Search This Blog

Monday, 15 December 2025

நற்பணி புரிவோம்!

 

நற்பணி புரிவோம்!

 

وَافْعَلُوا الْخَيْرَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ

(இறைநம்பிக்கையாளர்களே!) நற்பணி செய்துகொண்டிருங்கள். அதனால் நீங்கள் வெற்றியடையலாம். திருக்குர்ஆன்:- 22:77

 

(தலைப்பில் காணும் திருவசனம், சஜ்தா வசனம் கவனம்.)

 

சேவை மனப்பான்மை ஒவ்வொரு மனிதனிடமும் உண்டாக வேண்டும் என்று இஸ்லாம் இயங்குகிறது. தனிப்பட்ட முறையிலும் கூட்டு முறையிலும் மக்கள் சேவை புரிய வேண்டும். சேவை என்பது பொதுநல நோக்கம் கொண்டதாக இருக்க வேண்டும். உள்நோக்கம் கொண்டதாகவோ, சுயநலம் நிறைந்ததாகவோ இருக்கக்கூடாது. தான் செய்யும் மக்கள் சேவையை பயன்படுத்தி மக்களை தவறான வழிகளில் தூண்டிவிடக்கூடாது.

 

மக்கள் சேவையில் ஈடுபடுவோர் தனக்கு பாதிப்பு வந்தால்கூட அதை இறைவனுக்காக பொறுமையுடன் சகித்துக்கொண்டு அச்சேவையை தொடர வேண்டும். இதில் "மறப்போம் மன்னிப்போம்" என்ற கொள்கையை கடைபிடிக்க வேண்டும்.

 

தொழுகை, நோன்பு போன்ற இறைவணக்கங்கள் மூலம் இறைதிருப்தியைப் பெறுவது போன்று, தூய எண்ணத்தோடு ஈடுபடும் மக்கள் சேவையின் மூலமும் இறைதிருப்தியையும், வெற்றியையும் பெறலாம் என்று தலைப்பில் காணும் திருவசனம் தெளிவுபடுத்துகிறது.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( وَاَللَّهُ فِي عَوْنِ الْعَبْدِ مَا كَانَ الْعَبْدُ فِي عَوْنِ أَخِيهِ ) ஓர் அடியான் தன் சகோதரன் ஒருவனுக்கு உதவி செய்துகொண்டிருக்கும் வரை அந்த அடியானுக்கு அல்லாஹ் உதவி செய்துகொண்டிருக்கிறான். நூல்:- முஸ்லிம்-5231

 

மருத்துவ சேவை

 

அருமை நாயகம் (ஸல்) அவர்களின் பள்ளிவாசலுக்கு அருகில் ருஃபைதா (ரலி) அவர்கள் ஒரு கூடாரம் அடித்திருந்தார்கள். அங்கு மறுமை பயனை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு மருத்துவப்பணி செய்துக்கொண்டிருந்தார்கள். அதாவது, அறப்போரில் காயம் அடைந்தவர்களுக்கு மருந்து வைத்து கட்டுவது போன்ற சிகிச்சை செய்து வந்தார்கள். நூல்:- அல்இஸாபா

 

முஸ்லிம்களில் முதன்முறையாக மருத்துவமனை ஆட்சியாளர் வலீத் பின் அப்துல் மலிக் அவர்களால் நிறுவப்பட்டது. இந்த மருத்துவமனையில் தங்கியிருந்த நோயாளிகள் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டனர். அவர்களுக்கு எல்லா வசதிகளும் செய்து தரப்பட்டன. அத்தோடு அவர்களது குடும்பங்களுக்கும் தேவையான நிதி உதவியும் இதர வசதிகளும் செய்து தரப்பட்டன.

 

முஹம்மது சல்ஜுக்கி (ரஹ்) அவர்களுடைய ஆட்சி காலத்தில் நடமாடும் மருத்துமனை ஒன்று பெரிய அளவில் நடந்து கொண்டிருந்தது. மக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளைக் கொண்டு நாற்பது ஒட்டகங்கள் கிராமங்களை பலம் வந்து கொண்டிருந்தன. இஸ்லாமிய சகாப்தத்தில் மருத்துவமனைகள் தங்கள் சேவைக்காக ஒருபோதும் மக்களிடம் கட்டணம் வசூலித்ததில்லை. இந்த வகையில் அவை ஒரு பொதுத்தொண்டாகவே செயல்பட்டன. அன்று மருத்துவமனைகள் வியாபாரக்கூடங்களாக இருந்ததில்லை.

 

இஸ்லாம் கற்றுத் தந்த இறைவழிபாடுகள் தூய்மையாய் இருப்பதை அடிப்படையாகக் கொண்டவை. சுத்தம் குறையும்போது நோய்கள் வருவது இயல்பு. ஏழைகளில் அதிகமானோர் நோய்களால் அவதிப்படுகிறார்கள். காரணம், அவர்கள் குப்பை மேடு, கழிவுநீர் ஓடும் பகுதி, கூவம் போன்ற பகுதிகளில் வசிக்கின்றனர். சுத்த குறைவால் பல நோய்கள் சாதாரணமாக வருகின்றன. ஏழைகளில் பலர் மருத்துவத்திற்குப் போதிய வசதி இல்லாததால் நோய் நோக்காடுகளிலேயே இறந்துவிடுகின்றனர்‌

 

நமது சமுதாயத்தில் உள்ள மருத்துவர்கள் (clinic) கிளினிக் அல்லது மருத்துவமனை வைத்திருந்தால் ஏழை எளிய மக்களின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டு, வாரத்திற்கு அல்லது மாதத்திற்கு ஒரு முறையாவது இலவசமாக தரமான மருத்துவ முகாம் நடத்துவதற்கு முன் வர வேண்டும். நமது முன்னோர்களைப் போன்று நாமும் தூய எண்ணத்தோடு மக்களுக்கு மருத்துவ சேவை செய்து, நோய்கள் இல்லாத அழகான ஆரோக்கியமான சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.

 

வேலைவாய்ப்பு

 

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. அன்சாரிகளுள் ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் யாசகம் கேட்டு வந்தார். (அவருக்கு யாசகம் கொடுப்பதற்குப் பதிலாக) ( أَمَا فِي بَيْتِكَ شَىْءٌ ) "உம்முடைய வீட்டில் ஏதேனும் (பொருள்) இருக்கிறதா?" என்று அவரிடம் வினவினார்கள். அதற்கு அவர், "ஆம் ஒரு போர்வை இருக்கிறது. அதில் ஒரு பகுதியை நாங்கள் அணிந்துகொண்டு, ஒரு பகுதியை விரித்துக் கொள்கிறோம். மேலும், நாங்கள் தண்ணீர் பருகின்ற ஒரு குவளையும் உள்ளது" என்று கூறினார்.

 

நபியவர்கள், ( ائْتِنِي بِهِمَا ) "அவ்விரண்டையும் எடுத்துவருவீராக" என்று கூறினார்கள். எனவே அவர் இரண்டையும் நபியவர்களிடம் எடுத்து வந்தார். நபியவர்கள் அவற்றை தமது கையில் வாங்கி ( مَنْ يَشْتَرِي هَذَيْنِ ) "இவ்விரண்டையும் யார் விலைக்கு வாங்கிக்கொள்கிறார்?" என்று கேட்டார்கள். ஒருவர், "நான் இவ்விரண்டையும் ஒரு வெள்ளிக்காசுக்கு வாங்கிக் கொள்கிறேன்" என்று கூறினார். அப்போது நபியவர்கள், ( مَنْ يَزِيدُ عَلَى دِرْهَمٍ ) "ஒரு வெள்ளிக்காசைவிட அதிகத் தொகைக்கு யார் வாங்கிக்கொள்கிறார்?" என்று இரண்டு அல்லது மூன்று தடவை கேட்டார்கள். அப்போது ஒருவர், "நான் அவ்விரண்டையும் இரண்டு வெள்ளிக்காசுகளுக்கு(ப் பகரமாக) வாங்கிக் கொடுக்கிறேன்" என்று கூறினார். எனவே, நபியவர்கள் அவ்விரண்டையும் அவரிடம் கொடுத்துவிட்டு அவரிடமிருந்து அந்த இரண்டு வெள்ளிக்காசுகளையும் வாங்கிக்கொண்டார்கள்.

 

நபியவர்கள், அந்த இரண்டு வெள்ளிக்காசுகளையும் அந்த அன்சாரி தோழரிடம் கொடுத்து, ( اشْتَرِ بِأَحَدِهِمَا طَعَامًا فَانْبِذْهُ إِلَى أَهْلِكَ وَاشْتَرِ بِالآخَرِ قَدُومًا فَأْتِنِي بِهِ ) "இவ்விரண்டில் ஒன்றின் மூலம் உணவுப் பொருளையும் வாங்கி, அதை உன் குடும்பத்தாருக்கு கொடுப்பீராக! மற்றொன்றின் மூலம் ஒரு கோடாரியை வாங்கிக்கொண்டு என்னிடம் வருவீராக" என்று கூறினார்கள்.

 

அவ்வாறே அவர் செய்தார். (அவர் வாங்கிக்கொண்டு வந்த கோடாரியை) நபியவர்கள் எடுத்து அதில் தமது கையால் ஒரு (கைப்பிடிக்) கம்பை இணைத்தார்கள். (பின்னர் அதை அவரிடம் கொடுத்து) ( اذْهَبْ فَاحْتَطِبْ وَبِعْ وَلاَ أَرَيَنَّكَ خَمْسَةَ عَشَرَ يَوْمًا ) "நீர் சென்று விறகு வெட்டி விற்பீராக! நான் உம்மை பதினைந்து நாள்களுக்குப் பார்க்கக் கூடாது" என்று கூறினார்கள். அவ்வாறே அவர் (சென்று) விறகு வெட்டி விற்கத் தொடங்கினார். (பின்னர் பதினைந்து நாள்கள் கழித்து) பத்து வெள்ளிக்காசுகளை சம்பாதித்துக் கொண்டு வந்தார்.

 

நபியவர்கள், ( فَاشْتَرَى بِبَعْضِهَا  طَعَامًا وَبِبَعْضِهَا ثَوْبًا ) "அவற்றுள் சிலவற்றின் மூலம் உணவையும் மேலும் சிலவற்றின் மூலம் ஆடைகளையும் வாங்கிக்கொள்வீராக!" என்று கூறிவிட்டுப், பின்னர், ( هَذَا خَيْرٌ لَكَ مِنْ أَنْ تَجِيءَ الْمَسْأَلَةُ نُكْتَةً فِي وَجْهِكَ يَوْمَ الْقِيَامَةِ ) "நீர் யாசகம் கேட்டு வருவதைவிட இதுவே சிறந்தது. யாசகம் கேட்பது மறுமையில் உமது முகத்தில் உள்ள (கரும்)புள்ளியாகும்" என்று கூறினார்கள். நூல்:- அபூதாவூத்-1398, நசாயீ-4432, இப்னுமாஜா-2089, முஸ்னது அஹ்மத்

 

அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் கூறியதாவது. (முஹாஜிர்களான) நாங்கள் மதீனாவுக்கு வந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கும் சஅத் பின் அர்ரபீஉ (ரலி) அவர்களுக்கும் இடையே சகோதரத்துவத்தை ஏற்படுத்தினார்கள். சஅத் (ரலி) அவர்கள், ( إِنِّي أَكْثَرُ الأَنْصَارِ مَالاً، فَأَقْسِمُ لَكَ نِصْفَ مَالِي، وَانْظُرْ أَىَّ زَوْجَتَىَّ هَوِيتَ نَزَلْتُ لَكَ عَنْهَا، فَإِذَا حَلَّتْ تَزَوَّجْتَهَا‏ ) ‘‘நான் அன்சாரிகளிலேயே அதிகமான செல்வம் உடையவன்; எனவே, என் செல்வத்தில் பாதியை உமக்குப் பிரித்துத் தருகிறேன். என் இரு மனைவியரில் நீர் யாரை விரும்புகிறீர் என்று பாரும்! அவரை உமக்காக மணவிலக்குச் செய்கிறேன். அவரது (இத்தா எனும்) காத்திருப்புக் காலம் முடிந்ததும் அவரை உமக்கு மணமுடித்துத் தருகிறேன்” எனக் கூறினார்.

 

அப்போது நான், ( لاَ حَاجَةَ لِي فِي ذَلِكَ، هَلْ مِنْ سُوقٍ فِيهِ تِجَارَةٌ ) ‘‘இது எனக்குத் தேவையில்லை. வணிகம் நடைபெறுகின்ற கடைவீதி ஏதும் (இங்கு) இருக்கிறதா?” எனக் கேட்டேன். அவர், ‘‘கைனுகா எனும் சந்தை இருக்கிறது” என்றார். நூல்:- புகாரீ-2048, முஸ்லிம், திர்மிதீ

 

ஒரு மனிதன் நல்ல ஆரோக்கியம் உள்ளவனாகவும், பலசாலியாகவும் இருக்கின்றான். ஆனால், வருமானம் ஏதுமில்லை என்றால், அவனுக்கு ஏதேனும் யாசகம் வழங்குவதைவிட அவனது சுய வருமானத்திற்கு வழிகாட்டுவது அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையாகும்.

 

பிறர் நம்மிடம் ஏதேனும் தர்மம் கேட்கும்போது நாம் ஏதேனும் பொருள் கொடுத்து உதவுகிறோம். அந்நேரம் அவர்கள் உள்ளத்தில் பிறரிடம் யாசகம் வாங்கி பிழைக்கும் அளவுக்கு நம் நிலை மோசமாகிவிட்டதே என்று உறுத்தல் ஏற்படலாம். மாறாக, அவர்கள் வேலை செய்து பிழைத்துக்கொள்வதற்கு நாம் ஏற்பாடு செய்து கொடுத்தால், அதன் மூலம் அவர்கள் வருமானம் ஈட்டிக்கொள்வார்கள். எந்தவிதத் தாழ்வு மனப்பான்மையோ மன உறுத்தலோ இல்லாமல் அவர்கள் நிம்மதியாக வாழ்வார்கள்.

 

மேலும், பிறரின் வாழ்க்கை முழுவதற்கும் தேவையான பணம் காசுகளை நாம் கொடுப்பது சிரமமாகிவிடலாம். ஆனால், ஒருவரின் தொடர் வருமானத்திற்குத் தேவையான ஒரு வேலைக்கு ஏற்பாடு செய்து கொடுப்பது சிரமமாகாது. சுருங்கக்கூறின்,  தகுதி இருப்பவர்களுக்கும், கஷ்டப்படுபவர்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைத்திட நாம் உதவ வேண்டும்.

 

ஊடகத்துறை

 

கடந்த அரை நூற்றாண்டில் தகவல்தொடர்பு தொழில்நுட்பம் வெகுவாக முன்னேறியிருக்கிறது. செய்தி ஊடகங்கள் இந்த உலகத்தையே நம் வீட்டுக்குள் கொண்டு வந்து சேர்க்கின்றன. நம்மை நாம் அறிவதற்கும் இந்த மீடியாக்களை நாடித்தான் ஓடிப் போக வேண்டியிருக்கிறது. இந்த மீடியாவை நமக்கு சாதகமாக இஸ்லாமியக் கருத்துக்களுக்கு தோதுவாக பயன்படுத்துவது எப்படி? என்ற அறிவை நாம் அறிந்து வைத்திருக்க வேண்டும்.

 

உலகளவில் செய்தி ஊடகங்களில் 66 விழுக்காடு உலகில் 0.3 விழுக்காட்டினராக இருக்கும் யூதர்கள் கைவசம் உள்ளது. அவர்கள் தரும் செய்திகளை ஊடகங்கள் எவ்வித விசாரணையுமின்றி அப்படியே வெளியிடுகிறது. இந்தியாவில் 8 விழுக்காடு இருக்கும் உயர்ஜாதி பிரிவினர், செய்தி ஊடகங்களில் 71 விழுக்காடு ஆக்கிரமித்துள்ளனர்.

 

இன்றைய சூழலில் ஒரு நாட்டையோ அல்லது முழு உலகத்தையோ ஆள வேண்டுமானால் அதற்கு செய்தி ஊடகங்களைவிட சிறந்த முறையில் துணி நிற்கக்கூடிய கருவியேதும் இருக்கமுடியாது.

 

1991 ஆம் ஆண்டு கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் துவக்கப்பட்ட "மாத்யமம்" என்ற முஸ்லிம் மலையாள நாளேடு கேரளாவில் ஏழு இடங்களிலும் மற்றும் பெங்களூர், மங்களூர், பஹ்ரைன், கத்தார், துபை, குவைத் ஆகிய 13 இடங்களிலிருந்து வெளிவருகிறது.

 

இதன் வாசகர்கள் 15 முதல் 20 விழுக்காடு பிற சகோதர சமயத்தவர்கள் ஆவார்கள். கேரளாவின் நாளேடுகளில் இது மூன்றாவது இடத்தை பிடித்து, மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவிட்டது. இந்த பத்திரிக்கை வருகைக்கு பின் முஸ்லிம்கள் பற்றியும் இஸ்லாம் பற்றியும் அவதூறுவான செய்திகள் வெளியிடப்படுவது பெருமளவில் நிறுத்தப்பட்டு இருக்கிறது என்றும், இஸ்லாம் பற்றிய சரியான கண்ணோட்டம் வளர்ந்துள்ளது என்றும் சொல்லப்படுகிறது.

 

1996 ஆம் ஆண்டு கத்தாரில் துவங்கப்பட்ட "அல்ஜஸீரா" தொலைக்காட்சி சேனல் இதுவரை 5 கோடி பார்வையாளர்களை பெற்றுள்ளது. உண்மைச் செய்தியை வெளியிடுவதின் மூலம் இதற்கு கிடைத்த வெற்றியால் அமெரிக்க அதிகார வர்க்கத்தை ஆட்டம் காண செய்துள்ளது.

 

செய்தி ஊடகங்களின் மூலம் வெளியாகும் முஸ்லிம்களுக்கு எதிரான தகவல்களை முழுமையாக நம்புவது அறிவுடைமையாகாது. முஸ்லிம்களுக்கு எதிரான தகவல்கள் வெளியானதும் கால தாமதமின்றி அது சம்பந்தப்பட்ட தகவல்களை ஆய்வு செய்து, உண்மைகளை கண்டறிந்து, மக்களுக்கு அந்த செய்திகளில் உண்மைகளையும் பொய்களையும் செய்தி ஊடகங்களின் மூலமும், நம்மைப் பற்றி விசாரிப்பவர்களுக்கு நாவாற்றலின் மூலமும் வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும்.

 

செய்தி ஊடகங்கள் தான் முஸ்லிம் சமூகத்தையே தீவிரவாத சமூகமாக மாயம் புகின்றது என்பதை மறந்து விடக்கூடாது. இத்தவறான கருத்துக்களை முறியடிக்க செய்தி ஊடகத்துறையில் இஸ்லாமியர்கள் அதிக கவனம் செலுத்தி, பங்காற்ற வேண்டும்.

 

நமக்கு ஊடகத்துறையில் போதிய அறிவு இல்லாவிட்டால், அது நம்மையும் பின்வரும் நமது சமுதாயத்தினரையும் பாதிக்கும்.

 

பிற மொழியில் ஆர்வம்

 

உங்கள் மொழிகளும், நிறங்களும் மாறுபட்டிருப்பது இறைவனின் அத்தாட்சிகளில் ஒன்று! ஆழ்ந்து சிந்திக்கும் அகிலத்தாருக்கு பல படிப்பினைகள் அதில் உள்ளன. திருக்குர்ஆன்:- 30:22

 

ஸைத் இப்னு ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது. பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள், யூதர்களின் (ஹீப்ரு அல்லது சிரியாக் மொழி) எழுத்து வடிவைக் கற்றுக்கொள்ளும்படி எனக்குக் கட்டளையிட்டார்கள். ( إِنِّي وَاللَّهِ مَا آمَنُ يَهُودَ عَلَى كِتَابٍ ) "அல்லாஹ்வின் மீதாணையாக! (எனக்கு எழுதுகின்ற) கடிதம் விஷயத்தில் யூதர்களை என்னால் அஞ்சாமல் இருக்க முடியவில்லை (என்பதே இதற்குக் காரணம்)" என்று அவர்கள் கூறினார்கள். (இவ்வாறு அவர்கள் கூறி) அரை மாதம் தான் கழிந்திருக்கும். நான் நபியவர்களுக்காக யூத மொழியைக் கற்றுக்கொண்டு, நபியவர்கள் (யூதர்களுக்கு) அனுப்பும் கடிதங்களை நான் எழுதிவந்தேன்; யூதர்கள் நபியவர்களுக்கு எழுதும் கடிதங்களை நபியவர்களுக்குப் படித்துக் காட்டி வந்தேன். நூல்:- புகாரீ-7195, அபூதாவூத்-3160, திர்மிதீ-2636, முஸ்னது அஹ்மத்

 

இப்னு ஸுபைர் (ரலி) அவர்கள் போன்ற நபித்தோழர்களில் சிலர் அரபு மொழியைத் தவிர பிற மொழிகளையும் அறிந்திருந்தார்கள்.

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே பிற மொழிகளை கற்றுக்கொள்ள வேண்டும் என தமது தோழர்களுக்கு உத்தரவிட்டிருந்தார்கள்.

 

"ஒரு மொழியை கற்பது என்பது ஒரு கலாச்சாரத்தை, நாகரீகத்தை கற்பது என்று பொருள்" என தமிழ் அறிஞர் மணவை முஸ்தபா கூறுகிறார்.

 

ஒரு மொழியின் கட்டமைப்பு மனிதனின் சிந்தனை முறைகளை பாதிக்கின்றது; எல்லைகளை நிர்ணயிக்கிறது. நாம் நினைப்பது போல் மொழி ஒன்றும் அவ்வளவு சாதாரணமானதன்று. மொழியற்ற உலகம் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. இன்று உலகம் முழுவதும் ஏழாயிரத்திற்கும் அதிகமான மொழிகள் பேசப்படுகின்றன.

 

தற்காலிக இஸ்லாமிய வாழ்வின் தேவைகளை நன்கு விளங்கிய முஸ்லிமுக்கு கல்வி ரீதியாக மற்றொரு மொழியை அறிந்து கொள்வது மிக அவசியமாகும். மார்க்க அறிவைக் கற்றுக்கொள்வதில் ஆசையும் ஆர்வமும் உள்ளவர்கள் பிற மொழிகளை அறிந்து கொள்ள ஆர்வம் காட்ட வேண்டும்.

 

முஸ்லிம்கள், உலக மக்கள் அனைவரையும் நேர்வழியின் பக்கம் அழைக்க வேண்டும் என்ற அல்லாஹ்வின் ஆணையை செயல்படுத்துவதில் பிற மொழிகளை கற்பது உதவியாக அமையும்.

 

இன்றைய முஸ்லிம்கள் வாழும் சூழலுக்கேற்ப வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பிற மொழிகளைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

 

உதாரணமாக: ஆங்கிலமொழி இன்று எல்லோரையும் கவரும் உலகளாவிய மொழியாகிவிட்டது. 380 மில்லியன் மக்களால் பேசப்படுகின்ற உலகளவில் மூன்றாவது மொழி ஆங்கிலம். ஒரே குடையின் கீழ் உலகம் முழுவதும் இணையும் மையப் புள்ளியாக இருப்பது (இன்டர்நெட் எனும்) இணையதளம். இந்த இணையதளத்தில் அதிகம் பயன்படுத்துவது ஆங்கிலமொழியே! ஆங்கிலமொழி துணையோடு இணையதளத்தின் வழியாக இஸ்லாமியக் கொள்கைகளையும், ஒழுக்கமாண்புகளையும், கருத்துக்களையும் பரப்புவது மிகச் சுலபமான வழிமுறையாகும்.

 

எனவே, நாம் எந்த நற்செயலை செய்தாலும் நம்முடைய மறுமையின் வெற்றிக்காகவும், இறைவனின் திருப்திக்காகவும் மட்டும் தூய மனத்தோடு ஈடுபட வேண்டும். அதற்கு அல்லாஹுத்தஆலா நமக்கு அருள்புரிவானாக! ஆமீன்!

 

(இந்தக் கட்டுரை சுமார் பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது.)

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை.  செல்: 9840535951

 

No comments:

Post a Comment

நற்பணி புரிவோம்!

  நற்பணி   புரிவோம்!   وَافْعَلُوا الْخَيْرَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ ( இறைநம்பிக்கையாளர்களே!) நற்பணி செய்துகொண்டிருங்கள். அதனால் நீங்க...