ஆசை ஆசையாய்...
وَاَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلّٰهِ
அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும், உம்ராவையும் நீங்கள் முழுமையாக்குங்கள். திருக்குர்ஆன் :- 2:196
ஹஜ் என்பது இஸ்லாமிய அடிப்படைக் கடமைகளில் ஒன்றாகும். கலிமா, தொழுகை, நோன்பு என்பதெல்லாம் உடலுடன் மட்டும் சம்பந்தப்பட்ட வணக்கமாகும். ஸகாத் என்பது பொருளுடன் சம்பந்தப்பட்ட வணக்கமாகும். ஆனால் ஹஜ் என்பது உடலாலும், பொருளாலும் சேர்ந்து செய்யப்படும் சற்று மாறுபட்ட ஓர் உன்னத வணக்கமாகும்.
மார்க்க அறிஞர்கள் இஸ்லாமிய வணக்கங்களின் தத்துவத்தை இவ்வாறு குறிப்பிடுகிறார்கள்.
1) ஐவேளை தொழுகை என்பது ஒரு நாள் திட்டம் (One Day Programe)
2) ஜும்ஆ தொழுகை என்பது ஒரு வாரத் திட்டம் (One Week Programe)
3) ரமளான் மாத நோன்பு மற்றும் ஸகாத் என்பது ஓராண்டுத் திட்டம் (One Year Programe)
4) ஹஜ் என்பது ஆய்வுத் திட்டம் (Life Programe) என்று வகைப்படுத்தி இவ்வாறு பெயர் சூட்டியுள்ளார்கள். இவ்வாறு அல்லாஹ்வுக்காக திட்டமிட்டு அதற்குரிய காலங்களில் நிறைவேற்ற வேண்டிய வணக்கங்கள் உள்ளன.
ஹஜ் எனும் சொல்லுக்கு "நாடுதல்" என்று பொருளாகும். இஸ்லாமிய வழக்கில் ஹஜ் என்பது திருமக்காவில் உள்ள இறை ஆலயமான புனித கஅபாவை நாடிச் சென்று, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளைப்படி கிரியைகளை நிறைவேற்றும் ஒரு வழிபாடாகும்.
துல்ஹஜ் மாதத்தின் சில நாட்களில் குறிப்பிட்ட எல்லையில் ஹஜ் செய்வதற்காக உறுதிமொழி எடுத்துக் கொண்டு ஹஜ் யாத்ரீகர்கள் அணிய வேண்டிய எளிய ஆடையை அணிந்து "இஹ்ராம்" எனும் கட்டுப்பாட்டை ஏற்று ஹஜ்ஜைத் தொடங்க வேண்டும். (துல்ஹஜ் பிறை 8 முதல் 12 வரை அல்லது 13 வரை ஹஜ்ஜுடைய நாட்களாகும்.)
புனித கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வருதல், சஃபா-மர்வா குன்றுகளுக்கிடையே ஓடுதல் (சயீ செய்தல்), மினா, அரஃபா, முஸ்தலிஃபா ஆகிய புனிதத் தலங்களில் தங்கி வழிபாடு செய்தல், ஷைத்தான் மீது கல்லெறிதல், தலைமுடி சிரைத்தல் அல்லது அதில் சிறிதளவு கத்தரித்துக் கொள்ளுதல், குர்பானி பிராணியை பலியிடுதல் உள்ளிட்ட கிரியைகளைச் செய்ய வேண்டும். இதுவே ஹஜ் வழிபாடு எனப்படும்.
உம்ரா எனும் சொல்லுக்கு "சந்தித்தல்" என்று பொருளாகும். இஹ்ராம் ஆடை அணிந்த நிலையில் புனித கஅபாவை சுற்றி (தவாஃப்) வருதல், சஃபா-மர்வா குன்றுகளுக்கிடையே ஓடுதல் (சயீ செய்தல்), தலை முடி சிரைத்தல் அல்லது அதில் சிறிதளவு கத்தரித்துக் கொள்ளுதல் உள்ளிட்ட கிரியைகளைச் செய்ய வேண்டும். இதுவே உம்ரா வழிபாடு எனப்படும்.
பலாபலன்கள்
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( تَابِعُوا بَيْنَ الْحَجِّ وَالْعُمْرَةِ فَإِنَّهُمَا يَنْفِيَانِ الْفَقْرَ وَالذُّنُوبَ كَمَا يَنْفِي الْكِيرُ خَبَثَ الْحَدِيدِ وَالذَّهَبِ وَالْفِضَّةِ وَلَيْسَ لِلْحَجَّةِ الْمَبْرُورَةِ ثَوَابٌ إِلاَّ الْجَنَّةُ )
ஹஜ்ஜையும், உம்ராவையும் (சேர்த்துச்) செய்யுங்கள். ஏனெனில் ஹஜ்ஜுயும், உம்ராவும் கொல்லனின் துருத்தியானது இரும்பு, வெள்ளி, பொன் ஆகியவற்றின் அழுக்குகளை அகற்றிவிடுவதைப் போன்று வறுமையையும், பாவங்களையும் அகற்றிவிடும். (பாவச்செயல் கலவாத) ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு சொர்க்கத்தைத் தவிர வேறு பிரதிபலன் இல்லை. அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-738, இப்னுமாஜா- 2887, இப்னுகுஸைமா, இப்னுஹிப்பான்
( مَااِمعَارَ
حَاجَ قَطُّ ) “ஹாஜி ஒருபோதும் ஏழையாக மாட்டார்” என்கிறது ஒரு
நபிமொழி.
இந்த நபிமொழியில் கூறப்பட்ட "இம்ஆர்"
என்ற வார்த்தையின் பொருள் என்னவென்று ஜாபிர் (ரலி) வினவப்பட்டபோது அதன் பொருள் அவர்
(ஹாஜி) வறுமை உடையவராக ஆக மாட்டார் என்பதாகும் என்று விளக்கினார்கள். நூல்:- பஸ்ஸார், தப்ரானீ, முக்தசர் அத்தர்ஙீபு வத்தர்ஹீப்-366,
ஆயிஷா (ரலி)அவர்கள் உம்ரா செய்தபோது அருமை நாயகம் (ஸல்)அவர்கள் "( إِنَّ لَكِ مِنَ الْأَجْرِ عَلَى قَدْرِ نَصَبِكِ وَنَفَقَتِكِ ) (ஆயிஷாவே!) உமக்கு (உம்ராவால்) ஏற்படும் கஷ்டம், செலவு ஆகியவற்றின் அளவுக்கு நிச்சயமாக உனக்கு நற்கூலி உண்டு" என்று கூறினார்கள். அறிவிப்பாளர்:- ஆயிஷா (ரலி) அவர்கள் நூல்:- ஹாகிம், முக்தசர் அத்தர்ஙீபு வத்தர்ஹீபு -364
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஹஜ் செய்யாத
ஒருவர் ஹஜ் செய்வது, நாற்பது முறை அறப்போர் புரிவதைவிட சிறந்ததாகும்.
ஏற்கனவே ஹஜ்ஜை நிறைவேற்றிவிட்டவர்,
அறப்போர் புரிவது நாற்பது
முறை ஹஜ் செய்வதைவிட சிறந்ததாகும். நூல்:- அல்பஸ்ஸார்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( النَّفَقَةَ في الحَجِّ كالنَّفَقَةِ في سَبِيلِ اللَّهِ، الدِّرْهَمُ بِسَبْعِ مِائَةِ ضِعْفٍ ) ஹஜ்ஜில் செலவளிப்பது அல்லாஹ்வின் பாதையில் (அறப்போரில்) செலவளிப்பது போன்றதாகும். அதில் செலவளிக்கப்படும் ஒரு திர்ஹத்திற்கு 700 திர்ஹங்களின் நன்மைகள் கிடைக்கும். அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- தப்ரானீ, தஃப்சீர் துர்ருல் மன்ஸூர் அல்பகரா வசனம்-261,முக்தசர் அத்தர்ஙீபு வத்தர்ஹீப்-365
நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ خَرَجَ حَاجًّا فَمَاتَ كُتِبَ لَهُ أَجْرُ الحاجِّ إِلَى يَوْمِ الْقِيَامَةِ، وَمَنْ خَرَجَ مُعْتَمِرًا فَمَاتَ كُتِبَ لَهُ أَجْرُ الْـمُعْتَمِرِ إِلَى يَوْمِ الْقِيَامَةِ ) யார் ஹஜ் செய்ய புறப்பட்டு வழியில் மரணமடைந்து விடுவாரேயானால் மறுமை நாள் வரை ஹஜ் செய்தவரின் நன்மைகள் அவருக்கு எழுதப்படும். யார் உம்ரா செய்ய புறப்பட்டு வழியில் மரணமடைந்து விடுவாரேயானால் மறுமை நாள் வரை உம்ரா செய்தவரின் நன்மைகள் அவருக்கு எழுதப்படும். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- அபூயஃலா, தப்ரானீ, பைஹகீ ஷுஅபுல் ஈமான், முக்தசர் அத்தர்ஙீபு வத்தர்ஹீப்-361
அப்துல்லாஹ் பின் உமர் கூறியதாவது. கண்மணி பெருமானார்
(ஸல்) அவர்களிடம் ஒரு அன்சாரித் தோழரும், மற்றொருவரும் வந்து ஹஜ்ஜுடைய செயல்களின் பிரதிபலனைப் பற்றி வினவினர். அதற்கு அண்ணலார்
நிச்சயமாக நீங்கள் கஅபாவை நோக்கி உங்களுடைய வீட்டிலிருந்து புறப்படும்போது உங்களது
ஒட்டகம் எடுத்து வைக்கின்ற ஒவ்வொரு காலடிக்கும் அல்லாஹ் உங்களது ஒவ்வொரு பாவத்தையும்
மன்னித்து அதற்கு பகரமாக நற்கூலி வழங்குகிறான்.
நீங்கள் கஅபாவை தவாஃப் செய்த பிறகு தொழக்கூடிய இரண்டு
ரக்அத்துக்கு பகரமாக நபி இஸ்மாயீல் (அலை) அவர்களது சந்ததியினரில் ஒருவரை அடிமைத்தளையிலிருந்து
விடுவித்த நன்மைகளை அல்லாஹ் வழங்குகிறான். சஃபா-மர்வா குன்றுக்கிடையே நீங்கள் செய்கின்ற
"சயீ" எனும் தொங்கோட்டத்திற்கு பகரமாக 70 அடிமைகளை உரிமை விட்ட நன்மைகளை அல்லாஹ் வழங்குகிறான்.
நீங்கள் அரஃபா மைதானத்தில் தங்கியிருக்கும்போது
அல்லாஹ் முதல் வானத்திற்கு இறங்கி வந்து தன்னுடைய அடியார்களின் பெருமைகளைப் பற்றி வானவர்களுக்கு
எடுத்துரைத்துவிட்டு, (வானவர்களை நோக்கி)
எனது கருணையை எதிர்பார்த்தவர்களாகவும் (அவற்றை
பெற்றுக்கொள்வதற்காக), எனது தண்டனையை அஞ்சியவர்களாகவும்
உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் எனது அடிமைகள் என்னிடம் தலைவிரிக்கோலமாய் புழுதியடைந்தவர்களாக
வந்திருக்கிறார்கள். அவர்களது பாவங்கள் பூமியில் பரந்து கிடக்கும் மண் துகள்களின் அளவு
இருந்தாலும் அல்லது அதைவிட எவ்வளவு அதிகமாக இருந்தாலும் நான் அவர்களை மன்னித்து விடுவேன்
என்று கூறுகிறான்.
பிறகு எனது அடியார்களே! நீங்களும், உங்களால் பரிந்துரைப்பட்டவர்களும் மன்னிக்கப்பட்டவர்களாக
திரும்பலாம் என்று அல்லாஹ் கூறுவான். நீங்கள் ஷைத்தானுக்கு கல்லெறியும் போது எறியக்கூடிய
ஒவ்வொரு கல்லுக்கு பகரமாக, உங்களது மிகப்பெரிய பாவங்கள் மன்னிக்கப்படும். நீங்கள் பலியிடுகின்ற
குர்பானி பிராணியின் நன்மைகளை உங்களுக்காக சேமித்து வைக்கப்படும். நீங்கள் தலைமுடி
சிரைத்து கீழே விழுகின்ற அந்த ஒவ்வொரு முடிக்கும்
ஒரு நன்மை எழுதப்பட்டு ஒரு பாவம் மன்னிக்கப்படும். நீங்கள் செய்கின்ற (தவாஃப் ஸியாரா)
தவாஃப் உங்களை பாவமற்றவர்களாக ஆக்கிவிடும்.
மேலும் ஒரு வானவர் உங்களிடம் வந்து உங்கள் தோள் புஜங்களுக்கிடையே தனது கையை வைத்து ( اِعمَل فِیمَا تَستَقبِلُ فَقَد غُفِرَ لَكَ مَا مَضَی ) “உங்களின் எதிர்காலத்திற்காக பாடுபட ஆரம்பித்துவிடுங்கள். உங்களது கடந்த கால பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டுவிட்டன.” என்று கூறுவார். நூல்:- முக்தசர் அத்தர்ஙீபு வத்தர்ஹீபு -359
ஹஜ் மற்றும் உம்ரா ஓர் மகத்தான வணக்கம். ஹஜ் என்பது பல வகையான நல்ல வணக்கங்களை தன்னுள் உள்ளடக்கிய ஒரு ஒருங்கிணைந்த வணக்கம் ஆகும். ஹஜ்-உம்ரா செய்வதால் உள்ளும் புறமும் சுத்தமடைகிறது. அதன் மூலம் அல்லாஹ்வின் அன்பும், அருளும் ஏராளமான கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
அனைத்தையும் மன்னிக்கப்படும் நாள்
அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இணைவைக்கிற) அதனை தவிர மற்றவற்றை மன்னிப்பான். திருக்குர்ஆன்:- 4:48
அப்பாஸ் பின் மிர்தாஸ் (ரலி)அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்கள் அரஃபா நாளின் மாலைப்பொழுதில் தங்களின் சமுதாயத்தினருக்காக (உம்மத்துக்காக) பிரார்த்தித்தார்கள். அந்த பிரார்த்தனை ஒப்புக்கொள்ளப்பட்டது. அப்போது அல்லாஹ் "நிச்சயமாக நான் (பிறருக்கு இழைக்கப்பட்ட) அநியாயங்களை தவிர மற்றவற்றை மன்னித்துவிட்டேன். மேலும் நான் அநீதி இழைக்கப்பட்டவனுக்காக அநீதி இழைத்தவனை குற்றம் பிடிப்பேன்" என்று கூறினான்.
அப்போது அண்ணலார் ( رَبِّ اِن شِٸتَ اَعطَيتَ المَظلُومَ مِن الجَنَّةِ وَغَفَرتَ لِلظَّالِمَ ) "இறைவா! நீ நாடினால் அநீதி இழைக்கப்பட்டவனுக்கு சொர்க்கத்தைத் தந்து, அநீதமிழைத்தவனையும் மன்னித்து விடலாம்" என்று பிரார்த்தித்தார்கள். அரஃபா நாளின் மாலைப்பொழுது வரை அந்த பிரார்த்தனை ஒப்புக்கொள்ளப்படவில்லை.
பிறகு மறுநாள் காலை முஸ்தலிஃபாவில் அண்ணலார் மீண்டும் இதையே பிரார்த்தித்தார்கள். அப்பொழுது தான் அந்த பிரார்த்தனை ஒப்புக்கொள்ளப்பட்டது. அச்சமயம் அண்ணலார் சிரித்தார்கள். பிறகு அல்லாஹ் என்னுடைய பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டு எனது சமுதாயத்தினர் அனைவரையும் மன்னித்துவிட்டான். இதனை இப்லீஸ் அறிந்ததும் தன் தலையில் மண்ணை அள்ளிப்போட்டுக் கொண்டு, "எனக்கு வந்த நாசமே!" என்று கூறிக்கொண்டு ஓடினான். அவனது செயலைக் கண்டு நான் சிரித்தேன் என்று அண்ணலார் தான் அச்சமயம் சிரித்த காரணத்தை விவரித்தார்கள். நூல்:- இப்னுமாஜா-3031, பைஹகீ, முக்தசர் அத்தர்ஙீபு வத்தர்ஹீபு-382
அநீதமிழைக்கப்பட்டவன் மன்னிக்காத வரை அநீதமிழைத்தவனை அல்லாஹ் மன்னிப்பதில்லை. ஆனால், ஹஜ்ஜுடைய நாள்களில் முஸ்தலிஃபாவில் வந்து தங்கிய பிறகு அந்த புனித இடத்தில் கேட்கப்படும் பிரார்த்தனைக்கு இதில் விதிவிலக்கு உண்டு.
அதாவது முஸ்தலிஃபா தினத்தில் ஒருவன் “இறைவா! நான் இன்னார் இன்னாருக்கு அநீதமிழைத்து விட்டேன் அதனையும் மன்னிப்பாயாக!” என்று மனம் வருந்தி பிரார்த்திக்கும்போது அல்லாஹுதஆலா இவனை மன்னிப்பதற்கும், இவனால் அநீதமிழைக்கப்பட்டவனுக்கு நற்கூலி வழங்குவதற்கும் போதுமானவனாக இருக்கிறான். உலகில் வேறு எந்த தினத்திலும், இடத்திலும் மனிதன் மனிதனுக்கு செய்த பாவத்தை அல்லாஹ் மன்னிப்பதில்லை. ஆனால் முஸ்தலிஃபா தினத்தில் மட்டும் அல்லாஹ் இதனை சாத்தியமானதாக ஆக்கியுள்ளான் என்கின்றனர் மார்க்க அறிஞர்கள்.
அசல் நோக்கம்
ஹஜ்-உம்ராவை செய்கின்ற நற்பேற்றை அடையும்போது ஈடு இணையற்ற அல்லாஹ் ஒருவனுக்காகவே அதனை நிறைவேற்ற வேண்டும்.
இஸ்லாம் வருவதற்கு முன் அறியாமைக் காலத்திலும் மக்கள் ஹஜ்-உம்ராவை செய்து வந்தனர். ஆனால் அவை அல்லாஹ் ஒருவனுக்காக மட்டும் செய்யப்படவில்லை. கஅபாவுக்கு உள்ளே அவர்கள் நிர்மானித்திருந்த சிலைகளுக்கும், ஹரம் ஷரிஃபுக்கு வெளியே நிர்மானித்திருந்த சிலைகளுக்கும் அவர்களின் வணக்கங்களில் பங்கிருந்தது.
மேலும் அம்மக்கள் ஹஜ்ஜுன்போது வியாபாரத்தையும் நோக்கமாக வைத்திருந்தனர். மினாவில் கடைவீதி, பொருட்காட்சிகள் நிறுவப்பட்டு மார்க்கெட் மயமாக இருந்தது. அம்மக்கள் வியாபார பலன்களை மனதில் கொண்டே சந்திர ஆண்டுக் கணக்கில் வருகின்ற ஹஜ்ஜை சூரிய ஆண்டுக் கணக்கில் மாற்றியமைக்க முயற்சித்தனர். அப்போது தான் வியாபார வாய்ப்பு கூடிவரும். கஅபா கட்டப்பட்ட உண்மைக் காரணத்தை காலப்போக்கில் அவர்கள் மறந்தே போய்விட்டனர்.
இஸ்லாம் அறியாமைக் காலத்தின் சடங்குகள் ஹஜ்ஜில் கலந்திருந்ததைத் தடை செய்த போது வியாபாரத்தை முற்றிலுமாக தடை செய்யவில்லை.
ஹஜ்ஜுடன் வியாபாரம் என்பது மூன்று வடிவங்களில் அமைந்துள்ளது.
1) அடிப்படை நோக்கமே வியாபாரமாக இருந்து, அத்துடன் ஹஜ்ஜையும் நிறைவேற்றுவது. இதில் ஹஜ்ஜின் கடமை நிறைவேறிவிடும். நன்மைகள் அறவே கிடைக்காது.
2) ஹஜ், வியாபாரம் இரண்டுமே நோக்கமாக இருப்பது. இதில் ஹஜ்ஜை நிறைவேற்றி விடுவதுடன் சிறிதளவே நன்மைகள் கிடைக்கும்.
3) ஹஜ் அடிப்படை நோக்கமாக இருந்து அத்துடன் வியாபாரமும் செய்து கொள்வது இதில் ஹஜ்ஜின் நன்மைகளும் கிடைக்கும். அதில் செய்யப்படும் வியாபாரத்தினால் ஹஜ்ஜின் நன்மைகளில் எவ்வித குறைவும் ஏற்படாது. ஹாஜிகள் இதன் முடிவை தாங்களே தேர்வு செய்து கொள்ள வேண்டும் நூல்:- ஃபதாவா ரஷீதிய்யா பாகம் 2 பக்கம் 60
வியாபாரத்தையே அசல் நோக்கமாக ஆக்காமல் தற்காலிகமாக செய்து கொள்ளலாம். கொடுக்கல் வாங்கல் மூலம் ஹரம் ஷரீஃபின் கண்ணியத்தை குறைத்துவிடும் விதமாகவோ, அதில் புரியும் வணக்கங்களுக்கு இடையூறாகவோ இருக்கக் கூடாது. ஹாஜிகள் அங்கிருந்து சட்டவிரோதமாக பொருட்களைக் கொண்டு வருவதும் சுங்க இலாகாவை (Customs) ஏமாற்ற முற்படுவதும் நல்லதல்ல. இதனால் ஹஜ்ஜின் கண்ணியம், ஹாஜிகளின் மரியாதை குறைந்து விடுகின்றது.
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜத்துல் விதாவுக்காக புறப்படும்போது ( اللَّهُمَّ اجْعَلْهُ حَجًّا، لا رِيَاءَ فِيهِ، وَلا سُمْعَةَ ) "இறைவா! இந்த ஹஜ்ஜை பிரபலத்தைத் தேடுவதற்காகவோ, மற்றவர்களுக்கு காட்டுவதற்காகவோ செய்யும் ஹஜ்ஜாக ஆக்கிவிடாதே!" என்று பிரார்த்தித்தார்கள். நூல்:- ஷமாயில் திர்மிதீ-334, இப்னுமாஜா-2890
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( يَأْتِي عَلَى النَّاسِ زَمَانٌ يَحُجُّ أَغْنِيَاءُ أُمَّتِي لِلنُّزْهَةِ، وَأَوْسَاطُهُمْ لِلتِّجَارَةِ وَقُرَّاؤُهُمْ لِلرِّيَاءِ وَالسُّمْعَةِ، وَفُقَرَاؤُهُمْ لِلْمَسْأَلَةِ ) இப்படியும் ஒரு காலம் வரும். என் சமுதாயத்திலுள்ள செல்வந்தர்கள் ஹஜ்ஜுக்கு செல்வார்கள். அவர்கள் தங்களின் கெட்ட பெயரை (தங்களை மக்கள் கஞ்சன் என்று சொல்லாமல் இருக்க) கழுவிக் கொள்வதற்காகவும், நடுத்தர மக்கள் வியாபார நோக்கிலும், அறிஞர்கள் பிரபலத்தைத் தேடுவதற்கு மற்றும் மற்றவர்களுக்கு காட்டுவதற்காகவும், ஏழைகள் யாசகம் கேட்கவும் ஹஜ் செய்வார்கள். அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- கன்ஸுல் உம்மால், தைலமீ, தாரீக் பக்தாத் இமாம் கத்தீப், அல்இலலுல் முதனாஹியாஹ் இமாம் இப்னு ஜவ்ஸீ
ஹஜ்ஜை யாருக்கும் தெரியாமல் மறைத்து செய்ய முடியாது. எப்படியாவது வெளிப்பட்டு விடும். எனவே, அல்லாஹ்வுக்காக மட்டுமே செய்கின்றோம் என்ற மனத்தூய்மை மிகவும் முக்கியமாகும். இந்த அற்புதமான வணக்கத்தை பகட்டுக்காகவோ, புகழுக்காகவோ, மக்கள் தன்னை ஹாஜி என்று சொல்ல வேண்டும் என்பதற்காகவோ, இவர் இத்தனை ஹஜ் செய்தவர் என்று பிறர் தன்னைப் பற்றி பெருமையாக பேச வேண்டும் என்பதற்காகவோ செய்யக் கூடாது. மனத்தூய்மை என்பது பேச்சிலும், எழுத்திலும் இருந்தால் போதாது, அது உள்ளத்தில் இருக்க வேண்டும். அல்லாஹ் எண்ண ஓட்டங்களை அறிகிறான் என்பது கவனிக்கத்தக்கது.
நிச்சயமாக அவன் (மனிதர்களின்) உள்ளங்களில் உள்ளவைகளையும் நன்கறிபவனாக இருக்கின்றான். திருக்குர்ஆன்:- 67:13
அப்போது – இப்போது
உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். மனிதனின் பயணங்களிலேயே மிக சிறந்த பயணம் ஹஜ்ஜுடைய பயணமாகும்.
மார்க்க அறிஞரும், இந்திய சுதந்திர போராட்டத்தின் முதல் வீரருமான சைய்யது அஹ்மது ஷஹீத் (ரஹ்) அவர்களும் 750 க்கும் அதிகமான முஸ்லிம்களும் பத்துக்கும் மேற்பட்ட பாய்மரக் கப்பலில் ஹஜ் செய்வதற்காக கி.பி. 1821 -ம் ஆண்டு ஜூலை மாதம் கல்கத்தாவிலிருந்து புறப்பட்டு ஹஜ் மற்றும் மதீனாவின் ஸியாரத்தையும் நிறைவேற்றிவிட்டு கி.பி. 1824-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நாடு திரும்பினார்கள். நூல்:- தக்வியத்துல் ஈமான்
அக்காலத்தில் நமது முன்னோர்களுக்கு ஹஜ் செய்ய குறைந்தது ஒரு வருட காலம் தேவைப்பட்டது. முதலில் மாட்டு வண்டி, பிறகு ரயில் வண்டி, பிறகு கடலில் படகுகளில் பயணம், பிறகு பாலைவனத்தில் ஒட்டகங்களில் பயணமாக இருந்தது. வழியில் திருடர்கள் பயம், நோய்கள் ஏற்பட்டு இறந்து விடும் சூழ்நிலை. அக்காலத்தில் ஹஜ் பயணத்தில் உள்ளவர் உயிருடன் ஊர் திரும்புதல் என்பது உறுதியற்றதாக இருந்தது. அதனால் அப்போது ஹாஜிகள் கஃபன் துணியையும் தங்களுடன் எடுத்து செல்லும் பழக்கம் அக்காலத்தில் இருந்தது.
அதனால் அன்றைய மக்கள் பெண் பிள்ளைகளுக்கு திருமணம் முடித்து கொடுத்து விட்டு ஹஜ்ஜுக்கு போ! கடன்களை முழுமையாக அடைத்து விட்டு போ! மனைவி மக்கள் தங்குவதற்கு ஒரு நடுத்தரமான வீட்டைக் கட்டிக் கொடுத்து விட்டு போ! என்றெல்லாம் சொன்னார்கள்.
இன்றைய ஹஜ் பயணம் என்பது விமானத்தில் சில மணி நேரம் பயணம் செய்து ஹஜ்ஜுடைய வணக்கங்கள், மக்கா-மதீனாவில் செய்ய வேண்டிய உபரியான வணக்கங்கள் எல்லாவற்றையும் முடித்துவிட்டு 35 அல்லது 40 நாட்களுக்குள் ஊர் திரும்பி வந்து விடுகிறோம். இதில் பயண சிரமம் என்பது பெரிய அளவில் இல்லை. இந்த ஹஜ் பயணத்தில் நாம் பயணிக்கும் விமானம் மற்றும் பேருந்து முழுவதும் ஏ.சி. அமைக்கப்பட்டுள்ளது. அங்கே நாம் போய் தங்கும் விடுதிகள், தொழும் பள்ளிவாசல்கள் எல்லாம் ஏ.சி. அமைக்கப்பட்டுள்ளது. எவ்வித சிரமுமின்றி ஏதோ சுற்றுலா போய் வந்ததை போல் ஓர் சுகமான பயணமாக மாறியிருக்கிறது.
பயணத்தின் நேர காலங்கள் சுருங்கி மிக சுகமாக்கப்பட்டிருக்கின்ற இந்த காலத்திலும் கூட தலைமுடி நரைக்கும் முதுமைக் காலத்தில் ஹஜ் செய்யலாம் என்றெண்ணி, விலைமதிக்க முடியாத வாலிப பருவத்தை வீணடிப்பது மாபெரும் தவறாகும். எந்தவொரு வணக்கத்தையும் முதுமையில் நிறைவேற்றவதைவிட இளமை பருவத்தில் நிறைவேற்றவது அதிகமான நன்மைகளை தரும் என்று இஸ்லாம் இயம்புகிறது.
எவர்கள் அங்கு பயணம் செய்ய சக்தி உள்ளவர்களாக இருக்கின்றார்களோ அத்தகைய மனிதர்கள் மீது அல்லாஹ்வுக்காக (அங்கு சென்று) அந்த ஆலயத்தை ஹஜ் செய்வது கடமையாகும். எவரேனும் (இதை) நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்கு ஒன்றும் குறைந்து விடுவதில்லை ஏனென்றால்) நிச்சயமாக அல்லாஹ் உலகத்தாரை விட்டும் தேவையற்றவனாக இருக்கிறான். திருக்குர்ஆன்:- 3:97
வசதி இருந்தும் காலம் கடத்துவதைத் தான் அல்லாஹ் இவ்வசனத்தில் "நிராகரிப்பு" என்ற பதத்தை பயன்படுத்துகிறான். காலம் கடத்துவதே இறைநிராகரிப்புக்கு சமம் என்பதை இதன் மூலம் விளங்கலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ் கூறுவதாக (ஹதீஸ் குத்சியை) கூறினார்கள். ( إنَّ عَبْداً صَحَّحْتُ لَهُ جِسْمَهُ، وَوَسَّعْتُ عَلَيْهِ فِيِ المَعيشَةِ، تَمْضِي عَلَيْهِ خَمْسَةُ أعْوَامٍ لا يَفِدُ إليَّ لَمَحْرُومٌ ) ஒரு அடியானுக்கு நான் உடல் நலத்தையும், வாழ்க்கையில் (பொருளாதார) விலாசத்தையும் கொடுத்து அவர் அதே நிலையில் 5 ஆண்டுகள் கழித்த பிறகும் (ஹஜ்ஜின் மூலமாக) என்னை சந்திக்க வரவில்லையானால் அவர் (என் அருளை விட்டும் ) நிராசையாக்கப்பட்டவராவார். அறிவிப்பாளர்:- அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் நூல்:- இப்னுஹிப்பான், பைஹகீ, முக்தசர் அத்தர்ஙீபு வத்தர்ஹீபு-360
சயீத் பின் ஸுபைர் (ரலி) அவர்கள் என் அண்டை வீட்டாராயினும் சரியே, வசதி வந்த பின்னர் ஹஜ் செய்யாமல் இறந்தவனுக்காக நடத்தப்படும் ஜனாஸா தொழுகையில் கலந்துகொள்ள மாட்டேன் என்று கூறினார்கள். நூல்:- அல்கபாயிர் இமாம் அத்தஹபீ
அழைப்பு விடுக்கப்பட்டது
(நபி இப்ராஹீம் -அலை அவர்களை நோக்கி) ஹஜ்ஜுக்கு வருமாறு நீங்கள் மனிதர்களுக்கு அழைப்பு விடுங்கள். (அவர்கள்) கால்நடையாகவும் உங்களிடம் வருவார்கள். இளைத்த ஒட்டகங்களின் மீது தொலை தூரத்திலிருந்தும் (உங்களிடம்) வருவார்கள். திருக்குர்ஆன்:- 22:27
நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் கஅபாவை கட்டிமுடித்த பிறகு அல்லாஹ் மக்களை நோக்கி ஹஜ்ஜுக்கு வருமாறு நேரடியாக அழைப்பு விடுத்தான். அல்லாஹ் வானவர்களின் தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்களையும் ஹஜ்ஜுக்கு வருமாறு அனைவரையும் அழைக்கும்படி கட்டளையிட்டான். அவ்வாறே நபி இப்ராஹீம் (அலை) அவர்களையும் ஹஜ்ஜுக்கு வருமாறு அனைவரையும் அழைக்கும்படி கட்டளையிட்டான். இதனையறிந்த இப்லீஸ், "நானும் இவ்வாறே அழைப்பு விடுக்கட்டுமா?" என்று அல்லாஹ்விடம் வினவினான். அவனது நப்பாசையையும் நிறைவேற்றும் விதமாக, "ஆம்! நீயும் இவ்வாறே அழைப்பு விடுக்கலாம்" என்று கூறி, அல்லாஹ் அவனுக்கும் வாய்ப்பு தந்தான்.
இவ்வாறே எல்லோரும் அழைப்பு விடுத்தார்கள். அல்லாஹ்வின் அழைப்பை செவியுற்று யாரெல்லாம் ஹஜ்ஜுக்கு போவார்களோ அவர்களெல்லாம் இறைநேசர்களாக இல்லம் திரும்புவார்கள். ஆன்ம பலமும், பாக்கியமும், பரிசுத்தமுடையவர்கள் மட்டுமே அல்லாஹ்வின் அழைப்பை நேரடியாக கேட்க முடியும்.
ஜிப்ரீல் (அலை)அவர்களின் அழைப்பை செவியுற்று யாரெல்லாம் ஹஜ்ஜுக்கு போவார்களோ அவர்களெல்லாம் ஹஜ்ஜில் மரணித்து விடுவார்கள். அந்த வானவரின் சப்தம் செவியுற்ற ஆன்மா மரணிக்காமல் இருக்க முடியாது. முந்தைய சமுதாயத்தில் சில கூட்டம் சப்தம் கொண்டு அழிக்கப்பட்டதாக திருக்குர்ஆன் பல இடங்களில் கூறுகின்றது. அது ஜிப்ரீல் (அலை) அவர்களின் சப்தம் தான். ஜிப்ரீல் (அலை) அவர்களின் சப்தம் கேட்டால் மனிதன் மூச்சற்றுப் போவான் என்கின்றனர் மார்க்க அறிஞர்கள்.
நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் அழைப்பை செவியுற்று யாரெல்லாம் ஹஜ்ஜுக்கு போவார்களோ அவர்களின் வாழ்க்கை முன்பைவிட மேலானதாக இருக்கும். அன்பில்லாதவர் அன்புள்ளவராக, பொறுப்பில்லாதவர் பொறுப்புள்ளவராக, வழிபாட்டில் குறைவு செய்தவர் வழிபாட்டை நிரப்பமாக நிறைவேற்றுபவராக மாறிப்போவார். சுருங்கக்கூறின், அவர் ஹஜ் செய்த பின்னர் சிறந்தவராக மாறியிருப்பார்.
இப்லீஸின் அழைப்பை செவியுற்று யாரெல்லாம் ஹஜ்ஜுக்கு போவார்களோ அவர்களின் வாழ்க்கையில் ஹஜ்ஜுக்கு பிறகு எந்த மறுமலர்ச்சியும் ஏற்படாது. அதன் பிறகு அவர்களின் செயல்பாடு மிகவும் மூர்க்கத்தனமாகவும், மோசமானதாகவும் இருக்கும்.
ஹஜ்ஜை முடித்த ஒருவரின் செயல்பாட்டை வைத்து இவர் யாருடைய ஹஜ்ஜின் அழைப்பை செவியுற்று ஹஜ் முடித்துள்ளார் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
ஹஜ்ஜுக்கு சென்று வந்த பிறகும் சிலர் திருந்தாமல் இப்படி இருக்கின்றார்களே? என்று பேரறிஞர் அஷ்ரப் அலி தானவி (ரஹ்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு அன்னார் "கஅபாவின் சுவற்றில் பதிந்துள்ள ஹஜ்ருல் அஸ்வத் என்ற கல்லை தொட்ட பிறகு மனிதனின் அசல் நிலை வெளியாகி விடுகிறது. அவர் ஹஜ் பயணத்துக்கு முன்பு நற்குணமுடையவராக இருந்திருந்தால், ஹஜ் பயணத்துக்கு பின்பு மிக சிறந்த நற்குணமுடையவராக ஆகிவிடுகிறார். முன்பு துர்குணமுடையவராக இருந்திருந்தால், அது இப்பொழுது வெளியாகிவிடும்.
அதனால் தான் ஹஜ் பயணத்துக்கு முன்பே நீங்கள் உங்களை சரி செய்து கொள்ளுங்கள். இறையச்சமுள்ளவர்களுடன் தோழமை கொள்ளுங்கள். அது உங்களை நன்மையின் பக்கம் அழைத்து செல்லும்" என்று பதிலளித்தார்கள். நூல்:- அஷ்ரஃபுல் ஜவாப்
ஹஜ்ஜை முடித்த பின்னர் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள், வழிபாடுகளில் அதீத ஆர்வம், பிறரை மதிக்கும் நற்குணங்கள், உறவுகளுடன் நல்லுறவாடும் உயர்வான தன்மைகள், மற்றும் இறைநம்பிக்கை பளிச்சிடும் நிலைகள் ஹாஜியிடம் அதிகரித்திருப்பின் அவரின் ஹஜ் பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. நூல்:- மஜல்லத்துல் ஹஜ்
ஹஜ்ஜுக்கு போய் விட்டு வந்த பிறகு நம்மால் இஸ்லாமிய முறைப்படி சீராக நடக்க இயலுமா? என்று அச்சப்பட வேண்டாம். அல்லாஹ் நமது வாழ்க்கையை சீராக்குவான் என்ற நம்பிக்கையில் ஹஜ் செய்தால் நிச்சயமாக அதன் பலன் நமக்கு கிடைக்கும்.
சந்திப்பது
நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் கூறினார்கள். ஹஜ்ஜை முடித்துவிட்டு வருபவர்களை சந்தித்தால் அவர்களுக்கு சலாம் சொல்லுங்கள். அவர்களுடன் முசாபஹா (கைலாகு) செய்யுங்கள். இன்னும் அவர்கள் தமது வீடுகளுக்கு சென்று நுழைவதற்கு முன்னதாகவே அவர்களிடம், உங்களின் பாவமன்னிப்புக்காக பிரார்த்திக்கும்படி கோருங்கள். ஏனெனில், அவர்கள் பாவங்கள் அனைத்தும் நீங்கப்பெற்று பரிசுத்தமாகித் (திரும்பி) வந்துள்ளனர். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்னது அஹமது
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( الْحُجَّاجُ وَالْعُمَّارُ وَفْدُ اللَّهِ إِنْ دَعَوْهُ أَجَابَهُمْ وَإِنِ اسْتَغْفَرُوهُ غَفَرَ لَهُمْ ) ஹஜ் செய்தவரும், உம்ரா செய்தவரும் அல்லாஹ்வின் தூதுக்குழுவினர் ஆவார்கள். அவர்கள் பிரார்த்தித்தால் அது ஒப்புக்கொள்ளப்படும். அவர்கள் பாவமன்னிப்புக் கோரினால் அவர்களின் பாவங்களை (அல்லாஹ்) மன்னிக்கின்றான். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- இப்னுமாஜா-2892
ஹஜ் செய்ய இருப்பவர்கள் பயணத்துக்கு முன் தன் வீட்டாரிடமும் தனது பகுதியிலுள்ள பள்ளிவாசலில் தொழ வருபவர்களிடமும் விடை பெற்று பிரார்த்தித்துவிட்டு புறப்படுவதுதான் முறை. ஹஜ் முடித்துவிட்டு திரும்பி வரும்போது தனது பகுதியில் உள்ள பள்ளிவாசலுக்கு சென்று அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் விதமாக இரண்டு ரக்அத் "ஷுக்ரு நபில்" தொழுதுவிட்டு, அப்பொழுது பள்ளிவாசலில் இருப்பவர்களிடம் முசாபஹா செய்து விட்டு எல்லோருக்காகவும் பிரார்த்தித்துவிட்டு பிறகு வீட்டுக்கு செல்வதே முறையாகும்.
வீட்டுக்குள் நுழைவதற்கு முன் செய்யும் பிரார்த்தனை அல்லாஹ்விடம் ஏற்றம் பெறுகிறது என்பது நபிமொழியின் கருத்தாக இருப்பதால், இத்தகைய விதிமுறைகளை எல்லாம் நமது மார்க்கத்தின் முன்னோடிகள் கடைபிடித்து வந்துள்ளனர். இக்காலத்தில் இந்த அழகிய நடைமுறைகளை பெரும்பாலோர் பேணுவதாகத் தெரியவில்லை. இன்றைய அவசர காலத்தில் பழைய புனிதமான பல விதிமுறைகளையெல்லாம் அழிந்து வருகின்றன. அல்லது வெறுப்புடன் கைவிடப்பட்டு வருகின்றன.
உறவுகளுடன் சேர்ந்து வாழும் எண்ணத்துடனும்,
வருபவர்களிடம் மன்னிப்பு கேட்டு
கொள்ளலாம் என்ற எண்ணத்துடனும் இந்த புனிதமிகு பயணத்தை முன்னிட்டு ஹஜ்ஜுக்கு செல்ல இருப்பவர்
உறவினர்களுக்கு சாதாரணமான முறையில் கடமையாகக் கருதாமல் மனத்தூய்மையுடன் விருந்தளிப்பது
கூடும். ஆனால் இன்று ஹஜ்ஜுக்கு செல்ல இருப்பவர் விருந்தளிக்காவிட்டால் அது பெரும் குறையாகக்
கருதப்படுகிறது.
மேலும் ஹஜ்ஜுக்கு செல்ல இருப்பவருக்கு பொன்னாடைகள் போர்த்தும் பழக்கம் உருவாகியுள்ளது. பொன்னாடைகள் போர்த்தாவிட்டால் கௌரவக் குறைவாகக் கருதப்படுகிறது. அவரவர் வசதிக்குத் தகுந்தாற்போல் பொன்னாடை போர்த்துவார்கள். பொன்னாடை வாங்க வசதியில்லாதவன் என்ன செய்வான்? வெட்கத்தால் கூனிக்குறுகிப்போக மாட்டானா? ஹஜ்ஜுக்கு செல்ல இருப்பவர் இத்தனை பொன்னாடைகளைப் பெற்று என்ன செய்வார்? இந்த பொன்னாடை போர்த்தும் பழக்கம் கௌரவப்படுத்துதல் என்பதைவிட வீண்விரயம் மற்றும் முகஸ்துதி என்பதே சரியாகும்.
அறிவியலாளர்களின் ஆய்வு
கண்ணியம் பொருந்திய பழமை வாய்ந்த ஆலயத்தையும் சுற்றி வலம் (தவாஃப்) வாருங்கள். திருக்குர்ஆன்:- 22:29
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لَا تَقُومُ السَّاعَةُ حَتَّی لَا یُحَجَّ البَیتُ ) கஅபாவில் ஹஜ் நடைபெறாத நிலை வராத வரை மறுமை நாள் வராது. அறிவிப்பாளர்:- அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-1593
உலகம் இயங்குவது ஹஜ் செய்பவர்களால் தான். ஹஜ் என்ற வணக்கம் நடைபெறாவிட்டால் உலகத்தின் ஓட்டம் நின்றுவிடும் என்கிறது இந்த நபிமொழி.
எதிர்வரும் 2100 ஆண்டுவாக்கில் ஹஜ்ஜுக்கு செல்லும் யாத்ரீகர்கள் கடும் வெப்ப அலை காரணமாக பலர் உயிரிழக்க நேரலாம் என விஞ்ஞானிகள் கணிக்கின்றனர். இந்த நூற்றாண்டின் இறுதியில் பாரசீக வளைகுடாவின் ஒரு பகுதி வெப்ப அலைக்கு இலக்காகி அங்கு போகவே கூடாத நிலை ஏற்படும் எனக் கணித்துள்ளனர் அறிவியலாளர்கள்.
இந்த ஆய்வின்படி பாரசீக வளைகுடா (சவூதி அரேபிய,
பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு சிற்றரசு முதலிய நாடுகள்) நாடுகளில்
74 முதல் 77 செல்சியஸ் வரை வெப்ப அளவு இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.
45 செல்சியஸ் அளவு வெப்பத்தையே
தாங்கமுடியாமல் மக்கள் ஆ...ஊ...என்று காற்றை ஊதியவாறு காலத்தை ஓட்டுகிறார்கள்.
ஆனால் 74 முதல் 77 அல்லது 100 செல்சியஸ் அளவு என்றால் மனிதன் கிருக்கனாகி விடுவான். எவ்வளவு நேரத்திற்குத் தான் தொடச்சியாக குளிர்சாதனத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்க முடியும்? மேலும் மனிதர்கள் தங்கள் வியர்வையை வெளிப்படுத்தக்கூட முடியாத நிலை ஏற்படலாம். இயற்கைச்சூழல் மாற்றத்தால் ஏற்படும் பலவிதமான நோய்களுக்கும், இறப்புகளுக்கும் மனிதன் ஆளாக நேரலாம்.
இதன் விளைவாக ஏராளமான மக்கள் இந்த நாடுகளிலிருந்து புலம்பெயர நேரும். அந்த சமயத்தில் மத்திய கிழக்கை நோக்கி இலடசக்கணக்கான மக்கள் குடியேறுவது நல்லது என அறிவியலாளர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
அங்கு நிலவும் கடுமையான வெப்பத்தின் காரணமாக மக்கள் உயிருக்கு பயந்து மக்காவுக்கு சென்று ஹஜ் செய்வதை கைவிடும் நிலை ஏற்படும் போது உலகம் அழிந்து விடலாம்.
அல்லாஹுதஆலாவால் அங்கீகரிக்கப்பட்ட ஹஜ் என்பது இந்த உலகம் மற்றும் இந்த உலகத்தின் பொருட்கள் அனைத்தையும் விட சிறந்ததாகும் என்பது நபிமொழி. நூல் :- இஹ்யா
அல்லாஹுதஆலாவால் அங்கீகரிக்கப்பட்ட பல ஹஜ்-உம்ராக்களை நாம் நமது குடும்பத்தினருடன் மனத்தூய்மையுடன் பலமுறை
நிறைவேற்றுவதற்கு அல்லாஹ் அருள்பாலிப்பானாக! ஆமீன்!
மௌலவி, மு.முஹம்மது ஹைதர் அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951
بارك الله خيرا في الدارين 👍
ReplyDelete