கவிதை கற்போம்
وَالشُّعَرَاءُ يَتَّبِعُهُمُ الْغَاوُونَ
இன்னும் அந்தக் கவிஞர்கள் (எத்தகையோரென்றால்), அவர்களை நெறிப் பிறழ்ந்தவர்கள்தான் பின்பற்றுகிறார்கள்.
திருக்குர்ஆன்:- 26:224
மார்ச்-21 ஆம் நாள் (World poetry day) உலக கவிதை தினம்
ஒருவர் தம் எண்ணங்களை, அனுபவங்களை, சொல் நயத்துடன் உணர்ச்சிப்பூர்வமாகச் சொல்லமைப்பில் சுருக்கமாகவும் செறிவாகவும் வெளிப்படுத்தும் வடிவம்தான் கவிதை எனப்படுகிறது.
திருக்குர்ஆனின் 26 ஆவது அத்தியாயத்தின் பெயர் "அஷ்ஷுஅரா" (கவிஞர்கள்) என்பதாகும். இந்த அத்தியாயத்தில் கவிஞர்கள் குறித்து 224 ஆவது வசனம் முதல் 227 ஆவது வசனம் வரை உயர்ந்தோன் அல்லாஹ் பேசுகிறான்.
கவிதைகளைப் பொருத்தமட்டில் உண்மையும் நற்கருத்துக்களும் கொண்ட கவிதைகளை இஸ்லாம் வரவேற்கிறது; பாராட்டுகிறது. தீய, அறுவறுப்பான கருத்துக்கள் கொண்ட அசத்தியக் கவிதைகளை இஸ்லாம் ஒதுக்கித் தள்ளச் சொல்கிறது; அதற்கு கண்டனம் தெரிவிக்கிறது.
ஒருவர் தன் கவிதைகளால் இறையச்சம், நல்லறம், உண்மை, நேர்மை, தீமை எதிர்ப்பு, இறைவனை நினைவுகூரல் ஆகியவற்றுக்காகக் குரல் கொடுத்தால், அவர் வரவேற்கப்படுவார். அவரது கவிதையும் அறப்போரில் பயன்படும் அம்புபோல் இறைவனின் அன்புக்குரியதாக இருக்கும். கற்பனை கலவாமல், மிகைப்படுத்தாமல் உள்ளதை உள்ளபடி கவிதைகளில் நற்கருத்துக்களை வெளியிடுவதும் உண்மையின் எதிரிகளைக் கவிதையால் சாடுவதும் அறப்பணியே.
அறிஞர்களின் கூற்று
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( الشِّعْرُ بِمَنْزِلَةِ الْكَلاَمِ حَسَنُهُ كَحَسَنِ الْكَلامِ وَقَبِيحُهُ كَقَبِيحِ الْكَلامِ ) பேச்சில் கவிக்கென்று ஓர் அந்தஸ்து உள்ளது. அதில் அழகியது அழகான பேச்சைப் போன்றது. அதில் அசிங்கமானது அசிங்கமான பேச்சைப் போன்றது. அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் நூல்:- அல்அதபுல் முஃப்ரத்-865
உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். கவிதை கற்றுக்
கொள்ளுங்கள். ஏனெனில் தேடுதலுக்குரிய நற்கருத்துக்களும், தவிர்த்துக் கொள்ள வேண்டிய தீய கருத்துக்களும்
அதில் உள்ளன. நூல்:- இத்திஹாஃபாத் பக்கம்-290
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். ( الشِّعْرُ مِنْهُ حَسَنٌ وَمِنْهُ قَبِيحٌ خُذْ بِالْحَسَنِ وَدَعِ الْقَبِيحَ ) கவிதையில் அழகானதும் இருக்கிறது. அசிங்கமானதும் இருக்கிறது. அழகியதை நீர் எடுத்துக்கொண்டு அசிங்கமானதை விட்டு விடுவீராக. நூல்:- அல்அதபுல் முஃப்ரத்-866
உமர் பின் சலாம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அப்துல் மலிக் பின் மர்வான் அவர்கள் தம் பிள்ளைகளை பேரறிஞர் ஷஅபிய்யி (ரஹ்) அவர்களிடம் ஒழுக்கம் கற்பிப்பதற்காக ஒப்படைத்துவிட்டு, கூறினார். ( عَلِّمْهُمُ الشِّعْرَ يَمْجُدُوا وَيُنْجِدُوا ) "இவர்களுக்குக் கவிதையைக் கற்றுக்கொடுங்கள். இவர்கள் புகழ் பெறுவார்கள். மேலும் தேர்ச்சியடைவார்கள். நூல்:- அல்அதபுல் முஃப்ரத்-873
அண்ணலார் கூறியவை
ஜுன்துப் பின் சுஃப்யான் அல்ஜபலீ (ரலி) அவர்கள் கூறியதாவது. (போர் ஒன்றில்) அண்ணல் நபி (ஸல்) அவர்களின் கால் விரலில் கல் பட்டு இரத்தம் வழிந்தோடியது. அப்போது அண்ணலார்,
هَلْ أَنْتِ إِلاَّ
إِصْبَعٌ دَمِيتِ وَفِي سَبِيلِ اللَّهِ
مَا لَقِيتِ
"நீ இரத்தம் சொட்டுகின்ற ஒருவிரல் தானே / நீ பட்டதெல்லாம் இறைவழியில் தானே!" என்று (கவிநடையில்) கூறினார்கள். நூல்:- புகாரீ-6146, முஸ்லிம்-4541, திர்மிதீ-2769, இப்னுமாஜா-3757
அபூ இஸ்ஹாக் அம்ர் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள்
கூறியதாவது. ஹுனைன் போர் அன்று சில முஸ்லிம்கள்
வெருண்டு ஓடினார்கள். (அதைக் கண்ட) அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வெருண்டு ஓடுபவர்களை மீண்டும் போர் களம் நோக்கி
வர வேண்டும் என்பதற்காக அவர்களை உற்சாகம் மூட்டும் விதமாக)
أَنَا النَّبِيُّ لاَ كَذِبْ
أَنَا ابْنُ عَبْدِ الْمُطَّلِبْ
"நான் நபிதான் பொய்யில்லை / நான் அப்துல் முத்தலிபின் மகன் ஆவேன்" என்று (கவி நடையில்) கூறிக்கொண்டிருந்தார்கள். நூல்:- புகாரீ-2864, முஸ்லிம்-3641, திர்மிதீ-1611, முஸ்னது அஹ்மத்
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது அருமை நாயகம் (ஸல்) அவர்கள் அகழ் (வெட்டும் பணியைப் பார்வையிடுவதற்காக அந்த இடத்தை) நோக்கி புறப்பட்டார்கள். அப்போது குளிரான காலை நேரத்தில் முஹாஜிர்களும் அன்சாரிகளும் (அகழ்) தோண்டிக் கொண்டிருந்தனர். அவர்களுக்காக அந்தப் பணியை செய்வதற்கு அவர்களிடம் பணியாளர்கள் எவரும் இருக்கவில்லை. அவர்கள் படும் பாட்டையும், பசியையும் கண்ட போது,
اَللَّهُمَّ إِنَّ الْعَيْشَ عَيْشُ الآخِرَهْ فَاغْفِرْ لِلأَنْصَارِ وَالْمُهَاجِرَهْ
"இறைவா! மறுமை வாழ்வே வாழ்வாகும் / (அதற்காக உழைக்கும்) அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும்
மன்னிப்பு வழங்குவாயாக!" என்று அண்ணலார் (கவிதையாக) கூறினார்கள். நூல்:- புகாரீ-4099
அழகான கருத்துள்ளவை
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். கவிஞர் சொன்ன
சொற்களிலேயே மிக உண்மையான சொல், (கவிஞர்) லபீத் பின் ரபீஆ சொன்ன "அறிக, அல்லாஹ்வைத் தவிர அனைத்துப் பொருட்களும் அழியக்
கூடியவையே" எனும் சொல்லாகும்.
கவிஞர் உமையா பின் அபிஸ்ஸலத் (தமது கவிதையின் நுட்பமான கருத்துக்களால்) இஸ்லாத்தை ஏற்கும் அளவுக்கு நெருங்கி வந்துவிட்டார். (ஆனால் அவர் இஸ்லாத்தை ஏற்காமல் நிராகரிப்பாளராகவே மரணித்தார்). அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-3841, முஸ்லிம்-4542, ஷமாயில் திர்மிதீ-242
கவிஞர் லபீத் பின் ரபீஆ (ரலி) அவர்கள் தலைசிறந்த
கவிஞர்களில் ஒருவர் ஆவார் இஸ்லாத்தை தழுவினார். இவரது இஸ்லாம் அழகுற அமைந்தது. இஸ்லாத்தை
ஏற்ற பிறகு ஒரு கவிதை கூட பாடவில்லை. எனக்கு திருக்குர்ஆனே போதுமானது என்று கூறிவிட்டார்.
அல்லாஹ்வைத் தவிர ஒவ்வொரு பொருளும் அழிந்து போகக் கூடிய தாகும். (அத்தியாயம்-28 வசனம்-88) என்ற திருக்குர்ஆனின் வசனத்திற்கு ஒப்ப இவரது கவிதை
வாக்கியங்கள் அமைந்துள்ளது. அதனால் தான் அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு இவரது கவிதை
பிடித்துப்போனது.
கவிஞர் உமையா பின் அபிஸ்ஸலத் என்பவர் கவிதைப் புலமையில்
தலைசிறந்து விளங்கினார். தன் கவிதைகளால் சீர்திருத்தக் கருத்துக்களை பரப்பி வந்தார்.
ஓரிறைக் கொள்கை, மறுமை நம்பிக்கை போன்ற நல்ல கருத்துக்களை வெளியிட்டு
வந்தார். இவரின் கவிதைகளில் 100 பாடல்கள்வரை பாடச்சொல்லி நபித்தோழர் ஷரீத் (ரலி) அவர்களிடம் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கேட்டிருக்கிறார்கள்.
இஸ்லாத்தின் காலத்தை அடைந்தும் அவர் முஸ்லிமாகவில்லை. நூல்:- பத்ஹுல் பாரீ, உம்தத்துல் காரீ
அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு காய்ச்சல் ஏற்படும்போது
அவர்கள் பின் வருமாறு கவிதையைக் கூறுவார்கள்:
كُلُّ امْرِئٍ مُصَبَّحٌ فِي أَهْلِهِ وَالْمَوْتُ أَدْنَى مِنْ شِرَاكِ نَعْلِهِ
“காலை வாழ்த்துக் கூறப்பெற்ற நிலையில் ஒவ்வொரு மனிதனும்
தன் குடும்பத்தாரோடு காலைப்பொழுதை அடைகிறான் / (ஆனால் ) மரணம் அவன் செருப்பு வாரைவிட
மிக அருகில் இருக்கிறது (என்பது அவனுக்குத் தெரிவதில்லை.)” அறிவிப்பாளர்:- ஆயிஷா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-3926
பக்கம் பக்கமாக எழுத வேண்டிய நீண்டதொரு கட்டுரையை இரு வரி கவிதை உள்ளடக்கிவிடும். மதீனாவின் தட்பவெப்பம் ஒத்துக்கொள்ளாததால் காய்ச்சல் கண்டிருந்த அபூபக்ர் (ரலி) அவர்கள் சொன்ன கவிதை வரிகள் நல்ல எடுத்துக்காட்டு.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களிடம் (இஸ்லாத்தை ஏற்பதற்காக) வந்த போது வழியில்,
يَا لَيْلَةً مِنْ طُولِهَا وَعَنَائِهَا عَلَى أَنَّهَا مِنْ دَارَةِ الْكُفْرِ نَجَّتِ
எவ்வளவு நீண்ட களைப்பூட்டும் இரவு / இருந்தாலும்,
இறைமறுப்பு இல்லத்திலிருந்து
காத்தது அந்த இரவுதான்" என்று (கவி) பாடினேன். நூல்:- புகாரீ-4393
ஒரு கவிதை அனுமதிக்கப்படுவதும் நிராகரிக்கப்படுவதும்
அது சொல்லக்கூடிய தகவலை பொறுத்தே அமையும். இறைவாழ்த்து, இறை உணர்வு, ஓரிறைக் கோட்பாடு, நல்லறம் போன்ற நல்ல கருத்துக்களைத் தாங்கியிருந்தால், அறியாமைக்கால கவிதைகள் கூட வரவேற்கப்படும். இறைமறுப்பு, ஆபாசம், அக்கிரமம், தடைசெய்யப்பட்ட பொருளை
வர்ணித்தல், அவதூறு, ஒரு தனி மனிதத் தாக்குதல்
போன்ற விரும்பத்தகாத தகவல்கள் இடம்பெறும் கவிதைகளுக்கு இஸ்லாத்தில் அனுமதியில்லை.
இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் மிகச்சிறந்த கவிஞர் ஆவார். "தீவானுஷ் ஷாஃபிஈ" எனும் அவர்களின் கவிதைகளின் தொகுப்பு அரபுலகின் எல்லாப் புத்தகக் கடைகளிலும் கிடைக்கக்கூடிய ஓர் இலக்கியப் பேழையாகும்.
இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள், "மார்க்க அறிஞர்கள் கவிதை எழுதுவது பற்றி மக்கள் சடைந்துகொள்ள மாட்டார்கள் என்றிருப்பின், நான் அரபுக் கவிப் பேரரசன் லபீதைவிடக் கூடுதலாக கவிதைகளைப் படைத்திருப்பேன்" என்று கூறினார்கள். நூல்:- மஅல் அஇம்மா அஷ்ஷைக் சல்மான் அல்அவ்தா
இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்கள் (பிரபல இராக்
கவிஞர் அபூநவாஸ் ஹசன் பின்ஹானீ இயற்றிய) இக்கவிதை
வரிகளை பாடுவது வழக்கம்:
إذَا مَا خَلَوتَ الدّهْرَ يَومًا فَلَا تَقُل خَلَوتُ وَلٰكِن قُل عَلَيَّ رَقِيبُ
وَلا تَحْسَبَنَّ اللَّهَ يَغْفِلُ سَاعَةً وَلا أَنَّ مَا يَخْفَى عَلَيْهِ يَغِيب
“ஒரு நாளும் சொல்லாதே தனிமையில் இருந்தேன் என்று / காலமெல்லாம் நீ தனிமையில் இருந்தாலும் / சொல்! இருக்கிறான் என்னோடு ஒரு காவல்காரன் / எண்ணிவிடாதே! கவனிக்கவில்லை கடவுள் ஒரு நிமிடம் என்று எண்ணி விடாதே! / உன் கண்ணுக்குத் தெரியாதது அவனுக்கும் தெரியாது என்று!” நூல்:- தஃப்சீர் இப்னு கஸீர் அந்நம்ல் வசனம்-93
காலத்தால் அழியாத
கவிதை
அல்உத்பீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது. (ஒருமுறை) நான் அருமை நாயகம் (ஸல்) அவர்களின் மண்ணறைக்கு (கப்ரு) அருகில் அமர்ந்திருந்தேன். அப்போது ஒரு கிராமப்புற அரபி வந்தார். நபியவர்களுக்கு ஸலாம் கூறிவிட்டு, "(நபியே!) அவர்கள் தமக்குத் தாமே தீங்கிழைத்த போது, உன்னிடம் வந்து, அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி, அவர்களுக்காகத் தூத(ராகிய நீ)ரும் பாவமன்னிப்புக் கோரினால், மன்னிப்பை ஏற்பவனாகவும் மிகுந்த அன்புடையோனாகவும் அல்லாஹ்வை அவர்கள் காண்பார்கள்" (4:64) என்ற வசனத்தை ஓதினார்.
மேலும், "இப்போது நான் என் பாவங்களுக்காக இறைவனிடம் மன்னிப்புக்
கோரி உங்கள் சமூகம் வந்துள்ளேன். நீங்கள் என் இறைவனிடம் பரிந்துரைக்க வேண்டும்"
என்று கூறிவிட்டு, பின்வருமாறு கவிதையையும்
பாடினார்:
يَا خيرَ مَنْ دُفنَت بِالْقَاعِ أعظُمُه فَطَابَ منْ طِيبِهِنَّ القاعُ والأكَمُ
نَفْسي الفداءُ لقبرٍ أَنْتَ ساكنُه فِيهِ العفافُ وَفِيهِ الجودُ والكرمُ
மண்ணில் புதைக்கப்பட்டவர்களில் சிறந்தவரே! / உங்கள் எலும்புகளின் நறுமணத்தால் மண்ணும் மலைக் குன்றும் மணம் கமழ்கின்றன.
நீங்கள் துயிலும் இந்த மண்ணறைக்கு என் உயிர் அர்ப்பணம். / தன்னடக்கம் இங்குதான் அடங்கியிருக்கிறது. தயாள குணமும் பெருந்தன்மையும் இங்குதான் உறங்குகின்றன.
பின்பு அந்தக் கிராமப்புற
அரபி சென்றுவிட்டார். பின்னர் நான் கண் அயர்ந்து உறங்கினேன். கனவில் அண்ணல் நபி (ஸல்)
அவர்களை கண்ட போது, அவர்கள் என்னிடம், ( يَا عُتْبِيُّ اِلْحَقِ اْلأَعْرَابِيَّ فَبَشِّرْهُ أَنَّ اللهَ قَدْ
غَفَرَ لَهُ ) "அல்உத்பீ! அந்த கிராமவாசியிடம்
சென்று அவருடைய பாவங்களை அல்லாஹ் மன்னித்து விட்டான் என்று நற்செய்தி கூறும்"
என்று சொன்னார்கள். நூல்:- அஷ்ஷாமில் இமாம் அபூமன்ஸூர் அஸ்ஸப்பாக், தஃப்சீர் இப்னு கசீர், மஜ்மூஉ இமாம் நவவீ
இந்த கவிதை வரிகள்
பல நூற்றாண்டுகளாக பாதுகாக்கப்பட்டு இன்றுவரை அண்ணல் நபி (ஸல்) அவர்களின் மண்ணறை (ரவ்ளா
ஷரீஃப் உடைய) ஜன்னல்களில் எழுதப்பட்டிருக்கிறது.
அண்ணலாரைப் புகழ்ந்து…
கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் மதீனா வருகை தந்தபோது
சிறுவர்களும் பெண்களும் (குதூகலம் அடைந்து) சில கவிகளைப் பாடி வரவேற்றனர்.
طَلَعَ الْبَدْرُ عَلَيْنَا
مِنْ ثَنِيَّاتِ الْوَدَاعِ
وَجَبَ الشُّكْرُ عَلَيْنَا
مَا دَعَا لِلَّهِ دَاعِ
أَيُّهَـا المَـبعُـوثُ فـِيـنَا
جِئتَ بِالأَمرِ المُطَاعِ
“ஸனிய்யாதுல் விதா
எனும் பகுதியிலிருந்து எங்களுக்கு முழுநிலா உதித்துவிட்டது / அல்லாஹ்வை நோக்கி அழைப்பவர் அழைக்கும் காலமெல்லாம்
நன்றி செலுத்துவது எங்களுக்கு கடமையாகிவிட்டது / எங்களுக்கு அனுப்பப்பட்டவரே! பின்பற்றத்
தகுந்த மார்க்கத்தைத்தான் கொண்டு வந்தீரே!” நூல்:- அல்பிதாயா
வந்நிஹாயா, அர்ரஹீகுல் மக்தூம்
(ஹுனைன் போரில் முஸ்லிம்களை எதிர்த்து சண்டையிட்ட)
ஹவாஸின் குலத்தாரில் ஆண்கள், சிறுவர், பெண்கள் உள்பட ஆறாயிரம் பேர்களை முஸ்லிம்கள் கைது
செய்தனர். பிறகு அவர்கள் பாவமன்னிப்புக் கோரி இஸ்லாத்தில் இணைந்தனர். பிறகு அருமை நாயகம்
(ஸல்) அவர்கள் போர் கைதிகளாக பிடிக்கப்பட்ட அனைவரையும் விடுதலை செய்துவிட்டு,
போர் செல்வங்களை (மட்டும்)
போர்வீரர்களுக்கு பகிர்ந்தளித்தார்கள்.
பொது விடுதலை வழங்கப்பட்ட பிரமுகர்களில் சிலருக்கும் அந்தப் போர் செல்வத்திலிருந்து சிறிதளவு வழங்கினார்கள். அவர்களுடைய உள்ளங்கள் இஸ்லாத்தோடு இணக்கமாக வேண்டும் என்பதே அதற்குக் காரணம். அந்த பிரமுகர்களில் ஒவ்வொருவருக்கும் தலா நூறு ஒட்டகங்கள் விதம் வழங்கினார்கள்.
அவ்வாறு நூறு ஒட்டகங்கள் வழங்க பெற்றவர்களில் மாலிக்
பின் அவ்ப் அந்நள்ரீ (ரலி) அவர்களும் ஒருவர் ஆவார். அண்ணலார் அவரை, முன்பு அவர் இருந்ததைப் போன்றே, அவருடைய சமுதாயத்தாருக்கு ஆட்சியாளராக நியமித்தார்கள். அவர் தமது கவிதை ஒன்றில்
அண்ணலாரைப் புகழ்ந்து பின்வருமாறு கூறினார்.
مَا إنْ رَأَيْتُ وَلَا سَمِعْتُ بِمِثْلِهِ فِي النَّاسِ كُلِّهِمْ بِمِثْلِ مُحَمَّدِ
فَكَأَنَّهُ لَيْثٌ عَلَى أَشْبَالِهِ وَسْطَ الْهَبَاءَةِ خَادِرٌ فِي مَرْصَدِ
“மனிதகுலம் முழுவதிலும் முஹம்மதைப் போன்ற ஒருவரை நான் கண்டதுமில்லை; கேட்டதுமில்லை / அவர் குகை நடுவில் குட்டிகள் அருகில் கண்காணித்துக் கொண்டிருக்கும் சிங்கம்.” நூல்:- சீரத் இப்னு ஹிஷாம், தஃப்சீர் இப்னு கஸீர் அத்தவ்பா வசனம்-27
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது. உங்கள் சகோதரர்
(கவிஞர்) அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்கள் தவறானவற்றை கூறுபவர் அல்லர். அண்ணல்
நபி (ஸல்) அவர்களை பாராட்டி பின்வருமாறு அவர் பாடியுள்ளார்.
فِينَا رَسُولُ اللَّهِ
يَتْلُو كِتَابَهُ إِذَا انْشَقَّ مَعْرُوفٌ
مِنَ الْفَجْرِ سَاطِعُ
أَرَانَا الْهُدَى بَعْدَ الْعَمَى فَقُلُوبُنَا بِهِ مُوقِنَاتٌ أَنَّ مَا قَالَ وَاقِعُ
يَبِيتُ يُجَافِي جَنْبَهُ عَنْ فِرَاشِه
“எங்களிடையே இறைத்தூதர் ஓதுகிறார் இறைவேதம் / வைகறைப் பொழுது புலரும் நேரத்தில் / கருத்துக் குருடர்களாக எங்களுக்கு காட்டினார் நல்வழி / அவர் சொன்னது நடக்கும் நிச்சயம் இது எங்கள் இதய நம்பிக்கை / இரவில் அன்னாரது விலா தொட்டதில்லை படுக்கையை / அப்போது இணைவைப்பாளர் அழுந்திக் கிடக்க படுக்கையில்.” நூல்:- புகாரீ-6151
அம்ர் பின் முர்ரா அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறியதாவது.
நான் இறைத்தூதரின் வருகைப்பற்றி அறிந்த நிலையில் நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களிடம்
வந்து திருக்கலிமாக் கூறி இஸ்லாத்தில் இணைந்தேன். பிறகு என் நாட்டிற்குச் சென்று இதுவரை
வணங்கி வந்த கற்சிலைகளை உடைத்தெறிந்தேன். பிறகு மீண்டும் அண்ணலாரிடம் வந்து சில கவிதை
வரிகளை பாடலானேன்.
شَهِدْتُ بِأَنَّ اللَّهَ حَقٌّ وَأَنَّنِي لِآلِهَةِ الْأَحْجَارِ أَوَّلُ تَارِكِ
فَشَمَّرْتُ عَنْ سَاقِي إِزَارَ مُهَاجِرٍ إِلَيْكَ أَدِبُّ الْغَوْرَ بَعْدَ الدَّكَادِكِ
لِأَصْحَبَ خَيْرَ النَّاسِ نَفْسًا وَوَالِدًا رَسُولَ مَلِيكِ النَّاسِ فَوْقَ الْحَبَائِكِ
“உண்மையான கடவுள் அல்லாஹ்வை என்றும் / கற்கடவுள்களை கைவிட்டவனில் முதலாமானவன் என்றும் நான் சான்று பகிர்கிறேன் / உங்களை நோக்கி நான் விரைந்து வந்தேன் நாட்டைத் துறந்தவனாக வேட்டியை பிடித்துக்கொண்டு / நான் பூமியின் தரையில் ஒட்டியிருப்பவற்றைத் தாண்டி மலையைக் கடந்து வந்தேன்; சிறந்த மனிதரை நான் தோழமை கொள்வதற்காக / அவர் சிறந்தவர் தனிநபராலும் தந்தையாலும் வானங்களுக்கு மேலுள்ள மக்களின் இறைவனுடைய தூதராலும்”
என்று பாடினேன். இதை செவியுற்ற அண்ணலார்,
( مَرْحَبًا بِكَ يَا عَمْرُو بْنَ مُرَّةَ ) "அம்ர் பின் முர்ரா
அவர்களே! உங்களுக்கு நல்வரவு" என்றார்கள். நூல்:- அல்ஹிதாயா வந்நிஹாயா
ஷுரைஹ் அல்கூஃபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏதேனும் கவிதைகளை உதாரணமாக எடுத்துக் கூறுவார்களா? என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், (ஆம் கவிஞர்) இப்னு ரவாஹாவின் கவிதைகளை (சில வேளைகளில்) அண்ணலார் உதாரணமாக எடுத்துக் கூறுவார்கள். நூல்:- ஷமாயில் திர்மிதீ-241
பொய்யும் போலித்தனமும்
இன்னும் அந்தக் கவிஞர்கள் (எத்தகையோரென்றால்), அவர்களை வழிதவறியவர்கள் தான் பின்பற்றுகிறார்கள். நிச்சயமாக அவர்கள் ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும் (பாதையிலும்) அலைந்து திரிவதை (நபியே) நீர் பார்க்கவில்லையா? இன்னும் நிச்சயமாக, தாங்கள் செய்யாததை(ச் செய்ததாக) அவர்கள் சொல்கிறார்கள். திருக்குர்ஆன்:- 26:224,225,226
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( اِمْرُؤُ الْقَيْسِ صَاحِبُ لِوَاءِ الشُّعَرَاءِ إِلَى النَّارِ ) (கவிஞர்) இம்ரஉல் கைஸ், நரகத்திற்கு செல்லும் கவிஞர்களின் கொடியைப் பிடித்திருப்பார். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்னத் அஹ்மத், அல்பிதாயா வந்நிஹாயா
அறியாமைக் காலத்தில் "அல்முஅல்லகாத்துஸ் ஸப்உ" (எனும் ஏழு நீண்ட) கவிதைகள் கஅபாவில் தொங்கவிடப்பட்டிருந்தன. அதாவது அரபுகளில் எவரேனும் பாடல் இயற்றினால் அதனை குறைஷிகளிடம் முன்வைப்பார். அதை அவர்கள் ஏற்றுக் கொண்டால், அந்தப் பாடலை கண்ணியப்படுத்துவதற்காக அதனை கஅபா மீது தொங்க விடுவார்கள். அந்த வகையில் ஒன்று சேர்ந்தவைதான் இந்த "அல்முஅல்லகாத்துஸ் ஸப்உ" ('தொங்கவிடப்பட்ட ஏழு' என்பது இதன் பொருள்)
அவற்றில் முதலாவது கவிதை இந்த இம்ரஉல் கைஸுக்கு உரியதாகும். நூல்:-
அல்பிதாயா வந்நிஹாயா
கவிஞர் இம்ரவுல் கைஸ் என்பவர் நபிகள் பெருமானார் (அலை) அவர்களுடைய காலத்திற்கு
முன்பு வாழ்ந்தவர். இவர் அரேபிய கவிதை இலக்கியத்தில் உச்சத்தில் இருந்தார். அவரது கவிதை
இலக்கிய தரமிக்கது. எனவே, இவரை கவிதையில் எதிர்த்து
போட்டியிட்டு வெற்றி அடைந்தவர்கள் எவரும் இல்லை. ஆனால் இவர் இறைமறுப்பாளராகவே மரணித்தார்.
அபூ ஸயீத் அல்குத்ரி (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருமுறை நாங்கள் அருமை நாயகம் (ஸல்) அவர்களுடன் 'அல்அர்ஜ்' எனுமிடத்தில் பயணம் செய்து கொண்டிருந்தோம். அப்போது கவிஞர் ஒருவர் கவிதைகளைப் பாடிக்கொண்டு எதிரில் வந்தார். அண்ணலார், ( خُذُوا الشَّيْطَانَ لأَنْ يَمْتَلِئَ جَوْفُ رَجُلٍ قَيْحًا خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَمْتَلِئَ شِعْرًا ) “அந்த ஷைத்தானைப் பிடியுங்கள். ஒரு மனிதனுடைய வயிறு கவிதையால் நிரம்பியிருப்பதை விடச் சீழ் சலத்தால் நிரம்பியிருப்பது நன்று" என்று கூறினார்கள். நூல்:- முஸ்லிம்-4548 முஸ்னத் அஹ்மது
அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் இந்த நபிமொழிக்கு விளக்கமளிக்கையில், இறைத்தூதரைத் தாக்கிப் பாடப்பட்ட கவிதைகளையே இந்த நபிமொழி குறிக்கிறது என்று தெரிவித்துள்ளார்கள். நூல்:- ஃபத்ஹுல் பாரீ
காலித் பின் கைசான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் இருந்தேன். அப்போது அவர்களிடம் இயாஸ் பின் ஹைஸமா (ரஹ்) அவர்கள் வந்து ஃபாரூக்கின் மகனே! என் கவிதையிலிருந்து உங்களுக்கு நான் பாடிக்காட்டவா? என்று கேட்டார். அதற்கவர், ( بَلَى وَلَكِنْ لاَ تُنْشِدْنِي إِلاَّ حَسَنًا )"சரி. ஆயினும் நல்ல கவிதைகளையே எனக்கு நீங்கள் பாடிக்காட்ட வேண்டும்" என்று கூறினார்கள். அதன்படி அவர் பாடிக்காட்டினார். இறுதியாக இப்னு உமர் (ரலி) அவர்களுக்குப் பிடிக்காத விஷயம் கவிதையில் வர ஆரம்பித்தபோது, ( أَمْسِكْ ) "நிறுத்திக் கொள்ளுங்கள்" என்று கூறினார்கள் நூல்:- அல்அதபுல் முஃப்ரத்-856
கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِنَّ أَعْظَمَ النَّاسِ جُرْمًا إِنْسَانٌ شَاعِرٌ يَهْجُو الْقَبِيلَةَ مِنْ أَسْرِهَا ) ஒட்டுமொத்த சமூகத்தையும் வசைபாடும் கவிஞனே பெரும் குற்றவாளி ஆவான். அறிவிப்பாளர்:- ஆயிஷா (ரலி) அவர்கள் நூல்:- அல்அதபுல் முஃப்ரத்-874
கவிஞர்களில் நல்லவர்களும், தீயவர்களும் இருக்கின்றனர். இருப்பினும், பெரும்பாலான கவிஞர்கள் பொய் பேசுபவர்களே. ஒரு கவிதை நல்லதா கெட்டதா என்பதை அது சொல்லும் தகவலை கொண்டே தீர்மானிப்போம். "கவிதைக்குப் பொய் அழகு" என்று கவிஞர்கள் தமக்குத் தாமே ஒரு முகமூடியை அணிந்து கொள்கிறார்கள்.
இதனால்தான் மக்கா இறைமறுப்பாளர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களை விமர்சிக்கும்போது 'அவர் ஒரு கவிஞர்' எனச் சாடினார்கள். அதை அல்லாஹ் மறுத்துரைக்கையில், "இது ஒரு கவிஞரின் கூற்றன்று" (69:41) என குர்ஆனைப் பற்றிக் குறிப்பிடுகின்றான்.
தீய கவிஞர்கள் உணர்ச்சிப்பூர்வமாக எண்ணங்களை வெளிப்படுத்துகிறேன் என்று சொல்லிக்கொண்டு வெறியூட்டுவார்கள். ஒன்றின் மீது தீராத ஆசையை வளர்ப்பார்கள். அதன் பின்விளைவுகளையோ இளைஞர்களிடம் அது ஏற்படுத்தும் மோசமான தாக்கத்தையோ பற்றி கவலைப்படமாட்டார்கள்.
நலிந்தவனின் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறேன் என்று சொல்லிக்கொண்டு இறைவனையே இரக்கமற்றவன் என்றும் பாவி என்றும் கவிஞன் ஏசுவான். காதல் என்ற உணர்வை மிகைப்படுத்தி, கவிஞர்கள் சொல்லும் பொய் இருக்கிறதே யாராலும் பொறுக்க முடியாதது. பெண்ணை வர்ணிக்கிறேன் என்ற பெயரில், அங்க அடையாளங்களைக் கொச்சைப்படுத்துவதும், கேட்பவரின் உணர்ச்சியைக் கிளறிவிடுவதும் கவிஞர்களுக்கு கைவந்த கலை. நல்ல கருத்துக்களை சொல்லும் போது கூட அதில் எதார்த்தம் இருப்பதில்லை. அவர்களின் கற்பனை அதையும் விகாரமாக்கிவிடுகிறது.
பிரபல திருக்குர்ஆன் விரிவுரையாளர் கத்தாதா (ரஹ்) அவர்கள் தீய கவிஞர்களைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்கள். ( الشَّاعِرُ يَمْدَحُ قَوْمًا بِبَاطِلٍ، وَيَذُمُّ قَوْمًا بِبَاطِلٍ ) உண்மைக்குப் புறம்பாக ஒரு சமூகத்தைப் போற்றுவான். இன்னொரு சமூகத்தைத் தூற்றுவான். நூல்:- தஃப்சீர் இப்னு கஸீர்
தலைப்பில் காணும் வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள
கவிஞர்கள், இணைகற்பிப்போராக இருந்து
கொண்டு நல்லவர்களையும் அறநெறிகளையும் தாக்கிக் கவிதை பாடி வந்தவர்களாவர். சத்தியத்திற்கெதிராகவும்
அசத்தியத்திற்கு ஆதரவாகவும் கவிதை புனைந்த இவர்களின் கவிதையில் பொய்யும் போலித்தனமுமே
மிகுந்திருந்தன. அப்படிப்பட்ட கவிஞர்களில் அப்துல்லாஹ் பின்
ஸப்அரீ, ஹுபைரா பின் அபீவஹ்ப்,
முசாஃபிஉ பின் அப்தி மனாஃப்,
அம்ர் பின் அப்தில்லாஹ்,
உமய்யா பின் அபிஸ்ஸலத் ஆகியோர்
அடங்குவர். நூல்:- ஃபத்ஹுல் பாரீ, உம்தத்துல் காரீ
எல்லை மீறாதே
ருபய்யிஉ பின்த் முஅவ்வித் (ரலி) அவர்கள் கூறியதாவது.
எனக்குத் திருமணம் நடந்த அன்று காலை என்னிடம் கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் வந்தார்கள்.
எனக்கு அருகில் (முஸ்லிம்) சிறுமியர் இருவர் (சலங்கையில்லா) கஞ்சிராக்களை அடித்துக்கொண்டு
பத்ருப் போரில் (உயிர்த் தியாகிகளாய்) கொல்லப்பட்ட என் மூதாதையரைப் புகழ்ந்து (இரங்கல்)
பாடிக்கொண்டிருந்தனர்.
தம் பாடலில் ( وَفِينَا
نَبِيٌّ يَعْلَمُ مَا فِي غَدٍ ) "எங்களிடையே இறைத்தூதர் ஒருவர் இருக்கிறார்.
அவர் நாளை நடக்கவிருப்பதையும் அறிகிறார்" என்ற வரியையும் பாடினர். உடனே அண்ணலார்,
( لاَ تَقُولِي هَكَذَا، وَقُولِي مَا كُنْتِ تَقُولِينَ ) "இவ்வாறு கூறாதீர்கள்; நாளை நடக்கவிருப்பதை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும்
அறிய மாட்டார்கள்" என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-4001, அபூதாவூத்-4276, திர்மிதீ-1010, இப்னுமாஜா-1887, முஸ்னது அஹ்மத்
நாளைக்கு நடக்க இருப்பதை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார். மறைவானவற்றை அறியும் ஆற்றல் அல்லாஹ்வைத் தவிர மற்றெவருக்கும் கிடையாது என்பதே இஸ்லாமியக் கொள்கை. இதற்கு எதிரான கவிதைகள் தவிர்க்கப்பட வேண்டியவை. எனவே தான், அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூற வேண்டாம் எனத் தடுத்தார்கள்.
காதல், காமம், மனோ இச்சை
ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் கவிஞர்கள், பெண்கள் அல்லது தன் காதலிகள் பற்றி காதலோடும் காமத்தோடும் கவிதைகளை இயற்றக் கூடாது; மீறினால் தண்டிக்கப்படுவார்கள் என்று உத்தரவிட்டிருந்தார்கள்.
கவிதைகளால் பிறரை இழித்துரைப்பதோ இடித்துரைப்பதோ சட்டப்படி குற்றம் என்று அறிவித்தார்கள்.
ஹிதிய்யா, இவர் அக்காலத்தைச் சார்ந்த புகழ்பெற்ற ஒரு கவிஞர். இழிவுக் கவிதைகள் இயற்றுவதில் வல்லவர். ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள், அவரை வரவழைத்து ஒரு பாதாள சிறையில் அடைத்தார்கள். சிறையிலிருந்து விடுதலை ஆக வேண்டும் என்றால், இனிமேல் இழிவுக் கவிதைகளை இயற்றவே மாட்டேன் என நீ சத்திய செய்ய வேண்டும் என நிபந்தனை விதித்தார்கள். நூல்:- உசுதுல் ஙாபா, அல்ஃபாரூக்
காமக் கவிதைகளையும் கேலிக்கூத்துக் கவிதைகளையும்
பெரும்பாலான கவிஞர்கள் எழுதுகின்றனர். பொதுமக்களின் ரசனைக்குரிய பொருளாகக் கவிதைகள்
திகழ்வதால், சமூகத்தில் இருக்கின்ற
சின்னஞ்சிறு குழந்தைகள் கூட இந்த கவிதைகளை மனனம் செய்து வைத்திருக்கிறார்கள். இதன்
காரணமாக சமூகத்திற்குள் பொறுப்பற்ற கேலித்தனம், பொறுக்கித்தனம் சமூகத்தில் பரவுகின்றன. காதல்,
காமம், மனோ இச்சைகள் போன்றவை பல்கிப் பெருகுவதற்கு தீய
கவிதைகளும் காரணமாகும். அதனால் தான் கவிதைகளில் தீயதை இஸ்லாம் தடை செய்கின்றது.
உண்மைக்காகக் குரல்கொடுப்பவர்கள்
(கவிஞர்களில்) இறை நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் புரிந்து, அல்லாஹ்வை அதிகமதிகம் நினைவு கூர்ந்து, தங்களுக்கு அநீதியிழைக்கப்பட்ட பின்னர் பதிலடி தருகிறார்களே அவர்களைத் தவிர. திருக்குர்ஆன்:- 26:227
தலைப்பில் காணும் வசனம் (திருக்குர்ஆன்:- 26:224) அருளைப்பெற்றபோது, கவிஞர்கள் ஹஸ்ஸான் பின் ஸாபித், அப்துல்லாஹ் பின் ரவாஹா, கஅப் பின் மாலிக் (ரலி) ஆகியோர் கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களிடம் அழுதவர்களாக வந்து, "நிச்சயமாக அல்லாஹ் இந்த வசனத்தை அருளியபோது நாங்கள் கவிஞர்கள் என்பதை அறிந்தேயிருக்கிறான்" என்று கூறினர்.
அப்பொழுது அண்ணலார் (மேற்காணும் 26:227 வசனத்தை) ஓதி விட்டு, ( أَنْتُمْ ) “(இது) நீங்கள் தான்" என்று கூறினார்கள். நூல்:- தஃப்சீர் தபரீ, அபீஹாத்திம், இப்னுகஸீர்
(கவிஞர்) கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம், "வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கவிஞர்களைப் பற்றி இன்னின்ன வசனங்களை அருளியுள்ளானே?" என்று கேட்டார். அப்போது அண்ணலார், ( إِنَّ الْمُؤْمِنَ يُجَاهِدُ بِسَيْفِهِ وَلِسَانِهِ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَكَأَنَّ مَا تَرْمُونَهُمْ بِهِ نَضْح النَّبْل ) "ஓர் இறைநம்பிக்கையாளர் தம் வாளாலும் நாவாலும் போரிடுவார். என் உயிர் எவன் கையில் உள்ளதோ அந்த இறைவன் மீதாணையாக! நிச்சயமாக (கவிஞர்களாகிய) நீங்கள் எதனால் பதிலடி தருகிறீர்களோ அது, அம்பெய்வதைப் போன்றதுதான்" என்று கூறினார்கள். நூல்:- முஸ்னத் அஹ்மது
உண்மைக்காகக் குரல்கொடுத்து நல்லதே பேசிவந்த கவிஞர்களும்
அன்று இருந்தனர். இறை நம்பிக்கையாளர்களான அவர்கள் இறைவனையும் இறைத்தூதரையும் புகழ்ந்து
பாடி இறை மார்க்கத்திற்கு வலுசேர்த்துவந்தனர். அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி),
ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி),
கஅப் பின் மாலிக் (ரலி),
கஅப் பின் ஸுஹைர் (ரலி) ஆகியோர்
அவர்களில் குறிப்பிடத்தக்கவர்களாவர். ஆக, பொய், போலி, புகழ்ச்சி, வசை ஆகியவை இல்லாத நல்ல கருத்துக்களைக் கூறும் கவிதைகள்
அனுமதிக்கப்பட்டவை ஆகும். இத்தகைய கவிதைகளை
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பாராட்டியுள்ளார்கள். நூல்:- ஃபத்ஹுல் பாரீ, உம்தத்துல் காரீ
நல்ல கருத்துள்ள கவிதையாகவே இருந்தாலும், அதிலேயே மூழ்கிபோய், அதுவே ஒரு வேலையாகப்போய், இறைமறையும் வழிபாட்டையும் மறந்திருப்பதும் தடைசெய்யப்பட்டதுதான். "கவிதைக்கு பொய் அழகு" என்று சொல்லிக்கொண்டு, பொய்யையும் அசத்தியத்தையும் புனைந்துரைகின்ற கவிதைகளும் கவிஞர்களும்தான் திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகளால் கண்டிக்கப்பட்டுள்ளனர்.
பாராட்டப் பெற்றது
சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது. நாங்கள் அருமை நாயகம் (ஸல்) அவர்களுடன் கைபரை நோக்கி (போருக்காக)ப் புறப்பட்டோம். இரவு நேரத்தில் நாங்கள் சென்று கொண்டிருந்த போது மக்களிடையேயிருந்த ஒருவர், (என் தந்தையின் சகோதரர்) ஆமிர் பின் அல்அக்வஉ (ரலி) அவர்களிடம், உங்கள் கவிதைகளில் சிலவற்றை எங்களுக்குப் பாடிக்காட்டக் கூடாதா? என்று கேட்டார்.
ஆமீர் (ரலி) அவர்கள் கவிஞராக இருந்தார். அவர் (தமது வாகனத்திலிருந்து) இறங்கி மக்களுக்காக சில கவிதைகளை பாடி அவர்களுடைய ஒட்டகங்களை விரைந்தோடச் செய்தார். அப்போது அண்ணலார், ( مَنْ هَذَا السَّائِقُ ) "யார் இந்த ஒட்டகவோட்டி?" என்று கேட்டார்கள். மக்கள், "ஆமீர் பின் அல்அக்வஉ"என்று பதிலளித்தனர். அப்போது, அண்ணலார் ( يَرْحَمُهُ اللَّهُ ) "அவருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக!" என்று பிரார்த்தித்தார்கள். நூல்:- புகாரீ-6148
சிந்திக்கத் தூண்டும்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِنَّ مِنَ الشِّعْرِ حِكْمَةً ) நிச்சயமாகக் கவிதையிலும் ஞானம் (ஹிக்மத்) உண்டு. அறிவிப்பாளர்:- உபை பின் கஅப் (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-6145
ஒருமுறை போர்க்களத்தில் ஒரு நபித்தோழர் காயமடைந்தார்.
அவருடைய காயத்திலிருந்து வெளியான இரத்தத்தை நிறுத்துவதற்காக முயற்சித்தனர். ஆனால்,
இரத்தம் ஓடிக் கொண்டே இருந்தது.
அப்போது அங்கு வந்த ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கற்பூரத்தைக் கொண்டுவரச் சொல்லி
அதைக் காயத்தின் மீது வைத்தார். இரத்தம் நின்றுவிட்டது. இதையறிந்த அருமை நாயகம் (ஸல்)
அவர்கள் ஹஸ்ஸான் (ரலி) அவர்களை அழைத்து,
"நீர் இந்த (வைத்திய) முறையை
எங்கிருந்து கற்றுக்கொண்டீர்?" என்று கேட்டார்கள். அதற்கு அவர், " ஒரு கவிதையிலிருந்து அதை நான் கற்றுக்கொண்டேன்" என்று கூறி,
பின்வருமாறு கவிதையை பாடிக்காட்டினார்.
فَکَّرتُ لَیلَةً وَصلَهَا فِی هِجرِهَا فَجَرَت مُدَامِعُ مُقلَتِی کَالعَندَمِ
فَطَفِقتُ اَمسَحُ مُقلَتِی بِخَدِّهَا اِذ عَادَةُ الکَافُورِ اِمسَاكُ الدَّمِ
அவள் (என்னை) வெறுத்த போது அவளிடம் (நான்) சேர்ந்திருந்தச்
சிந்தித்தேன் / அப்போது என்னுடைய விழியின்
கண்ணீர் அருவி போன்று ஓடியது / என் விழியை அவளுடைய கன்னத்தில் (வைத்துத்) தேய்க்க ஆரம்பித்தேன்
/ ஏனெனில், கற்பூரத்தின் வழக்கம்
இரத்தத்தைத் தடுத்து நிறுத்துவதாகும். இதனை செவியுற்ற அண்ணலார், "நிச்சயமாக கவிதையில் ஞானம் உண்டு" என்று கூறினார்கள்.
நூல்:- அஜாயிபுல் கஸஸ்
நல்ல கவிதைகள் மூலம் ஞானம் பிறக்கும். அறியாமை அகன்று அறிவு வளரும். இங்கு 'ஞானம்' என்பதைக் குறிக்க 'ஹிக்மத்' எனும் சொல் மூலத்தில் ஆளப்பட்டுள்ளது. இதற்கு உண்மை, அறிவு, தத்துவம் ஆகிய பொருள்கள் உண்டு. நல்ல தத்துவம் ஒன்றைக் கவிதையில் கூறும்போது கவிதைக்கே உரிய வார்த்தைச் சிக்கனம், இரத்தினச் சுருக்கம், ஒப்புமை உள்ளிட்ட கூறுகள் மனதைக் கவர்ந்து உள்ளத்தில் அதை ஆழமாகப் பதியச் செய்து விடும். சிந்திக்கத் தூண்டும்.
அண்ணலார் ரசித்தவை
ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது. கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களின் அவைகளின் நூற்றுக்கும் மேற்பட்ட தடவைகள் நான் அமர்ந்திருக்கிறேன். நபித்தோழர்கள் (அனுமதிக்கப்பட்ட) கவிதைகளைப் பாடிக் கொண்டிருப்பர். (இஸ்லாத்திற்கு முந்தைய) அறியாமைக் கால நிகழ்வுகளை நினைவு கூறுவார்கள். அப்போது அண்ணலார் அமைதியாக (கேட்டுக் கொண்டு) இருப்பார்கள். (தடுக்க மாட்டார்கள்) சில வேளைகளில் தோழர்களுடன் சேர்ந்து புன்னகை புரிவார்கள். நூல்:- திர்மிதீ-2770, முஸ்னத் அஹ்மத், முஸ்னத் அபூயஃலா, தப்ரானீ, இப்னு ஹிப்பான், பைஹகீ
ஷரீத் பின் சுவைத் அஸ்ஸகஃபீ (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருநாள் நான் கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களுக்கு பின்னால் அமர்ந்து (அவர்களது வாகனத்தில்) பயணித்துக் கொண்டிருந்தேன். அப்போது ( هَلْ مَعَكَ مِنْ شِعْرِ أُمَيَّةَ بْنِ أَبِي الصَّلْتِ شَيْئًا ) உமய்யா பின் அஸ்ஸல்த்தின் கவிதைகளில் ஏதேனும் உமக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள். நான் ஆம் (தெரியும்) என்றேன். ( هِيهِ ) "பாடு" என்றார்கள். உடனே நான் ஒரு (ஈரடிப்) பாடலைப் பாடினேன். அண்ணலார் "இன்னும் பாடு" என்றார்கள். இவ்வாறே நான் அண்ணலாரிடம் நூறு (ஈரடிப்) பாடல்களைப் பாடிக்காட்டினேன். நூல்:- முஸ்லிம்-4540, இப்னுமாஜா-3758, முஸ்னத் அஹமத் அல்அதபுல் முஃப்ரத்-799
புனிதத் தலங்களில்
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. கண்மணி பெருமானார்
(ஸல்) அவர்கள் (ஹுதைபியா ஒப்பந்தம் மேற்கொண்ட ஆண்டில் நிறைவேற்ற இயலாமல் போன) உம்ராவை
நிறைவேற்றுவதற்காக மக்காவினுள் சென்றார்கள்.
அப்போது அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி) அவர்கள்
அண்ணலார் முன்னிலையில், "இறைமறுப்பாளர்களின்
மக்களே! (இன்று உம்ரா நிறைவேற்றுவதற்கான) அதன் வழியை விட்டு விடுங்கள். (வழிவிடாமல்,
ஒப்பந்தத்தை மீறுவீர்களையானால்)
இறங்கியதுமே உங்கள் மீது தாக்குதல் தொடுப்போம். அது (எத்தகைய போர் எனில்) நண்பகலில்
தூங்க விடாமல் தலையை அவ்விடத்தில் (இருந்து) அகன்று விடும். மேலும் நண்பனை நண்பனே மறக்கடிக்கச்
செய்து விடும். (அத்தகைய தாக்குதல் தொடுப்போம்)" என்ற கருத்தில் கவிதையொன்றைக்
கூறலானார்.
அப்போது உமர் (ரலி) அவர்கள், "இப்னு ரவாஹாவே! அல்லாஹ் புனிதப்படுத்திய ஹரம் எல்லைக்குள் அண்ணலார் முன்னிலையிலேயே இந்தக் கவிதையைப் பாடுகிறீரா?" என்று கேட்டார்கள்.
அப்போது அண்ணலார், ( خَلِّ عَنْهُ فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَكَلاَمُهُ أَشَدُّ عَلَيْهِمْ مِنْ وَقْعِ النَّبْلِ ) “(உமரே!) அவரை(ப் பாட) விடுங்கள். இறைவன் மீதாணையாக! அவரது (கவிதை) மொழியானது அம்பினால் தாக்குவதைவிட அவர்களுக்கு மிகக் கடினமானதாக இருக்கும்" என்று கூறினார்கள். நூல்:- நஸாயீ-2844
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்களுக்கு (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் (மிம்பர் எனும்) மேடை ஒன்றை அமைத்து கொடுத்தார்கள். (ஏனெனில்) அவர் அதன்மீது நின்று அண்ணலாரை கண்ணியப்படுத்தி புகழ்ப்பா பாடுவார். அல்லது அண்ணலார் குறித்த விரோதிகளின் வசைப் பாடல்களுக்கு மறிப்பளித்து பதில் பாக்கள் பாடுவார். அந்நிலையில் அண்ணலார், ( إِنَّ اللَّهَ يُؤَيِّدُ حَسَّانَ بِرُوحِ الْقُدُسِ مَا يُفَاخِرُ أَوْ يُنَافِحُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ) “ஹஸ்ஸான் (ரலி) அவர்களுக்கு தன்னைப் பற்றி புகழ் பாடும் போதும், எதிரிகளின் வசைப் பாடல்களுக்கு மறுப்புப் பாக்கள் பாடும் போதும், "அவருக்குத் தூய ஆன்மா (ஜிப்ரீல்-அலை) மூலமாக அல்லாஹ் உதவி செய்வான்" என்று கூறியுள்ளார்கள் . நூல்:- திர்மிதீ-2766
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது. (மஸ்ஜிதுன்
நபவீ) பள்ளிவாசலில் ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கவி பாடிக்கொண்டிருந்தபோது,
அங்கு (ஜனாதிபதி) உமர் (ரலி)
அவர்கள் வந்தார்கள். ஹஸ்ஸானை நோக்கி (அமைதியாக இருக்கும்படி) சைகை செய்தார்கள். ஹஸ்ஸான்
(ரலி) அவர்கள், ( قَدْ كُنْتُ أُنْشِدُ وَفِيهِ
مَنْ هُوَ خَيْرٌ مِنْكَ ) "நான் இந்தப் பள்ளிவாசலில் உங்களை விடச் சிறந்தவர்
(நபியவர்கள்) இருந்தபோது கவிபாடி கொண்டிருந்தேன்" என்று கூறினார்கள். நூல்:- முஸ்லிம்-4897
அண்ணல் நபி (ஸல்) அவர்களின் கவிஞர் என அழைக்கப்படும்
ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்களுக்கு பள்ளிவாசலில் ஒரு மேடை அமைக்கப்பட்டிருந்தது.
அதில் நின்று அண்ணலாரின் பெருமைகளையும் இஸ்லாத்தின் மேன்மைகளையும் அவர் பாடுவார். இணைவைப்பாளர்கள்
அண்ணலாரை தாக்கியபோது அவர்களுக்குச் சரியான பதிலடி கொடுத்தவர்களில் கவிஞர் ஹஸ்ஸானும்
ஒருவராவார்.
அவருடன் அன்சாரிகளான கஅப் பின் மாலிக் (ரலி), அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) ஆகியோரும் பதிலடி கொடுப்பார்கள். "தீவானு ஹஸ்ஸான்" எனும் கவிதைத் தொகுப்பு ஒன்று அவருக்கு உண்டு. அவர் ஹிஜ்ரீ 40 ஆம் ஆண்டு (அல்லது 50 ஆம் ஆண்டு) அலீ (ரலி) அவர்கள் ஆட்சி காலத்தில் (அல்லது முஆவியா-ரலி அவர்களது ஆட்சி காலத்தில்) இறந்தார்கள். அப்போது அவரது வயது 120 ஆகும். (அறியாமை காலத்தில் 60 ஆண்டுகளும் இஸ்லாத்தில் 60 ஆண்டுகளும் வாழ்ந்தார்கள்.) நூல்:- உசுதுல் ஙாபா, தக்மிலா
ஈட்டியைவிட பலமானது
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்கள் (பனூ குறைழா போரின்போது, கவிஞர்) ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்களிடம், ( اِهْجُهُمْ وَجِبْرِيلُ مَعَكَ ) "எதிரிகளுக்கு எதிராக வசைக்கவி பாடுங்கள். ஜிப்ரீல் உங்களுடன் (உறுதுணையாக) இருப்பார்" என்று கூறியதை நான் கேட்டேன். நூல்:- புகாரீ-3213, முஸ்லிம்-4899
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. கண்மணி பெருமானார்
(ஸல்) அவர்கள் ( اِهْجُوا قُرَيْشًا فَإِنَّهُ
أَشَدُّ عَلَيْهَا مِنْ رَشْقٍ بِالنَّبْلِ ) “(ஹுதைபியா பயணத்தின்போது) குறைஷியருக்கெதிராக வசைக்கவி
பாடுங்கள். ஏனெனில், அது ஈட்டியைவிட பலமாக
அவர்களை தாக்கக்கூடியதாகும்" என்று கூறினார்கள். பிறகு வசைக்கவி பாடுவதற்காக அப்துல்லாஹ்
பின் ரவாஹா (ரலி) மற்றும் கஅப் பின் மாலிக் (ரலி) போன்றவர்கள் பாடிய வசைக்கவிகள் அண்ணலாருக்கு
திருப்தியளிக்கவில்லை.
பிறகு அண்ணலார், ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்களிடம் ஆளனுப்பினார்கள். அவர் அண்ணலாரிடம் வந்தபோது, ( قَدْ
آنَ لَكُمْ أَنْ تُرْسِلُوا إِلَى هَذَا الأَسَدِ الضَّارِبِ بِذَنَبِهِ ثُمَّ أَدْلَعَ
لِسَانَهُ فَجَعَلَ يُحَرِّكُهُ ) "தனது வாலை(ச் சுழற்றி) அடிக்கும் இந்தச் சிங்கத்திடம்
ஆள் அனுப்ப இப்போதுதான் உங்களுக்கு நேரம் வந்திருக்கிறது" என்று கூறிவிட்டு,
( وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ لأَفْرِيَنَّهُمْ بِلِسَانِي فَرْيَ الأَدِيمِ )” இறைவன் மீதாணையாக! தோலைக் கிழிப்பதைப் போன்று நான் எனது நாவால் அவர்களை
(அவர்களது குலப் பெருமையை)க் கிழித்தெறிவேன்" என்று கூறினார். பிறகு அவர் பாடிய நீண்ட கவிகளில் சிலது மட்டும்.
هَجَوْتَ مُحَمَّدًا فَأَجَبْتُ عَنْهُ وَعِنْدَ اللَّهِ فِي ذَاكَ الْجَزَاءُ
هَجَوْتَ مُحَمَّدًا بَرًّا
تَقِيًّا رَسُولَ اللَّهِ شِيمَتُهُ الْوَفَاءُ
“நீ, முஹம்மத் (ஸல் )அவர்களை இகழ்ந்து வசைக்கவி பாடுகிறாய் / நான் அவர் சார்பாக எதிர்க்கவி பாடுகிறேன் / அதற்காக அல்லாஹ்விடமே நற்பலன் உண்டு (எனக்கு)
நீ, தயாள மனத்தவரும் பய பக்தியாளருமான இறைத்தூதர் முஹம்மதை வசைக்கவி பாடுகிறாய் / கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதே அவர்தம் பண்பு.” நூல்:- முஸ்லிம்-4903
முதர்ரிஃப் (ரஹ்) அவர்கள் கூறிதாவது. நான் கூஃபாவிலிருந்து பசராவிற்கு இம்ரான் பின் ஹுசைன் (ரலி) அவர்களோடு சென்றேன். அவர்கள் எங்கு தங்கினாலும் கவி பாடாமல் சென்றது மிகக்குறைவு. நூல்:- அல்அதபுல் முஃப்ரத்-857
பெண்களின் பங்கும் உண்டு
அபூபக்ர் (ரலி) அவர்களும் அன்னாரின் அன்பு மகள் ஆயிஷா (ரலி) அவர்களும் அரபு இலக்கியத்தின் கடலாய் விளங்கினார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்களின் மாணவர்கள் அன்னையரிடம், "தாங்கள் கவிதை புனைவதில் எங்களுக்கு வியப்பேதுமில்லை. காரணம், தாங்கள் அபூபக்கரின் திருமகளாயிற்றே" என கூறுவது வழக்கம். நூல்:- முஸ்னத் அஹ்மத், ஹாகிம்
அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) அவர்கள், தம் கணவர் ஜஅஃபர் (ரலி) மூத்தா போரில் கொல்லப்பட்டபோது
அன்னாரின் மீது இரங்கல் கவிதை ஒன்றை பாடினார்.
فَآلَيْتُ لَا تَنْفَكُّ نَفْسِي حَزِينَةً عَلَيْكَ وَلَا يَنْفَكُّ جِلْدِيَ أَغْبَرَا
(ஜஅஃபர் அவர்களே!) எனதுள்ளம் உங்கள்மீது கவலைக் கொண்டதாகவே
நீடித்திருக்கும் / என் (மேனித்) தோல் (அலங்காரமற்று) புழுதி படிந்ததாகவே காட்சியளிக்கும்
என்று நான் சத்தியமிட்டு கூறுகிறான். நூல்:- அல்பிதாயா வந்நிஹாயா
ஒரு முறை கவிஞர் இம்ரவுல் கைஸ் எதிரிகளிடம் தனியாக
சிக்கிக் கொண்டார். இம்ரவுல் கைஸ் “என்னை கொல்வது என்று முடிவு செய்து விட்டீர்கள்.
எனவே, நான் எழுதும் இந்த
கடிதத்தை என்னுடைய மகள்களிடம் ஒப்படைத்து விடுங்கள். இதுவே என்னுடைய இறுதி விருப்பமாகும்”
என மிகவும் பணிவுடன் கேட்டு கொண்டார்.
அவர்களும் அவரது வேண்டுகோளை ஏற்றுகொண்டனர். அவர்கள்
இம்ரவுல் கைஸை கொன்றுவிட்டு இந்த கடிதத்தை கொண்டு வந்து அவருடைய இரு பெண் மக்களிடம்
கொடுத்து விட்டு, “உங்களது தந்தையை பார்த்தோம். அவர் எங்கேயோ போய்க் கொண்டு இருக்கிறார். அவர் உங்களிடம் இந்த
கடிதத்தை ஒப்படைக்க சொன்னார்கள்” என்றார்கள்.
.அந்நேரம் அப்பெண்மக்கள் இருவரும் உரலில் கோதுமையை வைத்து உலக்கையால் இடித்துக் கொண்டிருந்தனர்.
அப்பெண்மக்கள் வந்தவர்களை கொஞ்சம் இருங்கள் என்று சொல்லிவிட்டு, உள்ளே போய் அந்த கடிதத்தைப் படித்தனர். அதில் ( یَابنَتَی اِمْرُؤُ الْقَيْسِ اِنَّ اَبَاکُمَا ) (பொருள்: இம்ரவுல் கைஸுடைய இரண்டு பெண் மக்களே! நிச்சயமாக உங்களுடைய தந்தை...) என்று ஒரு கவிதை முடிவில்லாமல் பாதியில் இருக்கிறது. அந்த கவிதையை அவர்கள் மீண்டும் மீண்டும் படிக்கிறார்கள். சிந்திக்கிறார்கள்.
காஃபியா எனும் இலக்கண அமைப்பில் அமைந்த இந்த கவிதை ஒரு வரி மட்டும் இருந்து, இன்னொரு வரி இல்லாமல் இருக்கிறது. காஃபியா வகை கவிதை கண்டிப்பாக இரண்டு வரி இருந்தே தீர வேண்டும். ஒரு வரி தான் உள்ளது. தந்தை என்ன செய்தார்? தந்தைக்கு என்ன ஆனது? போன்ற விவரம் அதில் இல்லை.
உடனே, இலக்கிய சூழலில் வளர்ந்த இலக்கிய தந்தையின் குணம் மாறாத அந்த இரண்டு இலக்கிய பெண்மக்களும் பொருத்தமான அரபி வார்த்தைகளை இணைத்து இணைத்து பார்க்கிறார்கள்.
(காஃபியா கவிதை அவ்வளவு சுலபமல்ல.. இரண்டு வரிகள்
கொண்ட கவிதை. உதாரணமாக: மேலே உள்ள வரியில்
எத்தனை “ஜபர், ஜேர்” வருதோ அத்தனை “ஜபர் ஜேர்” கீழே உள்ள இரண்டாவது வரியிலும் வர வேண்டும்.‘
எந்த வார்த்தையில் முடிகிறதோ
அதே வார்த்தையில் முடிய வேண்டும். உதாரணமாக: முதல் வரியில் ”..குமா” என்று முடிந்தால்,
இரண்டாவது வரியிலும் “..குமா” என்று தான் முடிய வேண்டும்.)
இறுதியில் அந்த இரு பெண் மக்களும் தந்தை எழுதிய
கவிதையுடன் ( قَتِیلُن
فَاِنَّ القَاتِلَینِ لَدَیکُمَا ) பொருள்:
கொல்லப்பட்டு போய் விட்டார். அவரை கொன்ற இருவரும் இப்போது உங்கள் இருவரிடத்தில்...
என்று எழுதி இந்த கவிதையை பூர்த்தியாக்கினர். தந்தை என்ன சொல்ல வருகிறார் என்பதும்
தெளிவாகிவிட்டது. உடனே அந்த இரு பெண் மக்களும் கையில் இருந்த உலக்கையால் கொலைகாரர்களின்
தலையில் ஒரே போடாக போட்டனர். அந்த கொலைகாரர்கள் அதே இடத்தில் இறந்துபோயினர்.
இஸ்லாமின் வருகைக்கு முன்பும் பின்பும் ஏறக்குறைய நூறு ஆண்டுகள் வரை அன்றைய மக்களிடையே அரபு மொழிப் புலமை எஞ்சியிருந்தது. அரபு மக்கள் கவிதை உலகில் கொடிகட்டிப் பறந்தார்கள். கவிதை உலகில் ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் சிறந்து விளங்கினார்கள். நூற்றுக்கணக்கான பெண்களும் கவிதை இயற்றுவதில் தமது திறமையை வெளிப்படுத்தினார்கள். அவர்களுடைய படைப்புகள் அரபு இலக்கிய வானில் சுடர்விடும் விண்மீன்களாக திகழ்ந்தன.
சுருங்கக்கூறின், இஸ்லாமியப் பார்வையில் ஒரு கவிதையில் இறையுணர்வு, பண்பாடு, மனிதநேயம், பொது நன்மை, தூய்மையான எண்ணம் போன்ற உயர் கோட்பாடுகள் இல்லையெனில் அது ஒதுக்கப்படவேண்டிய குப்பையே.
இஸ்லாம் அனுமதித்தவைகளை செயல்படுத்தி வாழ்வோமாக!
ஆமீன்!
மௌலவி, மு.முஹம்மது ஹைதர் அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951
بارك الله في جهودكم و نفع بكم الامة عامة و خاصة
ReplyDelete