Search This Blog

Wednesday, 8 May 2024

தாகம் தீர்ப்போம்!

 

தாகம் தீர்ப்போம்!

 

وَاللَّهُ خَلَقَ كُلَّ دَابَّةٍ مِنْ مَاءٍ

 

அல்லாஹ் ஒவ்வொரு உயிரினத்தையும் நீரால் படைத்தான். திருக்குர்ஆன்:-  24:45

 

நீர் வாழ்க்கையின் ஆதாரம் மற்றும் மனிதர்கள் விவசாயம், தொழில் மற்றும் சுகாதாரம் போன்ற வாழ்க்கையின் அனைத்து பகுதிகளிலும் நோய்களிலிருந்து பாதுகாப்பதற்காகவும் அதைப் பயன்படுத்துகின்றனர்.

 

காலநிலை மாற்றத்தால் ஆண்டுதோறும் கோடையின் உக்கிரம் அதிகரித்துக் கொண்டேதான் போகிறது. இந்த ஆண்டும் வெயில் சுட்டெரிக்கத் தொடங்கிவிட்டது.

 

உலகில் முக்கால் பாகம் நீர் இருந்தும், அருந்த நீர் இல்லாமல் மூக்கால் அழும் நிலையில் இருக்கிறோம். விவசாய நிலங்களையும், ஏரிகளையும் கான்கிரீட் காடுகளாக மாற்றிவிட்டு, தாகம் தீர்க்கும் தண்ணீரை விலை கொடுத்து வாங்கிக்கொண்டிருக்கிறோம். இப்படி, தண்ணீர் இல்லாமல் தமிழ்நாட்டின் தலைநகரம் மட்டுமல்ல, கோவை, மதுரை மாதிரியான மெட்ரோ நகரங்களும் தவியாய்த் தவித்துக் கொண்டிருக்கின்றன.

 

கொந்தளிப்பான தட்பவெப்ப நிலையிலும், அதிக வெப்ப நிலையிலும், மக்களின் தாகம் அதிகரிக்கிறது. குறிப்பாக பகலில் நடக்கும்போது அல்லது வேலை செய்யும்போது, தாகம் அதிகரிக்கிறது.  

 

ஒரு மனிதன் உணவு இல்லாமல்கூட ஓரிரு தினங்கள் வாழலாம். தண்ணீர் இல்லாமல், ஒரு நாள் கூட வாழ முடியாது.  சர்வ வல்லமையுள்ள அல்லாஹ்விடம் நெருங்கி செல்வதற்கு தண்ணீர் தர்மம் மிகவும் பலனளிக்கும் தொண்டுகளில் ஒன்றாகும்.

 

தண்ணீர் தர்மத்தின் முக்கியத்துவம் என்னவென்றால், வெப்பம் அதிகமாக இருக்கும்போது தண்ணீரின் மதிப்பு அதன் தேவையும் அதிகரிக்கிறது. எனவே, மக்களுக்குத் தேவைப்படும்போது வழங்குகின்ற தண்ணீர் தர்மத்திற்குரிய நற்கூலியும் இரட்டிப்பாகும்.

 

தண்ணீர் இல்லாத நகரம்

 

தென்னாப்பிரிக்காவின் தலைநகரான கேப் டவுன், 14-4-2023 க்குப் பிறகு தண்ணீர் வழங்க முடியாது என்று அரசாங்கம் கூறியதை அடுத்து, உலகின் முதல் தண்ணீர் இல்லாத நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அங்கு ஒரு நாளைக்கு 2 நிமிடத்துக்கு மேல் குளிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. 10 லட்சம் பேரின் குடிநீர் இணைப்பை துண்டிக்க அரசு தயாராகி வருகிறது.

 

நகர் முழுக்க 200-க்கும் அதிகமான "தண்ணீர் பெறும் மையங்களை" அமைத்திருக்கிறது அரசு. வெளியிலிருந்து கொண்டுவரும் தண்ணீரை அதில் நிரப்புவார்கள். வரிசையில் நின்று பெற்றுக் கொள்ளலாம். ஒரு நாளைக்கு ஒருவருக்கு 25 லிட்டர் மட்டுமே வழங்கப்படுகிறது. மேலும், தண்ணீர் குறித்து பிச்சைக்காரர்கள் மற்றும் கொள்ளையர்களை சமாளிக்க காவல்துறை மற்றும்  இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது.

 

இந்த சோகமான நிலை இறுதியில் யாருக்கும் ஏற்படலாம். (நம் இந்தியாவில் உள்ள லத்தூருக்கு (மகாராஷ்டிரா) ரயில் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது என்ற உண்மை எத்தனை பேருக்கு தெரியும்!) எனவே தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தவேண்டும். ஒரு கிளாஸ் தண்ணீரைக் கூட வீணாக்கக்கூடாது.

 

பூமியின் மொத்த நீரில் 2.7% மட்டுமே பருகக்கூடியது.

 

அருகில் உள்ள அனைத்து அணைகளிலும் நீர்மட்டம் குறைந்துள்ளதால், நிலத்தடி நீர்மட்டம் மிக வேகமாக குறைந்து வருகிறது. வருங்கால சந்ததிக்கு பொறுப்பான குடிமகனாக, தண்ணீர் வீணாவதை தடுத்து தண்ணீரை சேமிக்க வேண்டும். பின்வரும் புள்ளிகளை மனதில் வைத்து இதை எளிதாக செய்யலாம்.

 

1. கார் / பைக்கை தினமும் கழுவுவதை தவிர்க்க வேண்டும்.

2. முற்றம் / படிகள் / தரையை கழுவுவதை தவிர்க்கலாம் அல்லது கழுவும்போது குறைந்த தண்ணீரை பயன்படுத்தலாம்.

3. குழாயை தொடர்ந்து மற்றும் கவனக்குறைவாக திறந்து விடக்கூடாது.

4. வீட்டில் கசியும் குழாயை சரிசெய்யவேண்டும்.

5. தேவைப்படும் போது மட்டுமே செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சலாம் அல்லது 'சொட்டு நீர் பாசனம்' பயன்படுத்தலாம்

6. சாலையில் தண்ணீர் தெளிக்கக்கூடாது.

 

சிறந்த தர்மம்

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( وَأَيُّمَا مُسْلِمٍ سَقَى مُسْلِمًا عَلَى ظَمَإٍ سَقَاهُ اللَّهُ مِنَ الرَّحِيقِ الْمَخْتُومِ ) யாரேனும் ஓர் இஸ்லாமியர் தாகத்தோடிருக்கும் ஓர் இஸ்லாமியருக்கு (நீர்) அருந்தக் கொடுத்தால் (மறுமை நாளில்) அவருக்கு அல்லாஹ் (கஸ்தூரியால்) முத்திரையிடப்பட்ட மதுவை (அர்ரஹீக்குல் மக்தூம்) பருக கொடுப்பான். அறிவிப்பாளர்:- அபூ சயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் நூல் அபூதாவூத்-1432, திர்மிதீ-2373

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ أَطْعَمَ أَخَاهُ حَتَّى يُشْبِعَهُ وَسَقَاهُ مِنَ الْمَاءِ حَتَّى يَرْوِيَهُ بَعَّدَهُ اللَّهُ مِنَ النَّارِ سَبْعَ خَنَادِقَ مَا بَيْنَ كُلِّ خَنْدَقٍ مَسِيرَةُ مِائَةِ عَامٍ ) யார் தம் சகோதரருக்கு வயிறு நிரம்ப உணவளிக்கிறாரோ, மேலும் அவரின் தாகம் தீரும்வரை தண்ணீர் புகட்டுகிறாரோ, அவரை அல்லாஹ் நரகை விட்டு ஏழு அகழிகள் அளவுக்கு தூரப்படுத்துவான். ஒவ்வொரு இரண்டு அகழிகளுக்கு மத்தியிலுள்ள தூரம் ஐநூறு ஆண்டுகள் தொலைதூரம் ஆகும். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் நூல்:- தப்ரானீ, பைஹகீ, ஹாகீம், முக்தஸர் அத்தர்ஙீபு வத்தர்ஹீபு-281

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لَيْسَ صَدَقَةٌ أَعْظَمَ أَجْرًا مِنْ مَاءِ ) தண்ணீரை விட மிகப்பெரிய நற்கூலி வழங்கும் தர்மம் வேறெதுவும் இல்லை. அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- பைஹகீ, முக்தஸர் அத்தர்ஙீபு வத்தர்ஹீபு-286

 

பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( وَمَنْ سَقَى مُسْلِمًا شَرْبَةً مِنْ مَاءٍ حَيْثُ يُوجَدُ الْمَاءُ فَكَأَنَّمَا أَعْتَقَ رَقَبَةً وَمَنْ سَقَى مُسْلِمًا شَرْبَةً مِنْ مَاءٍ حَيْثُ لاَ يُوجَدُ الْمَاءُ فَكَأَنَّمَا أَحْيَاهَا ) தண்ணீர் கிடைக்கும் இடத்தில் யார் ஒரு முஸ்லிமுக்கு ஒரு மிடறு தண்ணீர் கொடுத்தாரோ, அவர் ஓர் அடிமையை விடுதலை செய்தவரைப் போன்றவர் ஆவார். தண்ணீர் இல்லாத இடத்தில் யார் ஒரு முஸ்லிமுக்கு ஒரு மிடறு தண்ணீர் கொடுத்தாரோ அவர் அவரை உயிர்ப்பித்தவரைப் போன்றவர் ஆவார். அறிவிப்பாளர்:- ஆயிஷா (ரலி) அவர்கள் நூல்:- இப்னுமாஜா-2465

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ حَفَرَ مَاءً لَمْ يَشْرَبْ مِنْهُ كَبِدٌ حَرَّى مِنْ جِنٍّ ، وَ لَا إِنْسٍ وَلَا طَائِرٍ ، إِلَّا آجَرَهُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ ،  ) ஒருவர் தோண்டிய கிணற்றிலிருந்து ஜின்னு, மனிதன், பறவைகள் போன்ற ஜீவன்கள் தண்ணீர் பருகுவதன் மூலம் அதைத் தோண்டியவருக்கு அல்லாஹ் மறுமைநாளில் நற்கூலி வழங்குவான். அறிவிப்பாளர்:- ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் நூல்:- இப்னு குஸைமா-1292, தாரீகுல் கபீர் இமாம் புகாரீ, ஸஹீஹ் அத்தர்ஙீபு வத்தர்ஹீப-271

 

கோடைகாலத்தில் வீடுகளில் இருந்து வெளியே வரும் பொதுமக்களின் தண்ணீர் தாகத்தை தீர்க்கும் வகையில்  மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் தண்ணீர் மற்றும் மோர் பந்தல்கள் அமைக்கலாம்.

 

நமது மண்ணில் தண்ணீர்ப் பந்தல் அமைத்துத் தாகம் தீர்ப்பது மிகப்பெரிய அறச்செயலாகத் தொடர்ந்து வந்துள்ளது. அந்தக் காலத்தில் தண்ணீர் பந்தல்களில் தண்ணீர் மட்டுமல்லாது நீர்மோர், பானகம் (போர் வீரர்களுக்கு உடனடி ஆற்றல் கிடைப்பதற்காக வழங்கப்பட்டது), சர்பத் போன்றவையும் வழங்கி வந்தனர்.

 

40, 50 ஆண்டுகளுக்கு முன்பு பொது இடங்களிலும் சில வீடுகளின் முன்புறமும் போவோர், வருவோர் அருந்துவதற்காக மண்பானையில் தண்ணீர் வைத்திருப்பார்கள். இப்போது இது அரிதாகிவிட்டது. சத்திரம், அன்னச் சத்திரம், பொது நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான சாவடி, திண்ணை, சுமைதாங்கிக் கல், மாடு உரசும் கல் உள்ளிட்ட இதுபோன்ற அனைத்து தர்ம காரியங்களும் பொதுப் பயன்பாட்டை மனதில் கொண்டு உருவானவையே.

 

செலவல்ல; சேமிப்பு

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( ثَلاَثَةٌ لاَ يَنْظُرُ اللَّهُ إِلَيْهِمْ يَوْمَ الْقِيَامَةِ، وَلاَ يُزَكِّيهِمْ، وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ رَجُلٌ كَانَ لَهُ فَضْلُ مَاءٍ بِالطَّرِيقِ، فَمَنَعَهُ مِنِ ابْنِ السَّبِيلِ ) மூன்று பேரை மறுமைநாளில் அல்லாஹ்  ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான்; அவர்களுக்கு வதைக்கும் வேதனை தான் கிடைக்கும். (அதில்)  ஒருவன் (மக்களின் பயணப்) பாதையில் தேவைக்கு மிஞ்சிய தண்ணீரைப் பெற்றிருந்தும் வழிப்போக்கர்கள் அதைப் பயன்படுத்த விடாமல் தடுத்துவிட்டவன் ஆவான். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-2358, முஸ்லிம்-173, அபூதாவூத்-3014, திர்மிதீ-1521, நசாயீ-4386, இப்னுமாஜா-2198

 

நமது கடைகள், கம்பெனிகள், வீட்டு முற்றத்தில் தண்ணீர் பானை வைத்து மக்களின் தாகம் தீர்ப்பதைக் கடைப்பிடிக்க வேண்டும். தற்போது தண்ணீரை காசு கொடுத்து வாங்கும் நிலை இருந்தாலும் மக்களின் தாகம் தீர்ப்பதற்காக செலவழிக்கும் சிறு தொகையால் நமக்கு நஷ்டம் ஏற்படப்போவதில்லை.

 

நமக்கு வசதியிருந்தால், மக்களின் போக்குவரத்து பகுதியில் ஓர் பந்தல் அமைத்து குளிர்ந்த நீர், மோர், இன்ன பிற பானங்கள் வழங்கலாம். இதற்கென்று சம்பளத்திற்கு ஓர் ஆளை நியமிக்கலாம். இது போன்ற செலவுகளெல்லாம், செலவல்ல. மாறாக, மறுமைக்குரிய சேமிப்புகள் என்று விளங்கவேண்டும்.

 

நிலையான அறம்

 

அபூஅப்திர் ரஹ்மான் அப்துல்லாஹ் பின் ஹபீப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. (ஜனாதிபதி) உஸ்மான் (ரலி) அவர்கள் (கலகக்காரர்களால்) முற்றுகையிடப்பட்ட போது அவர்களுக்கு மேலிருந்து (வீட்டுக் கூரை மீதிருந்து) பின்வருமாறு பேசினார்கள்:

 

 ( أَنْشُدُكُمْ وَلاَ أَنْشُدُ إِلاَّ أَصْحَابَ النَّبِيِّ صلى الله عليه وسلم، أَلَسْتُمْ تَعْلَمُونَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ مَنْ حَفَرَ رُومَةَ فَلَهُ الْجَنَّةُ ‏"‏‏.‏ فَحَفَرْتُهَا ) அல்லாஹ்வை முன்வைத்து உங்களைக் கேட்கிறேன். நான் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் தோழர்களைத் தவிர வேறுயாரிடமும் கேட்கவில்லை. ‘‘யார் ‘ரூமா’ எனும் கிணற்றை (விலைக்கு வாங்கி) தூர்வாரி (பொது மக்கள் நலனுக்காக வக்ஃப் செய்து)விடுகிறாரோ அவருக்குச் சொர்க்கம் கிடைக்கும்” என்று அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூற, நான் அதை (விலைக்கு வாங்கி) தூர்வாரி (வக்ஃபாக ஆக்கி)யது உங்களுக்குத் தெரியாதா?  நூல்:- புகாரீ-2778

 

ஸஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் கூறியதாவது. என்னுடைய தாய் இறந்துவிட்டார். (எனவே, நான் அருமை நாயகம் - ஸல் அவர்களிடம் சென்றேன்) "நாயகமே! என் தாய் இறந்துவிட்டார். அவர் சார்பாக நான் தர்மம் செய்யலாமா?" என்று கேட்டேன். அதற்கு நபியவர்கள், "ஆம் (தர்மம் செய்யலாம்) என்று பதிலளித்தார்கள். நான், ( فَأَيُّ الصَّدَقَةِ أَفْضَلُ ؟ ) "எந்தத் தர்மம் மிகச் சிறந்தது?" என்று கேட்டேன். அதற்கு நபியவர்கள், ( سَقْيُ الْمَاءِ ) "குடிநீர் வழங்குதல்" என்று கூறினார்கள். எனவே நான் ஒரு கிணற்றை தோண்டி, இதன் (மூலம் கிடைக்கும்) நன்மை உம்மு ஸஅத் அவர்களுக்கு (என்னுடைய தாய்க்கு) என்று கூறினேன். அபூதாவூத்-1431, நசாயீ-3606

 

குடிநீர் வழங்குவதற்காக ஸஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் மதீனாவில் ஒரு கிணறு தோண்டினார்கள். அப்போது மதீனாவில் தண்ணீர் இல்லாத பஞ்சக் காலமாக இருந்தது. அந்த கிணற்றைத் தோண்டி இது ஸஅதின் தாயாருக்காக (வக்ஃப் செய்யப்பட்டது) என்று கூறினார்கள்.

 

செல்வந்தர்கள், மக்களின் பயன்பாட்டிற்கு, கிணறுகள் வெட்டிக் கொடுக்கலாம். போர் போட்டுக் கொடுக்கலாம். தண்ணீர்த்தொட்டி கட்டிக் கொடுக்கலாம். தண்ணீர் கொண்டு செல்வதற்கு பைப்கள் அமைத்துக் கொடுக்கலாம். இவை இருக்கும் காலமெல்லாம், இவற்றை அமைத்துத் தருபவர் நன்மைகளைப் பெறுவார். இதுவே நிலையான அறம்.

 

நன்றி மறவேன்

 

இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது. நாங்கள் ஒரு பயணத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். நபியவர்களிடம் மக்கள் தங்களுக்குத் தாகம் ஏற்பட்டுள்ளதாக முறையிட்டனர். உடனே நபியவர்கள் தமது வாகனத்திருந்து இறங்கி, இருவரை அழைத்து, “நீங்கள் இருவரும் சென்று, தண்ணீர் கிடைக்குமா? என்று தேடிப்பாருங்கள்” என்றார்கள்.

 

அவ்வாறே, அவர்கள் இருவரும் நடந்து போய்க்கொண்டிருந்தபோது, தண்ணீருள்ள இரு பெரும் தோல் பைகளுக்கிடையே (கால்களை தொங்கவிட்டபடி) தமது ஒட்டகத்தில் வந்துகொண்டிருந்த ஒரு பெண்ணை (வழியில்) சந்தித்தார்கள். அப்பெண்ணிடம் அவர்கள் இருவரும், “தண்ணீர் எங்கே (உள்ளது)?” என்று கேட்டார்கள்.

 

அதற்கு அப்பெண், “நேற்று இதே நேரத்தில் இந்தத் தண்ணீர் எனக்குக் கிடைத்தது. (இந்தத் தண்ணீருக்காக ஒரு நாள் பயணம் மேற்கொண்டேன்.) எங்கள் ஆட்கள் தண்ணீரைத் தேடிச் சென்றதால் (என்னுடன் வராமல்) பின்தங்கிவிட்டனர்” என்று கூறினாள்.

 

அப்படியானால் நீ நட!” என்று அவர்கள் இருவரும் அப்பெண்ணிடம் கூறினர். அதற்கு அப்பெண் ‘எங்கே?’ என்று கேட்டாள். அவர்கள் இருவரும் ‘அல்லாஹ்வின் தூதரிடம்’ என்று கூறினர். “மதம் மாறியவர் (ஸாபிஉ) என்று கூறப்படுகிறாரே அவரிடமா?” என்று அப்பெண் கேட்டாள். “நீ நினைக்கின்ற அந்த மனிதரிடத்தில் தான்; நட” என்று கூறிவிட்டு, அப்பெண்ணை அவர்களிருவரும் நபியவர்களிடம் அழைத்து வந்து, நடந்ததை அவர்கள் நபியவர்களிடம் கூறினர்.

 

மக்கள் அந்தப் பெண்ணை ஒட்டகத்திலிருந்து இறங்குமாறு கூறினர். நபியவர்கள் ஒரு பாத்திரத்தைக் கொண்டு வரச் சொல்லி அவ்விரு தோல் பைகளின் வாய் வழியாகத் தண்ணீரைப் பாத்திரத்தினுள் நிரப்பினார்கள். பிறகு அந்தத் தோல் பைகளின் மேல்வாய்களைக் கட்டிவிட்டு, தண்ணீர் ஊற்றியெடுக்கும் கீழ் வாய்களைக் கட்டாமல் திறந்துவிட்டார்கள். மக்களிடையே “தண்ணீர் புகட்டுங்கள்; நீங்களும் பருகுங்கள்” என அறிவிக்கப்பட்டது.

 

அவ்வாறே நாடிய சிலர் பிறர் பருகுவதற்காக எடுத்துக்கொண்டனர். நாடிய சிலர் தாமே பருகினர். அதன் இறுதியாக பெருந்துடக்கு ஏற்பட்ட அந்த மனிதருக்கு ஒரு பாத்திரம் தண்ணீர் வழங்கி, “(இந்தத் தண்ணீரை எடுத்துச்) சென்று, உங்கள்மீது ஊற்றிக்(குளித்துக்)கொள்ளுங்கள்” என்று நபியவர்கள் கூறினார்கள். இதையெல்லாம் அந்தப் பெண் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தாள்.

 

அல்லாஹ்வின் மீதாணையாக! அதிலிருந்து தண்ணீர் ஊற்றுவது நிறுத்தப்பட்டது. அதில் தண்ணீர் எடுக்க ஆரம்பித்தபோது இருந்ததைவிடக் கூடுதலான தண்ணீர் நிரம்பியிருப்பதைப் போன்று எங்களுக்குத் தோன்றியது. (தோல் பையிலிருந்த தண்ணீர் குறையாமல் இருந்தது.) அப்போது நபியவர்கள் (தம் தோழர்களிடம்) ( اجْمَعُوا لَهَا ) “இந்தப் பெண்ணுக்காக (ஏதேனும் பொருள்களை) திரட்டுங்கள்” என்று கூறினார்கள்.

 

அவ்வாறே அவர்கள், அந்தப் பெண்ணுக்காக மதீனாவின் செறிவுமிகு பேரீச்சங்கனிகள் (அஜ்வா), மாவு, குழைத்த மாவு உட்பட (ஏராளமான) உணவுப் பண்டங்களைத் திரட்டி(க் கொண்டுவந்து), அவற்றை ஒரு துணியிலிட்டனர். அந்தப் பெண்ணை அவளது ஒட்டகத்தில் அமர்த்தி அந்தத் துணியை அவளுக்கு முன்னால் வைத்தனர்.

 

பிறகு அப்பெண்ணிடம் நபியவர்கள், ( تَعْلَمِينَ مَا رَزِئْنَا مِنْ مَائِكِ شَيْئًا، وَلَكِنَّ اللَّهَ هُوَ الَّذِي أَسْقَانَا )தெரிந்துகொள்: உனது தண்ணீரிலிருந்து நாங்கள் சிறிதளவுகூட குறைக்கவில்லை; (நாங்கள் எடுத்த தண்ணீர் அல்லாஹ் எங்களுக்கு வழங்கியதாகும்.) அல்லாஹ்தான் எங்களுக்குத் தண்ணீர் பருகக்கொடுத்தான்” என்று கூறினார்கள்.

 

பிறகு அப்பெண் தன் குடும்பத்தாரிடம் வந்து, நடந்தவற்றை விவரித்துவிட்டு, அப்பெண் தனது கையின் நடுவிரலையும் ஆட்காட்டி விரலையும் வானை நோக்கி உயர்த்திக் காட்டி, ( فَوَاللَّهِ إِنَّهُ لَرَسُولُ اللَّهِ حَقًّا ) “அல்லாஹ்வின் மீதாணையாக! உண்மையாக அவர் இறைவனின் தூதராவார்” என்று கூறினாள்.

 

அதற்குப் பிறகு (ஒருமுறை) அந்தப் பெண்ணைச் சுற்றி வாழ்ந்த இணைவைப்பாளர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே போர் நடந்தபோது, அந்தப் பெண் சார்ந்திருந்த தொகுப்பு வீடுகளை முஸ்லிம்கள் ஒன்றும் செய்யவில்லை.

 

ஆகவே, ஒரு நாள் அப்பெண் தன் கூட்டத்தாரிடம், ( مَا أُرَى أَنَّ هَؤُلاَءِ الْقَوْمَ يَدَعُونَكُمْ عَمْدًا، فَهَلْ لَكُمْ فِي الإِسْلاَمِ ) “இந்த மக்கள் வேண்டுமென்றே (உங்களைத் தாக்காமல்) விட்டுவிடுகிறார்கள் என்பதே என் எண்ணம். இஸ்லாத்தில் (இணைய) உங்களுக்கு விருப்பம் உண்டா?” என்று கேட்டாள். அவர்கள் அனைவரும் அவளு(டைய சொல்லு)க்கு இணங்கி இஸ்லாத்தில் இணைந்தனர். நூல்:- புகாரீ-344

 

நமக்கு நெருக்கடியான நேரத்தில் ஒருவர் செய்த உதவி சிறியதாக இருப்பினும், அதை மிகப்பெரிய உபகாரமாக எண்ணி, அதற்கும் பிரதி உபகாரம் செய்யவேண்டும். அதை எப்போதும் மறக்கக்கூடாது. அது மிகவும் போற்றத்தக்கது என்பதையே இந்த நபிமொழி தெளிவுபடுத்துகிறது.

 

நிவாரணம் பெற...

 

ஹதீஸ் துறை நிபுணர் அப்துல்லாஹ் பின் முபாரக் (ரஹ்) அவர்களிடம் ஒருவர் வந்து, "இமாம் அவர்களே! என்னுடைய முழங்காலில் ஏற்பட்ட புண்ணால் நான் ஏழு ஆண்டுகளாக அவஸ்தைப்பட்டு வருவதாகவும், அதற்கு பல்வேறு வகையான சிகிச்சை செய்தும் பலன் கிடைக்கவில்லை" என்றும் முறையிட்டார்.

 

அதற்கு அன்னார்,  ( اذْهَبْ فَاحْفِرْ بِئْرًا فِي مَكَانٍ يَحْتَاجُ النَّاسُ فِيهِ إِلَى الْمَاءِ، فَإِنِّي أَرْجُو أَنْ يَنْبُعَ هُنَاكَ عَيْنٌ وَيُمْسِكَ عَنْكَ الدَّمَ )  “நீர் சென்று மக்களுக்குத் தண்ணீர் தேவைப்படும் இடத்தில் ஒரு கிணறு தோண்டுவீராக. அங்கே ஒரு நீரூற்று துளிர்விடும். அதன்மூலம் உன்னைவிட்டும் நோய் விலகலாம் என்றும் நான் நம்புகிறேன்” எனக் கூறினார்கள். அது போன்றே அவரும் செய்தார். அல்லாஹ் அவருக்கு நிவாரணத்தை வழங்கினான். நூல்:- ஷுஅபுல் ஈமான் இமாம் பைஹகீ, சியரு அஃலாமுந் நுபலா இமாம் அத்தஹபீ,

 

ஹதீஸ் தொகுப்பாளர் இமாம் அல்ஹாகீம் (ரஹ்) அவர்களுக்கு முகத்தில் புண் ஏற்பட்டு ஒரு வருட காலமாக இருந்தது. எனவே, அன்னார் தனது வீட்டு வாசலில் ஒரு தண்ணீர் பாத்திரம் வைத்து முஸ்லிம்களுக்கு நீர் புகட்டினார்கள். அதன் பரக்கத்தால் அன்னார் குணமடைய ஒரு வாரம் கூட ஆகவில்லை. மேலும், அன்னாரின் முகம் முன்பு இருந்ததைவிட அழகாக ஆகிவிட்டது. அல்லாஹ்வின் உத்தரவால் அன்னார் பரிபூரணமாக குணமடைந்தார்கள். நூல்:- ஸஹீஹ் அத்தர்ஙீபு வத்தர்ஹீபு-964

 

வியாதிக்காரர்கள் தமது வியாதி நீங்க, குழந்தை செல்வம் போன்ற தேவையுடையவர்கள் தமது தேவை நிறைவேற, வாழ்வில் வளம்பெற எண்ணுவோர் மக்களின் தாகம் தீர்ப்பதின் மூலம் அல்லாஹ் அவர்களின் காரியங்களை நிறைவேற்றித் தரக்கூடும்.

 

பாவங்கள் மன்னிக்கப்படலாம்

 

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது. ‘‘ஒரு மனிதர் (ஒரு பாதையில்) நடந்து சென்றுகொண்டிருந்தபோது அவருக்குக் கடுமையான தாகம் ஏற்பட்டது. உடனே, அவர் (அங்கிருந்த) ஒரு கிணற்றில் இறங்கி, அதிலிருந்து (தண்ணீரை அள்ளிக்) குடித்தார். பிறகு, (கிணற்றிலிருந்து) அவர் வெளியே வந்தபோது, நாய் ஒன்று தாகத்தால் தவித்து, நாக்கைத் தொங்க விட்டபடி ஈர மண்ணை நக்கிக்கொண்டிருப்பதைக் கண்டார். அவர் (தம் மனத்திற்குள்) எனக்கு ஏற்பட்டதைப் போன்ற(அ)தே (கடுமையான தாகம்) இந்த நாய்க்கும் ஏற்பட்டிருக்கின்றது போலும்’ என்று எண்ணிக்கொண்டார்.

 

உடனே (மீண்டும் கிணற்றில் இறங்கித் தண்ணீரைத்) தனது காலுறையில் நிரப்பிக்கொண்டு, அதை வாயால் கவ்விக்கொண்டு, மேலே ஏறி வந்து அந்த நாய்க்குப் புகட்டினார். அவருடைய இந்த நற்செயலை அல்லாஹ் ஏற்று அவரை (அவருடைய பாவங்களை) மன்னித்தான்” என்று பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 

இதைச் செவியுற்ற நபித்தோழர்கள், ( يَا رَسُولَ اللَّهِ، وَإِنَّ لَنَا فِي الْبَهَائِمِ أَجْرًا ) ‘‘நாயகமே! கால்நடைகள் (மற்றும் பிராணிகளுக்கு உதவும்) விஷயத்திலும் எங்களுக்குப் பலன் கிடைக்குமா?” என்று கேட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ( فِي كُلِّ كَبِدٍ رَطْبَةٍ أَجْرٌ ) ‘‘(ஆம்;) உயிருடைய பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்கு உதவி செய்யும்பட்சத்தில் மறுமையில்) அதற்கான பிரதிபலன் கிடைக்கும்” என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-2363

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( بَيْنَمَا كَلْبٌ يُطِيفُ بِرَكِيَّةٍ كَادَ يَقْتُلُهُ الْعَطَشُ، إِذْ رَأَتْهُ بَغِيٌّ مِنْ بَغَايَا بَنِي إِسْرَائِيلَ، فَنَزَعَتْ مُوقَهَا فَسَقَتْهُ، فَغُفِرَ لَهَا بِهِ ) (முன்னொரு காலத்தில்) நாய் ஒன்று ஒரு கிணற்றைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது. அது தாகத்தால் செத்துவிடும் நிலையில் இருந்தது. அப்போது, இஸ்ரவேலர் சமுதாயத்தின் விபசாரிகளில் ஒருத்தி அதைப் பார்த்தாள். உடனே, அவள் தன் காலுறையைக் கழற்றி (அதில் தண்ணீரை எடுத்து) அந்த நாய்க்குப் புகட்டினாள். அதன் காரணமாக அவளுக்குப் பாவமன்னிப்பு வழங்கப்பட்டது. அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-3467

 

நாய் ஓர் அசுத்தமான பிராணி. நாய் நக்கிவிட்டால் அந்த பாத்திரத்தை ஏழு முறை கழுவ வேண்டும். அதில், ஒரு தடவை மண்ணை பயன்படுத்த வேண்டும். அதே நேரம், நாய் நம் உடம்பின் மீதோ, அல்லது நம் ஆடையின் மீதோ உரசிவிட்டால் பட்ட இடத்தை மட்டும் ஒரு தடவை கழுவினால் போதுமாகும். பாத்திரத்தில் வாய் வைத்து விட்டால் மட்டும் தான் ஏழு முறை கழுவும் அந்த சட்டமாகும்.

 

ஆனால், அசுத்தமான பிராணியான ஓர் நாயின் தாகத்தைத் தீர்த்ததற்கே இறைவனின் மன்னிப்பு கிடைத்திருக்கிறது எனும்போது மனிதர்களின் தாகத்தைத் தீர்ப்பதன் மூலம் எவ்வளவு பெரிய நன்மைகள் கிடைக்கக்கூடும் என்று சற்று யோசிக்க வேண்டும்.

 

சில தொழுகைகள், நோன்புகள், இரவு வணக்கங்கள் மூலம் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று ஏராளமான நபிமொழிகள் வருகின்றன. இந்த நபிமொழிகளில் சொல்லப்படுகின்ற பாவங்கள் என்பது சிறுபாவங்களை மட்டும் குறிக்கும். பெரும் பாவங்களை அல்ல.

 

ஆனால், பிற ஜீவன்களுக்கு தாகம் தீர்ப்பது மூலம் விபச்சாரம் போன்ற பெரும்பாவங்களும் மன்னிக்கப்படும் என்று இந்த நபிமொழி தெளிவுபடுத்துகிறது.

 

தாபிஈன்களில் சிலர் கூறுகின்றனர். ( مَنْ كَثُرَتْ ذُنُوبُهُ فَعَلَيْهِ بِسَقْيِ الْمَاءِ ) யார் பல பாவங்கள் செய்துவிட்டு, (அவை மன்னிக்கப்பட விரும்புவாரோ) அவர் பிறருக்கு தண்ணீர் புகட்டட்டும். நூல்:- தஃப்சீர் குர்துபீ அல்அஃராஃப் வசனம்-50

 

பிற உயிரிங்கள்மீது கருணை

 

கப்ஷா பின்த் கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது. என் (மாமனார்) அபூ கத்தாதா (ரலி) அவர்கள் என் வீட்டிற்கு வந்தார்கள். அவர்கள் அங்கத்தூய்மை செய்வதற்கு நான் தண்ணீர் கொண்டு வந்து (ஒரு பாத்திரத்தில்) ஊற்றினேன். அப்போது பூனை ஒன்று வந்து அந்த தண்ணீரை குடிக்கலாயிற்று. உடனே அபூ கத்தாதா (ரலி) அவர்கள் அந்த பூனை குடித்து முடிக்கும் வரை அந்தப் பாத்திரத்தைச் சரித்துப் பிடித்தார்கள்.

 

நான் அதை வியப்புடன் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்ததை கண்ட அபூ கத்தாதா (ரலி) அவர்கள் "என் சகோதரர் மகளே! (அங்கத்தூய்மை செய்யும் தண்ணீரைப் பூனை குடிப்பதைக் கண்டு) நீர் ஆச்சரியப்படுகிறாயா?" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன். அதற்கு அவர்கள் அருமை நாயகம் (ஸல்) அவர்கள் ( إِنَّهَا لَيْسَتْ بِنَجَسٍ إِنَّمَا هِيَ مِنَ الطَّوَّافِينَ عَلَيْكُمْ ) 'பூனைகள் அசுத்தமான பிராணிகள் அல்ல. அவையெல்லாம் உங்களையே சுற்றிச் சுற்றி வரக்கூடியவை ஆகும்' என்று கூறினார்கள்" என்றார்கள். நூல்:- அபூதாவூத்-68, திர்மிதீ-85, நசாயீ-67, இப்னுமாஜா-361, முவத்தா மாலிக், முஸ்னது அஹ்மத்

 

மனிதர்களாலே இந்த வெயிலை தாங்க முடியவில்லை என்றால், நாயும் பூனையும் சின்னஞ்சிறு பறவைகளும் என்ன செய்யும்? எனவே, நம்மையும், நம் பிள்ளைகளையும் காப்பதுபோல், நம்மைச்சுற்றி வாழும் சின்னஞ்சிறிய உயிரினங்களையும் காப்பாற்ற வேண்டும்.

 

மனிதர்கள் காடுகளை அழித்தும், குளம், குட்டைகள் மற்றும் நீர்நிலைகளை ஆக்கிரமித்தும் குடியிருப்புகளை உருவாக்கியதால் காட்டில் வாழும் மிருகங்களும், பறவைகளும் குடியிருப்புக்களை நோக்கி வரத்தொடங்கிவிட்டன. மனிதர்களையே வாட்டி வதைக்கும் கோடைகாலங்களில் பறவைகள் நீருக்காக பரிதவிக்கும் அவலநிலைகளை கருத்தில் கொண்டு நமது இல்லங்களில் நீர்த்தொட்டிகள் உணவுதானியங்கள் வைத்து நாய், பூனை, காகம், குருவி, கிளி, சிட்டுக்குருவி போன்ற ஜீவன்களை பாதுகாத்தல் நமது பொறுப்பு.

 

நாட்டில் பறவைகள் இனம் தற்போது அழிந்து வருகிறது. பறவைகள் பழங்களை தின்று அதன் எச்சீல் மூலம் மரம், செடி, கொடிகள் வளர்ந்து காடுகள் உருவாகிறது. இது ஒரு உணவு சங்கிலி ஆகும். பறவை இனங்கள் அழிந்தால் மனித இனத்திற்கு பேராபத்து வரும் சூழ்நிலை உருவாகும்.

 

பறவைகள் நம்மைப்போன்ற உயிரினம் மட்டுமல்ல. நம்மையும், இயற்கையையும் பாதுகாக்கும் ஓர் உயிரினம். அவற்றைப் பாதுகாப்பது நம் கடமை ஆகும். எனவே, அவைகளின் பசி மற்றும் தாகம் தீர்க்க, வீட்டின் மொட்டை மாடிகளில் தண்ணீர் வைக்கலாம். தானியங்களைத் தூவிவிடலாம்.

 

அல்லாஹ்விற்காக

 

பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( وَمَنْ سَقَى لِلَّهِ عَزَّ وَجَلَّ سَقَاهُ اللَّهُ ) யார் (உலகில் தாகித்தவருக்கு) அல்லாஹ்விற்காக நீர் புகட்டினாரோ, அவருக்கு (மறுமை நாளில்)  அல்லாஹ் நீர் புகட்டுவான். அறிவிப்பாளர்:-  அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் நூல்:- இப்னு அபீதுன்யா முக்தஸர் அத்தர்ஙீபு வத்தர்ஹீபு-282

 

தண்ணீர் மற்றும் மோர் பந்தல் அமைத்து மக்களின் தாகம் தீர்ப்பது சிறந்த நற்செயல் தான், அதில் சந்தேகமில்லை. ஆனால், அதன் மூலம் விளம்பரம் தேடுவதுக் கூடாது. அதாவது, அந்த பந்தல்களில் தமது பெயரையோ அல்லது தமது இயக்கத்தின் பெயரையோ அச்சுப் பதித்து வைப்பது சரியல்ல. இதுபோன்ற நற்செயல்களை அல்லாஹ்விற்காக மட்டும் செய்தால் அல்லாஹ்விடம் அதற்குரிய நற்கூலியை எதிர்பார்க்கலாம் என்கிறது இஸ்லாம்.

 

நரகவாசிகளின் நிலை

 

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களிடம், "தர்மத்தில் தலைசிறந்தது எது?" என்று கேட்கப்பட்டது.  அப்போது அப்துல்லாஹ் பின் அப்பாஸ் ரலி அவர்கள் கூறியதாவது. (ஒருமுறை) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ( أَفْضَلُ الصَّدَقَةِ الْمَاءُ، أَلَمْ تَسْمَعْ إِلَى أَهْلِ النَّارِ لَمَّا اسْتَغَاثُوا بِأَهْلِ الْجَنَّةِ قَالُوا: ﴿أَفِيضُوا عَلَيْنَا مِنَ الْمَاءِ أَوْ مِمَّا رَزَقَكُمُ اللَّهُ﴾  ) "தலைசிறந்த தர்மம் குடிநீர் (வழங்கல்) ஆகும்; (இப்னு அப்பாஸே!) நரகவாசிகள் சொர்க்கவாசிகளிடம் உதவி கோரும்போது, எங்களுக்குச் சிறிதளவு தண்ணீரையோ அல்லது அல்லாஹ் அருளியவற்றில் சிறிதளவையோ வழங்குங்கள்" என்று கூறுவார்கள் என்பதை நீர் கேள்விப்பட்டதில்லையா?" என்று கூறினார்கள்.  நூல்:- தஃப்சீர் இப்னு அபீஹாத்திம், தஃப்சீர் இப்னு கஸீர், தஃப்சீர் துர்ருல் மன்ஸூர்

 

ஒருமுறை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் குளிர்ந்த நீரை பருகினார்கள். அப்போது மிகவும் கடுமையாக அழுதார்கள். ஏன் இவ்வாறு அழுகிறீர்கள்? என்று வினவப்பட்டது. அதற்கு அன்னார், ( ذَكَرْتُ آيَةً في كِتابِ اللَّهِ: ﴿وحِيلَ بَيْنَهم وبَيْنَ ما يَشْتَهُونَ﴾ فَعَرَفْتُ أنَّ أهْلَ النّارِ لا يَشْتَهُونَ إلّا الماءَ البارِدَ ) 'அவர்களுக்கும் அவர்கள் விரும்பியவைகளுக்கும் இடையில் தடை ஏற்படுத்தப்பட்டு விடும்' (34:54) என்ற குர்ஆன் வசனத்தை நினைவுகூர்ந்தேன். நரகவாசிகள் குளிர்ந்த தண்ணீரை மட்டுமே விரும்புகிறார்கள் என்பதை நான் அறிவேன். (நானும் அந்த நரகவாசிகளில் ஒருவனாக ஆகிவிடக்கூடாதே என்ற அச்சத்தில் அழுதேன்)" என்று பதிலளித்தார்கள். நூல்:- தஃப்சீர் துர்ருல் மன்ஸூர் அல்அஃராஃப் வசனம்-50

 

மார்க்க அறிஞர்களில் சிலர், "பள்ளிவாசல்கள், சந்தைகள், சாலைகள், தெருக்கள் இதுபோன்ற பொது இடங்களில் தண்ணீர் வைத்து மக்களின் தாகத்தைத் தீர்ப்பதன் பரக்கத்தால் வீட்டைத் திருட்டில் இருந்து பாதுகாக்கலாம்" என்கிறார்கள்.

 

தண்ணீர் தானம் செய்வது முஸ்லிம்கள் செய்யும் மிகப்பெரிய மறுமையின் முதலீடுகளில் ஒன்றாகும்.

 

ஒரு முஸ்லிம் வழங்கும் தண்ணீர் தர்மம் என்பது, அவரின் பாவங்களுக்கான பரிகாரமாகும். அவர் நரக நெருப்பிலிருந்து காப்பாற்றப்படுவார். அவரின் நோய் நொடிகள் நீக்கப்படுகிறது. அவர் பெரும் சோதனையிலிருந்து காக்கபபடுகிறார்.  சுருங்கக்கூறின், சர்வ வல்லமையுள்ள அல்லாஹ் தண்ணீர் தர்மம் வழங்குபவரை மன்னிக்கவும், அவரிடமிருந்து தீமையையும் அகற்றவும் ஒரு பெரிய காரணமாக அமைகிறது.

 

எனவே நாம்,  மக்கள் மற்றும் பிற உயிரினங்களின் தாகம் தீர்ப்பதன் மூலம் இறையருளைப் பெறுவோமாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...