Search This Blog

Thursday, 27 March 2025

உணர்வுகளை மதிப்போம்!

 உணர்வுகளை மதிப்போம்!

 

وَلَا تَسُبُّوا الَّذِينَ يَدْعُونَ مِنْ دُونِ اللَّهِ فَيَسُبُّوا اللَّهَ عَدْوًا بِغَيْرِ عِلْمٍ

(இறைநம்பிக்கையாளர்களே!) அல்லாஹ் அல்லாத எவற்றை அவர்கள் (இறைவன் என) அழைக்கின்றார்களோ அவற்றை நீங்கள் திட்டாதீர்கள். அதனால் அவர்கள் அறியாமையின் காரணமாக வரம்பு மீறி அல்லாஹ்வை திட்டுவார்கள். திருக்குர்ஆன்:- 6:108

 

பிறர் உணர்வுகளை புரிந்துகொள்வதும் மற்றும் மதிப்பதும்  ஓர் நல்ல முஸ்லிமின் முதல் அடையாளம் ஆகும். மற்றவர்களின் கஷ்டங்களையும்சந்தோஷங்களையும் உணர்ந்துஅவர்களுடன் சேர்ந்து சிரிப்பதும்அழுவதும்தான் உண்மையான மனித நேயம். மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள்எப்படி உணர்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு அதற்கேற்ப நடந்து கொள்வது ஒரு நல்ல பண்பு.

 

பிறர் உணர்வுகளை மதிப்பதற்கான வழிகள்: பிறரது இடத்தில் நம்மை வைத்து அவர்களைப் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். மற்றவர்களின் கஷ்டங்களையும்சந்தோஷங்களையும் உணர்ந்துஅவர்களுடன் சேர்ந்து சிரிப்பதற்கும்அழுவதற்கும் முயற்சிக்க வேண்டும். இதுமற்றவர்களின் எண்ணங்களையும் உணர்வுகளையும் பகிர்ந்து கொள்ள ஊக்குவிக்கவும்.

 

நாம் இவ்வாறு உண்மையானவராக இருக்கும்போது மக்கள் நம்மை இயல்பாகவே மதிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

 

மற்றவரின் மன உணர்வுகளை மதிக்கத் தெரியாதவர்கள் எவ்வளவு படித்தாலும் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை.

 

நம்மைப் போன்றே மற்றவர்களுக்கும் சுய விருப்பு வெறுப்புகள் எல்லாவற்றிலும் இருக்கவே செய்கிறது. இதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இதை தவிர்த்து சுயநலமியாக தனது ஆசாபாசங்களையும்விருப்பு வெறுப்புகளையும் மட்டுமே கருத்தில் கொள்வது சரியல்ல.

 

மனைவியர்

 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. அன்று பெருநாள் (ஈத்) தினமாக இருந்தது. சூடானியர்கள் தோல் கேடயத்தாலும் ஈட்டிகளாலும் (பள்ளிவாசல் வளாகத்தில் வீர விளையாட்டுகள்) விளையாடிக்கொண்டிருந்தார்கள். அப்போது அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் (அந்த விளையாட்டைப் பார்க்க அனுமதி) கேட்டிருக்க வேண்டும்அல்லது அவர்களே என்னிடம், ( تَشْتَهِينَ تَنْظُرِينَ ) “நீ (இவர்களுடைய வீர விளையாட்டுகளைப்) பார்க்க விரும்புகிறாயா?” என்று கேட்டிருக்க வேண்டும். (சரியாக எனக்கு நினைவில்லை). அதற்கு நான், ‘ஆம்’ என்று பதிலளித்தேன்.

 

உடனே அண்ணல் நபி (ஸல்) அவர்கள் என் கன்னம் அவர்களது கன்னத்தின் மீது ஒட்டியபடி இருக்கஎன்னைத் தமக்குப் பின்னால் நிற்கவைத்துக்கொண்டார்கள். ( دُونَكُمْ يَا بَنِي أَرْفِدَةَ ) “அர்ஃபிதாவின் மக்களே! (எத்தியோப்பியர்களே!) விளையாட்டைத் தொடருங்கள்” என்று கூறினார்கள். இறுதியில் நான் (விளையாட்டை நன்கு பார்த்து) சலிப்புற்றுவிட்டபோது ( حَسْبُكِ ) ‘போதுமா?’ என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க நான், “ஆம் (போதும்)” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், ( فَاذْهَبِي ) “அப்படியானால் நீ போகலாம்” என்று சொன்னார்கள். நூல்:- புகாரீ-950

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தமது மனைவியின் உணர்வுக்கு மதிப்பளித்துள்ளார்கள். மனைவியெனில் படுக்கையில் பாலுணர்வைப் பகிர்வதற்குரிய ஒரு சதைப்பிண்டம்! பகல் வேளையில் நம் வீட்டில் அனைத்துப் பணிகளையும் செய்வதற்குரிய மானுட இயந்திரம்! இவளிடம் என்ன பேச்சு வேண்டியிருக்கின்றதுஇவளிடம் பேசுகின்ற நேரத்தில் நான்கு தஸ்பீஹ்களைச் சொன்னால் நன்மைகள் கிடைக்கும் என்று நாம் எண்ணுகின்றோம். நன்மையல்லாத காரியத்தையா நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்திருப்பார்கள்? என்று சற்று யோசிக்கவேண்டும்.

 

மனைவியின் உணவுஉடைஅவர்களுக்குரிய சுயமரியாதை போன்ற விஷயங்களையும், அவர்களது ரசனை உணர்வுகளையும் மதிக்கவேண்டும்.

 

குழந்தைகள்

 

ஷத்தாத் பின் அல்ஹாத் (ரலி) அவர்கள் கூறியதாவது. (ஒரு நாள்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுவிக்க வரும்போது (தம்முடைய பேரக் குழந்தைகளான) ஹசன் ஹுசைனையோ தூக்கி கொண்டு வந்தார்கள். பிறகு பேரக்குழந்தையை இறக்கி விட்டுவிட்டுத் தொழுகைக்காக தக்பீர் கூறித் தொழலானார்கள். அப்போது அவர்கள் தமது தொழுகையில் (சஜ்தா எனும்) சிரம்பணிதலை நீட்டினார்கள்.

 

(நீண்ட நேரம் ஆனதால்) எனது தலையை உயர்த்திப் பார்த்தபோது, (பேரக் குழந்தை) நபியவர்களின் முதுகில் இருக்கஅவர்கள் சஜ்தாவிலேயே இருந்தார்கள். (மீண்டும்) நான் என் சஜ்தாவுக்கே திரும்பிவிட்டேன்.

 

நபியவர்கள் தொழுகையை நிறைவு செய்தபோது மக்கள், "நாயகமே! நீங்கள் உங்கள் தொழுகையில் எங்களுடன் நீண்ட நேரம் சஜ்தா செய்தீர்கள். நாங்கள்ஏதோ ஒன்று நிகழ்ந்துவிட்டதுஅல்லது உங்களுக்கு (வஹீ எனும்) இறைசெய்தி அறிவிக்கப்படுகிறது என்ற கருதிவிட்டோம்" என்று கூறினர்.

 

அதற்கு நபியவர்கள், ( كُلُّ ذَلِكَ لَمْ يَكُنْ وَلَكِنَّ ابْنِي ارْتَحَلَنِي فَكَرِهْتُ أَنْ أُعَجِّلَهُ حَتَّى يَقْضِيَ حَاجَتَهُ ) "இவற்றுள் எதுவும் நிகழவில்லைஎன் (பேரப்)பிள்ளை என் மீது சவாரி செய்தான். அவன் விருப்பம் நிறைவேறும்வரை சஜ்தாவிலிருந்து விரைந்து என நான் விரும்பவில்லை" என்று கூறினார்கள். நூல்:- நசாயீ-1129, முஸ்னது அஹ்மத்ஹாக்கிம்

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்பாஸ் (ரலி) அவர்களின் பிள்ளைகளான அப்துல்லாஹ்உபைதுல்லாஹகஸீர் (ரலி) ஆகிய மூவரையும் அணிவகுக்கச் செய்து ( مَنْ سَبَقَ اِلَيَّ فَلَهُ كَذَا وَكَذَا ) "யார் என்னிடம் முதலில் ஓடிவருகிறாரோ அவருக்கு இன்னின்னது (பரிசாகக்) கிடைக்கும்" என்று கூறுவார்கள். சிறுவர்கள் அண்ணலாரிடம் ஓடி வந்து அவர்களது நெஞ்சிலும், முதுகிலும் விழுவார்கள். அப்போது அண்ணலார் அச்சிறுவர்களை கட்டியணைத்து முத்தமிடுவார்கள். நூல்:- முஸ்னது அஹ்மத்-1739

 

நம்மிடம் பிள்ளைகள் விளையாடும்போது அவர்கள் உணர்வுகளை மதிக்கும் விதமாகநாம் அவர்களை விளையாட்டை ஆமோதிக்க வேண்டும். நாம் எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் சரியே! முடிந்தால்நாமும் அவர்களோடு சேர்ந்து விளையாடும்போதுநம்முடன் அவர்கள் மிகவும் இணக்கமாகிவிடுவார்கள். அந்நேரத்தில் நாம் அவர்களுக்கு மார்க்க ஒழுக்கங்களை கற்றுத்தரும்போதுஅதற்கு அவர்கள் செவியேற்கக்கூடும். சில நேரங்களில் நாம் பிள்ளைகளோடு பிள்ளைகளாக மாறி விடுதல்மிகுந்த சந்தோஷத்தைத் தரும்.

 

குடும்பத்தினர்

 

மக்கா வெற்றியின்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வருகையையும் முஸ்லிம்களின் எழுச்சியும் கண்டு பயந்துபோன இக்ரிமா எமன் தேசத்திற்குச் சென்றுவிட்டார்.  அபூஜஹ்லின் மகனான இவர்தமது தந்தையைப் போலவே இஸ்லாத்தின்மீது கடும்பகை கொண்டிருந்தார். இவரின் மனைவி உம்மு ஹக்கீம் பின்த் ஹாரிஸ் (ரலி) அவர்கள் யமனுக்குச் சென்று அவரை அழைத்து வந்தார்கள். பின்பு கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களின் சபைக்கு அழைத்து வரப்பட்டார்.

 

தூரத்தில் இக்ரிமா வருவதை பார்த்த நபியவர்கள், ( يَأْتِيكُمْ عِكْرِمَةُ بْنُ أَبِى جَهْلٍ مُؤْمِنًا مُهَاجِرًا ، فَلَا تَسُبُّوا أَبَاهُ ، فَإِنَّ سَبَّ الْمَيِّتِ يُؤْذِي الْحَيَّ ، وَ لَا يَبْلُغُ الْمَيِّتَ “அபூஜஹ்லின் மகன் இக்ரிமா உங்களிடம் வெகு தொலைவில் இருந்து இறைநம்பிக்கையை கொண்டவராக வருகிறார். எனவே, அவருடைய தந்தையை திட்டாதீர்கள். இறந்துபோன ஒருவரை திட்டுவதால் அது உயிருடன் இருப்பவருக்கு மனவேதனையை தரும். இறந்தவருக்கு அது தெரியவும் செய்யாது" என்று கூறினார்கள். நூல்:- ஹாகிம்அல்இஸ்திஆப்அல்முன்தளிம் இப்னு ஜவ்ஸீதாரீக் திமிஷ்க் இப்னு அசாகிர்சுவரும் மின் ஹயாதிஸ் ஸஹாபா

 

ஒருவரிடம் அவர்களின் முன்னோர்களை குறைகூறிப் பேசுவது அல்லது தமது மனைவியிடம் அவளின் பெற்றோர் மற்றும் உறவினர்களை குறைப்பேசி அவர்களின் உணர்வுகளை காயப்படுத்துவதும் தவிர்க்கப்பட வேண்டியவையாகும்.

 

பிறர் மனம் நோகும்படியான வார்த்தைகளை பேசுவதை விட்டும் தவிர்ந்திருப்பதும்கூட உணர்வுகளை மதிப்பதாகும் என்பதை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தருகிறார்கள்.

 

தலைவர்கள்

 

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது. முஸ்லிம்களில் ஒருவரும் யூதர்களில் ஒருவரும் சச்சரவிட்டுக்கொண்டார்கள். அந்த முஸ்லிம், ‘‘அகிலத்தார் அனைவரைவிடவும் முஹம்மத் (ஸல்) அவர்களை (சிறந்தவராக்கி)த் தேர்ந்தெடுத்துக் கொண்டவன் மீதாணையாக!” என்று அவர் செய்த ஒரு சத்தியத்தின்போது கூறினார். அந்த யூதர், ‘‘அகிலத்தார் அனைவரைவிடவும் மூசா (அலை) அவர்களை (சிறந்தவராக)த் தேர்ந்தெடுத்தவன்மீது சத்தியமாக!” என்று கூறினார். (யூதரின்) இந்தச் சொல்லைக் கேட்டதும் அந்த முஸ்லிம் தமது கையை உயர்த்தி யூதரை அறைந்துவிட்டார். உடனே அந்த யூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததனது விவகாரத்தையும் அந்த முஸ்லிமின் விவகாரத்தையும் தெரிவித்தார்.

 

அப்போது நபியவர்கள் (அந்த முஸ்லிமை வரவழைத்து), ( لاَ تُخَيِّرُونِي عَلَى مُوسَى )  ‘‘மூசாவைவிட என்னைச் சிறப்பாக்கி (உயர்த்திப் பேசி) விடாதீர்கள். நூல்:- புகாரீ-3408, முஸ்லிம்-4732

 

உண்மையாகவே நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்கள்மூசா (அலை) அவர்களை பன்மடங்கு உயர்வானவர்கள். அதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஆனாலும்அந்த யூதரின் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பது நபியவர்களின் எண்ணம்.

 

பிறர் உணர்வுகளுக்கு மதிப்பளித்தல் என்பது தலைமைத்துவப் பண்புகளில் ஒன்றாகும். இந்த பண்பை உடையவர்கள் காலம் கடந்தாலும் மதிப்பளிக்கப்படுவார்கள். குறிப்பிட்ட இந்த பண்பு இல்லாமல் இருப்பவர்கள் நிச்சயமாக சிறந்த தலைவனாக இருக்க தகுதியற்றவர்களே என்று விளங்கவேண்டும்.  ஆகவேபிறர் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நாமும் தலைமைத்துவப் பண்புகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

 

அவரவர் தலைவர்கள் அவரவருக்கு உயர்வு தான். நமது தலைவரை பிறர் நேசிக்கவில்லை என்பதற்காக நாம் பிறரின் தலைவர்களை ஏசிபேசிஅவர்களின் உணர்வுகளை காயப்படுத்திவிடக்கூடாது.

 

கொள்கை கோட்பாடு

 

தலைப்பில் காணும் வசனத்தில் அல்லாஹ் இணைவைப்பாளர்கள் வழிபடக்கூடிய தெய்வங்களை ஏசக்கூடாது என்று அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் கட்டளையிடுகின்றான். ஏனெனில்அதனால் ஏற்படும் நன்மைகளைவிட தீமையே அதிகம்.

 

இறைமறுப்பாளர்கள் வழிபட்டு வந்த சிலைகளை முஸ்லிம்கள் ஏசினால்பதிலுக்குப் பதிலாக இறைமறுப்பாளர்கள் அறிவின்றிவரம்பு மீறி அல்லாஹ்வை ஏசுவார்கள். இது தடுக்கப்பட வேண்டிய ஒன்று.

 

அல்லாஹ் ஏசப்பட இறைநம்பிக்கையாளர்கள் காரணமாக இருக்கக்கூடாது என்பதையே இந்த வசனம் உணர்த்துகின்றது.


(நபியே!) இவர்கள் உம்மை பொய்யர் என்று சொன்னால் நீர் கூறும்: என்னுடைய வழிபாடுகள் எனக்கு. உங்களுடைய வழிபாடுகள் உங்களுக்கு. நான் செய்யும் வழிபாடுகளிலிருந்து நீங்கள் பொறுப்பு நீங்கியோர் ஆவீர். நீங்கள் செய்யும் வழிபாடுகளிலிருந்து நான் பொறுப்பு நீங்கியவன் ஆவேன். திருக்குர்ஆன்:- 10:41

 

உங்களுடைய மார்க்கம் உங்களுக்கு என்னுடைய மார்க்கம் எனக்கு. திருக்குர்ஆன்:- 109:6

 

மறுமைநாளில் நம் அனைவரும் மத நம்பிக்கை மற்றும் வணக்க வழிபாடுகள் குறித்து விசாரிக்கப்படுவோம். அங்கே நமது செயல்பாடுகளுக்கு பிரதிபலன் வழங்கப்படும்.

 

ஓர் முஸ்லிம் தமது சகோதர சமயத்தினருக்கு இஸ்லாமிய கோட்பாடுகளை எடுத்துரைக்கலாம். ஆனால்அவர்களின் மத நம்பிக்கைகளைஉணர்வுகளை கொச்சைப்படுத்தும் விதமாகஅவர்கள் கடவுள்களாக எண்ணி வழிபடுபவற்றை நைய்யாண்டி செய்தல்ஏசி பேசுதல் தவறு. இது அவர்களின் உணர்வுகளை காயப்படுத்தியதாக ஆகிவிடும். இதை இஸ்லாம் விரும்புவதில்லை. சிலைகளும்சிலுவைகளும் கேலி செய்தல் மற்றும் ஏசிபேசிதலுக்கு தகுதியானதாக இருந்தாலும்அவ்வாறு செய்ய இஸ்லாம் அனுமதிக்கவில்லை. சுருங்கக் கூறின்பிறரின் கடவுள் கொள்கை குறித்த உணர்வுகளை காயப்படுத்தக்கூடாது.

 

வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் பிறரின் உணர்வுகளை மதித்து வாழும் நற்பண்புள்ள நல்லடியார்களாக அல்லாஹுத்தஆலா நம்மை வாழச் செய்வானாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

No comments:

Post a Comment

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...