என்றென்றும் காதல்
وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُمْ مِنْ أَنْفُسِكُمْ أَزْوَاجًا
لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُمْ مَوَدَّةً وَرَحْمَةً
நீங்கள் சேர்ந்து வாழக்கூடிய உங்கள் மனைவிகளை உங்களிலிருந்தே அவன் உற்பத்தி செய்து, உங்களுக்கிடையில் அன்பையும், நேசத்தையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் ஒன்றாகும். திருக்குர்ஆன்:- 30:21
திருமணத்தின் மூலம் கைப்பிடித்த நாள் முதல் ஆயுளின் இறுதி வரை கணவன்-மனைவி ஒற்றுமையாக வாழ வேண்டும். இதை வலியுறுத்தி, ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 29-ம் தேதி உலகம் முழுவதும் “சர்வதேச தம்பதியர் தினம்” (World Couple day) கொண்டாடப்படுகிறது.
தம்பதிகளின் ஒற்றுமைக்கு புரிந்துணர்வு, சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல் போன்ற பண்புகள் முக்கியமானவை. அவற்றை அடித்தளமாகக் கொண்டே திருமண பந்தம் எனும் கோட்டை எழுப்பப்படுகிறது.
மாறிவரும் வாழ்க்கை முறையால் பல தம்பதிகளுக்குள் நெருக்கம் குறைந்து வருகிறது. அதன் வெளிப்பாடாக உறவில் விரிசல் ஏற்படுகிறது. அதில் மூன்றாம் நபர்களின் தலையீடு, வாக்குவாதங்கள் போன்றவை அதிகரிக்கும்போது, ஒற்றுமையாலும், அன்பாலும் கட்டப்பட்டக் கோட்டை தகர்ந்துவிடும்.
எனவே, எந்த நிலையிலும் கணவன்-மனைவி ஒருவருக்கொருவர் ஒருவர் விட்டுக்கொடுத்து, மனம் விட்டு பேசி, புரிந்துணர்வோடு வாழ்வதே திருமண பந்தம் நிலைப்பதற்கான நல்வழியாகும்.
இஸ்லாம் கூறும் காதலர்கள் தம்பதிகளே. வாழ்க்கைக்கு கணவன்–மனைவி உறவு முக்கியமானது. குடும்பத்திற்கு அடித்தளமாக இருந்து தாங்குபவர்கள் கணவன்–மனைவி தான் என்று கூறலாம். ‘கணவன் மனைவிக்கு ஆடையாகவும், மனைவி கணவனுக்கு ஆடையாகவும் இருக்கின்றனர்’ என்று திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது.
ஆடைகள் மனிதனின் வெட்கத்தலங்களை மறைத்து அவர்களை பாதுகாக்கின்றது. அதுபோல ஒருவருக்கொருவர் பாதுகாவலர்களாக இருக்க வேண்டும் என்பதைத்தான் இஸ்லாம் இவ்வாறு குறிப்பிடுகின்றது.
ஒருவருக்கொருவர்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لَمْ نَرَ لِلْمُتَحَابَّيْنِ مِثْلَ النِّكَاحِ ) அன்பு கொண்ட இருவருக்கு (தம் அன்பை நிறைவாக்கிடவும் நிலையாக்கிடவும்) திருமண பந்தத்தை (ஏற்படுத்திக் கொள்வதைப்) போன்று வேறு (வழி) எதையும் நாம் அறியவில்லை. அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் நூல்:- இப்னுமாஜா-1837, பைஹகீ, ஹாகிம்
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். கணவனுடன் அன்பால் கட்டிப்புரண்டு அவனுடன் இரண்டறக் கலந்து ஒன்றிக் கிடப்பவளை அல்லாஹ் நேசிக்கின்றான். நூல்: தைலமீ
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். தம்பதியர் ஒருவருக்கொருவர் அன்புடன் பார்த்துக் கொண்டால் இறைவன் இவர்கள் மீது தன் அருளான பார்வையை செலுத்துகிறான். கணவன் மனைவியின் கையை அன்புடன் பிடித்தால் இருவரின் விரல்களுக்களிடையே அவர்களின் பாவங்கள் கொட்டிவிடுகிறது. அறிவிப்பாளர்:- அபூசயீது அல்குத்ரீ (ரலி) அவர்கள் நூல்:- பைஹகீ
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( خَيرُكُم خَيرُكُم لِأَهْلِهِ ، وَأَنَا خَيرُكُم لِأهْلِي ) மனைவிக்கு சிறந்தவனே, மனிதனில் சிறந்தவன். நான் என் மனைவிக்கு சிறந்தவனாக இருக்கிறேன். அறிவிப்பாளர்:- அலீ (ரலி) அவர்கள் நூல்:- இப்னு அசாகிர், தாரிக் திமிஷ்க்-13/312
அண்ணல் நபி (ஸல்)அவர்கள் அவர்கள் கூறினார்கள். ( لاَ
يَفْرَكْ مُؤْمِنٌ مُؤْمِنَةً إِنْ كَرِهَ مِنْهَا خُلُقًا رَضِيَ مِنْهَا آخَرَ
) இறைநம்பிக்கைகொண்ட ஓர் ஆண் இறைநம்பிக்கையுள்ள பெண்ணை (முழுமையாக) வெறுத்து ஒதுக்க
வேண்டாம். அவளிடமிருந்து அவர் ஒரு குணத்தை வெறுத்தாலும், மற்றொரு குணத்தைக் கண்டு திருப்பிகொள்ளட்டும். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-2915
மனைவியின் சில குணங்கள் நமக்கு பிடிக்கவில்லை என்றாலும், அவளின் சில குணங்கள் நமது இதயத்தைக் கவரக் கூடியதாக இருந்து
விடலாம். எனவே நமக்கு பிடிக்காத அவளின் சில குணங்களைக் கண்டு நமது உள்ளத்தில் அவளைப்
பற்றி நிரந்தரமான வெறுப்பை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது.
அவளிடம் உள்ள மற்றொரு நல்ல அம்சத்தைக் கொண்டு கணவன் திருப்தி அடைய வேண்டும். எடுத்துக் காட்டாக, மனைவியிடம் முன் கோபம் இருக்கலாம். அதே நேரத்தில், அவள் பத்தினியாக இருப்பதில் தீவிரமாக இருப்பாள்; அல்லது கணவனின் நலனில் அக்கறை உள்ள நல்ல தோழியாக இருப்பாள்; அல்லது நல்ல அழகியாக இருப்பாள்.
வழங்கப்பெற்ற வரம்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ( إِنِّي قَدْ رُزِقْتُ حُبَّهَا ) (தமது ஆருயிர் மனைவி) "கதீஜா (ரலி) அவர்களின் அன்பு எனக்கு வழங்கப்பெற்ற வரம் ஆகும்" என்று கூறினார்கள். நூல் முஸ்லிம்-4821
இதுதான் இந்த நபிமொழியின் கருத்து என நபிமொழி விரிவுரையாளர் இமாம் நவவீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
இருபத்தைந்து வருட காலம் தங்களது வாழ்க்கைத் துணையாக இருந்த அன்னை கதீஜா (ரலி) அவர்களின் மறைவுக்குப் பின்னரும் நீண்ட காலம் ஆகியும் அன்னையாரின் குடும்பத்தினரை நபியவர்கள் மறக்காமல் அன்பு செலுத்திவந்தார்கள்.
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் தங்களது வீட்டில் எப்போது ஆடு அறுத்தாலும் அன்னை கதீஜாவின் தோழிகளுக்கு அதிலிருந்து ஒரு பங்கை அன்பளிப்பாக அனுப்பத் தவறியதில்லை. நூல்:- புகாரீ-3816, முஸ்லிம்-4820, திர்மிதீ-3800
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( وَخِيَارُكُمْ خِيَارُكُمْ لِنِسَائِهِمْ خُلُقًا) உங்களில் தம் துணைவியரிடம் நற்பண்புகளுடன் நடந்துகொள்பவரே உங்களில் சிறந்தவர் ஆவார். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-1082, முஸ்னது அஹ்மது
அண்மையில் அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மனைவியுடன் அதிகமாகப் பேசுவது மனிதனின் இயத்திற்கு நல்லது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மனைவியுடன் பேசுவதால் 80% பேருக்கு மன உளைச்சல் குறைவதாகவும், 90% பேருக்கு மாரடைப்பு குறைவதாகவும், அதனால் ஆயுள் கூடுவதாகவும் அந்த ஆய்வின் முடிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மனைவியின் அன்பு
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் இறுதி நாட்களில் நோயுற்று மரண வேதனையை அனுபவித்து கொண்டிருந்தார்கள். இதை பார்த்து சகித்து கொள்ள முடியாத அண்ணலாரின் அன்பு மனைவி அன்னை சஃபியா (ரலி) அவர்கள் "யா அல்லாஹ்! நீ அண்ணலாரை என்ன வேதனையளிக்க நினைக்கிறாயோ அதனை நீ எனக்கு கொடுத்து விடு! அண்ணலாரின் புனித ஆன்மாவை நீ இலேசாக கைப்பற்றிக் கொள்!" என்று பிரார்த்தித்தார்கள்.
இதனை அல்லாஹ் அண்ணலாருக்கு அறிவித்தவுடன், அண்ணலார் சஃபியா (ரலி) அவர்களை அழைத்து, "ஓ சஃபியா! எனக்கு சொர்க்கத்தின் நாற்பது ஆண்களின் சக்தி வழங்கப்படிருக்கிறது. வேதனையும் கூட நாற்பது ஆண்கள் தாங்கும் அளவுக்குத்தான் வழங்கப்படும் என்பதை விளங்கிக் கொள்! எனவே நீ எனக்காக பிரார்த்திப்பதாக இருந்தால் இறைவா! இவர்களுடைய வேதனையைக் குறைப்பாயாக! என்று பிரார்த்திருக்கலாமே" என்று கேட்டுக் கொண்டார்கள்.
கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். பெண்களில் சொர்க்கத்திற்குரியவள் யாரென்றால், கணவனிடம் அன்பாக இருப்பாள். அவனுக்காக அதிகமான குழந்தைகளை பெற்றெடுப்பாள். அவனை நன்றாக கவனித்து கொள்வாள். அவன் கோபமடைகின்றபோது அவள் அவனிடம் வந்து தன் கையை அவனுடைய கையொடு வைத்து நீங்கள் மகிழ்ச்சியாகும் வரை என் கண்கள் தூங்காது என்று கூறி அவனை சாந்தப்படுத்துவாள். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் நூல்:- இப்னு அசாகிர்
ஹுசைன் பின் மிஹ்ஸன் (ரலி) அவர்கள் கூறியதாவது. எனது அத்தைகளுள் (குப்பி) ஒருவர் நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களிடம் வந்தார். அண்ணலார் அவரிடம் "பெண்ணே! உனக்குக் கணவன் இருக்கின்றாரா? என்று வினவினார்கள். அவர் "ஆம்!" என்று பதிலளித்தார். அண்ணலார் நீ எவ்வாறு அவரை நடத்துகிறாய்? என்று வினவினார்கள். "என்னால் இயன்ற வரை நன்றாக நடத்துகிறேன். (ஹலாலான) அவருடைய எந்த வேண்டுதலையும் நான் மறுக்கமாட்டேன்" என்று பதிலளித்தார்.
பிறகு அண்ணலார் "அவரிடம் நீர் எப்படி நடந்து கொள்கிறீர்கள் என்பதில் கவனமாக இருப்பீராக. ஏனெனில், கணவரான அவர்தாம் உமது சொர்க்கம் (அல்லது) நரகம் ஆகும்" என்றார்கள். நூல்:- முஸ்னது அஹ்மது-18233, ஹாகிம்
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( أَيُّمَا امْرَأَةٍ مَاتَتْ وَزَوْجُهَا عَنْهَا رَاضٍ دَخَلَتِ الْجَنَّةَ ) எந்தப் பெண் தன் கணவர் தன்மீது மனநிறைவு கொண்டிருக்கும் நிலையில் இறக்கிறாளோ அந்த பெண் சொர்க்கம் செல்வாள். அறிவிப்பாளர்:- உம்மு சல்மா (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-1081, இப்னுமாஜா-1844
விட்டுக் கொடுக்கமுடியாது
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. (நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் துணைவியர்களில் சிலர் (நான் உட்பட) குடும்பம் நடத்துவதற்கு தரப்படும் தொகை போதவில்லை. அதைவிட கொஞ்சம் கூடுதலான தொகை வேண்டும் என்று கூறி அண்ணலாரை தொந்தரவு செய்தனர். அதனால் அண்ணலார் தம் துணைவியர்களை விட்டும் ஒரு மாத காலம் பிரிந்திருந்து விட்டு அம்மாத இறுதியில் என்னிடம் வந்தார்கள்.
பிறகு என்னிடம் ( يَا عَائِشَةُ إِنِّي ذَاكِرٌ لَكِ أَمْرًا فَلاَ عَلَيْكِ أَنْ لاَ تَسْتَعْجِلِي حَتَّى تَسْتَأْمِرِي أَبَوَيْكِ ) "ஆயிஷா! உன்னிடம் நான் ஒரு விஷயத்தைச் சொல்கிறேன். அதைப்பற்றி நீ உன் பெற்றோரிடம் ஆலோசனை கேட்காத வரை அவசரப்பட்டு (எந்த முடிவுக்கும் வந்து) விடாதே!" என்று கூறிவிட்டு,
"நபியே! உங்களுடைய மனைவிகளிடம் நீங்கள் கூறுங்கள். நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையும் அதன் அலங்காரத்தை மட்டுமே விரும்புவீர்களாயின் வாருங்கள்! உங்களுக்கு ஏதும் கொடுத்து நல்ல முறையில் (தலாக் கொடுத்து) உங்களை நீக்கி விடுகிறேன்.
மேலும், நீங்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும், மறுமை வாழ்க்கையையும் விரும்புவீர்களாயின் நிச்சயமாக அல்லாஹ் உங்களிலுள்ள இத்தகைய நன்மையைக் கருதுபவர்களுக்கு மகத்தான (நற்)கூலியை தயார் செய்து வைத்திருக்கிறான். (திருக்குர்ஆன்:- 33:28,29) ஆகிய வசனங்களை எனக்கு ஓதிக் காட்டினார்கள்.
( فَقُلْتُ فِي أَيِّ هَذَا أَسْتَأْمِرُ أَبَوَيَّ فَإِنِّي أُرِيدُ اللَّهَ وَرَسُولَهُ وَالدَّارَ الآخِرَةَ ) “நான் (அண்ணலாரிடம் "உங்கள் உறவை முறித்துக்கொள்ளும்) இந்த விஷயத்திலா நான் என் பெற்றோரிடம் ஆலோசனை கேட்கப்போகிறேன்? நான் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும், மறு உலகத்தையுமே விரும்புகிறேன்" என்று கூறினேன். நூல்:- முஸ்லிம்-2952, திர்மிதீ-3118
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒரு முறை பாத்திமா (ரலி) அவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "நாயகமே! ஆயிஷா விஷயத்தில் (தாங்கள் அன்பு காட்டுவதைப் போன்று உங்களின் பிற மனைவியரிடமும் அன்பு காட்டி) நீதத்தோடு நடந்துகொள்ளும் வேண்டும் என உங்களின் பிற மனைவியர்கள் விரும்புகிறார்கள்" என்று கூறினார்.
அப்போது அண்ணலார், ( أَيْ بُنَيَّةُ أَلَسْتِ تُحِبِّينَ مَنْ أُحِبُّ ) "என் அன்பு மகளே! நான் நேசிப்போரை நீயும் நேசிப்பாய் அல்லவா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர், "ஆம் (தாங்கள் நேசிப்போரை நானும் நேசிக்கிறேன்)" என்று கூறினார். அண்ணலார், (என்னைக் காட்டி) ( فَأَحِبِّي هَذِهِ ) "அப்படியானால், இவரை நேசிப்பாயாக!" என்று கூறினார்கள். அண்ணலார் இவ்வாறு கூறியதைக் கேட்டு பாத்திமா (ரலி) அவர்கள் (அமைதியாக) அங்கிருந்து சென்று விட்டார்கள். நூல்:- நஸாயீ-3883
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய மனைவியர்களைப் பற்றி பிறர் குறை கூறுவதையும்,
தன்னுடைய மனைவியர்களில் ஒருவருக்கொருவர் குறை
கூறி கொள்வதையும் விரும்ப மாட்டார்கள். காரணம் அண்ணலார் தனது மனைவியர்களில் அனைவரையும்
மிகவும் நேசித்தார்கள்.
மறக்க முடியவில்லை
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. கதீஜா (ரலி) அவர்களின் சகோதரி ஹாலா பின்த் குவைலித் (ரலி) அவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் (இல்லத்துக்குள்) வருவதற்கு அனுமதி கேட்டார். உடனே அண்ணலார் (கதீஜா -ரலி அவர்களைப் போன்ற குரலில் ஹாலாவும் அனுமதி கேட்ட காரணத்தால்) கதீஜா (ரலி) அவர்கள் அனுமதி கேட்கும் விதத்தை நினைவு கூர்ந்து கவனம் மாறி, "இறைவா! இவர் ஹாலாவாக இருக்கட்டும்" என்று கூறினார்கள்.
உடனே, நான் ரோஷமடைந்து, "எப்போதோ மரணமடைந்துவிட்ட, தாடைகள் சிவந்த ஒரு குறைஷி மூதாட்டியை ஏன் (எப்போது பார்த்தாலும்) நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? அவருக்குப் பதிலாக அவரைவிட சிறந்த மனைவியை உங்களுக்கு அல்லாஹ் கொடுத்து விட்டானே (அப்படியிருக்க, இன்னும் ஏன் அவரையே நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்") என்று கேட்டேன்.
இதைக் கேட்டதும், அண்ணலாரின் முகத்தில் தெரிந்த கடும் கோபத்தைக் கண்டு நான் வருந்தி, அல்லாஹ்வே உன் தூதரின் கோபத்தை நீ நீக்கிவிட்டால் நான் இனி கதீஜா குறித்து நல்லதை மட்டுமே கூறுவேன் என்று எனக்குள் நான் சொல்லிக்கொண்டேன். அண்ணலார் என் வருத்தத்தைக் கண்ட போது சொன்னார்கள். எப்படி அதை சொன்னாய்? அல்லாஹ்வின் மீதாணையாக! மக்களெல்லாம் என்னைப் பொய்ப்படுத்தி மறுத்துவிட்டபோது, அவர் என்னை நம்பினார். மக்களெல்லாம் என்னைத் துரத்திவிட்டபோது, அவர் எனக்கு புகலிடம் தந்தார். அவர் மூலமாக மட்டுமே நான் சந்ததி கொடுக்கப்பட்டேன்.
மேலும், ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். ஒரு மாதமாக காலையும், மாலையும் என்னிடம் இதைத் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார்கள். நூல்:- புகாரீ- 3821, முஸ்னது அஹ்மது, உம்தத்துல் காரீ, அத்துலாபீ- அத்துர்ரியத்துத் தாஹிரா
கதீஜா (ரலி) அவர்கள் இறந்து பதினான்கு ஆண்டுகள் கடந்துவிட்டன. அப்போது
மக்கா வெற்றி கொள்ளப்படுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கா நகரினுள் நுழைகிறார்கள்.
அங்கு குழுமியிருக்கிற அனைவரும் அண்ணலாரை தங்கள் வீட்டில் விருந்தினராக தங்குமாறு அன்புடன்
அழைப்பு விடுத்தனர். அண்ணலாரோ தனது அன்பு மனைவி கதீஜா (ரலி) அவர்களின் புனித உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள மண்ணறைக்கு அருகே எனக்குக் கூடாரம்
அடியுங்கள்’ என்று கூறினார்கள்.
பதினான்கு ஆண்டுகள் கடந்த பின்பும் தனது அன்பு மனைவி கதீஜா (ரலி) அவர்களின் மீது அண்ணலார் வைத்திருந்த அன்பை வெளிப்படுத்துகிறது இந்நிகழ்வு.
அலீ (ரலி) அவர்களிடம் ஒருவர் வந்து, அல்லாஹ்வின் தூதரின்
மகளுடன் உங்கள் தொடர்பு எப்படி இருந்தது? விவரியுங்கள்"
என்று கேட்டார். அலீ (ரலி) அவர்கள்,
"எனது மணப்பெண்ணும் மன அமைதியும்
முஹம்மத் (ஸல்) அவர்களின் மகளே. அவளே எனது வாழ்வு. அவளே எனது மனைவி. அவளின் சதைத் துண்டு
என் சதையுடனும் இரத்தத்துடனும் கலந்து விட்டது" என்று கூறினார்கள்.
ஒருமுறை அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் ஒரு பெண்மணி
வந்து மருதாணி வைப்பதைப் பற்றி தங்களுடைய கருத்து என்ன? என்று வினவினார். அன்னையவர்கள் "நான் நேசித்த ஆன்மாவிற்கு (நபிகள் நாயகம்
- ஸல் அவர்களுக்கு) அதன் நிறம் மிகவும் பிடிக்கும். ஆனால் அதன் வாடை ஒத்துக்கொள்ளாது.
இருப்பினும் அது தடுக்கப்பட்டதல்ல. (ஹராமல்ல) நீங்கள் பயன்படுத்தலாம்" என்று பதிலளித்தார்கள்.
அன்பு, பாசம், நேசம், கருணை, பரிவு, விட்டுக்கொடுத்தல், அரவணைத்து செல்லுதல், குற்றம் குறை காணாது தவிர்த்தல், மனம் விட்டு பேசுதல் இவைகள்தான் கணவன்–மனைவி இடையே நெருக்கத்தையும், மன பிணைப்பையும் ஏற்படுத்தும்.
கால மாற்றத்தினூடே இவைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. சிறு, சிறு பிரச்சினைகள், கருத்து மாறுபாடுகள் காலப்போக்கில் பெரிய பிரிவினையை ஏற்படுத்தி விடுகிறது.
இதில் கோபம் தான் முக்கிய பங்காற்றுகிறது. எதற்கெல்லாம் கோபப்பட வேண்டும் என்று வரையறை இல்லாமல் சாதாரண விஷயங்களுக்குக் கூட கோபத்தில் வார்த்தைகளை விட்டு மீண்டும் அதை அள்ள முடியாமல் பிரிந்து வாழ்கிறார்கள் பலர்.
நமக்கு தூரமானவர்களிடமிருந்து எளிதில் நாம் நல்ல
பெயர் வாங்கி விடுகிறோம். அவர்கள் நமது திறமை, ஆற்றல், செல்வம், பதவி ஆகியவற்றை வைத்து
நம்மை எடை போடுகிறார்கள். எனவே அவர்களிடம் நல்ல பெயர் வாங்குவது ஒன்றும் அவ்வளவு கடினமானதல்ல.
ஆனால், நமக்கு நெருக்கமானவர்கள் தான் நம்மைப் பற்றி
நன்கு அறிவார்கள். நமது நிறைகளையும், குறைகளையும் தெளிவாக
அறிவார்கள். நமது கணவன், மனைவி, பிள்ளை, பெற்றோர், உறவினர், அண்டை வீட்டினர், நண்பர்கள் தரும் சான்றிதழ்களே உண்மையானது. ஊர் மக்கள்
மெச்சும்படியாக வாழ்வது இருக்கட்டும்; உன் மனைவி மெச்சும்படியாக
வாழ்ந்து காட்டுவதே சிறப்பு மிக்கதாகும் என்கிறது இஸ்லாம்.
ஒவ்வொரு மனிதரும் ஏதாவது ஒரு வகையில் தவறுகள் செய்யக் கூடியவர்கள் தாம். ஆணும் பெண்ணும் இதில் விதிவிலக்கல்ல. மனைவி தன் கணவனுக்காகவும், அவன் குடும்பத்திற்காகவும் எத்தனையோ நன்மைகளை, தியாகங்களை செய்திருந்தாலும், அவள் அறிந்தோ, அறியாமலோ செய்த சிறு தவறுகளால் கோபப்பட்டு அவசர முடிவுகளை எடுத்து இறுதியில் பிரிவை நோக்குகிறார்கள். கணவன் அல்லது மனைவி இத்தனை நாள் தனக்கு செய்த உபகாரங்களை கொஞ்சம்கூட நினைத்து பார்ப்பதில்லை.
அன்பும், கருணையும் இருக்கும் இடத்தில் பகைமைக்கும், பிரிவினைக்கும் வேலையில்லை. மனைவி என்பவள் குடும்பத்தை தாங்கும் அஸ்திவாரம். அவள் மீது காட்டப்படும் அன்பும், பரிவும், கண்ணியமும் மனைவி எனும் அஸ்திவாரத்தை பலப்படுத்தும். அது கட்டிடம் எனும் குடும்பத்தை மகிழ்ச்சியிலும், அமைதியிலும் நிலைத்திருக்கச் செய்யும்.
விருப்பத்திற்கேற்ப
சிகப்பு ஆடை அருமை நாயகம் (ஸல்) அவர்களுக்கு விருப்பமில்லாவிட்டாலும், தன் மனைவி உம்மு சலமா (ரலி) அவர்களுக்கு பிடித்துவிட்டது
என்ற ஒரே காரணத்தால் அதை அடிக்கடி அணிவார்கள்.
எனக்கு தாடி வைக்க விருப்பம் தான். ஆனால் என் மனைவிக்குத்தான் பிடிக்கவில்லை. அதனால் தான் நான் தாடி வைப்பதில்லை என்றெல்லாம் வியாக்கியானம் பேசக்கூடாது.
ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் தனது இறுதிகாலத்தில் ஒன்றை விரும்பினார்கள். அதாவது தனது நேசத்திற்குரியவர்களான அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மற்றும் அபூபக்ர் (ரலி) அவர்கள் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் அந்த இடத்திலேயே தானும் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று தனது விருப்பத்தை ஆயிஷா (ரலி) அவர்களிடம் தெரிவித்தார்கள். காரணம் அந்த இரண்டு புனிதமான நபர்களும் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் இடம், ஆயிஷா (ரலி) அவர்களின் வீடாகும்.
ஆயிஷா (ரலி) அவர்கள் “அந்த இடத்தை நான் எனக்காக ஒதுக்கியிருந்தேன். தற்போது உமர் (ரலி) அவர்கள் கேட்கிறார் எனும்போது மனமகிழ்வோடு விட்டுக் கொடுக்கிறேன்” என்றார்கள்
ஏனெனில், அண்ணல் நபி (ஸல்) அவர்கள் "நானும், அபூபக்ரும், உமரும் இங்கே போனோம்; இங்கே இருந்தோம்; இப்படி இப்படியெல்லாம் நம்பிக்கை கொண்டோம்" என்று அடிக்கடி சொல்வதை நான் கேட்டுள்ளேன் அதனால் நபியவர்களின் அருகில் நான் அடக்கம் செய்யப்படுவதை விட அண்ணலார் மிகவும் விரும்பிய உமர் (ரலி) அவர்கள் அடக்கம் செய்யப்படுவது தான் முறையானது. அண்ணலாரும் இதைத்தான் விரும்புவார்கள் என்று விவரித்தார்கள்.
அண்ணல் நபி (ஸல்) அவர்களின் இறப்புக்குப் பிறகும்
அவர்களின் விருப்பமே தனது விருப்பம் என்று எண்ணி வாழ்ந்தவர்கள்தான் அன்னை ஆயிஷா (ரலி)
அவர்கள்.
அன்புள்ள மனைவி என்பவள் கணவர் உயிரோடு இருக்கும்போதும் அவருக்கு கட்டுப்பட்டு வாழ்வாள். அவர் இறந்த பிறகும் அவரது சொற்களுக்கு மதிப்புக் கொடுத்து அதையே பின்பற்றி வாழ்வாள்.
இந்த நற்குணம் தான் கணவன் மீது அதிகம் பிரியம் உள்ளவள் என்பதற்கு அடையாளமாகும்.
இந்த நற்குணம் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் மனைவியர்கள்
அனைவரிடமும் நிரப்பமாக காணப்பட்டது.
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் தனது மனைவியர்கள் ஒட்டகத்தில்
ஏறுவதற்காக தனது பாதத்தை கொடுத்து உதவி செய்து அவர்களை ஒட்டகத்தில் ஏற்றி விட்டிருக்கிறார்கள்.
எனவே, மனைவியின் விருப்பத்திற்கேற்ப மார்க்கத்தின் வரம்பை மீறாமல், கணவன் இசைந்து போவதின் மூலம் இல்லறத்தில் இன்பம் காணலாம்.
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் "நான் மனைவியிடம்
தோற்பதை விரும்புகிறேன்" என்று கூறினார்கள்.
எனவே, “மனைவியை அன்பால் ஆள வேண்டுமே தவிர, அதிகாரத்தால் அல்ல” என்று விளங்க வேண்டும்.
மரணம்
முஹம்மத் பின் அப்துல்லாஹ் பின் ஜஹ்ஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. (உஹதுப் போர் நடந்தபோது என் மாமி) ஹம்னா பின் ஜஹ்ஷ் (ரலி) அவர்களிடம், "உங்கள் சகோதரர் (அப்துல்லாஹ் பின் ஜஹ்ஷ் - ரலி அவர்கள் இப்போரில்) கொல்லப்பட்டு விட்டார்" என்று தெரிவிக்கப்பட்டது. அப்போது அவர்கள், "அவருக்கு அல்லாஹ் கருணை புரியட்டும்! (ரஹிமஹுல்லாஹ்) நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள் அவனிடமே திரும்பிச் செல்லக் கூடியவர்கள். (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்)" என்று கூறினார்.
(சிறிது நேரத்திற்குப் பின் அவரிடம்) "உம்முடைய கணவர் (முஸ்அப் பின் உமைர் - ரலி அவர்கள் இப்போரில்) கொல்லப்பட்டுவிட்டார்" என்று மக்கள் தெரிவித்தனர். அப்போது அவர், ( وَاحُزْنَاهُ ) "எனக்கு ஏற்பட்ட துயரமே!" என்று கூறினார். (இதைக் கேட்ட) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ( إِنَّ لِلزَّوْجِ مِنَ الْمَرْأَةِ لَشُعْبَةً مَا هِيَ لِشَيْءٍ ) "கணவருக்கு மனைவியிடம் நிச்சயம் ஓர் இதயப் பிணைப்பு இருக்கவே செய்கிறது. அது மற்ற எல்லோரிடமும் ஏற்படுவதில்லை" என்று கூறினார்கள். நூல்:- இப்னுமாஜா-1579, ஹாகிம்
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். எவனொருவன் தன் மனைவியின் அன்பான அரவணைப்பில் வாழ்ந்து இறந்தானோ, அவன் அவள் கையால் குளிப்பாட்டி நல்லடக்கம் செய்யப்பட்டால் அவனுக்கு அல்லாஹ் அருள்புரிந்து விட்டான் என்று பொருளாகும். அறிவிப்பாளர்:- ஆயிஷா (ரலி) அவர்கள் நூல்:- பைஹகீ
மனைவியின் மரணத்தின் போது உமர் முக்தார் (ரஹ்) அவர்கள் அழுதார்கள். எதை நினைத்து அழுகிறீர்கள்? என்று மக்கள் வினவினார்கள். என் மனைவி, நான் நுழைவதற்காக கூடாரத்தின் வாயிலை உயர்த்திப் பிடிப்பாள். “ஏன் இப்படி செய்கிறாய்? ” என்று நான் கேட்பேன். அதற்கு “அல்லாஹ்வைத் தவிர வேறு யாரிடமும் நீங்கள் தலை குனியாதிருக்கத்தான்” என்று பதிலளிப்பாள் என்றார்கள்.
அபூபக்ர் (ரலி) அவர்கள் தன் மரணப் படுக்கையில் கூறினார்கள். “என் மரணத்திற்கு பிறகு என் (ஜனாஸாவை) உடலை என்
மனைவி அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) அவர்கள் குளிப்பாட்ட வேண்டும்” அப்போது தோழர்கள், “ஏன்?” என்று வினவினர். அபூபக்ர் (ரலி) அவர்கள், ”என்
இதயத்துடன் நெருக்கமானவள் என் மனைவி. அவள் அதைச்செய்தால் எனக்கு பிடித்தமானதாக இருக்கும்”
என்று பதிலளித்தார்கள்.
அபூபக்ர் (ரலி) அவர்களின் (ஜனாஸாவை) உடலை அவர்களின்
மனைவியார் அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) அவர்கள் தான் குளிப்பாட்டினார்கள். நூல்:- மாலிக் முவத்தா-782
தனது மனைவியை ஒருவர் எப்படி நேசிக்க வேண்டும் என்பதற்கு ஒரு சிறு உதாரணம் இது. தனது இறுதி சடங்கைக் கூட தனது மனைவி செய்ய வேண்டும் என்று விரும்பும் அளவிற்கு தனது மனைவியை நேசித்தார்கள் அபூபக்ர் (ரலி) அவர்கள்.
பாத்திமா (ரலி) அவர்கள் தனது இறுதி நேரத்தில் “அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) அவர்கள் தனது அன்பு கணவர் அலீ (ரலி) அவர்களின் உதவியுடன் தன்னை குளிப்பாட்ட வேண்டும்” என்று (வஸிய்யத் எனும்) இறுதி விருப்பம் தெரிவித்தார்கள். அவ்வாறே அவ்விருவரும் தான் குளிப்பாட்டினர். நூல்:- தாரகுத்னீ-1851, பைஹகீ
இறந்த பின்பும் தன் வாழ்க்கைத் துணையின் மீது இத்தனை
நேசம் செலுத்தும் ஒருவர், அவர் உயிரோடு இருக்கும்போது
எவ்வளவு நேசித்திருப்பார்?
நமது வாழ்க்கைத் துணையை என்றென்றும்
காதல் கொண்டு, கண்ணியப்படுத்தி, இறையருளைப் பெறுவோமாக! ஆமீன்!
மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951
No comments:
Post a Comment