தீமைக்குத் துணைபோகாதே!
وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى وَلَا تَعَاوَنُوا عَلَى
الْإِثْمِ وَالْعُدْوَانِ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ
நன்மைக்கும் இறையச்சத்திற்கும் ஒருவருக்கொருவர் உதவியாக இருங்கள். பாவத்துக்கும்
எல்லை மீறலுக்கும் (அநியாயத்திற்கும்) துணைபோய்விடாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்.
அல்லாஹ் தண்டனை வழங்குவதில் கடுமையானவன் ஆவான். திருக்குர்ஆன்:- 5:2
இஸ்லாமிய பார்வையில் தீமைக்கு துணைபோவது (பாவம் மற்றும் அநியாயத்திற்கு உதவுவது)
வன்மையாகக் கண்டிக்கப்படும் குற்றமாகும். இது சமூக அமைதியைக் குலைத்து, இறைவனின் தண்டனைக்கு வழிவகுக்கும், பாவத்திலும் பகைமையிலும் உதவக்கூடாது. நன்மையைத்
தடுப்பவர்கள் மற்றும் தீமையை அனுமதிப்பவர்கள், நன்மையை அழிப்பவர்களாவர். பாவக்காரியங்களுக்கு உதவுவது தீயவர்களின்
பண்பாகும், இது கடும் தண்டனைக்குரியது.
தீமைகளை கண்டு கொள்ளாமல் இருப்பது அல்லது சகித்துக் கொள்வது மூலம் நன்மையை அழித்து,
தீயவர்களின் ஆதிக்கம் அதிகரிக்கும். அநியாயக்காரர்களுக்கு
துணைபோவது அல்லது அநியாயத்தை செய்ய அனுமதிப்பது
இறைவனின் கோபத்தையும், தண்டனையையும் கொண்டு
வரும்.
தீயவனின் அடையாளம்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَن أعانَ عَلى خُصُومَةٍ بِغَيْرِ حَقٍّ، كانَ في سَخَطِ اللَّهِ
حَتّى يَنْزِعَ ) அநியாயமாக
ஒரு சர்ச்சையை ஆதரிப்பவர், அதிலிருந்து விலகும்
வரை அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகிவிட்டவர் ஆவார். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின்
உமர் (ரலி) அவர்கள் நூல்:- ஹாகிம், தஃப்சீர் துர்ருல்
மன்ஸூர்
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَن مَشى مَعَ ظالِمٍ لِيُعِينَهُ، وهو يَعْلَمُ أنَّهُ ظالِمٌ،
فَقَدْ خَرَجَ مِنَ الإسْلامِ ) ஒருவன் அநியாயக்காரன் என்று தெரிந்தும்,
அவனுக்கு உதவுவதற்காக அவனுடன் நடப்பவர்,
இஸ்லாத்தை விட்டு விலகிவிட்டார். அறிவிப்பாளர்:-
அவ்ஸ் பின் ஷுரஹ்பில் (ரலி) அவர்கள் நூல்:- தாரீக் அல்கபீர் இமாம் புகாரீ, தப்ரானீ, ஷுஅபுல் ஈமான் இமாம் பைஹகீ, தஃப்சீர் துர்ருல் மன்ஸூர்
பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ أَعَانَ عَلَى قَتْلِ مُؤْمِنٍ بِشَطْرِ كَلِمَةٍ لَقِيَ
اللَّهَ عَزَّ وَجَلَّ مَكْتُوبٌ بَيْنَ عَيْنَيْهِ آيِسٌ مِنْ رَحْمَةِ اللَّهِ ) ஒருவர் இறைநம்பிக்கையாளர் ஒருவரைக் கொலை செய்வதற்கு அரை வார்த்தை
அளவுக்கு உதவி செய்தாலும் அவருடைய இரு கண்களுக்கு இடையில் (நெற்றியில்) அல்லாஹ்வின்
அருளிலிருந்து நிராசையடைந்தவர் என எழுதப்பட்டிருக்கும் நிலையில் (மறுமையில்) மாண்பும்
வல்லமையும் மிக்க அல்லாஹ்வைச் சந்திப்பார். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள்
நூல்:- இப்னுமாஜா-2610 பைஹகீ, ஹில்யத்துல் அவ்லியா
ஒருவரை கொலை செய்வதற்கு அரை வார்த்தை அளவு உதவி செய்தாலே குற்றம் எனும்போது,
கொலை செய்ய கட்டளையிட்டால் அல்லது கொலை செய்வதில்
கூட்டானால் அவரது குற்றம் எந்த அளவு பெரியது என சிந்திக்க வேண்டும்.
குவைத்தைச் சேர்ந்த உலகப்புகழ் பெற்ற காரி மற்றும் அறிஞர் மிஷாரி ராஷித் அல்அஃபாஸி
(Mishary Rashid Al-Afasy) என்பவர்,
(Trump will open the doors of hell for the Iranian regime) "அதிபர் டிரம்ப் ஈரான் ஆட்சியாளர்களுக்கு நரகத்தின் கதவுகளைத்
திறப்பார்" என்று (03-04-2026) வெளியிட்ட ஒரு அறிக்கைதான் வலைத்தளங்களில் இப்போது பேசுபொருளாக உள்ளது.
எரிகின்ற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல், பிரச்சனையை ஊதிப் பெரிதாக்கி, அதன் மூலம் இலாபம் பார்ப்பவர்கள் அல்லது தமது வஞ்சகத்தை தீர்த்துக்கொள்பவர்கள்
மிகவும் மோசமானவர்கள்.
தீமையைத் தடுப்பது ஒவ்வொரு முஸ்லிமின் சமூகக் கடமையாகும். இது நன்மையை ஏவுவதோடு
இணைந்து, சமூக ஒழுங்கைப் பாதுகாக்கும்
தூணாகக் கருதப்படுகிறது. தீமையைக் கண்டால் கைகளால் (நடவடிக்கை), நாவால் (பேச்சு) அல்லது உள்ளத்தால் (வெறுப்பு) தடுக்க
வேண்டும் என்பது இஸ்லாம் கூறும் போதனையாகும்.
தீமையை தடுக்கும் ஆற்றல் இருந்தும் மௌனமாக இருப்பது இறைதண்டனைக்குரிய குற்றமாகும்.
சமூகத்தில் நீதியை நிலைநாட்டவும், இறைவனின் பொருத்தத்தைப்
பெறவும் தீமையைத் தடுப்பது அவசியமான ஒன்றாகும்.
உதவுவதும் குற்றமே!
அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜ் செய்வதற்காகப்
புறப்பட்டார்கள். அவர்களுடன் (மக்களும்) புறப்பட்டனர். அவர்களில் ஒரு சிறு குழுவை,
நபியவர்கள் வேறு வழியில் திருப்பிவிட்டார்கள். அவர்களில்
நானும் ஒருவன். “நாம் சந்திக்கும்வரை கடலோரமாக நீங்கள் செல்லுங்கள்” என்று நபியவர்கள்
கூறினார்கள்.
கடலோரமாகச் சென்று திரும்பிய போது, என்னைத் தவிர அனைவரும் இஹ்ராம் கட்டியிருந்தனர்; நான் மட்டும் இஹ்ராம் கட்டியிருக்கவில்லை. இவ்வாறு நாங்கள் சென்றுகொண்டிருக்கும்போது
(என் தோழர்கள்) காட்டுக் கழுதைகளைக் கண்டனர்.
(நான் குதிரையில் ஏறியதும்) எனது சாட்டை கீழே விழுந்தது. (அதை எடுத்துத் தருமாறு
என் தோழர்களிடம் நான் கேட்டபோது) என் தோழர்கள், ( لاَ نُعِينُكَ عَلَيْهِ بِشَىْءٍ، إِنَّا مُحْرِمُونَ
) “நாங்கள் இஹ்ராம் கட்டியிருப்பதால்
இந்த விஷயத்தில் உமக்கு எந்த உதவியும் செய்யமாட்டோம்” என்று கூறிவிட்டனர். எனவே,
நானே (இறங்கி) அதை எடுத்தேன்.
பிறகு நான் அக்கழுதைகளை வேட்டையாடி கொண்டு வந்தேன். அனைவரும் (ஓரிடத்தில்) இறங்கி
அதன் இறைச்சியைச் சாப்பிட்டனர். “நாம் இஹ்ராம் கட்டியிருக்கும் நிலையில் வேட்டையாடப்பட்ட
பிராணியின் இறைச்சியை உண்ணலாமா?” என்று தோழர்கள் (ஒருவரையொருவர்)
கேட்டுக்கொண்டனர். எஞ்சிய இறைச்சியை எடுத்துக்கொண்டு நபியவர்களிடம் சென்று,
நடந்தவற்றை விவரித்தார்.
அப்போது நபியவர்கள், ( مِنْكُمْ
أَحَدٌ أَمَرَهُ أَنْ يَحْمِلَ عَلَيْهَا، أَوْ أَشَارَ إِلَيْهَا ) “உங்களில் எவரேனும்
அதைத் தாக்குமாறு அவரைப் பணித்தாரா? அல்லது அதை நோக்கி சைகை செய்தாரா?” என்று கேட்டார்கள். தோழர்கள் “இல்லை” என்றனர். அதற்கு நபியவர்கள், ( فَكُلُوا مَا بَقِيَ مِنْ لَحْمِهَا ) “அப்படியானால், அதன் எஞ்சிய இறைச்சியை உண்ணுங்கள்” என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-1824, முஸ்லிம்-2244, 2247,
ஹஜ் அல்லது உம்ராவிற்காக இஹ்ராம் கட்டிய ஒருவர் தாமே வேட்டையாடுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.
அவரது உத்தரவின் பேரில் அல்லது அவரது ஒத்துழைப்புடன் மற்றவர் வேட்டையாடுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.
இஹ்ராம் கட்டிய ஒருவர் வேட்டையாடுவது எப்படி குற்றமோ அது போன்று வேட்டையாடுவதற்கு
உதவுவதும் குற்றம் என்பதை மேற்கண்ட செய்தியின் மூலம் விளங்கமுடிகிறது.
மார்க்க வரம்புகளை நாம் மீறாவிட்டாலும் அவ்வாறு மீறுபவர்களுக்கு உதவி செய்வதும்
தவறு என்பதை இதிலிருந்து புரிந்துகொள்ளலாம். எனவே, பாவக்காரியங்களைச் செய்யாமல் இருந்தால் மட்டும் போதாது. அவற்றுக்குக்
கடுகளவும் உதவி செய்யாமலும் இருக்க வேண்டும்.
உடல் உழைப்பு கொடுப்பது, பொருளாதாரம் மற்றும்
ஆலோசனை வழங்குவது, மட்டுமல்ல! தீமையான
காரியம் நடைபெறும் இடத்திற்கே செல்லக் கூடாது. ஏனெனில், ஒரு வகையில் ஆராய்ந்து பார்த்தால் அதுவும் அந்நிகழ்ச்சி நடைபெறுவதற்கு
உதவுவதாகவே இருக்கிறது.
அமெரிக்கா தன்னுடைய இருப்பிடத்திலிருந்து ஏவுகணைகளை செலுத்த முடியாமல் அரபு நாடுகளில்
தம்முடைய ராணுவத்தளங்களை அமைத்து அங்கிருந்து ஏவுகணைகளை ஈரான் மீது செலுத்துகிறது.
அதாவது, அமெரிக்கா ஈரானை தாக்குவதற்கு
அரபு நாடுகள் முழுமூச்சாக ஒத்துழைக்கிறது என்பது பொருளாகும்.
இவ்வாறு தான் அமெரிக்காவால் ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் அநியாயமாக தாக்கப்பட்டு சீரழிக்கப்பட்டது. இன்றைய
அரபு நாடுகள் அநியாயத்திற்கும், அத்துமீறலுக்கும்
துணைபோகின்றது என்று சொன்னால் மிகையில்லை.
கண்டுக்கொள்ளாமல் இருப்பதும் குற்றமே!
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது மக்ஸுமி குலத்தைச் சேர்ந்த ஒரு பெண் திருடிவிட்டாள்.
அந்தப் பெண் தொடர்பாக கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களிடம் (பேசி தண்டனையிலிருந்து விலக்கு
அளிக்க) சொல்வது யார்? என்று குறைஷியர் ஆலோசித்து,
நபியவர்களின் செல்லப்பிள்ளை உசாமா பின் ஸைத் (ரலி)
அவர்களைத் தேர்வு செய்தனர்.
அவ்வாறே உசாமா (ரலி) அவர்கள் நபியவர்களிடம் பரிந்து பேசினார். அப்போது நபியவர்கள்,
( أَتَشْفَعُ فِي حَدٍّ مِنْ
حُدُودِ اللَّهِ ) "அல்லாஹ் விதித்த தண்டனைகளில் ஒன்றின் விஷயத்திலா (அதை நிறைவேற்ற விடாமல் விட்டுவிடுமாறு)
நீ பரிந்துரை செய்கின்றாய்?" என்று கேட்டுவிட்டு,
பிறகு எழுந்து நின்று உரையாற்றினார்கள்.
( أَيُّهَا النَّاسُ إِنَّمَا أَهْلَكَ الَّذِينَ قَبْلَكُمْ أَنَّهُمْ
كَانُوا إِذَا سَرَقَ فِيهِمُ الشَّرِيفُ تَرَكُوهُ وَإِذَا سَرَقَ فِيهِمُ
الضَّعِيفُ أَقَامُوا عَلَيْهِ الْحَدَّ وَايْمُ اللَّهِ لَوْ أَنَّ فَاطِمَةَ
بِنْتَ مُحَمَّدٍ سَرَقَتْ لَقَطَعْتُ يَدَهَا ) மக்களே! உங்களுக்கு
முன் வாழ்ந்த (பனீ இஸ்ராயீல்) மக்கள் அழிந்து போனதற்கு காரணமே (அவர்களிடையே உள்ள) உயர்
குலத்தார் திருடிவிட்டால், அவர்கள் அவரை தண்டிக்காமல்
விட்டு விடுவார்கள். அவர்களிலுள்ள பலவீனர்கள் திருடிவிட்டால், அவர்கள் மீது தண்டனையை நடைமுறைப்படுத்துவார்கள்.
இறைவன் மீதாணையாக! இந்த முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடி இருந்தாலும் நான் அவரது கையை
துண்டித்தே இருப்பேன். நூல்:- புகாரீ-3475, முஸ்லிம்-3485
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَن حالَتْ شَفاعَتُهُ دُونَ حَدٍّ مِن حُدُودِ اللَّهِ، فَقَدْ
ضادَّ اللَّهَ في أمْرِهِ ) அல்லாஹ்வால் விதிக்கப்பட்ட தண்டனைகளில் ஒன்றை
நிறைவேற்றுவதைத் தடுக்க எவரேனும் பரிந்துபேசினால், அவர் அல்லாஹ்வின் கட்டளையை எதிர்த்தவராவார். அறிவிப்பாளர்:-
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் நூல்:- ஷுஅபுல் ஈமான் இமாம் பைஹகீ, தஃப்சீர் துர்ருல் மன்ஸூர்
தவறை யார் செய்தாலும், தவறு என்று உரத்தக்
குரலில் எடுத்துக் கூறி, அதற்காக கண்டிக்க
வேண்டும் அல்லது தண்டிக்க வேண்டும். தம்மைச் சேர்ந்தவர்கள் தவறிழைத்தால் அதைக் கண்டுக்கொள்ளாமல்
இருப்பது, மிகப்பெரிய அநீதியாகும்.
தவறுக்கு துணைபோனதாகவே கருதப்படும். தவறுக்கு துணைபோக எண்ணியவர்களை அண்ணல் நபி (ஸல்)
அவர்கள் கடுமையாக கண்டித்துள்ளார்கள்.
தடுக்கவேண்டும்
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது. (ஒருமுறை) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்,
( انْصُرْ أَخَاكَ ظَالِمًا
أَوْ مَظْلُومًا ) “உன் சகோதரன் அநீதியாளனாக
இருக்கும் நிலையிலும் அநீதிக்குள்ளானவனாக இருக்கும் நிலையிலும் அவனுக்கு நீ உதவி செய்”
என்று சொன்னார்கள்.
அப்போது ஒரு மனிதர், ( يَا
رَسُولَ اللَّهِ أَنْصُرُهُ إِذَا كَانَ مَظْلُومًا، أَفَرَأَيْتَ إِذَا كَانَ
ظَالِمًا كَيْفَ أَنْصُرُهُ ) “அல்லாஹ்வின் தூதரே!
அநீதியிழைக்கப்பட்டவனுக்கு நான் உதவி செய்வேன். (அது சரிதான்.) அநீதியாளனுக்கு எப்படி
நான் உதவி செய்வேன்? கூறுங்கள்!” என்றார்.
நபி (ஸல்) அவர்கள், ( تَحْجُزُهُ
أَوْ تَمْنَعُهُ مِنَ الظُّلْمِ، فَإِنَّ ذَلِكَ نَصْرُهُ
) “அவனை அநீதியிழைக்கவிடாமல்
நீ தடுப்பாயாக! இதுவே நீ அநீதியாளனுக்குச் செய்யும் உதவியாகும்” என்றார்கள். நூல்:-
புகாரீ-6952, திர்மிதீ,
முஸ்னது அஹ்மத்
கொடியோன் அபூஜஹ்ல் ஓர் அனாதைச் சிறுவனின் சொத்துக்குப் பொறுப்பாளனாக நியமிக்கப்பட்டிருந்தான்.
ஒருநாள் அந்தச் சிறுவன் உடுத்துவதற்குச் சரியான ஆடை எதுவுமின்றி நிர்வாண கோலத்தில்
அபூஜஹ்லிடம் வந்தான். தன்னுடைய ஏழ்மையை எடுத்துரைத்தான். தன் சொத்தைத் திருப்பித் தருமாறும்
உதவி செய்யுமாறும் கேட்டான். ஆனால் அபூஜஹ்ல் பணம் தரமுடியாது என்று மறுத்ததுடன் அந்தச்
சிறுவனின் நெஞ்சில் கை வைத்து விரட்டினான்.
கஅபாவின் முற்றத்தில் இதனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த குறைஷிப் பிரமுகர்கள்
அந்தச் சிறுவனிடம், "நீ முஹம்மதிடம் சென்று
முறையிடு. அவர் அபூஜஹ்லிடம் சென்று உனக்காகப் பரிந்துரைப்பார். உன் பணத்தைப் பெற்றுத்தருவார்"
என்று கூறினர். அவர்களின் நோக்கம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இந்த பிரச்சனையில் சிக்க
வைக்க வேண்டும், அபூஜஹ்லிடம் திட்டுவாங்கச்
செய்ய வேண்டும் என்பதுதான். ஆனால், இது அந்தச் சிறுவனுக்கு
தெரியாது.
அச்சிறுவன் அண்ணலாரிடம் வந்து அபூஜஹ்ல் பற்றி முறையிட்டான். தன்னுடைய பணத்தை மீட்டுத்
தருமாறு கோரினான். எளியோருக்கு எந்த உதவியும் செய்யாமல் அவர்களை வெறுமனே திருப்பி அனுப்புவது
அண்ணலாரின் பழக்கம் அல்ல. அந்தச் சிறுவனை அழைத்துக் கொண்டு அபூஜஹ்லிடம் சென்றார்கள்.
அண்ணலாரைக் கண்டதும் கண்ணியமாக வரவேற்றான். அனாதைச் சிறுவனுக்குரிய பணத்தை எடுத்துக்
கொடுத்தான். அதைப் பார்த்துக்கொண்டிருந்த குரைஷிப் பிரமுகர்கள் அபூஜஹ்லின் செயலைக்
கண்டு வியந்தனர். நீ மதம் மாறிவிட்டாயா? என்று அவனிடம் கேட்டனர்.
அதற்கு அவன், "முஹம்மதின் வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் சிறியதோர்
ஈட்டியைக் கண்டேன். பயந்து போய்விட்டேன். அவர் கேட்டுக்கொண்டபடி சிறுவனின் பணத்தைக்
கொடுக்கவில்லை எனில் அது என்னைக் குத்திவிடுமோ என்று அஞ்சினேன். அதனால்தான் உடனே பணத்தைத்
திருப்பிக் கொடுத்துவிட்டேன்" என்று கூறினான். நூல்:- தஃப்சீர் பைளாவி, ஹாஷியத்துல் ஜமல்
யாரோ எவரையோ தாக்குகிறார். அதைப்பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? என்ற எண்ணம் மிகவும் தவறாகும். அடுத்த வீட்டில்
பற்றி எரிகின்ற தீயை அணைக்காவிட்டால், அது நம் வீட்டையும் எரித்து சாம்பலாக்கிவிடக்கூடும் என்று யோசிக்க வேண்டும்.
அடுத்தவர் படுகின்ற கஷ்டத்தை நாம் கண்டும் காணாமல் சென்று விட்டால், நமக்கு ஏதேனும் கஷ்டம் ஏற்படும்போது பிறர் கண்டும்
காணாமல் சென்றுவிடுவார்கள். நமக்கு யாரும் உதவ முன்வர மாட்டார்கள்.
நாமும் பாதிக்கப்படலாம்
பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இறைவனின் விதிகளைக் கடைப்பிடிப்பவர்,
அவற்றை மீறி நடப்பவர் ஆகியோரின் நிலையானது,
(கப்பலில் பயணம் செய்த) ஒரு
கூட்டத்தாரின் நிலையைப் போன்றதாகும். அவர்கள் கப்பலில் (இடம் பிடிப்பதற்காகச்) சீட்டுக்
குலுக்கிப் போட்டார்கள். (அதன்படி) அவர்களில் சிலருக்குக் கப்பலின் மேல்தளத்திலும்
வேறுசிலருக்குக் கீழ்த்தளத்திலும் இடம் கிடைத்தது.
கீழ்த்தளத்தில் இருந்தவர்களுக்குத் தண்ணீர் தேவைப்பட்டபோது (அதைக் கொண்டுவர) அவர்கள்
மேல்தளத்தில் இருப்பவர்களைக் கடந்துசெல்ல வேண்டி யிருந்தது. (அதனால் மேலே இருந்தவர்
களுக்குச் சிரமம் ஏற்பட்டது).
அப்போது, கீழ்த்தளத்தில் இருந்தவர்கள்
(தமக்குள்) ‘‘நாம் (தண்ணீருக்காக) நமது பங்கில் (கீழ்த்தளத்தில்) ஒரு துளை போட்டுக்கொள்வோம்;
நமக்கு மேலே இருப்பவர்களைத் தொந்தரவு செய்யாமலிருக்கலாம்’
என்று பேசிக்கொண்டார்கள்.
எனவே, ( فَإِنْ
يَتْرُكُوهُمْ وَمَا أَرَادُوا هَلَكُوا جَمِيعًا، وَإِنْ أَخَذُوا عَلَى
أَيْدِيهِمْ نَجَوْا وَنَجَوْا جَمِيعًا ) அவர்கள் விரும்பியபடி செய்துகொள்ள அவர்களை மேல்தளத்தில் உள்ளவர்கள்
விட்டுவிட்டால், (கப்பலில் இருப்பவர்கள்)
அனைவரும் அழிந்துபோவார்கள். (துளையிட விடாமல்) அவர்களின் கரங்களைப் பிடித்துக்கொள்வார்களாயின்
அவர்களும் தப்பிப் பிழைத்துக்கொள் வார்கள். (அவர்களுடன் மற்ற) அனை வரும் தப்பிப் பிழைத்துக்கொள்வார்கள்.
அறிவிப்பாளர்:- நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-2493
பாவமோ, அநியாயமோ யாரோ எவருக்கோ
செய்கிறார்கள் நாம் அதை செய்யவில்லை எனவே, அதைப் பற்றிய அக்கறை நமக்கு தேவையில்லை என்ற அலட்சியப்போக்கு ஆபத்தானது. சமூகத்தில்
பாவமான காரியங்கள் பெருகிவிட்டால் அவற்றைச் செய்பவர்களுக்கு மட்டுமல்ல, மற்றவர்களுக்கும் அதன் பாதிப்பு நேரிடும். இதைச்
சிறுபிள்ளைக்கும் புரியும் வகையில் நபியவர்கள் உதாரணம் மூலம் விளக்கி இருக்கிறார்கள்.
அமெரிக்காவும் இஸ்ரேலும் சேர்ந்து ஈரானை தாக்குகிறது. அதனால் உலகம் முழுவதும் எரிபொருள்
தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு ஏற்பட்டு
வருகிறது. ஈரானுக்கு தானே பிரச்சினை என்று விட்டுவிடும்போது அதன் விளைவு உலகம் முழுவதும்
பிரதிபலிக்கிறது.
சமாதானம் செய்து வைப்பது
(பிறரின்
அநியாயத்தை) மன்னித்து சமாதானமாக செல்வோருக்கு அவரது கூலி அல்லாஹ்விடம் உள்ளது. அவன்
அநியாயம் செய்பவர்களை விரும்பமாட்டான். திருக்குர்ஆன்:- 42:40
ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருவர் மீதொருவர் கற்கள் வீசிக் கொள்ளுமளவிற்கு
'குபா' வாசிகள் (தமக்கிடையே) சண்டையிட்டனர். அண்ணல் நபி
(ஸல்) அவர்களிடம் இச்செய்தி தெரிவிக்கப்பட்டது. அவர்கள் நபியவர்கள், ( اذْهَبُوا بِنَا نُصْلِحُ بَيْنَهُمْ ) "நம்மை அழைத்துச் செல்லுங்கள். நாம் அவர்களுக்கிடையே
சமாதானம் செய்து வைப்போம்" என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-2693
யாரோ இருவர் சண்டையிட்டுக்கொள்கிறார்கள் நமக்கு ஏன் வந்தது வம்பு? என்ற அடிப்படையில் ஒதுங்கிச் செல்வது முறையல்ல.
அவர்களுக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள சண்டையால் பிறருக்கு பாதிப்பு வரக்கூடும் என்று
தொலைநோக்குப் பார்வையோடு சிந்தித்து, அவர்களை சமாதானத்திற்கு கொண்டுவர முயற்சிக்க வேண்டும்.
இரு நாட்டுக்கு மத்தியில் போர் மேகம் சூழ்ந்த போதிலும், அந்த நாடுகளின் தலைவர்கள் ஒன்று கூடி, ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து சமாதானத்தை விரும்புவது
தான், தமது குடிமக்கள்மீதுள்ள அக்கறை
உள்ள சிறந்த தலைமைப் பண்பிற்குரிய அடையாளமாகும்.
ஒரு தீமையைக் கண்டவுடன் ”எடுத்தோம் கவிழ்த்தோம்” என்றில்லாமல், அதற்கு ஏற்ற விதத்திலே அதனை தடுக்கவேண்டும். அதுவும்,
அதனை எந்த அடிப்படையில் தடுத்து, மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்ற சிந்தனையுடனே செயல்பட
வேண்டும்.
38 நாள்களுக்கு பிறகு பதட்டம் தணியும் விதகமாக அமெரிக்கா, ஈரான் ஆகிய இரு நாடுகளையும் இரண்டு வார போர் நிறுத்தமும் 10 நிபந்தனைகளுடன் பேச்சு வார்த்தைக்கு (8-04-2026 அன்று) அழைத்து வந்துள்ளது பாகிஸ்தான். இது அழகிய
முயற்சி என்று உலகம் முழுவதும் பாகிஸ்தானை பாரட்டி வருகிறது.
விரைவிலேயே முழுவதுமாக போர் பதற்றம் நீங்கி, உலகம் அமைதி பெற, அல்லாஹுத்தஆலா அருள்புரிவானாக! ஆமீன்!
மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ
இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951
No comments:
Post a Comment