மாத்தியோசி
وَشَهِدَ شَاهِدٌ مِنْ أَهْلِهَا إِنْ كَانَ قَمِيصُهُ قُدَّ مِنْ
قُبُلٍ فَصَدَقَتْ وَهُوَ مِنَ الْكَاذِبِينَ
وَإِنْ كَانَ قَمِيصُهُ قُدَّ مِنْ دُبُرٍ فَكَذَبَتْ وَهُوَ مِنَ
الصَّادِقِينَ
அப்போது அவளது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், "அவரது மேலங்கி முன்பக்கம் கிழிக்கப்பட்டிருந்தால் அவள் சொன்னது உண்மை; அவர் பொய்யர்களில் ஒருவர்" என்று சாட்சியம் கூறினார். அவரது மேலங்கி பின்பக்கம் கிழிக்கப்பட்டிருந்தால் அவள் சொன்னது பொய்; அவர் உண்மையாளர்களில் ஒருவர்" (என்றும் அவர் கூறினார்). திருக்குர்ஆன்:- 12:26,27
போட்டிகள் நிறைந்த உலகில் நாம் மாறுபட்டுச் சிந்தித்து செயல்படும்போது வெற்றிகளை குவிக்கலாம். பள்ளியில், கல்லூரியில், நேர்முகத் தேர்வுகளில், பொது இடங்களில், வியாபாரத் தலங்களில், மாபெரும் சபைகளில் நமது வித்தியாசத் தன்மைதான் நமது விசிட்டிங் கார்டாக அமைகிறது. வெற்றிக்கு வழிவகுக்கிறது.
மாறுபட்ட சிந்தனை என்பது புதிர் வகையைச் சேர்ந்தது. "Lateral thinking" (லாட்டரல் திங்கிங்) பழகிய பாதையில் இருந்து விலகி புதிதாய் யோசிப்பது என்று பொருள். லாட்டரல் திங்கிங் என்ற சொற்றொடரை 1960 ஆண்டு இங்கிலாந்தைச் சேர்ந்த "டாக்டர் எட்வர்ட்டி போனோ" என்பவர் கண்டுபிடித்தார்.
இவர் பெரிய நிறுவனங்களின் ஊழியர்களுக்கு சிந்தனை சக்தியை அதிகரிக்க, மாறுபட்ட சிந்தனைக்கான பயிற்சி வகுப்புகள் எடுத்திருக்கிறார்.
மாறுபட்ட சிந்தனையைக் கற்றுக் கொள்ளவும் கற்றுக் கொடுத்து சம்பாதிக்கவும் அமெரிக்க, இங்கிலாந்து, ஜெர்மன் போன்ற வளர்ந்த நாடுகளில் ஏராளமான சிந்தனைவாதிகள் வந்துள்ளனர். இந்த சிந்தனைப் பயிற்சிக்காக ஆயிரக்கணக்கான ரூபாய் வசூலிக்கிறார்கள்.
வெற்றி தரும் இந்த மாறுபட்ட சிந்தனை திருக்குர்ஆனிலும், நபிமொழிகளிலும், அதன் வழிவந்த நல்லவர்கள் வாழ்க்கையிலும் நிறைய கொட்டிக் கிடக்கிறது.
கிழிந்துபோன சட்டை
எகிப்து நாட்டு அமைச்சரின் மனைவி வசீகரத் தோற்றமுடைய அழகு நிறைந்த யூசுப் (அலை) அவர்களை தன் ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தினாள். யூசுப் (அலை) அவர்கள் அவளிடமிருந்து தப்பி ஓடினார். அவரை வீட்டுக்குள் திருப்பி கொண்டு வர அவளும் ஓடி வந்தாள். வழியிலேயே அவரைப் பிடித்து விட்ட அவள், அவரது சட்டையை பின்புறமாகப் பிடித்திழுத்து அதைப் பலமாகக் கிழித்து விட்டாள். தொடர்ந்து யூசுப் (அலை) அவர்கள் ஓட அவளும் பின் தொடர்ந்தாள். இந்நிலையில் அவளுடைய கணவர் தலைவாயிலில் நிற்பதை அவ்விருவரும் கண்டனர்.
அப்போது அவள், சூழ்ச்சியாலும் சதியாலும்
நெருக்கடியில் இருந்து மீள முயன்றாள். கணவரிடம் தன்னை நிரபராதியாகக் காட்டிக்கொண்ட
அவள், யூசுப் தன்னைக் கெடுக்க முயன்றதாக
பழி சுமத்தி, உங்கள் மனைவியிடம் தவறாக நடக்க விரும்பியவருக்கு
சிறை தண்டனை அல்லது வலிக்கும் அளவுக்கு கடுமையாக வதைக்கும் வேதனை தவிர வேறு தண்டனை
உண்டா? என்று கேட்டாள்.
அப்போது யூசுப் (அலை) அவர்கள் சத்தியமிட்டு, இவள் தான், தன் விருப்பத்திற்கு இணங்குமாறு என்னை அழைத்தாள். அதாவது இவள் தான் என்னைத் தன் பக்கம் இழுத்து என் மேலங்கியையே கிழித்துவிட்டாள். என்மேல் தவறொன்றுமில்லை என்று நடந்த உண்மையை சொன்னார். (அப்போது அமைச்சருக்கு ஒன்றும் புரியவில்லை. குற்றம் செய்தது யார்? என்று அவரால் கண்டுபிடிக்க இயலவில்லை. கட்டிய மனைவி சொல்வது உண்மையா? பண்புள்ள பணியாளர் சொல்வது உண்மையா? எது உண்மை? என்று அவரால் விளங்க முடியவில்லை.)
அப்போது அவளது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், "யூசுபின் சட்டை முன்பக்கமாக கிழிக்கப்பட்டிருந்தால் அவர் தான் குற்றவாளி. அவள் கூறுவது உண்மை.
ஏனெனில், அவர் அவளை அழைத்து அவள் மறுத்திருந்தால், அவள் அவரது நெஞ்சைப் பிடித்துத் தள்ளி இருப்பாள். அப்போது அவரது சட்டையை முன்பக்கமாக கிழித்திருப்பாள். எனவே அவள் கூறுவதே சரியானது.
அவரது சட்டை பின்பக்கமாக கிழிக்கப்பட்டிருந்தால், அவள் தான் குற்றவாளி. அவர் உண்மையாளர். ஏனெனில், அவளிடமிருந்து அவர் தப்பி ஓட, அவள் விரட்ட, அவரைத் தன்பக்கம் இழுக்கப் பின்பக்க சட்டையைப் பிடித்து அவள் இழுத்திருப்பாள். அப்போது முதுகுப் பக்கத்தில் சட்டை கிழிந்திருக்கும்" என்று கிழிந்து போன ஒரு சட்டையை வைத்து அழகிய தீர்ப்பை தெளிவாக எடுத்துரைத்தார். இதைப்பற்றித்தான் தலைப்பில் காணும் திருவசனங்கள் கூறுகிறது. நூல்:- தஃப்சீர் இப்னு கஸீர்
நமது செல்வம்
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒரு முறை அருமை நாயகம் (ஸல்) அவர்கள், ( أَيُّكُمْ مَالُ وَارِثِهِ أَحَبُّ إِلَيْهِ مِنْ مَالِهِ ) "உங்களில் யாருக்காவது தமது செல்வத்தை விடத் தம்முடைய வாரிசுகளின் செல்வம் விருப்பமானதாக இருக்குமா? என்று கேட்டார்கள். தோழர்கள், "நாயகமே! எங்கள் அனைவருக்குமே (வாரிசுகளின் செல்வத்தைவிட) எங்களின் செல்வமே விருப்பமானதாகும்" என்று பதிலளித்தனர். அண்ணலார், ( فَإِنَّ مَالَهُ مَا قَدَّمَ، وَمَالُ وَارِثِهِ مَا أَخَّرَ ) "அவ்வாறாயின் ஒருவர் (இறப்பதற்கு முன் அறவழியில்) எதைச் செலவிட்டாரோ அது தான் அவரது செல்வமாகும். (இறக்கும்போது) எதை விட்டுச் செல்கிறாரோ அது அவருடைய வாரிசுகளின் செல்வமாகும்" என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-6442
ஒருவர் உயிருடன் இருக்கும்போதே மனத்தூய்மையுடன் அற வழிகளில் செலவு செய்த செல்வம்,
அவருக்கு நிச்சயமாக பயன் தரும்.
எனவே, இது தான் அவரது செல்வம் என்று சொன்னால்
மிகையாகாது.
ஆனால், அவர் விட்டு செல்வம் அவருடைய வாரிசுகள் பங்கு போட்டுக் கொள்வார்கள். செல்வம்
வாரிசுகளுக்கு கைமாறிய பின் அதன் நன்மை அல்லது தீமை வாரிசுகளை சேரும். அவர்கள் விரும்பினால்
அவரது நன்மைக்காக செலவளிப்பார்கள். அதையும் உறுதியாக சொல்ல முடியாது.
ஆகவே, உயிர் வாழும் போதே தர்மங்கள் செய்து பலனை மறுமையில் அடைய முயல வேண்டும். அதுதான் உண்மையில் அவரது செல்வமாகும். அதற்காக வாரிசுகளுக்கு எதையும் வைக்காமல் எல்லா செல்வங்களையும் தர்மத்திற்கு எழுதி வைப்பதும் கூடாது. ஏனெனில் வாரிசுகளை மக்களிடம் கையேந்தும் நிலையில் விட்டுச் செல்வதை விட தன்னிறைவுள்ளவர்களாக விட்டுச் செல்வதே மேலானதாகும் இயன்றவரை தர்மம் செய்து அதற்குரிய பலனை மறுமையில் தேடிக்கொள்ள வேண்டும். இவ்வாறு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மாறுப்பட்டுச் சிந்திக்க கற்றுத் தருகிறார்கள்.
சுருங்கக்கூறின், மனைவி மக்களுக்காக செல்வம் சேர்க்கும்போது, நம்முடைய மறுமை வாழ்க்கைக்காகவும் கொஞ்சம் சேர்த்துவைத்துக் கொள்ளவேண்டும் என்பது இந்த நபிமொழியின் கருத்தாகும்.
எல்லாம் மீதமுள்ளது
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. (நபிகள் நாயகம் - ஸல் அவர்களின் குடும்பத்தார்) ஆடொன்றை அறுத்தனர். அப்பொழுது அண்ணலார், ( مَا بَقِيَ مِنْهَا ) "அந்த ஆட்டில் ஏதாவது மீதமுள்ளதா? என்று கேட்டார்கள். நான், "அதில் அதன் முன் கால் சப்பையைத் தவிர வேறு எதுவும் மீதமில்லை" (மற்ற அனைத்தும் தர்மம் செய்யப்பட்டுவிட்டது) என்று சொன்னேன். அதற்கு அண்ணலார், ( بَقِيَ كُلُّهَا غَيْرَ كَتِفِهَا ) "எல்லாம் மீதமுள்ளது, அந்த முன்கால் சப்பைத் தவிர!" என்று கூறினார்கள். நூல்:- திர்மிதீ-2394
எதுவெல்லாம் தர்மமாக கொடுக்கப்பட்டதோ அதன் கூலியும் நன்மையும் நமக்காக பாதுகாப்பாய் உள்ளது. எனவே, அது குறித்து அது தீர்ந்து விட்டது என்று ஏன் சொல்ல வேண்டும்? அவ்வாறு சொல்ல தேவையில்லை. தர்மம் செய்தவை அனைத்தும் நமக்குரியவை தான். தர்மம் செய்யாத மீதமுள்ளவை குறித்து அது, நமக்கு முழு பயன் தருமா? என்று தீர்க்கமாக சொல்ல இயலாது என்பதை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் உணர்த்துகிறார்கள்.
எதிரிகளின் எண்ணிக்கையை அறிய...
பத்ருப் போர் நடைபெறுவதற்கு முன்பு எதிரிகளைப் பற்றி மேலும் பல புதிய தகவல்களை
அறிந்து வருவதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு சிலரை அனுப்பி வைத்தார்கள். அவர்கள்
பத்ரின் தண்ணீர் உள்ள இடத்திற்குச் சென்றபோது அங்கு இருவர் மக்கா படைகளுக்காக தண்ணீர்
எடுத்துக் கொண்டிருந்தனர். அவர்களை கைது செய்து அண்ணலாரிடம் கொண்டு வந்தார்கள். அப்போது
அண்ணலார் தொழுது கொண்டிருந்தார்கள்.
அவர்களிடம் நபித்தோழர்கள் விசாரிக்கவே, அவர்கள் நாங்கள் குறைஷிகளுக்கு தண்ணீர் எடுத்துச் செல்ல வந்திருக்கிறோம் என்றனர். நபித்தோழர்கள் அவர்களிடம், "உங்கள் படையின் எண்ணிக்கை எவ்வளவு?" என்று விசாரித்தபோது, அவர்களின் எண்ணிக்கையை கூறாமல் அல்லாஹ்வின் மீதாணையாக! அதிகமான பேர் இருக்கின்றனர் என்று கூறினர். பிறகு நபித்தோழர்கள் அவர்களை அடித்து விசாரித்தனர். அப்போதும் அவர்கள் அவ்விதமாகவே பதிலளித்தனர்.
அண்ணலார் தொழுகையை முடித்ததும், அவர்களை அடித்ததற்காக தங்களது தோழர்களைக் கண்டித்தார்கள்.
பிறகு அண்ணலார், அவ்விருவரையும் அழைத்து "நீங்கள் குறைஷியரைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள், ( مَا عِدّتُهُمْ ؟ ) “அவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்?” என்று கேட்டார்கள். மீண்டும் அவர்கள் "தெரியாது" என்று கூறினர். பிறகு அண்ணலார், ( كَمْ يَنْحَرُونَ كُلَّ يَوْمٍ؟ ) "அவர்கள் ஒவ்வொரு நாளும் எத்தனை ஒட்டகங்கள் அறுக்கிறார்கள்? என்று கேட்டார்கள். அதற்கு, ( يَوْمًا تِسْعًا، وَيَوْمًا عَشْرًا ) "அவர்கள் ஒரு நாள் ஒன்பது மறுநாள் பத்து ஒட்டகங்கள் அறுக்கிறார்கள்" என்று கூறினர். அப்போது அண்ணலார், ( الْقَوْمُ مَا بَيْنَ التِّسْعِمِائَةِ إِلَى الْأَلْفِ ) "அவர்கள் தொள்ளாயிரத்திலிருந்து ஆயிரம் பேர் வரை இருப்பார்கள்" என்றார்கள். நூல்:- அல்பிதாயா வந்நிஹாயா, அர்ரஹீகுல் மக்தூம்
ஒரு ஒட்டகம் 100 பேருக்கு போதுமானதாகும். அதைக் கணக்கிட்டு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு கூறினார்கள். கேட்க வேண்டிய கேள்வியை கொஞ்சம் மாற்றிப் போட்டு வேறு விதமாக கேட்டார்கள். தேவையான பதிலும் கிடைத்தது.
நாம் தினசரி சந்திக்கிற எல்லா பிரச்சினைகளுக்கும், சவால்களுக்கும் கொஞ்சம் வித்தியாசமாக யோசித்தால் சுலபத்தில் தீர்வு கண்டு விடலாம்.
நமக்கு பிறர் செய்ததை ஞாபகம் வைத்துக் கொள்வது இடப்பக்க மூளை. பதிலுக்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானிப்பது வலப்பக்க மூளை. இந்த இரண்டில் எது உசத்தி, எது மட்டம் என்றெல்லாம் யோசிக்கக்கூடாது. இரண்டுமே முக்கியம் தான். சாதாரணமாக எல்லோரும் வலக்கை இடக்கை இரண்டையும் பயன்படுத்துகின்றோமில்லையா? அது போல மூளையின் இரண்டு பகுதிகளையும் பயன்படுத்துகின்றவர்கள் தான் பெரிய அளவில் வெற்றியடைகிறார்கள்.
படிப்பது, எழுதுவது,
மனனமிடுவது போன்றவற்றுக்கெல்லாம்
இடப்பக்க மூளை தான் உபயோகப்படுகிறது. ஆனால், மூளையின் வலப்பக்கத்தில்தான் புதுமைச் சிந்தனைகள்
உதிக்கின்றன. நம்மை சிறந்த படைப்பாளியாக்குகின்றன என்கிறது அறிவியல்.
எந்த ஆணும் தீண்டியதில்லை
ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களிடம் ஒரு பெண் வந்து, "நான் இன்னும் மணமுடிக்கவில்லை. இதுவரை என்னை எந்த ஆணும் தீண்டியதும் இல்லை. ஆனாலும் தற்போது நான் கர்ப்பமுற்று இருக்கிறேன்" என்று தனது பிரச்சனையை முறையிட்டாள்.
ஜனாதிபதி அவர்கள் கோபத்துடன், "தவறை செய்துவிட்டு தப்பித்துவிடலாம் என்று நினைக்கிறாயா? முடியாது. நிச்சயமாக உனக்கு சரியான தண்டனை கொடுக்கப்படும்" என்றார்கள்.
அந்தப் பெண், "ஜனாதிபதி அவர்களே! நான் தான் எந்த தவறும் செய்யவில்லையே! பிறகு நான் ஏன் தண்டனையை எண்ணி அஞ்ச வேண்டும்?" என்றாள்.
ஜனாதிபதி அவர்கள் இதைப்பற்றி அலீ (ரலி) அவர்களிடம் கூறினார்கள். உடனே அலீ (ரலி) அவர்கள் அந்தப் பெண்ணிடம், "மூன்று மாதங்களுக்கு முன்பு நீ எங்கே இருந்தாய்?" என்றார்கள். அவள், "எனது சகோதரி வீட்டு திருமணம் பக்கத்திலுள்ள கிராமத்தில் நடைபெற்றது. அப்போது நான் அங்கு இருந்தேன்" என்றாள். அலீ (ரலி) அவர்கள், "போகும் வழியில் நடந்தது பற்றி விவரமாகச் சொல்!" என்றார்கள். அப்பெண், "நான் போகும் வழியில் ஒதுக்குப்புறமாக இருந்த மரத்தடியில் சிறுநீர் கழித்துவிட்டு சுத்தம் செய்ய தண்ணீர் இல்லாததால் அந்த மரப்பொந்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு பஞ்சை எடுத்து சுத்தம் செய்தேன்" என்றாள்.
அலீ (ரலி) அவர்கள் ஜனாதிபதி அவர்களிடம், "மூன்று மாதங்களுக்கு முன் அந்த குறிப்பிட்ட இடத்தில் என்ன நடந்தது என்பது பற்றி அரசாங்கப் பதிவேட்டில் ஏதேனும் குறிப்பு இருக்கிறதா? என்று கேட்டார்கள். ஜனாதிபதி அவர்கள், பதிவேட்டை பார்த்தபோது அங்கே ஓர் சிறிய யுத்தம் நடந்துள்ளது. யுத்தம் முடிந்ததும் அங்கே மூன்று இரவுகள் குறிப்பிட்ட நான்கு அல்லது ஐந்து பேர் தங்கி இருப்பது போர் மரபு" என்றார்கள்.
அலீ (ரலி) அவர்கள், "ஜனாதிபதி அவர்களே! அங்கே தங்கியிருந்தவர்களை அழையுங்கள்! நான் விசாரணை செய்ய வேண்டும்" என்றார்கள். அலீ (ரலி) அவர்கள், அங்கு தங்கியிருந்த நபித்தோழர்களிடம் விசாரணை செய்யும்போது அதில் ஒரு இளைஞர், "அலீ (ரலி) அவர்களே! அன்றிரவு இத்தகைய பாதுகாப்பில் இருந்த போது என்னையும் அறியாமல் எனக்கு விந்து வெளியாகிவிட்டது.
அறப்போரால் நபித்தோழர்களின் புனித இரத்தம் சிந்திய இந்த பூமியில் என் விந்துப்பட்டு கண்ணியக் குறைவு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஒரு பஞ்சில் சுத்தம் செய்து அருகிலுள்ள ஒரு மரப்பொந்தில் வைத்துவிட்டேன். விடிந்ததும் அதை எடுத்து கொண்டு போய் யுத்த களத்திற்கு அப்பால் போட்டுவிடலாம் என்று எண்ணியிருந்தேன். மறுநாள் காலையில் அந்த மரப்பொந்தில் பஞ்சை தேடினேன் காணவில்லை" என்றார்.
அப்போது அலீ (ரலி) அவர்கள் அந்தப் பெண்ணின் செய்கையை எடுத்துக்கூறி அப்பெண் ஆணின் தீண்டலின்றி கர்ப்பமுற்றதற்கு காரணத்தை விளக்கினார்கள். பிறகு அலீ (ரலி) அவர்கள் அப்பெண்ணையும், அந்த இளைஞரையும் அழைத்து, "நீங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம். ஏனெனில், இது இறைவன் சேர்த்த மணப்பொருத்தம்" என்றார்கள். இருவருக்கும் திருமணம் இனிதே நடந்தது.
அப்போது ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள், "அலீ (ரலி) அவர்கள் இல்லையென்றால் இந்த உமர் நாசமாக
போயிருப்பான்" என்றார்கள்.
புதுமையாக யோசிக்கிறவர்களுக்கு சிந்தனைவளம் எப்போதும் குறைவதில்லை. இந்த சிந்தனைகளை கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற்றுவதன் மூலம் படைப்புத்திறனின் உச்சமான "ஜீனியஸ்" நிலையை எட்ட முடியும்.
உலகின் எந்த துறையாக இருந்தாலும் சரி, எல்லோரும் செய்வதை அப்படியே பின்பற்றுகிறவர்களைவிட புதுமையாகச் சிந்தித்துச் செயல்படுகிறவர்களுக்கு தான் மரியாதை அதிகம். அந்த மரியாதையைப் பெறுவதற்கு நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
சிறந்த விரிவுரையாளர்
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. உமர் (ரலி) அவர்கள் பத்ருப் போரில் கலந்து கொண்ட மூத்த வயதினருடன் வயதில் இளையவனான எனக்கும் (தமது அவையில்) இடமளித்து வந்தார்கள். ஆகவே, அவர்களில் சிலர், "எங்களுடன் இந்த இளைஞருக்கு ஏன் இடம் அளிக்கிறீர்கள்? எங்களுக்கு அவர் வயதில் பிள்ளைகள் கூட இருக்கின்றனரே?" என்று கேட்டனர்.
அதற்கு உமர் (ரலி) அவர்கள், "அவர் நீங்கள் அறிந்து வைத்துள்ள கல்வித்தகுதி படைத்தவர்கள் ஒருவர்" என்று பதிலளித்தார்கள். பிறகு, ஒரு நாள் அவர்களையெல்லாம் அழைத்தார்கள். அவர்களுடன் என்னையும் அழைத்தார்கள். அவர்களுக்கு என் தகுதியைப் பற்றி உணர்த்திக் காட்டுவதற்காகவே என்னை அவர்கள் அழைத்ததாக கருதுகிறேன்.
(அவர்களெல்லோரும் வந்தவுடன் அவர்களிடம்) உமர் (ரலி) அவர்கள் "(நபியே!) இறைவனின் உதவியும் வெற்றியும் வந்து, மக்கள் கூட்டம் கூட்டமாக இறைமார்க்கத்தில் இணைவதை
நீர் பார்க்கும்போது உன்னுடைய இறைவனைப் புகழ்ந்து அவனைத் துதிப்பீராக! மேலும் அவனிடம்
பாவமன்னிப்புக் கோருவீராக!" எனும் (திருக்குர்ஆனின் 110ஆவது 'அந்நஸ்ர்') அத்தியாயத்தை இறுதிவரை
ஓதிக்காட்டி, "இதற்கு நீங்கள் என்ன
விளக்கம் கூறுகிறீர்கள்?" என்று கேட்டார்கள்.
அவர்களில் சிலர், "நமக்கு உதவியும் வெற்றியும்
அளிக்கப்படும்போது அல்லாஹ்வைப் புகழும்படியும் அவனிடம் பாவமன்னிப்புக் கோரும்படியும்
நாம் கட்டளையிடப்பட்டுள்ளோம்" என்று விளக்கம் கூறினர். சிலர் எங்களுக்குத் தெரியாது
என்றனர். அல்லது அவர்களில் சிலர் எந்தக் கருத்தும் கூறவில்லை. பிறகு உமர் (ரலி) அவர்கள்
என்னிடம் ( يَا ابْنَ عَبَّاسٍ أَكَذَاكَ
تَقُولُ
) “இப்னு அப்பாஸே! நீங்களும் இப்படித்தான் கூறுகிறீர்களா?”
என்று கேட்டார்கள். நான்,
"இல்லை" என்றேன். சரி
நீங்கள் என்ன கூறுகிறீர்கள்? என்று கேட்டார்கள்.
நான், "அது அல்லாஹ்வின் தன்
தூதர் (ஸல்) அவர்களுக்கு, அவர்களின் ஆயுட் காலம்
முடிந்து (இறப்பு நெருங்கி)விட்டது என அறிவித்த அறிவிப்பாகும். ஆகவே, 'அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வந்து'
என்பதில் உள்ள 'வெற்றி' என்பது மக்கா வெற்றியைக் குறிக்கும். மக்கா வெற்றிதான்,
(நபியே!) உமது ஆயுட்காலம் முடியவிற்பதற்கான
அடையாளம். ஆகவே, நீர் உம்முடைய இறைவனைப்
புகழ்ந்து அவனது தூய்மையை எடுத்துரைத்து, அவனிடம் பாவமன்னிப்புக் கோருவீராக! அவன் (நீர் மன்னிப்புக் கோருவதை ஏற்று) உமக்கு
மன்னிப்பளிப்பவன் ஆவான்' என்பதே இதன் கருத்தாகும்"
என்று சொன்னேன்.
உமர் (ரலி) அவர்கள், ( مَا أَعْلَمُ مِنْهَا إِلاَّ مَا تَعْلَمُ ) "நீங்கள் இந்த அத்தியாயத்தில் இருந்து என்ன (கருத்தை) அறிகின்றீர்களோ அதையே நானும் அறிகின்றேன்" என்று சொன்னார்கள். நூல்:- புகாரீ-4294
அந்நஸ்ர் அத்தியாயத்திற்கு மற்றவர்களெல்லாம் சாதாரணமான விளக்கமளித்தபோது, இப்னு
அப்பாஸ் (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வந்து, கூட்டம் கூட்டமாக மக்கள் இஸ்லாமை ஏற்கும் நிலை வந்துவிட்ட
பிறகு, நபியவர்கள் அனுப்பப்பட்டதன்
நோக்கம் முழுமையடைந்துவிட்டது என்று பொருள்; எனவே, இது நபியவர்களின் ஆயுள் முடியப்போகிறது என்பதற்கான முன்னறிவிப்பாகும்" என்று
மாறுபட்டுச் சிந்தித்து அற்புதமான விளக்கமளித்தார்கள். இந்த விளக்கத்தின் மூலம் இப்னு
அப்பாஸ் (ரலி) அவர்களின் கல்வித்தகுதி வெளிப்பட்டதுடன், இதனால்தான் அவர்களைத் தம் அருகில் எப்போதும் வைத்திருப்பதாக
உமர் (ரலி) அவர்கள் மற்றவர்களுக்குச் சுட்டிக்காட்டினார்கள்.
ஆம்! மாறுபட்டச் சிந்தனைத் திறன்கொண்ட ஒரு சிறுவயது இளைஞருக்கு, நாட்டின் ஜனாதிபதியின் நெருக்கமும், வயதில் மூத்த முக்கிய பிரமுகர்களுடனும் அவைகளில் சமமாக அமரும் பாக்கியமும் கிடைக்கப் பெற்றது.
மாறுபட்ட சிந்தனை தான், சாதனைகள் புரிய உதவுகிறது. அதுவே, வாழ்வில் உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றுத் தருகிறது.
அழகிய தீர்வு
பேரறிஞர் இமாம் அபூஹனீஃபா (ரஹ்) அவர்களிடம் ஒரு பெண் வந்து, "எனது தந்தை இறந்துவிட்டார். அவரை கடைசியாக ஒருமுறை பார்க்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். ஆனால், என் கணவர் 'நீ உன் தந்தை வீட்டுக்குப் போனால் நீ மணவிலக்கு ஆகிவிடுவாய்' என்று கூறியுள்ளார். இதைப்பற்றி பல அறிஞர்களிடம் கேட்டுவிட்டேன். தீர்வு கிடைக்கவில்லை. நீங்களாவது இதற்கானத் தீர்வை கூறுங்கள்" என்றாள்.
இமாமவர்கள், "நீ உன் தந்தையின் உடலை சென்று பார்க்கலாம். அதனால் உன் கணவன் உன்னை விவாகரத்து செய்ய முடியாது. உன் தந்தையின் வீட்டுக்கு நீ போனால் தானே உன்னை மணவிலக்கு செய்வேன் என்று உன் கணவர் சொன்னார். எப்போது உன் தந்தை இறந்துவிட்டாரோ அப்போதே அவருடைய சொத்து எல்லாம் அவருடைய பிள்ளைகளுக்கு சட்டப்படி வந்துவிடுகிறது. இப்போது சட்டப்படி உன் தந்தையின் உடல் கிடத்தப்பட்டுள்ள வீடு உன் வீடு. உன் வீட்டுக்கு நீ போவதில் உனக்கு எந்த தடையும் இல்லையே" என்றார்கள்.
பல அறிஞர்கள் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியாமல் திணறியபோது, இமாம் அபூஹனீஃபா (ரஹ்) அவர்கள் தனது மாறுபட்ட சிந்தனை திறனால் ரொம்பவும் சாதாரணமாக இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள்.
கடினமான கேள்விகள் அல்லது பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டு பிடிக்கும் போது நமது
மாறுபட்ட சிந்தனைத்திறன் அபாரமாக கைகொடுக்கிறது. இதை சரியான முறையில் பயன்படுத்தினால்
எத்தனை பெரிய சிக்கலில் இருந்தும் சுலபமாய் தப்பித்துவிட முடியும்.
பிரச்சார முறை
இமாம் அபூஹனீஃபா (ரஹ்) அவர்கள் தனது சிந்தனையைப் பரப்புவதற்காக தம் மாணவர் ஸுபைர் (ரஹ்) அவர்களை பஸரா நகரத்துக்கு அனுப்பினார்கள். அங்கு இமாமவர்களை எதிர்த்து வந்தவர் பலரும் இருந்தனர். ஸுபைர் (ரஹ்) அவர்கள் அங்கு சென்றதும், அவர்களை வரவேற்பவர் எவருமில்லை. எனினும் ஸுபைர் (ரஹ்) அவர்கள் மனம் தளராமல் இமாமவர்களைப் பற்றியும் அவர்களின் சிந்தனைகள் பற்றியும் எடுத்துக் கூறினார். ஆனால், பஸரா நகர மக்கள் அவருடைய பேச்சைக் காது கொடுத்துக் கேட்கவில்லை. இவ்வாறு பல நாள் முயன்றும், வெற்றி பெறமுடியாமல் மனம் தளர்ந்தவராக திரும்பினார். இமாமவர்களிடம் சென்று தாம் வெற்றியின்றித் திரும்பி வந்த விவரத்தை தெரிவித்தார்.
இமாமவர்கள், தம் மாணவர் அங்கு செய்த பிரச்சார முறையை பற்றித் துருவித் துருவி வினவினார்கள். பின்னர் பிரச்சார முறையை அவருக்கு கீழ்கண்டவாறு எடுத்துரைத்தார்கள்.
"ஸுபைர்! எனக்கு எதிர்ப்பு இருக்கும் பஸரா நகருக்குச் சென்று, எடுத்த எடுப்பிலேயே 'அபூஹனீஃபா இப்படி கூறியிருக்கிறார்.' என்று சொன்னால் மக்கள் செவிகொடுத்துக் கேட்க மாட்டார்கள். எனவே, முதலில் நம்மைப் பற்றியே குறிப்பிடக்கூடாது.
'மாறாக ஒரு பிரச்சினையை எடுத்துக் கொண்டு இதைப்பற்றி இன்னின்னார் இன்ன மாதிரி தீர்வு கண்டிருக்கிறார்கள் என்று சொல்லி அத்தீர்வுகளிலுள்ள முரண்பாடுகளையும் பலவீனங்களையும் எடுத்துக் கூற வேண்டும்.' மக்களுக்கு அது நன்கு புரிந்த பின்னர், 'அப்படியாயின் அந்தப் பிரச்சனைக்குத் தீர்வு தான் என்ன? அது பற்றி சரியான கருத்து என்ன?' என்று வினவுவார்கள். அப்பொழுது நம் கருத்தை எடுத்துச்சொல்ல வேண்டும். இக்கருத்துக்குள்ள ஆதாரங்கள் சாதனங்கள் ஆகியவை பற்றியும் விளக்க வேண்டும். இவை அவர்கள் மனங்களில் நன்றாக பதிந்ததும் அவர்களாகவே, இத்தகைய தீர்வு கண்டவர் யார்? என்று கேட்பார்கள்.
அப்போதுதான் 'அபூஹனீஃபா' என்று நம் பெயரைக் குறிப்பிட வேண்டும். அந்நிலையில் அவர்கள் நம்மைச் சரியானவர் என்று ஏற்க மறுக்கமாட்டார்கள்.!" என்று இமாமவர்கள் அறிவார்ந்த பிரச்சார முறையை போதித்துக் கொடுத்தார்கள்.
ஸுபைர் (ரஹ்) அவர்கள்
தனது ஆசிரியர் போதித்த பிரச்சார முறையை பின்பற்றி மீண்டும் பஸரா நகருக்கு சென்று பிரச்சாரம்
செய்து அளப்பரிய வெற்றியுடன் திரும்பி வந்தார்.
மனிதன், தான் முடிவு செய்திருக்கும் ஒரு கருத்துக்கு மாற்றமாக, எதையும் செவிமடுக்க சாதாரணமாக இசையமாட்டான். அப்படியேச் செவியுற்றாலும் அதனை ஏற்கலாகாது
என்று மனதைத் தயார்ப்படுத்திக் கொள்வான். அல்லது
பரபரப்பாக அதனை நிராகரிக்க முற்படுவான். எனவே, ஒரு கருத்தை அல்லது
ஒரு கொள்கையை அல்லது ஒரு தத்துவத்தைப் பிறர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பும்போது பொதுவாக, மறக்கமுடியாத அடிப்படைகளை முதலில் அமைத்து, அவற்றின் மீது சான்றுகளை அடுக்க வேண்டும். எடுத்த எடுப்பிலேயே வாதப் பிரதி வாதங்களுக்கு
இடம் தருபவற்றைக் கூறினால் சம்பந்தப்பட்டவர்கள் ஏற்றுக்கொள்வது சிரமமாகிவிடும் எனவே, பிரச்சாரத்தில் வெற்றி காண மாறுபட்டுச் சிந்திக்க கற்றுத்தருகிறார்கள் இமாம் அபூஹனீஃபா
(ரஹ்) அவர்கள்.
விளம்பரங்கள்
தொலைக்காட்சி விளம்பரங்கள் ஒவ்வொன்றும் கால் நிமிடம், அரை நிமிடம் தான் மிஞ்சி போனால் ஒரு நிமிடம் இந்தக்
குறுகிய நேரத்திற்குள், அவர்கள் பல விஷயங்களைச்
சொல்லி முடிக்க வேண்டியிருக்கிறது.
முதல் விளம்பரம்
· திரையில் ஒருவர் தோன்றுகிறார். அவர் கையில் குளிர்பான பாட்டில்.
· இந்த கூல்ட்ரிங்ஸ் மாம்பழம் போலவே சுவையானது என்று அவர் அறிவிக்கிறார்.
· கையில் இருக்கும் குளிர்பானத்தை கடகடவென்று குடித்துவிட்டு 'ஆகா சூப்பர்' என்று சொல்கிறார்.
அடுத்த விளம்பரம்
· இரண்டு பேர், ஒருவர் கையில் குளிர்பான பாட்டில், இன்னொருவர் அவரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்...
· முதலாமவர் பாட்டிலை வாய்க்குள் கொண்டு செல்கிறார், குடிக்கிறார்...
· ஆனால் அடுத்தவருக்கு, அவர் குளிர்பானம் குடிப்பது போல் தோன்றவில்லை. மாம்பழம் ஒன்றை கடித்துத் தின்பது போல் தெரிகிறது.
ப நம்ப முடியாமல் அவர் கண்ணை கசக்கிக்கொண்டு பார்க்கிறார். ம்ஹூம், குளிர்பானம் இல்லை மாம்பழம் தான் தெரிகிறது.
· முதலாமவர் பருகி முடித்துவிட்டு பாட்டிலைக் கீழே வைக்கிறார். அவர் கையெல்லாம் மாம்பழச்சாறு.
இரண்டு விளம்பரங்களுக்கும் வித்தியாசம் புரிகிறதில்லையா? 'இந்தக் குளிர்பானம் மாம்பழச்சுவை கொண்டது' என்று நேரடியாகச் சொல்வதைவிட, இதை பருகினால், மாம்பழம் தின்பது போல் இருக்கும் என்று மறைமுகமாக அறிவிக்கும் இரண்டாவது விளம்பரம், நம் மனதில் சட்டென்று பதிகிறது. அடுத்தமுறை அந்தக் குளிர்பானத்தைப் பார்த்தால், நமக்கு மாம்பழம்தான் சற்றென்று ஞாபகத்திற்கு வரும். அல்லது மாம்பழத்தைப் பார்க்கும் போதெல்லாம் அந்த குளிர்பானம் நினைவுக்கு வரும்.
நாமும் பயன்பெற்று, பிறருக்கும் பயன்பெறும் விதத்தில் நல்ல சிந்தனை வளமிக்கவர்களாக அல்லாஹுத்தஆலா
நம்மை ஆக்குவானாக! ஆமீன்!
மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951
அல்ஹம்துலில்லாஹ் அருமையான படைப்பு...
ReplyDeleteஅல்லாஹ் உங்களுக்கு கல்வியிலும், ஆயுளிலும், அறிவிலும், ஆரோக்கியத்திலும். பரக்கத் செய்வானாக... ஆமீன்