Search This Blog

Friday, 13 November 2020

அன்பு மலரும்

 

அன்பு மலரும்


وَإِنِّي مُرْسِلَةٌ إِلَيْهِمْ بِهَدِيَّةٍ فَنَاظِرَةٌ بِمَ يَرْجِعُ الْمُرْسَلُونَ


நிச்சயமாக அவர்களுக்கு நான் அன்பளிப்பு ஒன்றை அனுப்பப் போகிறேன்தூதுவர்கள் என்ன பதிலோடு திரும்புகிறார்கள் என்பதை பார்க்கப் போகிறேன் (என்றும் அரசி பில்கீஸ் கூறினார்).       திருக்குர்ஆன் 27:35


அன்பளிப்பு அன்பை வளர்க்கும். கெட்ட எண்ணங்களை அகற்றும். பரஸ்பர ஒத்துழைப்பை ஊக்குவிக்கும். இதனால்தான்  அன்பளிப்பு வழங்கும் விஷயத்தில் இஸ்லாம் ஆர்வமூட்டுகிறது.


அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 ( تَهَادَوْا فَإِنَّ الْهَدِيَّةَ تُذْهِبُ وَحَرَ الصَّدْرِ

ஒருவருக்கொருவர் அன்பளிப்பு வழங்கிக்கொள்ளுங்கள். அது நெஞ்சங்களிலுள்ள குரோதத்தை அகற்றும். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-2056


அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( تَهَادُوا تَحَابُّوا‏ ) நீங்கள் ஒருவருக்கொருவர் அன்பளிப்பு வழங்கிக்கொள்ளுங்கள். (அதனால்) நீங்கள் ஒருவரையொருவர் நேசம் கொள்வீர்கள். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- அல்அதபுல் முஃப்ரத்-594


கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( تَهَادُوا فَاِنَّ الهَدِیَّةَ تَسُلُّ السَّخِیمَةَ ) நீங்கள் ஒருவருக்கொருவர் அன்பளிப்பு வழங்கி கொள்ளுங்கள். ஏனெனில், அது உங்கள் மனக்குறைகளை அகற்றிவிடும். அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:-அல்பஸ்ஸார், புலூகுல் மராம்-963


கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறினார்கள். பில்கீஸ் இணைவைப்பாளராக இருந்த காலத்திலும் இஸ்லாத்தில் இணைந்தபிறகும் பெரிய புத்திசாலியாக இருந்தார்; அன்பளிப்பு மனிதர்களிடம் நல்ல விளைவைத் தரும் என்பதை அறிந்திருந்தார். நூல்:- தஃப்சீர் இப்னுகஸீர் அந்நம்ல் வசனம்-35


முன்னுரிமை


அன்னை மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் என்னுடைய அடிமைப் பெண் ஒருத்தியை விடுதலை செய்தேன். அப்போது என்னிடம் அண்ணல் நபி (ஸல்) அவர்கள், ( أَمَا إِنَّكِ لَوْ أَعْطَيْتِيهَا أَخْوَالَكِ كَانَ أَعْظَمَ لأَجْرِكِ )  "நீ உன் தாயின் சகோதரர்களுக்கு (தாய்மாமன்களுக்கு அன்பளிப்பாக) அவளைக் கொடுத்திருந்தால் உனக்குப் பெரும் நற்பலன் கிடைத்திருக்குமே" என்று கூறினார்கள். நூல் புகாரீ-2592


ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம், 

( يَا رَسُولَ اللَّهِ إِنَّ لِي جَارَيْنِ فَإِلَى أَيِّهِمَا أُهْدِي"நாயகமே! எனக்கு அண்டை வீட்டுக்காரர்கள் இருவர் உள்ளனர். அவர்களில் யாருக்கு நான் அன்பளிப்பு வழங்க வேண்டும்? என்று கேட்டேன். அண்ணலார், ( إِلَى أَقْرَبِهِمَا مِنْكِ بَابًا ) "அவ்விருவரில் எவரது வாசல் உன் வீட்டு வாசலுக்கு அருகிலுள்ளதோ அவருக்கு அன்பளிப்புச் வழங்கு" என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-2595


ஏக்கம் போக்கும்


உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனக்கு அன்பளிப்பு வழங்கும் வழக்கம் உடையவர்களாக இருந்தார்கள். (அப்போதெல்லாம்) நான், ( أَعْطِهِ مَنْ هُوَ أَفْقَرُ إِلَيْهِ مِنِّي )  "இதை என்னைவிட அதிகக் தேவையுடையோருக்கு கொடுங்களேன்" என்பேன்.


அதற்கு அண்ணலார், ( خُذْهُ إِذَا جَاءَكَ مِنْ هَذَا الْمَالِ شَيْءٌ وَأَنْتَ غَيْرُ مُشْرِفٍ وَلاَ سَائِلٍ فَخُذْهُ وَمَا لاَ فَلاَ تُتْبِعْهُ نَفْسَكَ )  "இதை வாங்கிக் கொள்ளுங்கள்; நீங்கள் பிறரிடம் கேட்காமலும் பேராசை கொள்ளாமலும் இருக்கும்போது இவ்வாறு உங்களுக்கு வரும் பொருட்களைப் பெற்றுக் கொள்ளுங்கள். ஏதும் கிடைக்கவில்லை என்றால், நீங்களாக அதைத்தேடி செல்லாதீர்கள்" என்றார்கள். நூல்:- புகாரீ-1473


ஒரு தலைவர் என்றால் அவரைக் காண வருவோரின் பெரும்பாலானவர்கள் அன்பளிப்புகள் கொடுப்பார்கள். தலைவரோடு இருப்பவர்கள் அவற்றை பார்ப்பார்கள். தொட்டு வாங்கி வைப்பார்கள். அந்த நேரங்களில் நமக்கு யாரும் எதுவும் கொடுப்பதில்லை என்ற ஏக்கம் ஏற்படலாம். ஆனால் அண்ணல் நபி (ஸல்) அவர்களுடன் இருந்த உமர் (ரலி) அவர்கள் அவ்வாறு ஆசைப்பட்டதில்லை. அதையறிந்த அண்ணலார் அவ்வபோது அன்பளிப்புகளை வழங்குவார்கள்.


நம்முடைய உதவியாளர்கள் பணியாளர்களுக்கு அவ்வப்போது ஏதேனும் சிறுசிறு அன்பளிப்புக்களைக் கொடுத்து கொண்டே இருக்க வேண்டும். அது நம்மீது அதிக விசுவாசத்தை ஏற்படுத்தும். நம்முடன் இருப்பவர்கள் நேர்மையாக இருப்பார்கள். நமக்கு உண்மையாக உழைப்பார்கள்.


அற்பமாகக் கருதாதீர்


அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( وَلَوْ أُهْدِيَ إِلَيَّ ذِرَاعٌ أَوْ كُرَاعٌ لَقَبِلْتُ ஆட்டின் கணைக்கால் பகுதி, அல்லது கணுக்காலுக்குக் கீழே உள்ள பகுதி எனக்கு அன்பளிப்பாகத் தரப்பட்டாலும் நிச்சயம் நான் பெற்றுக் கொள்வேன். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள்   நூல்:- புகாரீ-2568


ஆயிஷா (ரலி) அவர்கள், "அண்ணல் நபி (ஸல்) அவர்களின் (துணைவியார்) இல்லங்களில் தொடர்ந்து இரண்டு மாதங்கள் (அடுப்பில்) நெருப்பு பற்றவைக்கப்பட்டிராது" என்று கூறினார்கள். அப்போது அவர்களிடம், "நீங்கள் எப்படி வாழ்க்கை நடத்தினீர்கள்" என்று வினவப்பட்டது.


அதற்கு அவர்கள், "பேரிச்சம் பழமும் தண்ணீரும் தான் (எங்கள் உணவு.) தவிரவும், அண்ணலாருக்கு அன்சாரிகளான சில அண்டை வீட்டார் இருந்தனர். அவர்களிடம் அன்பளிப்பு ஒட்டகங்கள் இருந்தன. அவர்கள் அவற்றிலிருந்து கிடைக்கின்ற தமக்குரிய பாலை அண்ணலாருக்கு வழங்குவார்கள். அண்ணலார் அதை எங்களுக்கு அருந்தக் கொடுப்பார்கள்" என்று கூறினார்கள். அறிவிப்பாளர்:- உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள்   நூல்:- புகாரீ-2567


அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. 'மர்ருழ் ழஹ்ரான்' எனுமிடத்தில் ஒரு முயலை வேட்டையாடி கொண்டு வந்து அபூதல்ஹா (ரலி) அவர்களிடம் கொடுத்தேன். அவர்கள் அதை அறுத்து அதன் தொடைகளை கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களுக்கு அனுப்பினார்கள். அதை அண்ணலார் ஏற்றுக் கொண்டார்கள்.   நூல்:- புகாரீ-2572


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

( يَا نِسَاءَ الْمُسْلِمَاتِ لاَ تَحْقِرَنَّ جَارَةٌ لِجَارَتِهَا وَلَوْ فِرْسِنَ شَاةٍ முஸ்லிம் பெண்களே! ஓர் அண்டை வீட்டுக்காரி, மற்றொரு அண்டை வீட்டுக்காரிக்கு ஓர் ஆட்டின் கால் குழம்பை (அன்பளிப்பாக) அளித்தாலும் அதை அவள் அற்பமாகக் கருதவேண்டாம். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-2566, திர்மிதீ-2056


தன்னுடைய அண்டை வீட்டாருக்குச் சிறு பொருள்களை அன்பளிப்பாக வழங்கக் கூடாது; அன்பளிப்பாய் மதிப்பு வாய்ந்த பெரிய பொருட்களையே அனுப்ப வேண்டுமென்பது பெண்களின் பொதுவான மனப்பான்மையாகும். இதன் காரணமாகத்தான் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பெண்களுக்கு இவ்வாறு பிரத்யேகமாக கட்டளையிட்டுள்ளார்கள். சிறுசிறு பொருட்களையும் அண்டை வீட்டுக்கு அனுப்பி வைக்கலாம். அவ்வாறே பிறரிடமிருந்து வரும் அன்பளிப்பு சிறியதாக இருந்தாலும் அதை அன்புடன் பெற்றுக்கொள்ள வேண்டும். அதை அற்பமாகக் கருதக் கூடாது. அதைக் குறித்து விமர்சனம் செய்யக்கூடாது.


அறவே அன்பளிப்புச் செய்யாமல் இருப்பதைவிட சிறிதளவு, மிகச் சிறிதளவு பொருளை அன்பளிப்பாக வழங்குவதே மேலானதாகும். அன்பளிப்பு எளிதாக இருக்கும் போதுதான் கொடுப்பவருக்குச் சுமையாக இருக்காது; அடிக்கடி கொடுக்கவும் வசதியாக இருக்கும். சிறிதளவே ஆனாலும் தொடர்ந்து செய்வதே, என்றோ ஒருநாள் பெரிய அளவில் செய்வதைவிடப் பெரியது.


நறுமணப் பொருட்கள்  


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 ( مَنْ عُرِضَ عَلَيْهِ رَيْحَانٌ فَلاَ يَرُدُّهُ فَإِنَّهُ خَفِيفُ الْمَحْمِلِ طَيِّبُ الرِّيحِ ) ஒருவரிடம் வாசனைத் திரவியம் எடுத்துக் கொள்ளுமாறு கோரப்பட்டால், அதை அவர் மறுக்க வேண்டாம். ஏனெனில், அது எடுத்துச் செல்வதற்கு எளிதானதும் சிறந்த நறுமணமும் ஆகும்.      அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-4538


அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் (தமக்கு அன்பளிப்பாகக் கொடுக்கப்படும்) வாசனைப் பொருளை (வாங்க) மறுப்பதில்லை. நூல்:- புகாரீ-2582, திர்மிதீ-2710, நசாயீ-5258


கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

( إِذَا أُعْطِيَ أَحَدُكُمُ الرَّيْحَانَ فَلاَ يَرُدَّهُ فَإِنَّهُ خَرَجَ مِنَ الْجَنَّةِ ) உங்களில் ஒருவருக்கு நறுமண மலர் (அன்பளிப்பாக) வழங்கப்பட்டால் அதை அவர் ஏற்க மறுக்க வேண்டாம். ஏனெனில் அது சொர்க்கத்திலிருந்து வந்ததாகும். அறிவிப்பாளர்:- அபூ உஸ்மான் அந்நஹ்தீ (ரஹ்) அவர்கள் நூல்:- திர்மிதீ-2712


இன்று நம்முடைய நடைமுறையில் முக்கியமானவர்களை வரவேற்கும் போது பூச்செண்டை கொடுத்து வரவேற்கின்றோம்.


கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் ( ثَلاَثٌ لاَ تُرَدُّ الْوَسَائِدُ وَالدُّهْنُ وَاللَّبَنُ ) "மூன்று பொருட்கள் (அன்பளிப்பாகத் தரப்பட்டால்) மறுக்கக்கூடாது. தலையணை, எண்ணெய், பால்" என்று கூறினார்கள். நறுமண எண்ணெயைக் கருத்தில் கொண்டே எண்ணெய் என்று மீண்டும் கூறினார்கள். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள்   நூல்:- திர்மிதீ-2711


இம்மூன்றும் விருந்தினர்களை உபசரிக்கும் உபகரணங்களாகும். இவை சிறிய அன்பளிப்பு தான் எனவே மறக்கக்கூடாது.


ஒருவர் தமது சக நண்பருக்கு அல்லது சகோதரருக்கு நறுமணப் பொருள் எதையேனும் அன்பளிப்பாக வழங்கினால் அதை மறுக்காமல் ஏற்க வேண்டும். ஏனெனில், அது சுமை இல்லாத சிறிய அளவிலான அன்பளிப்பாகும்.


நறுமணப் பொருள் மூலமாக அதன் உரிமையாளருக்கு மட்டுமல்ல, மற்றோருக்கும் அல்லாஹ் பயனளித்துள்ளான். அன்பளிப்பு பெறுபவர் ஆகட்டும் கொடுப்பவர் ஆகட்டும் நறுமணப் பொருள் கொண்டு செல்வது ஒரு சிரமமான விஷயமன்று. அப்படியிருக்க, அந்த அன்பளிப்பை தகுந்த காரணமின்றி ஏற்க மறுப்பது முறையாகாது.


பகரம் வழங்குதல்


(உங்களின்) உபகாரத்திற்கு உபகாரத்தைத் தவிர (வேறு) கூலி உண்டா?                                                                                                                                    திருக்குர்ஆன்:- 55:60


ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்கள் அன்பளிப்பை ஏற்றுக் கொள்வார்கள்; அதற்கு ஈடாக ஏதேனும் வழங்கி விடுவார்கள். நூல்:- புகாரீ-2585


அபூஹுஸைம் (ரலி) அவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களையும் பிற நபித் தோழர்களையும்  விருந்துக்கு அழைத்தார். அவர்கள் அனைவரும் விருந்துண்ட பின்னர் அண்ணலார் தம் தோழர்களை நோக்கி, ( أَثِيبُوا أَخَاكُمْ ) "நீங்கள் உங்களுடைய சகோதரருக்கு பகரம் செய்யுங்கள்" என்று கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், ( يَا رَسُولَ اللَّهِ وَمَا إِثَابَتُهُ )  "நாயகமே! நாங்கள் எதைப் பகரமாக அளிப்பது" என்று வினவினர். அதற்கு அண்ணலார், ( إِنَّ الرَّجُلَ إِذَا دُخِلَ بَيْتُهُ فَأُكِلَ طَعَامُهُ وَشُرِبَ شَرَابُهُ فَدَعَوْا لَهُ فَذَلِكَ إِثَابَتُهُ )  "ஒருவர் தம்முடைய சகோதரரிடம் சென்று அங்கு உண்டு பருகினால், அவருடைய வாழ்க்கையில் பாக்கியமும் அருளும் பெருக வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்வதே அவருக்கு அளிக்கும் பகரமாகும்" என்று பதிலளித்தார்கள். அறிவிப்பாளர்:- ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள்  நூல்:- அபூதாவூத்-3853


அன்பை வளர்ப்பதற்காக அளிக்கப்படுவதே அன்பளிப்பு. இருப்பினும் அன்பளிப்பு கொடுத்தவருக்கு ஏதேனும் கைமாறு செய்வது விரும்பத்தக்கது. அதிலும் குறிப்பாக, வசதியுள்ளவருக்கு வசதியில்லாதவர் கொடுக்கும் அன்பளிப்புக்குப் பிரதி அன்பளிப்பு கொடுப்பது கட்டாயமாகும் என்றுகூட அறிஞர்கள் சிலர் கூறியுள்ளனர். ஆனால், கைமாறை எதிர்பார்த்து அன்பளிப்புச் செய்வது கூடாது என்றும், பிரதி இல்லாத நன்கொடையே அன்பளிப்பாகும் என்றும் வேறு சிலர் கூறுகிறார்கள். ஆக,  கொடுக்கப்படும் பொருளுக்கு நிகரான பகரம் கட்டாயமாகச் செலுத்த வேண்டுமானால் அது வணிகம் ஆகும். நிகரில்லாத, கட்டாயமில்லாத பகரம் செலுத்தப்பட்டால், அது அன்பளிப்பு ஆகும். பகரமே இல்லாததாக இருந்தால் அது தர்மம் ஆகும்.          நூல்:- ஃபத்ஹுல் பாரீ


நாம் கொடுத்தால் நமக்கும் இவ்வாறு கொடுப்பார் என்ற சுயநலத்திற்காக உலக ஆதாயத்தை எதிர்பார்த்து கொடுப்பது அன்பளிப்பாகாது. இன்றைய நம்முடைய நடைமுறையில் இருக்கும் விருந்தில் வைக்கப்படும் மொய் என்பது பெருபாலும் இதன் வகையைச் சேர்ந்ததே.


எங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருவீர்கள்? உங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன தருவீர்கள்? என்ற நிலைப்பாட்டில் சிலர் உள்ளனர். இது தவறான நிலைப்பாடு.


திரும்பப் பெறாதீர்


உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் ஒருவரை அல்லாஹ்வின் பாதையில் (பயணம் மேற்கொள்வதற்காக) உயர் ரக குதிரையொன்றில் (அவருக்கே அதைத் தானமாக கொடுத்து) அனுப்பி வைத்தேன். அந்த குதிரைக்காரர் அதை (சரியாகப் பராமரிக்காமல்) பாழாக்கிவிட்டார். அவர் அதை மலிவான விலைக்கு (கேட்டால் கூட) விற்று விடுவார் என்று நான் எண்ணினேன். ஆகவே, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அது குறித்துக் கேட்டேன். அதற்கு அண்ணலார்

( لاَ تَبْتَعْهُ وَلاَ تَعُدْ فِي صَدَقَتِكَ )  "அதை விலைக்கு வாங்காதீர். உமது தானத்தைத் திரும்பப் பெறாதீர்" என்றார்கள்.     நூல்:- முஸ்லிம்-3313


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

( اَلْعَائِدُ فِي هِبَتِهِ كَالْكَلْبِ يَقِيءُ ثُمَّ يَعُودُ فِي قَيْئِهِதன் அன்பளிப்பை திரும்பப் பெறுபவன், வாந்தி எடுத்த பிறகு அதை மீண்டும் தின்கின்ற நாயைப் போன்றவன் ஆவான்.             அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள்    நூல்:- புகாரீ-2589, முஸ்லிம்-3318


கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 ( لاَ يَحِلُّ لِلرَّجُلِ أَنْ يُعْطِيَ عَطِيَّةً ثُمَّ يَرْجِعَ فِيهَا إِلاَّ الْوَالِدَ فِيمَا يُعْطِي وَلَدَهُ ) ஒருவர் அன்பளிப்பு ஒன்றைக் கொடுத்துவிட்டு, அதை திரும்பப் பெறுவதற்கு அனுமதி இல்லை. ஒரு தந்தை தன் பிள்ளைகளுக்கு கொடுத்த அன்பளிப்பைத் தவிர. அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-2058


அன்பளிப்போ தர்மமோ எதுவானாலும் கொடுத்தபின் திரும்பப் பெறுவதென்பது பெருந்தன்மை ஆகாது. மாறாக, அது அருவருக்கத்தக்க, செய்யக்கூடாத செயலாகும். தந்தை மட்டும் தம் பிள்ளைகளுக்கு கொடுத்த அன்பளிப்பை திரும்பப் பெறலாம். அது தவறாகாது. இதுவே பெரும்பாலான அறிஞர்களின் கருத்தாகும். நூல்:- ஃபத்ஹுல் பாரீ, இர்ஷாதுஸ் ஸாரீ, துஹ்ஃபத்துல் அஹ்வதீ


வேண்டாம்


ஒருவர் அருமை நாயகம் (ஸல்) அவர்களுக்கு மதுவை அன்பளிப்பாக வழங்க நாடினார். அப்போது அண்ணலார், "அல்லாஹ் அதைத் தடை செய்து விட்டான்" என்று கூறினார்கள். நூல்:- அல்ஹலால் வல்ஹராம் இமாம் யூசுப் அல்கர்ளாவி


ஸஅப் பின் ஜஸ்ஸாமா அல்லைஸீ (ரலி) அவர்கள் கூறியதாவது. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் (மக்கா மதீனா இடையிள்ள) 'அப்வா' அல்லது 'வத்தான்' எனும் இடத்தில் இருந்த போது, நான் அவர்களுக்கு ஒரு காட்டுக் கழுதையை அன்பளிப்பாக வழங்கினேன்; அவர்கள் அதை ஏற்க மறுத்து விட்டார்கள். என் முகத்தில் ஏற்பட்ட (மாற்றத்)தைக் கண்டதும்

( إِنَّا لَمْ نَرُدَّهُ عَلَيْكَ إِلاَّ أَنَّا حُرُمٌ ) "நாம் இஹ்ராம் கட்டியிருப்பதால் இதை ஏற்க மறுத்தோம்" என்று கூறினார்கள்.       நூல்:- புகாரீ-1825


வேட்டையாடியவர், ஹஜ்  உம்ரா பயணத்தில் இஹ்ராம் கட்டியிருப்பவருக்குக் கொடுப்பதற்காக வேட்டையாடியிருந்தால் அதை இஹ்ராம் கட்டியிருப்பவர் பெற்றுக் கொள்ளக் கூடாது. இங்கு இந்த நபித்தோழர் அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்புச் செய்வதற்காக என்று வேட்டையாடியிருந்ததால் தான், அதை அவர் கொடுத்த போது அண்ணலார் ஏற்க மறுத்து அவரிடமே திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். அப்போது அவரின் முகம் மாற்றத்தை கண்டதும் அதற்குறிய விளக்கத்தையும் கூறினார்கள்.


தமக்கு உரிமையில்லாத அல்லது மார்க்கத்தால் தடுக்கப்பட்ட (ஹராமான) அன்பளிப்புகளை வேண்டாம் என்று தாராளமாக மறுக்கலாம்.


வற்புறுத்துதல்


அண்ணல் நபி (ஸல்) அவர்கள், "(வற்புறுத்தி) என்னிடமிருந்து பெறும் தானத்தை அக்குளில் சொருகியவாறு செல்லும் உங்களில் ஒவ்வொருவரும் தனக்கான நெருப்பையே சுமந்து செல்கிறார்" என்று கூறினார்கள்.


அப்போது உமர் (ரலி) அவர்கள், "நாயகமே! அது நெருப்புதான் என்று அறிந்த பின்னரும் தாங்கள் எதற்காக கொடுக்கிறீர்கள்? என்று வினவினார். அண்ணலார், "அவர்கள் என்னிடம் வற்புறுத்திக் கேட்டுக் கொண்டே இருந்தால் நான் என்ன செய்வது? கஞ்சத்தனத்தை அல்லாஹ் எனக்குத் தடை செய்து விட்டானே" என்றார்கள். நூல்:- முஸ்னத் அஹ்மத், ஆபூயஃலா


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 ( لاَ تُلْحِفُوا فِي الْمَسْأَلَةِ فَوَاللَّهِ لاَ يَسْأَلُنِي أَحَدٌ مِنْكُمْ شَيْئًا فَتُخْرِجَ لَهُ مَسْأَلَتُهُ مِنِّي شَيْئًا وَأَنَا لَهُ كَارِهٌ فَيُبَارَكَ لَهُ فِيمَا أَعْطَيْتُهُஅன்பளிப்பு கேட்டு என்னை நச்சரிக்காதீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களில் ஒருவர் என்னிடம் ஏதேனும் கேட்டு அதை நான் வெறுத்த நிலையில் அவர் என்னிடம் கேட்டது அவருக்குக் கிடைத்தால், அதில் அவருக்கு வளம் வழங்கப்படுவதில்லை.         அறிவிப்பாளர்:-  முஆவியா (ரலி)  அவர்கள் நூல்:- முஸ்லிம்-1877


தனக்காகவோ அல்லது பள்ளிவாசல் மதரசா போன்ற பொது சேவைக்காகவோ வற்புறுத்தி அன்பளிப்பு கேட்பதுக் கூடாது.


அவ்வாறு தந்தே ஆக வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து வற்புறுத்தி அன்பளிப்பை வாங்கிச் செல்பவர் நெருப்பை தான் வாங்கிச் செல்கிறார் என்று இந்த நபிமொழி விவரிக்கிறது. அந்த அன்பளிப்பால் அருள்வளம் காணமுடியாது.


இலஞ்சமாக...


அந்தத் தூதர்கள் சுலைமானிடம் வந்தபோது (சுலைமான் அவர்களை நோக்கி) "பொருளைக் கொண்டு எனக்கு உதவ போகிறீர்களா? எனக்கு அல்லாஹ் வழங்கியிருப்பது, உங்களுக்கு அவன் வழங்கியதை விடச் சிறந்ததாகும். மாறாக, உங்கள் அன்பளிப்பால் நீங்களே சந்தோசப்பட்டுக்கொள்ள வேண்டியதுதான் (அது எனக்கு வேண்டியதில்லை)" என்று கூறினார்.                              திருக்குர்ஆன்:- 27:36


ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு வரும் அன்பளிப்புகள் பெரும்பாலான இலஞ்சமாகவே இருக்கும்.


இந்த வகையான அன்பளிப்பதைதான் நபி சுலைமான் (அலை) அவர்கள் வாங்க மறுத்தார்கள் என்று திருக்குர்ஆன் இயம்புகிறது.


உம்மு சல்மா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது. இஸ்லாத்தின் தொடக்கத்தில் முஸ்லிம்கள் மக்காவில் வாழ முடியாமல் நெருக்கடிக்குள்ளாயினர். எனவே, அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டலின்படி முஸ்லிம்கள் சிலர் அபீசினியா நாட்டிற்கு புலம்பெயர்ந்து சென்று நிம்மதியாக வாழ்ந்து வந்தனர். இதையறிந்து ஆத்திரம் கொண்ட மக்கா இணைவைப்பாளர்கள் அபீசினியா நாட்டில் நிம்மதியாக வாழ்ந்து வரும் முஸ்லிம்களை அந்நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்காக அம்ரு பின் அல்ஆஸ் மற்றும் அப்துல்லாஹ் பின் அபீ ரபீஆ ஆகிய இருவர்கள் மூலம் சில அன்பளிப்புக்களை கொடுத்து அனுப்பினர்.


அவ்விருவரும் அபீசினியா மன்னர் நஜாஷீ அவர்களை சந்தித்து சில பொருட்களை அன்பளிப்பாக கொடுத்துவிட்டு, தம் நோக்கத்தை எடுத்துரைத்தனர். மன்னர் நஜாஷீ அதைப்பற்றி விசாரித்து உண்மையறிந்த பின்னர் அவர்களின் அன்பளிப்புகளைத் திருப்பிக் கொடுத்து விட்டு, முஸ்லிம்கள் இங்கே தான் இருப்பார்கள். நீங்களிருவரும் எனது நாட்டிலிருந்து வெளியேறுங்கள் என்று ஆணையிட்டார். பிறகு அவ்விருவரும் அவர்கள் கொண்டுவந்த அன்பளிப்பு பொருள்களுடன் திருப்பி அனுப்பப்பட்ட நிலையில் அவமானப்பட்டு வெளியாயினர்.                                 நூல்:- முஸ்னது அஹ்மத்-1649, அல்பிதாயா வந்நிஹாயா


ஒருமுறை ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள், அரசவையில் அரசர்கள் சாய்ந்து அமர்கின்ற மாதிரியான இரு தலையணையை தம் வீட்டினுள் பார்த்தார்கள். உடனே, ஜனாதிபதி அவர்கள் தன் மனைவியிடம், இந்த இரண்டும் எங்கிருந்து வந்தது? அல்லது நீ விலைக்கு வாங்கினாயா? உண்மையைச் சொல், மறைக்காதே என்று கேட்டார்கள்.


அப்போது அன்னாரின் மனைவியார், “இதை இன்ன மனிதர் நமக்கு அன்பளிப்பாக அனுப்பியுள்ளார்” என்று கூறினார். இதைச் செவியுற்ற ஜனாதிபதி அவர்கள், அல்லாஹ் அவருடன் போரிடுவானாக... எனக் கோபமாகக் கூறிவிட்டு, அந்த மனிதர் தனக்கு உண்டான ஒரு தேவையை நிறைவேற்றித் தருமாறு என்னிடம் வந்தார். அதை நான் அனுமதிக்கவில்லை. இப்போது என் குடும்பத்தினர் வழியாக சமரசம் பேசவே, இந்த இரண்டு தலையணையை அன்பளிப்பு என்ற பெயரில் (இலஞ்சமாகக்) கொடுத்து அனுப்பியுள்ளார்என கூறினார்கள்.


பின்னர் உமர் (ரலி) அவர்கள் அந்த இரண்டு தலையணையையும் தங்கள் மனைவியிடமிருந்து பிடுங்கிச் சென்று, அதில் ஒன்றை முஹாஜிர்களில் ஒரு பெண்ணுக்கும், இன்னொன்றை அன்ஸாரிகளில் ஒரு பெண்ணுக்கும் அன்பளிப்பாக கொடுத்துவிட்டார்கள்.  நூல்:-பைஹகீ


இலஞ்சம் எந்த வடிவத்தில் வந்தாலும் சரியே அதை இஸ்லாம் தடை செய்துள்ளது. அதற்கு என்ன பெயர் வைத்தாலும் சரியே, அன்பளிப்பு என்று பெயர் சூட்டினாலும் ஹராம் எனும் வட்டத்தை விட்டு அது வெளியேறாது.


இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நீதிபதி, ஆளுநர் அல்லது இது போன்ற பதவி வகிப்பவர், தாய் தந்தையரின் வீட்டில் இருக்கும்போதும் தங்களது மதிப்பை குறித்து சுயம் உணர்ந்திருக்க வேண்டும். பணி ஓய்வு பெற்ற பின்னர் தாய் வீட்டில் இருக்கும்போது அன்பளிப்பு கிடைப்பதாக இருந்தால் அதை அவர் ஏற்றுக் கொள்ளலாம். அதிகாரத்தில் இருக்கும் போது (வீட்டில் வைத்தும்) அன்பளிப்புகளைப் பெற்றுக் கொள்ளக் கூடாது. அவை ஹராம் ஆகும்.


நண்பர்கள் வழங்கும் அன்பளிப்புகள் பணி ஓய்வு பெற்ற பின்னரும் அவற்றை வழங்கி இருப்பார்களா என்று பிரித்தறிய முடியாதவையாக இருந்தால், அவை சந்தேகத்துக்குரியவை. ஆகவே அவற்றை நிராகரிக்க வேண்டும்.       நூல்:- இஹ்யா


இஸ்லாம் கூறும் வகையில் அன்பளிப்பைப் பரிமாறிக்கொண்டு அன்பை வளர்த்துக் கொள்வோமாக! ஆமீன்!


மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

No comments:

Post a Comment

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...