காத்திருக்க வேண்டும்
وَالَّذِيْنَ يُتَوَفَّوْنَ مِنْكُمْ وَيَذَرُوْنَ اَزْوَاجًا
يَّتَرَبَّصْنَ بِاَنْفُسِهِنَّ اَرْبَعَةَ اَشْهُرٍ وَّعَشْرًا
உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு இறந்துவிட்டால் அந்த மனைவியர் நான்கு மாதம் பத்து நாட்கள் தங்கள் விஷயத்தில் (இத்தா) காத்திருப்பார்கள். திருக்குர்ஆன்:- 2:234
இந்திய பெருநாட்டில் முன்னெப்பொழுதும் இல்லாத அளவிற்கு முஸ்லிம்களின் மீது வெறுப்புணர்வு அரசியல் அதிகரித்து வருகிறது. அதன் பிரதிபலிப்பே தற்போது புர்கா எனும் திரைப்படத்தின் மூலம் இஸ்லாம் மார்க்கமே பெண்களுக்கு எதிரானது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது.
இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் மீது வெறுப்புணர்வை உண்டாக்க, பெண்கள் குறித்து இஸ்லாம் கூறும் இத்தா என்பதை கொச்சைப்படுத்தி புர்கா எனும் பெயரில் படம் எடுத்து வெளியிடுகின்றனர் இஸ்லாமிய எதிரிகள்.
முஸ்லிம்களில் சிலரும்கூட இத்தாவின் யதார்த்த நிலை குறித்து அறியாமல் விமர்சிக்கின்றனர்.
முஸ்லிம்களும், சகோதர சமயத்தவர்களும் இஸ்லாம் கூறும் இத்தாவின் உண்மைத்தன்மையையும், மாண்பையும் குர்ஆன், ஹதீஸ் பார்வையில் முழுமையாக விளங்கவேண்டும்.
இஸ்லாமிய வழக்கில் திருமண உறவு நீங்கும் போது சில குறிப்பிட்ட காலம் வரை மனைவி மறுமணம் செய்து கொள்ளாமல் எதிர்பார்த்து காத்திருப்பதற்கு "இத்தா" என்பார்கள். இத்தா எனும் அரபு சொல்லுக்கு கணக்கிடுதல், எண்ணுதல் என்று பொருள்.
கணவன் இறந்துபோன காரணத்தால் திருமண உறவு நீங்கினாலும், (தலாக்) மணவிலக்கின் காரணத்தால் திருமண உறவு முறிந்தாலும் இவ்வாறு மனைவி காத்திருக்க வேண்டும். மணவிலக்கு அளித்த அல்லது இறந்துபோன கணவனின் கரு மனைவியின் வயிற்றில் வளர்கிறதா என்பதை உறதிப்படுத்திக் கொள்வதற்காகவும், திருமண உறவு அகன்று, தான் பிரிந்து வாழ்வதை உறவினர்களுக்கும், அண்டை அயலாருக்கும் மனைவி குறிப்பால் உணர்த்துவதற்காகவும் இவ்வாறு இத்தா இருப்பது மனைவியின் மீது கட்டாயக் கடமையாகும்.
நான்கு மாதம் பத்து நாட்கள்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لاَ يَحِلُّ لاِمْرَأَةٍ تُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ أَنْ تُحِدَّ عَلَى مَيِّتٍ فَوْقَ ثَلاَثِ لَيَالٍ، إِلاَّ عَلَى زَوْجٍ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا ) அல்லாஹ்வின் மீதும், மறுமை நாளின் மீதும் நம்பிக்கைக் கொண்டிருக்கும் எந்த பெண்ணுக்கும் இறந்துபோன ஒருவருக்காக மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் கடைப்பிடிப்பதற்கு அனுமதியில்லை. ஆனால் (கணவன் இறந்துபோனால்) அவனுக்காக நான்கு மாதம் பத்து நாட்கள் துக்கம் எனும் இத்தா கடைபிடித்தல் அவசியமாகும். அறிவிப்பாளர்:- ஸைனப் (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-5334, முஸ்லிம்-2979, நசாயீ-3530
தலைப்பில் காணும் திருவசனத்தின் கருத்தையே இந்த நபிமொழியும் வலியுறுத்துகிறது.
மணவிலக்கு (தலாக்) வழங்கப்பட்ட பெண்கள் தங்களுக்கு மூன்று மாதவிடாய்கள் வரும் வரையில் எதிர்பார்த்து (இத்தா) இருக்க வேண்டும். அவர்கள் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கைக் கொண்டவர்களாக இருந்தால் அல்லாஹ் அவர்களுடைய கர்ப்பப் பையில் (சிசுவை) படைத்திருந்தால் அதனை மறைப்பது அவர்களுக்கு ஆகுமானது அல்ல. திருக்குர்ஆன்:- 2:228
இத்தா இருக்க வேண்டுமென்பதன் அடிப்படை காரணத்தை அல்லாஹ்வே நன்கறிந்தவன். எனினும் வெளிப்படையான காரணம் இறந்து போன கணவனின் வாரிசு மனைவியின் வயிற்றில் இருக்கிறதா என்பதை உறுதிபட அறிவதே, இவ்வாறு இத்தா இருப்பதன் நோக்கமாகும். குழந்தை உருவாகி அது உயிர் பெறுவதற்கு நான்கு மாதங்கள் ஆகும். உயிர் பெற்ற குழந்தை அசைவதை அறிந்து கொள்ள மேலும் பத்து நாட்கள் ஆகும். ஆக, மொத்தம் நான்கு மாதம் பத்து நாட்கள் என வரையறுக்கப்பட்டுள்ளது.
இன்றைய உலகில் கருப்பைச் சோதிப்பதற்காக எத்தனையோ நவீன கருவிகள் இருந்தாலும், அவை தவறான முடிவைத் தெரிவிக்க இடமுண்டு. அல்லது கருவி சரியான முடிவையே காட்டினாலும் சுயநலத்திற்காகப் பொய்யான முடிவை எழுதி தர மாட்டார்கள் என்று சொல்ல முடியாது.
கர்ப்பமாக உள்ளது வெளியில் தெரியாத போது, கணவன் இறந்த ஒரு மாதத்தில் அவள் மற்றவரை திருமணம் செய்வதால், பிறக்கும் குழந்தைக்கு தந்தை யாராக இருக்கும்? என்ற சந்தேகம் எழும். இஸ்லாம் கூறும் நான்கு மாதம் பத்து நாட்களில் ஒரு பெண் கர்ப்பமாக இருப்பது அனைவருக்கும் தெரிந்து விடும். நான்கு மாதம் பத்து நாட்கள் ஆகிவிட்டால் யாருக்கும் சந்தேகம் எழ வாய்ப்பில்லை.
கணவன் இறக்கும்போது மனைவிக்கு எத்தனை வயதாக இருந்தாலும் சரி, அல்லது மாதவிடாய் நின்று போன வயோதிகப் பெண்ணாக இருந்தாலும் சரி, அல்லது அறுவை சிகிச்சை மூலம் கர்ப்பை நீக்கப்பட்டிருந்தாலும் சரி, இதுவரை மாதவிடாயே ஏற்படாத பருவம் அடையாத பெண்ணாக இருந்தாலும் சரியே அவள் நான்கு மாதம் பத்து நாட்கள் இத்தா இருப்பது அவசியமாகும்.
தனது இன்ப துன்பத்தில் துணையாக நின்ற கணவனின் அருமை பெருமைகளை உணர்ந்து கொள்ளவும், திருமண உறவுக்கு மதிப்பு கொடுக்கவேண்டும் என்பதுமே இதன் நோக்கமாகும்.
மூன்று மாதவிடாய் காலம்
மணவிலக்கு அளிக்கப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய் (முடியும்) வரை (மறுமணம் செய்யாமல்) காத்திருக்க வேண்டும். திருக்குர்ஆன்:-2:228
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. மூன்று மாதவிடாய் காலம் வரை இத்தா இருக்க வேண்டுமென (தலாக் கூறப்பட்ட) பரீரா (அண்ணல் நபி-ஸல் அவர்களால்) கட்டளையிடப்பட்டார். நூல்:- இப்னுமாஜா-2077, புலூகுல் மராம்-1137
எகிப்தைச் சேர்ந்த Dr. அப்துல் பாசித் முஹம்மது சையித் கூறுகிறார். கருவியல் ஆராய்ச்சியாளரான யூத மத விஞ்ஞானி ராபர்ட் கில்ஹாம் நீண்ட காலமாக ஓர் ஆய்வை மேற்கொண்டிருந்தார். "கைவிரல் ரேகைப் பதிவு ஒரு மனிதனை அடையாளம் காட்டுவதைப் போன்று D.N.A. ரேகைப் பதிவு தம்பதியரை அடையாளம் காட்டிவிடும். தம்பதியர் உடலுறவு கொண்டால் ஆண் தனது பாலின ரேகையைப் பெண்ணிடம் விட்டுச் செல்கிறான். பெண்ணில் பதிவாகியுள்ள ஆணின் அந்த D.N.A. ரேகைப் பதிவு மூன்று மாதங்களுக்கு பிறகே முழுவதுமாக அழியும்" என்று கண்டுபிடித்தார்.
அதற்கேற்ப அவர் அமெரிக்காவில் ஆப்பிரிக்க முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ஒரு பகுதியில் கள ஆய்வில் இறங்கினார். அப்பகுதியில் வாழும் முஸ்லிம் பெண்களிடம் அவர்களின் கணவர்களுடைய D.N.A. ரேகை மட்டுமே பதிவாகியிருந்தது. அதே நேரத்தில் அமெரிக்க பெண்கள் வாழும் ஒரு தெருவில் ஆய்வை மேற்கொண்டபோது, அப்பெண்களிடம் பல்வேறு ஆண்களின் D.N.A. ரேகைகள் பதிவாகியிருந்தது.
ராபர்ட் அதிரடியாக ஓர் காரியம் செய்தார். தம் மனைவியை மருத்துவ பரிசோதனைக்கு ஈடுபடுத்தினார். அவளிடம் மூன்று ஆண்களின் D.N.A. ரேகைகள் பதிவாகியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அத்துடன் தம்முடைய மகன்களில் ஒருவன் மட்டுமே தனக்குப் பிறந்தவன் என்பதையும் கண்டறிந்தார்
ஒரு பெண்ணில் பதிவாகியுள்ள ஆணின் D.N.A. ரேகைப் பதிவு மூன்று மாதங்களுக்கு பிறகே முழுமையாக அழியும் என்பது ராபர்டின் ஆராய்ச்சி முடிவு. அதையே மேற்காணும் திருவசனம் (2:228) பேசுகிறது.
இந்த வசனத்தைப் படித்த போது தான் ராபர்ட் ஆடிப்போனார்.
மனம் மாறினார். இஸ்லாத்தில் இணைந்தார்.
மணவிலக்கு (தலாக்) கொடுக்கப்பட்ட கணவனின் வாரிசு; அவள் வயிற்றில் இருக்கிறதா என்பதை உறுதிபட அறியவும், திருமண உறவுக்கு மதிப்பு கொடுக்கவும், அப்பெண்ணைப் பற்றி மற்றவர்கள் தவறாக பேசுவதிலிருந்து காக்கவும், தலாக் நடைபெற காரணம் என்ன என்பதை உணர்ந்து எதிர்காலத்தில் அவ்வாறு நடக்காமல் இருக்க பயிற்சி மேற்கொள்ளும் அவகாசமும் கிடைக்கிறது ஆகியவையே இதன் நோக்கமாகும்.
சில பெண்கள் ஆரம்பமாகக் கர்ப்பம் தரித்தாலும் ஓரிரு முறை மாதவிடாய் வெளிவரக்கூடும். எனவே தான் மூன்று மாதவிடாயை இறைவன் கணக்கிட்டுக் கூறுகிறான்.
கர்ப்பிணி பெண்ணாக இருந்தால் பிரசவமாகும் வரையில் இத்தா இருப்பதால், தன் வயிற்றில் வளரும் குழந்தை; தன்னை தலாக் விட்ட கணவனின் குழந்தை தான் என்று நன்றாக அறிய முடிகிறது. இதனால் குழந்தை பிறந்ததும் அதன் பொறுப்பை அவரிடம் ஒப்படைக்கவும், அக்குழந்தைக்குரிய சொத்து பாகப்பிரிவினையை முறையாகப் பெற்றுத் தரவும் முடிகிறது. அதனால் தான் அப்பெண் இத்தா இருத்தல் அவசியம் என்கிறது இஸ்லாம்.
(தலாக் சொல்லப்பட்ட) உங்கள் மனைவிகளில் எவர்கள் (அதிக வயதாகி) மாதவிடாயின் நம்பிக்கையிழந்து (இத்தாவைக் கணக்கிட) என்ன செய்வதென்று நீங்கள் சந்தேகத்திற்கு ஆளாகி விட்டால் அத்தகைய பெண்களுக்கும், மேலும் எவர்களுக்கு மாதவிடாய் ஏற்படவில்லையோ அவர்களுக்கும் இத்தாவின் தவணை மூன்று மாதங்களாகும். திருக்குர்ஆன்:- 65:4
தம்பதியர் பல வருடங்கள் பிரிந்திருந்தாலும் கணவன்
தலாக் சொல்லாமல் இருந்தால் அவர்கள் திருமண பந்தத்தில் தான் இருக்கிறார்கள். கணவன் தலாக்
கூறினால் அல்லது இறந்துவிட்டால் தான் அவர்களின் திருமண பந்தம் முறியும். இதில் பல
வருடங்கள் பிரிந்திருந்ததை இத்தாவாக கருத முடியாது. நூல்:- துர்ருல் முக்தார், ரத்துல் முக்தார்
வெறுமனே இத்தாவை நாற்பது நாட்கள் மட்டுமோ அல்லது ஓரிரு மாதங்கள் மட்டுமோ கடைபிடித்து விட்டால் போதுமானது என்று எண்ணுவது மாபெரும் குற்றமாகும். கணவன் இறந்த பெண் நான்கு மாதம் பத்து நாட்களும், தலாக் கொடுக்கப்பட்ட பெண் மூன்று மாதங்களும் கண்டிப்பாக இத்தா இருந்தாக வேண்டும். அதில் ஒரு நாள் குறைந்தாலும் இத்தா பூர்த்தியாகாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
கர்ப்பிணி
கர்ப்பிணி பெண்களுக்கு அவர்களுடைய (இத்தாவின்) தவணை அவர்கள் பிரசவிக்கும் வரையாகும். திருக்குர்ஆன்:- 65:4
உம்முசலமா (ரலி) அவர்கள் கூறியதாவது. அஸ்லம் குலத்தைச் சேர்ந்த சுபைஆ என்றழைக்கப்பட்ட ஒரு பெண் கர்ப்பிணியாக இருந்த நிலையில் அவருடைய கணவர் (சஅத் பின் கவ்லா) இறந்துவிட்டார். (நாற்பது நாட்களுக்கு பிறகு அப்பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. பிரசவத்திற்கு பின்) சுமார் பத்து நாட்கள் அப்பெண் இருந்துவிட்டு பிறகு (தான் மறுமணம் முடித்துக் கொள்வதைப் பற்றி கேட்பதற்கு) அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்.
அப்போது அண்ணலார் "(பிரசவத்துடன் உன் இத்தா முடிந்துவிட்டது) நீ (விரும்பினால்) மறுமணம் செய்து கொள்" என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-5318, முஸ்லிம்-2973
கணவன் இறக்கும்போது கர்ப்பமுற்றிருந்த மனைவியின் இத்தாக் காலம் பிரசவத்துடன் முடிந்துவிடும். கணவன் இறந்து சிறிது நேரத்தில் அவளுக்கு பிரசவம் ஏற்பட்டாலும் சரியே! நான்கு மாதம் பத்து நாட்கள் அவள் காத்திருக்க வேண்டியதில்லை. இறந்துபோன கணவனின் வாரிசு மனைவியின் வயிற்றில் இருக்கிறதா என்பதை அறிவதற்காகவே இத்தாவை மேற்கொள்கிறாள். பிரசவத்தின் மூலம் அந்த பிரச்சனை முடிந்து விடுவதால் அவள் மறுமணம் செய்து கொள்வதில் தடை இருக்காது.
சாதாரணமாக இருக்க வேண்டும்
உம்முசலமா (ரலி) அவர்கள் கூறியதாவது. அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பெண் வந்து "நாயகமே! என் மகளுடைய கணவர் இறந்துவிட்டார். (இத்தாவில் இருக்கும்) என் மகளின் கண்ணில் அஞ்சனம் (சுர்மா) இட்டுக்கொள்ளலாமா?" என்று வினவினார். அதற்கு அண்ணலார் வேண்டாம் என்று பதிலளித்தார்கள். நூல்:- புகாரீ-5336, முஸ்லிம்-2975
உம்முசலமா (ரலி) அவர்கள் கூறியதாவது. எனது கணவர்
அபூசலமா இறந்த பிறகு (இத்தா காலத்தில் கண் நோய்க்காக) நான் கண்ணில் சோற்றுக்கற்றாழைச்
சாறு இட்டுக்கொண்டேன். அப்போது அருமை நாயகம் (ஸல்) அவர்கள் ( إِنَّهُ يَشُبُّ الْوَجْهَ فَلاَ تَجْعَلِيهِ إِلاَّ بِاللَّيْلِ
وَلاَ تَمْتَشِطِي بِالطِّيبِ وَلاَ بِالْحِنَّاءِ فَإِنَّهُ خِضَابٌ
) "அது முகத்தை அழகாக்கிவிடும். ஆகவே, அதை இரவில்
தவிர நீர் பயன்படுத்தாதீர். நறுமணத்தையோ மருதாணியையோ இட்டு பூசியும் தலைமுடி வாரீக்கொள்ளாதே! ஏனெனில், அது அழகுப்
பொருள்கள் ஆகும்." என்று கூறினார்கள். நான் எதனால் தலைமுடி வாரிக்கொள்வது?
என்று வினவினேன். அதற்கு அண்ணலார்
( بِالسِّدْرِ تُغَلِّفِينَ بِهِ رَأْسَكِ ) "இலந்தை இலையை
(அதன் சாற்றை) உன் தலையில் தடவி தலை வாரிக்கொள்!" என்று பதிலளித்தார்கள். நூல்:- அபூதாவூத்-2305, நசாயீ-3481
இத்தாவுடைய நாள்களில் துக்கம் அனுஷ்டிப்பதால் இந்நாள்களில் சாதாரண ஆடைகளை அணியலாம். சாதாரணமான எண்ணெய் தேய்த்துத் தலைமுடி வாரிக்கொள்ளலாம். நறுமணம் இல்லாத பொருட்களை உடலில் தேய்த்துக் குளிக்கலாம்.
ஆனால், அலங்காரமான ஆடைகள் அணியுதல், வாசனை எண்ணெய் தேய்த்தல், உடையிலோ, உடலிலோ நறுமணம் பூசிக்கொள்ளுதல், கண்ணுக்கு மை, சுர்மா தீட்டுதல், மருதாணி வைத்தல் ஆகியவற்றை தவிர்த்திட வேண்டும்.
சுருங்கக்கூறின், இவள் மீது அந்நிய ஆணின் பார்வை தற்செயலாக பட்டுவிட்டால் அந்த ஆணுக்கு மனக்கிளர்ச்சி உண்டாகும் காரியங்களை செய்யக்கூடாது.
அந்த நேரத்தில் மட்டும்
உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது. (கணவன் இறந்து இத்தாவில் இருக்கும் பெண்) நறுமணம் பூசிக்கொள்ளக் கூடாது என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தடை விதித்திருந்தார்கள். ஆனால், (மாதவிடாயிலிருந்து) அவள் தூய்மையடையும் சமயத்தில் தவிர! அப்போது "குஸ்த்" மற்றும் "ழஃபார்" ஆகிய கோஷ்டக் கட்டையால் நறுமணப் புகையிட்டுக் கொள்ள அனுமதிக்கப்பட்டது. நூல்:- புகாரீ-5343
இத்தாவில் இருப்பவள் மாதவிடாயின் துர்வாடையைப் போக்குவதற்காகவே கோஷ்டக் கட்டையைப் பற்ற வைத்து நறுமணப் புகையிடுவது அன்றைய வழக்கமாக இருந்துள்ளது. அதனால் மாதவிடாயிலிருந்து தூய்மையடையும்போது நறுமண புகையிடுவதற்கு அனுமதியுண்டு. அதாவது இரத்தத்திலிருந்து தூய்மைப்பெற வாசனைப் பொருட்களை பயன்படுத்திக் கழுவலாம்.
மூடநம்பிக்கை
ஸைனப் பின்த் அபீசலமா (ரலி) அவர்கள் கூறியதாவது. (அறியாமைக் காலத்தில்) ஒரு பெண்ணின் கணவன் இறந்துவிட்டால் அவள் ஒரு சிறிய குடிசைக்குள் நுழைந்து கொண்டு தன் ஆடைகளிலேயே மிகவும் மோசமானதை அணிந்து கொள்வாள். ஒரு வருடம் கழியும் வரை எந்த நறுமணத்தையும் தொட மாட்டாள்.
(ஓராண்டு கழிந்த) பிறகு கழுதை, ஆடு போன்ற ஒன்று அல்லது பறவை ஒன்று அவளிடம் கொண்டு வரப்படும். அதன் மீது (அழுக்கடைந்த தன் உடலைக்) கடுமையாகத் தேய்த்துக் கொள்வாள். அவ்வாறு அவள் தேய்க்கும் எந்த உயிரினமும் (அவளது உடல் அசுத்தத்தால்) சாகாமல் இருப்பதே அரிதேயாகும்.
பிறகு அவள் (அந்த குடிசையிலிந்து) வெளியே வருவாள். அப்போது அவளிடம் ஒட்டகச் சாணம் கொடுக்கப்படும். உடனே அவள் அதை (தனக்கு முன் பக்கத்தில்) தூக்கி எறிந்துவிடுவாள். (இதுவே இத்தா முடிந்ததற்கு அடையாளமாகும்) பிறகு அவள் தான் விரும்பிய நறுமணத்தையோ, மற்றவற்றையோ பழையபடி பயன்படுத்தி கொள்வாள். அறிவிப்பாளர்:- ஹுமைத் பின் நாஃபிஉ (ரஹ்) அவர்கள் நூல்:- புகாரீ-5337, முஸ்லிம்-2975, நசாயீ-3563
மேற்கண்ட அறியாமைக் கால பழக்கத்தைப் போன்று இத்தா எனும் மார்க்கக் கடமையை நிறைவேற்றும் முறையில் தற்போதும் பல மடத்தனமான தீய பழக்கங்கள் புகுத்தப்பட்டிருக்கிறது. இதனால் எத்தனையோ விதவைகளுக்கு வேதனை மிக்க கஷ்டங்கள் ஏற்பட்டுள்ளன.
இத்தா இருக்கும் பெண் அதிக வெளிச்சமில்லாத சின்ன இருட்டறையில் தான் முடங்கிக் கிடக்கவேண்டும். வெளி உலகத்தை காணவேக் கூடாது என்றெல்லாம் கட்டுபாடு விதித்து, அவளை தனிமைப்படுத்தி தீண்டத்தகாத வனவிலங்கு போல் சிறைப்படுத்தி, எவருடனும் பேசக்கூடாது என வதைப்பது மாபெரும் தவறாகும்.
சில ஊர்களில் இத்தா இருப்பவள் நூல்கள், பத்திரிகைகள் படிப்பதற்கோ, முகக் கண்ணாடியில் தன்னைப் பார்ப்பதற்கோ அனுமதிக்கப்படுவதில்லை. அவள் வியாதியுற்றால் போதிய சிகிச்சை மேற்கொள்ள வெளியே அழைத்து செல்வதுமில்லை. திருமணம் செய்வதற்கு தடை செய்யப்பட்ட (மஹ்ரமான) நெருங்கிய உறவினர்களான தந்தை, உடன் பிறந்த சகோதரர்கள், தாய் மாமன், தன்னுடைய மகன்-மகள் வழி பேரப்பிள்ளைகள், மகளை மணந்த மருமகன், தந்தையுடன் பிறந்தவர்கள் ஆகியோரைக்கூட சந்தித்து பேசுவதற்கு அனுமதிப்பதில்லை.
இத்தா அல்லாத காலத்தில் யாரைப் பார்க்கக் கூடாதோ அவர்களைத்தான் இத்தாவுடைய காலத்திலும் பார்க்கக் கூடாது என்பது தான் மார்க்கச் சட்டம்.
இத்தாவுடைய காலத்தில் வெண்ணிற ஆடை தான் அணிய வேண்டும் வற்புறுத்தக் கூடாது. அது அவளது விருப்பமேயாகும்.
தங்குமிடம்
உங்கள் சக்திகேற்ப நீங்கள் குடியிருக்கும் இடத்திலேயே
(இத்தாவிலிருக்கும்) பெண்களை குடியிருக்கச் செய்யுங்கள். அவர்களுக்கு நெருக்கடி உண்டாக்குவதற்காக
அவர்களுக்கு தொல்லை கொடுக்காதீர்கள். திருக்குர்ஆன்:- 65:6,7
உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். (மணவிலக்கு அளிக்கப்பட்டு இத்தாவில் இருக்கும் பெண்கள்) பகிரங்கமாக மானக்கேடான காரியத்தை செய்தாலன்றி அவர்களை அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்ற வேண்டாம். அவர்களும் வெளியேறலாகாது. இவை அல்லாஹ் (விதிக்கும்) வரம்புகள். எவர் அல்லாஹ்வின் வரம்புகளை மீறுகிறாரோ, அவர் நிச்சயமாக தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொள்கிறார். (ஏனெனில் சேர்ந்து வாழ்வதற்காக) இதன் பின்னரும் அல்லாஹ் ஏதேனும் ஒரு வழியை உண்டாக்கலாம் என்பதை நீர் அறிய மாட்டீர். திருக்குர்ஆன்:- 65:1
தலாக் கொடுக்கப்பட்ட பெண், தலாக் சொல்லப்படும் முன் எந்த வீட்டில் தங்கியிருந்து பராமரிக்கப்பட்டாளோ அதே வீட்டிலேயே இத்தா நாள்களையும் கழிக்க வேண்டும்.
ஒரு தலாக் அல்லது இரு தலாக் சொல்லப்பட்ட பெண் தன் கணவன் முன் பர்தா கடைபிடிக்க தேவையில்லை. ஆனால் மீட்டிக் கொள்ள முடியாத மூன்று தலாக் சொல்லப்பட்ட பெண் கணவன் முன் பர்தாவை கடைபிடிக்க வேண்டும்.
மூன்று தலாக் சொல்லப்பட்ட சமயத்தில் ஒரே வீட்டில் இருவரும் இருக்கும் போது தவறு நேர்ந்து விடாமல் இருக்க கண்காணிக்கவும் வேண்டும். ஆக, தலாக் சொல்லப்பட்ட பெண் தன் வீட்டை விட்டு வெளியேறவும் கூடாது. அவளை வெளியேற்றவும் கூடாது என்பது மார்க்கச் சட்டம்.
ஜீவனாம்சம்
ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. (என் கணவர்) அபூ அம்ரு பின் ஹஃப்ஸ் (ரலி) அவர்கள் என்னை (மூன்றாவதாக) ஒட்டு மொத்த தலாக் சொல்லிவிட்டார். அப்போது அவர் வெளியூரில் இருந்தார். பின்னர் அவருடைய பிரதிநிதி மூலமாக தொலி நீக்கப்படாத சிறிதளவு கோதுமையை எனக்கு அனுப்பி வைத்தார். அதைக் கண்டு நான் (இது போதாது என) எரிச்சலடைந்தேன். அதற்கு அந்த பிரதிநிதி "அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் உனக்கு (ஜீவனாம்சம், தங்கும் வசதி) எதையும் தர வேண்டியதில்லை. (இது ஒரு உதவியாக தரப்பட்டது தான்)" என்று கூறினார்.
எனவே, நான் அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து நடந்ததை தெரிவித்தேன். அப்போது அண்ணலார் ( لَيْسَ لَكِ عَلَيْهِ نَفَقَةٌ ) "அவர் உனக்கு (ஜீவனாம்சம், தங்கும் வசதி) எதையும் தர வேண்டியதில்லை என்று கூறிவிட்டு, நீ (உன் தந்தையின் சகோதரர் மகன்) இப்னு உம்மி மக்தூம் (ரலி) அவரிடம் (அவரது வீட்டில்) இத்தா இருந்து கொள்" என்று கூறினார்கள். நூல்:- முஸ்லிம்-2953, திர்மிதீ-1054
தலாக் சொல்லப்பட்டு இத்தாவில் இருக்கும் பெண்களுக்கு தலாக் சொன்ன கணவன் ஜீவனாசம் மற்றும் தங்கும் வசதியும் அளித்தாக வேண்டும் இதற்கு (65:1) மேற்காணும் திருவசனமே ஆதாரமாகும் என்கின்றனர் அறிஞர்கள். நூல்:- தக்மிலத்து ஃபத்ஹுல் முல்ஹிம், அல்மின்ஹாஜ்
(தலாக் கொடுக்கப்பட்ட பெண்களாகிய) அவர்கள் கர்ப்பிணிகளாக இருந்தால் அவர்கள் பிரசவிக்கும் வரை அவர்களுக்காகச் செலவு செய்யுங்கள். திருக்குர்ஆன்:- 65:6,7
மேலும், தலாக் சொல்லப்பட்ட பெண்களுக்கு (அவர்களுடைய இத்தாவின் தவணை வரையிலும்) முறைப்படி (கணவனுடைய சொத்திலிருந்தே) பராமரிப்பு பெறத் தகுதியுண்டு. (அவ்வாறு அவர்களை பராமரிப்பது) இறையச்சமுள்ளவர்கள் மீது கடமையாகும். திருக்குர்ஆன்:- 2:241
மேற்காணும் நபிமொழிக்கு அறிஞர்கள் கூறும் விளக்கமாவது. பாத்திமா பின்த் கைஸுக்கும் அவருடைய கணவருக்கும் உறவு சீராக இல்லை. கணவரது இல்லத்தில் இருக்க அவர் விரும்பவில்லை. கணவரின் வீட்டில் தங்கினால் தமக்கு ஆபத்து ஏற்படக் கூடும் என அஞ்சியதாக அவரே ஓர் அறிவிப்பில் கூறியுள்ளார். (முஸ்லிம்-2970)
ஆகவே, அவரது தனிப்பட்ட நிலையை கருத்தில் கொண்டே அண்ணலார் பாத்திமா பின்த் கைஸுக்கு சிறப்பு சலுகை அளித்தார்கள். அவர் கணவரது வீட்டிலிருந்து எப்போது தாமே வேளியேறி விட்டாரோ, அவருக்கு ஜீவனாம்சம் கொடுக்க தேவையில்லை என்பது உறுதியாகிவிட்டது. மற்றபடி கணவரது வீட்டில் தங்கி இத்தா மேற்கொள்ள சம்மதிக்கும் மனைவிக்கு இந்த நபிமொழி ஆதாரமாகாது. (அவளுக்கு கணவன் ஜீவனாம்சம் கொடுத்தே ஆக வேண்டும்) இதுவே ஆயிஷா (ரலி) அவர்கள் கருத்துமாகும். நூல்:- அல்மின்ஹாஜ், தக்மிலத்து ஃபத்ஹுல் முல்ஹிம்
உமர் (ரலி) அவர்கள் "ஒரு பெண்ணின் (பாத்திமா பின்த் கைஸ்) சொல்லுக்காக இறை வேதத்தையும், நபிவழியையும் நாம் கைவிட முடியாது. அவர் நினைவில் உள்ளதைத் தான் சொல்கிறாரா? அல்லது மறந்து பேசுகிறாரா என்பது தெரியவில்லை. மூன்று தலாக் சொல்லப்பட்ட பெண்ணுக்கு (இத்தா கால) ஜீவனாம்சம் உண்டு" என்று குறிப்பிட்டார்கள். நூல்:- முஸ்லிம்-2963
ஒரு பெண் தலாக் சொல்லப்பட்ட பிறகு அவளை தலாக் சொல்லிய
கணவன் வீட்டிலேயே இத்தாவை கழிக்க வேண்டும். அவளது குடியிருப்புக்கும், செலவினங்களுக்கும் கணவனே பொருப்பாளி ஆவான். ஆனால், அவள் கணவன் சொல் கேளாமல் தன் விருப்பப்படி (தக்க காரணமின்றி) வீட்டை விட்டு வெளியேறி
விட்டால் அவளுக்கு செலவு பணம் தருதல் கணவன் மீது கடமையில்லை. நூல்:- ஹிதாயா
கணவன் சொல் மீறி வீட்டை விட்டு வெளியேறிய அவள்,
வீடு திரும்பும் வரை அவளுக்கு
ஜீவனாம்சம் கிடையாது. நூல்:-ஹிதாயா
சுருங்கக்கூறின், தலாக் கூறப்படும் சமயம் அப்பெண் கர்ப்பிணியாக இருந்தால், குழந்தை பிரசவிக்கும் வரையிலும், இல்லையெனில் மூன்று மாதவிடாய்க்காலம் வரையிலும் உள்ள (இத்தா காலத்தில்) மனைவிக்கு செலவினங்கள் கொடுப்பது கணவன் மீது கடமையாகும்.
மூன்று தலாக் கொடுக்கப்பட்ட பெண், அவளது இத்தாவுக்கு பிறகு கணவன்-மனைவி என்ற பந்தம் முற்றிலுமாக நீங்கிவிடுகிறது. அதன்பிறகு அவளுக்காக எதையும் செலவளிக்க வேண்டிய கடமை கணவனுக்கு இல்லை. அவள் வேறொருவரை மறுமணம் முடிக்கும் வரை அல்லது அவள் இறக்கும் வரை அவளுக்கு ஜீவனாம்சம் அல்லது நஷ்டஈடு எதுவும் கொடுக்க வேண்டிய கடமை கணவனுக்கு இல்லை என்கிறது இஸ்லாம். அவ்வாறு கொடுப்பது பல்வேறு தீமைகளுக்கு வழிவகுப்பதாக அமைந்துவிடும்.
ஒருவன் தான் நோயாளியாக இருக்கும் போது தனது மனைவியை தலாக் கூறினான். பிறகு அவனது மனைவி இத்தா இருக்கும் காலத்திலேயே அவன் இறந்துவிட்டான். இப்பெண் தன் கணவனின் சொத்தில் பாகம் பெறும் வாரிசாவாள். நூல்:- துர்ருல் முக்தார்
பாலூட்டும் காலம்
(தலாக் கூறப்பட்ட பெண்கள் அவர்கள் தனது குழந்தைக்கு பாலூட்டும் வரையில்) அவர்களுக்கு ஆடையும், உணவும் முறைப்படி கொடுத்து வருவது குழந்தையின் தந்தை மீது கடமையாகும். யாதொரு ஆத்மாவும் அதன் சக்திக்கு மேல் (செலவு செய்யும்படியாக) நிர்பந்திக்கப்பட மாட்டாது. (ஆகவே) குழந்தைக்காக (தனக்கு வேண்டிய உணவின்றியே பாலூட்டும்படி) தாயையோ அல்லது (சக்திக்கு அதிகமாக கொடுக்கும்படி) தந்தையையோ துன்புறுத்தப்பட மாட்டாது. திருக்குர்ஆன்:- 2:233
தலாக் கூறப்பட்ட பெண்ணுக்கு பாலூட்டும் குழந்தை இருந்து, அதற்கு அவள் பாலூட்டினால் அவளுக்குரிய ஜீவனாம்சத் தொகையை தலாக் கூறிய கணவனிடம் பெற்றுக் கொள்ள அவளுக்கு உரிமை உண்டு.
அவள் குழந்தைக்கு பாலூட்ட மறுத்தால் அதற்கு அவளை நிர்பந்திக்கும் உரிமை கணவனுக்கு இல்லை. அவள் விரும்பினால் பாலூட்டலாம். இல்லையேல் மறுக்கலாம். அது அவள் விருப்பமாகும்.
அவருடைய குழந்தைகள் அப்பெண்ணின் பராமரிப்பில் இருந்து வந்தால் அக்குழந்தைகளுக்கு ஆகும் செலவினங்களை நியாயமான முறையில் கொடுத்து வருவது கணவனின் மீது கடமையாகும்.
வெளியே செல்லுதல்
மனைவிகளை விட்டு இறக்கும் உங்களிலுள்ளவர்கள் தங்கள் மனைவிகளை (வீட்டை விட்டு) அப்புறப்படுத்திவிடாமல் ஓர் ஆண்டு வரையில் உணவு, உடை போன்ற செலவுகளை வழங்குமாறு (வாரிசுகளுக்கு) மரண சாசனம் கூறவும். ஆனால், அவர்கள் (தாமாகவோ) வெளியில் சென்று தங்களுக்கு முறைப்படி (மறுமணம்) ஏதும் செய்து கொண்டால் அதனால் உங்கள் மீது குற்றமில்லை. அல்லாஹ் மிகைத்தவனும், நுண்ணறிவு உடையவனுமாக இருக்கிறான். திருக்குர்ஆன்:- 2:240
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது. என் தாயின் சகோதரி தலாக் சொல்லப்பட்டார். அவர் இத்தாவில் இருந்தபோது தமது பேரிச்ச மரத்தின் கனிகளைப் பறிக்க விரும்பினார். (இத்தருணத்தில்) நீ வெளியே செல்லக் கூடாதென அவரை ஒருவர் கண்டித்தார்.
ஆகவே, என் சிறிய தாயின் சகோதரி அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அது குறித்து தெரிவித்தபோது அண்ணலார், ( بَلَى فَجُدِّي نَخْلَكِ فَإِنَّكِ عَسَى أَنْ تَصَدَّقِي أَوْ تَفْعَلِي مَعْرُوفًا ) "ஆம்! நீ சென்று உமது பேரிச்ச மரத்தின் கனிகளைப் பறித்துக் கொள்! ஏனெனில் (அதில் கிடைக்கும் வருமானத்தில்) நீ தர்மம் செய்யக்கூடும். அல்லது ஏதேனும் நல்லறம் புரியக்கூடும்" என்று கூறினார்கள். நூல்:- முஸ்லிம்-2972, அபூதாவூத்-2297
கணவன் இறந்த பிறகு மனைவியின் இத்தா காலங்களில் அவளுக்கு
தேவையான உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றை கணவனின் வாரிசுகள் அல்லது உறவினர்
அளித்து வருவது பெருந்தன்மை ஆகும்.
இறந்துபோன கணவனின் சொத்துகளில் அவளுக்குரிய பாகத்தை முழுமையாக கொடுத்துவிட வேண்டும். அவளின் இத்தா காலத்தில் உள்ள சொந்த செலவுகளை அவளின் பாகத்திலிருந்தே எடுத்து கொடுத்து விட்டு இந்த செலவு போக எஞ்சியதை அவளுக்கு பாகமாக கொடுத்துவிட வேண்டும்.
இறந்துபோன தன் கணவருக்கு சொத்துக்களோ அல்லது தன்னுடைய அன்றாட தேவைகளான உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றை ஏற்பாடு செய்து தருவதற்கு உறவினர்களோ இல்லையெனில் இந்த பெண் இத்தா நாள்களிலேயே வெளியே சென்று பணி புரியலாம். பகல் நேரத்தில் வெளியே சென்று பணி புரிந்துவிட்டு இரவு நேரத்தில் வீட்டில் தங்கி இருத்தல் வேண்டும்.
இதுபோல் விவசாயம், தொழில் போன்ற மேற்பார்வை செய்ய யாரும் இல்லாதிருந்தும் இவளும் சென்று பார்வையிடாமல் இருக்கையில் பெரும் நஷ்டம் உண்டாகும் என்ற நிலையிருந்தால் இதற்காக தேவையான அளவுக்கு மட்டும் வெளியே சென்று வர அனுமதியுண்டு.
ஆனால், எந்த அவசியத்தை முன்னிட்டு வெளியே செல்கின்றாளோ, அந்த அவசியம் முடிந்த பிறகும் தன் மனம் போன போக்கில் வெளியே இருக்கக்கூடாது.
மறுமணம்
(இத்தா இருக்கும் பெண்களை நீங்கள் திருமணம் செய்து விரும்பினால் உங்களின்) திருமண விருப்பத்தை நீங்கள் ஜாடையாக அறிவிப்பதினாலோ உங்கள் மீது குற்றமில்லை. (ஏனெனில்) நீங்கள் (உங்கள் எண்ணத்தை இத்தா முடிந்த பின்) அவர்களிடம் நிச்சயமாகக் கூறுவீர்கள் என்பதை அல்லாஹ் நன்கறிவான். அதனால் நீங்கள் கண்ணியமான முறையில் (ஜாடையாகக்) கூறுவதைத் தவிர, அவர்களுடன் இரகசியமாகவும் வாக்குறுதி செய்து கொள்ள வேண்டாம். மேலும் இத்தாவின் தவணை முடிவதற்குள் (அவர்களை) திருமணம் செய்து கொள்ளவும் நாடாதீர்கள். திருக்குர்ஆன்:- 2:235
சயீத் பின் முசையப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் ஆட்சி காலத்தில் ருஷைதிஸ் ஸகாஃபீ என்பவர் தன் மனைவியாக இருந்த துலைஹதல் அஸதிய்யா என்பவளை தலாக் சொல்லிவிட்டார். பின்னர் அவள் தன் இத்தா காலம் முழுமையடைவதற்குள் மற்றொருவரை மணமுடித்து கொண்டாள். இதை அறிந்த ஜனாதிபதி அவர்கள் அவ்விருவரையும் சாட்டையால் சில அடிகள் அடித்துவிட்டு அவ்விருவரையும் பிரித்து வைத்து விட்டார்கள்.
ஒரு பெண் இத்தா காலத்தில் மறுமணம் செய்துகொண்டு, மணமுடித்துக் கொண்டவன் அப்பெண்ணுடன் உடலுறவு கொள்ளாமல் இருந்தால் அவ்விருவரையும் பிரித்துவிட வேண்டும். என்றாலும் அப்பெண் முந்திய கணவனின் இத்தாவை முழுமைப்படுத்த வேண்டும். பிந்தியவர் (தவறுதலாக மணமுடித்தவர்) அவளை பெண் கேட்டு வருபவர்களில் ஒருவராகி விடுவார்.
ஆனால், அவர் அப்பெண்ணுடன் உடலுறவு கொண்டிருந்தால் அவ்விருவரையும் பிரித்துவிட வேண்டும். அப்பெண் முந்திய கணவனின் இத்தாவை முழுமைப்படுத்த வேண்டும். மீண்டும் பிந்தியவரின் இத்தாவை முழுமைப்படுத்த வேண்டும். எனினும் இவ்விருவரும் எக்காலமும் ஒன்று சேர முடியாதென்றும் தீர்ப்பளித்துள்ளார்கள். நூல்:- முஅத்தா மாலிக்-1121
தலாக் சொல்லப்பட்ட ஒரு பெண் இத்தாவை முழுமைப்படுத்துவதற்கு முன்னர், அவள் மறுமணம் செய்து கொள்ளக்கூடாது. அதையும் மீறி அவள் மறுமணம் செய்து கொண்டால் அத்திருமணம் செல்லாது என்பதுடன் இருவரையும் பிரித்து வைக்கவேண்டும். மறுமணம் செய்து கொண்டவனும், அதற்கு உதவி புரிந்தோரும் பெரும் பாவம் செய்தோராக ஆவர்.
இத்தாவில் இருக்கும் பெண்ணிடம் மறுமணம் சம்பந்தமாக நேரடியாக பேசுவது கூடாது. ஆனால் அவளிடம் மறுமணம் சம்பந்தமாக ஜாடையான வார்த்தைகளால் தெரிவிக்கலாம் தவறில்லை. இத்தா இருக்கும் பெண், மறுமணம் முடித்துக்கொள்ள விரும்புவோர் இல்லத்தில் தங்குவது, அங்கு சென்று வருவது சரியல்ல. அது பாதுகாப்புக்கு உகந்ததல்ல.
இத்தா இருக்கும் பெண், இத்தா முடியும் வரை மறுமணம் செய்து கொள்ளவோ, தன்னைப் பெண் பேசுவதற்கு வாய்ப்பளிக்கவோ கூடாது. அப்படியொரு நிலை உருவாவதைத் தடுப்பதே இந்த துக்கம் கடைபிடிப்பதன் அடிப்படை நோக்கமாகும். அதற்கேற்ப அவள் நடந்து கொள்ள வேண்டும்.
எனவே, நாம் இஸ்லாம் கூறும் சட்டங்களை முறையாக விளங்க
வேண்டும். அதிலும் குறிப்பாக இத்தாவின் சட்டங்களை முறையாக விளங்கி அதனை முழுமையாக கடைபிடிப்போமாக!
ஆமீன்!
மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951
Mashalla super
ReplyDelete