உற்றுநோக்கு!
أَفَلَا يَتَدَبَّرُونَ الْقُرْآنَ أَمْ عَلَى قُلُوبٍ أَقْفَالُهَا
இவர்கள் இந்தக்
குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது இவர்களின் இதயங்கள் மீது பூட்டுகள்
விழுந்துள்ளனவா? திருக்குர்ஆன்:-47:24
இறைவனின் வேதமான
திருக்குர்ஆனை பார்த்தோ, பார்க்காமலோ ஓதுதல் நன்மைக்குரிய செயலாகும். ஆனால், அதை சிந்தித்தவாறு
ஓதுவதற்கு பன்மடங்கு நன்மைகள் உண்டு என்று இஸ்லாம் இயம்புகிறது.
பெரும் பாக்கியம் நிறைந்த திருக்குர்ஆனின் வசனங்களை மக்கள் சிந்திக்க வேண்டும்; அறிவுடையோர் இதிலிருந்து படிப்பினை பெற வேண்டும் என்று குர்ஆன் தன்னைப் பற்றிய நோக்கத்தை தெளிவுபடுத்துகிறது. எனவே, அரபுமொழி அறியாதவர்கள் அவ்வப்போது குர்ஆனின் மொழியாக்கத்தையும் வாசிக்க வேண்டும். அப்போது தான் குர்ஆன் என்ன சொல்கிறது என்று தெளிவாகும்.
நேர்வழி காட்டியாக
இருக்கும் குர்ஆன்படி செயல்படுவதற்கு அது கூறும் கருத்துக்களை விளங்க வேண்டும்; சிந்திக்க வேண்டும்.
உலகில் எழும் அனைத்து
பிரச்சினைகளுக்கும் திருக்குர்ஆனில் தீர்வு உண்டு. அதன் வசனங்கள் ஒவ்வொன்றையும் முறையாக
சிந்திப்பவர்கள் பிரச்சினைகளுக்குரிய தீர்வைக் கூறி, மக்களை ஆச்சரியத்திலும், ஆனந்தத்திலும் ஆழ்த்தி
விடுவார்கள்.
இறைநம்பிக்கையாளர்களுக்கு
(குர்ஆன்) நேர்வழி காட்டக்கூடியதாகவும் அருளாகவும் இருக்கிறது. திருக்குர்ஆன்:- 10:57
நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் கூறினார்கள். ( يَا أَهْلَ الْقُرْآنِ لَا تَتَوَسَّدُوا الْقُرْآنَ وَاتْلُوهُ
حَقَّ تِلَاوَتِهِ مِنْ آنَاءِ اللَّيْلِ وَالنَّهَارِ وَأَفْشُوهُ وَتَغَنُّوهُ
وَتَدَبَّرُوا مَا فِيهِ لَعَلَّكُمْ تُفْلِحُونَ ) குர்ஆனுடையவர்களே! குர்ஆனை தலையணையாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். மேலும், இரவு பகலாக உரிய முறையில் அதை ஓதி, அதன் கடமைகளை நிறைவேற்றுங்கள். இன்னும் அதை அழகிய தொணியில் ஓதுங்கள். அதனுடைய பொருள்களை
சிந்தனை செய்யுங்கள். நீங்கள் வெற்றி பெறுவீர்கள். அறிவிப்பாளர்:- உபைதா அல்மலைகீ
(ரலி) அவர்கள் நூல்:- ஷுஅபுல் ஈமான் இமாம் பைஹகீ , மிஷ்காத்
அப்துல்லாஹ் பின்
மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். கவிதைகள் மற்றும் உரைநடையை படிப்பதைப் போல் குர்ஆனை
ஓதாதீர்கள். அதனுடைய ஆச்சரியமான செய்தியை ஓதும்போது, ஓதுவதை நிறுத்தி அதன் மூலம் உள்ளங்களை சிந்திக்கத்
தூண்டிவிடுங்கள். உங்களுடைய முழு நோக்கமும் அத்தியாயத்தின் இறுதியை அடையவேண்டும் என்றாகிவிட
வேண்டாம். (அதாவது, அத்தியாயத்தை சீக்கிரம் முடிக்க வேண்டும் என்ற வேகத்தில் சிந்தித்து
விளங்கி ஓதுவதை விட்டு விடாதீர்கள்.)
பேரறிஞர் இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள், "இறுதிநாள் வரை மக்களுக்கு தேவையான அனைத்துப் பிரச்சனைகளுக்கும் குர்ஆனில் தீர்வு இருக்கிறது. ஆனால், அதை ஆராய்ந்தறியும் அறிஞர்கள் தாம் தேவை" கூறினார்கள்.
அழகிய முறையீடு
பேரறிஞர் ஷஅபி (ரஹ்) அவர்கள்
கூறியதாவது. ஒரு பெண் ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களின் சமூகத்திற்கு வந்து உலகத்திலேயே மிகச் சிறந்த மனிதரைப் பற்றி உங்களிடம்
முறையிட வந்துள்ளேன். அவரைப் போன்று நற்காரியங்கள் யாரும் செய்யமுடியாது. இரவெல்லாம் நின்று வணங்குகிறார் பகலெல்லாம் நோன்பு நோற்கிறார். என்று கூறினாள்.
பிறகு அவளை வெட்கம் மிகைத்தது. எனவே அதற்கு மேல் பேசாமல் ஜனாதிபதி அவர்களே! எனக்கு
என்ன பதில் சொல்கிறீர்கள்? என்று கேட்டாள். அப்போது உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ் உனக்கு
சிறந்த நற்கூலியை வழங்குவானாக! உனது கணவரைப் பற்றி மிக அழகிய முறையில் புகழ்ந்துரைக்கிறாய்!
இதுதான் எனது பதில்” என்று கூறினார்கள்.
உடனே அவர் திரும்பிச்
சென்று விட்டாள். பிறகு கஅப் பின் சூர் (ரலி) அவர்கள், “ஜனாதிபதி அவர்களே! அந்தப் பெண்
தனது கணவனை புகழ்ந்து கூறவில்லை. மாறாக, மிக அழகிய முறையில் முறையீடு செய்துள்ளாள்”
என்று கூறினார். (அதாவது, “அவளது கணவர் இரவு பகல் பாராமல் எல்லா நேரமும் இறைவழிபாட்டில்
ஈடுபடுகிறார். அவர் மனைவிக்கு செய்ய வேண்டிய கடமைகளை ஒழுங்காக நிறைவேற்றுவதில்லை என்று
சொல்ல நினைக்கிறாள்" என்று கூறினார்.) உமர் (ரலி) அவர்கள் அப்படியானால் அப்பெண்ணை
என்னிடம் அழைத்து வாருங்கள் என்று கூறிவிட்டு, அவளுடைய கணவரையும் கூப்பிட்டு அனுப்பினார்கள்.
அவ்விருவரும் வந்ததும் கஅப் (ரலி) அவர்களை நோக்கி, “அவ்விருவருடையே நீயே தீர்ப்பு செய்வீராக!”
என்றார்கள் அதற்கு அவர், “தாங்கள் இருக்கின்றபோது நான் தீர்ப்பு கூறுவதா?” என்று கேட்டார்.
உமர் (ரலி) அவர்கள், ( اقْضِ بَیْنَهُمَا اِنَّكَ قَدْ فَطِنْتَ اِلَی مَالَمْ اَفْطَنْ
لَّهُ ) “நான் புரிந்து
கொள்ளாத ஒரு விஷயத்தை நீர் புரிந்துகொண்டீர். அதனால், நீரே தீர்ப்பு வழங்குவீராக!”
உடனே கஅப் (ரலி) அவர்கள்
அல்லாஹ் ஒரு ஆணுக்கு அதிகபட்சமாக நான்கு பெண்களை மணமுடித்துக் கொள்ள அனுமதித்துள்ளான்.
(திருக்குர்ஆன்:- 4:3) இந்த வசனத்தின் பிரகாரம் இந்த பெண்ணின் கணவர் மூன்று நாட்கள்
இறைவணக்கத்தில் ஈடுபடலாம். ஆனால் நான்காவது நாள் கண்டிப்பாக இவர் தனது மனைவியோடு வந்து
தங்கியே ஆக வேண்டும் என்று தீர்ப்பளித்தார்கள்.
(இதன்படி ஒருவர் நான்கு
பெண்களை மணமுடித்தால் அவர் ஒவ்வொரு மனைவியிடமும் நான்கு நாட்களில் ஒரு நாள் தங்க வேண்டும்.
இதுவே ஒவ்வொரு மனைவியின் பங்கு-உரிமை என்று ஆகிறது என்று கஅப் (ரலி) அவர்கள் விளக்கமளித்தார்கள்.)
இந்த தீர்ப்பை செவியுற்ற
ஜனாதிபதி அவர்கள், ( لِهٰذَا اَعْجَبُ اِلَيَّ مِنَ الْاَوَّلِ ) “உன்னுடைய இந்த தீர்ப்பு, அப்பெண்ணின் வார்த்தையை முதலில் நீ புரிந்து கொண்டதைவிட அதிக ஆச்சரியமாகவும், அற்புதமாகவும் இருக்கிறது” என வியந்து பாராட்டி, கஅப் (ரலி) அவர்களை பசரா நகரின் நீதிபதியாக நியமித்தார்கள். நூல்:- அல்இஸ்தீஆப், இப்னு அபீஷைபா, ஹயாத்துஸ் ஸஹாபா 2/937
தவணைத் திருமணம்
அன்னை ஆயிஷா (ரலி)
அவர்களிடம் (முத்ஆ எனும்) தவணைத்
திருமணம் கூடாது என்பதற்கான ஆதாரம் குறித்து அன்னை அவர்களது மாணவர் ஒருவர் விசாரித்தார்.
ஆயிஷா (ரலி) அவர்கள் அது குறித்து வந்துள்ள பல்வேறு நபிமொழிகளைச் சுட்டிக்காண்பித்து
பதில் கொடுக்கவில்லை. மாறாக, உங்களுக்கு மத்தியில்
அல்லாஹ்வின் வேதம் இருக்கின்றது அல்லவா? என்றவாறு பின்வருமாறு
இறை வசனங்களை ஓதினார்கள்.
அவர்கள் தங்கள் மர்மஸ்தானத்தை
(விபச்சாரத்திலிருந்து) காப்பாற்றிக் கொள்வார்கள். எனினும், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ
அல்லது தங்கள் வலதுகரம் சொந்தமாக்கிக் கொண்ட (அடிமைப்) பெண்களிடமோ (சேர்வதில்) நிச்சயமாக
(அவர்கள் குற்றவாளிகளாக மாட்டார்கள். ஆகவே, இவ்விஷயத்தில்) அவர்கள் நிந்திக்கப்பட மாட்டார்கள். திருக்குர்ஆன்
: 23:5,6
ஆகையால் இவ்விரு வடிவங்களைத்
தவிர வேறு எந்த வடிவமும் முறையானதல்ல என்று கூறினார்கள். நூல்:- இஸாபா, ஹாகிம்
(முத்ஆ எனும்) தவணைத்
திருமணம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சில நலன்களைக் கருத்தில் கொண்டு முதலில்
அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதாவது, வெளியூர் செல்லும்
ஒருவர் அங்கு இருக்கும் காலம் வரை ஒரு பெண்ணை ஒரு தொகைக் கொடுத்து மணந்துகொள்வார்.
அப்பெண்ணிடம் தங்கிக் கொள்வார். அப்பெண் அவருக்கு உணவு சமைப்பது உள்ளிட்ட சேவைகளை செய்வார்.
அந்தக் குறிப்பிட்ட காலம் முடிந்தவுடன் அவர்களிடையே எந்த உறவும் இருக்காது. இதுவே தவணைத்
திருமணம் ஆகும்.
நபியவர்கள் பிற்காலத்தில் இந்த திருமண முறையை தடைசெய்து விட்டார்கள். (முஸ்லிம்-2727, 2729) ஆனால், அது காலாவதியானது தெரியாமல் பலர் தவணைத் திருமணம் செய்து வந்தனர். இந்த நிலை ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் காலம் வரை நீடித்தது.
உமர் (ரலி) அவர்கள் தமது ஆட்சியின்போது தவணைத் திருமண விஷயத்தில் கருத்து வேறுபாடு நிலவுவதை கண்டார்கள். மக்கள் முன்னிலையில் தவணைத் திருமணம் கூடாது. அது காலாவதியாகிவிட்டது என்பது குறித்து அதற்குரிய ஆதாரங்களை விவரித்தார்கள். மேலும், இனி தவணைத் திருமணம் செய்வோர் தண்டிக்கப்படுவர் என்று எச்சரிக்கவும் செய்தார்கள். நூல்:- ஃபத்ஹுல் பாரீ
அந்த சூழ்நிலை தான்
மேற்கண்ட நிகழ்வு நடைபெற்றது. ஆயிஷா (ரலி) அவர்கள்
தவணைத் திருமணம் குறித்து பல்வேறு நபிமொழிகளை எடுத்துரைத்து, கருத்து வேறுபாடுகள் நிலவுவதைவிட திருக்குர்ஆன்
வசனங்களைக் கூறி தவணை திருமணம் கூடாது என்பதற்கு தக்க ஆதாரம் கூறி முடிவு கட்டினார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்கள்
தவணைத் திருமணம் செய்து கொள்ளப்பட்ட பெண், மனைவியாகவும் இல்லை; அடிமையாகவும் இல்லை என்பது தெளிவு. ஆகையால், இவ்வகை திருமணம் கூடாது என்று விவரித்தார்கள்.
ஆனால், இன்றுவரை (முத்ஆ எனும்) தவணைத் திருமணம் ஷீஆக்களிடம் நடைமுறையில் இருக்கிறது. இது விபச்சாரமேமின்றி வேறில்லை.
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரக்கூடிய ஷிஆக்கள் ஹைதராபாத் போன்ற நகரங்களுக்குச் சென்று அங்குள்ள புரோக்கர்கள் மூலம் பெண் பேசி, தவணைத் திருமணம் செய்து கொள்கிறார்கள். அவர்கள் தாயகம் செல்லும்போது அப்பெண்களுக்கு ஏதேனும் ஒரு குறிப்பிட்ட தொகையைக் கொடுத்துவிட்டுச் செல்கிறார்கள் என்பது தகவல். அல்லாஹ்வே அறிந்தவன்.
ஆறு மாதங்களிலும்
குழந்தை பிறக்கலாம்
முஅம்மர் பின் அப்தில்லாஹ்
(ரலி) அவர்கள் கூறியதாவது. எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மனிதன் ஜுஹைனா குலத்தின்
பெண்மணி ஒருத்தியைத் திருமணம் செய்தான். ஆறு மாதங்கள் முடிந்தபோது அவள் அவனுக்கு குழந்தையைப்
பெற்றெடுத்தாள். ஜனாதிபதி உஸ்மான் (ரலி) அவர்களிடம் அம்மனிதன் சென்று, (ஆறு மாதத்திலேயே தம்
மனைவி) குழந்தை பெற்றெடுத்த விவரத்தைக் கூறி முறையிட்டான். உஸ்மான் (ரலி) அவர்கள் அந்தப்
பெண்ணை அழைத்து வரும்படி ஆணையிட்டார்கள். அந்தப் பெண் (புறப்படுவதற்காக) ஆடைகளை அணிய
முற்பட்டபோது அவளுடைய சகோதரி அழுகிறாய்.
அந்தப் பெண், "அல்லாஹ்வின் படைப்பினங்களிலிருந்து
என் கணவரைத் தவிர வேறு யாரும் ஒருபோதும் என்னுடன் வீடுகூடியதில்லை. எனவே, உயர்வுமிக்க அல்லாஹ்
என் விஷயத்தில் எதை நாடினானோ அதனைத் தீர்ப்பளிக்கும்" என்று கூறினாள்.
உஸ்மான் (ரலி) அவர்கள்
அந்தப் பெண்மணியைப் பார்த்தபோது அவளைக் கல்லெறிந்து கொல்லவேண்டும் என கட்டளையிட்டார்கள்.
அந்தச் செய்தி (அறிவுச் சுரங்கம்) அலீ (ரலி) அவர்களிடம் வந்தது. உடனே அவர்கள் உஸ்மான்
(ரலி) அவர்களிடம் வந்து, "இவள் செய்தது என்ன?" என்று கேட்டார்கள். அதற்கு உஸ்மான் (ரலி) அவர்கள்,
( وَلَدَتْ تَمَامًا
لِسِتَّةِ أَشْهُرٍ، وَهَلْ يَكُونُ ذَلِكَ؟ ) "ஆறு மாதங்கள் நிறைந்தவுடனே இவளுக்குக் குழந்தை பிறந்துள்ளது.
அது எப்படி நிகழமுடியும்" என்றார்கள்.
அலீ (ரலி) அவர்கள்
உஸ்மான் (ரலி) அவர்களிடம், ( أَمَا تَقْرَأُ
الْقُرْآنَ؟ ) "நீங்கள் குர்ஆனை ஓதவில்லையா? என்று கேட்டார்கள். உஸ்மான் (ரலி) அவர்கள், "ஆம், ஓதியிருக்கிறேன்"
என்றார்கள்.
அலீ (ரலி) அவர்கள், ( أَمَا سَمِعْتَ اللَّهَ يَقُولُ: ﴿وَحَمْلُهُ وَفِصَالُهُ
ثَلاثُونَ شَهْرًا﴾ وَقَالَ: ﴿حَوْلَيْنِ
كَامِلَيْنِ﴾، فَلَمْ نَجِدْهُ بَقَّى إِلَّا سِتَّةَ أَشْهُرٍ ) "அல்லாஹ் கூறியிருப்பதை நீங்கள் செவியுற்றதில்லையா? அவனைக் கருவில் சுமந்ததும்
அவனுக்குப் பாலுட்டலை நிறுத்தியதுமான காலம் முப்பது மாதங்கள் ஆகும். (திருக்குர்ஆன்:-46:15) வேறு வசனத்தில், முழுமையாக இரண்டு
ஆண்டுகள் பாலூட்ட வேண்டும் (திருக்குர்ஆன்:-31:14) என்றும் கூறியிருக்கின்றானே! எனவே, (முப்பது மாதங்களில்
இரண்டு ஆண்டுகளைக் கழித்தால் பிறகு) ஆறு மாதங்களைத் தவிர வேறு நாட்கள் எதுவும் மீதி
இருப்பதாகத் தெரியவில்லையே" என்று விவரித்தார்கள். அறிவிப்பாளர் கூறுகிறார்: உஸ்மான்
(ரலி) அவர்கள் அல்லாஹ்வின் மீதாணையாக! இந்தக் கருத்தை நான் கூர்ந்து கவனிக்கவில்லையே!
எனவே அந்தப் பெண்ணை என்னிடம் அழைத்து வாருங்கள்" என்று கூறினார்கள். ஆனால், (அவளை அழைத்து வரச்
சென்ற) அதிகாரிகள் கல்லெறிந்து கொல்லும் தண்டனை அவளுக்கு நிறைவேற்றி முடிக்கப்பட்டிருப்பதைக்
கண்டனர்.
அறிவிப்பாளர் கூறுகிறார்:
அல்லாஹ்வின் மீதாணையாக! ஒரு காகம் மற்றொரு காகத்துடன்
ஒத்திருப்பதைப் போன்று அந்த பெண்ணுக்குப் பிறந்த குழந்தை அதன் தந்தையுடன் மிகவும் ஒத்திருந்தது.
(அவ்வளவு ஒப்பாக இருந்து) அந்தக் குழந்தையை அதன் தந்தை பார்த்தபோது, "அல்லாஹ்வின் மீதாணையாக!
இவன் என் குழந்தைதான் இதில் எனக்கு எந்த ஐயமுமில்லை" என்று கூறினார். நூல்:- தஃப்சீர் இப்னு அபீ ஹாத்தம், தஃப்சீர் இப்னு கஸீர்
அல்அஹ்காஃப் வசனம்-15, தஃப்சீர் துர்ருல் மன்ஸூர், தஃப்சீர் அத்தஹ்ரீர் வத்தன்வீர்
சொர்க்கவாசி? அல்லது நரகவாசியா?”
கலீஃபா ஹாரூன் அல்ரஷீத்
(ரஹ்) அவர்கள் பேரறிஞர் இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்களிடம், “நான் சொர்க்கவாசி? அல்லது நரகவாசியா?” என்று வினவினார். அதற்கு இமாமவர்கள் கலீஃபா நோக்கி, "நீங்கள் பாவம் செய்யும்
சந்தர்ப்பம் கிடைத்தும் அல்லாஹ்வுக்கு அஞ்சி அதை செய்யாமல் விட்டதுண்டா?"
கலீஃபா, “ஆம்! ஒருமுறை நான்
ஒரு பெண்மீது வெகு நாள்களாக ஆசை கொண்டிருந்தேன். அவளுடன் உறவு கொள்வதற்கும் முயற்சித்தேன்.
அவள் எனக்கு இடம் தராமல் விலகிக்கொண்டே இருந்தாள். ஒரு நாள் இரவில் அவள் தனிமையில்
இருந்தாள். இந்த நேரத்தைப் பயன்படுத்தி அவளை நெருங்கினேன். அவளும் தடை சொல்லவில்லை.
அப்போது எனது மனசாட்சி 'ஹாரூனே! நீ மக்களை ஆளும் மன்னனாக இருந்துகொண்டு இந்த
தவறான காரியத்தைச் செய்யலாமா? மறுமைநாளில் அல்லாஹ்விடம் இதற்கான கேள்வி உண்டு என்பதை மறந்துவிட்டாயா?' என்று பேச ஆரம்பித்தது. அப்போது அல்லாஹ்வுக்கு பயந்து அந்தப் பெண்ணை விட்டும் விலகிவிட்டேன்" என்று கூறினார். இமாமவர்கள், "கலீஃபாவே! நீங்கள் சொர்க்கவாசி தான்" என்று
கூறி விட்டு, கீழ்காணும் (79:40,41) திருவசனங்களை ஓதிக்காட்டினார்கள்.
“எவன் தன் இறைவனின்
சந்நிதியில் (விசாரணைக்காக) நிற்பதைப் (பற்றிப்) பயந்து,
(தப்பான) சரீர இச்சையை விட்டுத்
தன்னைத் தடுத்துக்கொண்டானோ அவன் செல்லுமிடம் நிச்சயமாகச் சொர்க்கம் தான்.” (திருக்குர்ஆன்:-
79:40,41)
தாய்ப்பாலில்
ஆய்வு
ஃபிரான்ஸ் நாட்டு மருத்துவமனையில் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களுக்கு குழந்தை பிறந்தது. ஒன்று ஆண், மற்றொன்று பெண். செவிலியரின் கவனக்குறைவால் குழந்தைகள் மாறிவிட்டன. ஆண்குழந்தை தன்னுடையதுதான் என்று இரண்டு பெண்களும் வாதிட்டனர்.
அங்கு பணிபுரியும்
முஸ்லிம் மருத்துவரிடம் சக மருத்துவர்கள், எல்லாவற்றிருக்கும் குர்ஆனில் தீர்வு இருக்கிறது
என்று சொல்வாயே?? இதற்கு குர்ஆன் சொல்லும் தீர்வு என்ன? என்று கிண்டலாக கேட்டனர்.
அந்த முஸ்லிம் மருத்துவர்
எகிப்தில் உள்ள அல்அஜ்ஹர் பல்கலைக்கழக மார்க்க அறிஞர்களிடம் வினவினார். அதற்கு அறிஞர்
பெருமக்கள், “அந்நிஸா அத்தியாயத்தில் இதற்கான விடை இருக்கிறது ஆராய்ந்து பாருங்கள்” என்று சொன்னார்கள்.
மருத்துவர் ஆராய்ந்து
பார்த்தபோது, “ஓர் ஆணுக்கு இரண்டு பெண்களின் பாகத்திற்குச் சமமானது கிடைக்கும் என உங்கள் பிள்ளைகள்
விஷயத்தில் உங்களுக்கு அல்லாஹ் அறிவுறுத்துகிறான்.” (திருக்குர்ஆன்:- 4:11) எனும் திருவசனத்தை
கவனத்தில்கொண்டு அதற்கேற்ப இரண்டு பெண்களின் தாய்ப்பாலின் மாதிரியை எடுத்து ஆராய்ச்சி
செய்தார்.
அவர்களில் ஒரு பெண்ணுடைய
தாய்ப்பாலின் எடை மற்றும் கொழுப்பு சக்தி மற்றொரு பெண்ணுடைய தாய்ப்பாலின் எடையைவிட
இரண்டு மடங்கு அதிகமாக இருப்பதை கண்டுப்பிடித்தார்.
அதனடிப்படையில் எந்த
பெண்ணுடைய தாய்ப்பாலிலுள்ள எடை மற்றும் கொழுப்பு சக்தி அதிகம் உள்ளதோ அவள்தான், ஆண்குழந்தையைப்
பெற்றெடுத்துள்ளாள் என்று முடிவெடுத்தார்.
அண்மைக் கால ஆராய்ச்சிகளும் இதை உறுதிபடுத்துகின்றன. இந்த தகவலின் விஞ்ஞானக் கருத்தை உறுதிப்படுத்த விரும்புவோர் சர்வதேச இணையத்ததளமான www.Wikipedia.org ல் "ஆண், பெண் குழந்தைகளின் தாய்ப்பாலுக்கு இடையிலான வித்தியாசம்" எனும் கருத்தைத் தேடி உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
கிருஸ்த்துவப் பிரச்சார பீரங்கி
கனடா நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவ பிரச்சார பீரங்கி டாக்டர் கேரி மில்லர் (Dr.Gary H.Miller) பைபிளை கரைத்துக் குடித்தவர். அதே நேரத்தில் கணக்குப் பிரியர். இதனால் எதையும் தர்க்க ரீதியாக அணுகுவதையே விரும்புவார்.
ஒருநாள் இவர் திருக்குர்ஆனை வாசிக்க நினைத்தார். அவரது எண்ணமெல்லாம் குர்ஆனில் தவறுகளை கண்டுபிடிக்க வேண்டும் முஸ்லிம்களை கிறிஸ்தவ மதத்திற்கு அழைக்க இந்த தவறுகள் நமக்கு உதவும் என்பதுதான். 14 நூற்றாண்டுகளாக ஓதப்பட்டு வரும் ஒரு பழைய நூலில் என்ன இருந்து விடப் போகிறது? பாலைவனம் பற்றியும், அது போன்ற செய்திகள் பற்றியுமே, அது பேசும் என்பதே அந்த கணக்கரின் கணக்காக இருந்தது.
ஆனால், என்ன வியப்பு! உலகத்தில் வேறு எந்த நூலிலும் காணக் கிடைக்காத அற்புத தகவல்களை குர்ஆனில் கண்ட கேரி மில்லர் திகைப்பின் உச்சிக்கே சென்றுவிட்டார். கேரி மில்லரை யோசிக்க வைத்த பல நிகழ்வுகள் குர்ஆனில் இடம் பெறுகின்றன. அவற்றை "அற்புதங்கள்" என்கிறார்.
அவற்றில் ஒன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தந்தையின் சகோதரர் அபூலஹப் தொடர்பான நிகழ்ச்சி. அல்லாஹ்வின் தூதர் அருமை நாயகம் (ஸல்) அவர்களின் ஒவ்வொரு செயலையும் மறுப்பதே அபூலஹபின் வேலை. இறப்பதற்கு பத்து ஆண்டுகளுக்கு முன்பே அவரைச் சபிக்கும் (111 வது 'தப்பத்') அத்தியாயம் ஒன்று அருளப்பட்டிருந்தது. அபூலஹப் நரகம் செல்வான் என அந்த அத்தியாயம் வெளிப்படையாகவே கூறுகிறது.
அபூலஹப் நினைத்திருந்தால் குர்ஆனைப் பொய்யாக்க ஒரே ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம். அதுதான் கலிமா. கலிமாவை சொல்லி வெளிப்படையிலேனும் தன்னை அவன் முஸ்லிமாக காட்டிக் கொண்டு, அதன் மூலம் (தான் நரகவாதி என்ற) குர்ஆனின் கூற்றை பொய்யாக்கி இருக்கலாம். ஆனால், அவன் அப்படிச் செய்யவில்லை. ஏனெனில், குர்ஆன் இறைவனின் வார்த்தைகள். அதில் உள்ள எந்த வசனமும் முரண்படாது என்பதை உணர்ந்து, இந்த குர்ஆன் இறைவனின் வார்த்தைகள் என்று உளமாற நம்பி, இஸ்லாத்தைத் தழுவினார். அல்ஹம்துலில்லாஹ்.
ஃபிர்அவ்னின் உடல்
1981-ல் ஃபிரான்ஸிஸ் மித்ரான் ஃபிரான்ஸ் நாட்டின் அதிபரானபோது, உலகின்
மிகக்கொடிய கொடுங்கோல் அரசன் என்று கூறப்பட்ட 'பாரோஹ்' என்ற ஃபிர்அவ்னின் சடலத்தை பகுப்பாய்வு
செய்வதற்காக தம்மிடம் ஒப்படைக்குமாறு எகிப்திய அரசாங்கத்திடம் வேண்டிக்கொண்டார்.
இவ்வேண்டுகோளுக்கிணங்க
ஃபிர்அவ்னின் உடல் விமானம் மூலமாக ஃபிரான்ஸின் ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி
வைக்கப்பட்டபோது, அவ்விமானத்தை வரவேற்பதற்காக ஃபிரான்ஸின் அதிபர் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள்
அனைவரும் விமான நிலையத்தில் காத்திருந்து, அரச வரவேற்பளித்த பின்னர் ஃபிர்அவ்னின் உடல்
ஆய்வகம் நோக்கிக் கொண்டு செல்லப்பட்டது.
அதன் பின் அந்த
மம்மி ஆய்வுக்கூடத்தின் ஒரு பிரத்தியேக பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு விஞ்ஞானி
மாரிஸ் புகைல் (Dr. Maurice Bucaille) தலைமையில் பல்வேறு தொல்லியல் மற்றும்
உடற்கூறியல் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டது. தொல்பொருள் ஆய்வாளர்கள், அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் என ஆரய்ச்சிக்குத் தேவையானவர்கள்
அனைவரும் ஆய்வகத்திலே குழுமி, ஃபிர்அவ்ன் எப்படி மரணமடைந்தான் என்பது பற்றிய தகவல்களை
கண்டுபிடிப்பதற்காக ஆய்வாளர்கள் பெரும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
இறுதியாக
அன்றிரவு விஞ்ஞானி மாரிஸ் புகைல், ஃபிர்அவ்னின் உடல் கடலுக்குள்ளிருந்து வெளியெடுக்கப்பட்டவை
தொடர்பாகவும் அவ்வுடல் கடலுக்கடியிலே பாதுகாக்கப்பட்டிருந்தவை தொடர்பாகவும் தனது
ஆய்வின் இறுதி அறிக்கையைத் தயாரித்தார்.
அப்போது
வெளியிடப்பட்ட விஞ்ஞானிகளின் அறிக்கையில்:”உடலில் உப்பு படிந்திருப்பதானது, ஃபிர்அவ்ன்
கடலில் மூழ்கி மரணமடைந்துள்ளமைக்கான சிறந்த சான்றாகும் என்றும் ‘பாரோஹ் (ஃபிர்அவ்ன்)
உயிர் பிரிந்தவுடன் உடல் மட்டும் ஏதோ ஒரு புதிய முறையில் பதப்படுத்தப்பட்டு
பாதுகாக்கப்பட்டிருக்க வேண்டும்” என்றும்
வெளியிட்டனர்.
கடலுக்கடியிலிருந்து
வெளியெடுக்கப்பட்டிருந்தாலும் (அதே போன்று கடலிலிருந்து கண்டெடுக்கப்பட்ட) மற்ற
உடல்களைவிட இந்த உடல் மட்டும் பழுதடையாமல், எந்த பாதிப்புக்களும் ஏற்படாமல், எவ்வித
சிதைவுமில்லாமல் இத்தனை காலம் இருந்தது, டாக்டர். மாரிஸ் புகைலுக்கு பெரும் ஆச்சரியமாக
இருந்தது.
அப்போது
அங்கிருந்த சக விஞ்ஞானி ஒருவர் 'முஸ்லிம்கள் இந்த மம்மியின் மரணம் பற்றி தங்கள் வேதப்
புத்தகத்தில் (புனித அல்-குர்ஆனில்) கூறப்பட்டுள்ளது என்று ஏதோ கூறுகிறார்கள்' என்று கூறினார்.
மாரிஸ் புகைல்
அவர்கள் அந்த நபர் சொன்ன இத்தகவலை ஏற்கவில்லை. “இன்றைய விஞ்ஞான வளர்ச்சியும், உயர் தொழில்நுட்ப
ஆய்வுக்கூடம் மற்றும் கம்ப்யூட்டர்கள் துணையும், நாம் கையாண்ட உத்திகளும் இல்லாமல் இதை யாரும்
கூறமுடியாது” என்றார்.
ஆனால் இன்னொரு சக
விஞ்ஞானியோ, “ஃபிர்அவ்ன் மூழ்கடிக்கப்பட்டதாகவும், மூழ்கடிக்கப்பட்ட பின் அவனின் உடல்
பாதுகாக்கப்படும் எனவும் முஸ்லிம்களின் குர்ஆனில் கூறப்படுகின்றதே” என்று கூறினார்.
இச்செய்தியைக்
கேள்வியுற்ற மாரிஸ் புகைல் வியப்பில் ஆழ்ந்தார். “இது எப்படி சாத்தியமாகும்? 200 ஆண்டுகளுக்கு
முன் (1898-ல் தான்) கண்டெடுக்கப்பட்ட ஒரு உடலைப்பற்றி, 1400 ஆண்டுகளுக்கு முன்னரே முஸ்லிம்களிடம்
இருக்கின்ற குர்ஆன் எவ்வாறு விவரிக்க முடியும்? எகிப்தியப் பழங்குடி மக்கள் தமது மன்னர்கள்
இறந்தப் பின் அவர்களின் சடலங்கள் கெட்டுவிடாமல் இருப்பதற்காக ஒரு வகை மருத்துவ
முறையியைப் பயன்படுத்தியுள்ளார்கள் என்ற செய்தி சில பத்தாண்டுகளுக்கு முன்னர்தான்
அரேபியர் உட்பட அனைவருக்கும் தெரிய வந்தது? 1400 ஆண்டுகளுக்கு
முன்னர் முஸ்லிம்களுக்கு இந்த மம்மி பற்றிய தகவல் தெரிவதற்கு வாய்ப்பில்லாதபோது
இது எப்படி அவர்களுக்கு சாத்தியமாயிற்று?” என்று அங்கு
கூடியிருந்தவர்களிடம் வினவ ஆரம்பித்தார்.
பின்னர் உடலைப்
பாதுகாப்பாக வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. விஞ்ஞானி மாரிஸ் புகைல் அன்றைய
இரவு ஃபிர்அவ்னின் உடலுக்கு முன்னாலிருந்து அதை ஆழமாக கூர்ந்து ஆய்வு செய்யத் தொடங்கினார்.
முஸ்லிம்களின் அல்குர்ஆன் இந்த மம்மியைப் பற்றிப் பேசுகின்றது என்று அந்த நபர்
சொன்ன தகவலை சிந்தித்து, “இதோ என் முன் வைக்கப்பட்டிருப்பதுதான் மோஸசை (மூஸாவை)
விரட்டிச் சென்றவனின் உடலா? இது இவ்வாறு பாதுகாக்கப்படும் என்பதை முஸ்லிம்களின் தலைவர்
முஹம்மத் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே அறிந்திருப்பாரோ?” போன்ற வினாக்கள்
அவருள் எழுந்தது.
மாரிஸ் தன்
தூக்கத்தை தொலைத்தார். பைபிளைக் கொண்டுவரச் சொல்லி அதன் பக்கங்களை புரட்டினார்.
"பாரோஹ்வும் அவன் சேனைகளும் கடலில் மூழ்கி மாண்டனர். அவர்களில் எவரும் உயிர்
பிழைத்தாரில்லை" என்று மட்டுமே அதில் இருந்ததையும் பாரோஹ்வின் உடல் அழியாமல்
பாதுகாக்கப்பட்ட விவரம் அதில் இல்லாதிருப்பதையும் கண்டு, மாரிஸ் அதிர்ச்சிக்குள்ளானார். பரிசோதனை
முடிந்ததும் ஃபிர்அவ்னின் உடல் எகிப்திய அரசிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டது.
ஆனால் மாரிஸ்
புகைல் மட்டும் ஓயவில்லை. இந்த மம்மி பாதுகாக்கப்படும் என்ற விவரங்களை முஸ்லிம்கள்
ஏற்கனவே அறிவார்கள் என்ற உண்மை அவரை ஓய விடவில்லை! இதுபற்றி அறிவதற்காக முஸ்லிம்
அறிஞர்களைச் சந்தித்துக் கலந்துரையாட இஸ்லாமிய நாடுகளுக்குப் பயணமாகத்
தொடங்கினார். எகிப்தின் உடற்கூறியல் முஸ்லிம் விஞ்ஞானிகளுடன் ஒரு சந்திப்பை
ஏற்படுத்தி, பாரோஹ்வின் உடல் இறப்புக்குப் பின் புதிய முறையில் பாதுகாக்கப்பட்டிருக்கிறது
என்ற தமது கண்டுபிடிப்பைப் பற்றி விவாதித்தார். அப்போது சபையிலிருந்த ஒரு முஸ்லிம்
விஞ்ஞானி அமைதியாய் எழுந்து திருக்குர்ஆனின் யூனுஸ் அத்தியாயத்தில் இடம்
பெற்றிருக்கும் கீழ்க்காணும் வசனத்தை ஓதிக் காண்பித்தார்.
எனினும், உனக்குப்
பின்னுள்ளவர்களுக்கு ஒரு அத்தாட்சியாவதற்காக உன்னுடைய உடலை (அது அழியாமல்) நாம்
இன்றைய தினம் பாதுகாத்துக் கொள்வோம்"
(என்று கூறினோம்.) எனினும், நிச்சயமாக மனிதர்களில் பலர் நம்முடைய (அத்தகைய)
அத்தாட்சிகளைப் பற்றியும் பராமுகமாயிருக்கின்றனர். திருக்குர்ஆன்:- 10:92
இந்த வசனத்தைப்
படித்த மாரிஸ் புகைல் உறைந்துபோய் எழுந்து நின்றார். தமது வேதமான பைபிள் கூறியதை
குர்ஆனின் கூற்றோடு கவனமாக ஒப்பிட்டு, “பாரோஹ்” கடலில் மூழ்கடிக்கப்பட்டதைப் பற்றி மட்டுமே பைபிள்
கூறுவதையும், குர்ஆன் அவனுடைய மரணத்தையும் மரணத்திற்கு பின் அவன் உடல் பாதுகாக்கப்படுமென்று
கூறுவதையும் அறிந்து பிரமித்தார்.
அந்த குர்ஆன்
வசனம் மாரிஸ் புகைல் அவர்களின் உள்ளத்தையே உலுக்கியது. உடனே எழுந்து எல்லோருக்கும்
முன்னால் சத்தத்தை உயர்த்தியவராக, "நான் குர்ஆனை நம்பிவிட்டேன், இந்த குர்ஆன்
கூறும் இஸ்லாத்தையும் ஏற்றுக்கொண்டேன்" என்று கூறி அவர் இஸ்லாத்தைத்
தழுவினார்.
வலி உள்வாங்கிகள்
எவர்கள் நம்முடைய
(இவ்வேத) வசனங்களை நிராகரிக்கின்றார்களோ அவர்களை நிச்சயமாக நாம் (மறுமையில்) நரகத்தில்
சேர்த்து விடுவோம். அவர்கள் வேதனையைத் தொடர்ந்து அனுபவிப்பதற்காக அவர்களுடைய தோல் கருகிவிடும்
போதெல்லாம் மற்றொரு புதிய தோலை மாற்றிக்கொண்டே இருப்போம். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனும், ஞானமுடைய வாகவும்
இருக்கின்றான். திருக்குர்ஆன்:- 4:56
உடலில் ஏற்படும் வலியை
உணரும் தன்மை மனித மூளையில் தான் உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் எண்ணினர். ஆனால், அண்மைக்கால கண்டுபிடிப்புகள்
வலி உள்வாங்கிகள் தோலில் அமைந்திருப்பதால் தான் ஒரு மனிதன் வலியை உணருகிறான் என நிரூபித்துள்ளன.
இந்த வலி உள்வாங்கிகள் இல்லையெனில் உடலில் ஏற்படும் வலியை உணர்த்திட இயலாது.
தீக்காயங்கள் ஏற்படும்
ஒரு நோயாளியை பரிசோதனை செய்யும் மருத்துவர் நோயாளியின் தீக்காயத்தின் அளவை கண்டறிய ஒரு குண்டூசியால் குத்தி பார்க்கிறார்.
நோயாளி வலியை உணரும் பட்சத்தில் மருத்துவர் மகிழ்ச்சி அடைகிறார். இதற்கு காரணம், தீக்காயங்கள் மேலோட்டமானவை
தான் என்பதை அது சுட்டிக்காட்டுவதோடு தோலில் உள்ள வலி உள்வாங்கிகள் பழுதுறாமல் நல்ல
நிலையில் உள்ளன என்பதை எடுத்துக்காட்டுகிறது. இதற்கு மாறாக, நோயாளி வலியுணராமல்
இருக்கும் பட்சத்தில் அந்தத் தீக்காயம் ஆழமாக ஏற்பட்டுள்ளது என்பதை எடுத்துக்காட்டுவதோடு
வலி உள்வாங்கிகள் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளன என்பதையும் சுட்டிக்காட்டி வருகின்றன.
இந்த வசனம் மனிதனின்
உடல் தோலில் வலி உள்வாங்கிகள் அமைக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது.
தாய்லாந்தில் உள்ள
சியாங்மாய் பல்கலைக்கழகத்தில் உடற்கூறு துறையின் தலைவராக இருப்பவர் பேராசிரியர்
"டகடத் தேஜாசென்ட்" என்பவர். இவர் தோலில் உள்ள வலி உள்வாங்கிகள் குறித்து
நீண்ட நெடுங்கால ஆய்வு மேற்கொண்டவர். 1400 ஆண்டுகளுக்கு முன்பே மிகத் துல்லியமாக இக்கருத்து
திருக்குர்ஆனில் குறிப்பிடப்பட்டிருப்பது கண்டு வியந்து அவர் இஸ்லாத்தைத்
தழுவினார்.
ஆகவே, நாம் முறையாக குர்ஆனை சிந்தித்து ஓதுபவர்களாகவும், நமது வாழ்க்கையில் எழும் பிரச்சினைகளுக்கு குர்ஆனின் மூலம் தீர்வு
காணக்கூடிய நன்மக்களாகவும் அல்லாஹுத்தஆலா நம்மை வாழச் செய்வானாக! ஆமீன்!
மௌலவி, மு.முஹம்மது
ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951
Mashalla super
ReplyDelete