சகோதர சமயத்தவர்களுடன்…
لَا يَنْهَاكُمُ اللَّهُ عَنِ الَّذِينَ
لَمْ يُقَاتِلُوكُمْ فِي الدِّينِ وَلَمْ يُخْرِجُوكُمْ مِنْ دِيَارِكُمْ أَنْ
تَبَرُّوهُمْ وَتُقْسِطُوا إِلَيْهِمْ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ
(இறைநம்பிக்கையாளர்களே!)
மார்க்க விஷயத்தில் உங்களுடன் எதிர்த்து போர் புரியாதவர்களுக்கும், உங்கள் இல்லத்திலிருந்து உங்களை வெளியேற்றாதவர்களுக்கும், நீங்கள் நன்மை செய்வதையும், அவர்களுடன் நீங்கள் நீதமாக நடந்து கொள்வதையும் அல்லாஹ்
தடுக்கவில்லை. நிச்சயமாக அல்லாஹ் நீதிவான்களை நேசிப்பவனாகவே இருக்கின்றான். திருக்குர்ஆன்:-
60:8
இஸ்லாம் வகுத்தளித்துள்ள
நெறிகளில் சமய நல்லிணக்கமும் ஒன்று. இதைப் பயபக்தியுடன் கடைப்பிடித்தாக வேண்டிய கடமை
உணர்வு அனைத்து முஸ்லிம்களுக்கும் உண்டு. சமய நல்லிணக்கம் பேணுவதை மனித நேயக்கோட்பாடாகவும்
மார்க்க நெறியாகவும் இஸ்லாம் வகுத்துள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்)
அவர்களிடமிருந்து தான் சமய நல்லிணக்கத்திற்கான முன்னுதாரணம் ஆரம்பம் ஆகிறது. நபியவர்கள்
மட்டுமின்றி நபித்தோழர்களும் அதே வழியிலேயே பயணித்து சமய நல்லிணக்கத்திற்குச் சான்று
பகர்ந்துள்ளார்கள்.
பல சமயத்தவர்களும்
வசிக்கும் சமுதாயத்தில் மக்கள் அனைவரும் சமய நல்லிணக்கத்துடன் வாழ இஸ்லாம், ‘‘எங்கள் காரியங்கள் எங்களுக்கும், உங்களுடைய காரியங்கள் உங்களுக்கும் சிறந்தவை. உங்கள் மீது சாந்தி உண்டாவதாக’’ என்று
வழிகாட்டுகிறது. ‘‘அவரவர் அவரவர்களுடைய வழியில் செல்லலாம். ஒருவர் மற்றவரை மதிக்க வேண்டும்’’
என்பதே இதன் அடிப்படைக் கருத்தாகும். இஸ்லாம், சகோதர சமயத்தவர்களோடு பரஸ்பர புரிந்துணர்வோடும், அவர்களின் உரிமைகளை வழங்கி,
உணர்வுக்கு மதிப்பளித்தும் வாழ வேண்டும் என்கிறது.
அப்துல்லாஹ் பின்
ஸுபைர் (ரலி) அவர்கள் கூறியதாவது. அஸ்மா (ரலி) அவர்களின் தாயார் கத்தீலா என்பவர் பலதெய்வக்
கொள்கை உடையவராக இருந்த நிலையில் தம்முடைய மகள் அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்களிடம்
பாலாடைக்கட்டி, சுத்தப்படுத்தப்பட்ட வெண்ணை போன்ற சில அன்பளிப்புக்களுடன்
வந்தார். அப்போது அஸ்மா (ரலி) அவர்கள், அவரை தம்முடைய வீட்டிற்குள் நுழைய அனுமதிக்கவுமில்லை; அவர் கொண்டுவந்த அன்பளிப்புகளை வாங்கிக்கொள்ளவுமில்லை. அதுப்பற்றி ஆயிஷா (ரலி)
அவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அப்போதுதான் தலைப்பில் காணும் திருவசனம்
இறக்கியருளப்பட்டது. நூல்:- முஸ்னது அஹ்மத், தஃப்சீர் தபரீ, தஃப்சீர் இப்னு அபீஹாத்திம், தஃப்சீர் இப்னு கஸீர்
பெரும்
பொறுப்பு
நபிகள் நாயகம்
(ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் மக்காவிலிருந்து மதீனாவிற்கு புலம் பெயர்ந்து
சென்றபோது பனூ அப்த் பின் அதீ குலத்தில் பனூ அத்தீல் எனும் கிளையைச் சேர்ந்த வழிகாட்டுதலில்
கைதேர்ந்தவராக திகழ்ந்த அப்துல்லாஹ் பின் உரைகத் என்பவரை பயண வழிகாட்டியாக இருக்க கூலிக்கு
அமர்த்தினார்கள். அவர் குறைஷி இறைமறுப்பாளர்களின் மதத்தில் இருந்தார். நபியவர்களும்,
அபூபக்ர் (ரலி) அவர்களும் அவரை நம்பி,
தங்களது இரு பயண ஒட்டகங்களை ஒப்படைத்து மூன்று இரவுகளுக்குப்
பின்னர் 'ஸவ்ர்' குகைக்கு வந்துவிடுமாறு
வாக்குறுதி வாங்கியிருந்தார்கள். மூன்றாம் நாள் அதிகாலையில் அந்த இரு பயண ஒட்டகங்களுடன்
அவர் ஸவ்ர் குகைக்கு வந்து சேர்ந்தார். (அவர், நபியவர்கள்
மற்றும் அபூபக்ர் - ரலி அவர்களையும் பத்திரமாக
மதீனா கொண்டு போய் சேர்த்தார்.) அறிவிப்பாளர்:- ஆயிஷா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-3095,
ஃபத்ஹுல் பாரீ, உம்தத்துல் காரீ, இப்னு
ஹிஷாம், அல்பிதாயா வந்நிஹாயா
அண்ணல் நபி
(ஸல்) அவர்கள் தமது வாழ்க்கையை புரட்டிப் போட இருக்கும் ஒரு பயணத்தில் பிற சமயத்தவர்களில்
ஒருவரை தமது நம்பிக்கைக்குரியவராக தேர்ந்தெடுத்து, அவரிடம் தமது இரகசியத்தை எடுத்துரைத்து
தம்மைப் பத்திரமாக அழைத்து செல்லும் பொறுப்பைக் கொடுத்தார்கள்.
நம்பிக்கையைக்
காப்பாற்றுதல்
அருமை நாயகம் (ஸல்)
அவர்களின் வாய்மையும் நாணயத்தையும் மக்கள் அறிந்ததனால் அச்சப்படும் பொருள்களை மக்காவில் (மதம் குலம் பாராமல்) நபியவர்களிடம் பாதுகாப்புக்காக
கொடுத்து வைப்பவர்களாக இருந்தனர். இந்நிலையில் அல்லாஹ்வின் உத்தரவுக்கிணங்க நபியவர்கள்
மக்காவிலிருந்து புறப்பட்டு மதீனாவுக்கு புலம்பெயர்ந்து செல்ல தயாரானார்கள். எனவே,
அப்போது நபியவர்கள், தம் வசம் கொடுத்து வைக்கப்பட்டிருந்த மக்களுக்குரிய
பாதுகாப்பு பொருள்களை அலீ (ரலி) அவர்களிடம் கொடுத்து அதற்குரியோரிடம் அவற்றை நிறைவேற்றும்
வரை மக்காவில் தங்கி இருக்குமாறு அலீ (ரலி) அவர்களுக்கு உத்தரவிட்டார்கள். நூல்:- சீரத்
இப்னு ஹிஷாம், அல்பிதாயா வந்நிதாயா
மூசா பின் உக்பா மற்றும்
இப்னு லஹீஆ (ரஹ்) ஆகியோர் கூறியுள்ளனர். கருத்த அபிசீனிய அடிமை ஒருவர் (கைபர் பகுதியைச்
சேர்ந்த) தன் எஜமானருக்கு ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். கைபர் போர் நாளன்று அவர்
தனது ஆடுகளுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து,
"நீங்கள் எதை நோக்கி அழைக்கின்றீர்கள்?" என்று கேட்டார். நபியவர்கள், அல்லாஹ்வைத் தவிர
வேறு இறைவன் இல்லை என்றும், நான் அல்லாஹ்வின் தூதர் என்றும், அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் வழிபடலாகாது என்றும்
நீ சாட்சியமளிக்க வேண்டும் என்ற இஸ்லாத்தினை நோக்கி அழைக்கிறேன்" என்று பதிலளித்தார்கள்.
அப்போது அந்த அடிமை, "இவ்வாறு நான் சாட்சியம் அளித்து அல்லாஹ்வை நம்பினால் எனக்கு
என்ன கிடைக்கும்?" என்று கேட்டார்.
அதற்கு நபியவர்கள், "நீ (இவ்வாறு சாட்சியம்
அளித்து) அக்கொள்கையின் மீதே இறந்தால் சொர்க்கம் கிடைக்கும்" என்று பதிலளித்தார்கள்.
உடனே அந்த அடிமை முஸ்லிமாகிவிட்டார். பிறகு நபியவர்களிடம், ( يَا نَبِيَّ اللَّهِ إِنَّ هَذِهِ الْغَنَمَ عِنْدِي
أَمَانَةٌ ) "நாயகமே! (நான் உங்களுடன் இந்தப் போரில் கலந்து கொண்டு
உயர்த்தியாகம் செய்ய வேண்டும். ஆனால்,) இந்த ஆடுகள் என்னிடம்
நம்பி ஒப்படைக்கப்பட்டவை (அமானிதம்) ஆகும். (நான் இப்போது என்ன செய்வது?)” என்று கேட்டார்.
நபியவர்கள், ( أَخْرِجْهَا مِنْ عَسْكَرِنَا وَارْمِهَا
بِالْحَصْبَاءِ، فَإِنَّ اللَّهَ سَيُؤَدِّي عَنْكَ أَمَانَتَكَ ) “(அதுபற்றி கவலைப்பட வேண்டாம்) நம் படையிலிருந்து
இந்த ஆடுகளை வெளியாக்கி, அவற்றினை புறநகர் பகுதியான 'ஹஸ்பா' பகுதியில் ஓட்டிச் சென்று விட்டுவிடு. நிச்சயமாக
அல்லாஹ் (உன்னிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட) உனது அமானிதப் பொருள்களை (அதற்குரியவரிடம்)
உன் சார்பாக நிறைவேற்றிவிடுவான்" என்று கூறினார்கள். அவர் அவ்வாறே செய்தார். ஆடுகள்
அவற்றின் முதலாளியிடம் திரும்பிவிட்டன. அவர் அந்தப் போரில் கலந்து கொண்டு உயிர்த்தியாகியாக
ஆனார். நூல்:- தலாயிலுந் நுபுவ்வா இமாம் பைஹகீ, அல்பிதாயா வந்நிஹாயா
அண்ணல் நபி (ஸல்)
அவர்கள், மாற்றுச் சகோதரரின்
சொத்துக்களாக இருந்தாலும்கூட அதை ஒரு முஸ்லிம் ஏமாற்றக்கூடாது என்ற பண்பியலை கற்றுத்
தருகிறார்கள்.
நம்மை நம்பியவர் ஒரு
முஸ்லிம் அல்லது சகோதர சமயத்தவர் என யாராக இருந்தாலும் அவரின் நம்பிக்கைக்கு பாத்திரமானவனாக
நடந்துகொள்ள வேண்டும். யாரிடத்திலும் மோசடி செய்தல் கூடாது.
வாக்குறுதி
நிறைவேற்றல்
ஹுதைஃபா பின் அல்யமான்
(ரலி) அவர்கள் கூறியதாவது. நான் பத்ருப் போரில் கலந்துகொள்ளாததற்குக் காரணம் யாதெனில், நானும் என் தந்தை
ஹுசைல் (எனும் அல்யமான்) அவர்களும் (பத்ர் நோக்கிப்) புறப்பட்டோம். அப்போது குறைஷி
இறைமறுப்பாளர்கள் எங்களைப் பிடித்துக்கொண்டனர். "நீங்கள் முஹம்ம(துடன் சேர்ந்து
எங்களுக்கெதிராகப் போர் செய்வ)தை நாடித்தானே செல்கிறீர்கள்?" என்று கேட்டார்கள்.
நாங்கள் "(இல்லை)
மதீனாவை நோக்கியே செல்கிறோம்" என்று (பேச்சை மாற்றிச்) சொன்னோம். அப்போது குறைஷியர்
"நாங்கள் மதீனாவுக்கே திரும்பிவிட வேண்டும்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சேர்ந்து (குறைஷியருக்கெதிராக)
போரிடக் கூடாது" என அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு எங்களிடம் வாக்குறுதி பெற்றுக்கொண்டனர்.
நாங்கள் இருவரும்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததைத் தெரிவித்தோம். அப்போது அவர்கள், ( انْصَرِفَا
نَفِي لَهُمْ بِعَهْدِهِمْ وَنَسْتَعِينُ اللَّهَ عَلَيْهِمْ ) "நீங்கள் இருவரும்
(மதீனாவுக்கே) திரும்பிச் செல்லுங்கள். நாம் அவர்களுக்கு ஆதரவாக அவர்களது வாக்குறுதியை
நிறைவேற்றுவோம். அவர்களுக்கெதிராக அல்லாஹ்விடம் உதவி கோருவோம்" என்று சொன்னார்கள்.
நூல்:- முஸ்லிம்-3661
இஸ்லாத்தின் முதல்
அறப்போரான பத்ருப் போர் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு ஹுதைஃபா பின் அல்யமான்
(ரலி) அவர்களும் அவர்களது தந்தையும் மக்காவிலிருந்து மதீனாவிற்கு போய்க்கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களைச் சுற்றி வளைத்த இணைவைப்பாளர்கள், "எதற்காக நீங்கள் மதீனா செல்கிறீர்கள்?" என்று கேட்க, "நாங்கள் எங்கள் வாழ்க்கையைத்
தேடி மதீனா செல்கின்றோம்" என்று கூறினார்கள். அப்போது அந்த இணைவைப்பாளர்கள், "முஹம்மது எங்களுக்கு
எதிராக ஏதேனும் போர் தயாரிப்புக்கள் செய்கிறபோது எங்களுக்கு எதிராக நீங்கள் அவருடன்
போருக்கு வரக்கூடாது. இப்படி ஒரு ஒப்பந்தம் எங்களிடம் செய்தால் தான் உங்களை மதீனாவிற்கு
அனுப்புவோம்" என்று கூறினர்.
வேறு வழியின்றி இருவரும், "அல்லாஹ்வின் மீதாணையாக!
நாங்கள் உங்களுக்கு எதிராக போரில் கலந்துகொள்ள மாட்டோம்" என வாக்குறுதி அளித்தனர்.
மதீனா வந்து சேர்ந்த பிறகு நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களிடம் நடந்த அனைத்தையும்
கூறி, இப்போது நாங்கள் என்ன
செய்ய வேண்டும்?" என்று வினவினர்.
அப்போது நபியவர்கள், "நீங்கள் இருவரும்
பத்ருப் போருக்கு வர வேண்டாம். கொடுத்த வாக்குறுதியை நீங்கள் காப்பாற்றுங்கள்"
என்று கூறி, அவர்களுக்கு பத்ருப் போரில் கலந்துகொள்ள தடை விதித்து விட்டார்கள்.
நேர்மையாக இருப்பவர்களும்
நெருக்கடியான வேலைகளில் தடம் புரண்டுவிடுவார்கள். ஆனால், நபியவர்களோ போர்க்காலங்களிலும் மிகச் சோதனையான காலகட்டங்களிலும்
வாக்குறுதி காக்க தவறவில்லை.
பத்ரு போர் முஸ்லிம்கள்
மீது திணிக்கப்பட்டது. அப்போரில் கலந்து கொண்ட முஸ்லிம்கள் எண்ணிக்கையோ எதிரிகளோடு
ஒப்பிடும்போது மிகச்சிறிய அளவில் இருந்தது. முஸ்லிம்கள் 313 பேர். எதிரிகளின் எண்ணிக்கை
1000 பேர். நெருக்கடியான இந்தச் சூழலில் போரிட வீரர்கள் தேவைப்படவே செய்தனர். இருப்பினும், அவ்விருவரையும் போரில் கலந்து கொண்ட கலந்து கொள்ள
வேண்டாம் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்து விட்டார். காரணம், கொடுத்த வாக்குறுதையைக் காப்பாற்ற வேண்டும் என்ற
நற்குணம்.
போர்க்களம் என்பது
தந்திர பூமி. எதிராளியை எப்படி வேண்டுமானாலும் ஏமாற்றுவதற்கு போர்த் தந்திரங்களில்
அனுமதி உண்டு. எனவே, "இணைவைப்பாளர்களிடம் கொடுத்த வாக்குறுதியை நாம் எதற்கு காப்பாற்ற
வேண்டும் வாருங்கள் போகலாம்" என்று நபியவர்கள் அவர்களை அழைக்கவில்லை. மாறாக, நபியவர்கள்
எதிர் தரப்பினரான இணைவைப்பாளர்களின் ஒப்பந்தத்திற்கு மரியாதை கொடுத்தார்கள்.
வாக்குறுதியை நிறைவேற்றுவது
முஸ்லிமின் அடையாளம். எனவே, நபியவர்கள் எதிரிகளிடம்கூட வாக்குறுதி மீறியது கிடையாது. அவ்வாறே ஒரு சமுதாயத்தை
உருவாக்கினார்கள்.
யாருக்கு எந்த வாக்குறுதி
கொடுத்தாலும் அவர் இணைவைப்பாளராக இருந்தாலும்கூட அதை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு முஸ்லிமிற்கு
இருக்கிறது என்பதே இதன் மூலம் நாம் அறிய வேண்டியவை.
மதிப்பளித்தல்
அரபுலகத்தில் பெயர்
பெற்ற கொடைவள்ளல் ஹாதிம் தாய்யீ என்பவரின் மகனார் அதிய்யி பின் ஹாதிம் என்ற ஒரு கிறிஸ்தவர்
கூறுகிறார். நான் அருமை நாயகம் (ஸல்) அவர்களைக் காண பள்ளிவாசலுக்குச் சென்றேன். நான்
அவருக்கு முகமன் கூறியதும், அவர் என் பெயர் என்ன? என்று கேட்டார். நான் அதீ பின் ஹாதிம் என்று கூறியதும்
(என் தந்தையின் கொடைத்தன்மையை மதித்தவராக) எழுந்து நின்றார். என்னை அவர் வீட்டுக்கு
அழைத்துச் சென்று ஒரு மென்மையான இருக்கை ஒன்றை வழங்கி அதில் என்னை அமரச் சொன்னார்.
நான் அதை ஏற்க மறுத்து அதில் அவரை அமரும்படி சொன்னேன். இது உனக்கு உரியது என்று கூறிவிட்டு
என்னை அந்த இருக்கையில் அமரச் செய்துவிட்டு அவர் தரையில் அமர்ந்து கொண்டார். நான் எனக்குள், "நிச்சயமாக இவர் ஒரு
அரசர் அல்லர்" என்று சொல்லிக்கொண்டேன். நூல்:- சீரத் இப்னு ஹிஷாம்
அண்ணல் நபி (ஸல்)
அவர்கள் சகோதரச் சமயத்தவர்களை எவ்வாறு கண்ணியமாக நடத்தினார்கள் என்பதற்கு இந்நிகழ்வு
ஒரு சான்றாகும்.
நாட்டின் சுதந்திரத்திற்கு
முன் அம்பேத்கர் அவர்களுக்கு ஆசை வார்த்தை காட்டி தேர்தலில் நிறுத்தி பெருவாரியான வாக்கு
வித்தியாசத்தில் தோற்கடித்து கைகொட்டிச் சிரித்தார்கள். ஓர் அறிஞர் நயவஞ்சகமாக தோற்கடிக்கப்பட்டதை
உணர்ந்த முஹம்மது அலீ ஜின்னா அவர்கள் கிழக்கு வங்காளத்தில் வெற்றி வாகை சூடிய முஸ்லிம்
லீக் வேட்பாளரை ராஜினாமா செய்ய வைத்து, அந்த இடத்தில் அம்பேத்கர் அவர்களை முஸ்லிம்
லீக் டிக்கெட்டில் நிறுத்தி வெற்றி பெறச்செய்து, பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைத்தார்.
அனுமதியின்றி
கூடாது
நபிகள் பெருமானார்
(ஸல்) அவர்களை சந்திக்க வந்த சில வெளியூர் தோழர்கள் இஸ்லாமிய அடிப்படைகளை கற்றுக்கொண்டு
ஊர் திரும்ப ஆயத்தமானார்கள். அப்போது அவர்களில் ஒருவர் நபியவர்களிடம், "நாயகமே! எங்களில்
சில நண்பர்கள் ஊர் திரும்ப வாகனம் இல்லை. ஒரே வாகனத்தில் பலரும் பயணிக்க வேண்டிய சூழ்நிலையில்
உள்ளோம். நாங்கள் வரும் வழியில் பாலைவனத்தில் கேட்பாரற்று பராமரிப்போர் யாருமின்றி
சில ஒட்டகங்கள் மேய்ந்து கொண்டிருந்தன. அவை சகோதர சமயத்தவர்களுடையது. நாங்கள் அதை வாகனமாக
பயன்படுத்திக் கொள்ளலாமா?" என்று (பிற சமயத்தவர்களின் உடமைகளை அனுமதியின்றி பயன்படுத்த
நபியவர்களின் அனுமதி) கோரினார். அப்போது நபியவர்கள்,
"அவைகள் நெருப்பு, தொடாதீர்கள்"
என்று மூன்று முறை கூறினார்கள்.
அண்ணல் நபி (ஸல்)
அவர்கள் சகோதர சமயத்தவர்களின் உடமைகள் குறித்து சற்று இளக்காரமாய் கருதியதற்காக கண்டனம்
தெரிவித்தார்கள்.
நீதியின் பக்கம்
அப்துல் மலிக் பின்
அபீ சுஃப்யான் அஸ்ஸகஃபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது. இராஷ் பகுதியைச் சேர்ந்த வியாபாரி
ஒருவர் மக்காவுக்கு வந்தார். அவரிடமிருந்து ஒட்டகம் ஒன்றை அபூஜஹல் விலைக்கு வாங்கினான்.
அதற்கான தொகையை பின்பு தருவதாக் கூறி, அதை கொடுக்காமல் இழுத்தடித்தான். அவர், அது குறித்து முறையிடுவதற்காக
குறைஷிகளின் சபைக்கு வந்து, ( يَا مَعْشَرَ قُرَيْشٍ، مَنْ رَجُلٌ
يُعْدِينِي عَلَى أَبِي الْحَكَمِ بْنِ هِشَامٍ ; فَإِنِّي غَرِيبٌ وَابْنُ
سَبِيلٍ، وَقَدْ غَلَبَنِي عَلَى حَقِّي؟ ) "குறைஷிக் கூட்டத்தினரே! அபூஜஹ்லுக்கு எதிராக எனக்கு
உதவும் மனிதர் யார்? நான் வெளியூர்க்காரன; வழிப்போக்கன்; அவர் எனது உரிமையை வழங்காமல் என்னை ஏய்த்து வருகிறார்"
என்று கூறினார். ஆனால், அதை அவர்கள் கண்டுகொள்ளவில்லை. அப்போது கஅபாவின் ஒரு மூலையில்
அமர்ந்திருந்த கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களிடம் முறையிடுமாறு சொல்லப்பட்டது. அவரும்
நபியவர்களிடம் வந்து அபூஜஹ்ல் குறித்து முறையிட்டார்.
உடனே நபியவர்கள் அவருடன்
சேர்ந்து அபூஜஹ்லின் வீட்டிற்கு வந்து கதவைத் தட்டினார்கள். அபூஜஹல், வீட்டிற்குள் இருந்து
கொண்டே யார்? என கேட்டான். நபியவர்கள், ( مُحَمَّدٌ، فَاخْرُجْ ) "(நான்) முஹம்மத் (வந்திருக்கிறேன்).
வெளியே வா" என்றார்கள்.
வெளியே வந்த அவனுடைய
முகத்தில் மலர்ச்சி இல்லை. பயத்தால் நிறம் வெளிறிப் போயிருந்தது. நபியவர்கள், ( أَعْطِ هَذَا الرَّجُلَ حَقَّهُ ) "இந்த மனிதருக்கு கொடுக்க
வேண்டிய தொகையை கொடு" என்று கூறினார்கள். அபூஜஹ்ல்,
"இங்கேயே இருங்கள், உடனே கொடுத்து விடுகிறேன்"
என்று கூறி, வீட்டுக்குள் சென்று அம்மனிதருக்கு சேர வேண்டிய தொகையை எடுத்துக் கொண்டு வந்து
கொடுத்தான்.
நபியவர்கள், அந்த வியாபாரியிடம்
( الْحَقْ بِشَأْنِكَ ) "நீ உன்னுடைய காரியங்களை(யெல்லாம் முடிந்து கொண்டு உம்முடைய
ஊர்) போய் சேருவீராக!"என்று கூறிவிட்டு, வீடு திரும்பினார்கள்.
அந்த வியாபாரி குறைஷியரின்
சபைக்குச் சென்று, "அல்லாஹ் அந்த (முஹம்மத் என்ற) மனிதருக்கு நற்கூலி வழங்குவானாக!
(அவர் என் உரிமையைப் பெற்றுத்தந்தார்.) நான் எனக்குள்ளதை எடுத்துக் கொண்டேன்"
என்று கூறிவிட்டுச் சென்றார்.
இதையறிந்த குறைஷி
இறைமறுப்பாளர்கள் அபூஜஹ்லிடம், "உனக்கு என்ன ஆனது? ( مَا لَكَ؟ ! فَوَاللَّهِ مَا رَأَيْنَا
مِثْلَ مَا صَنَعْتَ؟
) "அல்லாஹ்வின் மீதாணையாக! உனக்கு என்ன ஆனது? நீ இதுபோல் நடந்து கொண்டதை நாங்கள் பார்த்ததில்லையே!" என்றனர். அதற்கு அவன்,
( وَاللَّهِ مَا هُوَ إِلَّا أَنْ ضَرَبَ
عَلَيَّ بَابِي، وَسَمِعْتُ صَوْتَهُ، فَمُلِئْتُ رُعْبًا، ثُمَّ خَرَجْتُ
إِلَيْهِ، وَإِنَّ فَوْقَ رَأْسِهِ لَفَحْلًا مِنَ الْإِبِلِ، مَا رَأَيْتُ مِثْلَ
هَامَتِهِ، وَلَا قَصَرَتِهِ، وَلَا أَنْيَابِهِ لِفَحْلٍ قَطُّ، فَوَاللَّهِ لَوْ
أَبَيْتُ لَأَكَلَنِي ) "அல்லாஹ்வின் மீதாணையாக! அந்த முஹம்மத் என் வீட்டுக் கதவைத் தட்டி, அவர் குரலை நான் கேட்டதும், பயத்தால் நடுநடுங்கிவிட்டேன்.
பின்பு வெளியே வந்தேன். அவரின் தலைக்கு மேல் முரட்டு ஆண் ஒட்டகம் ஒன்றிருந்தது. அந்தப்
பிராணிப் போன்றும், அதன் கழுத்துப் போன்றும், அதன் முன் பற்கள் போன்றும் வேறு எந்த ஆண் ஒட்டகத்திற்கும்
நான் பார்த்ததேயில்லை. நான் (கொடுக்க வேண்டிய கொடுக்காமல்) மறுத்திருந்தால் அந்த ஒட்டகம்
என்னை தின்றிருக்கும்" என்று கூறினான். நூல்:- தலாயிலுந் நுபுவ்வா-501 இமாம் பைஹகீ, அல்பிதாயா வந்நிஹாயா
அன்றைக்கு அரபு நாட்டின்
பல்வேறு பகுதிகளில் இருந்தும் வணிகர்கள் மக்காவுக்கு வியாபாரம் செய்ய வருவார்கள். காலையில்
வந்து வியாபாரம் செய்துவிட்டு, மாலையில் திரும்புகின்ற சூழ்நிலை அப்போது இல்லை. அவ்வாறு வருகிற
வெளியூர் வியாபாரியிடம் தான் மக்காவின் முக்கிய பிரமுகரான அபூஜஹ்ல் எவ்வாறு நடந்து
கொண்டான்.
இது குறித்து மற்றவர்கள்
அவனிடம் பேசத் தயங்கியபோது தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சென்று பாதிக்கப்பட்ட
வியாபாரியின் உரிமையைப் பெற்று தந்தார்கள். பிறருக்கு அநீதம் செய்கிறவர்கள் சமூகத்தில்
எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அவர்கள் தட்டிக் கேட்கப்பட வேண்டியவர்களே என்பதுதான்
நபியவர்களின் நிலைப்பாடு.
அநீதம் செய்த அபூஜஹ்லும்
முஸ்லிம் அல்லர். அநீதம் செய்யப்பட்ட வெளியூர் வியாபாரியும் முஸ்லிம் அல்லர். என்றாலும், யாரும் யாருக்கும்
அநீதமோ, தீங்கோ இழைக்கக்கூடாது.
அப்படி நடந்தால் அநீதம் இழைக்கப்பட்டவர்களின் சார்பில் நின்று உரிமையைப் பெற்றுத் தருவதில்
மதம், இனம் பார்க்காமல்
நபியவர்கள் முன்னணியில் நின்றார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்கள்
கூறியதாவது. ஒருமுறை யூதப் பெண் ஒருவள் எனது வீட்டிற்கு வந்து, தமக்கு ஏதேனும் தருமாறு
கேட்டாள். நான் அவளுக்கு என்னிடம் இருந்ததைக் கொடுத்து உதவினேன். அப்போது அவள், "அல்லாஹ் உங்களை மண்ணறை
வேதனையிலிருந்து பாதுகாப்பானாக" என்று பிரார்த்தித்துவிட்டுச் சென்றாள். நூல்:-
முஸ்னது அஹ்மத்
நாம் பிற சகோதர சமயத்தவர்களுக்கு
உதவும்போது அந்த உதவியைப் பெற்று அவர்கள் நமக்காக பிரார்த்தனை செய்தால் அந்தப் பிரார்த்தனையையும்
இறைவன் அங்கீகரிக்கக்கூடும்.
நாணயம்
ஒருமுறை பேராசான்
பெருமானார் (ஸல்) அவர்கள் ஸஃப்வான் (ரலி) அவர்களிடம், ( يَا صَفْوَانُ هَلْ عِنْدَكَ مِنْ سِلاَحٍ ) "ஸஃப்வானே! உம்மிடத்தில்
ஆயுதங்கள் ஏதேனும் உள்ளனவா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர்,
"இரவலாகவா? அல்லது வலுக்கட்டாயமாகவா?" என்று கேட்டார்.
நபியவர்கள், ( لاَ
بَلْ عَارِيَةً ) "(வலுக்கட்டாயமாக) இல்லை. மாறாக, இரவலாகவே கேட்கிறேன்"
என்றார்கள். அப்போது அவர், முப்பது முதல் நாற்பது போர் கவசங்களை நபியவர்களுக்கு இரவலாக
கொடுத்தார்.
நபியவர்கள் ஹுனைன்
போரில் கலந்து கொண்டார்கள். அதில் இணைவைப்பாளர்கள் தோல்வி அடைந்ததற்கு பிறகு, ஸஃப்வான் (ரலி) அவர்களிடம்
வாங்கிய கவசங்கள் தனியாக ஒன்று சேர்க்கப்பட்டன. அப்போது அவற்றில் சில கவசங்கள் தொலைந்து
விட்டதை அறிந்தார்கள்.
எனவே, நபியவர்கள் ஸஃப்வானிடம்
வந்து, ( إِنَّا قَدْ فَقَدْنَا مِنْ أَدْرَاعِكَ أَدْرَاعًا
فَهَلْ نَغْرَمُ لَكَ ) "நாங்கள் உமது கவசங்களில் சிலவற்றை தொலைத்து விட்டோம். (அதற்குப்
பகரமாக) உமக்கு (அதன் கிரயத்தை) இழப்பீடாக வழங்கட்டுமா?"
என்று கேட்டார்கள். அதற்கு
அவர், ( لاَ
يَا رَسُولَ اللَّهِ لأَنَّ فِي قَلْبِي الْيَوْمَ مَا لَمْ يَكُنْ يَوْمَئِذٍ ) "நாயகமே! வேண்டாம்.
ஏனெனில், இன்று எனது இதயத்தில்
(உங்களைப் பற்றி) இதற்கு முன் எப்போதும் ஏற்படாத நல்லெண்ணம் ஏற்பட்டுவிட்டது"
என்று கூறினார்.
அபூதாவூத் (ஆகிய நான்)
கூறுகிறேன். ஸஃப்வா (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்கும் முன்னரே நபியவர்களுக்கு இரவலாக
கவசங்களை வழங்கியிருந்தார். பின்னர் அவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். நூல்:- அபூதாவூத்-3093
அன்பளிப்பு
வழங்குதல், பெறுதல்
முஜாஹித்
(ரஹ்) அவர்கள் கூறியதாவது. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களுக்காக அவர்களின் குடும்பத்தில்
ஓர் ஆடு அறுக்கப்பட்டது. அம்ர் (ரலி) அவர்கள் (வீட்டுக்கு) வந்தபோது (தம் வீட்டாரிடம்)
நம் அண்டை வீட்டு யூதருக்கு இதில் அன்பளிப்புக் கொடுத்தீர்களா? என்று திரும்பத் திரும்ப
கேட்டார்கள்.
பின்னர் பேராசான்
பெருமானார் (ஸல்) அவர்கள், ( مَا
زَالَ جِبْرِيلُ يُوصِينِي بِالْجَارِ حَتَّى ظَنَنْتُ أَنَّهُ سَيُوَرِّثُهُ ) "அண்டை வீட்டார்
குறித்து என்னிடம் (வானவர்) ஜிப்ரீல் (அவ்வபோது) அறிவுறுத்திக்கொண்டேயிருந்தார். எந்த
அளவுக்கென்றால்,
(எங்கே) அவர் அண்டை வீட்டாரை (எனது சொத்தில் எனக்கு) வாரிசாக்கி
விடுவாரோ என்றுகூட நான் எண்ணினேன்' எனக் கூறியதை நான் கேட்டுள்ளேன்" என்றார்கள். நூல்:- அபூதாவூத்-4485, திர்மிதீ- 1866
"அண்டை வீட்டார்" என்ற சொல்லில் முஸ்லிம், சகோதர சமயத்தவர்கள் என அனைவரும் உள்ளடங்குவர்.
எனவே, சகோதர சமயத்தவர்கள் நமது அண்டை வீட்டாராக இருந்துவிட்டால் அவர்களுக்கு நமது
வீட்டு விஷேசம் மற்றும் பெருநாள்களின் போது அவர்களுக்கு உணவுகள் வழங்க
வேண்டும்.
அபூஹுமைத் (ரஹ்) அவர்கள்
கூறியதாவது. ( أَهْدَى
مَلِكُ أَيْلَةَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَغْلَةً
بَيْضَاءَ، وَكَسَاهُ بُرْدًا
) ‘அய்லா’வின் அரசர் நபிகள் பெருமானார் (ஸல்)
அவர்களுக்கு வெள்ளை நிறக் கோவேறுக் கழுதை ஒன்றை அன்பளிப்பாக வழங்கினார். அவருக்கு நபியவர்கள்
சால்வையொன்றை (அன்பளிப்பாக அனுப்பி) அணிவித்தார்கள். நூல்:- புகாரீ-2615
கைபர் போர் வெற்றி
பெற்ற நேரத்தில் ஸைனப் பின்த் ஹாரிஸ் என்ற யூதப் பெண்ணொருத்தி ஆட்டிறைச்சி சமைத்து
அருமை நாயகம் (ஸல்) அவர்களை விருந்துக்கு அழைத்தாள். நபியவர்கள் அவளின் விருந்து அழைப்பை
ஏற்றுக்கொண்டார்கள்.
ஒரு முஸ்லிம், சகோதர சமயத்தவர்களின்
அன்பளிப்பையும் விருந்தோம்பலையும் பெற்றுக்கொள்ளலாம் என
இந்நிகழ்ச்சி தெரிவிக்கிறது. ஆனால், அந்த உணவும் அதன் வருவாயும் ஹலாலானதாக இருக்க
வேண்டும்.
பாராட்டுதல்
உம்மு ஸலமா (ரலி)
அவர்கள் கூறியதாவது. நானும் எனது கணவர் அபூசலமா (ரலி) அவர்களும் மதீனாவிற்கு
புலம்பெயர்ந்து செல்லவேண்டும் என்றெண்ணி புறப்பட்டபோது பனூமுஙீரா குடும்பத்தினர் என்னை
அவர்களிடம் சிறைப்படுத்தி (தடுத்து) வைத்துக் கொண்டனர். என் கணவர் அபூசலமா (மட்டும்
தனியாக) மதீனாவிற்குச் சென்றார். எனவே, நான் இதை நினைத்து தினமும் அழுது கொண்டே இருந்தேன்.
அதனால் பனூமுஙீரா குடும்பத்தினர், "நீ விரும்பினால் உன் கணவருடன் சேர்ந்து இருந்து
கொள்!" என்று கூறினார். எனவே நான் மகிழ்ச்சியடைந்தவளாக நான் என் மடியில் என் குழந்தையை
அமர வைத்துக் கொண்டு ஒட்டகத்தில் பயணம் மேற்கொண்டு மதீனா நோக்கி புறப்பட்டேன். அப்போது
வேறு யாரும் என்னுடன் இருக்கவில்லை நான் தனியாகவே புறப்பட்டேன். நான் தன்யீம் எனும்
இடத்திற்கு வந்தேன்.
அப்போது உஸ்மான் பின்
தல்ஹா என்பவர், ( إِلَى أَيْنَ يَا ابْنَةَ أَبِي أُمَيَّةَ؟ ) "அபூ உமைய்யாவின் மகளே!
எங்கே செல்கிறாய்?" என்று வினவினார். ( أُرِيدُ زَوْجِي بِالْمَدِينَةِ ) “நான் மதீனாவில் இருக்கும் என் கணவரிடம் செல்ல
நாடுகிறேன்" என்றேன். அவர், ( أَوْ مَا مَعَكِ أَحَدٌ؟ ) "உன்னுடன் வேறு யாரும்
உள்ளனரா?" என்று வினவினார். நான், ( مَا مَعِي أَحَدٌ إِلَّا اللَّهُ وَابْنِي هَذَا ) "என்னுடன் அல்லாஹ்வும்
என் இந்த புதல்வரையும் தவிர வேறு யாருமில்லை" என்றேன். அப்போது அவர், ( وَاللَّهِ مَا لَكِ مِنْ مَتْرَكٍ ) "அல்லாஹ்வின் மீதாணையாக!
உங்களைப் போன்றோர் இப்படி தனிமையில் விடப்படுவது முறையன்று" கூறிவிட்டு, எனது ஒட்டகத்தின்
கடிவாளம் கயிற்றைப் பிடித்துக் கொண்டு தலை தாழ்த்தியவாறு என்னுடன் பயணத் துணையாக நடந்து
வந்தார்.
அவர் (வழியில்) தங்கும்
இடங்களை அடையும்போது ஒட்டகத்தை மண்டியிட்டு அமரச் செய்வார். பிறகு நான் இறங்கும் வரை
என்னிடமிருந்து அவர் (விலகி) தூரமாகச் சென்றுவிடுவார். நான் இறங்கியதும் அவர் என்
(ஒட்டகத்திடம் வந்து அதில் ஏறி) ஒட்டகத்துடன் தூரமாகச் சென்று அதிலிருந்து இறங்குவார்.
பிறகு அதனை ஒரு மரத்தில் கட்டுவார். பிறகு அவர் (வேறு) ஒரு மரத்திற்கு ஒதுங்கி அதன்
கீழ் படுத்துக்கொள்வார். பிற்பகல் நேரம் நெருங்கும்போது அவர், என் ஒட்டகத்தை நோக்கி
எழுந்து சென்று, பயணிப்பதற்காக அதனை என் முன்பாக கொண்டு வருவார். பிறகு என்னைவிட்டு தூரமாகச் சென்று
(நின்று கொண்டு வாகனத்தில்) "ஏறுவீராக" என்று கூறுவார். நான் ஏறி என் ஒட்டகத்தில்
சரியாக அமர்ந்ததும், அவர் வந்து ஒட்டகத்தின் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டு செல்வார்.
பிறகு அவர், நான் கீழே இறங்கும் வரை முன்னாலிருந்து ஒட்டகத்தைப் பிடித்துக் கொண்டு என்னை அழைத்துச்
செல்வார். என்னை மதீனாவில் கொண்டு சேர்க்கும்வரை இவ்வாறே என்னுடன் தொடர்ந்து மேற்கொள்பவராக
இருந்தார்.
(மதீனாவுக்கு சற்று
தூரத்தில் இருக்கும்) குபா பகுதியை அவர் கண்டபோது,
"(என்னிடம்) உன் கணவர் (தற்போது)
இந்த ஊரில் தான் இருக்கிறார். ஆகவே, இந்த ஊரில் நுழைந்துகொள்வீராக" என்று கூறினார்.
பிறகு அவர் மக்காவிற்குத் திரும்பிச் சென்று விட்டார். ( وَمَا رَأَيْتُ صَاحِبًا قَطُّ كَانَ أَكْرَمَ
مِنْ عُثْمَانَ بْنِ طَلْحَةَ ) “உஸ்மான்
பின் தல்ஹா அவர்களைவிடக் கண்ணியமான தோழரை ஒருபோதும் நான் கண்டதில்லை” .நூல்:- அல்பிதாயா
வந்நிஹாயா
இந்நிகழ்வு உஸ்மான்
பின் தல்ஹா அவர்கள் இறைமறுப்பாளராக இருந்தபோது நிகழ்ந்தது. உஸ்மான் பின் தல்ஹா அவர்கள்
இறைமறுப்பாளராக இருந்த போதும்கூட ஒரு அந்நியப் பெண்ணை ஏறெடுத்தும் பார்க்கக்கூடாது
என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார். இது அவருடைய ஒழுக்க மாண்பை பறைசாற்றுகிறது.
இவரின் ஒழுக்கம் மாண்பை
போற்றும் விதத்தில் தான் அன்னை உம்மு ஸலமா (ரலி) அவர்கள் "இவர் ஓர் கண்ணியமான
தோழர்" என்று மனதாரப் புகழ்ந்தார்கள்.
ஓர் இறைமறுப்பாளரிடம்
நற்பண்புகள் வெளிப்பட்டால் அவரை ஒரு முஸ்லிம் மனதார புகழவேண்டும். மேலும் அவருடன் நட்புறவு
மேற்கொள்ளலாம். உஸ்மான் பின் தல்ஹா (ரலி) அவர்கள் ஹுதைபிய்யா ஒப்பந்தத்திற்குப் பின்
முஸ்லிமானார்.
பணியாளராக
ஜனாதிபதி
உமர் (ரலி) அவர்களின் பணியாளர்களில் "அஸ்பக்" என்று ஒருவர் இருந்தார். அவர்
ஒரு கிறிஸ்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி
உஸ்மான் (ரலி) அவர்கள் ஒரு திம்மி கிறிஸ்தவருக்கு பயிற்சியளித்து தமது எழுத்தராக பணியில்
அமர்த்திக் கொண்டார்கள். நூல்:- ஃபுதூஹுல் புல்தான்
ஆட்சியாளர்
முஆவியா (ரலி) அவர்களின் அவையில் மிகுந்த செல்வாக்கு பெற்ற நபராக விளங்கியவர் இப்னுல்
ஆஸால். இவர் ஒரு கிறிஸ்தவர். முஆவியா (ரலி) அவர்களின் மருத்துவராக, மொழிபெயர்ப்பாளராக, ஹிம்ஸ் மாகாணத்தில் வருவாய்
ஆட்சியாளராக பல பொறுப்புக்களை அவர் செய்து வந்தார். நூல்:- உஸ்வத்துஸ் ஸஹாபா
சகோதர சமயத்தவர்களையும்
நமக்குரிய பணியாளராக நியமித்துக் கொள்ளலாம். அலுவலகப் பணி அல்லது வீட்டுப் பணி எதுவாக
இருந்தாலும் சரியே!
நிதியைப் பெறலாம்
கலீஃபா வலீத் பின்
அப்துல் மலிக் அவர்கள் காலத்தில் சிறியதாக இருந்த மஸ்ஜிதுந் நபவியை விரிவுப்படுத்த
எண்ணினார். இந்தச் செய்தி நாலாப்புறமும் பரவியது. இந்த செய்தியை செவியுற்ற ரோம்
நாட்டு மன்னர் கலீஃபா வலீத் அவர்களுக்கு "மஸ்ஜிதுந் நபவி பள்ளிவாசலை விரிவுபடுத்தும்
பணியில் பொருளாதார ரீதியாக நானும் உதவுகிறேன்" என்று கடிதம் எழுதினார். பிறகு
ரோம் மன்னர் ஒரு இலட்சம் பவுன்களையும், ரோம் நாட்டின் கட்டிடக்கலை நிபுணர்கள் 100 பேரையும் பள்ளிவாசலில் சுவர்களை அலங்கரிப்பதற்குரிய
பல வண்ணமயமான கற்களை 40 ஒட்டகைகள் சுமக்கும்
அளவிற்கு மிஸ்ரு நோக்கி அனுப்பி வைத்தார். கலீஃபா வலீத் அவர்கள் இவை அனைத்தையும் கட்டிடப்
பணியின் நிதியாக மதீனாவுக்கு அனுப்பி வைத்தார்.
மஸ்ஜிதுந் நபவி பள்ளிவாசலை
விரிவாக்கம் செய்ய ரோம் நாட்டு மன்னர் நிதி கொடுத்தபோது அதற்கு மதீனாவில் இருந்த எந்த
மார்க்க அறிஞர்களும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. அந்தச் சமயத்தில் மதீனாவின் ஆளுநராக இறையச்சம் மிகுந்த உமர் பின் அப்துல் அஜீஸ் (ரஹ்)
அவர்கள் தான் இருந்தார்கள். அதற்கு அன்னாரும்
எவ்வித ஆட்சேபனை தெரிவிக்கவில்லை.
பள்ளிவாசல், மதரசா, அனாதை இல்லங்கள் போன்ற பொதுச்சேவையை
மையமாகக் கொண்டு கட்டப்படும் கட்டட நிதிக்கு வசூலிக்கும்போது சகோதர சமயத்தவர்கள் அதற்காக
நிதி கொடுத்தால் அதையும் பெற்றுக்கொள்ளலாம். ரமளான் காலத்தில் நோன்புக்கஞ்சி
காய்ச்ச சகோதர சமயத்தவர்கள் அதற்காக
நிதி கொடுத்தால் அதைப் பெற்றுக்கொள்ளலாம். ஆனால், அந்த நிதி மார்க்கம் அனுமதிக்கப்பட்ட (ஹலாலான) வழிகளில் இருந்து வந்ததாக இருக்க
வேண்டும்.
கொடுக்கல் வாங்கல்
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் ஒரு யூதரிடம் உணவுப் பொருளை வாங்கினார்கள். (அதற்காக) தமது கவச ஆடையை அந்த யூதரிடம் அடமானம் வைத்தார்கள். நூல்:- புகாரீ-2513
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் தமது தோழர்களிடம் கடன் வாங்கி இருக்கலாம். அவர்களின் சிலர் செல்வந்தர்களாக இருக்கத்தான் செய்தனர். மேலும், அவர்களில் எவரும் நபியவர்களுக்கு கடன் தர இயலாது என்று கூறக்கூடியவர்கள் அல்லர். எனினும், நபியவர்கள் 'பிற சமயத்தினரிடம் கொடுக்கல் வாங்கல் செய்வது கூடும்' என தமது சமுதாயத்திற்கு தெரியப்படுத்த நாடினார்கள். அதற்காகத்தான் தாமே யூதரிடம் கடன் வாங்கினார்கள்.
பேரறிஞர் இமாம்
அபூஹனீபா (ரஹ்) அவர்களுக்கு கடன் பாக்கி வைத்திருந்த ஒரு யூதரின் வீட்டை இமாம் அவர்கள்
கடந்து செல்லும்போது அவர்களின் செருப்பில் அசுத்தமாகிவிட்டது.
அதை உதறும்போது, அதனுடைய ஒரு துளி அந்த யூதரின் வீட்டுச் சுவற்றின்மீது பட்டுவிட்டது. உடனே இமாம்
அவர்கள் மிகவும் கவலைப்பட்டவராக, இப்போது நான் என்ன செய்ய செய்வேன். அந்த அசுத்தத்தை நான் சுரண்டினால் அந்த வீட்டின் சுண்ணாம்பு மற்றும்
காரையின் சில பகுதிகளை நான் பெயர்த்தவனாக ஆகிவிடுவேன். (அந்தக் காலத்து வீடுகள் அந்த
அமைப்பில் தான் இருக்கும்) அதே வேளையில் அதை
நான் அப்படியே விட்டு விட்டால் அடுத்தவரின் வீட்டை அசிங்கப்படுத்திய குற்றம் என் மீது
வந்து விடுமே நான் என்ன செய்வது? என்று புலம்பிய
நிலையில் அவருடைய வீட்டுக் கதவை தட்டுகிறார்கள்.
அவரோ, இமாம் அவர்கள்
கடனை வசூல் செய்யத் தான் வந்துள்ளார் என்று எண்ணியவராக வேகமாக வந்து கதவைத் திறந்து,
“நீங்கள் சொல்லியிருந்தால் நான் வந்திருக்க மாட்டேனா?” என்றார். ஆனால், இமாம் அவர்கள், “நான் அதற்கு வரவில்லை; உங்கள்
வீட்டுச் சுவற்றை நான் இப்படி அசுத்தபபடுத்திவிட்டேன். அதை சுத்தம் செய்யும் வழியை
எனக்குக் கூறுங்கள்” என்று கூறினார்கள். உடனே, அவர் ஆச்சரியமடைந்தவராக “கொஞ்சம் இருங்கள். என்
வீட்டை நீங்கள் சுத்தம் செய்யும் முன்பு, நான் என் உள்ளத்தை சுத்தம் செய்ய வேண்டியுள்ளது” என்று கூறியவராக இஸ்லாத்தை ஏற்றார்.
நம்முடைய நட்பில்
உள்ள சகோதர சமயத்தவர்களில் சிரமப்படுவோருக்கு கடன் கொடுத்து உதவுவது மிகச் சிறந்த தர்மமாகும்.
அவ்வாறு கடன் வாங்கியவர் உரிய காலத்தில் கடனைத் திருப்பித் தர இயலாமல் சிரமப்பட்டால், அவருக்கு வட்டியில்லாமல் அவகாசம் அளிப்பது மிகவும் நன்மைக்குரிய
செயலாகும். வசதி படைத்தவர் கடன் வாங்கியிருந்தால், அவரிடம் நளினமாக நடந்து
கொள்வதும், ஏழையாக இருந்தால் கடனை தள்ளுபடி செய்துவிடுவதும்
சிறப்புக்குரிய நற்செயலாகும் என்கிறது இஸ்லாம்.
கடன்பட்டவருடன்
பண்பாகவும், கனிவாகவும் நடந்திட வேண்டும். அவரது
பலவீனத்தைப் பயன்படுத்தி இலாபம் பெறக்கூடாது. அவரது நிர்பந்த நிலையை அனுசரித்து
நடக்க வேண்டும். மேலும், முடிந்த அளவு அவருக்கு சலுகைகள், அவகாசங்கள்
அளிக்க வேண்டும். தகுதியானோருக்கு கடன் வழங்குவது ஓர் சமுதாயச் சேவை என்று உணர
வேண்டும்.
உரிமை வழங்குதல்
ஃபலஸ்த்தீனத்தில்
உள்ள ஜெருசலம் பகுதியில் ரோமர்களின் (கிறிஸ்தவர்களின்) காலத்தில் யூதர்களின் புனிதத்
தளத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு அந்த இடமே அடையாளம் தெரியாமல் போய்விட்டது. முஸ்லிம்கள்
அந்நகரை வெற்றி கொண்ட பிறகு ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களும் மற்ற முஸ்லிம்களும் யூதர்களின்
புனித பாறையின் மீது கொட்டப்பட்ட குப்பைகளை அப்புறப்படுத்தி அவ்விடத்தை சுத்தப்படுத்தினர்.
இதற்கு முன்பு குடியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த யூதர்களுக்கும் ஜனாதிபதி உமர்
(ரலி) அவர்கள் அந்நகரில் குடியேற அனுமதித்தார்கள்.
திட்டுதல் கூடாது
இறைநம்பிக்கையாளர்களே!
அல்லாஹ் அல்லாத எவற்றை அவர்கள் (இறைவன் என) அழைக்கின்றார்களோ அவற்றை நீங்கள் திட்டாதீர்கள்.
அதனால் அவர்கள் அறியாமையின் காரணமாக வரம்பு மீறி அல்லாஹ்வை திட்டுவார்கள். திருக்குர்ஆன்:- 6:108
சகோதர சமயத்தவர்களுக்கு ஏகத்துவத்தை எடுத்துரைக்கலாம். ஆனால், அவர்கள் வணங்கும்
கடவுள்கள் கற்சிலை, மரம், பாம்பு போன்ற (உயிரினங்கள்) எதுவாக இருந்தாலும் அவற்றை ஒரு முஸ்லிம்
திட்டுதல், விமர்சனம் செய்தல் தடுக்கப்பட்டிருக்கிறது. அவரவர் இறைநம்பிக்கை அவரவரைச்
சேர்ந்தது. இதில் முஸ்லிம்களுக்கு சகிப்புத்தன்மை வேண்டும்.
இது குறித்து, பேரறிஞர்
இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அவர்கள், அல்லாஹ்வை திட்டுவதற்கு முஸ்லிம்கள்
காரணமாக இருக்கக்கூடாது. எனவே, பெரிய தீமையைக் கருத்தில் கொண்டு ஒரு நன்மையைக் கைவிடலாம் என்பதை
இந்த திருவசனம் உணர்த்துகிறது.
முஸ்லிம்களாகிய நாம், சகோதர சமயத்தவர்களிடம் இஸ்லாம் கூறும் மாண்புகளைப் பேணி நடந்தால், அவர்கள் இஸ்லாத்தில் இணையக்கூடும் அல்லது முஸ்லிம்கள் மீது அவர்களுக்கு
நல்லெண்ணம் ஏற்படக்கூடும் என்றே வரலாறுகள்
கூறுகின்றன. எனவே, இது குறித்து நமக்கு கவனம் தேவை.
எனவே, சகோதர சமயத்தவர்களுக்கு
எல்லா வகையிலும் மதிப்பளித்து அவர்களுடன் நல்ல விதமாக
நட்புறவை பேணி வாழ்ந்து இறையருளைப் பெறுவோமாக! ஆமீன்!
மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951
No comments:
Post a Comment