Search This Blog

Saturday, 7 December 2024

பார்வையற்றோர்

 

பார்வையற்றோர்

 

وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنْكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى

எவன் என்னுடைய நல்லுபதேசங்களைப் புறக்கணிக்கிறானோ அவனுடைய வாழ்க்கை நிச்சயமாக நெருக்கடியானதாகவே இருக்கும். மறுமைநாளிலோ நாம் அவனைக் குருடனாகவே எழுப்புவோம்.  திருக்குர்ஆன்:- 20:124

 

உலக சுகாதார நிறுவனம் (World Health Organization), கண் பார்வையின்மை மற்றும் பார்வைக்குறைபாடு பற்றி உலக அளவில் கவனத்தை ஈர்ப்பதற்காகவும் பார்வையிழப்பு பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்துவதற்காகவும் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் இரண்டாவது வியாழக்கிழமையில் வரும் தேதியை உலக கண்யிழப்பு தினமாக அறிவித்து, கண் நலம் பற்றிய செய்திகளை, விழிப்புணர்வை  மேம்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறது.

 

கண்கள் இறைவன் மனிதனுக்கு அருளிய பெருங்கொடை. கண்கள் இருந்தால்தான் நாம் இந்த உலகத்தைப் பார்க்கமுடிவதுடன், பல விஷயங்களையும் கற்றும் அனுபவித்தும் புரிந்து தெளிய முடியும்.

 

இந்த உலகத்தைக் கண்டு ரசிப்பதற்கு நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் அதிசய உறுப்பு கண்ணாகும். மனிதனின் கண் என்பது ஒளியை உணர்வதற்கு உதவும் ஓர் உறுப்பாகும்.

 

படம் பிடிக்கும் கேமராவைப் போலத்தான் நம் கண்களும். நாம் பார்க்கும் பிம்பங்கள் ஒளியாக நம் கண்களின் கருவிழி (Cornea) லென்ஸ் வழியாகச் சென்று, கண் விழித்திரையின் (Retina) மையப் பகுதியில் விழுந்து, அங்குள்ள பார்வை நரம்பு (Optic nerve) வழியாக மூளையை அடைந்து, அது நமக்குக் காட்சியாகத் தெரிகிறது.

 

மறுமைநாளில் குருடர்களாகவும் ஊமைகளாகவும் செவிடர்களாகவும் தம் முகங்களால் (நடந்த நிலையில்) அவர்களை நாம் ஒன்று திரட்டுவோம். அவர்களின் புகலிடம் நரகமே. திருக்குர்ஆன்:- 17:97

 

மறுமைநாளில் சிலரை கண்பார்வையற்றவர்களாக்கி தண்டிக்கப்படுவார்கள் என்கிறது மேற்காணும் திருவசனங்கள்.

 

சொர்க்கத்தைப் பெறுவார்கள்

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( يَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ مَنْ أَذْهَبْتُ حَبِيبَتَيْهِ فَصَبَرَ وَاحْتَسَبَ لَمْ أَرْضَ لَهُ ثَوَابًا دُونَ الْجَنَّةِ ) வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: நான் என் அடியானின் பிரியத்திற்குரிய இரு பொருள்களை (அதாவது அவனுடைய கண்களைப்) பறித்துக்கொண்டு (அவனைச் சோதித்து)விடும்போது அவன் பொறுமைகாத்து, நன்மையை எதிர்பார்ப்பானேயானால், அவனுக்குச் சொர்க்கத்தைத் தவிர வேறெதையும் வெகுமதியாக அளிப்பதில் நான் திருப்தி அடைவதில்லை. அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-5653, திர்மிதீ-2325

 

கண்பார்வை இழந்தவர் உள்ளிட்ட மாற்றுத் திறனாளிகள் இம்மையில் படும் அவதிகளுக்குப் பிரதிபலனாக மறுமையில் இறைவன் நல்ல வாழ்க்கையை வழங்குவான். உலகில் அனுபவிக்கும் சோதனைகள் மரணத்தோடு முடிந்து விடும். ஆனால், மறுமையில் அவருக்குக் கிடைக்கும் சொர்க்கம் என்றும் அழியாதது. மாற்றுத் திறனாளிகளைப் பொறுத்தவரையில், தமக்கு ஏற்பட்ட குறையைப் பொறுமையுடன் சகித்துக்கொண்டு அவர்கள் வாழ்வதால், அவர்களின் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. சொர்க்கம் அவர்களுக்கு பரிசாகக் கிடைக்கிறது.

 

வழிகாட்டி 

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَن قادَ أعمى أربَعينَ أو خَمسينَ ذِراعًا كانَت لهُ كَعِتقِ رَقَبَةٍ ) கண் பார்வையற்ற ஒருவரை நாற்பது அல்லது ஐம்பது முழம் கைபிடித்து அழைத்துச் செல்பவருக்கு ஒரு அடிமையை உரிமை விட்டது போன்ற நன்மை கிடைக்கும். நூல்:- பைஹகீ, தப்ரானீ

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ قَادَ أَعْمَى أَرْبَعِينَ خُطْوَةً وَجَبَتْ لَهُ الْجَنَّةُ ) கண் பார்வையற்ற ஒருவரை நாற்பது முழம் கைபிடித்து அழைத்துச் செல்பவருக்கு சொர்க்கம் உறுதியாகிவிட்டது. அறிவிப்பாளர்:-  அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் நூல்:- அல்மதாலிபுல் ஆலியா ( الْمَطَالِبُ الْعَالِيَةُ ) இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானீ

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَلْعُونٌ مَنْ كَمَّهَ أَعْمَى عَنْ طَرِيْقٍ ) கண்பார்வையற்றவரைத் தவறான வழியில் செலுத்தியவன் சபிக்கப்பட்டவன் ஆவான். அறிவிப்பாளர்:-  அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்னது அஹ்மத்-1779

 

கண்பார்வையற்ற ஒருவருக்கு வழிகாட்டாவிட்டாலும் தொல்லை கொடுக்காமலாவது இருக்கலாம் அல்லவா? அதை விட்டுவிட்டு, தவறான வழியை அவரிடம் சொல்வதோ, அவர் கையைப் பிடித்து வேறு திசையில் அவரை வழி நடத்துவதோ எவ்வளவு பெரும் கொடுமை! நெஞ்சில் ஈரமில்லாதவனே இத்தகைய பாதகத்தைச் செய்வான். இவனுக்குச் சாபமின்றி இறையருளா கிடைக்கும்?

 

உயர் பதவி

 

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இரு தொழுகை அறிவிப்பாளர்கள் இருந்தார்கள். (ஒருவர்) பிலால் (ரலி) அவர்கள். (மற்றொருவர்) கண்பார்வையற்ற அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் (ரலி) அவர்கள். அண்ணலார், ( إِنَّ بِلاَلاً يُؤَذِّنُ بِلَيْلٍ فَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يُؤَذِّنَ ابْنُ أُمِّ مَكْتُومٍ ) "பிலால் (பின்) இரவில் தொழுகை அறிவிப்புச் செய்வார். எனவே, உம்மி மக்தூம் (ஃபஜ்ரு தொழுகைக்காக) அறிவிப்புச் செய்யும் வரை உண்ணுங்கள்; பருகுங்கள்" என்று கூறினார்கள். நூல்:- முஸ்லிம்-1993

 

நோன்பு நோற்பவர்கள் இந்த முதலாவது அறிவிப்பைக் கேட்டு, ஃபஜ்ரு நேரம் வந்துவிட்டது என எண்ணி, சஹர் செய்வதை நிறுத்திவிட வேண்டாம்; ஃபஜ்ரு தொழுகையின் அறிவிப்பான இரண்டாவது பாங்கைக் கேட்கும்வரை நீங்கள் சஹர் செய்யலாம் என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் உணர்த்தினார்கள். நூல்:- ஃபத்ஹுல் பாரீ, அல்மின்ஹாஜ்

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் மதீனாவில் பிலால் (ரலி) அவர்களும் அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் (ரலி) அவர்களும் தொழுகைக்கு பாங்கொலிப்பவர்களாக (முஅத்தின்களாக) இருந்தனர். நூல்:- அல்மின்ஹாஜ்

 

ஜனாதிபதி பராமரித்தார்

 

ஜனாதிபதி அபூபக்ர் (ரலி) அவர்கள் தினமும் காலையில் மதீனாவின் புறநகரில் உள்ள ஒரு கூடாரத்திற்குள் நுழைவார்கள். அங்கு விதவையான கண்பார்வையற்ற ஒரு மூதாட்டி இருப்பாள். அங்கு சென்ற அபூபக்ர் (ரலி) அவர்கள் அவளுடைய வீட்டைத் துடைப்பார்கள். அவளுக்கு உணவு சமைத்து வைப்பார்கள். அவளுடைய ஆடுகளில் இருந்து பால் கறந்து வைப்பார்கள். அன்னார் இந்த வேலைகளை முடித்ததும் மதீனாவுக்குத் திரும்பிவிடுவார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் தினமும் காலைப்பொழுதில் எங்கே செல்கிறார்கள்? என்பதை அறிந்துக்கொள்ள ஒருநாள் உமர் (ரலி) அவர்கள் அன்னாரைப் பின்தொடர்ந்து சென்றார்கள்.

 

அபூபக்ர் (ரலி) அவர்கள் வழமை போல் அந்த மூதாட்டியின் அனைத்து வேலைகளையும் செய்து முடித்துவிட்டு வெளியே சென்றார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் அந்த குடிசைக்குள் நுழைந்து அந்த மூதாட்டியிடம், ( مَنْ أَنْتَ؟ ) "நீங்கள் யார்?" என்று வினவினார்கள்.

 

அந்த மூதாட்டி, ( أَنَا امْرَأَةٌ عَمْيَاءُ كَسِيرَةٌ ، مَاتَ زَوْجِي مُنْذُ زَمَنٍ ، وَمَالَنَا مِنْ عَائِلٍ بَعْدَ اللَّهِ ، إِلَّا هَذَا الرَّجُلَ الَّذِي يَدْخُلُ عَلَيْنَا ) “நான் ஒரு பார்வையற்ற, உடைந்துப்போன (விதவைப்) பெண். என் கணவர் நீண்ட காலத்திற்கு முன்பு இறந்துவிட்டார். மேலும், அல்லாஹ்விற்கு பிறகு நம்மிடம் வந்து செல்லும் இந்த மனிதனைத் தவிர எங்களுக்கு உணவளிப்பவர் யாரும் இல்லை” என்று கூறினாள்.

 

உமர் (ரலி) அவர்கள் ( أَتَعْرِفِينَهُ؟ ) “அவரைப்பற்றி அறிவீர்களா?” என்று கேட்டார்கள். அந்த மூதாட்டி, ( لَا وَاللَّهِ مَا أَعْرِفُهُ ) “அல்லாஹ்வின் மீதாணையாக! (அவரைப் பற்றி) எனக்குத் தெரியாது” என்று கூறினாள்.

 

உமர் (ரலி) அவர்கள், ( مَاذَا يَفْعَلُ؟ ) “அவர் (இங்கு வந்து) என்ன செய்கிறார்?” என்று கேட்டார்கள். அந்த மூதாட்டி, ( يَكْنِسُ الْبَيْتَ ، وَيَحْلِبُ شِيَاهُنَا ، وَيَصْنَعُ طَعَامَنَا ) “அவர் வீட்டை துடைப்பார். எங்கள் ஆடுகளில் இருந்து பால் கறப்பார். நமக்கு உணவு சமைத்து வைப்பார்” என்று கூறினாள். இதைச் செவியுற்ற உமர் (ரலி) அவர்கள் அழுதுகொண்டே அமர்ந்தார்கள். நூல்:- தாரீக் திமிஷ்கு இமாம் இப்னு அசாகிர்

 

முக்கியத்துவம்

 

(நமது நபி) கடுகடுத்தார். புறக்கணித்தார். (எதற்காக?) தன்னிடம் ஒரு பார்வையற்றவர் வந்ததற்காக. (நபியே! உங்களிடம் வந்த) அவர் பரிசுத்தவானாக இருக்கலாம் என்பதை நீங்கள் அறிவீர்களா? அல்லது (உங்களுடைய) நல்லுபதேசம் அவருக்கு பயனளிக்கலாம். (என்பதை நீங்கள் அறிவீர்களா? அவ்வாறிருக்க அவரை நீங்கள் ஏன் கடுகடுத்துப் புறக்கணத்தீர்கள்?)     திருக்குர்ஆன்:- 80:1,2,3,4

 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருமுறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் (கண் பார்வையற்ற) அப்துல்லாஹ் பின் உம்மு மக்தூம் (ரலி) அவர்கள் வந்து (நாயகமே! எனக்கு மார்க்கம் பற்றிய) நேர்வழியை அறிவியுங்கள் என்று கூறினார். அப்போது அண்ணலாருடன் இணைவைப்போரில் கண்ணியமிக்கவராக இருந்த ஒருவர் (உபைய்யி பின் கலப்) வீற்றிருந்தார். அண்ணலார் இப்னு உம்மு மக்தூம் (ரலி) அவர்களைப் புறக்கணித்துவிட்டு இவரை நோக்கி (இஸ்லாமை எடுத்துரைத்து)க் கொண்டிருந்தார்கள்.

 

அப்போது அந்தத் தோழர், “நாயகமே! என்று அடிக்கடி கேட்டு வந்தார். அண்ணலார், இல்லை (இல்லை) என்று மறுமொழி பகர்ந்து வந்தார்கள். (அப்போது தான் அல்லாஹ் மேற்காணும் வசனங்கள் மற்றும் சில வசனங்கள் அடங்கிய) அபச (80வது) அத்தியாயம் முழுவதையும் அருளினான். நூல்:- திர்மிதீ-3331, முஅத்தா மாலிக், முஸ்னது அபூயஅலா, முஸ்தத்ரக் ஹாகிம்

 

சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். இந்நிகழ்விற்கு பின்பு கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள், இப்னு உம்மு மக்தூம் ரலி அவர்களின் வருகையைக் கண்டால், அவருக்காக தமது துண்டை விரிப்பார்கள். பிறகு அவரை நோக்கி! ( مُرْحَبًا بِمَنْ عَاتَبَنِي فِيهِ رَبِّي ) "என்னுடைய இறைவன், யார் விஷயத்தில் என்னைக் கண்டித்தானோ அப்படிப்பட்டவரே வருக!" என்று கூறி அழைப்பார்கள். மேலும், ( هَلْ مِنْ حَاجَةٍ؟ ) "ஏதேனும் தேவை நிறைவேற்றப்பட வேண்டுமா?" என்று கேட்பார்கள். நபியவர்கள் போருக்காக மதீனாவைவிட்டு வெளியேறியபோது இரண்டு முறை அவரை தமது பிரதிநிதியாக நியமித்துவிட்டு சென்றார்கள். நூல்:- தஃப்சீர் குர்துபீ

 

இஸ்லாமுக்கு பெரிய விரோதியாக இருந்த உபைய்யி பின் கலபிடம் மனம் மாற்றம் ஏற்பட்டால் அது சத்திய மார்க்கத்திற்கு பெரிய முன்னேற்றமாய் அமையும். மக்கா நகர் முழுவதும் அதன் தாக்கம் எதிரொலிக்கும். அதன் பிறகு முஸ்லிமானவர்கள் கொடுமைக்குள்ளாக்கப்படுவது குறையும். பெரிய எதிர்ப்புகளெல்லாம் அடங்கிப்போகும். அதனால் தான் அவரை இஸ்லாமின்பால் ஈர்ப்பதற்கான முயற்சியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஈடுபட்டிருந்தார்கள்.

 

அச்சமயத்தில் தான் பார்வையற்ற இப்னு உம்மு மக்தூம் (ரலி) அவர்கள் வந்தார். அவர் இடையில் குறுக்கீடுவதை அண்ணலார் விரும்பவில்லை என்பதை அவர்களின் முகம் காட்டியது. பார்வை இல்லாததால் இப்னு உம்மு மக்தூமுக்கு அது தெரியவில்லை. ஆனால் தம்முடைய வார்த்தைக்கு உரிய கவனம் கிடைக்கவில்லை என்பதை உணர்ந்தார். நமது பார்வைக்கு இது சாதாரணமான ஒன்று தான். ஆனால் அல்லாஹ் அதை அப்படி பார்க்கவில்லை.

 

உலகத்துக்கு நேர்வழிகாட்ட அனுப்பப்பட்ட தன்னுடைய தூதரினால் பார்வையற்ற தன்னுடைய மற்றொரு அடியார் புறக்கணிக்கப்படுவதை அல்லாஹ் விரும்பவில்லை. அங்கே யாருக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டுமென்பதில் ஒரு திருத்தம் தேவைப்பட்டது. அதுவும் அண்ணலார் திருவாய் மூலமாகவே! அப்போதே அல்லாஹ் வஹி எனும் இறைச்செய்தி அறிவித்தான்.

 

இங்கு திருக்குர்ஆன் செல்லமாக கண்டித்தது இறைத்தூதரின் அணுகுமுறையைத் தானே தவிர, இறைத்தூதரை அல்ல. ஆக, செயல் தான் கண்டிக்கப்பட வேண்டுமே தவிர, நபர் அல்ல. இந்த பாணியில் பல நன்மைகள் இருக்கின்றன.


பிரார்த்தனை

 

பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் இவ்வாறு பிரார்த்தித்துள்ளார்கள். ( اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الصَّمَمِ وَالْبُكْمِ وَالْجُنُونِ وَالْجُذَامِ وَالْبَرَصِ وَسُوءِ الْأَسْقَامِ ) இறைவா! காது கேளாமை, கண்கள் குருடு, பைத்தியம் பிடித்தல், கருங்குஷ்டம், வெண்குஷ்டம், மோசமான நோய்கள் ஆகியவற்றிலிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- இப்னுஹிப்பான்

 

பார்வைத்திறன் குறைபாடு

 

உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரப்படி உலகில் 4 கோடி பேர் கண்பார்வை இழந்தவர்கள் என்கிறது. உலகில் கண்ணாடி அணிவோரின் எண்ணிக்கை 400 கோடியைத் தொட்டுவிட்டதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இந்தியாவில் முதியவர்களைக் கடந்து கண்பார்வை குழந்தைகளையும், இளைஞர்களையும் அதிகம் பாதித்திருக்கிறது. 5 கோடி மக்களுக்கும் மேல் கண்பார்வைக் குறைபாட்டைக் கொண்டிருக்கிறார்கள் என்று ஒரு மருத்துவ ஆய்வு தெரிவிக்கிறது.

 

உலக அளவில் 285 மில்லியன் பேருக்கு பார்வைக்குறைபாடு உள்ளது. 246 மில்லியன் பேர் மிகக் குறைவான பார்வையோடும் 39 மில்லியன் பேர் பார்வையில்லாமலும் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள். பார்வைக்குறை உள்ளவர்களில் சுமார் 90% பேர் குறைந்த வருமானம் உடையவர்களாக இருக்கின்றனர். பார்வையற்றவர்களில் 82 % பேர் ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்களாக இருக்கின்றனர் என்கிறது ஓர் புள்ளிவிவரம்.

 

சராசரியாக வளர்ந்து வரும் நாடுகளின் மக்களுக்கு 90% பார்வைக்குறைபாடு பிரச்சினை உள்ளது. மேலும், 65% பேர் 50 வயதிற்கும் அதிகமானவர்கள். இருப்பினும் 19 மில்லியன் குழந்தைகளுக்கு பார்வைத்திறன் குறைபாடு இருக்கிறது.

 

நம் விழிகளைப் பற்றிய விழி விரிய வைக்கும் உண்மைகள்:

 

1. நமது கண்கள் பத்தாயிரம் வேலை செய்யும் பாகங்களால் ஆனது.

2. ஒரு சராசரி மனிதன் ஒரு நிமிடத்திற்கு 12 முறை கண்களை இமைக்கிறான், ஒரு நாளைக்கு சராசரியாக 10,000 முறை கண்களை இமைக்கிறான்.

3. நமது கண்கள் சராசரியாக ஒரு மணி நேரத்திற்கு 36,000 பைட் தகவல்களை கையாள்கிறது.

4. நமது கண்கள் ஆறில் ஒரு பாகம் மட்டுமே வெளித்தோற்றத்திற்கு தெரிகின்றது.

5. நமது கண் இமைமுடிகளின் சராசரி ஆயுள் காலம் 5 மாதங்கள் மட்டுமே.

6. நமது கண்கள் தோராயமாக 28 கிராம் எடை உள்ளது.

7. நமது விழிகள் ஒரு நொடிப்பொழுதில் சுமார் 50 பொருள்களில் தனது பார்வையை பதிக்கிறது.

8. பார்வை என்னும் செயலில் நமது மூளையின் பாதிபகுதி பங்கெடுத்துக்கொள்கிறது.

9. நமது மிகச்சரியான நிலையில் 14 மைல்கள் தூரத்தில் உள்ள ஒரு எரியும் மெழுகுவர்த்தியை பார்க்க முடியும்.

10. நமது கண்களின் இயக்கத்திற்கு காரணமான தசைகள் மனித உடலிலேயே மிக அதிகமான சக்தி வாய்ந்த தசை ஆகும். அவை எந்த அளவுக்கு ஆற்றல் வாய்ந்தவையாக இருக்க வேண்டுமோ அதைக்காட்டிலும் 100 மடங்கு ஆற்றல் வாய்ந்ததாக இருக்கிறது.

 

வயதாகும்போது

 

நாற்பது வயதைத் தாண்டும்போது பார்வையில் ஏற்படும் குறைபாட்டினால் கருப்பாக இருக்கிற எழுத்துகள் பளிச்சென்று தெரியாமல் வெள்ளைப் பேப்பரோடு சேர்ந்து வெள்ளையாகத் தெரியுமாம். இதைத்தான் வெள்ளெழுத்து என்கிறோம். தலைமுடி நரைப்பதைப்போல, வயதான காலத்தில் தோலில் சுருக்கம் விழுவதைப்போல, வெள்ளெழுத்துப் பிரச்னையும் வயதாவதால் வருவது தான்.

 

புத்தகம் படிப்பதற்கு கஷ்டம், புத்தகத்திலுள்ள சின்ன எழுத்துக்களைப் படிப்பதற்குக் கஷ்டம், சற்று குறைவான வெளிச்சத்தில் படிப்பதற்கு கஷ்டம், கம்ப்யூட்டரில் எழுத்துக்களைப் பார்ப்பதற்கு கஷ்டம், செல்போனில் நம்பரைப் பார்ப்பதற்கு கஷ்டம், கொஞ்ச நேரம் படித்தாலே நிறைய நேரம் படித்தது போன்ற ஒரு நினைப்பு. கண்களில் ஓர் அசதி, களைப்பு, எரிச்சல். இவைகள் எல்லாமே நாற்பது வயதை நெருங்கியவர்களுக்கும், நாற்பது வயதைத் தாண்டியவர்களுக்கும் ஏற்படக்கூடிய வெள்ளெழுத்துப் பிரச்னையாகும்.

 

நோயால் பார்வையிழப்பு

 

சர்க்கரை நோய் உள்ளவர்கள் தங்கள் கண்களை அவ்வப்போது கண் மருத்துவரிடம் காட்டி பரிசோதனை செய்துகொள்ளுவதை வழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும். இரத்தத்தில் இருக்கும் அதிக அளவு சர்க்கரை கண்களைப் பாதிக்கும். 20 வயதிலிருந்து 74 வயது வரை உள்ளவர்களுக்குப் பார்வை இழப்பிற்கு சர்க்கரை நோய் முதல் மற்றும் முக்கியக் காரணமாக உள்ளது. சிறிய அளவில் ஆரம்பிக்கும் கண் குறைபாடுகள் சர்க்கரை நோயினால் அதிகரிக்கக்கூடும். அதனால் பார்வையில் சற்று மாறுபாடு ஏற்பட்டாலும் கண் மருத்துவரிடம் காண்பிப்பது நல்லது.

 

உலக அளவில் கண்பார்வை இழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் நான்கு கோடி. அவர்களில் சுமார் நான்கு சதவீதம் பேர் கருவிழிப்படலம் சேதமடைந்த காரணத்தால் கண்பார்வை பறிபோனர்வகள் என்று உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

 

மாணவர்கள் குறித்து

 

மாணவர்கள், 80 சதவீதக் கல்வியைத் தங்கள் கண்கள் மூலம்தான் கற்கிறார்கள். அவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண் வாங்க வேண்டும் என்றால் நல்ல கண் பார்வை முக்கியம். ஒவ்வொரு மனிதருக்கும் அவர்களது விரல்களின் நீளம் மாறுபடுவதைப் போல, அவர்களது கண் அளவும் மாறுபடும். அதனால் கண்களில் கிட்டப் பார்வை (Myopia), தூரப் பார்வை (Hypermetropia), சிதறல் பார்வை (Astigmatism) போன்ற பார்வைக் குறைபாடுகள் ஏற்படலாம். பெரும்பாலும் தூரப் பார்வையால்தான் பலர் பாதிக்கப்படுவார்கள்.

 

குழந்தைகளில் 12 சதவீதத்தினர் கிட்டப் பார்வை, தூரப் பார்வை, சிதறல் பார்வை போன்ற குறைபாடுகளால் பாதிக்கப்படுகிறார்கள். ஒரு குழந்தையின் எதிர்காலம் முழுவதும் அந்தக் குழந்தையின் நல்ல பார்வையைச் சார்ந்தே அமைகிறது. ஒரு குழந்தைக்கு நல்ல பார்வை கிடைக்க அவர்களின் பெற்றோர்களும் ஆசிரியர்களும் முன் வர வேண்டும்.

 

பெற்றோர்கள் செய்ய வேண்டியவை: நமது குழந்தை தொலைக்காட்சிப் பெட்டி அருகில் அமர்ந்து பார்க்கிறது என்றால் அதற்குக் கிட்டப் பார்வைக் குறைபாடு இருக்க வாய்ப்புள்ளது.

 

குழந்தைகள், கண்களைச் சிமிட்டிக்கொண்டிருந்தாலோ, கண்களைச் சுருக்கிச் சுருக்கிப் பார்த்தாலோ, அடிக்கடி கண் கட்டி வந்தாலோ அந்தக் குழந்தைக்குக் கண் பார்வைக் குறைபாடு இருக்க வாய்ப்புள்ளது. அதேபோல, அடிக்கடி குழந்தைகளுக்குத் தலைவலி ஏற்பட்டாலும், பார்வைக் குறைபாடு இருக்கிறதா என்று உடனடியாகப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

 

உங்கள் குழந்தைகள் வெயிலில் கண்களைச் சுருக்கிச் சுருக்கிப் பார்த்தால், அவர்களின் விழித்திரையில் பிரச்சினை இருக்க வாய்ப்புள்ளது. மேலும், பார்வைக் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு விழித்திரை விலகல் மற்றும் கிளாக்கோமா வரவும் சாத்தியமுள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை கண் விழித்திரை பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் இதன் பாதிப்பைத் தடுக்கலாம்.

 

எல்லாவற்றுக்கும் மேலாக, தற்போது குழந்தைகள் அதிக நேரம் செல்போனில் விளையாடிக் கொண்டிருப்பதால், பார்வைக்குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர். இதைத் தடுக்க குழந்தைகள், செல்போன் பயன்படுத்துவதைப் பெற்றோர்கள் குறைக்கவோ தடுக்கவோ உதவ வேண்டும்.

 

ஆசிரியர்கள் செய்ய வேண்டியவை: பள்ளியில் ஒவ்வொரு வகுப்பிலும், பக்கத்தில் அடிக்கடி பேசிக் கொண்டிருப்பவர்கள், நன்றாகப் படிக்காதவர்கள், நோட்டில் அடித்து அடித்து எழுதுபவர்களில் பலரும் பார்வைக்குறைபாடு உள்ளவர்களாக இருக்கலாம் என்கின்றனர் கண் மருத்துவர்கள்.

 

ஒரு மாணவன், ஆசிரியர் பாடம் நடத்தும்போது கரும்பலகையில் உள்ள எழுத்துகள் நன்றாகத் தெரியவில்லையென்றால் பக்கத்துப் பையனைப் பார்த்து ‘காப்பி’ அடிப்பான். அப்போது நோட்டில் அடித்து அடித்து எழுதுவான். இப்படி இருந்தால் உடனடியாகக் கண் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

 

இப்படியான மாணவர்களைக் காண நேர்ந்தால், உடனே அவர்களைத் திட்டவோ அடிக்கவோ செய்யாமல், ஒவ்வொரு மாணவனையும் கடைசி பெஞ்சில் அமர வைத்து, அதாவது இருபது அடி தூரத்தில் அமரவைத்து ஒரு கண்ணைக் கையால் மூடிக்கொண்டு மற்றொரு கண்ணில் கரும்பலகையில் எழுதுவது தெரிகிறதா என்று ஆசிரியர் பரிசோதிக்க வேண்டும். பெரும்பாலும் வகுப்பறை நேரத்தில்தான் மாணவனின் பார்வைக் குறைபாட்டைக் கண்டுபிடிக்க முடியும்.

 

மாணவனின் பார்வைக் குறைபாட்டைக் கண்டுபிடிப்பது மட்டுமின்றி, அந்தக் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு அதுகுறித்து விளக்கி, சிகிச்சை எடுத்துக்கொள்ள ஆசிரியர்கள் வலியுறுத்த வேண்டும். தொடர்ந்து கண்ணாடி அணிந்துகொள்ள குழந்தைகளுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.

 

ஒவ்வொரு குழந்தைக்கும் நல்ல பார்வையைக் கொடுப்பது நம் சமூகக் கடமை என்பதை ஒவ்வொரு பெற்றோரும் ஆசிரியர்களும் உணர வேண்டும். நல்ல பார்வையே தொலைநோக்கில் பார்வையைக் கொடுக்கும்!

 

குழந்தைகளுக்கு வைட்டமின் சத்துள்ள உணவுப் பொருட்களான கேரட், கீரை வகைகள், காய்கறிகள், பப்பாளி, மீன், பால், முட்டை போன்றவற்றைக் கொடுக்க வேண்டும்.

 

1. குழந்தைகள் படிக்கும் இடத்தில் வெளிச்சம் சரியாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

2. குழந்தைகளுக்குக் கண்ணில் ஏதாவது பிரச்சினை என்றால் உடனடியாகக் கண் மருத்துவரை அணுக வேண்டும். அதை விடுத்து நாமாகவே வைத்தியம் செய்யக்கூடாது.

3. வீடியோ கேம், செல்போன் விளையாட்டுகள் போன்றவற்றை விளையாடுவதிலிருந்து குழந்தைகளைத் தடுத்து, டென்னிஸ், பாட்மிண்டன் போன்ற இதர மைதான விளையாட்டுகளில் அவர்களைக் கவனம்செலுத்த வைக்க வேண்டும்.

 

ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள்

 

தூங்கும் நேரத்தை தவிர்த்து நமது உடலில் அதிக நேரம் உழைக்கும் உறுப்பு என்றால் அது கண்கள் தான். எப்போதும் இயக்கத்திலேயே வைத்திருப்பதால் கண்களின் ஆரோக்கியத்தை பராமரிப்பது முக்கியமானதாகும். கண்களின் ஆரோக்கியத்திற்கு வைட்டமின்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவற்றைப் பெறுவதற்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை தவற விடக்கூடாது.

 

"வைட்டமின் ஏ" கண் பார்வைக்கான வைட்டமின் என்றும் அழைக்கப்படுகிறது. விழித்திரையின் செயல்பாடுகளுக்கு வைட்டமின் ஏ முக்கியமானது. கண் ஆரோக்கியத்திற்கு வைட்டமின் ஏ நிறைந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது.

 

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் "வைட்டமின் சி" உதவுகிறது. வைட்டமின் சி நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் கண்புரை பிரச்சினை ஏற்படாது. ஆண்கள் தினமும் 90 மில்லி கிராமும் பெண்கள் தினமும் 75 மில்லி கிராமும் வைட்டமின் சி உட்கொள்வது அவசியம். இவை இரண்டும் கண்களுக்கு புத்துணர்ச்சி வழங்கக் கூடியவை.

 

நெல்லிக்காய், ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்கள் வைட்டமின் சி-ன் இயற்கையான ஆதாரமாகும். இவை இரண்டும் கண்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கின்றன.

 

கூர்மையான கண் பார்வைக்கு துத்தநாகம் கொண்ட உணவுகளை சாப்பிட வேண்டும். மாட்டிறைச்சியில் அதிகப்படியான துத்தநாகம் உள்ளது.

 

கண் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் ஒமேகா - 3 கொழுப்பு அமிலங்கள் போன்ற அத்தியாவசிய கொழுப்புகள் தேவை. கண்கள் வறட்சி அடைவதை தடுக்க ஒமேகா - 3 கொழுப்பு அமிலங்கள் உதவுகின்றன. மீன், பாலாடை, சியா விதைகள், ஆளிவிதைகள்,  வால்நட்ஸ் ஆகியவை ஒமேகா - 3 கொழுப்பு அமிலங்களின் வளமான ஆதாரமாகும்.

 

சுருங்கக்கூறின், நமது உடலில் “வைட்டமின் ஏ குறைபாடு” நிகழும்போது, பார்வைக்குறைபாடு ஏற்படும். எனவே, “வைட்டமின் ஏ சத்து” நிறைந்த மீன், மாட்டின் கல்லீரல், பால், கேரட், சக்கரைவள்ளி கிழங்கு, பப்பாளி, பொன்னாங்கண்ணி கீரை, கருப்புக் கொண்டைக்கடலை, சிவப்பு கொடைமிளகாய், பூசணிக்காய், மாம்பழம் போன்ற உணவுகளை அதிகமாக உண்ணவேண்டும்.

 

வாழும் காலம்வரை அல்லாஹுத்தஆலா, நம்மை பார்வைத்திறன் உள்ளவர்களாக வாழச் செய்வானாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்-9840535951

 

No comments:

Post a Comment

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...