இறைவணக்கத்தின் வாசல்
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا قُمْتُمْ اِلَى
الصَّلٰوةِ فَاغْسِلُوْا وُجُوْهَكُمْ وَاَيْدِيَكُمْ اِلَى الْمَرَافِقِ
وَامْسَحُوْا بِرُءُوْسِكُمْ وَاَرْجُلَكُمْ اِلَى الْـكَعْبَيْنِ ؕ
இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் தொழுகைக்கு ஆயத்தமானால் உங்கள் முகங்களையும், முழங்கை வரையில் உங்கள் கைகளையும் கழுவிக் கொள்ளுங்கள். உங்கள் தலையை (ஈரக் கைகளால்) தடவிக் கொள்ளுங்கள். உங்கள் கால்களையும் இரு கணுக்கால் வரை கழுவிக் கொள்ளுங்கள். திருக்குர்ஆன்:- 5:6
இஸ்லாம் கூறும் இறைவழிபாடுகளில் தொழுகை முதலிடம் பெறுகிறது. அந்தத் தொழுகைக்கு தேவை உளூ எனும் அங்கத்தூய்மை. தன் முகம், கைகள், கால்கள் உள்ளிட்ட உறுப்புகளை அதன் ஒழுங்கு முறைப்படிக் கழுவிச் சுத்தம் செய்வதற்கே உளூ எனப்படும்.
உளூ எனும் அரபி சொல் "வளாஅத்" எனும் சொல்லில் இருந்து பிறந்ததாகும். இதற்கு தூய்மை, அழகு, வெளிச்சம் ஆகிய பொருள் அகராதியில் உள்ளன. உளூ செய்வதால் இதுவெல்லாம் அவருக்கு கிடைக்கின்றன.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مِفْتَاحُ الْجَنَّةِ الصَّلاَةُ وَمِفْتَاحُ الصَّلاَةِ الْوُضُوءُ ) சொர்க்கத்தின் திறவுகோல் தொழுகையாகும். தொழுகையின் திறவுகோல் உளூ ஆகும். அறிவிப்பாளர்:- ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-4
கதவைத் திறக்க திறவுகோல் அவசியம். அதைப் போன்று தொழுகையைத் திறக்க உளூ அவசியம். அவ்வாறே சொர்க்க வாயில்களைத் திறக்க வழிபாடுகள் அவசியம். வழிபாடுகளில் முதன்மையானது தொழுகையாகும். ஆகவே தான் தொழுகை சொர்க்கத்தின் திறவுகோல் என உவமை நயத்துடன் கூறுகிறது இந்த நபிமொழி.
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. என்னிடம் அண்ணல்
நபி (ஸல்) அவர்கள், ( يَا أَنَسُ أَسْبِغِ الْوُضُوءَ يُزَد فِي عُمْرِكَ ) "அனஸே! அங்கத் தூய்மையை நிறைவாகச் செய்வீராக. அது
உமது வாழ்நாளை அதிகப்படுத்தும்" என்று அறிவுறுத்தினார்கள். நூல்:- தப்ரானீ, முஸ்னது அல்பஸ்ஸார், முஸ்னது அபீயஃலா, தஃப்சீர் இப்னுகஸீர் அந்நூர் வசனம்-61
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒரு முஸ்லிமான அடியான் உளூ செய்யும் போது தம் முகத்தை கழுவினால் கண்களால் நிகழ்ந்த பாவங்கள் அனைத்தும் (முகத்தைக் கழுவிய) நீருடன் அல்லது நீரின் கடைசி துளியுடன் முகத்திலிருந்து வெளியேறி விடுகின்றன. அவர் கைகளை கழுவும்போது கைகளால் செய்த பாவங்கள் அனைத்தும் (கைகளைக் கழுவிய) நீருடன் அல்லது நீரின் கடைசி துளியுடன் வெளியேறி விடுகின்றன. இறுதியில் அவர் (கால்களை கழுவி முடிக்கும் போது) பாவங்களிலிருந்து தூய்மை அடைந்தவராக (அங்கிருந்து) செல்கிறார். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-412, திர்மிதீ-2
இங்கு பாவங்கள் என்பது சிறு பாவங்களையே குறிக்கும். பெரும் பாவங்கள் அல்ல. பெரும் பாவங்கள் முறையாக பாவமன்னிப்பின் மூலமே மன்னிக்கப்படும். அதாவது பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என்பதைத்தான் இவ்வாறு உருவகப்படுத்தி சொல்லப்பட்டுள்ளது.
பிரகாசிப்பவர்கள்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِنَّ أُمَّتِي يُدْعَوْنَ يَوْمَ الْقِيَامَةِ غُرًّا مُحَجَّلِينَ مِنْ آثَارِ الْوُضُوءِ، فَمَنِ اسْتَطَاعَ مِنْكُمْ أَنْ يُطِيلَ غُرَّتَهُ فَلْيَفْعَلْ ) மறுமை நாளில் என் சமுதாயத்தினர் உளூ செய்ததின் அடையாளமாக (கை, கால், முகம் ஆகிய) உறுப்புகள் பிரகாசிப்பவர்களாய் வருவார்கள். எனவே உங்களில் யாருக்கு (உளூவில் தம் உறுப்புகளை நீட்டிக் கழுவி) தமது பிரகாசத்தையும் நீட்டிக் கொள்ள முடியுமோ அவர் அதை செய்து கொள்ளட்டும். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-136, முஸ்லிம்-415
நுஐம் பின் அப்துல்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. அபூஹுரைரா (ரலி) அவர்கள் உளூ செய்வதை நான் பார்த்தேன். அப்போது அவர்கள் தமது முகத்தையும், கைகளையும் கழுவிக் கொண்டே தோள்பட்டை வரை சென்றார்கள். பிறகு கால்களைக் கழுவிக் கொண்டே கெண்டைக்கால் வரை சென்றார்கள். நூல்:- முஸ்லிம்-415
உளூ செய்வதால் மறுமையில் அதற்கான பலன் கிடைக்கும். உளூவின் போது கழுவப்படும் உறுப்புகள் அந்நாளில் மின்னும். அதைக்கொண்டு அடையாளம் காணப்படுவார்கள். ஆகவே அந்த பிரகாரத்தை அதிகமாக்கிக் கொள்ள உறுப்புகளை சற்று கூடுதல் இடம் வரை கழுவுவது விரும்பத்தக்கதாகும். கைகளை முழங்கை வரை கழுவினால் போதும் தான். எனினும் புஜம் வரை அல்லது அதற்கு மேல் கழுவிக் கொள்வது நல்லது. அவ்வாறே கால்களை கணுக்கால் வரை கழுவினால் போதும் தான். எனினும் கூடுதலாகக் காலின் நான்கில் ஒரு பகுதி வரை அல்லது அதற்கும் மேலாகக் கழுவிக் கொள்வது நல்லது. மறுமையில் மின்னும்போது கையும், காலும் கூடுதலாக அந்த இடம் வரை மின்னும். நூல்:- ஃபத்ஹுல் பாரீ
உளூ செய்யப்பட்ட உறுப்புகள் மறுமையில் பிரகாசிப்பது இந்த சமுதாயத்தினருக்கு மட்டுமே இறைவன் வழங்கும் தனி சிறப்பாகும். உறுப்புகளை குறிப்பிட்ட எல்லைக்கும் மேலாக கழுவலாம் என்பதற்காக மூன்று முறையை காட்டிலும் அதிகமான தடவைகள் கழுவுதல் கூடாது. இது வீண்விரயமாகும். நூல்:- அல்மின்ஹாஜ்
எப்போதும்... எங்கேயும்...
புரைதா (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒரு நாள் காலையில்
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பிலால் (ரலி) அவர்களை அழைத்து, ( يَا بِلَالُ بِمَ سَبَقْتَنِي إِلَى الجَنَّةِ ؟ اِنِّی دَخَلْتُ البَارِحَةَ
الجَنَّةَ فَسَمِعْتُ خَشْخَشَتَكَ أَمَامِي
) “பிலாலே! எதன் காரணமாக
சொர்க்கத்தில் நீர் என்னை முந்திவிட்டீர்? நிச்சயமாக நான் நேற்று இரவு சொர்க்கத்தில் நுழைந்தேன். "அப்போது எனக்கு முன்னால்
உம்முடைய காலடி ஓசையை செவியுற்றேன்." என்று கூறினார்கள்.
அதற்கு பிலால் (ரலி) அவர்கள், ( يَا رَسُولَ اللَّهِ مَا أَذَّنْتُ قَطُّ إِلَّا صَلَّيْتُ رَكْعَتَيْنِ وَمَا أَصَابَنِي حَدَثٌ قَطُّ إِلَّا تَوَضَّأْتُ عِنْدَهَا ) நாயகமே! நான் (உளூவுடன் இருந்து) பாங்கு சொன்னவுடன் இரண்டு ரக்அத்துகள் தொழாமல் இருப்பதில்லை. எனக்கு உளூ முறியும் பொழுது உடனே நான் உளூச் செய்யாமல் இருப்பதில்லை என்று கூறினார். அதற்கு அண்ணலார், ( لِهٰذَا ) "இதனால் தான் (நீர் சொர்க்கத்தில் முந்தி நுழைந்துவிட்டீர்)" என்று கூறினார்கள். நூல்:- இப்னுமாஜா, இப்னு குஸைமா, முக்தசர் அத்தர்ஙீப் வத்தர்ஹீபு- 57
எப்போதும் உளூவுடன் இருப்பவர்களிடம் ஷைத்தான் நெருங்கமாட்டான் என்கிறது ஒரு நபிமொழி.
எப்போதும் உளூவுடன் இருப்பவர்களுக்கு துக்கம் குறைந்து விடும் என்கிறனர் அறிஞர்கள்.
நபித்தோழர்களில் பலரும், இறைநேசர்களும் எப்போதும் உளூவுடன் இருப்பதையே தமது வாழ்நாள் முழுவதும் கடைபிடித்து வந்துள்ளனர். இந்த பழக்கத்திற்குரியவர்கள் பெரும் பாக்கியசாலிகள் அல்லவா?
உறங்கச் செல்லும்போது...
நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒரு மனிதன் உளூ செய்து விட்டு சுத்தமான நிலையில் இரவில் உறங்க சென்றால் அம்மனிதனின் ஆடையுடன் சேர்த்து ஒரு வானவரும் உறங்குவார். அவன் எப்போதும் கண் விழித்தாலும் அந்த வானவர், ( اَللّٰهُمَّ اغْفِرْ لِعَبْدِكَ فَإِنَّهُ بَاتَ طَاهِرًا ) “யா அல்லாஹ்! சுத்தமான நிலையில் இரவை கழித்த இந்த உனது அடியானை மன்னிப்பாயாக!" என்று பிரார்த்திக்கிறார். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- பைஹகீ, தப்ரானீ
பராஉப் பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ( إِذَا أَتَيْتَ مَضْجَعَكَ فَتَوَضَّأْ وُضُوءَكَ لِلصَّلاَةِ ) "(என்னிடம்) நீர் உமது படுக்கைக்கு செல்லும் போது தொழுகைக்காக உளூ செய்வதைப் போன்று உளூ செய்து கொள்வீராக!" என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-247
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்கள் பெருந்துடக்கு ஏற்பட்டு (குளியல் கடமையாகி) இருக்கும் நிலையில் உறங்க விரும்பினால் உறங்கப் போவதற்கு முன் தொழுகைக்காக உளூ செய்வதைப் போன்று உளூ செய்து கொள்வார்கள். நூல்:- முஸ்லிம்-512, நசாயீ-256
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது. (என் தந்தை) உமர் (ரலி) அவர்கள் அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம் இரவு நேரத்தில் தமக்குப் பெருந்துடக்கு ஏற்பட்டு விடுவது பற்றி கூறினார். அதற்கு அண்ணலார் ( تَوَضَّأْ وَاغْسِلْ ذَكَرَكَ ثُمَّ نَمْ ) "உளூ செய்து கொள்ளுங்கள். ஆணுறுப்பை கழுவிக் கொள்ளுங்கள். பிறகு உறங்குங்கள்." என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-290, முஸ்லிம்-516
உடலுறவிற்குப் பிறகு நீங்கள் உங்கள் பிறப்புறுப்புகளை
சுத்தப்படுத்தவில்லை என்றால் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் போன்ற விரும்பத்தகாத நோய்த்தொற்றுகள்
ஏற்படும் அபாயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்கிறது மருத்துவ உலகம்.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒருவர் உளூ செய்து விட்டு உறங்கி அந்த இரவிலேயே இறைவனின் நாட்டப்படி அவருக்கு மரணம் நிகழுமேயானால் அவருடைய உயிரை எடுப்பதற்கு மலக்குல் மௌத் எனும் வானவருடன் வானவர்களின் தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்களும் வருவார்கள்.
இறைநேசர் மாமேதை சுஃப்யானுஸ் ஸௌரீ (ரஹ்) அவர்கள் இரவில் உளூவுடன் உறங்குவதையே வழமையாக்கிக் கொண்டவர்கள். 64 வயது நிரம்பிய அன்னார் தமது இறுதி வேளை நெருங்குவதை உணர்ந்தார்கள். அப்போது அதன் அறிகுறியாக கடுமையான வயிற்றுப்போக்கு ஆரம்பித்தது. அதன் காரணமாக அந்த இரவில் மட்டும் 60 தடவைக்கும் மேல் உளூ செய்தார்கள். அப்போது அன்னாரின் வீட்டினர் அன்னாரின் சிரம நிலையைக் கண்டு உளூ செய்ய வேண்டாமென கூறினர். அதற்கு அன்னார் "மரணத்தின் தூதுவர் எப்பொழுது வருவார் என்று தெரியாதல்லவா? என் இறைவனை நான் உளூ இல்லாமல்-அசுத்தமான நிலையில் சந்திக்க வெட்கப்படுகிறேன்" என்று கூறினார்கள்.
உறங்குவதற்கு முன்பு உளூ செய்து கொள்வது சுன்னத் எனும் நபிவழியாகும். மேலும் உறங்கும் முன்பு உளூ செய்து கொள்வதால் உடல் உறுப்புகள் சுத்தமாகவும், குளிராகவும் ஆகிவிடுகிறது. இதன் மூலம் உறக்கம் நன்றாக வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. உறக்கம் என்பது சிறு மரணம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
கோபம் குறைந்துவிடும்
நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِنَّ الْغَضَبَ مِنَ الشَّيْطَانِ وَإِنَّ الشَّيْطَانَ خُلِقَ مِنَ النَّارِ وَإِنَّمَا تُطْفَأُ النَّارُ بِالْمَاءِ فَإِذَا غَضِبَ أَحَدُكُمْ فَلْيَتَوَضَّأْ ) கோபம் ஷைத்தானின் (தாக்கத்தால்) ஏற்படுகிறது. ஷைத்தான் நெருப்பால் படைக்கப்பட்டவன். தண்ணீரைக் கொண்டு தான் நெருப்பை அணைக்கப்படும். ஆகவே உங்களில் யாருக்கேனும் கோபம் வந்தால் அவர் உளூ செய்து கொள்ளவும் அறிவிப்பாளர்:- அதிய்யா (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்-4784
அழிக்கவோ, அகற்றவோ முடியாத எந்த ஒன்றையும் பலவீனப்படுத்த முடியும். கோபத்தை முற்றிலும் அகற்ற முடியாது. எனினும் பலவீனப்படுத்த முடியும். பலவீனப்படுத்தப்பட்ட ஒன்றை லேசாக ஒதுக்கி விடலாம். கோபத்தை பலவீனப்படுத்த பல வழிகள் இருந்தாலும் உளூ செய்து கொள்வதும் அதில் உள்ள ஒன்று தான். ஆம்! உளூ செய்து கொள்வதின் மூலம் கோபத்தை பலவீனப்படுத்தி ஒதுக்கி விட முடியும் என்கிறது நபிமொழி.
பத்து நன்மைகள்
அபூ குதைஃப் அல்ஹுதலிய்யா (ரஹ்) அவர்கள் கூறியதாவது. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுக்கு அருகில் நான் இருந்தேன். அப்போது ளுஹர் தொழுகைக்கு பாங்கு சொல்லப்பட்டது. அன்னார் உளூ செய்து ளுஹர் தொழுதார்கள். பிறகு அசர் தொழுகைக்கு பாங்கு சொல்லப்பட்டது. மீண்டும் அன்னார் உளூ செய்தார்கள். அப்போது நான் அன்னாரிடம் தாங்கள் மீண்டும் உளூ செய்ய காரணம் என்ன? என்று வினவினேன்.
அதற்கு அன்னார், ( مَنْ تَوَضَّأَ عَلَى طُهْرٍ كَتَبَ اللَّهُ لَهُ عَشْرَ حَسَنَاتٍ ) "ஒருவர் தனக்கு உளூ இருந்தும் புதிதாக உளூ செய்தால் அவருக்கு பத்து நன்மைகள் கிடைக்கும்" என்ற நபிமொழியை கூறினார்கள். நூல்:- அபூதாவூத் -57, திர்மிதீ-55
உளூ இருக்கவே மீண்டும் உளூ செய்வது விரும்பதக்கது என்பது எல்லா அறிஞர்களின் கருத்தாகும். முதல் உளூவுக்குப்பின் தொழுதல், திருக்குர்ஆன் ஓதுதல் போன்ற ஏதேனும் வணக்கம் புரிந்திருக்க வேண்டும். அவ்வாறல்லாமல் வெறுமனே மீண்டும் உளூ செய்வது விரும்பதக்கதல்ல என்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். நூல்:- அத்துர்ருல் மன்ளூத்
சுன்னத்தான முறை
உஸ்மான் (ரலி) அவர்களின் அடிமையான ஹும்ரான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. உஸ்மான் (ரலி) அவர்கள் உளூ செய்வதற்காகத் தண்ணீர் கொண்டு வர சொல்லி உளூ செய்தார்கள். "(முதலில்) தம்முடைய இரு முன் கைகளை மூன்று முறை கழுவினார்கள். பிறகு வாய் கொப்பளித்து (மூக்கிற்கு நீர் செலுத்தி) மூக்குச் சிந்தினார்கள். பிறகு தமது முகத்தை மூன்று முறை கழுவினார்கள். பிறகு தமது வலக்கரத்தையும், இடக்கரத்தையும் முழங்கை மூட்டு வரை மூன்று முறை கழுவினார்கள். பிறகு தலையை (ஈரக்கையால் தடவி) மஸ்ஹு செய்தார்கள். பிறகு தமது வலக்காலையும், இடக்காலையும் கணுக்கால் வரை மூன்று முறை கழுவினார்கள். பிறகு நான் செய்த இந்த உளூவைப் போன்றே நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களும் உளூ செய்ததை நான் பார்த்தேன்" என்று கூறினார்கள். நூல்:-முஸ்லிம் -383
நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். எவர் உளூவுடைய ஒவ்வொரு உறுப்பையும் ஒருமுறை கழுவுவாரோ அது பர்ளு உடைய தகுதியில் உள்ளது. எவர் ஒவ்வொரு உறுப்பையும் இருமுறை கழுவுவாரோ அவருக்கு இரு பங்கு கூலி கிடைக்கும். எவர் ஒவ்வொரு உறுப்பையும் மூன்றுமுறை கழுவுவாரோ இந்த உளூ என்னுடையதும், எனக்கு முன்னால் வந்த இறைத்தூதர்கள் உடையதும் ஆகும். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்னது அஹ்மத், இப்னுமாஜா
துஆக்கள் ஓத வேண்டும்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لاَ وُضُوءَ لِمَنْ لَمْ يَذْكُرِ اسْمَ اللَّهِ عَلَيْهِ
) உளூ செய்யும் போது அல்லாஹ் பெயர் (பிஸ்மில்லாஹ்) கூறாதவருக்கு உளூவே கிடையாது. (உளூ
பரிபூரணமாகாது) அறிவிப்பாளர்:-
அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்-92, திர்மிதீ-25
ஒருவர் அழகிய முறையில் உளூ செய்து ( أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ
إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ
اللَّهُمَّ اجْعَلْنِي مِنَ التَّوَّابِينَ وَاجْعَلْنِي مِنَ الْمُتَطَهِّرِينَ ) (அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க
லஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு அரசூலுஹு, அல்லாஹும் மஜ்அல்னீ
மினத் தவ்வாபீன வஜ்அல்னீ மினல் முத்தத்தஹ்ஹிரீன்)
பொருள்: "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையாக யாருமில்லை என்றும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும், தூதரும் ஆவார்கள் என்றும் நான் உறுதிமொழி கூறுகிறேன். இறைவா! பாவமன்னிப்பு கோரி திருந்தியவர்களில் ஒருவனாக என்னையும் ஆக்குவாயாக! தூய்மையானவர்களில் ஒருவனாக என்னையும் ஆக்குவாயாக!" என்று ஓதினால் சொர்க்கத்தின் எட்டு வாசல்களும் அவருக்காகத் திறக்கப்படுகின்றன. அவற்றில் அவர் விரும்பிய வாசலில் நுழைந்து செல்லலாம். அறிவிப்பாளர்:- உமர் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-397,திர்மிதீ- 50
கழிவறையும், குளியலறையும் ஒன்றாக இருந்தால் அப்போது உளூ செய்வதற்காக குளியலறையில் நுழைவதற்கு முன்பு பிஸ்மில்லாஹ் மற்றும் சுன்னத்தான அனைத்து துஆக்களையும் ஓதிக் கொள்ள வேண்டும். வெளியே வந்த பிறகு உளூவுக்குப் பிறகுள்ள துஆக்களை ஓதிக் கொள்ள வேண்டும். ஏனெனில் அசுத்தமான இடங்களில் துஆ ஓதுவது மக்ரூஹ் எனும் வெருக்கத்தக்கதாகும். நூல்:- ரத்துல் முக்தார்
கவனம் வேண்டும்
ஒருமுறை அப்துர் ரஹ்மான் பின் அபீபக்கர் (ரலி) அவர்கள் உளூ செய்தார்கள். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் ( يَا عَبْدَ الرَّحْمَنِ أَسْبِغِ الْوُضُوءَ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ وَيْلٌ لِلأَعْقَابِ مِنَ النَّارِ ) "அப்துர் ரஹ்மான்! உளூவை நிறைவாக செய்! ஏனெனில் (உளூவில் சரியாக கழுவப்படாத) குதிங்கால்களுக்கு நரக வேதனை தான் என்று அண்ணல் நபி (ஸல்) கூறியதை நான் கேட்டுள்ளேன்" என்றார்கள். அறிவிப்பாளர்:- ஷத்தாத் பின் அல்ஹாத் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-405
அபூரவ்ஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருநாள் கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் எங்களுக்கு சுப்ஹு தொழ வைத்தார்கள். அப்போது "ரூம்" அத்தியாயத்தை ஓதினார்கள். அதில் அவர்களுக்கு தடுமாற்றம் ஏற்பட்டது. அண்ணலார் (தொழுகை முடித்துவிட்டுத்) திரும்பியதும், ( إِنَّهُ يَلْبَسُ عَلَيْنَا الْقُرْآنُ، إِنْ أَقْوَامًا مِنْكُمْ يُصَلُّونَ مَعَنَا لَا يُحْسِنُونَ الْوُضُوءَ، فَمَنْ شَهِدَ الصَّلَاةَ مَعَنَا فَلْيُحْسِنِ الْوُضُوءَ ) "நமக்கு (தொழுகையில்) குர்ஆன் ஓதும்போது குழப்பம் ஏற்படுகிறது. உங்களில் சிலர் முறையாக உளூ செய்யாமல் நம்முடன் தொழுகிறார்கள். எனவே யாராவது நம்முடன் தொழுகையில் கலந்துகொண்டால் அவர் முறையாக உளூ செய்து கொள்ளட்டும்" என்று (மக்களைப் பார்த்துக்) கூறினார்கள். நூல்:- நசாயீ-938, முஸ்னது அஹ்மத், தஃப்சீர் இப்னுகஸீர் அத்தவ்பா வசனம்-108
உளூவைக் கவனத்துடன் செய்யாமல் உளூவின் உறுப்புகளில் தண்ணீர் பட்டும் படாமல் அரைகுறையாக செய்தால் உளூவின் போது தண்ணீரால் நனையாத உறுப்புகளுக்கு நரக வேதனை உண்டு என்று எச்சரிக்கப்படுகிறது.
உளூவின் குறைந்தபட்ச அளவு கோல் ஒவ்வொரு உறுப்பையும் கழுவும்போது ஓரிரு சொட்டாவது தண்ணீர் கீழே விழ வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் உறுப்புகளை கழுவியதாகக் கணிக்கப்படாது.
உடல் உறுப்புகளில் தார், மெழுகு, கிரீஸ், தடிப்பான மை, நகச் சாயம் போன்ற ஏதேனும் படிந்திருக்கும் போது நகத்தின் மீது தோலின் மீது திரை ஏற்பட்டு விடுகிறது. எனவே தண்ணீர் உடலில் சென்றடைவதற்கு தடை ஏற்பட்டு விடுவதால் இவைகள் இருக்கவே உளூவும், குளிப்பும் நிறைவேறாது. முதலில் அதை சுரண்டி சுத்தம் செய்த பிறகு உளூ செய்ய வேண்டும்.
உளூ செய்வதில் மூலம் உடலும், உள்ளமும் பிரகாசமடைவதால் அதனை அமைதியாகவும் பேணுதலுடனும் செய்வதை வழமையாக்கிக் கொள்ள வேண்டும். உளூ செய்வது ஒரு வணக்கமாக இருப்பதால் உளூ செய்யும் போது கிப்லாவின் திசை அறிந்து அதனை முன்னோக்கிக் கொள்வதும், மிஸ்வாக் செய்து கொள்வதும், இடையில் எவ்வித பேச்சும் பேசாதிருப்பதும் மிகவும் விரும்பத்தக்கது.
உளூ செய்யும்போது அல்லது உளூ செய்த பிறகோ முட்டுக்கால் வெளியே தெரிவதால் உளூ முறியாது. ஆனால் முட்டுக்கால் மறைக்க வேண்டிய உறுப்பு என்பதில் கவனம் வேண்டும்.
எனவே, முறையாக உளூ செய்வதானது, இறைவழிபாட்டை நிறைவேற்றுவதை எளிதாக்கும் என்பதும், அந்த இறைவழிபாட்டை முழுமையாக செய்வதற்கும் அதன் விதிமுறைகளை பேணுவதற்கும் துணையாக இருக்கிறது
தொழுகைக்காக உளூ செய்பவர் கவனக்குறைவால் உளூவின் உறுப்புகளை அரைகுறையாக கழுவும்போது அதனால் அவர் நரகத்தில் தண்டனணயை அனுபவிக்க நேரிடும். மேலும் அவர் அரைகுறை உளூவுடன் ஜமாஅத் தொழுகையில் கலந்து கொள்ளும்போது அவரால் இமாமுக்கும் தொழுகையில் தடுமாற்றம் ஏற்படுகிறது.
தொழுகைக்கு மிகவும் முக்கியமானது மன அமைதி. முறையான உளூவின் மூலம் மன அமைதியும் கிடைக்கிறது. இறைவழிபாட்டிலும் மன ஓர்மை ஏற்படுகிறது.
மன அழுத்தம் குறைகிறது
இயற்கை மருத்துவர்கள் உளூ என்பதை தண்ணீர் மசாஜ் என்கிறார்கள். உளூ செய்வதன் மூலம் தூக்கமின்மை, உடல் உஷ்ணம், நரம்பு பலகீனம், கை கால் எரிச்சல், நடுக்கம் ஆகியவை குறைகிறது. பொதுவாக உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும், நோயாளிகளுக்கும் மசாஜ் அவசியம் தேவை. உளூ செய்யும் போது இலவச போனஸ் மாதிரி மசாஜ் அமைந்து விடுகிறது.
மனிதனின் உடலுக்குள்ளிலிருந்து சில நச்சுக் கிருமிகள் வெளிப்பட்டு சருமத்தின் மீது படிகின்றன. குறிப்பாக உடைகளால் மூடப்படாத முகம், கை கால்கள் ஆகிய உறுப்புகளில் அதிகமாகப் படிகின்றன. அந்த உறுப்புகளை அடிக்கடி தண்ணீரால் கழுவி தண்ணீரால் நனைக்கப்பட்ட கைகளைக் கொண்டு தலையைத் தடவி அந்த நச்சுக் கிருமிகளை அகற்றிவிட வேண்டும். உளூ செய்யும்போது இந்த உறுப்புகள் மீது படிந்துள்ள நச்சுக்கிருமிகள் அகற்றப்பட்டு சுத்தமாக்கப்படுகின்றன. அந்த நச்சுக்கிருமிகளால் மூடிக்கிடந்த வியர்வை சுரப்பித் துவாரங்கள் திறக்கப்படுகிறன. மேலும் இதன் மூலம் தசைகளில் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. மன அழுத்தம் குறைகிறது.
இவ்வாறு சருமத்தில் உள்ள கிருமிகளும், அழுக்குகளும் அகற்றப்படும் பொழுது உடலில் புத்துணர்ச்சியும் மனத் தெளிவும், சுறுசுறுப்புமும் ஏற்படுகிறது. அதன் காரணமாகவே உறுப்புகளுக்கு ஒளி மயமான தன்மை ஏற்படுகிறது.
முஸ்லிம்கள் தினமும் ஐவேளை தொழுகைக்காக உளூ செய்வதால் மனநோய்கள் அவர்களிடம் மிகக்குறைவாக காணப்படுகிறன என்கிறது மருத்துவ உலகம்.
பாகிஸ்தானைச் சேர்ந்த மௌலானா துல்பிக்கார் அஹ்மத் (ரஹ்) அவர்கள் பிரான்ஸ் நாட்டு மருத்துவர் ஒருவரின் வாக்கு மூலத்தை குறிப்பிடுகிறார்கள். அதாவது மனநிலை மருத்துவரான நான் "மனிதன் ஏன் பைத்தியக்காரனாகிறான்? என்று ஆய்வு செய்து வருகிறேன்.
மனிதனின் மூளையின் சிக்னல் முழு உடலையும் சென்றடைகிறது. அதன் மூலம் நம்முடைய உறுப்புகள் வேலை செய்கின்றன. நம்முடைய மூளை (Fluid) திரவ பதார்த்தத்துக்குள்ளே (Float) மிதக்கும் விதத்திலேயே இறைவன் அமைத்துள்ளான். அதனால் தான் நாம் குதித்தாலும் ஓடினாலும் மூளைக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. அவ்வாறில்லாமல் மூளை (Rigid) கெட்டியானதாக இறுக்கமானதாக இருந்தால் மூளை உடைந்து நொறுங்கி விடும்.
இறைவன் மிக மெல்லிய நரம்புகளை மூளைக்குள் அமைத்துள்ளான். அந்த நரம்புகள் நம் பிடரியிலிருந்து முழு உடலுக்கும் செல்கிறது. சில சமயங்களில் மூளை செயலிழப்பதற்கும் வாய்ப்புண்டு. எனவே தினமும் பிடரியை 4,5 முறை ஈரப்படுத்த வேண்டும். இல்லையெனில் பிடரி நரம்புகள் உலர்ந்துவிடும். அதன்மூலம் உடல் நிலை பாதிப்படையும் என்பது மருத்துவர்களின் ஆய்வறிக்கையாகும்.
ஆனால், முஸ்லிம்கள் தொழுகைக்காக உளூ செய்யும்போது தினமும் 5 முறை (மசஹு செய்வது) பிடரியை ஈரப்படுத்துவதின் மூலம் மூளை பாதிப்படைந்து பைத்திய நிலைக்கு தள்ளப்படுவது என்பது மிக குறைவே ஆகும்" என்கிறார்.
தடவிக் கொள்ளுதல்
ஹம்மாம் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் சிறுநீர் கழித்துவிட்டு பிறகு உளூ செய்தார்கள். (அப்போது கால்களை கழுவதற்குப்பதிலாக ஈரக்கையால்) தம் காலுறைகள் மீது தடவி (மசஹு செய்திடலா)னார்கள். அவர்களிடம் இவ்வாறு செய்யலாமா? என்று வினவப்பட்டது. அதற்கு அவர்கள் "அருமை நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்ததை நான் பார்த்திருக்கிறேன்" என்றார்கள். நூல்:- புகாரீ-387, முஸ்லிம்-452
குஸைமா பின் சாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம் காலுறைகள் மீது மசஹு செய்வதைப் பற்றி வினவப்பட்டது. அதற்கு அண்ணலார், ( لِلْمُسَافِرِ ثَلاَثَةٌ وَلِلْمُقِيمِ يَوْمٌ ) "வெளியூரில் இருப்பவர் மூன்று நாட்களும், உள்ளூரில் இருப்பவர் ஒரு நாளும் மசஹு செய்யலாம்" என பதிலளித்தார்கள். நூல்:- முஸ்லிம்-465, திர்மிதீ-88
ஸஃப்வான் பின் அஸ்ஸால் (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்கள் "பெருந்துடக்கு ஏற்பட்டு (குளியல் கடமையாகி) விட்டால் காலுறைகளைக் கழற்றிக் கால்களைக் கழுவ வேண்டும்" உத்தரவிட்டார்கள். நூல்:- திர்மிதீ- 89
அலீ (ரலி) அவர்கள் அவர்கள் கூறியதாவது. என்னுடைய மணிக்கட்டுகளுள் ஒன்று உடைந்து விட்டது. (எனவே நான் அதில் கட்டுப் போட்டிருந்தேன்) ஆகவே, அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம் இது குறித்து வினவினேன். அந்தக் கட்டின்மீதே ஈரக் கையால் தடவுமாறு என்னைப் பணித்தார்கள். நூல்:- இப்னுமாஜா-649
உளூவின் உறுப்புகளில் பலத்த காயம் ஏற்பட்டு கட்டுப்போடப்பட்டுள்ளது. அந்த கட்டை அவிழ்ப்பது பாதிப்பை ஏற்படுத்தும் என்றிருந்தால் அந்த கட்டின் மீது ஈரக்கையால் இலேசாக மசஹு செய்து கொள்ள வேண்டும்.
மசஹு செய்வதற்கு கீழ்க்காணும் நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக காலுறைகள் இருப்பது அவசியம் ஆகும். 1) தண்ணீர் உறிஞ்சாத அளவுக்கு காலுறைகள் உறுதியானதாக இருக்க வேண்டும். மேலும் கால் விரல்கள் முதல் கரண்டைக் கால் வரை வெளியே தெரியக்கூடாது.
2) செருப்பின்றி காலுறைகள் மட்டும் அணிந்து மூன்று மைல்கள் தூரம் நடந்தால் அவை கிழியக்கூடாது.
3) காலுறைகள் காலை ஒட்டியிருக்க வேண்டும். மூன்று விரல்கள் அளவு திறந்திருந்தால் மசஹு கூடாது. நூல்:- ரத்துல் முக்தார்
காலுறைகளின் மேல்பாகம் திறந்தவையாக இருந்து அதை கயிற்றால் கட்ட முடியுமானால் பரவாயில்லை. அதன் மீது மசஹு செய்யலாம் என்று அல்லாமா ஹஸ்கபீ (ரஹ்) போன்ற சில அறிஞர்கள் கூறுகின்றனர். நூல்:-ஜதீத் பிக்ஹி மசாயீல்
துணிகளால் செய்யப்படும் காலுறைகள் (socks) மீது மசஹு செய்வது கூடாது. சாக்ஸை கழற்றி தண்ணீரால் இரு கால்களையும் கழுவுவது அவசியம்.
தயம்மும் செய்தல்
(தொழுகையின் நேரம் வந்து உங்களை சுத்தம் செய்து கொள்வதற்கு வேண்டிய) தண்ணீரை நீங்கள் பெறவில்லையெனில் (தயம்மும் செய்து கொள்ளுங்கள். அதாவது) சுத்தமான மண்ணை (உங்கள் கைகளால் தொட்டு அதனை)க் கொண்டு உங்கள் முகங்களையும், கைகளையும் துடைத்து கொள்ளுங்கள். திருக்குர்ஆன்:- 5:6
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஒரு அறப்போர் பயணத்தில் இருந்தபோது என்னுடைய கழுத்து மாலை ஒன்று காணாமல் போய்விட்டது. அதை தேடுவதற்கு அண்ணலார் முகாமிட்டார்கள். அந்நேரத்தில் யாரிடமும் தண்ணீர் இல்லை. அந்த இடத்தில் எந்த நீர் நிலையும் இல்லை. அதனால் மக்கள் தண்ணீர் இன்றி சிரமப்பட்டனர். அப்போது அண்ணலார் என் மடியில் தலை வைத்து உறங்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது தான் மேற்காணும் திருவசனம் அருளப்பட்டது. நூல்:- புகாரீ-4607
தயம்மும் எனும் அரபு சொல்லுக்கு "நாடுதல்" என்பது பொருளாகும். இஸ்லாமிய வழக்கில் தொழுகைப் போன்ற வழிபாடுகளை நிறைவேற்றுவதற்காக தண்ணீரால் உளூ செய்ய இயலாமல் போகும்போது அதற்கு மாற்றாக இரு கைகளை சுத்தமான மண்ணில் அடித்து முகத்திலும், இரு கைகளிலும் தடவிக்கொண்டால் போதும். தொழுகை போன்ற வழிபாடுகளை நிறைவேற்றலாம். இது தான் தயம்மும் ஆகும்.
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( أَلاَ أَدُلُّكُمْ عَلَى مَا يَمْحُو اللَّهُ بِهِ الْخَطَايَا وَيَرْفَعُ بِهِ الدَّرَجَاتِ ) "(உங்கள்) தவறுகளை அல்லாஹ் மன்னித்து, தகுதிகளை உயர்த்தும் செயல்கள் சிலவற்றை உங்களுக்கு நான் சொல்லட்டுமா?" என்று கேட்டார்கள். மக்கள், "ஆம் (சொல்லுங்கள்) நாயகமே! என்று கூறினர். அண்ணலார், ( إِسْبَاغُ الْوُضُوءِ عَلَى الْمَكَارِهِ ) “(அதில் ஒன்று தான் கடும் குளிர் உள்ள) சிரமமான சூழ்நிலைகளிலும் உளூ முழுமையாக செய்வது”. அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-421
கடுமையாக குளிர் வீசும் போதும், உடலில் நோய் இருக்கும் போதும் "தயம்மும்" எனும் சலுகையை பயன்படுத்திக் கொள்ள அனுமதி உண்டு. இருப்பினும் இத்தகைய சிரமமான சூழ்நிலைகளில்கூடத் தண்ணீரால் முழுமையாக உளூ செய்வது தவறுகள் மன்னிக்கப்படவும், தகுதிகள் உயர்த்தப்படவும் காரணமாகும்.
தண்ணீர் கிடைக்கவில்லை என்றாலோ தண்ணீர் இருந்தும்
அதை பயன்படுத்த இயலாதவாறு உடலில் நோய் இருந்தாலோ, கடுமையான குளிரின் காரணத்தால் தண்ணீர் பயன்படுத்தினால்
உடலில் பாதிப்பு ஏற்படும் என்றிருந்தாலோ, கடுமையான தண்ணீர் பஞ்சத்தின் போது தன்னிடமுள்ள தண்ணீரில் உளூ செய்துவிட்டால் பிறகு
தாகத்துக்குத் தண்ணீர் கிடைக்காது என அஞ்சினாலோ, பயணத்தின்போது தண்ணீரைத் தேடிக்கொண்டே இருந்தால்
தொழுகையின் நேரம் தவறிவிடுமோ என்ற அச்சம் ஏற்படுட்டாலோ இவ்வாறு தயம்மும் செய்து கொள்ள
மார்க்கத்தில் அனுமதி உண்டு.
அவ்வாறே பெருந்துடக்கிற்காக குளியல் கடமையான ஒருவர் குளிக்க இயலாதபோதும் அதற்காக தயம்மும் செய்து கொண்டால் போதுமானதாகும். தகுந்த காரணமின்றி சோம்பலுக்காகவோ இலேசாகக் குளிரும் என்பதற்காகவோ தயம்மும் செய்ய அனுமதி இல்லை.
உளூவை முழுமையாக செய்து அதனுடைய துஆக்களையும் முறையாக
ஓதுவதனால் இறைவழிபாட்டை நிறைவேற்றுவதை எளிதாக்கும். அதன் மூலம் இறையன்பைப் பெறலாம்.
எனவே நாம் உளூவிலிருந்து தொடங்கி அனைத்து இறைவழிபாடுகளையும் முறையாக நிறைவேற்ற அல்லாஹ்
அருள்பாலிப்பானாக! ஆமீன்!
மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ
இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை.
No comments:
Post a Comment