Search This Blog

Monday, 2 November 2020

இதயக்கனி

 

இதயக்கனி

يَهَبُ لِمَنْ يَشَاءُ إِنَاثًا وَيَهَبُ لِمَنْ يَشَاءُ الذُّكُورَ أَوْ يُزَوِّجُهُمْ ذُكْرَانًا وَإِنَاثًا وَيَجْعَلُ مَنْ يَشَاءُ عَقِيمًا إِنَّهُ عَلِيمٌ قَدِيرٌ

ஆகவே அவன் விரும்பியவர்களுக்குப் பெண் சந்ததியை மட்டும் கொடுக்கின்றான். அவன் விரும்பியவர்களுக்கு ஆண் சந்ததியை மட்டும் கொடுக்கின்றான். அல்லது ஆணையும், பெண்ணையும் கலந்தே கொடுக்கின்றான். அன்றி அவன் விரும்பியவர்களை (சந்ததியற்ற) மலடாகவும் ஆக்கிவிடுகின்றான். நிச்சயமாக அவன் (அவரவர்களின் தகுதியை) நன்கறிந்தவனும், (தான் விரும்பியவாறு செய்ய) ஆற்றலுடையவனாகவும் இருக்கின்றான்.                          திருக்குர்ஆன்:- 42:49,50

குழந்தைகள் இறைவனால் வழங்கப்பட்ட அருட்கொடையாகும். குழந்தை பிறப்பின் போது மனிதன் மகிழ்ச்சி கொள்கிறான். இதுகுறித்து இவனுக்கு மற்றவர்கள் வாழ்த்து தெரிவிக்கின்றனர்.

குழந்தை பாக்கியத்தை வெறுமனே உடலுறவால் மட்டும் அல்லது பணம் மற்றும் ஆட்சி அதிகாரத்தாலோ பெற்றிட இயலாது. குழந்தை பாக்கியம் என்பது மனித சக்திக்கு அப்பாற்பட்டது. அது அல்லாஹ்வின் கட்டுப்பாட்டில் உள்ளது என்கிறது இஸ்லாம்.

உலகத்தின் அனைத்து வளங்களையும் பெற்ற ஒருவருக்கு குழந்தை பாக்கியம் மட்டும் கிடைக்கப்பெறவில்லையானால் அவர் உலகத்தில் உண்மையான இன்பத்தை அனுபவிக்க இயலாது.

ஆணாயினும், பெண்ணாயினும் சரி! முறையாக தன் ஆண்மையையும், பெண்மையையும் வெளிப்படுத்தக்கூடிய ஒரே வழி குழந்தை செல்வம் தான். எனவேதான் குழந்தை செல்வத்தைவிட சிறந்த செல்வம் வேறொன்றுமில்லை என்கின்றனர்.

அழகிய மலர்கள்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (اِنَّ لِکُلِّ شَجَرَتٍ ثَمَرَةً وَثَمَرَةُ القَلبِ الوَلَدُ  ) "நிச்சயமாக ஒவ்வொரு மரத்திற்கும் கனிகள் உண்டு. (அதுபோல்) இதயத்தின் கனி என்பது குழந்தையாகும். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் நூல்:- அல்பஸ்ஸார்

இறைவன் ஓர் அடியானுக்கு தருகின்ற அருட்கொடைகளில் தலைசிறந்தது நல்லொழுக்கமுள்ள பிள்ளை செல்வமாகும். இறைத்தூதர்களும்கூட இந்த அருட்கொடை கிடைக்க தவமிருந்திருக்கிறார்கள்.

(நபி ஸகரிய்யா - அலை அவர்கள்) "என் இறைவனே! உன் புறத்திலிருந்து எனக்கொரு நல்ல சந்ததியை அளிப்பாயாக! என்று கூறினார்.                                                                                                                          திருக்குர்ஆன்:- 3:38

(நபி இப்ராஹீம் - அலை அவர்கள்) "என் இறைவனே! நல்லோர்களில் (ஒருவரை) நீ எனக்கு (சந்ததியாக) வழங்கி அருள்புரிவாயாக! என்றார்.                                                                                                               திருக்குர்ஆன்:- 37:100

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம் (மக்கள் பேரிச்சங் கன்றுகளை நட்டு அதில்) முதலாவதாகப் பழுக்கும் கனியைக் கொண்டு வந்து கொடுக்கும் போது அண்ணலார் அந்த கனியில் அருள்வளம் பெருகுவதற்கு பிரார்த்திப்பார்கள். பிறகு அங்கு வந்திருக்கும் குழந்தைகளில் மிகச்சிறிய குழந்தைக்கு அந்தக் கனியைக் (உண்ண) கொடுப்பார்கள். நூல்:- முஸ்லிம்-2661

கவ்லா பின்த் ஹகீம் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருநாள் அருமை நாயகம் (ஸல்) அவர்கள் தம் புதல்வி (பாத்திமா - ரலி) அவர்களின் மகன்களில் ஒருவரைத் தம் நெஞ்சோடு அணைத்துக்கொண்டு புறப்பட்டார்கள். அப்போது (அந்த குழந்தையை நோக்கி) ( اِنَّکُم لَتُبَخِّلُونَ وَتُجَنِّبُونَ وَتُجَهِّلُونَ وَاِنَّکُم لَمِن رَیحَانِ اللّٰهِ ) "நீங்கள் (பெற்றோரை) கருமிகளாக்குகிறீர்கள். கோழைகளாக்குகிறீர்கள். அறிவிழக்கச் செய்கிறீர்கள் (ஆயினும்) நீங்கள் இறைவனின் (அன்பு) மலர்கள்" என்று கூறிக் கொண்டிருந்தார்கள்.             நூல்:- திர்மிதீ-1833

குழந்தைகளைப் பெற்றெடுப்பதற்கு முன் ஒருவரிடம் இருக்கின்ற வீரம், தாராள மனம், விவேகம் ஆகியவை குழந்தை பிறந்தபின் குறைந்து விடுவது இயல்பாகும். தமது நேரத்தை, உழைப்பை, செல்வத்தைச் சமூகத்துக்காகச் செலவழித்துக் கொண்டிருக்கும் ஒருவர் குழந்தை பெற்றபின் அவற்றில் ஒரு வரையறையை ஏற்படுத்திக் கொள்கிறார்.

அவ்வாறே முன்னதாக அவரிடம் இருந்த வேகம், வீரம், வீராப்பு ஆகியவை, குழந்தைகளைப் பராமரிக்கத் தொடங்கும்போது கொஞ்சம் கொஞ்சமாக தளர்வதுண்டு. குழந்தைகள் இல்லாதபோது விவேகத்துடன் நடந்து கொள்பவர்கள் கூட குழந்தைகள் வந்தபின் விவேகமின்றி நடந்து கொள்வதையே அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்கள். இருப்பினும் குழந்தைகள் அல்லாஹ்வின் அருட்கொடை தான் என்பதையும் உறுதிப்படுத்துகிறார்கள்.

அழகிய மலர்களை அனைவரும் விரும்புவது போல். குழந்தைகள் என்றால் கல்நெஞ்சம் கொண்டவன் கூட அம்மழலைகளை அள்ளி அணைக்க ஆசை கொள்கிறான். இதயம் உள்ள அனைவரையும் தன் பக்கம் இழுத்திடும் வசீகரம் குழந்தையிடம் உண்டு.

ஆண் குழந்தைகள் (நிஃமத்து) "அருட்கொடை"யாகும். பெண் குழந்தைகள் (ஹஸனாத்து) "நன்மைகள்" ஆகும் என்கின்றனர் மார்க்க அறிஞர்கள்.

அல்லாஹ் வழங்கும் அருட்கொடைகளுக்கு மறுமையில் கேள்வி கணக்கு உண்டு. ஆனால் அவன் வழங்கும் நன்மைகளுக்கு கேள்வி கணக்கு இல்லை என்பது கவனிக்கத்தக்கது.

தொடரும் நன்மைகள்

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மனிதன் இறந்து விட்டால் அவனுடைய மூன்று செயல்களைத் தவிர மற்ற அனைத்தும் நின்று விடுகின்றன. அதில் ஒன்று அவனுக்காக பிரார்த்திக்கும் (அவனுடைய) நல்ல பிள்ளை.          அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள்            நூல்:- முஸ்லிம்-3358

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். சொர்க்கத்தில் ஒரு மனிதரின் தகுதி திடீரென உயர்த்தப்படும். அம்மனிதர் வியப்பு மேலிட இறைவனே! நான் (இப்போது) எந்த நற்செயலையும் செய்யவில்லையே! திடீரென எனது தகுதி உயரக் காரணம் என்ன? என்று வினவுவார். அப்போது "நல்லொழுக்கமுள்ள பிள்ளையை உலகில் விட்டு வைத்திருந்தாய். உனது பிள்ளை உனது பாவங்கள் மன்னிக்கப்பட பிரார்த்தித்தது. எனவேதான் உனது தகுதி உயர்த்தப்படுகிறது" என்று பதிலளிக்கப்படும். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள்                         நூல்:- இப்னுமாஜா

ஒரு பெண்ணுக்கு அல்லாஹ் குழந்தை பாக்கியமளித்து அவள் அவர்கள் மீது அன்பு செலுத்தி, அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளையும் நிறைவேற்றி விட்டால், அவள் நரக நெருப்பிலிருந்து பாதுகாக்கப்படுவாள் என்கிறது ஒரு நபிமொழி.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். பிள்ளை பெறாத அழகியைவிட பிள்ளை பெறும் கறுப்பி மிகச் சிறந்தவள். (சொர்க்கத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட்ட) "கருவின் விழுக்கட்டி" சொர்க்க வாசலில் தனது பெற்றோரை எதிர்பார்த்து கொண்டு நிற்கும். அந்த விழுக்கட்டியை நோக்கி "நீ சொர்க்கத்திற்கு போ!" என்று கூறப்படும். அப்போது அது "என் இறைவனே! எனது பெற்றோர் எங்கே போவார்கள்?" என்று கேட்கும். அப்போது "நீயும், உனது பெற்றோரும் சொர்க்கம் செல்லுங்கள்" என்று சொல்லப்படும்.         அறிவிப்பாளர்:- முஆவியா (ரலி) அவர்கள்                                                     நூல்:- தப்ரானீ

சட்டமேதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் தலைசிறந்த மாணவர்களில் ஒருவராக விளங்கிய அபூகாலித் (ரஹ்) அவர்கள் திருமணம் முடித்த பின்னர் இறைவழிபாட்டில் ஈடுபடுவதற்கு பிள்ளைகள் தடையாக இருக்கும் என்றெண்ணி குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளிப்போடுகின்றார். அச்சமயத்தில் ஒருநாள் தான் கண்ட கனவைப் பற்றி விவரிக்கிறார்.

நான் மஹ்ஷர் எனும் தீர்ப்பு நாளில் நிற்கிறேன். சூரியன் தலைக்குமேல், ஜன நெருசல், மக்களோ வியர்வையில் சிரமப்பட, எனக்கோ தாகத்தால் தொண்டை வெடித்துவிடுமோ என்ற பயம். அந்த நேரத்தில் ஒளியால் ஜொலிக்கின்ற சிறுவர்கள், தங்கள் கைகளில் வெள்ளிப் பாத்திரங்களில் குளிர்ந்த நீரை மக்களுக்கிடையே கொண்டு வந்து அது தங்களின் தாயா...தந்தையா... என்று பார்த்துப் பார்த்துப் புகட்டிக் கொண்டிருந்தனர்.

என் அருகே ஒரு சிறுவர் வந்தபோது தாகத்தால் தவிர்த்துக் கொண்டிருந்த நான் "எனக்கும் நீர் புகட்டு! கடுமையான தாகம்" என்றேன். அப்போது அந்த சிறுவர் நீ யார்? என்று வினவ, "இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களின் மாணவர் அபூகாலித்" என்றேன். மீண்டும் அந்த சிறுவர் உமக்கு ஆண், பெண் என குழந்தைகள் இருந்து அவர்களை வளர்க்க நீ சிரமப்பட்டீரா? என்று வினவ, "இல்லை" என்றேன்.

உலகில் வாழும் போது பிள்ளைகள் பெற்று அவர்களை முறையாக வளர்த்து ஆளாக்க யாரெல்லாம் சிரமப்பட்டார்களோ அவர்களுக்கு மட்டுமே நான் இங்கே தண்ணீர் புகட்டுகிறேன் என்று கூறியபோது, எப்படியாவது எனக்கு உதவக்கூடாதா? என்று நான் கெஞ்சினேன். அப்போது அந்த சிறுவர் சில பாவங்கள் உள்ளன. குழந்தைகளுக்காக அடையும் கவலையும், குடும்பத்தைக் காப்பாற்ற உழைக்கும் உழைப்பின் மூலமும் தான் அவை மன்னிக்கப்படும் என்ற நபிமொழியை கேள்விப்பட்டதில்லையா? என்று வினவியது.

அப்போது நான் விழித்துவிட்டேன். பிறகு என் மனைவியிடம் "நமக்கு அல்லாஹ் குர்ஆனில் (56:17,18) வர்ணிக்கின்ற விதமாக குழந்தைகள் வேண்டும்" என்று கூறினேன்.

தத்தெடுத்தல்

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் அடிமையாகவும், எட்டு வயது நிரம்பிய சிறுவராகவும் இருந்த ஸைத் பின் ஹாரிசா (ரலி) அவர்களை ஒருகட்டத்தில் தனது வளர்ப்பு மகனாக அறிவித்து, இனிமேல் எனக்கு இவர் வாரிசு, இவருக்கு நான் வாரிசு என்றும் கூறினார்கள்.

இந்நிகழ்ச்சிக்கு பிறகு முஹம்மதின் மகன் ஸைத் என்றே அவர் அழைக்கப்பட்டார். அண்ணலார் நபித்துவத்தைப் பெற்று "பிள்ளைகளை அவர்களின் பெற்றோரின் பெயர் கூறியே அழையுங்கள்" (33:5) என்ற திருவசனம் அருளப்படும் வரை இந்நிலை நீடித்தது.                        நூல்:- நசாயீ, தஃப்சீர் குர்துபி

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தனது வளர்ப்பு மகனார் ஸைத் (ரலி) அவர்களுக்கு திருமண வயது வந்ததும் தனது (குப்பி) தந்தையின் சகோதரியின் மகளான ஸைனப் பின்த் ஜஹஷ் (ரலி) அவர்களை மணமுடித்து வைத்தார்கள்.

பிறகு அவர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவகாரத்துப் பெற்று பிரிந்து விட்டனர். பிறகு அல்லாஹ்வின் உத்தரவுபடி அண்ணலாரே ஸைனப் பின்த் ஜஹஷ் (ரலி) அவர்களை மணமுடித்துக் கொண்டார்கள்.

இந்த திருமணம் குறித்து இறைமறுப்பாளர்கள் முஹம்மது தனது மகனின் மனைவியை (மருமகளை) மணந்து கொண்டார் என்று குற்றம் கூறினர்.

அதற்கு பதிலாகவே முஹம்மது (ஸல்) அவர்களுக்கு ஆண்  பிள்ளைகள் எவரும் கிடையாது. அவரே இறுதி இறைத்தூதர் ஆவார். இஸ்லாமிய சட்டங்கள் அவர் மூலமாகவே அறிமுகம் செய்ய வேண்டியுள்ளது. இப்படி வளர்ப்பு மகன் மணந்து விவகாரத்துச் செய்த பெண்ணை, வளர்ப்புத் தந்தை மணக்கலாம். காரணம் இவர்களுக்கு மத்தியில் உண்மையான தந்தை-மகன் என்ற உறவுமுறை அறவே கிடையாது என்ற விளக்கங்கள் அடங்கிய திருவசனங்கள் அருளப்பட்டது. (பார்க்க திருக்குர்ஆன்:- 33:36-40)

குழந்தைகளை தத்தெடுப்பதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டு. தத்தெடுக்கப்படும் பிள்ளைகள் பெற்றெடுத்த பிள்ளைகள் போன்று ஆக மாட்டார்கள்.

எனவே பெண் பிள்ளைகளை தத்தெடுத்து வளர்த்தால் தத்தெடுத்த ஆணுக்கு, அப்பெண் பிள்ளை அந்நியப் பெண்ணாகவே இருப்பாள். அதுபோன்ற ஆண் பிள்ளையை தத்தெடுத்து வளர்த்தால் தத்தெடுத்த பெண்ணுக்கு, அந்த ஆண் பிள்ளை அந்நிய ஆணாகவே இருப்பார். அப்பிள்ளைகள் பருவ வயது வந்த பிறகு அவர்களுக்கிடையே பர்தா (முகத்தை மறைதல்) அனுசரிக்க வேண்டியது அவசியமாகும். தத்தெடுத்தவரே அப்பிள்ளைகளை திருமணம் முடித்துக் கொள்வதும் (ஹலால்) ஆகுமானதாகும். தத்துப்பிள்ளை தத்தெடுத்தவருக்கோ, தத்தெடுத்தவர் தத்துப்பிள்ளைக்கோ ஒருவருக்கொருவர் வாரிசாக முடியாது.                நூல்:- ஆப்கே மசாயில் 5/59

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களிடம் "உனது சொத்திலிருந்து மூன்றில் ஒரு பாக சொத்தை பிற நற்காரியங்களுக்கு செலவு செய்ய நீ வசிய்யத் எனும் இறுதி விருப்பம் தெரிவிக்கலாம்" என்று கூறினார்கள்.                                                                                                                  நூல்:- முஸ்லிம்-3349

சட்ட ரீதியாக தத்துப்பிள்ளைக்கு சொத்து உரிமை இல்லாததால் வளர்த்தவர் அந்த தத்துப்பிள்ளைக்கு வசிய்யத் எனும் இறுதி விருப்பம் என்ற அடிப்படையில் தனது சொத்திலிருந்து மூன்றில் ஒரு பாகத்தை மட்டும் எழுதி வைக்கலாம். அதற்கு மார்க்கம் அனுமதிக்கிறது.

தத்துப்பிள்ளைக்கும், பெற்றோருக்கும் இடையே மரபு ரீதியாக உறவு (ஜெனடிக் ரிலேஷன்ஷிப்) இருக்க முடியாது என்பதை அறிவியல் ஆய்வு உறுதிப்படுத்துகிறது.

பால்குடி உறவுமுறை

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் "இன்னார் உயிருடன் இருந்தால் அவர் என்னைத் திரையின்றி சந்தித்திருக்க முடியும் தானே!" என்று என்னுடைய பால்குடி தந்தையின் சகோதரர் குறித்து வினவினேன்.

அதற்கு அண்ணலார் ( نَعَم اَلرَّضَاعَةُ تُحَرِّمُ مَا تُحَرِّمُ الوِلاَدَةُ ) "ஆம்! (சந்திக்கலாம்) பிறப்பு (இரத்த உறவு) எந்த உறவுகளையெல்லாம் (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய உறவுகளாக்குமோ அந்த உறவுகளையெல்லாம் பால்குடியும் நெருங்கிய உறவுகளாக்கி விடும்" என்று கூறினார்கள்.                 நூல்:- புகாரீ-2646, திர்மிதீ-1067

பிறப்பின் மூலம் யார் யார் (மஹ்ரம்) மணமுடிக்க தகாதவர்களாக ஆவார்களோ, அந்த உறவு முறையினர் எல்லோரும் பால்குடி மூலமும் மணமுடிக்கத் தகாதவர்களாக ஆவார்கள்.

ஏனெனில் பாலூட்டிய செவிலித்தாய், பால் அருந்திய குழந்தைக்கு தாய் ஆவாள். அவளுடைய கணவன் இக்குழந்தைக்கு தந்தை ஆவான். (ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்து அந்த குழந்தைக்காக பால் சுரந்ததோ அந்தக் கணவனே பால் சுரக்கக் காரணம் என்பதால் இக்குழந்தைக்கு இவன் தந்தை ஆவான்) அவளுடைய பிள்ளைகள் இக்குழந்தைக்கு சகோதர, சகோதரிகள் ஆவர். இவ்வாறு இரத்த உறவு போல் பால்குடி உறவும் அமையும்

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். பால்குடி மறப்பதற்குமுன், பசியை அமர்த்தும் வகையில் (செவிலித்தாய்) மடியில் பால் அருந்தினால்தான் மணமுடிக்கத் தகாத பால்குடி உறவு ஏற்படும். அறிவிப்பாளர்:- உம்மு சல்மா (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-1072

இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைப் பருவத்தில் பால் அருந்தினால் மட்டுமே, தாய்-பிள்ளை உறவு ஏற்படும். இதற்கு திருக்குர்ஆனின் (2:233) வசனம் சான்றாகும் என அறிஞர்கள் கூறுகின்றனர். நூல்:- அல்மின்ஹாஜ், துஹ்ஃபத்துல் அஹ்வதீ

ஓரிரு முறை பால் அருந்துவதால் பால்குடி உறவு ஏற்பட்டுவிடாது. குறைந்தபட்சம் ஐந்து முறையாவது பால் அருந்தினால்தான் தாய்-பிள்ளை உறவு ஏற்படும் என்கிறனர் அறிஞர்கள்.                நூல்:- அல்மின்ஹாஜ்

எனவே பால்குடி பருவத்திலேயே அதாவது இரண்டு வயத்திற்குள்ளாகவே குழந்தையைத் தத்தெடுத்து, தத்தெடுக்கும் பெண் அதற்கு தன் பாலை புகட்டி வளர்ப்பது சிறந்ததாகும். ஏனெனில் அப்போது அக்குழந்தை அப்பெண்ணுக்கு பால்குடிப் பிள்ளை என்ற அடிப்படையில் (மஹ்ரமாக) மணமுடிக்கத்தகாத உறவாக ஆகிவிடும்.

இந்நிலையில் அந்த பிள்ளை பருவ வயது வந்த பிறகு அவர்களுக்கிடையே பர்தா (முகத்தை மறைதல்) அனுசரிக்க வேண்டியதில்லை. இவர்கள் ஒரே வீட்டில் வசிப்பதில் குற்றமில்லை. எனினும் பால்குடிப்பின் காரணமாக மஹ்ரம் என்ற பந்தம் ஏற்பட்டாலும் ஒருவருக்கொருவர் வாரிசாக முடியாது என்பதே மார்க்கச் சட்டமாகும்.

விஞ்ஞான வளர்ச்சி

துன்பத் துயரங்களைப் போக்கக்கூடிய குழந்தை செல்வம் கிடைக்கப் பெறாதவர்கள் உண்மையில் துற்பாக்கியவான்களாவர். இத்தகையோர் படும்பாடு, பிறரின் கேலி கிண்டலினால் மன உளைச்சல்களை எழுத்துக்களால் விவரிக்க இயலாது.

குழந்தை இல்லாததால் நம்முடைய வாழ்க்கையில், ஒளி மங்கிவிட்டதே என்று ஏக்க மூச்சு விட்டவர்களுக்கு இன்று விஞ்ஞானம் ஒரு பிரகாசமான விஷயத்தை அறிமுகப்படுத்தி, செய்தும் காட்டி அதில் வெற்றியும் கண்டுள்ளது.

அதுதான் "டெஸ்ட் ட்யூப் பேபி" சோதனைக் குழாய் மூலம் குழந்தைப் பிறக்கச் செய்வது. வாரிசு இல்லாதவர்களுக்கு வாரிசு பிறப்பது வரவேற்க வேண்டிய செயலே! ஆனால் அது மார்க்கம் அனுமதித்த முறையில் இருக்க வேண்டும் என்பது கவனிக்கத்தக்கது.

நவீனப் பிரச்சனைகளும், இஸ்லாம் கூறும் தீர்வுகளும் என்ற நூலில் சோதனைக் குழாய் குழந்தை எனும் தலைப்பில் பின்வருமாறு விவரிக்கப்பட்டுள்ளது.

ஆணின் விந்திலுள்ள ஒரு உயிரணுவையும் பெண்ணின் கருவறையிலுள்ள சினை முட்டைகளில் ஒன்றையும் எடுத்து இரண்டையும் இணைத்து, சோதனைக் குழாயில் (இன்கு பேட்டரியில்) வைக்கப்படும். அது குறிப்பிட்ட வளர்ச்சி அடைந்த பிறகு (72 நாட்களுக்கு பிறகு) அதை வெளியே எடுத்து பெண்ணின் கருவறையில் செலுத்தப்படும்.

செலுத்திய 15 நாட்களில் குழந்தை ஊன்றி விடும். அதன் பிறகு ஒரு வாரம் கழித்து தான் (Scan) ஸ்கேனிங்கில் குழந்தை தெரியும். இதில் கொஞ்சம் ஏமாந்தால்கூட முயற்சி தோல்வி அடையும். இராண்டவது வாரம் குழந்தைக்கு இதயத் துடிப்பு ஏற்படும். அப்படி ஏற்பட்ட பிறகு எந்த சிக்கலும் அதிகமில்லை. குழந்தை பூரண வளர்ச்சி அடைந்த பிறகு வழக்கத்தைப் போல் அந்த பெண் குழந்தையைப் பெற்றெடுப்பாள். இதுவே சோதனைக் குழாய் குழந்தை.

Dr. ராபர்ட் எட்வர்ட் லூயிஸ் பிரவுன் என்பவர் தான் முதன்முதலில் சோதனைக் குழாய் குழந்தையைக் கண்டுபிடித்தார். உலகின் முதன்முதலில் 25:7:1978 ம் தேதி இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரில் சோதனைக் குழாய் மூலம் ஒரு குழந்தை பிறந்தது. அக்குழந்தையின் பெயர் லூயிஸ் பிரவுன் என்பதாகும்.

இங்கிலாந்தில் மட்டும் ஆண்டுக்கு சராசரியாக 1 இலசட்த்து 80 ஆயிரம் சோதனைக் குழாய் குழந்தைகள் பிறப்பதாகவும், உலகில் இன்று ஏறக்குறைய 50 இலட்சம் சோதனைக் குழாய் மூலம் பிறந்த குழந்தைகள் நடமாடிக் கொண்டிருக்கின்றன என்கிறது ஒரு புள்ளி விவரம்.

அதன் வகைகள்

சோதனைக் குழாய் மூலம் குழந்தைப் பெற்றுக் கொள்வது ஆறு வகைப்படும். அதற்கு ஆறு வகையான ஆங்கில குறியீடுகள் கொடுக்கப்படுகிறது.

1) A1 + B1 + C1 –Wrong                                                                                                                                                         

கணவனால்லாத அந்நிய ஆணின் உயிரணு, அந்நிய பெண்ணின் சினை முட்டை. இவை இரண்டும் சேர்க்கப்பட்டு வைக்கப்படும் கருவறையோ வேறு பெண்ணுக்குரியது. ஆக இம்முறையில் ஒருவர் கூட மற்றவருக்கு சம்பந்தமில்லை. அந்நியரின் குழந்தையை எந்த பெண்ணும் சுமப்பது கூடாது. இது தடுக்கப்பட்ட வழிமுறையாகும்.

2) A 1 + B1 + C - Wrong

அந்நிய ஆணின் உயிரணு, அந்நிய பெண்ணின் சினை முட்டை, சுமப்பது மனைவி. அந்நிய ஆண், பெண்ணுக்கு உண்டான குழந்தையை மனைவி சுமக்கிறாள். இதுவும் கூடாது.

3) A1 + B + C - Wrong

அந்நிய ஆணின் உயிரணு, மனைவியின் சினை முட்டை. அதை மனைவியின் கருவறை. இந்நிலையிலும் கூட அந்நிய ஆணின் குழந்தையை சுமக்கிறாள். இதுவும் கூடாது.

4) A + B 1 + C - Wrong

கணவனின் உயிரணு, அந்நிய பெண்ணின் சினை முட்டை, மனைவியின் கருவறை. இவள் அவளின் கணவனுக்கும் , அந்நிய பெண்ணுக்கும் உண்டான குழந்தையை சுமக்கிறாள். இதுவும் கூடாது.

5) A + B + C1 - Wrong

கணவனின் உயிரணு, மனைவியின் கரு முட்டை, ஆனால் சுமப்பதோ அந்நியப் பெண். தம்முடைய குழந்தையை அந்நியப் பெண் சுமக்கிறாள். இதுவும் கூடாது.

6)A + B + C - Corret

கணவனின் உயிரணு, மனைவியின் சினை முட்டை, அதே மனைவியின் கருவறை. இந்த ஒரே ஒரு முறை தான் மார்க்கம் அனுமதிக்கிறது (ஹலால்).

இதற்கும் சில நிபந்தனைகளை பேண வேண்டியது அவசியமாகும்.

1)  கணவனின் உயிரணும், மனைவியின் சினை முட்டையும் திருமணத்திற்கு பிறகு எடுக்கப்பட்டதாக இருக்கவேண்டும்.                                                                                           

2) கருவறையில் செலுத்தப்படும் போது கணவன் உயிருடன் இருக்க வேண்டும்.                                                                        

3)  தம்பதியருக்கு மத்தியில் தலாக்-குலா போன்ற மணவிலக்கு நிகழாமல் இருக்க வேண்டும்.                                                     

4) இவர்களுக்கு ஒரு குழந்தை கூட இருக்கக்கூடாது.                                                       

5) மருத்துவர்கள் இதை விட்டால் வேறு வழியில்லை என கூறியிருக்க வேண்டும்.                                                                        

6) மருத்துவர்கள் நம்பகமானவர்களாக இருக்க வேண்டும்.                                                                                                 

7) பெண் மருத்துவராக இருக்க வேண்டும்.                                                                                                    

 ஆகவே இந்த நிபந்தனைகளுடன் கூடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

மிகுந்த பொருள்செலவில் செய்யப்படுகின்ற இந்த பணி தோல்வி அடையும்போது மருத்துவர்களில் சிலர் வேறு ஆணின் உயிரணு அல்லது வேறு பெண்ணின் சினை முட்டையை நமது மனைவியின் கருவறையில் செலுத்திவிட நிறைய வாய்ப்புகள் உண்டு.

தாங்கள் மிகச் சிறந்த மருந்துவர்கள் தான் என்பதை நிரூப்பிக்கவும் தங்கள் மருத்துவமனையின் பெயரை உயர்த்தவும் சில மருத்துவமனைகள் இப்படியும் செய்கின்றன.

சோதனைக் குழாய் மூலம் உருவாக்கப்பட்ட பல இலட்சம் குழந்தைகளுக்கு உண்மையான தாய், தந்தை யார்? பதிலில்லாத கேள்வி தான் மிஞ்சியிருக்கிறது. எனவே இஸ்லாமியர்கள் டெஸ்ட் ட்யூப் பேபி முறையை பயன்படுத்தாமல் இருப்பதே சாலச்சிறந்தது.

அவன் நிர்ணயித்தது

தலைப்பில் காணும் திருவசனம் குழந்தை விஷயத்தில் நான்கு வகைகளாக கூறுகிறது.

1) அல்லாஹ் சிலருக்கு பெண் குழந்தையை மட்டும் சந்ததியாக தருகிறான். நபி லூத் (அலை) அவர்கள், நபி ஷுஐப் (அலை) அவர்கள் போன்றோருக்கு பெண் குழந்தைகளை மட்டும் சந்ததியாகக் கொடுத்திருந்தான்.                                                                

2) அல்லாஹ் சிலருக்கு ஆண் குழந்தையை மட்டும் சந்ததியாக தருகிறான். நபி இப்ராஹீம் (அலை) அவர்கள், நபி யஃகூப் (அலை) அவர்கள் போன்றோருக்கு அல்லாஹ் ஆண் குழந்தைகளை மட்டும் சந்ததியாகக் கொடுத்திருந்தான்.                                                                 

3) அல்லாஹ் சிலருக்கு ஆண், பெண் என இரு விதமாக குழந்தைகளை சந்ததியாக தருகிறான். அகிலம் போற்றும் நமது தலைவர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு நான்கு பெண் குழந்தைகள், மூன்று ஆண் குழந்தைகள் என கலந்து கொடுத்திருந்தான்.                                                                                                                                      

4) அல்லாஹ் மேலும் சிலரை அறவே குழந்தைப் பெற்றுக் கொள்ள முடியாத மலடுகளாக ஆக்கி விடுகிறான். அல்லாஹ் எவர்களை மலடுகள் என்று முடிவெடுத்து விட்டானோ அவர்கள் எவ்விதமான உயர்தரமான மருத்துவ முறைகளை மேற்கொண்டாலும், எத்தனை மாதங்கள், வருடங்கள் காத்திருந்தாலும் சரியே பலன் கிட்டாது.

குழந்தைக்காக பல வகைகளில் முயற்சித்தும் தோல்வி கண்டவர்கள், அல்லாஹ் சிலரை மலடுகளாகவே படைத்திருக்கிறான் என்ற திருமறையின் கூற்றை ஏற்றுக்கொண்டு பொறுமையோடு இருக்க முயற்சிக்க வேண்டும்.

அல்லாஹ் நமக்கு நல்லொழுக்கமுள்ள பிள்ளைகளையே  வாரிசாக தருவானாக! மேலும் நாம் குழந்தைகள் விஷயத்தில் இஸ்லாம் கூறும் சட்டங்களை அறிந்து அதற்கு கட்டுப்பட்டு வாழ்வதற்கு அல்லாஹ் அருள்பாலிப்பானாக! ஆமீன்!

மௌலவி, மு.முஹம்மது ஹைதர் அலி இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை.

 

No comments:

Post a Comment

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...