர்ஆனிலும், நபிமொழிகளிலும் விதி குறித்த நம்பிக்கை பலமாக வலியுறுத்தப்பட்டுள்ளது. விதியை மறுப்பது குர்ஆனையே மறுப்பதாகி விடுவதால், அது இறைமறுப்பாகிவிடும். இறைவனின் நாட்டப்படியே எல்லாம் நடக்கின்றன. இறைவன்தான் மனிதனின் எண்ணங்களையும் செயல்களையும் படைக்கின்றான். அதே நேரத்தில் நன்மை தீமையை தேர்ந்தெடுக்கும் சுயாதிகாரம் மனிதனுக்கு உண்டு. அந்த அதிகாரத்தை அவன் பயன்படுத்துவதைப் பொறுத்து அவனுக்கு பிரதிபலன் அளிக்கப்படும். அதாவது விதியும் உண்மை; மனிதனுக்கென சுயாதிகாரம் இருப்பதும் உண்மை. மனிதன் நன்மை அல்லது தீமையை தேர்ந்தெடுக்கிறான் அதையும் அல்லாஹ்தான்  படைக்கின்றான். நன்மைக்குப் பரிசும் தீமைக்குத் தண்டனையும் கிடைக்கும்.

அல்லாஹ்வின் விதியை நம்பாதவருக்கு துன்பம் தான் மிஞ்சும். அமைதிக்கு வேறு வழியில்லாமல் அவர் தனது துன்பத்தை நீக்கிக் கொள்வதற்காக படாதபாடுபடுவார். “பிறருக்கு உதவுகின்ற எனக்கா இந்த துன்பம் வரவேண்டும்? இத்துன்பத்தை நீக்க என்ன செய்வது? என்று புலம்பியே மன உளைச்சலுக்கு ஆளாகி, பலவிதமான நோய்களுக்கு ஆளாகி விடுவார்.

எனவே நாம், அல்லாஹ்வின் ஏற்பாடான விதியை முழுமையாகப் பொருந்திக்கொண்டு, அல்லாஹ்வின் அன்பையும் அருளையும் பெறுவோமாக! ஆமீன்!

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை.

 

No comments:

Post a Comment

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...