Search This Blog

Sunday, 23 May 2021

விண்ணைத்தாண்டி வருவாயா?

 

விண்ணைத்தாண்டி வருவாயா?


وَنَزَّلْنَا مِنَ السَّمَاءِ مَاءً مُبَارَكًا فَأَنْبَتْنَا بِهِ جَنَّاتٍ وَحَبَّ الْحَصِيدِ


மேலும் வானத்திலிருந்து வளம் பொருந்திய நீரையும் இறக்கினோம். அதன்மூலம் தோட்டங்களையும் அனைத்து வகை அறுவடைத் தானியங்களையும் முளைக்கச் செய்தோம். திருக்குர்ஆன்:- 50:9   


இந்தியாவில்தான் உலகில் அதிக மழையைப் பெறும் பகுதிகள் அமைந்துள்ளது.


"மௌசின்ரம்" இந்தியாவில் அதிக மழைபெறும் இடங்கள் பட்டியலில் முதலாவது இடத்தைப் பெறுகிறது. இதுவே உலகின் அதிக மழைப்பெறும் பகுதியும் ஆகும்.


இங்கு ஆண்டின் மழைப்பொழிவு 11,872 மி.மீ. ஆகும். மௌசின்ரம் மேகாலயாவில் கிழக்கு காசி மாவட்டத்திலுள்ள ஒரு கிராமம் ஆகும்.


"சிரபுஞ்சி" இந்தியாவில் இரண்டாவது அதிக மழையைப் பெறும் பகுதியாகும். இங்கு ஆண்டின் மழைப்பொழிவு 11,430 மி.மீ. ஆகும்.


இவ்விடம் மேகாலயாவில் கிழக்கு காசி மாவட்டத்திலுள்ள காசி மலை உச்சியின் தென்பகுதியில் வங்காளதேசத்தை நோக்கி அமைந்துள்ளது. சிரபுஞ்சி மலைகளின் இரண்டு பள்ளத்தாக்குகள் இணையும் இடத்தில் அமைந்துள்ளது.


"ஆகும்பே" இந்தியாவில் மூன்றாவது அதிக மழையைப் பெறும் பகுதியாகும். இங்கு ஆண்டின் மழைப்பொழிவு 7620 மி.மீ. ஆகும்.


இவ்விடம் கர்நாடகா மாநிலத்தின் ஷிமோகா மாவட்டத்தில் அமைந்துள்ள சிறுநகரமாகும். மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள அழகான இடங்களில் இதுவும் ஒன்று.


இந்த நவீன உலகம், அறிவியல், தொழில்நுட்பம் முதலியவற்றில் தினந்தோறும் பிரமிக்கத்தக்க வளர்ச்சியைக் கண்டுவந்தாலும் இறைவனின் அருட்கொடையான மழை பொய்த்துவிடும்போது கழுதைக்கும் கழுதைக்கும் அல்லது தவளைக்கும் தவளைக்கும் அல்லது கழுதைக்கும் மனிதனுக்கும் மணமுடித்து வைப்பது போன்ற மூடத்தனமாக செயல்களில் ஈடுபடுவதைப் பார்த்து வருகிறோம்.


பாமரர்கள் மட்டுமல்ல படித்தவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள்கூட இவ்வாறான செயல்களில் ஈடுபடுவது வியப்புக்குரியதாகும். ஆனால், மழைதரும் அதிகாரம் இறைவனிடம் இருப்பதால் அவனிடமே இறைஞ்சி மழைகோருமாறு இஸ்லாம் அறிவுறுத்துகிறது.


மூன்று முறைகளில் இறைவனிடம் மழை வேண்டிப் பிரார்த்திப்பது நபிவழியாகும்.                                                                      

1)  பிரார்த்தனையின் மூலம்.                                                            

2) ஜும்ஆ சொற்பொழிவின்போதோ கடமையான மற்ற தொழுகைகளின் போதோ பிரார்த்தித்தல்.                                                                      

3) பெருநாள் தினத்தில் தொழுவதைப் போன்று இரண்டு ரக்அத்கள் சிறப்புத் தொழுகை தொழுதபின் மழைக்காகப் பிரார்த்தித்தல்.


காற்று மேகங்கள்


(நபியே!) அல்லாஹ் மேகத்தை ஓட்டிச்சென்று, அதை ஒருங்கிணைத்து, பின்னர் அதை அடர்த்தியாக ஆக்குவதை நீர் காணவில்லையா? பின்னர் அதற்கிடையிலிருந்து மழைநீர் வெளிப்படுவதை நீர் காண்கிறீர். திருக்குர்ஆன்:- 24:43


அல்லாஹ்தான் காற்றை அனுப்பி வைக்கிறான். அது மேகத்தை ஓட்டுகின்றது. அவன் விரும்பியவாறு அதனை வானத்தில் திட்டுத்திட்டாக பரப்பி விடுகின்றான். அதிலிருந்து மழை பொழிவதை (நபியே) நீங்கள் காண்கிறீர்கள். திருக்குர்ஆன்:- 30:48


(கடல் நீரை ஆவியாக்கிச் சிதறடிக்கும்) சூறாவளிகள் மீதும், (அந்த நீராவியை) சுமந்து செல்லும் மேகத்தின் மீதும், (பல பாகத்திற்கு அதனை) எளிதாக தாங்கிச் செல்லும் மேகத்தின் மீதும், அதனைப் (பூமியின் பல பாகங்களில்) பிரித்துவிடும் வானவர்கள் மீதும் சத்தியமாக! திருக்குர்ஆன்:- 51:1,2,3,4


கிணறு, ஏரி, ஆறு, கடல் போன்ற நீர்ப்பரப்புகளில் இருந்து சூரிய வெப்பத்தால் நீர் ஆவியாகி மேல்நோக்கி ஆகாயத்தை அடைகிறது. வானில் குறிப்பிட்ட உயரத்தை எட்டியவுடன் அங்கு மிதந்து கொண்டிருக்கும் (தூசித் துகள்கள் எனும்) புழுதியைச் சுற்றி நீர்த்துளிகள் படிந்து மழை மேகங்களாக ஆகிறது.


நீராவியைச் சுமக்கும் காற்று சாதாரண காற்றை விட இலேசானது. எனவே, அது எளிதாய் மேலே சென்று கொண்டேயிருக்கும். வெப்பம் குறைவான ஓர் உயரம் எட்டியதும் நீராவி நீர்த்திவலைகளாக மாறும். அது பூமியிலிருந்து பார்ப்பதற்கு புகை போல் இருக்கும். அதுவே மேகம் (Cloud) எனப்படுகிறது.


மேகங்கள் உருவாக வேண்டுமென்றால் புழுதியும் வேண்டும். புழுதி இல்லையென்றால் மேகங்கள் இல்லை. அதற்காக  தான் காற்றுகள் புழுதியை கிளப்பி விடுகிறது. அங்குமிங்குமாக அலைந்து கொண்டிருக்கும் கார் மேகங்கள் மேலும் குளிர்ச்சி அடையும் போது நீர்த்திவலைகள் ஆக மாறி எடை கூடும். பின்னர் புவி ஈர்ப்பு சக்தியால் மழையாகப் பொழியும்.


கடல் பரப்புகளுக்கு மேலே உயிரியலால் (Micro Layer) மைக்ரோலேயர் எனப்படும் அழைக்கப்படும் பகுதியில் நுண்ணுயிர்களான அல்கா (Algae), ஜூப்லங்டன் (Zooplanton) போன்றவைகளின் கழிவுகள் தங்களோடு பாஸ்பரஸ், மக்னீசியம், பொட்டாசியம், காப்பர், ஜின்க், கோபால்ட், லீப் போன்ற (உரங்களையும்) கனிமங்களையும் சேர்த்துக்கொண்டு மிதக்கிறது. இது புழுதியில் ஏறிக்கொண்டு நீரோடு இவைகளும் சேர்ந்து வானம் சென்று விடுகிறது. எனவே, மழை நீரோடு விழும் இந்த உரம் ஆண்டு ஒன்றிற்கு 150 மில்லியன் டன்கள் ஆகும். அதனால்தான் காடுகள் செழித்து வளர்கின்றன. இப்படியாக உரம் விழவில்லை என்றால் குறைந்த அளவே உலகில் தாவரங்கள் இருக்கும்.


ஆலங்கட்டி மழை


(சில சமயம்) வானிலுள்ள (மேக) மலைகளிலிருந்து ஆலங்கட்டியை அவன் இறக்கி வைக்கிறான். அதை, தான் நாடுவோர்மீது விழச் செய்கிறான்; தான் நாடுவோரிடமிருந்து அதை விலக்கிவிடுகிறான். அதன் மின்னொளி பார்வைகளைப் பறிக்கப்பார்க்கிறது. திருக்குர்ஆன்:- 24:43


கோடைக் காலத்தில் மழை மேகங்களிலிருந்து கட்டிகட்டியாக விழும் உறைந்த நீர்த்திவலைகளே ஆலங்கட்டி (Hailstone)  எனப்படுகிறது. 5 மி.மீ. - 10 செ.மீ. விட்டம் கொண்ட பனித் துண்டுகள் அல்லது பனிக்கட்டிகளின் பொழுதே ஆலங்கட்டி மழை எனப்படும். 5 மி.மீட்டருக்கும் குறைவான விட்டம் கொண்ட துகள்களின் பொழிவு சிறுகட்டி மழை, அல்லது பனித்துகள் மழை எனப்படும். ஆலங்கட்டி மழை கட்டிடங்களுக்கும், பயிர்களுக்கும் சேதம் உண்டாக்கும். கட்டிகள் பெரியனவாக இருந்தால் விலங்குகளுக்கும் கேடு நேரலாம்.


மத்திய மேற்கு அமெரிக்கப் புயல்களின்போது 15 செ.மீ. (6 அங்குலம்) விட்டம் கொண்ட ஆலங்கட்டிகள் விழுந்ததுண்டு. மத்திய அட்சரேகைகளில் மிகவும் பரவலாக நிகழும் ஆலங்கட்டி புயல்கள் 15 நிமிடங்கள் வரை நீடிக்கும். இவற்றுடன் இடியுடன் கூடிய புயலும் தோன்றலாம்.


போதிய மழையில்லாதபோது விமானம் மூலம் சென்று மேகங்களின் மீது இரசாயனத் தூள்களைத் தூவி, மழை மேகமாக மாற்றி, மழை பெய்விக்க செயற்கை மழைக்கு முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. மேகங்கள் இல்லாத வானத்திலிருந்து எக்காரணம் கொண்டும் மழை பெய்விக்க முடியாது.


நனையலாம்


அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒரு நாள் நாங்கள் அருமை நாயகம் (ஸல்) அவர்களுடன் இருந்த போது மழை பெய்தது.  உடனே அண்ணலார் மழைத்துளிகள் தம் மீது விழும் விதமாக தமது ஆடையைச் சற்று விலக்கினார்கள். நாங்கள், "நாயகமே! ஏன் இவ்வாறு செய்தீர்கள்?" என்று கேட்டோம். அதற்கு அண்ணலார், ( لأَنَّهُ حَدِيثُ عَهْدٍ بِرَبِّهِ‏ ) "இது (புத்தம் புதிதாக) இப்போதுதான் இறைவனிடமிருந்து வருகிறது" என்று பதிலளித்தார்கள். நூல்:- முஸ்லிம்-1638, அல்அதபுல் முஃப்ரத்-571


இப்னு அபீமுலைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது. அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் வானம் மழை பொழியும்போது, "அடிமைப் பெண்ணை! எனது சேனத்தை வெளியே கொண்டுவா! எனது ஆடையை வெளியே கொண்டுவா! என்று கூறுவார்கள். மேலும், இன்னும் வானத்திலிருந்து (பரக்கத் எனும்) அருள்வளம் நிறைந்த தண்ணீரை நாம் இறக்கி வைத்தோம்" (திருக்குர்ஆன்:- 50:9) என்ற வசனத்தை கூறுபவர்களாக இருந்தார்கள். நூல்:- அல்அதபுல் முஃப்ரத்-1228


மழை நீரில் குளிக்கும் ஒருவனுக்கு, ஒருவேளை சளிபிடித்து, காய்ச்சல் வந்தால், அவன் ஆரோக்கியமாக இல்லை, எனவே அவை ஆரோக்கியத்தை ஏற்படுத்துகிறது என்று அர்த்தம்.


சுத்தமான மழை தண்ணீரில் அளவுக்கு அதிகமாக பிராணன் இருக்கிறது. மழைநீரில் நனையும்போது பலருக்கும் சளி பிடிக்கிறது. தும்மல் வருகிறது, காய்ச்சல் வருகிறது. இது ஏன் வருகிறது அதாவது மழைநீரில் அளவுக்கு அதிகமான பிராணன் இருப்பதால் நமது உடலில் உள்ள அனைத்து செல்களும் அந்த பிராணனை உறிய ஆரம்பிக்கிறது.


உடலில் பல நாட்களாக, பல வருடங்களாக தேங்கிக்கிடக்கும் கழிவுகளைத் தும்மல் வழியாகவும், சளியாகவும், மூக்கு ஒழுகுதல் வழியாகவும் வெளியேற்றுகிறது. ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ்கிறானா, இல்லையா என்பதை எப்படி கண்டுபிடிப்பது என்றால், மழையில் நனைந்தால் அவனுக்கு சளி பிடிக்காமல், காய்ச்சல் வராமல் இருந்தால் அவன் ஆரோக்கியமாக இருக்கிறான் என்று பொருள். எனவே, மழையில் நனைந்து காய்ச்சல் வந்தால் அதைப்பாரத்து பயப்படவேண்டிய அவசியம் இல்லை. 


மழைநீர் நமது உடலுக்கு நன்மை செய்கிறது. அது ஒரு மருத்துவம். எனவே, மழையில் நனைவதன் மூலம் சில நோய்கள்  குணமாகும். மழைநீரை குடிப்பதின் மூலமாகவும் நமது உடலில் பிராண சக்தியை அதிகப்படுத்த முடியும்.


மழை வரும்போது முதலில் ஒரு ஐந்து நிமிடம் அந்த நீரை குடிக்கக்கூடாது. ஏனென்றால் காற்றில் தூசுகளும், குப்பைகளும், வாகனங்களிலிருந்து வரும் கழிவுப்பொருள்களும் வானத்தில் இருக்கும்.


முதல் ஐந்து  நிமிடத்தில் மழைநீர் அந்த தூசுகள், குப்பைகளை எடுத்துக்கொண்டு பூமியை நோக்கி வரும் எனவே முதல் ஐந்து  நிமிடத்தில் வரும் மழைநீரை நாம் குடிக்கக்கூடாது, ஐந்து  நிமிடத்திற்கு பின் வரும் மழைநீரை நேரடியாக பாத்திரத்தில் மூலமாகவோ, ஒரு கலனை பயன்படுத்தி அந்த நீரை பிடிக்கவேண்டும். ஒருவேளை நமது வீட்டின் கூரை சுத்தமாக இருந்தால் கூரையிலிருந்து வரும் மழைநீரையும் பிடிக்கலாம்.


இந்த நீர் உலகிலேயே மிகவும் சுத்தமான நீர். இதில் பிராணன் அதிகமாக இருக்கும். இந்த தண்ணீரை ஒரு பாத்திரத்திலோ, ஒரு பாட்டிலிலோ காற்று புகாமல் அடைத்து சூரிய வெளிச்சம் படாமல் வீட்டில் ஏதாவது ஒரு இடத்தில் வைத்துவிட்டால் அந்தத் தண்ணீர் ஆறு வருடங்களுக்கு கெட்டுபோகாமல் இருக்கும். ஆனால் அந்த தண்ணீரில் சூரிய வெளிச்சம் பட்டுவிட்டால், 24 மணிநேரத்தில் அதில் புழு, புச்சிகள் வந்து அந்த நீர் கெட்டுவிடும். எனவே மழைநீரை சூரிய வெளிச்சம் படாமல் பாதுகாத்து அதை நாம் குடிக்கும்போது, நமது உடலுக்கு தேவையான அனைத்து பிராணனும் கிடைத்து, நமது உடலிலுள்ள அனைத்து நோய்களும் குணமாகி, நமது உடல் ஆரோக்கியம் அடைகிறது. எனவே, மழைநீர் பிராணனை நாம் பயன்படுத்துவோம்.


குழந்தைகள் மழையில் நனைவதை நாம் குற்றம் என்று கூறி விரட்டி அடிக்கவேண்டாம். மழையில் நனைவது மிகவும் அற்புதமான, அருமையான, சந்தோஷமான மனதிற்கு பிடித்தமான, பெருநிகழ்ச்சி. மேலும் ஆரோக்கியமானதும் கூட. எனவே மழை வரும்போது அதில் ஆட்டம் போடலாம். நல்லது. மழைநீரை குடிக்கலாம் நல்லது. மழைநீர் பிராணன் ஒரு அற்புதமான மருந்து.


எனவே நம் வாழ்வில் நீர் பிராணனை சேர்த்துக் கொள்வோம். நீர் என்பது சாதாரணம் கிடையாது. உயிர்சக்தி, நீர் பிராணன், நீரில் உள்ள பிராணனை நாம் சரியான முறையில் பயன்படுத்தி ஆரோக்கியமாக, அமைதியாக நிம்மதியாக வாழலாம் என்கிறது மருத்துவ உலகம்.


மகிழ்ச்சி


தன் அடியார்களில் அவன் விரும்பியவர்களை அம்மழை வந்தடையும்போது அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர். திருக்குர்ஆன்:- 30:48


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِنَّ رَبَّكُمْ تَعَالَى يَقُولُ: لَوْ أَنَّ عِبَادِيَ أَطَاعُونِي، لَأَسْقَيْتُهُمُ المَطَرَ بِاللَّيْلِ، وَأَطْلَعْتُ عَلَيْهِمُ الشَّمْسَ بِالنَّهَارِ، وَلَمْ أُسْمِعْهُمْ صَوْتَ الرَّعْدِ ) மகத்துவமிக்க உங்களுடைய இறைவன் கூறுகிறான். என் அடியார்கள் எனக்கு கட்டுப்பட்டால், அவர்களுக்கு பகலில் சூரியனை உதிக்கச் செய்து, இடி சப்தம் கூட கேட்காத அளவுக்கு இரவில் மட்டும் மழையை இறக்குவேன். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்னத் அஹ்மத், ஹாகிம்


அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் ( وَاِنِّی لَاَسمَعُ بِا لغِیثِ قَد اَصَابَ البَلَدَ مِن بِلَادِ المُسلِمِینَ فَاَفرَحُ وَمَالِی بِهِ سَاءِمَةٌ )  முஸ்லிம் நாடுகளில் ஒன்றில் மழை பொழிந்தது என்பதாக நான் கேள்விப்பட்டால் எனக்கு அந்நாட்டில் எவ்வித வருவாயுமில்லை என்றாலும் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்று கூறினார்கள். அறிவிப்பாளர்:- இப்னு புரைதா அஸ்லமீ (ரலி) அவர்கள் நூல்:-  தப்ரானீ, ஹயாத்துஸ் ஸஹாபா பாகம்-2 பக்கம்-563


அளவோடு தான்


அவன்தான் வானத்திலிருந்து மழையை அளவோடு இறக்கி வைக்கிறான். திருக்குர்ஆன்:-  43:11


மேலே குறிப்பிட்ட அளவோடு என்ற வார்த்தைக்கு பல அர்த்தங்கள் உண்டு. அதில் ஒன்று பூமியில் இருந்து நீராவி ஆகும் நீரின் அளவாகும். ஒரு வினாடியில் 16 மில்லியன் டன்கள் நீராவி ஆகிறது. அதேபோல் மழை பொழிவதும் ஒரு வினாடிக்கு 16 மில்லியன் டன்கள் ஆகும்.


மேலும் அளவோடு என்ற வார்த்தைக்கு மற்றொரு அர்த்தம், மழைத்துளி விழும் வேகம் ஆகும்.


மழைமேகம் 1200 மீட்டர் உயரத்தில் உருவாகிறது. இங்கிருந்து மழைத் துளியின் எடையும் அளவும் உள்ள பொருள் விழுந்தால் விழ விழ வேகம் அதிகரித்து அதன் வேகம் மணிக்கு 558 கி.மீ. ஆக இருக்கும்.


இந்த வேகத்தில் மழைத்துளி விழுந்தால் ஒரு தாவரம் கூட தலைதூக்க முடியாது. நம் வீடுகளை அடிக்கடி பழுது பார்க்க நேரிடும். மழை பெய்யும்போது தலையில் ஹெல்மெட் அணியாமல் நாம் நடக்க முடியாது. ஆனால், அப்படி எதுவும் ஆகாமல் பாதுகாக்கப்படுகிறோம். அதற்கு காரணம் மழைத்துளியின் வடிவமாகும்.


நீர் குழாய்களிலிருந்து சொட்டும் நீர் துளி உருண்டை வடிவமாக இருக்கும். ஆனால், மழைத்துளியின் அடிபாகம் தட்டையாக இருக்கும். அதனால் வாயு மண்டலத்தின் உராய்வினால் வேகம் தடுக்கப்பட்டு 8 கி.மீ. வேகத்தில் வந்து விழுகிறது. 1200 மீட்டர் உயரத்தில் இருந்து விழும் மழைத் துளியின் வேகமே இவ்வளவு என்றால், இன்றும் 10,000 மீட்டர் உயரத்திலிருந்து மேகம் உருவாகி மழை பொழிகிறது. இதன் வேகம் எவ்வளவாக இருக்கும். மழைத்துளியின் அடிப்பாகம் தட்டையாக்கப்படாமல் போயிருந்தால் நாமல்லாம் தரைமட்டமாகி இருப்போம்.


பதற்றம்


ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. வானத்தில் மேகமூட்டம் ஏற்பட்டால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது முகம் மாறிவிடும். (தமது அறைக்குள்) உள்ளே போவார்கள்; வெளியே வருவார்கள்; முன்னும் பின்னுமாக நடப்பார்கள்.  (ஒருவிதப் பதற்றத்துடன் காணப்படுவார்கள்.) மழை பெய்யத் தொடங்கினால் அவர்களின் அந்த பதற்றம் அகன்றுவிடும். இதை நான் அவர்களது முகத்திலிருந்து அறிந்து கொண்டு (இது குறித்து) அவர்களிடம் வினவினேன். அதற்கு அண்ணலார், ( لَعَلَّهُ يَا عَائِشَةُ كَمَا قَالَ قَوْمُ عَادٍ 'فَلَمَّا رَأَوْهُ عَارِضًا مُسْتَقْبِلَ أَوْدِيَتِهِمْ قَالُوا هَذَا عَارِضٌ مُمْطِرُنَا ) "ஆயிஷாவே! (ஆது சமூகத்தாருக்கு அனுப்பப்பட்ட இறை வேதனை) அவர்களின் பள்ளத்தாக்குகளை நோக்கி மழை மேகமாக வருவதை அவர்கள் பார்த்த போது, '(தவறாகப் புரிந்துகொண்டு) இது எங்களுக்கு மழை தரும் மேகமாகும்' (திருக்குர்ஆன்:- 46:24) என்று கூறினார்களே அத்தகைய மேகமாகவும் இது இருக்கலாம்" என்று பதிலளித்தார்கள். நூல்:- முஸ்லிம்-1640, திர்மிதீ-3170, அல்அதபுல் முஃப்ரத்-251


பிரார்த்தனைகள்


அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்கள் மழைவேண்டி பிரார்த்தித்த போது தவிர, வேறு எந்தப் பிரார்த்தனையின் போதும் (இந்த அளவிற்கு) கைகளை உயர்த்தமாட்டார்கள். (மழை வேண்டி பிரார்த்தித்த போது) தம் அக்குள்களின் வெண்மை தென்படும் அளவிற்கு அவர்கள் கையை உயர்த்தினார்கள். நூல்:- புகாரீ-1031, முஸ்லிம்-1631


அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மழை வேண்டி பிரார்த்தித்தபோது, தன் புறங்கைகளால் வானை நோக்கிச் சைகை செய்தார்கள். நூல்:- முஸ்லிம்-1632


ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது. அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் (மழை இல்லாமல் வறட்சி காரணமாக) சிலர் அழுது கொண்டே வந்து முறையிட்டனர். உடனே அண்ணலார், ( اَللَّهُمَّ اسْقِنَا غَيْثًا مُغِيثًا مَرِيئًا نَافِعًا غَيْرَ ضَارٍّ عَاجِلاً غَيْرَ آجِلٍ ) "இறைவா! தேவையைப் பூர்த்தி செய்து மகிழ்ச்சியையும் பசுமையையும் ஏற்படுத்தக்கூடிய, பாதிப்பு எதுவுமில்லாத, பயனளிக்கக்கூடிய, தாமதமின்றி விரைவில் வரக்கூடிய மழையை எங்களுக்கு பொழியச் செய்வாயாக! என்று பிரார்த்தனை செய்தார்கள். பிரார்த்தனை செய்த உடனே அம்மக்களை மேகம் மூடிக்கொண்டது. (மழை பெய்தது) நூல்:- அபூதாவூத்-988


அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது.  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மழைக்காகப் பிரார்த்தித்தால், ( اَللَّهُمَّ اسْقِ عِبَادَكَ وَبَهَائِمَكَ وَانْشُرْ رَحْمَتَكَ وَأَحْيِ بَلَدَكَ الْمَيِّتَ ) "இறைவா! உன் அடியார்களுக்கும், உனது கால்நடைகளுக்கும் மழை பொழியச் செய்வாயாக! உனது அருளை (எங்களுக்கு) விரிவாக்குவாயாக! வறண்ட உனது பூமியைச் செழிப்பாக்குவாயாக!" என்று கூறுவார்கள். நூல்:- அபூதாவூத்-994, முவத்தா மாலிக்-403


சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்கள் மழைக்காகப் பிரார்த்தனை செய்யும்போது, ( اَللّٰهُمَّ جَلِّلْنَا سَحَاباً كَثِيفًا قَصِيفًا دَلُوقًا ضَحُوكًا تُمْطِرُنَا مِنْهُ رُذَاذاً قِطْقِطًا سَجْلًا يَا ذَا الجَلَالِ وَالإكْرامِ ) "இறைவா! எங்களுக்காக அடர்த்தியான, இடி இடிக்கக் கூடிய, விரைந்து வரக்கூடிய, மகிழ்ச்சியை ஏற்படுத்தக்கூடியதைக் கொண்டு வருவாயாக! (கல் மழை பொழியாமல்) சின்னஞ்சிறு துளிகளாக, நீர் அதிகம் வரக்கூடிய, பலன் தரக்கூடிய மேகத்தைக் கொண்டு மழை பொழியச் செய்வாயாக! நீயே கண்ணியமிக்கவன், கொடையாளன்" என்று கூறினார்கள். நூல்:-  அபூஅவானா, புலூகுல் மராம்-543


தான தர்மம்


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒரு மனிதர் ஒரு காட்டு நிலத்தில் இருந்த போது, ஒரு மேகத்தினடையே 'இந்த மனிதரின் தோட்டத்திற்கு நீர் பொழி' என்று ஒரு சப்தம் வருவதை கேட்டார். உடனே அந்த மேகம் நகர்ந்து, கருங்கற்கள் நிறைந்த ஒரு பகுதியில் மழையைப் பொழிந்தது. அங்கிருந்த நீரோடைகளில் ஒன்றில் அந்த நீர் முழுவதும் ஓடியது. உடனே அந்த மனிதர் அந்த நீர் வழியைத் தொடர்ந்தார்.


அப்போது ஒரு மனிதர் தமது தோட்டத்தில் நின்று கொண்டு மண்வெட்டியால் தண்ணீரை திருப்பி விட்டுக்கொண்டிருந்தார். அவரிடம், "அல்லாஹ்வின் அடியாரே! உம்முடைய பெயர் என்ன? என்று கேட்டார். அவர், 'இன்னது' என மேகத்தினிடையே கேட்ட அதே பெயரைச் சொன்னார்.


அப்போது அவர், "அல்லாஹ்வின் அடியாரே! ஏன் என் பெயரை கேட்கிறீர்" என்றார். அதற்கு அந்த மனிதர், "நான் மேகத்தினிடையே உமது பெயரைக் குறிப்பிட்டு, 'இன்ன மனிதரின் தோட்டத்தில் நீரைப் பொழி' என ஒரு சத்தத்தைக் கேட்டேன். அந்த மேகத்தின் நீர் தான் இது. அந்தத் தோட்டத்தி(ன் மூலம் கிடைக்கும் வருவாயி)ல் நீ என்ன செய்கிறீர்?" என்று கேட்டார்.


அதற்கு அந்த தோட்டக்காரர், நீங்கள் சொல்வது உண்மையானால், ( فَإِنِّي أَنْظُرُ إِلَى مَا يَخْرُجُ مِنْهَا فَأَتَصَدَّقُ بِثُلُثِهِ وَآكُلُ أَنَا وَعِيَالِي ثُلُثًا وَأَرُدُّ فِيهَا ثُلُثَهُ ) அதன் விளைச்சலில் கிடைக்கும் வருவாயில் மூன்றில் ஒரு பகுதியைத் தர்மம் செய்கிறேன். மற்றொரு மூன்றில் ஒரு பகுதியை நான் என் மனைவி மக்களும் உண்கிறோம். இன்னொரு மூன்றில் ஒரு பகுதியை மறுபடியும் விவசாயம் செய்கிறேன்" என்று கூறினார். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-5707


ஜும்ஆ தொழுகையின்போது


(நபியே!) வானிலிருந்து அல்லாஹ் (மழை)நீரைப் பொழியச் செய்து அதை பூமிக்குள் ஊற்றுக்களாக ஓட செய்வதை நீர் கவனிக்கவில்லையா? பின்னர், அதன் மூலம் பல வண்ணப் பயிர்களை வெளிக்கொண்டு வருகிறான். திருக்குர்ஆன்:- 39:21


அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் ஒரு வெள்ளிக்கிழமை உரை நிகழ்த்திக் கொண்டிருந்த போது, ஒரு மனிதர் 'தாருல் களா' திசையிலிருக்கும் வாசல் வழியாகப் பள்ளிவாசலுக்குள் வந்தார். (வந்தவர்) நின்றவாறே அண்ணலாரை நோக்கி, "நாயகமே! (பஞ்சத்தால் கால்நடைச்) செல்வங்கள் அழிந்துவிட்டன; பாதைகள் துண்டிக்கப்பட்டு விட்டன; அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். அவன் நமக்கு மழை பொழிவிப்பான்" என்று கூறினார்.


உடனே அண்ணலார் தமது கைகளை உயர்த்தி( اللَّهُمَّ أَغِثْنَا"இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! என்று மூன்று முறை பிரார்த்தித்தார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அப்போது வரை அங்கு எந்த மேகக் கூட்டங்களையும் நாங்கள் காணவில்லை. ஆனால் (அண்ணலாரின் பிரார்த்தனைக்கு பிறகு) ஒரு மேகம் தோன்றியது. அது நடுவானில் மையம் கொண்டு பரவியது. பிறகு மழை பொழிந்தது. அல்லாஹ்வின் மீதாணையாக! அந்த ஒரு வாரம் முழுவதும் நாங்கள் சூரியனை காணாதவாறு மழைப் பொழிந்தது.


அடுத்த வெள்ளியன்று அண்ணலார் நின்று உரை நிகழ்த்தும்போது, ஒரு மனிதர் அதே வாசல் வழியாக (பள்ளிவாசலுக்குள்) வந்தார். (வந்தவர்) நின்றவாறே அண்ணலாரை நோக்கி, "நாயகமே" (தொடர்ந்து பெய்த பெருமழையால்) எங்கள் கால்நடைச் செல்வங்கள் அழிந்துவிட்டன; பாதைகள் துண்டிக்கப்பட்டு விட்டன (போக்குவரத்து தடைபட்டு விட்டது). எனவே, மழையை நிறுத்துமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்" என்றார்.


உடனே அண்ணலார் தமது கைகளை உயர்த்தி( اللَّهُمَّ حَوْلَنَا وَلاَ عَلَيْنَا اللَّهُمَّ عَلَى الآكَامِ وَالظِّرَابِ وَبُطُونِ الأَوْدِيَةِ وَمَنَابِتِ الشَّجَرِ "இறைவா! எங்கள் சுற்றுப்புறங்கள் மீது (இம்மழையைத் திருப்பி விடுவாயாக!) எங்களுக்குப் பாதகமாக இதை ஆக்கிவிடாதே! இறைவா! சிறு குன்றுகள், மலைகள், ஓடைகள், விளைநிலங்கள் ஆகியவற்றின் மீது (இம்மழையைப் பொழியச் செய்வாயாக!)" என்று பிரார்த்தித்தார்கள். உடனே (மதீனாவில்) மழை நின்றது. நாங்கள் வெயிலில் நடந்து சென்றோம். நூல்:-  புகாரீ-1013, முஸ்லிம்-1633, அபூதாவூத்-993


ஜும்ஆ தொழுகையின்போதும் மழை வேண்டிப் பிரார்த்திக்கலாம் என்று இந்த நபிமொழி தெளிவுபடுத்துகிறது.


அளவுக்கு அதிகமாக மழை பெய்தால் மேற்காணும் நபிமொழியிலுள்ள துஆவை ஓத வேண்டும்.


மழைத் தொழுகை


ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம் மக்கள் மழை பொழியாதிருப்பதைப் பற்றி முறையிட்டனர். அதற்கு அண்ணலார் ஒரு சொற்பொழிவு மேடை கொண்டு வருமாறு கட்டளையிட்டார்கள். அவ்வாறு அது கொண்டுவரப்பட்டு (பெருநாள்) தொழுகை இடத்தில் வைக்கப்பட்டது. மக்களெல்லாம் ஒரு குறிப்பிட்ட நாளில் அங்கு வர வேண்டும் எனக் கட்டளையிட்டார்கள்.


சூரியன் வெளிப்பட்டதும் அண்ணலார் வெளியேறி வந்து, சொற்பொழிவு மேடையின் மீது அமர்ந்தார்கள். பின்னர் தக்பீர் கூறினார்கள். இறைவனைப் புகழ்ந்தார்கள். பின்னர், "மக்களே! நீங்கள் உங்கள் நகரத்தின் வறட்சியை பற்றி முறையிட்டீர்கள். அல்லாஹ், அவனிடம் பிரார்த்திக்குமாறு உங்களுக்கு கட்டளையிட்டுள்ளான். அவன் உங்கள் பிரார்த்தனையை ஏற்றுக் கொள்வதாகவும் வாக்களித்துள்ளான் என்று கூறிவிட்டு,


 اَلْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ الرَّحْمَنِ الرَّحِيمِ مَلِكِ يَوْمِ الدِّينِ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ يَفْعَلُ مَا يُرِيدُ اللَّهُمَّ أَنْتَ اللَّهُ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ الْغَنِيُّ وَنَحْنُ الْفُقَرَاءُ أَنْزِلْ عَلَيْنَا الْغَيْثَ وَاجْعَلْ مَا أَنْزَلْتَ لَنَا قُوَّةً وَبَلاَغًا إِلَى حِينٍ


"அனைத்துப் புகழும் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரியன. அவன் அருள்பாலிப்பவன், கிருபையாளன், கூலி கொடுக்கும் நாளின் அதிபதி, வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. தான் விரும்பியதை அவன் செய்வான். இறைவா! நீயே வணங்கப்படுபவன். உன்னைத் தவிர வேறு யாரும் வணங்கப்படுவதற்கு தகுதியற்றவர்கள். நீ (யாவற்றிலிருந்தும்) தேவையற்றவனாக இருக்கிறாய். நாங்கள்  (உன்னிடம் எல்லாவற்றுக்கும்) தேவையுடையவர்களாக இருக்கிறோம். எங்கள் மீது மழையைப் பொழியச் செய்வாயாக! நீ இறக்கிவைத்ததை எங்களுக்கு வலிமை தரக்கூடியதாகவும், நீண்ட காலம் வரை பயனுள்ளதாகவும் ஆக்கிவைப்பாயாக!” என்று பிரார்த்தனை செய்தார்கள்.


பின்னர் தமது இரு கரங்களையும் உயர்த்தினார்கள். அவர்களது அக்குளின் வெண்மை தென்படும் அளவுக்கு கரங்களை உயர்த்தியே (நீண்ட நேரம்) வைத்திருந்தார்கள். பின்னர் மக்களின் பக்கம் தமது முதுகை திருப்பியவர்களாக (கிப்லா திசையை முன்னோக்கி நின்று) தம்முடைய மேலாடையை திருப்பி போட்டார்கள். அப்போதும் அவர்கள் தமது இரு கரங்களையும் உயர்த்தி வைத்திருந்தார்கள்.


பின்னர் மக்களை நோக்கி சொற்பொழிவு மேடையை விட்டு இறங்கி பின்னர் இரு ரக்அத்துக்கள் தொழ வைத்தார்கள். அப்போது அல்லாஹ் வாகனத்தில் மேகத்தை உண்டாக்கினான். அதில் இடியுடன் கலந்த மின்னலும் இருந்தது. பின்னர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் அளவுக்கு பெரும் மழை பொழியத் தொடங்கியது. நூல்:- அபூதாவூத்-992


அபூஜஅஃபர் அல்பாக்கிர் (ரலி) அவர்கள் கூறியதாவது. "அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தமது மேலாடையை பஞ்சம் மாற வேண்டும் (செழிப்பு உண்டாக வேண்டும்) என்பதற்காகத் திருப்பிப் போட்டார்கள் நூல்:- தாரகுத்னீ, புலூகுல் மராம்-538


மழை பெய்யும்போது...  


அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( ثِنْتَانِ مَا تَرَدَّانِ: الدُّعَاءُ عِنْدَ النِّدَاءِ وَتَحْتَ الْمَطَرِ ) பாங்கு நேரத்திலும், மழை பெய்யும்போதும் செய்யும் பிரார்த்தனை ஒப்புக்கொள்ளப்படும். அறிவிப்பாளர்:- சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் நூல்:- ஹாகிம், பைஹகீ, தஃப்சீர் துர்ருல் மன்ஸூர் பனூ இஸ்ராயீல் வசனம்-87


ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மழையைக் கண்டால், ( صَيِّبًا نَافِعًا اَللّهُمَّ ) "இறைவா! பயனுள்ள மழையாக ஆக்குவாயாக!" என்று கூறுவார்கள் நூல்:- புகாரீ-1032


சாதாரணமான வழமையான முறையில் மழை பெய்தால் மேற்காணும் நபிமொழியிலுள்ள துஆவை ஓத வேண்டும்.


மழை பொழிகிற போது இது இறையருள்” என்று சொல்வது (சுன்னத் எனும்) நபிவழி. அல்லாஹ்வின் அருளின் காரணமாக மழை பொழிகிறது என்று சொல்வது இறைநம்பிக்கைக்குரிய  இயல்பு.


பிற பிராணிகளுக்காக


அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். எந்த ஒரு சமூகம் ஸகாத் கொடுப்பதை விட்டு விலகுமோ, அல்லாஹ் வானத்திலிருந்து மழையை_நிறுத்தி விடுவான். கால்நடைகள் மட்டும் அங்கு இல்லையென்றால் அந்த சமூகத்திற்கு அறவே மழையை நிறுத்தி விடுவான். நூல்:- இப்னுமாஜா, பைஹகீ


கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நபி சுலைமான் (அலை) அவர்கள் மழை பொழிய வேண்டுவதற்காக நகரை விட்டு வெளியேறினார்கள். அப்போது ஓர் எறும்பு நிமிர்ந்து படுத்துக் கொண்டு தன்னுடைய கால்களை வானத்தை நோக்கி தூக்கிய நிலையில், ( اَللّهُمَّ إِنَّا خَلْقٌ مِنْ خَلْقِكَ لَيْسَ بِنَا غَنًی عَنْ سُقياكَ )  " இறைவா! நாங்கள் உன்னுடைய படைப்புகளில் ஒரு படைப்பாக உள்ளோம். உன் மழை எங்களுக்கு அவசியம் தேவை" என்று கூறிக் கொண்டிருந்ததைக் கண்டார்கள். பின்னர் சுலைமான் (அலை) அவர்கள், ( اِرْجِعُوا فَقَد سُقيتُمْ بِدَعوَةِ غَيرِكُم ) "நீங்கள் எல்லோரும் திரும்பிச் செல்லுங்கள். நீங்கள் அல்லாத வேறு ஒரு பிராணியின் பிரார்த்தனையால் நீங்கள் நீர் புகட்டப்பட்டு விட்டீர்கள்" என்று கூறினார்கள். அறிவிப்பாளர்:-  அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்னத் அஹ்மத், புலூகுல் மராம்-544


மழைக்காக தொழும்போது, தொழுகைத்திடலுக்கு வளர்ப்பு பிராணிகள், முதியோர்கள், சிறு குழந்தைகள், ஆகியோரை அழைத்து கொண்டு செல்லவேண்டும். இவர்கள் மீது இரக்கப்பட்டாவது இறைவன் மழையை இறக்கக்கூடும் என்கின்றனர் மார்க்க அறிஞர்கள்.


இறைவனின்  திருப்தி அதிருப்தி


அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لَيْسَتِ السَّنَةُ بِأَنْ لاَ تُمْطَرُوا وَلَكِنِ السَّنَةُ أَنْ تُمْطَرُوا وَتُمْطَرُوا وَلاَ تُنْبِتُ الأَرْضُ شَيْئًا ) மழை பொய்த்துவிடுவதற்குப் பெயர் பஞ்சமன்று. மாறாக, பஞ்சம் என்பது, மழை பெய்து கொண்டேயிருந்தும் பூமியில் (புற்பூண்டுகள்) எதுவும் முளைக்காமலிருப்பதாகும். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-5563


ஒருமுறை நபி மூசா (அலை) அவர்கள் இறைவனிடம், "இறைவா! நீ மக்களின் மீது திருப்தியுடன் இருப்பதையும், திருப்தியுடன் இருப்பதையும் எவ்வாறு விளங்கிக் கொள்ளுவது? என்று வினவினார்கள்.


அதற்கு இறைவன், "நான் மக்கள் மீது திருப்தியுடன் இருந்தால், அவர்கள் பயிரிடும் பொழுது தேவையான மழையை இறக்குவேன்; அவர்கள் அறுவடை செய்யும்பொழுது மழையை இறக்கமாட்டேன். (அதன் மூலம் அவர்கள் வளமுடன் வாழ்வார்கள்.) மேலும் அவர்களின் காரியங்களை (ஆட்சி அதிகாரங்களை) நல்லவர்களிடம் ஒப்படைப்பேன். ( அதன் மூலம் அவர்கள் நிம்மதியுடன் வாழ்வார்கள்.) நான் மக்கள் மீது அதிருப்தியுடன் இருந்தால், அவர்கள் பயிரிடும்போது மழையை இறக்க மாட்டேன்; அவர்கள் அறுவடை செய்யும் பொழுது மழையை இறக்குவேன். (அதன் மூலம் அவர்கள் பசி, பஞ்சத்திற்கு ஆளாவார்கள்.)  அவர்களின் காரியங்களை (ஆட்சி அதிகாரங்களை) தீய மனிதர்களிடம் ஒப்படைப்பேன். (அதன் மூலம் அவர்கள் கொடுமைக்கு ஆளாவார்கள்)" என்று விவரித்தான்.


பாவமன்னிப்பு கோருவது


(பாவமன்னிப்புத் தேடினால்) வான்மழையைத் தொடர்ச்சியாக (தேவைக்கேற்ப) உங்களின் மீது பொழியச்செய்வான். திருக்குர்ஆன்:- 71:11


ஹிஜ்ரி 18 ஆம் ஆண்டு மதீனாவில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. அதற்கு "சாம்பல் (ரமாதா) ஆண்டு" என்று பெயர். மழை இல்லாத காரணத்தால் பூமி வறண்டு சாம்பல் நிறமாக மாறியது. ஒன்பது மாதங்கள் நீடித்த இந்தப் பஞ்சத்தின் போது அப்பாஸ் (ரலி) அவர்களிடம் மழைக்காக பிரார்த்திக்குமாறு ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் கேட்டுக்கொண்டார்கள். இது நபியவர்களின் குடும்பத்தாருக்கு கொடுக்கப்பட்ட கண்ணியமாகும். அதிலும் அப்பாஸ் (ரலி) அவர்களுக்குத் தந்தையின் அந்தஸ்தை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அளித்து வந்தார்கள்.


அப்போது அப்பாஸ் (ரலி) அவர்கள், "இறைவா! பாவத்தின் காரணத்தாலேயே சோதனை ஏற்படுகிறது. அது பாவமன்னிப்பு கோருவதன் மூலம் அகலும். உன்னுடைய நபியிடம் எனக்கிருந்த தகுதிக்காக மக்கள் என்னைப் பிரார்த்திக்கச் சொல்லியிருக்கிறார்கள். இதோ! எங்கள் கரங்கள் உன்னை நோக்கி உயர்ந்துள்ளன. பாவங்களை மன்னித்து, எங்களுக்கு மழை பொழியச்செய்வாயாக!" என்று பிரார்த்தித்தார்கள். மழை கொட்டியது; பூமி குளிர்ந்தது; மக்கள் வாழ்ந்தனர்.


இதிலிருந்து உயிரோடு இருக்கும் நல்லவர்களை பிரார்த்திக்கச் சொல்லி கேட்டுக் கொள்வதும் அவர்களின் பிரார்த்தனையின் மூலம் அல்லாஹ்வின் உதவியை நாடுவதும் ஆகுமானதே என்று தெரிகிறது. நூல்:- அல்இஸ்தீஆப், ஃபத்ஹுல் பாரீ


கண்ணியவான்கள்

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. மக்கள் பஞ்சத்தால் பீடிக்கப்படும்போது (ஜனாதிபதி) உமர் (ரலி) அவர்கள் (நபியவர்களின் தந்தையின் சகோதரர் என்பதற்காக) அப்பாஸ் பின் அப்துல் முத்தலிப் (ரலி) அவர்களை, மழை வேண்டிப் பிரார்த்திக்கும்படி கேட்பார்கள். நூல்:- புகாரீ-1010


மழை பஞ்சம் எனும் சோதனை நீங்க நன்னடத்தையுடையவர்களையும், மார்க்க அறிஞர்களையும் பிரார்த்திக்கச் சொல்ல வேண்டும்.


தான தர்மம், தொழுகை, பாவமன்னிப்பு, அழகிய முறையில் பிரார்த்தித்தல் போன்ற நற்காரியங்கள் மூலம் பயன்தரும் மழையை வரவழைக்கலாம் என அறியமுடிகிறது.


தேவைக்கேற்ப போதிய மழையை இறக்கி, நாம் சுபிட்சமாக வாழ அல்லாஹுத்தஆலா அருள்புரிவானாக! ஆமீன்!


மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை.

 

No comments:

Post a Comment

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...