இல்லற பயணம்
وَأَنْكِحُوا الْأَيَامَى مِنْكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ
وَإِمَائِكُمْ إِنْ يَكُونُوا فُقَرَاءَ يُغْنِهِمُ اللَّهُ مِنْ فَضْلِهِ
وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ
உங்களில் வாழ்க்கைத் துணையின்றி இருப்பவர்களுக்கும், உங்களுடைய ஆண் மற்றும் பெண் அடிமைகளில் நல்லவர்களுக்கும் நீங்கள் மணமுடித்து வையுங்கள். அவர்கள் ஏழைகளாக இருந்தால், அவர்களைத் தன் அருளால் அல்லாஹ் தன்னிறைவு பெறச் செய்வான். அல்லாஹ் தாராளமானவனும் நன்கறிந்தோனும் ஆவான். திருக்குர்ஆன்:24:32
திருமணம் மனிதனின் இயற்கை திட்டத்திற்கு ஒரு வடிகாலாகும்.
அதன் மூலம் மனிதன் தூய்மையான வாழ்க்கையை மேற்கொள்ள முடியும். மனித இனப்பெருக்கத்திற்கும்,
ஆண்-பெண் இருபாலரின் அமைதியான
நிம்மதியான வாழ்க்கைக்கும் திருமணம் வழிவகுக்கும். வாழ்க்கையில் ஒரு பிடிப்பும் நோக்கமும்
ஏற்பட திருமணம் காரணமாக அமைகிறது. மனித இதயங்களில் மகிழ்ச்சி, அன்பு, காதல், பாசம் ஆகிய இயல்பான உணர்வுகளுக்குத் திருமணமே சிறந்த அரங்கமாகும். திருமணம் இஸ்லாத்தில்
வலியுறுத்தப்பட்ட நபிவழியாகும்.
திருமணம் என்பது இரு மனமும் ஆத்மார்த்தமாக இணைந்து, நீண்ட தூரம் செல்லும் இனிய பயணம். இல்லற பயணம் இனிமையாக அமைய வேண்டுமானால் உடன் வருகிற துணையின் ஒத்துழைப்பும், ஆதரவும் மிக அவசியமானது. அந்தத் துணையை தேர்ந்தெடுப்பதில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். இதில் `ஜஸ்ட் மிஸ்’ ஆனாலும் சிக்கல் ஆகிவிடும்.
பலன்கள் ஏராளம்
(நபியே!) நிச்சயமாக நாம் உங்களுக்கு முன்னரும் தூதர்கள் பலரை அனுப்பி இருக்கிறோம். உங்களைப் போலவே அவர்களுக்கும் மனைவி மக்களையும் கொடுத்திருந்தோம். திருக்குர்ஆன்:- 13:38
கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( اِذَا
تَزَوَّجَ العَبدُ فَقَد اِستَکمَلَ نِصفُ الدِّینِ فَلیَتَّقِ اللّٰهَ فِی النِّصفِ
البَاقِی ) ஒரு மனிதன் திருமணம் செய்து கொண்டால் அவனுடைய மார்க்கம்
பாதி பரிபூரணமாகிவிட்டது. மீதியுள்ள பாதியில் அல்லாஹ்வை பயந்து கொள்ளட்டும். அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- பைஹகீ, மிஷ்காத் பக்கம்-268
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். திருமணம் செய்து கொள்ளுங்கள். மணம் புரிந்து வாழும் ஒரு நாள் ஆயிரம் வருடங்கள் வணங்குவதைவிடச் சிறந்தது. நூல்:- தைலமீ
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நான்கு விஷயங்கள் இறைத்தூதர்களின் வழிமுறைகளில் உள்ளவையாகும் அதில் ஒன்று மணமுடித்தல் ஆகும். அறிவிப்பாளர் அறிவிப்பாளர்:- அபூஅய்யூப் அல் அன்ஸாரீ (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-1000
அபூபக்ர் (ரலி) அவர்கள் "மண முடித்துக் கொள்ளுமாறு உங்களுக்கு அல்லாஹ் பிறப்பித்துள்ள ஆணைக்கு நீங்கள் கீழ்ப்படியுங்கள். உங்களுக்கு வசதி வழங்குதாக அளித்துள்ள வாக்கை அவன் நிறைவேற்றுவான்" என்று கூறினார்கள். நூல்:- தஃப்சீர் இப்னு கசீர் அந்நூர், வசனம்-32
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
எனது ஆயுளில் மீதமிருப்பவை பத்து நாட்கள் தான் என்றாலும் நான் மணமுடித்துக் கொள்ள விரும்புவேன்
ஏனெனில் நான் அல்லாஹ்வை சந்திக்கும்போது மனைவி இல்லாதவனாக இருக்கலாகாது. நூல்:- இப்னு அபீஷைபா, இஹ்யா
இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஒரு முஸ்லிம் உபரியான வணக்கங்களில் ஈடுபடுவதைவிட திருமணம் செய்து மனைவி, மக்களின் தேவைக்காக உழைப்பது சிறந்ததாகும்.
திருமணத்தின் மூலம் மனிதகுலம் பெறும் பலன்கள் ஏராளம்.
அதாவது மன அமைதி, உடல் சுகம், சந்ததி பாக்கியம், நிர்வாகத்திறன், உழைப்பின் மீது ஆர்வம், கஷ்டங்களை தாங்கும்
மனப்பக்குவம் சகிப்புத்தன்மை, தன்னை உணரும் தன்மை, பிறரைப் பேணும் பண்பு, போன்ற பல்வேறு நன்மைகளும் உருவாகின்றன.
இவை அனைத்தும் மணவாழ்வில் கிடைக்கப் பெறுவதுடன்; மண வாழ்வில் ஏற்படுகின்ற
மகிழ்ச்சியினால் நரம்பு மண்டலத்தில் எண்டோபின்ஸ் என்னும் வேதிப்பொருள் உருவாகி அட்ரினல்
சுரப்பிகள் சுரந்து நரம்புகளில் புத்துணர்ச்சி ஏற்படுகிறது. இதனால் மன சோர்வு, களைப்பு, நெஞ்சுவலி, இதயக்கோளாறு, கழுத்துவலி, மூட்டுவலி போன்ற பல
நோய்கள் நீங்கி சுறுசுறுப்பும், உத்வேகமும் ஏற்படுகின்றன.
இக்கருத்து அமெரிக்காவில் ஒரு இலட்சம் தம்பதியரையும்
பிரிட்டனில் எட்டாயிரம் தம்பதியரையும் பேட்டி கண்டு ஆய்வு செய்து தொகுத்த முடிவாகும்.
சுருங்கக் கூறின் மணவாழ்க்கையின் மூலம் மகிழ்ச்சியாக இருப்பவர்கள் உடல் ஆரோக்கியமாக
இருப்பார்கள் எனலாம்.
கற்பொழுக்கம் பேணலாம்
உங்களுக்கு விருப்பமான பெண்களை மணமுடித்துக் கொள்ளுங்கள். திருக்குர்ஆன்:- 4:3
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( يَا مَعْشَرَ الشَّبَابِ مَنِ اسْتَطَاعَ الْبَاءَةَ فَلْيَتَزَوَّجْ، فَإِنَّهُ أَغَضُّ لِلْبَصَرِ، وَأَحْصَنُ لِلْفَرْجِ ) இளைஞர்களே! உங்களில் தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றவர் மணமுடித்துக் கொள்ளட்டும். ஏனெனில், அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-5066, முஸ்லிம்-2712, திர்மிதீ-1001, நசாயீ-3157
திருமணம் மனிதனின் பாலியல் ஆசைக்கு வடிகாலாக அமைந்து விடுவதால், அடுத்த பெண்களை தவறான எண்ணத்தோடு பார்க்க வேண்டிய தேவை ஏற்படாது. கெட்ட நோக்கத்தோடு பார்ப்பதை அது தடுத்து விடுகிறது. தவறான வழிக்கு சென்று விடாமல் கற்பைக் காக்கும் விதமாக தடுத்தும் விடுகிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மூன்று
பேருக்கு உதவி செய்வது அல்லாஹ்வின் பொறுப்பாகும். அதில் ஒருவர், கற்பொழுக்கம் பேண வேண்டும் என்ற எண்ணத்தில் திருமணம்
செய்து கொண்டவர். அறிவிப்பாளர்:-
அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்
:- திர்மிதீ -1579, நசாயீ-3166
சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. என்னிடம் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் "மணமுடித்தீரா?" என்று கேட்டார்கள். நான் 'இல்லை' என்றேன். அன்னார், ( فَتَزَوَّجْ فَإِنَّ خَيْرَ هَذِهِ الأُمَّةِ أَكْثَرُهَا نِسَاءً ) "மணமுடித்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இந்த சமுதாயத்திலேயே சிறந்தவர் (ஆகிய முஹம்மது - ஸல் அவர்கள்) அதிகமான பெண்களை மணமுடித்தவர் ஆவார்" என்று கூறினார்கள். நூல் புகாரீ-5069
செல்வம் பெறலாம்
அப்துல்லாஹ் பின் மஸ்ஊது (ரலி) அவர்கள், ( اِلْتَمِسُوا الْغِنَى فِي النِّكَاح ) “வசதியைத் திருமணத்தால் தேடிக்கொள்ளுங்கள்.” (ஏனெனில்) உயர்ந்தோன் அல்லாஹ், 'அவர்கள் ஏழைகளாக இருந்தால், அவர்களைத் தன் அருளால் அல்லாஹ் தன்னிறைவு பெறச் செய்வான்' என்று தெரிவிக்கின்றான்" எனக் கூறினார்கள். நூல்:- தஃப்சீர் இப்னு கசீர் அந்நூர், வசனம்-32
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். திருமணம் செய்து கொள்ளுங்கள். பெண்கள் (பரக்கத் எனும்) அருள்வளத்தைக் கொண்டு வருவார்கள். நூல்:- ஹாகிம்
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் "மனைவி இல்லாதவன் ஏழை ஆவான்" என்று கூறினார்கள். அருகிலிருந்த நபித்தோழர்கள், நாயகமே! அவன் பெரும் செல்வந்தனாக இருந்தாலுமா? என்று வினவினர். அதற்கு அண்ணலார் "ஆம், அவன் பெரும் செல்வந்தனாக இருந்தாலும் தான்" என்று கூறினார்கள். மேலும் அண்ணலார் "கணவன் இல்லாத பெண்ணும் ஏழையே" என்று கூறினார்கள். நபித்தோழர்கள் நாயகமே! "அவள் பெரும் செல்வ சீமாட்டியாக இருந்தாலுமா?" என்று வினவினர். அதற்கும் அண்ணலார் "ஆம் அவள் பெரும் செல்வ சீமாட்டியாக இருந்தாலும் தான்" என்று கூறினார்கள். அறிவிப்பாளர்:- உபை பின் ரஜீஹ் (ரலி) அவர்கள் நூல்:- ரஸீன்
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களிடம் ஒரு வாலிபர் வந்து நான் மிகவும் வறுமை நிலையில் வாடுகிறேன். எனவே, என் வறுமை நிலை நீங்குவதற்கு நீங்கள் எனக்காக பிரார்த்திக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதைச் செவியுற்ற இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் வாலிபரே! நீ திருமணம் முடித்து விட்டாயா? என்று வினவினார்கள். அவ்வாலிபர் "இல்லை" என்று கூறியதும், அப்படியானால் உடனே நீ ஒரு பெண்ணைப் பார்த்து திருமணம் முடித்துக் கொள்! உன் கஷ்டமெல்லாம் தீர்ந்து விடும் என்று கூறினார்கள். அதைச் செவியுற்ற அந்த வாலிபர் சிரித்து விட்டார்.
"அறிஞர் அவர்களே! போதிய வாழ்வாதாரமின்றி நானே மிகவும் சிரமப்படுகிறேன். என் சிரமம் நீங்கத்தான் உங்களிடம் பிரார்த்திக்க கேட்டுக் கொண்டேன். ஆனால் நீங்களோ மற்றொரு ஜீவனுக்கும் என்னை பொறுப்பேற்க சொல்கிறீர்கள். உங்களின் சொல்படி நான் மணமுடித்துக் கொண்டால் அடுத்தடுத்து குழந்தைகளும் பிறந்து விடும். நீங்கள் என்னை மணமுடிக்க சொல்வது வேடிக்கையாகத்தான் இருக்கிறது" என்று அந்த வாலிபர் கூறினார்.
வாலிபரின் கூற்றை செவியுற்ற இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கோபமடைந்தார்கள். சகோதரரே! உமக்கு அல்லாஹ்வின் மீது நம்பிக்கை இல்லையா? என்று கூறிவிட்டு தலைப்பில் காணும் திருவசனத்தை ஓதிக்காட்டினார்கள்.
முதல் சொந்தம்
நீங்களும் உங்கள் மனைவியரும் மகிழ்ச்சி அடைந்தவர்களாக சொர்க்கத்தில் நுழையுங்கள் என்று மறுமையில் அவர்களுக்கு கூறப்படும். திருக்குர்ஆன்:- 43:70
ஒரு முறை ஆயிஷா (ரலி) அவர்களும் பாத்திமா (ரலி)
அவர்களும் உரையாடிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது பாத்திமா (ரலி) அவர்கள் மறுமை நாளில்
சொர்க்கம் செல்ல அழைக்கும்போது "ஒரு மனிதன் தன் பெயருடன் தன் தந்தையின் பெயர்
சேர்த்தே அழைக்கப்படுவான்" என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே,
இன்ஷா அல்லாஹ் மறுமை நாளில் மக்கள் முன்னிலையில் “முஹம்மதின் மகள் ஃபாத்திமாவே!”
என்று என்னை அழைக்கும்போது, அது எனக்கு எவ்வளவு பெருமையாக இருக்கும் என்றார்கள்.
இதை செவியுற்ற ஆயிஷா (ரலி) அவர்கள் நாளை சொர்க்கத்தில்
நுழையும்போது ஒவ்வொருவரும் தன் மனைவியின் கரம்பிடித்து சொர்க்கம் செல்வார்கள். என்று
அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறியுள்ளான். எனவே, இன்ஷா அல்லாஹ் நான் அருமை நாயகம் (ஸல்) அவர்களின்
கரம் பிடித்து சொர்க்கம் செல்லும்போது, அது எனக்கு எவ்வளவு பெருமையாக இருக்கும் என்று கூறினார்கள்.
முதன்முதலாய் தோன்றிய உறவு முறை என்பது கணவன் மனைவியின்
உறவு முறையாகும். அதுவும் இந்த உறவுமுறை சொர்க்கத்திலேயே தொடங்கி விட்டது.
உலகத்தில் நமது திருமணத்தின் மூலம் தொடங்கிய இந்த உறவுமுறை சொர்க்கம் வரை நீடிக்கும்
என்றே திருக்குர்ஆன் கூறுகிறது.
மணப்பெண்ணைப் பார்க்கலாம்
முகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் ஒரு பெண்ணைப் பெண் பேசினேன். (இதையறிந்த) இறைத்தூதர் பெருமானார் (ஸல்) அவர்கள் என்னிடம் ( انْظُرْ إِلَيْهَا فَإِنَّهُ أَحْرَى أَنْ يُؤْدَمَ بَيْنَكُمَا ) "அந்தப் பெண்ணைப் பார்த்துக் கொள். ஏனெனில், அ(வளைப் பார்ப்ப)து, உங்கள் இருவருக்கு இடையே அன்பு ஏற்படுவதற்கு ஏற்றதாகும்" என்று கூறினார்கள். நூல் :- முஸ்னது அஹ்மது, திர்மிதீ-1007, நசாயீ-3183, இப்னு ஹிப்பான், தாரமீ
ஒருவர் தாம் மணமுடிக்கவிருக்கும் பெண்ணை, பெண் பேசப்படும் போதோ அதற்குப் பிறகோ நேரில் பார்ப்பதற்கு அனுமதி உண்டு. முகம், இரு கைகள் ஆகியவற்றை இவ்வாறு பார்க்கலாம். இதற்கு அப்பெண்ணிடம் அனுமதி கேட்க வேண்டிய அவசியமில்லை. மணக்கவிருக்கும் பெண்ணைத் திருமணத்திற்கு முன்பே பார்த்துக் கொள்வதால் இருவருக்கு இடையே இணக்கம், அன்பு, புரிதல் ஆகியவை உருவாக வாய்ப்பு ஏற்படும். இதனால் திருமணத்திற்குப்பின் பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம்.
மண முடிக்கப்போகும் பெண்ணை பார்ப்பது நல்லது. ஏனெனில், பார்த்துவிட்டால் சந்தேகம் நீங்கும்; மனம் அமைதி அடையும்; மண வாழ்வில் உற்சாகம் பிறக்கும். தவிரவும், அப்பெண்ணிடம் ஏதேனும் குறை இருந்தாலும் முன்னதாகவே கண்டு கொள்ளலாம். விரும்பினால், மணமுடிக்கலாம்; இல்லையென்றால் வேண்டாம் என்று தெளிவாக சொல்லி விடலாம். எனவே, ஒரு பெண்ணை பார்ப்பதால் அவளை மணமுடிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. பார்த்த பின்னே அவளை மணமுடிக்கலாமா வேண்டாமா என இவர் தான் முடிவு செய்ய வேண்டும்.
ஒரு பொருளை புகைப்படத்தில் பார்ப்பதற்கும், நேரடியாக பார்ப்பதற்கும் வேறுபாடு உண்டு. மணமுடிக்கும் பெண்ணை திருமணத்திற்கு முன்
அப்பெண் அந்நியராக கருதப்பட்டாலும்,
அவளின் முகத்தை பார்ப்பதற்கு
மார்க்கம் எல்லா நிலைகளிலும் அனுமதி அளிக்கிறது. சகோதர சமயத்தவர்களின் பல கலாச்சாரங்களை
பரிமாறிக்கொண்ட நாம், முறையான இக்கலாச்சாரத்தை விட்டு விட்டது ஏனோ? திருமணத்திற்கு முன், மணமக்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வது என்பது, சடங்குக்காக அல்ல; சந்தோஷத்திற்காக தான் என்று விளங்க வேண்டும்.
ஆம்! இஸ்லாமிய மரபை அறியாதோர் "கல்யாணத்துக்கு முன்பே மாப்பிள்ளை பெண்ணை பார்ப்பதா? அதெல்லாம் எங்கள் வழக்கமில்லை!" என்று பெருமையோடு கூறுகின்றனர். இந்த வழக்கம் கைவிடப்பட வேண்டியவை.
ஒரு கிலோ ஒரு கத்தரிக்காய் வாங்கும்போது கூட ஒவ்வொரு காயையும் நான்கு முறை புரட்டிப் புரட்டிப் பார்க்கிறோம். ஒரு சட்டை வாங்க நான்கு கடை ஏறி இறங்குகிறோம். அப்படி இருக்க, வாழ்நாளெல்லாம் நம் வாழ்க்கை துணைவியாக இருக்க போகிறவளை பார்க்கக் கூடாது என்று சொல்வது நியாயமா? திருமணத்திற்கு முன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வது தான் இஸ்லாமிய வழிமுறையாகும்.
எச்சரிக்கை! நமக்குத்தான் திருமணம் நிச்சயிக்கப்பட்டு விட்டதே என்ற தைரியத்தில் திருமணத்திற்கு முன்பே இருவரும் அங்கே இங்கே என்று சுற்றுவதோ, தனிமையில் சந்திப்பதோ, போனில் பேசிக் கொள்வதோ கூடவே கூடாது. இது தடைசெய்யப்பட்ட (ஹராமான) செயலாகும்.
நல்லொழுக்கமுள்ள பெண்கள்
நல்லொழுக்கமுள்ள பெண்கள் (அல்லாஹ்வுக்கும் தங்கள் கணவனுக்கும்) பணிந்து நடப்பார்கள். (தங்கள் கணவன்) மறைவாக இருக்கும் சமயத்தில் அல்லாஹ்வின் பாதுகாப்பைக் கொண்டு (தங்களையும் கணவனின் மற்ற பொருள்களையும்) பேணிப் பாதுகாத்துக் கொள்வார்கள். திருக்குர்ஆன்:- 4:34
கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِنَّ الْمَرْأَةَ تُنْكَحُ عَلَى دِينِهَا وَمَالِهَا وَجَمَالِهَا فَعَلَيْكَ بِذَاتِ الدِّينِ ) நான்கு நோக்கத்திற்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள். 1)அவளது செல்வத்திற்காக, 2)அவளது குடும்பப் பாரம்பரியத்திற்காக 3)அவளது அழகிற்காக, 4)அவளது மார்க்க நல்லொழுக்கத்திற்காக. ஆகவே, மார்க்க நல்லொழுக்கம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-5090, முஸ்லிம்-2905, நசாயீ-3174
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
( لا تزوَّجوا النساءَ لِحُسنِهِنَّ فعسى حُسنُهُنَّ أن يُرديَهُنَّ ولا تزوَّجوهُنَّ لأموالِهِنَّ فعسى أموالُهُنَّ أن تُطغِيَهُنَّ ولكن تزوَّجوهُنَّ على الدِّينِ ولَأَمةٌ خَرماءُ سوداءُ ذاتُ دِينٍ أفضَلُ )
பெண்களை அவர்களின் அழகுக்காக
மட்டும் திருமணம் செய்யாதீர்கள். ஏனெனில் அவர்களின் அழகு அவர்களைக் தலைக்கனத்தில்
தள்ளிவிடலாம். (அதே போன்று) அவர்களின் செல்வத்திற்காக மட்டும் மணமுடிக்காதீர்கள். அவர்களின்
செல்வம் அவர்களை வரம்பு மீறச் செய்யலாம். எனினும் மார்க்கப்பற்றுக்காக அவர்களை
மணந்துகொள்ளுங்கள். மார்க்கப்பற்றுள்ள, காது அறுக்கப்பட்ட, கறுப்பு நிற அடிமை பெண், (மார்க்கமற்ற, அழகான சுதந்தரமான பெண்ணைவிட) சிறந்தவள்
ஆவாள். நூல்-:- இப்னுமாஜா 1849, பஸ்ஸார் 2438, பைஹகீ 13469
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். யார் ஒரு பெண்ணை அவளது செல்வத்திற்காக மணமுடிப்பாரோ, அவருக்கு அல்லாஹ் வறுமையை அதிகரிப்பான். அவளது குடும்பப் பாரம்பரியத்திற்காக மணமுடிப்பவருக்கு அல்லாஹ் இழிவைத் தருவான். அவளது அழகிற்காக மணமுடிப்பவருக்கு அல்லாஹ் தாழ்வைத் தருவான். ஆனால், தன் தீய பார்வையைத் தவிர்க்கவும், தன் ஆண்மையைக் காக்கவும், இரத்த உறவினரைச் சேர்க்கவும் ஒரு பெண்ணை மணமுடிப்பவருக்கு, அல்லாஹ் அவள் மூலம் அவருக்கும் அவர் மூலம் அவளுக்கும் நிம்மதியையும், மனநிறைவையும் அளிக்கிறான். நூல்:- தப்ரானீ
ஒரு பெண்ணின் அழகு அவளை ஆணவம் கொள்ளச் செய்யலாம். அவளது பணம் அவளை அநீதமிழைக்கவும் எல்லை மீறவும் தூண்டலாம். அவளது குடும்பப் பாரம்பரியம் சிலவேளைகளில் எதற்கும் உதவாமல் போகலாம். எனவே, நல்லொழுக்கமும் உயர் பண்பும் உடைய பெண்ணே தேர்ந்தெடுக்க உகந்தவள் ஆவாள். அவளே குடும்பத்துக்கு ஏற்ற பெண்ணாக இருப்பாள். அதையே மார்க்க ஒழுக்கமுள்ள பெண் என்று நபிமொழி கூறுகிறது.
இஸ்லாமிய நல்லொழுக்க மாண்புகள் ஒரு பெண்ணிடம் இருக்கிறதா? இல்லையா? என்பதை அறிய, அவளது நடைமுறையையும், அவளின் பெற்றோரையும், அவளின் நட்பு வட்டாரங்களையும் பார்த்தாலே போதுமானது.
மார்க்கப்பற்றுள்ள ஆண்கள்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِذَا خَطَبَ إِلَيْكُمْ مَنْ تَرْضَوْنَ دِينَهُ وَخُلُقَهُ فَزَوِّجُوهُ
إِلاَّ تَفْعَلُوا تَكُنْ فِتْنَةٌ فِي الأَرْضِ وَفَسَادٌ عَرِيضٌ ) யாருடைய மார்க்கப்பற்று, நற்குணம் ஆகியவை குறித்து நீங்கள் திருப்தி அடைவீர்களோ
அவர் உங்களிடம் பெண் கேட்டால், இவருக்கு மணமுடித்து
வையுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யாவிட்டால், இந்த பூமியில் கலகமும் பெருமளவு குழப்பங்களும் ஏற்படும். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-1004
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். தன் மகளை ஒரு பாவிக்கு மண முடித்துக் கொடுத்தவர், அவளுடைய உறவை துண்டித்து விட்டவர் ஆவார். நூல்:- இப்னு ஹிப்பான்
ஹஸன் (ரலி) அவர்களிடம் ஒருவர் வந்து, "என் மகளை பலரும் பெண் கேட்கிறார்கள். நான் யாருக்கு அவளை மணமுடித்து கொடுக்கட்டும்" என்று வினவினார். அதற்கு அன்னார், மார்க்கம் தெரிந்த இறையச்சமுள்ள ஒருவருக்கு மண முடித்துக் கொடுங்கள். அவர் அவளை விரும்பினால் கண்ணியப்படுத்துவார். அவள் மீது விருப்பம் இல்லையெனில் அவளுக்கு அநீதமிழைக்கமாட்டார்" என்று கூறினார்கள்.
பணம், பதவி, பாரம்பரியம் ஆகியவற்றை மட்டும் பார்த்துப் பெண் கொடுக்கும் நிலை தோன்றினால், ஆண்களிலும் பெண்களிலும் பலருக்கு வாழ்க்கைத் துணை கிடைக்காத தேக்க நிலை ஏற்படலாம். இதையடுத்து நாட்டில் விபச்சாரம் அதிகரிக்கும். பெற்றோரின் சுயமரியாதைக்கு பங்கம் ஏற்படும். அதையொட்டி பிளவும் கலக்கமும் குழப்பமும் உருவாகும்.
நமது முன்னோர்கள்
ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் ஒருமுறை இரவில் நகர்வலம் வரும்போது ஒரு பால்காரியின் மகளிடத்தில் இறையச்சம் இருப்பதைக் கண்டார்கள். பிறகு அவளையே தம் மகனார் ஆஸிமுக்கு மனைவியாக தேர்வு செய்தார்கள். இந்த தம்பதியினரின் வழித்தோன்றலில் வந்தவர் தான் உலகம் போற்றும் ஆட்சியாளர் உமர் பின் அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்கள்.
பேரறிஞர் இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் அடிமை வர்க்கத்தைச் சேர்ந்த கருப்பு நிறமுடைய ஒரு பெண்ணை மணமுடித்துக் கொண்டார்கள். அப்பெண்ணின் பெயர் பலாக். அந்த ஊரிலுள்ள பலரும் இமாம் அவர்களுக்கு அழகு நிறைந்த பெண்ணை மணமுடித்து வைப்பதற்கு பெரும் முயற்சி செய்தனர். இருந்தாலும், இமாமவர்கள் வேண்டாம் என்று மறுத்து விட்டார்கள். பலாக்கில் (பலாக்) பெரும் தத்துவம் அமைந்திருக்கிறது என்று கூறினார்கள்.
பேரறிஞர் அஹ்மது பின் ஹம்பல் (ரஹ்) அவர்கள் ஒரு கண் சுருங்கிப்போன அவ்ராஉ என்ற பெண்ணை மணமுடித்தார்கள். இப்பெண்ணின் சகோதரி அழகுமிக்கவளாக இருந்தும்கூட அவளை மணக்காமல் இவளை மணந்ததற்கு காரணம் புத்திக்கூர்மையானவள் என்பதேயாகும். இவள் தான் எனக்கு உகந்தவள் என்றும் கூறினார்கள்.
உள்ளதை உள்ளபடி
பாத்திமா பின் கைஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. நான்
அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, முஆவியா பின் அபீ சுஃப்யான் (ரலி) அவர்களும், அபூஜஹ்ம் பின் ஹுதைபா (ரலி) அவர்களும் என்னை பெண்
கேட்கின்றனர்" என்று சொன்னேன்.
அதற்கு அண்ணலார், ( أَمَّا أَبُو جَهْمٍ فَلاَ يَضَعُ عَصَاهُ عَنْ عَاتَقِهِ وَأَمَّا مُعَاوِيَةُ فَصُعْلُوكٌ لاَ مَالَ لَهُ انْكِحِي أُسَامَةَ بْنَ زَيْدٍ ) "அபூஜஹ்ம் தமது கைத்தடியைத் தோளிலிருந்து கீழே வைக்க மாட்டார். (கோபக்காரர் மனைவியைக் கடுமையாக அடித்து விடுபவர்) முஆவியா அவர் ஓர் ஏழை; அவரிடம் எந்தச் செல்வமும் இல்லை. நீ உசாமா பின் ஸைதை மணந்து கொள்!" என்று கூறினார்கள். நானும் அவ்வாறு அவரை மணந்து கொண்டேன். அவரிடம் (எனக்கு) அல்லாஹ் நன்மையை வைத்திருந்தான்; நான் பெருமிதம் அடைந்தேன் .நூல் முஸ்லிம்-2953, நசாயீ-3193
திருமண பேச்சின் போது இன்னார் வீட்டில் உள்ள பெண்
அல்லது மாப்பிள்ளை எப்படி? அல்லது அந்த வீட்டினர்
எப்படிப்பட்டவர்கள்? என்று நம்மிடம் ஆலோசனை
கேட்கப்படும் பொழுது, அவர்களது நிலையை பற்றி
மறைக்காமல் உள்ளதை உள்ளபடி சொல்லுவது கடமையாகும். அவர்களைப் பற்றி தெரிந்திருந்தும்
எனக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்வதுதான் பாவமாகும்.
அவர்களைப் பற்றிய உண்மை நிலையை மறைப்பதும், "ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் பண்ணு" என்று வேதாந்தம் பேசுவதும் மிகப்பெரும் தவறாகும். இஸ்லாமியப் பார்வையில் ஒரு மனிதரிடமுள்ள குறையை பேசுவது புறம் தான். இருந்தாலும் இந்தச் சூழலில் அவர்களது குறைக்கூறி எச்சரிப்பது, புறம் பேசுதல் என்ற பாவத்தில் சேராது என்பதாக இஸ்லாம் போதிக்கிறது.
சில கல்யாண தரகர்கள் தனக்கு கமிஷன் கிடைக்க வேண்டும் என்பதற்காக இருப்பதை இல்லை என்றும் இல்லாததை இருப்பதாகவும் பொய் சொல்லி திருமணம் முடிக்க உறுதுணையாக இருக்கிறார்களே இவர்கள் சற்று சிந்திப்பார்களா?
பகிரங்கப் படுத்துங்கள்
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது. அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் தம்மீது (வாசனை திரவியத்தின்) மஞ்சள் நிற அடையாளம் இருக்க, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அப்போது அது குறித்து அவர்களிடம் அண்ணலார் வினவிய போது, தாம் ஓர் அன்சாரிப் பெண்ணை மணமுடித்துக் கொண்டதாக அவர்கள் அண்ணலாரிடம் தெரிவித்தார்கள். நூல் புகாரீ-5153
ஸாபிது அல்புனானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது. அபூதர்தா (ரலி) அவர்கள் ஒருமுறை பனூ லைஸ் கூட்டத்தாரைச் சேர்ந்த ஒரு பெண்ணை சல்மான் (ரலி) அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பது பற்றி பேசுவதற்காக அவருடன் சென்றார்கள். அந்த வீட்டை சென்றடைந்ததும் அன்னார் மட்டும் உள்ளே சென்று சல்மான் (ரலி) அவர்களின் சிறப்புகளை எடுத்துரைத்து, தங்களுடைய பெண்ணை அன்னாருக்கு திருமணம் செய்து கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டார்கள்.
அதற்கு அவ்வீட்டார்கள், "நாங்கள் சல்மானுக்கு கொடுக்க விரும்பவில்லை தங்களுக்கு
என்றால் தருகின்றோம்" என்று கூறினார்கள். எனவே அபூதர்தா (ரலி) அவர்கள் அப்பெண்ணைத்
திருமணம் செய்துகொண்டு (புதுமாப்பிள்ளையாக) அங்கிருந்து வெளியே வந்து சல்மான் (ரலி)
அவர்களிடம் நடந்ததை எடுத்துச் சொன்னார்கள். நூல்:- அல்ஹில்யா, தப்ரானீ, ஹயாத்துஸ் ஸஹாபா பாகம் - 2, பக்கம் – 905
பிரபலமான நபித்தோழராக விளங்கிய ஜாபிர் (ரலி) அவர்கள், அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்குக்கூட சொல்லாமல் திருமணம் முடித்துள்ளார் என்ற என்கிறது ஒரு நபிமொழி. (முஸ்லிம்-2908)
மதீனா வாழ்க்கையின் ஆரம்பகாலத்தில் இவ்வாறுதான்
பல நபித்தோழர்கள் திருமணத்தை பிரபலப்படுத்தாமல் கண்ணும் கண்ணும் வைத்தார்போல் மிக எளிமையாக
நடத்தி முடித்தார்கள். இவ்வாறு திருமணங்கள் ரகசியமாக நடத்தினால் அதுவே தவறுக்கு வழிகோலாக
ஆகிவிடும் என்று எண்ணியே, அண்ணல் நபி (ஸல்)
அவர்கள் இனிமேல் திருமணத்தை பிரபலப்படுத்துங்கள் என்று கூறினார்கள்.
எனவே இந்த வரலாற்றுச் செய்திகள் திருமணத்தை ரகசியமாக நடத்தலாம் என்பதற்கு ஆதாரமல்ல. மேலும் திருமணத்தை எளிமையாக நடத்த வேண்டும் என்பதற்கு, இது உதாரணம் அல்ல.
மாறாக, அண்ணல் நபி (ஸல்) அவர்கள், தன் தோழர்கள் திருமணத்திற்கு தன்னை அழைக்கவில்லை என்று வருத்தப்படவில்லை. எனவே, தனக்கு மிக நெருக்கமான உறவினர்களோ, நண்பர்களோ தன்னை அவர்கள் வீட்டு திருமணத்திற்கு அழைக்கவில்லை என்றால் அதை பெரிது படுத்தக்கூடாது. என்னை மதிக்கவில்லை; எனக்குச் சொல்லவில்லை என்று வருத்தப்படக் கூடாது என்பதுதான் இந்த வரலாற்றுச் நிகழ்வுகள் நமக்கு தரும் பாடமாகும்.
ஹப்பாப் பின் அல்அஸ்வத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நான் என் பெண் மக்களில் ஒருத்திக்கு திருமணம் நடத்தினேன். (திருமணக் கொண்டாட்டத்தின்)
சப்தத்தை அருமை நாயகம் (ஸல்) அவர்கள் செவியுற்றார்கள். பின்பு அதைப் பற்றி விசாரித்தார்கள்.
அப்போது "ஹப்பாப் தம்முடைய மகளுக்குத் திருமணம் செய்கின்றார்" என்று சொல்லப்பட்டது.
பிறகு அண்ணலார் அதை ஆமோதிக்கும் விதமாக "திருமணத்தைப் பகிரங்கப்படுத்துங்கள்; திருமணத்தைப் பகிரங்கப்படுத்துங்கள்; ஏனென்றால் இது திருமணம் விபச்சாரம் இல்லை" என்று கூறினார்கள். நூல்:- அல்பானீ-1463
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( أَعْلِنُوا هَذَا النِّكَاحَ وَاجْعَلُوهُ فِي الْمَسَاجِدِ وَاضْرِبُوا عَلَيْهِ بِالدُّفُوفِ ) திருமணத்தை பகிரங்கப் படுத்துங்கள்; அதை பள்ளிவாசலில் வைத்து நடத்துங்கள்; (சலங்கையில்லா) கஞ்சிராக்களை அணியுங்கள். அறிவிப்பாளர்:- ஆயிஷா (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-1009
திருமணம் என்பது ஒரு வணக்கமாகும். அதன் சபை வணக்கத்திற்குரிய சபையாகும். இதனால்தான், வணக்கத்திற்கு உரிய இடமாகிய பள்ளிவாசலில் திருமணம் செய்வது சிறந்தது என இந்த நபிமொழி கூறுகிறது.
கிறிஸ்தவர்களின் உலகமான மேலைநாட்டு கலாச்சாரத்தை
விரும்புகின்ற நம்மில் பலர், நமது திருமண விஷயத்தில் அவர்களைப் போன்று இருப்பதில்லை
என்பது தான் வருத்தமேயாகும். ஆம்! கிறிஸ்தவர்கள் திருமண விஷயத்தில் தேவாலயத்தை விட்டுவிடுவதில்லை. அவர்களில் பெரும் செல்வந்தர்களின்
திருமணம் கூட தேவாலயத்தில் தான் நடைபெறுகிறது. ஆனால் நாமோ திருமணத்தை இறையில்லமான பள்ளிவாசலில்
நடத்துவதை தவிர்த்துவிட்டு, எல்லா வசதிகளும் ஒரே இடத்தில் அமைய வேண்டும் என்றெண்ணி, பெரும் பெரும் விலை
உயர்ந்த மண்டபங்களைத் தேடி ஓடுகின்றோம்.
திருமணம் என்பது பலருக்கும் தெரியும்படியாக முஸ்லிமான மக்கள் எல்லோரும் வந்து போகும் இடமான பள்ளிவாசலில் வைத்து நடத்துவது தான் சிறந்தது. யாருக்கும் தெரியாமல் திருமணம் முடித்து விட்டு, ஒருவருடன் ஒருவர் பழகி வந்தால் பார்ப்போர் சந்தேகப்பட நேரிடும். எனவே திருமணத்தை நான்கு பேருக்கு தெரியும் வகையில் செய்ய வேண்டும்.
ரோஜா மலர்கள்
அவன்தான் உங்களை ஒரே உயிரிலிருந்து படைத்தான். அதிலிருந்தே அதன் துணையையும் அவன் படைத்தான். அதனிடம் மன அமைதி பெறுவதற்காக. திருக்குர்ஆன்:- 7:189
அல்லாஹ் ஆதிமனிதர் நபி ஆதம் (அலை) அவர்களின் இடப்புற விலாவிலிருந்து (முதல் பெண்) ஹவ்வா (அலை) அவர்களை படைத்தான்.
அல்லாஹ் ஆணின் பாதத்திலிருந்து பெண்ணை படைத்திருந்தால்
ஆண் உயர்ந்தவன் பெண் தாழ்ந்தவள் என்றாகிவிடும். பெண்ணை ஆண் கேவலப்படுத்துவான். காலடியில்
போட்டு மிதிப்பான். மேலும் ஆணின் தலையிலிருந்து பெண்ணைப் படைத்திருந்தால் ஆணைவிட பெண்
உயர்ந்தவள் என்றும் ஆண் தாழ்ந்தவன் என்றும் ஆகிவிடும். பெண்கள் தலைக்கனம் பிடித்தலைவார்கள்.
எனவேதான் மேலும் இல்லாமல் கீழும் இல்லாமல் ஆணின் நடுப்பகுதியான விலா எலும்பிலிருந்து
பெண்ணைப் படைத்தான்.
அதுவும் வலது பக்கத்து விலா எலும்பிலிருந்து படைக்காமல் இடதுபக்கத்தை விலா எலும்பிலிருந்து படைத்திருப்பது நோக்கம் இடது பக்கத்து விலா எலும்புக்கு அருகில் தான் இதயம் இருக்கிறது “உன் மனைவியை இதயத்தில் வைத்து போற்ற வேண்டும்” என்று உணர்த்தும் விதமாக இது அமைந்திருக்கிறது என்று மார்க்க அறிஞர்கள் கூறுகின்றனர்.
நீங்கள் சேர்ந்து வாழக்கூடிய உங்கள் மனைவிகளை உங்களிலிருந்தே அவன் உற்பத்தி செய்து, உங்களுக்கிடையில் அன்பையும் நேசத்தையும் உண்டுபண்ணி இருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் ஒன்றாகும். சிந்தித்து உணரக்கூடிய மக்களுக்கு இவைகளில் (ஒன்றல்ல) நிச்சயமாகப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. திருக்குர்ஆன்:- 30:21
ஒருமுறை பாத்திமா (ரலி) அவர்கள் தனது அன்புக் கணவர் அலீ (ரலி) அவர்களிடம் "பெண்கள் உங்களுக்காகப் படைக்கப்பட்ட ரோஜா மலர்கள் ஆவார்கள். நீங்கள் அனைவரும் ரோஜாவின் மனத்தை நேசிக்கவே செய்கின்றீர்கள்" என்று கூறினார்கள்.
அண்ணலாரின் ஆசை
கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مِن
بَرَکَةِ المَرأَةِ سُرعَةُ تَزوِیجِهَا وَسُرعَةُ رَحِیمِهَا
) ஓர் பெண்ணில் உள்ள (பரக்கத் எனும்) அருள் வளம் என்பது
அவளுக்கு விரைவாக திருமணம் செய்து வைப்பதும், மேலும் அவள் விரைவாக கருத்தரிப்பதுமாகும்.
நூல்:-முஸ்னது அஹ்மது
மஅகில் பின் யாசர் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருவர்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "நான் ஒரு பெண்ணை பார்த்துள்ளேன்.
அவள் நல்ல குலத்தையும் மதிப்பையும் உடையவன். எனினும் அவள் பிள்ளை பெறமாட்டாள். (மலடியாக
இருக்கிறாள்) நான் அவளை மணந்து கொள்ளலாமா?" என்று கேட்டார்.
அதற்கு அண்ணலார் அவரை தடுத்து விட்டார்கள். பின்னர்
அவர் அண்ணலாரிடம் இரண்டாவது தடவை வந்து கேட்டார். அப்போதும் அவரை தடுத்து விட்டார்கள்.
பின்னர் அவர் மூன்றாவது தடவை வந்து கேட்டார்.
அப்போதும் அவரைத் தடுத்து விட்டு ( تَزَوَّجُوا الْوَلُودَ الْوَدُودَ فَإِنِّي مُكَاثِرٌ بِكُمْ
) “அதிகம் (குழந்தைகள்) பெற்றெடுக்கும் கூடிய, (கணவன் மீது) மிகுந்த அன்புடைய பெண்ணையே மணந்து கொள்ளுங்கள். ஏனென்றால் நான் (மறுமை
நாளில் மற்ற நபிமார்களுக்கு மத்தியில் அதிகமான) உங்களை கொண்டு பெருமிதம் அடைவேன்"
என்று கூறினார்கள். நூல்:- அபூதாவூத்-1754, நசாயீ-3175, ஹாகிம், தப்ரானீ, பைஹகீ
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( خَیرُ نِسَائِكُمْ الوَلُودُ الوَدُودُ ) உங்கள் பெண்களில் சிறந்தவர்கள்
அதிகம் பிள்ளைப்பெற்று, (கணவன் மீது) அதிக பாசம் உள்ளவர்களாவார்கள். நூல்:- பைஹகீ
பூமியில் எப்பகுதியில் மரம் செடி கொடிகள் அதிகமாக
இருக்கின்றனவோ அப்பகுதியில் தான் மழை அதிகமாக பெய்து வருவது நிலவள நியதியாகும். இதே
நியதி குழந்தைப் பேற்றின் நிகழ்விலும் உண்டு. எனவே, குழந்தைகள் அதிகம் இருப்பது
அதிகமான உதவி கிடைப்பதற்கும் பொருளாதாரப் பெருக்கம் ஏற்படுவதற்குக் காரணமாகும். இது
அல்லாஹ்வின் மீதுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்படுகின்ற விஷயமாகும்.
"பெண்கள், குழந்தைகள் பெற்றுக்கொள்ள வெட்கப்படுவது, உலக அழிவின் அடையாளமாகும்"
என்கிறது ஒரு நபிமொழி.
வாழ்த்துக்கள்
அறியாமைக்கால மக்கள் மணமக்களை வாழ்த்தும் போது
"பிர்ரிஃபாயி வல்பனீன்" (இணக்கத்தோடும் ஆண் குழந்தைகளை பெற்றும் வாழ்வீராக!)
என்று கூறிவந்தனர். அண்ணல் நபி அவர்கள் இதை மாற்றி "பாரக்கல்லாஹு லக்க, வ பாரக்க அலைக்க, வ ஜமஅ பைனக்குமா
ஃபீ கைர்" (உமக்கு அல்லாஹ் அருள் வளத்தை
வழங்குவானாக. உன் மீது அருள் வளத்தைப் பொழிவானாக. உங்கள் இருவரையும் நன்மையில் ஒன்று
சேர்ப்பானாக!) என அண்ணலார் வாழ்த்தியுள்ளார்கள். நூல்:- ஃபத்ஹுல்பாரீ
திருமணம் என்பது காமத்திற்கு முறையான வடிக்காலாக
அமைந்து நல்லொழுக்கத்துடன் வாழ பெரும் உதவி புரிகிறது. மேலும் மன நிம்மதியையும்,
உடல் ஆரோக்கியத்தையும்,
வாரிசையும் பெற்றுத்தருகிறது.
ஆகவே திருமண வாழ்க்கையில் கண்ணியம் பேணி இறையருளைப் பெறுவோமாக! ஆமீன்!
மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை.செல்: 9840535951
No comments:
Post a Comment