தாயில்லா பிள்ளைகளாய்!
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا
الرَّسُولَ وَأُولِي الْأَمْرِ مِنْكُمْ
இறைநம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படியுங்கள். அவனுடைய தூதருக்கும் உங்களில் அதிகாரம் உடையவர்களுக்கும் கீழ்படியுங்கள். திருக்குர்ஆன்:- 4:59
தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை என்ற ஒற்றை தலைமையின் மூலம் நடைபெறுகின்ற கண்டன உரைகள், பேரணி, ஆர்ப்பாட்டம் போன்றவை அரசியல்வாதிகள், பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கின்றன என்பது பேருண்மையே!
அதாவது ஒற்றை தலைமையின் கீழ் அந்தந்த சமூகத்தினர் ஒன்றிணைந்தால் வெற்றி பெறுவார்கள் என்று தெளிவாகிறது. எனவே, இந்த இக்கட்டான காலகட்டத்தில் முஸ்லிம் சமூகம் இது குறித்து சிந்திக்க வேண்டும்.
ஒவ்வொரு சமூகத்திலும் ஒரு தலைமை உண்டு. ஆனால் உலகளவில் இஸ்லாமிய சமூகத்திற்கு மட்டும் தற்போது சக்தி வாய்ந்த ஒரு தலைமை இல்லாமல் காலங்கள் கடந்து கொண்டிருக்கிறன. தாயில்லா பிள்ளைகளாய் தடுமாறிக் கொண்டிருக்கும் இந்த இஸ்லாமிய பெரும் சமூகத்தை கண்டவனெல்லாம் ஓட ஓட விரட்டுகிறான். அவன் செய்யும் தவறை தட்டி கேட்க ஆளில்லாமல் தடுமாறி கொண்டிருக்கிறோம்.
அரசு ரீதியாக முஸ்லிம்களுக்கு வரும் நெருக்கடியை
எதிர்கொள்ள சக்தி வாய்ந்த தலைமை வேண்டும். முஸ்லிம்களுக்கு மாநில அளவில் ஒரு தலைமையும், தேசிய அளவில் ஒரு தலைமையும் வேண்டும். ஆனால் அதைப்பற்றி நாம் சரியாக சிந்தித்து
செயல்பட்டுள்ளோமா? என்பது கேள்விக்குறியே!
முதலில் கிராமம், நகரம், பெருநகரம் என ஒவ்வொரு ஊரின் பள்ளிவாசலில் இருந்து சக்தி வாய்ந்த
ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும். பிறகு, ஊர் அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் சக்தி வாய்ந்த ஒருவரை மாவட்ட அளவில் தலைவராக தேர்ந்தெடுக்க
வேண்டும். பிறகு, மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில்
சக்தி வாய்ந்த ஒருவரை மாநில அளவில் தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டும். மாநில அளவில் ஏற்படும்
நம்முடைய பிரச்சினைகளுக்கு ஒற்றுமையை கடைபிடித்து இவர் மூலமாகவே தீர்வு காண வேண்டும்.
பிறகு, மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில்
சக்தி வாய்ந்த ஒருவரை தேசிய அளவில் தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டும். தேசிய அளவில் ஏற்படும்
நம்முடைய பிரச்சினைகளுக்கு ஒற்றுமையை கடைபிடித்து இவர் மூலமாகவே தீர்வு காண வேண்டும்.
நாம், கொள்கை ரீதியாக கட்சி ரீதியாக ஒற்றுமையின்றி சிதறி இருப்பதால் தான், நாம் கவனிக்கப்படாமல்
இருக்கிறோம் என்பதையும் நசுக்கப்படுகிறோம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இவ்வாறு மாநில அளவில் உள்ள கிராமம், நகரம், பெருநகரம் என அனைத்து ஊர் பள்ளிவாசல்களையும்
ஒன்றிணைத்து பள்ளிவாசல் கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும். எந்த பிரச்சினை என்றாலும்
பள்ளிவாசலின் நிர்வாகிகளை அணுகும் விதமாக ஒற்றுமையைப் பலப்படுத்த வேண்டும்.
மாநிலத்திலும் மத்தியிலும் நாம் தேர்ந்தெடுக்கும் தலைவர், மார்க்க ஞானம் பெற்றவராக நடுநிலை சிந்தனையாளராக ஓர் ஆலிமாக இருப்பது அவசியம்.
நீயா? நானா?
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் மரண நோயில் பீடிக்கப்பட்டிருந்த
இறுதி நேரத்தில், (வயதில் சிறியவரான) உஸாமா
பின் ஸைத் (ரலி) அவர்களை ஒரு படைக்கு தளபதியாக (தலைவராக) நியமித்தார்கள். அவரது தலைமையின்
கீழ் உமர் (ரலி), அபூஉபைதா (ரலி), சஅத் பின் அபீவக்காஸ்
(ரலி), அபூ அஃவர் (ரலி), சயீத் பின் ஸைத்
(ரலி), கதாத்தா பின் நுஃமான் (ரலி), சலமா பின் அஸ்லம் (ரலி) போன்ற (வயதிலும், அனுபவத்திலும்) மூத்த நபித்தோழர்கள் (சாதாரண படைவீரர்களாக) கலந்து
கொண்டார்கள். நூல்:- ஹயாத்துஸ் ஸஹாபா பாகம்-1, பக்கம்-539
தலைமை வகிப்பவர் வயதில் சிறியவராகவும் அனுபவம் குறைந்தவராகவும் இருந்தாலும் அவருக்கு கட்டுப்படுவதே ஒற்றுமையையும் வெற்றியையும் ஈட்டித்தரும்.
நீ பெரியவனா? நான் பெரியவனா? என்ற மனநிலை ஏற்படாதவாறு நம்மை தற்காத்துக்கொள்ள
வேண்டும். நம்மிடம் விட்டு கொடுக்கும் உயர்ந்த மனப்பான்மை உருவாகிவிட்டால் நாம்
வெற்றிவாகை சூடலாம்.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِذَا خَرَجَ ثَلاَثَةٌ فِي سَفَرٍ فَلْيُؤَمِّرُوا أَحَدَهُمْ ) மூன்று பேர் பயணம் செய்தால் அவர்களில் ஒருவரை தலைவராக நியமித்துக்கொள்ளுங்கள். அறிவிப்பாளர்:- அபூஸஈத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்-2608
மூன்று பேராக இருந்தாலும் அதில் ஒருவர் தலைவராக
இருக்க வேண்டும் என்கிறது நபிமொழி. இந்தியாவில் சுமார் 25 கோடி முஸ்லிம்கள் உள்ளோம்.
ஆனால், நமக்கு ஓர் சக்தி வாய்ந்த தலைவர் உண்டா? யோசிக்க வேண்டுமே!
அவருக்கு அடுத்து…
அவர்கள் எத்தகையோரென்றால் நாம் அவர்களுக்கு பூமியில்
(காரியங்களில் நிர்வகிக்கும்) ஆற்றலை ஏற்படுத்திக் கொடுத்தால், அவர்கள் தொழுகையை முறையாக நிறைவேற்றுவார்கள். ஸகாத்தையும்
கொடுத்து வருவார்கள். நன்மை செய்யுமாறு ஏவுவார்கள்; தீமையிலிருந்து தடுப்பார்கள்.
(எல்லாக்) காரியங்களின் முடிவும் அல்லாஹ்வுக்கே உரியது. திருக்குர்ஆன்:- 22:41
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். பனூ இஸ்ராயீல்
மக்களை நிர்வகிப்பவர்களாக இறைத்தூதர்கள் இருந்தனர். ஓர் இறைத்தூதர் இறக்கும்போது மற்றோர்
இறைத்தூதர் அவருக்குப் பதிலாக வருவார். ஆனால், எனக்குப் பின் எந்த இறைத்தூதரும் (வரப்போவது) இல்லை.
ஆயினும் எனக்குப் பின் கலீஃபாக்கள் (பிரதிநிதிகள்) பலர் தோன்றுவார்கள்.
அப்போது நபித்தோழர்கள், "நாயகமே! (அவர்கள் வரும்போது) நாங்கள் என்ன செய்ய வேண்டுமென தாங்கள் உத்தரவிடுகிறீர்கள்?" என்று வினவினர். அதற்கு அண்ணலார், "அவர்களில் முதலாவதாக வருபவரிடம் உறுதிப் பிரமாணம் (அளிக்க வேண்டிய உங்கள் கடமையை) நிறைவேற்றுங்கள். பிறகு அடுத்து வருபவரிடம் (அந்தக் கடமையை நிறைவேற்றுங்கள்.) அவர்களுக்கு அவர்களின் உரிமையை கொடுத்துவிடுங்கள். ஏனெனில், அவர்கள் நிர்வகித்தவை பற்றி அவர்களிடமே அல்லாஹ் கேட்கவிருக்கிறான்" என்று பதிலளித்தார்கள். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-3757
கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களின் புனித உடலை அடக்கம் செய்வதற்கு முன்னதாக முஸ்லிம்கள் தங்களுடைய அடுத்த தலைவரை நியமனம் செய்வதில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரும் ஒருமனதாக அபூபக்ர் (ரலி) அவர்களை அடுத்த தலைவராக நியமனம் செய்தனர். அதன் பின்னர் செவ்வாய்க்கிழமையே அண்ணலாரின் புனித உடல் அடக்கம் செய்யப்பட்டது. நூல்:- ஷமாயில் திர்மிதீ-395 , அர்ரஹீகுல் மக்தூம்
மற்றொரு அறிவிப்பில் அண்ணலார் புதன்கிழமை இரவு அடக்கம்
செய்யப்பட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. நூல்:- ஷமாயில் திர்மிதீ-394
மரணப்படுக்கையில் இருந்த உலக முஸ்லிம்களின் தலைவரான உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள், தன்னால் மீண்டு வர முடியாது என்பதை அறிந்து, தனக்குப் பின்னர் உலக முஸ்லிம்களின் தலைவராக (கலீஃபாவாக) ஒருவரை தேர்வு செய்ய நபித்தோழர்களை அழைத்து, (தலைமை பொறுப்புக்கு மிகவும் தகுதியான) “உஸ்மான் (ரலி), அலீ (ரலி), தல்ஹா பின் உபைதுல்லாஹ் (ரலி), ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி), சஅத் பின் அபீவக்காஸ் (ரலி), மற்றும் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) ஆகிய ஆறு பேர்களை குறிப்பிட்டு இவர்களுள் ஒருவரையே அடுத்த கலீஃபாவாக தேர்ந்தெடுக்க வேண்டும்” என்றார்கள். நூல்:- தாரீகுத் தபரீ-4/228, அல்ஃபாரூக்
முஸ்லிம் சமுதாயத்தின் கடந்த கால வரலாறு பிரகாசம்
நிறைந்ததாகவே காணப்பட்டது. ஏனெனில் முஸ்லிம்களின் தலைவர் ஒருவர் இறந்தவுடன் மற்றொருவர்
உடனடியாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு விடுவார். அதனால் முஸ்லிம்கள் செல்லும் இடமெல்லாம்
வரவேற்பு, எதிரிகளின் அச்சமற்ற நிலை, கல்வி வளர்ச்சி, விஞ்ஞான வளர்ச்சி என அனைத்து துறையிலும் முன்னேற்றமடைந்து
உச்ச நிலையில் இருந்தனர்.
கட்டுப்பட
வேண்டும்
கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( السَّمْعُ وَالطَّاعَةُ حَقٌّ عَلَي الْمَرْءِ الْمُسْلِمِ ) தலைவரின் சொல் கேட்டு வழிப்பட்டு நடப்பது முஸ்லிமின் மீது கடமையாகும். அறிவிப்பாளர்:- உமர் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்னது அஹ்மது
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (وَمَنْ أَطَاعَ اْلإِمَامَ فَقَدْ أَطَاعَنِي، وَمَنْ عَصَي اْلإِمَامَ فَقَدْ عَصَانِي ) (நல்ல ஆட்சித்) தலைவருக்குக் கீழ்ப்படிந்தவர் எனக்கு கீழ்ப்படிந்தவராவார். (நல்ல ஆட்சித்) தலைவருக்கு மாறு செய்தவர் எனக்கு மாறு செய்தவராவார். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ- 2957, முஸ்லிம்-3745
கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நல்ல) தலைவரின் சொல்லைச் செவியுற்றுக் கீழ்படிந்து நடப்பாயாக! அவர் உடல் உறுப்புக்கள் துண்டிக்கப்பட்ட அபிசீனிய (கருப்பு நிற) அடிமையாக இருந்தாலும் சரியே! அறிவிப்பாளர்:- அபூதர் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-3749
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَن
اَکرَمَ سُلطَانَ اللّٰهِ اَکرَمَهُ اللّٰهُ وَمَن اَهَانَ سُلطَانَ اللّٰهِ اَهَانَهُ
اللّٰهُ ) எவர் நல்ல
தலைவரை கண்ணியப்படுத்துவாரோ, அவரை அல்லாஹ் கண்ணியப்படுத்துவான்.
எவர் நல்ல தலைவரை இழிவுபடுத்துவாரோ அவரை, அல்லாஹ் இழிவுபடுத்துவான்.
அறிவிப்பாளர்:- ஸியாத் பின் குஸைப் அல்அதவிய்யா
(ரஹ்) அவர்கள் நூல்:- முஸ்னது அஹ்மது, தப்ரானீ, பைஹகீ, ஹயாத்துஸ் ஸஹாபா பாகம்-2, பக்கம்-84
மூசா பின் உக்பா (ரஹ்) அவர்கள் கூறியதாவது. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் தலைமையில் தாத்துஸ் ஸலாஸில் போருக்கு அனுப்பினார்கள். அங்கு எதிரிகளின் எண்ணிக்கை அதிகமிருந்ததைக் கண்டு அம்ர் (ரலி) அவர்கள் அஞ்சிய போது அண்ணலாரிடம் உதவிக்கோரி (ஆட்களை) அனுப்பினார். அண்ணலார் ஆரம்ப கால முஹாஜிர் - புலம்பெயர்ந்தோரைக்கொண்ட ஒரு படையை (துணைக்கு) அனுப்பினார்கள். முஹாஜிர் படைப் பிரிவில் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர். அண்ணலார், அப்படைக்கு அபூ உபைதா (ரலி) அவர்களை தலைவராக்கினார்கள்.
துணைப் படையினர் அம்ர் (ரலி) அவர்களிடம் வந்ததும்
அம்ர் (ரலி) அவர்கள், ( أَنَا أَمِيرُكُمْ، وَأَنَا
أَرْسَلْتُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَسْتَمِدُّهُ
بِكُمْ ) "நான் தான் உங்களுக்கும் தலைவர். நான்தான் அண்ணலாரிடம்
உங்களை அனுப்புமாறு உதவிகோரி அனுப்பினேன்" என்று கூறினார். அதற்கு முஹாஜிர்கள்,
( بَلْ أَنْتَ أَمِيرُ أَصْحَابِكَ،
وَأَبُو عُبَيْدَةَ أَمِيرُ الْمُهَاجِرِينَ ) "இல்லை; நீங்கள் உங்கள் தோழர்களுக்கு தலைவர் ஆவீர். அபூஉபைதா (ரலி) அவர்கள்தான் முஹாஜிர்களின்
தலைவர்" என்றனர். அம்ர் (ரலி) அவர்கள், (அதனை மறுத்து) ( إِنَّمَا أَنْتُمْ مَدَدٌ أُمْدِدْتُهُ ) "நீங்கள் நான் துணைக்குக் கேட்ட உதவிப் படையினரே"
என்றார்.
அழகான குணமும் மென்மையான சுபாவமும் கொண்ட அபூஉபைதா (ரலி) அவர்கள் இதைப் பார்த்தபோது அவர்கள் ( تَعَلَّمْ يَا عَمْرُو أَنَّ
آخِرَ مَا عَهِدَ إِلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ
قَالَ: «إِذَا قَدِمْتَ عَلَى صَاحِبِكَ فَتَطَاوَعَا» وَإِنَّكَ إِنْ عَصَيْتَنِي
لَأُطِيعَنَّكَ ) "அம்ர் அவர்களே!
அண்ணலார் எனக்கு ஒப்பந்தம் செய்து தந்ததில் இறுதியானது, நீர் உம் தோழரிடம் செல்லும் போது ஒருவருக்கொருவர்
கீழ்ப்படிந்து செயல்படுங்கள் என்று சொன்னதுதான். நீர் எனக்கு மாறு செய்தாலும் நான்
உனக்குக் கீழ்படிந்து செயல்படுவேன் என்பதைத் தெரிந்து கொள்க!" என்று கூறினார்கள்.
எனவே அபூ உபைதா (ரலி) அவர்கள் அம்ர் (ரலி) அவர்களின் தலைமையை ஏற்றுக் கொண்டார். நூல்:- தலாயிலுந் நுபுவ்வா லில் பைஹகீ, அல்பிதாயா வந்நிஹாயா
ஹிஜ்ரி-17 (கி.பி.637) ஆண்டில் முஸ்லிம்களின் தலைவர்
உமர் (ரலி) அவர்கள் சில காரணங்களுக்காக காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்களை தளபதி பொறுப்பிலிருந்து
நீக்கிவிட்டு அபூஉபைதா (ரலி) அவர்களை தளபதியாக நியமித்தார்கள். நூல்:- அல்ஃபாரூக்
காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்கள் போர்த் தந்திரங்களை
மிகவும் அறிந்தவர். அண்ணல் நபி (ஸல்) அவர்களிடமிருந்து ஸைஃபுல்லாஹ் (அல்லாஹ்வின் வாள்)
என்ற உயரிய விருதைப் பெற்றவர்கள். ஆனால், அபூஉபைதா (ரலி) அவர்கள் போர் விஷயத்தில் காலித்
(ரலி) அவர்களுக்கு ஈடானவர் அல்லர் என்பது குறிப்பிடத்தக்கது.
காலித் (ரலி) அவர்கள் தளபதி பொறுப்பேற்று வெற்றி
கண்ட யுத்தங்கள் ஏராளம். யுத்தங்களில் தளபதி பொறுப்பை ஏற்றுக் கொண்டதால் அவர்கள் எப்போதும்
இறுமாப்பு கொண்டதில்லை. தலைமைத்துவத் தகுதியுடையவர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், பிறரை எவ்வாறு வழிநடத்த வேண்டும், சக தோழர்களுடன் நல்லுறவு
கொள்வது எவ்விதம் என்பதை நமக்கு உணர்த்தி காட்டியுள்ளார்கள்.
காலித் (ரலி) அவர்கள் தன்னுடைய தலைமைக்கு கட்டுப்பட்டவராக
தளபதி பொறுப்பை ராஜினாமா செய்தவாறு எந்த முணுமுணுப்பும் காட்டாமல் அடுத்தவருக்கு வழிவிட்டதோடு
சாதாரண படைவீரராகவே தன் இறுதிக்காலம் வரையும் செயலாற்றி வந்தார்கள். இஸ்லாமும் அதன்
கொள்கைகளும் இந்த பூமியில் நிலைபெற வேண்டும் என்பதற்காகவே தன்னுடைய உடலாலும் பொருளாலும்
உயிராலும் சேவை செய்வது ஒன்றே குறிக்கோளாக கொண்ட அந்த மாமனிதர், அதற்காக தளபதிப் பொறுப்பிலிருந்துதான் செயல்பட முடியும் என்றில்லாமல் சாதாரண படை
வீரராகவும் இருந்து செயல்பட முடியும் என்பதை நிரூபித்துக் காட்டினார்கள். மனத்தூய்மையுடன்
தலைமைக்கு கட்டுப்பட வேண்டும் என்பதற்கான பாடமாக அந்த உத்தமரின் வரலாறு அமைந்துள்ளது.
ஒரே குழுவாக செயல்பட வேண்டும்
நீங்கள் அனைவரும் (ஒன்று சேர்ந்து) அல்லாஹ்வின்
கயிற்றைப் பற்றிக் கொள்ளுங்கள்; பிரிந்து விடாதீர்கள். திருக்குர்ஆன்:- 3:103
இஸ்லாமிய ஆரம்ப காலத்தில் அண்ணல் நபி (ஸல்) அவர்களின்
அனுமதியுடன், மக்காவிலிருந்து சில நபித்தோழர்கள் இஸ்லாமிய முறைப்படி வாழ்வதற்காக அருகில்
இருக்கும் அபிசீனியா நாட்டிற்கு புலம்பெயர்ந்து சென்றனர். இதை அறிந்த மக்கா இணைவைப்பாளர்கள்
அந்நாட்டு மன்னர் நஜ்ஜாஷி அவர்களிடம் வந்து, "உங்கள் நாட்டுக்கு வந்திருக்கும் இவர்கள் (அதாவது
இந்த முஸ்லிம்கள்) சமுதாயத்தை பிளவுப்படுத்துபவர்கள். மேலும் உங்கள் கடவுள் கொள்கைக்கும்
எதிரானவர்கள்" என்று புகார் கூறினர்.
எனவே, மன்னர் நஜ்ஜாஷி அதைப்பற்றி விசாரிக்க, அந்த முஸ்லிம்களுக்கு அழைப்பு விடுத்தார். அதற்காக முஸ்லிம்கள் ஒன்று கூடி விவாதித்தனர். அப்போது ஜஅஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்கள், ( أَنَا خَطِيبُكُمُ الْيَوْمَ، فَاتَّبَعُوهُ ) "இன்றைய தினம் மன்னரிடம் உங்களுக்காக நான் பேசுவேன். என்னையே நீங்கள் பின்பற்றுங்கள்" என்று கூறிவிட்டு மன்னரிடம் சென்று இதைப்பற்றி தெளிவாகப் பேசினார்கள். அதன்பிறகு மன்னர் நஜ்ஜாஷி, ( اِنْزِلُوا حَيْثُ شِئْتُمْ ) "நீங்கள் (இங்கு) விரும்பிய இடத்தில் (நிம்மதியுடன்) தங்கிக்கொள்ளுங்கள்" என்று அனுமதி அளித்தார். நூல்:- அல்பிதாயா வந்நிஹாயா
எந்த பிரச்சினையாக இருந்தாலும் நபித்தோழர்கள் தன்னிச்சையாக செயல்படாமல் ஒரு தலைமையின் கீழ் ஒன்றிணைந்து செயல்பட்டு வந்துள்ளனர் என்பதை இந்நிகழ்வு விளக்குகின்றது
சிறுபான்மை மக்களுக்கு எதிரான மசோதாவை நிறைவேற்ற
துடிக்கும் அநியாய அரசுக்கு எதிராக தனித்தனி குழுக்களாக, இயக்கங்களாக, கட்சிகளாக பிரிந்து
ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், கண்டக்குரல் எழுப்புதல் போன்றவற்றால் மட்டும் நமது
நோக்கம் நிறைவேறாது. இவை அனைத்தையும் ஓர் தலைமையின் கீழ் இருந்து செய்ய வேண்டும். அப்போது தான் அரசு நம்மை திரும்பிப்
பார்க்கும். நமது கோரிக்கையை பரிசீலனை செய்யும்.
அவர் ஒரு கேடயம்
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( وَإِنَّمَا الإِمَامُ جُنَّةٌ يُقَاتَلُ مِنْ وَرَائِهِ وَيُتَّقَى بِهِ ) (நல்ல) ஆட்சித் தலைவர் ஒரு கேடயமே ஆவார். அவருடன் போரிடப்படுகிறது. அவர் மூலம் பாதுகாப்புப் பெறப்படுகிறது. அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-2957, முஸ்லிம்-3756
இந்த நபிமொழி நல்ல ஆட்சித்தலைவரின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. அவர் ஒரு கேடயமாக, பாதுகாப்பு வளையமாக விளங்குகிறார். எதிரிகளிடமிருந்து நாட்டையும் நாட்டு மக்களையும் அவர் காப்பார். உள்நாட்டு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பார். மார்க்கத்தையும் கலாச்சாரத்தையும் பாதுகாப்பார்.
அன்றைய உலக முஸ்லிம்களின் தலைவராகிய கலீஃபா முஃதஸிம்பில்லாஹ் அவர்கள் காலத்தில் அன்றைய ரோமப் பேரரசில் ஒரு முஸ்லிம் பெண்மணி மீது தகாத முறையில் நடக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதனை அறிந்த கலீஃபா அவர்கள், இதற்கு பதிலடியாக ரோமப் பேரரசின் வலிமையான பகுதியாக இருந்த "அமூரியா" மீது பெரும் படையை அனுப்பி அதனை இஸ்லாமிய ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார்.
யூதர்கள் ஃபலஸ்தீனத்தில் ஒரு பகுதியை விலைக்கு வாங்கி அங்கே குடியமர்வதற்கு சதித்திட்டம் மேற்கொண்டிருந்தனர். அதன் முதற்கட்டமாக அன்றைய உலக முஸ்லிம்களின் தலைவராகிய கலீஃபா அப்துல் ஹமீத் (ரஹ்) அவர்களை சந்திக்க யூத பிரதிநிதிகள் துருக்கி இஸ்தான்புல் நகருக்கு சென்றார்கள். எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறோம். ஃபலஸ்தீனில் ஒரு சிறு நிலப்பரப்பையேனும் தாருங்கள் என்று விலை பேசினார்கள்.
இதற்கு கலீஃபா அப்துல் ஹமீத் (ரஹ்) அவர்கள் பதிலளிக்கையில்: ஃபலஸ்தீன் என்னுடைய சொத்தல்ல. முஸ்லிம் சமுதாயத்தின் சொத்தாகும். இந்த பூமிக்காக என் சமுதாயத்தினர் அந்த மண்ணில் இரத்தத்தால் பயிரிட்டிருக்கிறார்கள். என்னுடைய உடலில் ஒரு பகுதியை துண்டித்து உங்களுக்கு தருவது எனக்கு எளிதானதே. ஆனால் ஃபலஸ்தீனில் ஓர் அங்குலம் நிலத்தைக் கூட விட்டுத்தர மாட்டேன். அது என் வாழ்நாளில் நடக்காது. உங்களிடமிருக்கும் பணத்தை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். கிலாஃபா அரசு இல்லாமல் போனால் ஃபலஸ்தீன் எந்த செலவுமின்றி உங்களுக்கு இலவசமாக கிடைத்து விடலாம்! என்று கூறி யூதர்களை துரத்தியனுப்பினார்கள்.
கி.பி. 1890 – ஆம் ஆண்டு ஃபிரான்சின் தலைநகர் பாரிசில் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களைக் கேலி செய்யும் விதமாக ஒரு நகைச்சுவை நாடகம் நடந்துகொண்டிருந்தது.
உஸ்மானியப் பேரரசின் கலீஃபாவான சுல்தான் இரண்டாம் அப்துல் ஹமீது அவர்களுக்கு இது தெரிய வந்தது. உடனடியாக இந்த அருவருப்பான நாடகத்தை நிறுத்தவேண்டும் என்று எச்சரித்து ஃபிரஞ்சுத் தூதருக்கு சுல்தான் அவர்கள் கடுமையாக ஒரு கடிதம் எழுதியனுப்பினார்.
"நான் பால்கன்ஸ், ஈராக், சிரியா, மௌண்ட் லெபனான், ஹிஜாஸ், கவ்கஸஸ், அனடோலியா ஆகியவற்றின் சுல்தான் ஆவேன். எனது தலைநகரம் இஸ்தான்புல். நான்தான் கலீஃபா அப்துல் ஹமீது கான். இறைத்தூதரைக் கேலி செய்யும் நாடகத்தை நிறுத்தவில்லையெனில், உங்கள் தேசத்தை அழித்துவிடுவேன்” என்று அக்கடிதத்தில் சுல்தான் அப்துல் ஹமீது குறிப்பிட்டிருந்தார்.
கடிதத்தைக் கண்ட ஃபிரஞ்சு அரசு உடனடியாக நாடகத்தை நிறுத்தியது. அத்தோடு கலீஃபாவை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக இங்கிலாந்துக்கு அந்த நாடக நடிகர்களை நாடு கடத்தவும் செய்தது.
பிரெஞ்சுக் காலனியாக இருந்த காரைக்கால் அருகில் இருக்கும் புதுப்பட்டிணம் கிராமத்தில் ஒரு பிரச்சனை வந்தபோது அதை கண்டுகொள்ளாமல் இருந்தது பாண்டிச்சேரியில் இருந்த பிரெஞ்சு காலனியரசு. புதுப்பட்டிணம் பள்ளியின் நிர்வாகி அன்றைய உலக முஸ்லிம்களின் தலைவருக்கு (கலீஃபாவுக்கு) கடிதம் எழுத, பிரான்ஸ் தலைநகர் பாரீஸிருந்து பாண்டிச்சேரியில் இருந்த தனது காலனியரசின் கவர்னருக்கு, கிராம பிரச்சனையை கவனிக்குமாறு உத்தரவு வந்தது. இது கடந்த கால வரலாறு.அப்போது முஸ்லிம்களுக்கு 50 க்கும் மேலான உறுப்பு நாடுகள் இல்லை. இன்று நிலைமை என்ன?
அன்று உலக முஸ்லிம்கள் ஒரே தலைமையின் கீழ் இருந்ததால் ஐரோப்பிய நாடுகளும் இதர நாடுகளும் முஸ்லிம் தலைமையைக் கண்டு அஞ்சின. எனவே அல்லாஹ்வின் தூதரின் மேலுள்ள அவமதிப்பை ஒரு கடிதம் கொண்டு நிறுத்திக்காட்டினார் அன்றைய கலீஃபா அப்துல் ஹமீது.
வீழ்ச்சியை நோக்கி…
முஸ்லிம்களின் பாதுகாப்பு அரணாக விளங்கிய இஸ்லாமிய அரசான தலைமைப்பீடம் (கிலாஃபா), முஸ்தபா கமாலின் சதியின் மூலம் தற்போதைய துருக்கியில் (ஹிஜ்ரி 1342 ரஜப் 28) 1924 மார்ச் 3 நிர்மூலமாக்கப்பட்டது.
இது குறித்து 1924 மார்ச் 7 அன்று "தி டைம்ஸ்" நாளிதழில் இஸ்லாத்தின் தலைமையகமாக இருந்து உலகை ஆட்டிப்படைத்த துருக்கி இப்போது ஒரு சாதாரண பால்கன் நாடாக நின்றுவிட்டது" என்று செய்தி வெளியிடப்பட்டது.
இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் கர்சன் பிரபு 1924 ஜூலை 24 நடைபெற்ற லௌசான் ஒப்பந்தத்திற்குப் பிறகு தெரிவிக்கையில்: இஸ்லாமிய மக்களிடையே ஒற்றுமையை உருவாக்க முனையும் எதையும் நாம் தகர்த்தெறிய வேண்டும். கிலாஃபத்தை வீழ்த்துவதில் நாம் வெற்றி கண்டதைப் போல உணர்வுபூர்வமாகவோ அல்லது பண்பாட்டு ரீதியாகவோ வேறு எந்த வகையிலும் ஒற்றுமை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் முக்கிய விஷயம் என்னவெனில் துருக்கியை நாம் வீழ்த்திவிட்டோம். அது ஒருபோதும் மீண்டும் எழுந்து வராது. ஏனெனில் நாம் இஸ்லாத்தின் ஆக்கப்பூர்வமான சக்தியான கிலாஃபத்தை வீழ்த்திவிட்டோம்.
கடந்த சில வருடங்களுக்கு முன் மியான்மரின் அரகன் பகுதியில் இருந்த முஸ்லிம்கள் விரட்டப்பட்டு வங்கதேசத்தில் அகதிகளாய் நுழைந்தார்கள். அரபு நாடுகளுடன் ஒப்பிடும்போது மியான்மர் பெரிய சக்தியாக இல்லை. ஆனால் மியான்மரைக் கண்டித்து அரகன் பகுதியில் மீண்டும் அவர்களைக் குடியமர்த்த 50 க்கும் மேலான முஸ்லிம் நாடுகளால் இயலவில்லை.
சுமார் 50 க்கும் மேலான நாடுகளாக பிரிந்து கிடக்கும் முஸ்லிம்களின் பெருவெளிக்கு, 92 ஆண்டுகளுக்கு முன்னர் பிரிட்டிஷ் தான் எல்லை பிரித்துக் கொடுத்தது. பெருவெளியை சிதைத்து முஸ்லிம் உலகத்தை பிரிட்டிஷின் அடிமைகளாக மாற்ற உள்ளிருந்து உதவி செய்தவர்களுக்கு பிரிட்டன் துண்டு துக்கடாவாகப் பிரித்து கொடுத்த நிலப்பகுதிகள் தான் இன்று பரவலாக சிதறிக் கிடக்கும் அரபு நாடுகள்.
தற்போது அரபு உலகம். அமெரிக்காவின் அடைக்கலத்தில் பாதுகாப்பாக இருக்கிறது.
பிரிவினையற்ற ஒற்றை திரடாக, ஒரு தலைமையின் கீழ் இருந்த காலத்தில் முஸ்லிம்களிடம் இருந்த வலிமையும் வல்லமையும் 50 க்கும் மேலான நாடுகளாக இருக்கும் தற்காலத்தில் இல்லை.
முஸ்லிம்களின் ஒரே தலைமையான கிலாஃபா அழிக்கப்பட்டு
(3-3-1924) 96 ஆண்டுகள் கடந்துவிட்டன. இதனால் தாயில்லா பிள்ளைகளாய் அனாதையாக்கப்பட்ட
முஸ்லிம்கள் எண்ணிலடங்கா துயரங்களையும் அவலங்களையும் சந்தித்து வருகின்றனர். கிலாஃபத்தை
அழித்ததன் மூலம் காலனித்துவ சக்திகளும், முஸ்லிம் உலகில் அவர்களின்
கைப்பாவைகளாக செயல்பட்டு வரும் ஆட்சியாளர்களும் முஸ்லிம் சமுதாயத்திற்கு மிகப் பெரும்
அநீதி இழைத்து வருகிறார்கள். பிறரிடம் கையேந்தும் நிலைக்கு முஸ்லிம் உலகை இட்டுச் செல்கிறார்கள்.
கிலாஃபா வீழ்த்தப்பட்ட திலிருந்து தலைமையின்றி முஸ்லிம்கள்
பரிதவித்து வருகின்றனர். முஸ்லிம் சமுதாயத்தை கேடயம் போன்று பாதுகாக்கும் தலைவர் இல்லாத
காரணத்தால் எதிரிகளின் கோரப்பசிக்கு இரையாவதை உலகெங்கிலும் காணமுடிகிறது. இத்தகைய நிலையில்
முஸ்லிம்கள் மீண்டும் கிலாஃபத்தை நிலைநாட்ட உழைப்பது கட்டாயக் கடமையாகும். எனவே,
முஸ்லிம்களாகிய நாம் கிலாஃபத்தை
நிலைநாட்ட அண்ணல் நபி (ஸல்) அவர்களின் சுன்னத்தான
வழிமுறையின் அடிப்படையில் மட்டுமே பாடுபட முயற்சிப்போமாக! மேலும், சிறுபான்மை மக்களின்
உரிமைகளை காக்க ஒற்றுமையாய் செயல்பட்டு வெற்றியைக் காண்போமாக! அதற்கு அல்லாஹ் அருள்பாலிப்பானாக!
ஆமீன்!
மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ
இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951
No comments:
Post a Comment