உணர்ச்சிவசப்படாதே!
وَكَيْفَ تَصْبِرُ عَلَى مَا لَمْ تُحِطْ
بِهِ خُبْرًا قَالَ سَتَجِدُنِي إِنْ شَاءَ اللَّهُ صَابِرًا وَلَا أَعْصِي لَكَ
أَمْرًا
அதற்கவர் "என்னுடன் இருக்க நிச்சயமாக நீங்கள் சக்திபெற மாட்டீர்கள். அவ்வாறு இருக்க உங்களுடைய அறிவுக்கு அப்பாற்பட்டவைகளை (நான் செய்யும்போது பார்த்துக் கொண்டு) நீங்கள் எவ்வாறு சகித்துக் கொண்டு இருப்பீர்கள்" என்று கூறினார். திருக்குர்ஆன் 18:67, 68
வாழ்க்கை என்ற நாணயத்திற்கு
இன்பம் துன்பம் என்ற இரண்டு பக்கங்கள் உண்டு. துன்பம் வரும்போது அதன் இயல்பைவிட அதிகமாகவே
அது நம் மனதை தாக்குகிறது. அதன் மூலம் ஏற்படக்கூடிய கோபம், வலி,காயம்,அழுகை இவை அனைத்துமே நம்மை பாதிக்கின்றன. இந்த நிலையை தான் நாம் உணர்ச்சிவசப்படுதல்
என்று கூறுகிறோம். உணர்ச்சிவசப்பட்டு ஒரு செயலை செய்துவிட்டு, பிறகு வருந்துவோர் அதிகம். எனவே, உணர்ச்சிவசப்படுதலை விட்டும் தற்காத்துக் கொள்ளுதல் நல்லது.
இறைமறை இயம்பும்
வரலாறு
இறைத்தூதர் மூசா
(அலை) அவர்கள் இறைநேசர் கிள்ர் (அலை) அவர்களிடம் சென்று சில அறிவு ஞானங்களை கற்றுத்தருமாறு
கேட்டார்கள். கிள்ர் (அலை) அவர்கள் எனது செயலை கண்டு நீங்கள் உணர்ச்சிவசப்பட்டு ஆத்திரப்படுவீர்கள்.
அது நமக்கு மத்தியில் சரிப்பட்டு வராதே என்றார்கள். மூசா (அலை) அவர்கள் (இல்லை) அல்லாஹ் நாடினால் உங்களுடைய கருத்துக்கு
ஏற்றவாறு நான் நடந்து கொள்வேன். நான் உங்களுக்கு மாறு செய்ய மாட்டேன் என்று கூறினார்கள்.
பிறகு இருவரின் பயணமும்
தொடர்ந்தது. இருவரும் ஒரு மரக்கலத்தில் பயணித்துக் கொண்டிருக்கும்போது நல்லவிதமாக இருந்த
அந்த மரக்கலத்தை கிள்ர் (அலை) அவர்கள் ஓட்டை போட்டு அதை செப்பனிட்டார்கள். இதைக் கண்ட
மூசா (அலை) அவர்கள் உணர்ச்சிவசப்பட்டவராக “ஏன் இவ்வாறெல்லாம் செய்கிறீர்கள்?” என்று
கேட்டார்கள். பிறகு கொஞ்ச தூரம் சென்ற பிறகு கிள்ர் (அலை) அவர்கள் தெருவில் விளையாடிக்
கொண்டிருந்த ஒரு சிறுவனைப்பிடித்து அவன் தலையை திருகி கொன்றுவிட்டார்கள். இதைக் கண்ட
மூசா (அலை) அவர்கள் அப்போதும் உணர்ச்சிவசப்பட்டவராக "ஏன் இவ்வாறெல்லாம் செய்கிறீர்கள்?" என்று கேட்டார்கள்.
பிறகு கொஞ்ச தூரம் சென்ற பிறகு கிள்ர் (அலை) அவர்கள் இடிந்து விழும் நிலையில் இருந்த
ஒரு வீட்டின் சுவரை மண் குழைத்துச் செப்பனிட்டார்கள். அப்போது கடுமையான பசியுடன் இருந்த
மூசா (அலை) அவர்கள் அப்போதும் உணர்ச்சிவசப்பட்டவராக "ஏன் இவ்வாறெல்லாம் செய்கிறீர்கள்?" என்று கேட்டார்கள்.
அப்போது கிள்ர் (அலை)
அவர்கள், “அந்த மரக்கலத்தின் உரிமையாளர் அதை ஒரு கொடுமைக்கார அரசன் இருக்கும் இடத்தை
கடந்தே ஓட்டிச் செல்கிறார். அவன் ஒவ்வொரு நல்ல மரக்கலத்தையும் அபகரித்துக்கொள்வான்.
பழுதடைந்துவிட்டால் மரக்கலத்தை அபகரிக்காமல் விட்டு விடுவான். அதன் உரிமையாளர் ஏழை
மனிதர் அதன் மூலம் பயனடைந்து கொள்வார் என்பதற்காகவே அதை நான் ஓட்டையிட்டு பழுதாக்கி
செப்பனிட்டேன். மேலும், அச்சிறுவன் இயல்பிலேயே
இறைமறுப்பாளன். அவனது பெற்றோர்களோ இறைநம்பிக்கையாளர்கள். ஆனால், பிள்ளைமீது கொண்ட
பாசத்தினால் அவர்களும் அவன் வழிக்குச் சென்றுவிடும் ஆபத்து இருந்தது. எனவே தான், நான் அவனை கொன்றேன்.
மேலும், அவ்வூரில் நல்ல மனிதர்
ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு இரு ஆண் குழந்தைகள். அவர் இறப்பதற்கு முன் தம் குழந்தைகளுக்காக
புதையல் ஒன்றை அச்சுவருக்குக் கீழே புதைத்து வைத்திருந்தார். சுவர் இடிந்து விழுந்தால்
புதையல் வெளியே தெரிந்துவிடும். அக்குழந்தைகள் பெரியவர்களான பின் அப்புதையலை எடுத்து
பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக அந்தச் சுவற்றை செப்பனிட்டேன் என்று பதிலளித்துவிட்டு, இனிமேல் நாம் இருவரும்
ஒன்றாக பயணிக்க முடியாது. எனவே, நீங்கள் உங்கள் வழியைப் பார்த்து செல்லலாம்” என்று விடை கொடுத்தார்கள்.
இந்த வரலாற்றை திருக்குர்ஆன்
அல்கஹ்ஃப் அத்தியாயம் (66 முதல் 82 வரையுள்ள வசனங்கள்) விவரிக்கிறது.
இந்த நிகழ்ச்சியை
குறித்து அருமை நாயகம் (ஸல்) அவர்கள், ( يَرْحَمُ
اللَّهُ مُوسَى، لَوَدِدْنَا لَوْ صَبَرَ حَتَّى يُقَصَّ عَلَيْنَا مِنْ أَمْرِهِمَا ) "அல்லாஹ் நபி மூசா
(அலை) அவர்கள் மீது கருணை காட்டுவானாக! (மூசா - அலை அவர்கள்) பொறுமையாக இருந்திருப்பாரேயானால்
அவ்விருவர் பற்றிய (நிறைய) விஷயங்கள் (அல்லாஹ்வின் மூலம்) நமக்கு எடுத்துரைக்கப்பட்டிருக்குமே!
என நாம் விரும்பினோம்" என்று கூறினார்கள். அறிவிப்பாளர்:- உபை பின் கஅப் (ரலி)
அவர்கள் நூல்:- புகாரீ-122
மூசா (அலை) அவர்கள்
உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டதால் கிள்ர் (அலை) அவர்கள் மூலம் இந்த சமுதாயத்திற்கு கிடைக்க
வேண்டிய பல விஷயங்கள் கிடைக்காமல் போய்விட்டது என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கருதுகிறார்கள்.
நாம் சில சமயங்களில், சிலரிடம் உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டால் நமக்கு கிடைக்க வேண்டிய
பலாபலன்களை நாம் இழக்கக்கூடும். எனவேதான், நாம் உணர்ச்சிவசப்பட்டு பேசுவதற்கு முன்பு
சற்று யோசிக்க வேண்டும்.
அவனைத் தாக்காதீர்கள்
உஹுதுப் போருக்கு
புறப்படும்போது அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடம்,
"பகைவர்களால் கடக்க முடியாத
ஒரு குறுக்கு வழியில் நம்மை அழைத்துச் செல்லக்கூடியவர் யார்?" என்று கேட்டார்கள்.
பனூ ஹாரிஸா பின் ஹாரிஸா குலத்திலிருந்து அபூகைஸமா (ரலி) அவர்கள், "நாயகமே! என்னால் முடியும்"
என்றார். அவர் முஸ்லிம்களை பனூ ஹாரிஸா உடைய நிலம் வயல்கள் வழியாக அழைத்துச் சென்றார்.
இறுதியாக, அவர் "மிர்பஉ
பின் கைளிய்யி" என்று அழைக்கப்பட்ட ஒரு மனிதனுடைய வயலைக் கடந்தார். அவன் பார்வையற்ற
ஒரு நயவஞ்சகன். நபியவர்கள் முஸ்லிம்களுடன் கடந்து கொண்டிருக்கிறார்கள் என்று உணர்ந்தபோது, "நீர் அல்லாஹ்வின்
தூதராக இருந்தால், நான் உம்மை என்னுடைய வயல்களில் நுழைவதற்கு அனுமதிக்க மாட்டேன்"
என்று அவன் கூறிக்கொண்டே, அவர்களுடைய முகங்களில் புழுதியை எறிய ஆரம்பித்தான். துர்பாக்கியசாலியான
அம்மனிதன் அதன் பின் கை நிறைய மண்ணை எடுத்துக்கொண்டு, ( وَاللَّهِ
لَوْ أَعْلَمُ أَنِّي لَا أُصِيبُ بِهَا غَيْرَكَ يَا مُحَمَّدُ لَضَرَبْتُ بِهَا وَجْهَكَ ) "முஹம்மதே அல்லாஹ்வின்
மீதாணையாக! இம்மண் உன்னைத் தவிர வேறு யார்மீதும் படாது என்று நான் அறிந்தால் இம்மண்ணை
உன் முகத்தில் வீசுவேன்" என்று கூறினான்.
இதைச் செவியுற்ற நபித்தோழர்கள், அவனுக்கு ஒரு பாடத்தைக்
கற்பிப்பதற்காக அவனைத் தாக்க விரைந்தனர். ஆனால், நபியவர்கள், ( لَا تَقْتُلُوهُ، فَهَذَا الْأَعْمَى أَعْمَى
الْقَلْبِ أَعْمَى الْبَصَرِ
) "அவனைக் கொல்லாதீர்கள்.
அவன் குருடன் அவனது உள்ளமும் குருடு. அவனது பார்வையும் குருடு" என்று கூறினார்கள்.
எனவே, நபியவர்கள் நகர்ந்து
சென்றுகொண்டே இருந்தார்கள். மேலும் அந்த வேடதாரியை திரும்பிப் பார்க்கவில்லை. நூல்:-
அல்பிதாயா வந்நிஹாயா
இறைத்தூதர் நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் சாந்தமானவராகவும் புத்திசாலியாகவும் இருந்தார்கள். அதனால் நபியவர்கள்
முட்டாள் மனிதர்களைத் திரும்பிப்பார்க்க மாட்டார்கள். மதிபற்றவர்களால் தூண்டப்பட்டுக்
கோபமடைய மாட்டார்கள்.
காற்று ஒருபோதும்
மலையை அசைக்க முடியாது. ஆனால், அது மணலோடு விளையாடும்; அதன் விருப்பத்திற்கேற்ப
அதை வடிவமைக்கும்.
நயவஞ்சகனின் வார்த்தை
ஜாபிர் பின் அப்தில்லாஹ்
(ரலி) அவர்கள் கூறியதாவது. கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் (ஹவாஸின்) போரில் கிடைத்த
செல்வங்களைப் பங்கிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது பனூதமீம் குலத்தைச் சேர்ந்த 'துல்குவைஸிரா' என்பவர் ( يَا مُحَمَّدُ اعْدِلْ ) "முஹம்மதே! நீதியுடன் நடந்து கொள்ளுங்கள்" என்று கூறினார்.
அதற்கு நபியவர்கள், (
وَيْلَكَ وَمَنْ يَعْدِلُ إِذَا لَمْ أَكُنْ
أَعْدِلُ لَقَدْ خِبْتَ وَخَسِرْتَ إِنْ لَمْ أَكُنْ أَعْدِلُ ) "உமக்குக் கேடுதான். நான் நீதியுடன் நடந்து கொள்ளாவிட்டால் வேறு
யார் தான் நீதியுடன் நடந்து கொள்வார்? நான் நீதியுடன் நடந்துகொள்ளாவிட்டால்
நான் நஷ்டமடைந்துவிட்டேன்; இழப்பிற்குள்ளாகிவிட்டேன்"
என்று கூறினார்கள்.
அப்போது உமர் (ரலி)
அவர்கள், "என்னை விடுங்கள் நாயகமே! இந்த நயவஞ்சகனின் தலையைக்
கொய்துவிடுகிறேன்" என்று கூறினார்கள். அதற்கு நபியவர்கள், ( مَعَاذَ اللَّهِ أَنْ يَتَحَدَّثَ النَّاسُ أَنِّي
أَقْتُلُ أَصْحَابِي ) "அல்லாஹ் காப்பாற்றுவானாக!
(அவ்வாறு செய்துவிட்டால்) நான் என் தோழர்களையே கொலை செய்கிறேன் என்று மக்கள் பேசுவார்கள்.
( إِنَّ هَذَا وَأَصْحَابَهُ يَقْرَءُونَ الْقُرْآنَ
لاَ يُجَاوِزُ حَنَاجِرَهُمْ يَمْرُقُونَ مِنْهُ كَمَا يَمْرُقُ السَّهْمُ مِنَ الرَّمِيَّةِ ) இதோ இவரும் இவருடைய தோழர்களும்
குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர்களுடைய தொண்டைக்குழியைத்
தாண்டி (உள்ளத்திற்குள்) செல்லாது. (வேட்டைக்காரனின்) அம்பு வேட்டையாடப்பட்ட பிராணியின்
உடலில் இருந்து (மறுபக்கமாக) வெளியேறி விடுவதைப்போன்று அவர்கள் மார்க்கத்திலிருந்து
(சுவடே தெரியாமல்) வெளியேறி விடுவார்கள். (எனவே, அவரை விட்டு விடுங்கள்) என்று கூறினார்கள் நூல்:- புகாரீ-3610, முஸ்லிம் 1920
முஸ்லிம் போன்று பாவனை
செய்துகொண்டு பெரும் குழப்பம் ஏற்படுத்தக்கூடிய, 'துல்குவைஸிரா' போன்ற நயவஞ்சகன் கொலை செய்யப்படுவதற்கு உரியவனாக இருந்தும்கூட அண்ணல்
நபி (ஸல்) அவர்கள், அந்த நயவஞ்சகனை கொல்ல வேண்டாம் என்று தடுத்துள்ளார்கள். காரணம்,
முஸ்லிம்களுக்கு மட்டும் தான் இவன் பெரும் குழப்பவாதி, நயவஞ்சகன் என்று தெரியும். ஆனால், பிற மக்களுக்கு இவனின்
உண்மை நிலை தெரியாது. எனவே, அண்ணலாரின் அனுமதியின் அடிப்படையில் இவனை கொன்றுவிட்டால், பிறர் பார்வையில்
"முஹம்மதே தன் தோழர்களை கொல்கிறார்" என்று தவறாக தோன்றிவிடும். அதனால்
குழப்பம் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. இஸ்லாத்தைப் பற்றியும் தவறாக எண்ணி விடுவார்கள்
என்று நபியவர்கள் அஞ்சினார்கள். மேலும், நயவஞ்சகன் துல்குவைஸிராவின் செயலைக் கண்டு
உணர்ச்சிவசப்பட வேண்டாமென நபியவர்கள் அறிவுறுத்தினார்கள்.
பேசிய பிறகு கவலை
அனஸ் (ரலி) அவர்கள்
கூறியதாவது. ஓர் மண்ணறை அருகில் அழுது கொண்டிருந்த ஒரு பெண்ணை கண்மணி பெருமானார் (ஸல்)
அவர்கள் கடந்து சென்றபோது, ( اتَّقِي اللَّهَ وَاصْبِرِي ) "அல்லாஹ்வை அஞ்சிக்கொள்!
பொறுமையாக இரு" என்றார்கள். அதற்கு அப்பெண், ( إِلَيْكَ عَنِّي، فَإِنَّكَ لَمْ تُصَبْ
بِمُصِيبَتِي ) "என்னை விட்டு அகன்று செல்வீராக! எனக்கேற்பட்ட இத்துயரம் உமக்கு
ஏற்படவில்லை" என்று நபியவர்கள் யாரென அறியாமல் கூறிவிட்டார்.
அ(வரிடம் உரையாடிய)வர்
நபியவர்கள் என கூறப்பட்டதும் அப்பெண் நபியவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்து, "நான் உங்களை (யாரென)
அறியவில்லை" என நபியவர்களிடம் கூறினார். அப்போது நபியவர்கள், ( إِنَّمَا
الصَّبْرُ عِنْدَ الصَّدْمَةِ الأُولَى
) "பொறுமை என்பது துன்பம் தாக்கிய ஆரம்பத்தில் (கடைபிடிப்பது) தான்" என்று கூறினார்கள்.
நூல்:- புகாரீ-1283, முஸ்லிம்-1686, அபூதாவூத்-2717, நசாயீ1846, இப்னுமாஜா-1585, முஸ்னது அஹ்மத்
அந்தப் பெண் தமது
பிள்ளையை இழந்த துக்கத்தில் யாரென்றும் பாராமல் உணர்ச்சிவசப்பட்டவளாக நிதானமின்றி பேசிவிட்டார்.
அண்ணல் நபி (ஸல்)
அவர்கள் அவள் அவ்வாறு உணர்ச்சிவசப்பட்டு பேசியதை பெரிதுபடுத்திக்கொள்ளாமல் "இப்போது
வந்த நிதானமும் பொறுமையும் துன்பம் ஏற்பட்ட ஆரம்ப நிலையிலேயே வந்திருக்க வேண்டும் மனம்
ஓரளவு சமாதானம் அடைந்த பிறகு நிதானம் ஏற்படுவதற்கு பொறுமை என்று பெயரல்ல என அந்தப்
பெண்ணுக்கு உணர்த்தினார்கள்.
மனிதன் உணர்ச்சிவசப்பட்டு
வேகமாக பேசும்போது யாரிடம் என்ன பேசுகிறோம் என்று அறியாமல் ஏதேதோ பேசிவிடுகிறான். பிறகு
பேசியதை எண்ணிக் கவலைப்படுகிறான்.
பதிலுக்கு பதில் தேவையில்லை
இஸ்லாத்தின் எதிரியாக
விளங்கிய அபூலஹபின் மனைவி உர்பா பின்த் ஹர்ப் என்பவள் கணவனைப் போன்றே அருமை நாயகம்
(ஸல்) அவர்கள் இஸ்லாமிய பிரச்சாரப் பணிக்கு செல்லுமிடமெல்லாம் பின் தொடர்ந்து சென்று
நபியவர்களை இகழ்ந்தும், காயப்படுத்தியும் வந்தாள்.
ஒருமுறை அவள்
நபியவர்களை நோக்கி, ( مُذَمَّمًا عَصَيْنا، وأمْرَهُ أبَيْنا ) "(நீர் முஹம்மத் அதாவது,
புகழப்படுபவர் அல்லர்; நீர்) முதம்மம் (இகழப்படுவர்) உமக்கு மாறு செய்வோம்; உமது மார்க்கத்தை
மறுதலிப்போம்" என்று கூறினாள். அவளின் கூற்றுக்கு நபியவர்கள் எந்த பதிலும் கூறவில்லை.
மாறாக, நபியவர்கள் தமது தோழர்களிடம்
( ألا تَعْجَبُونَ كَيْفَ يَصْرِفُ اللَّهُ عَنِّي
شَتْمَ قُرَيْشٍ ولَعْنَهم، يَشْتُمُونَ ويَلْعَنُونَ مُذَمَّمًا وأنا مُحَمَّدٌ ) "குறைஷி (இறைமறுப்பாளர்)களின் ஏச்சையும், அவர்களின் சாபத்தையும்
என்னை விட்டு அல்லாஹ் எப்படி திருப்பிவிடுகிறான் என்பதை கண்டு நீங்கள் வியப்படவில்லையா? (என்னை) 'முதம்மம்' (இகழப்படுபவர்) என்று
(சொல்லி) ஏசுகிறார்கள்; 'முதம்மம்' என்று (சொல்லியே) சபிக்கிறார்கள். ஆனால், நானோ முஹம்மத் (புகழப்படுபவர்)
ஆவேன்" என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-3533, தஃப்சீர் அத்தஹ்ரீர் வத்தன்வீர் அந்நிசா வசனம்-156
இவளைப் போன்ற இஸ்லாமிய
எதிரிகளின் இகழ்ச்சி வார்த்தையைச் செவியுற்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் உணர்ச்சிவசப்படவில்லை.
குறைக்கும் ஒவ்வொரு நாய்க்கும் பதில் சொல்லிக்கொண்டே இருந்தால், குறிக்கோளை என்றும் அடைய முடியாது.
“சூரியனைப் பார்த்து
நாய் குறைத்தால் நாய்க்கு தான் வாய் வலிக்குமே தவிர, சூரியனுக்கு அல்ல” என்பது கிராமத்து சொல்வழக்கு.
அது போல் சில சமயங்களில்
நம்மிடம் இல்லாதப் பண்புகளை சொல்லி வேண்டுமென்றே இகழும்போது அதற்காக அவரோடு சண்டைக்கு
நிற்க வேண்டும். அல்லது பதிலுக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும்
என்ற அவசியம் இல்லை.
நமது எதிரிகள் நம்மை
ஏசும்போது நாம் அந்த வார்த்தைகளைக் கேட்டு உணர்ச்சிவசப்பட்டு பதில் தருவோமேயானால் மீண்டும்
மீண்டும் அவர்கள் நம்மை வம்புக்கு இழுத்துக் கொண்டுதான் இருப்பார்கள். அது ஒரு முடிவுக்கு
வராது.
நளினமாக
ஆயிஷா (ரலி) அவர்கள்
கூறியதாவது. யூதர்கள் சிலர் கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களிடம் வந்து "அஸ்ஸாமு
அலைக்கும்" (உங்களுக்கு மரணம் நேரட்டும்) என்று (முகமன்) கூறினர். உடனே நான், ( عَلَيْكُمْ،
وَلَعَنَكُمُ اللَّهُ، وَغَضِبَ اللَّهُ عَلَيْكُمْ ) "அது உங்களுக்கு நேரட்டும். மேலும், அல்லாஹு தனது
கருணையிலிருந்து உங்களை அப்புறப்படுத்தி உங்கள் மீது அல்லாஹ் கோபம் கொள்ளட்டும்"
என்று அவர்களுக்கு பதில் சொன்னேன். அப்போது நபியவர்கள், (
مَهْلاً يَا عَائِشَةُ، عَلَيْكِ
بِالرِّفْقِ، وَإِيَّاكِ وَالْعُنْفَ وَالْفُحْشَ ) "ஆயிஷா! நிதானம்! (எதிலும்) நளினமாக நடந்துகொள்!
மேலும் வன்மையுடன் நடந்து கொள்வதிலிருந்தும் அருவருப்பாக பேசுவதிலிருந்தும் உன்னை நான்
எச்சரிக்கிறேன்" என்று கூறினார்கள்.
அப்போது நான், "அவர்கள் சொன்னதை நீங்கள்
செவியேற்கவில்லையா?" என்று கேட்டேன். அதற்கு நபியவர்கள்,
( أَوَلَمْ تَسْمَعِي مَا قُلْتُ رَدَدْتُ
عَلَيْهِمْ، فَيُسْتَجَابُ لِي فِيهِمْ، وَلاَ يُسْتَجَابُ لَهُمْ فِيَّ ) "நான் (அவர்களுக்கு) அளித்த பதிலை நீ கேட்கவில்லையா? ('அஸ்ஸாமு' எனும் சொல்லைத் தவிர்த்து
'வ அலைக்கும்' - அவ்வாறே உங்கள் மீது
உண்டாகட்டும் என்று) அவர்களுக்கு நான் பதிலளித்துவிட்டேன். அவர்களுக்காக நான் செய்த
பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும். எனக்காக அவர் செய்த பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படாது"
என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-6030
சூழ்ச்சி
15 ஆம் நூற்றாண்டில் ஸ்பெயினில்
இஸ்லாமியளர்களின் ஆட்சி நடைபெற்றது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை தவறாக பேசியவர்களுக்கு
மரண தண்டனை விதித்து வந்தது. இதுவே இஸ்லாமிய சட்டமாகும். ஸ்பெயினில் இருந்து இஸ்லாமியப் பேரரசை வீழ்த்துவதற்கு
கிறிஸ்துவ பாதிரியார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை கொச்சைப்படுத்துவதையே ஆயுதமாக
பயன்படுத்தினர். எனவே, அரசு அந்த கயவர்களுக்கு மரண தண்டனை விதித்தது.
இதையே காரணமாக வைத்து
இஸ்லாமிய விரோதிகள் நாட்டில் கிறிஸ்தவர்கள் கொல்லப்படுவதாகப் பிரச்சாரம் செய்தனர்.
கடைசியில் கிறிஸ்தவர்கள் எல்லோரும் இஸ்லாமிய அரசை வெறுக்க ஆரம்பித்தனர். கடைசியில்
இஸ்லாமிய அரசு வீழ்ந்தது.
உணர்ச்சி வழியில்
செல்பவர்களுக்கு வாழ்க்கை என்பது துன்பமானது. அறிவு வழியில் செல்பவர்களுக்கு அது இன்பமானது.
அதாவது, ஒரு கயவனை நாமே உதைப்பது
என்பது உணர்ச்சி வழி. அவனை போலீசில் பிடித்துக் கொடுப்பது என்பது அறிவு வழி. வன்முறை
மூலமாக நமக்கு ஆக வேண்டியதை சாதித்துக் கொள்வது என்பது உணர்ச்சி வழி. வழக்குத் தொடுத்து
அதன் மூலம் சாதித்துக் கொள்வது என்பது அறிவு வழி.
சிறு சிறு உணர்ச்சிகளுக்கு
நாம் வலுவேற்றினால், அவை நமக்கு எதிரான பலன்களைத் தந்துவிட்டுத்தான் ஓயும். உணர்ச்சிகள்
அறிவையும் மழுங்கடிக்கும் ஆற்றல் உள்ளவை. எனவே, உணர்ச்சிவசப்பட்டு ஒரு காரியத்தில் இறங்குவது நல்லதல்ல.
பரிகாசத்தின்
போது
சல்மான் அல்பார்சீ
(ரலி) அவர்கள் கூறியதாவது. இணைவைப்பாளர்களுள் ஒருவன் என்னிடம், உங்களுடைய தோழர், (அதாவது அண்ணல் நபி
- ஸல் அவர்கள்) மலம் ஜலம் கழிப்பது உள்ளிட்ட அனைத்தையுமே உங்களுக்குக் கற்றுத் தருவதை
நான் காண்கிறேன்" என்று (நபியவர்களைக் கேலி செய்யும் விதமாகக்) கூறினான். இது
தொடர்பாக, இணைவைப்பாளர்கள் நபியவர்களை
கேலி செய்து கொண்டிருந்தனர்.
அதற்கு நான், "ஆம்! (உண்மைதான்) நாங்கள் (மலம் ஜலம் கழிக்கும்போது) கிப்லாவை முன்னோக்கக் கூடாது என்றும், (மலம் ஜலம் கழித்துவிட்டு) வலக்கையால் துப்புரவு செய்ய கூடாது என்றும், (மலம் ஜலம் கழித்துவிட்டு துப்பரவு செய்யும்போது) நாங்கள் மூன்றைவிடக் குறைவான கற்களால் துப்பரவு செய்யவேண்டாம் என்றும், (மூன்றைப் பயன்படுத்தும்போது) அவற்றில் விட்டையோ எலும்போ இடம்பெறக் கூடாது என்றும் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். நூல்:- முஸ்லிம்-437, அபூதாவூத்-6, திர்மிதீ-16, நஸாயீ-41, இப்னுமாஜா-312, முஸ்னது அஹ்மத்-22590
சல்மான் ஃபார்ஸி
(ரலி) அவர்களின் பதில் அறிவு நுட்பம் நிறைந்ததாக அமைந்திருந்தது. ஏனெனில், இணைவைப்பாளர் ஒருவர்
பரிகாசம் செய்த போர் அவரை எச்சரித்திருக்கலாம். அல்லது
பதிலளிக்காமல் அமைதியாக இருந்திருக்கலாம். ஆனால், அவர்கள் அதைப் புறக்கணிக்காமல் ஒரு நேர்வழியைக்
கற்பிப்பவரின் அணுகுமுறைப்படி உண்மையை திறம்பட உணர்த்தினார்கள். இது பரிகாசத்திற்குரிய
இடமில்லை என்பதை அழகுற சுட்டிக்காட்டினார்கள். முரட்டுத்தனத்தைக் கைவிட்டு நேர்வழியைக்
கடைபிடிப்பதும், அகம் புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்வதும் மிகவும் அவசியமான செயல் என அறிவுறுத்தும்
விதத்தில் பதிலளித்தார்கள்.
மாறாக, உணர்ச்சிவசப்படவில்லை.
அதாவது, நபியவர்களை கேலி செய்தவரை
கடுமையான வார்த்தைகளால் திட்டவோ, ஏசி பேசிவிடவோ இல்லை. அவரிடம் சண்டைக்குச் செல்லவுமில்லை. எனவே, இஸ்லாத்தைப் பற்றியோ
நபியவர்களை பற்றியோ கேலி கிண்டல் செய்பவர்களிடம் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக
செயல்பட வேண்டும்.
எதிரியின் எண்ணம்
முகலாயப்
பேரரசின் கடைசி மன்னரான சிராஜுத்தீன் பகதூர்ஷா ஜாபர் (ரஹ்) அவர்கள் வைக்கப்பட்டிருந்த சிறைச்சாலை ஒருநாள் காலை உணவுக்காக
ஒரு பெரிய தட்டில் வைத்து துணியால் மூடப்பட்டு எடுத்துவரப் படுகிறது.
அப்போது மேஜர் ஹட்சனும்
வருகிறான். ஹட்சன் முகத்தில் ஒரு விஷமம் கலந்த
சிரிப்பு. ஹட்ஸன்: "பகதூர்ஷா! நீண்ட காலமாக நிறுத்தப்பட்டிருந்த கம்பெனியின் பரிசுகள்
இவை!" என்றவனாக, உணவுத் தட்டுகளை மூடியிருந்த துணிகளை அகற்றுகிறான்.
அதில் பகதூர்ஷாவின்
மகன்கள் மிர்ஷா மொஹல், ஹிலுருல் சுல்தான் இருவரின்
தலைகள்!
பகதூர்ஷா திடநெஞ்சுடன்
அவனைப் பார்த்து, “தைமூர் வம்சத் தோன்றல்கள் தமது முன்னோர்களுக்கு இவ்வாறு தான் தங்கள்
புனிதத்துவத்தை நிரூபிப்பார்கள்” என்று கூறினார்.
கம்பீரமான இந்த வார்த்தைகளைக்
கேட்டு அதிர்ந்த ஹட்ஸன், பகதூர்ஷாவின் கண்களில் கண்ணீர் வராததைக் கண்டு, “உமது கண்களில்
என்ன? நீர் வற்றி விட்டதா? என்று கேட்டான்.
பகதூர்ஷா, “அரசர்கள்
அழுவதில்லை! அதிலும் முஸ்லிம்கள், உயிர்த்தியாகம் செய்தவர்வர்களுக்காக அழமாட்டார்கள்” என்று பெருமிதத்துடன்
கூறினார்.
மன்னர் பகதூர்ஷா தமது
பிள்ளைகள் கொல்லப்பட்டதை எண்ணி உணர்ச்சிவசப்பட்டவராக அழுவார். அதன் மூலம் நாம் சந்தோஷமடையலாம்
என்று எண்ணினான். அவர் எந்த வகையிலும் உணர்ச்சிவசப்படவில்லை. அவன் ஏமாற்றமடைந்தான்.
பிறர் நம்மை தவறாகப்
பேசும்போது, குதிக்க வேண்டாம். கண் சிவக்க வேண்டாம். என்னையா இப்படி பேசி விட்டாய்? உன்னை என்ன செய்கிறேன்
பார்! என்று சவால் விட வேண்டாம். மனிதர்கள் சூழ்நிலைக்கு ஏற்றபடி பேசுவார்கள். வாய்
புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று எதையாவது சொல்லி வைப்பார்கள். அதற்கு அதிக முக்கியத்துவம்
தரத் தேவையில்லை.
பிறரின் துன்ப துயரங்களைக்
கண்டு சிலர் ஆனந்தமடைவார்கள். அப்படிப்பட்டவர்கள் முன்னிலையில் நாம் உணர்ச்சிவசப்பட்டு
நமது துக்கத்தை வெளிப்படுத்திவிடக் கூடாது. என்னைப் பொறுத்தவரை அது ஒரு விஷயமல்ல என்பது
போல் காட்டிக்கொள்ள வேண்டும். அப்போது தான் அவர்கள் பொசுபொசுத்துப் போவார்கள்.
எனவே, நாம் உணர்ச்சிவசப்படும் நிலைப்பாட்டை விட்டும் தவிர்ந்து வாழ, அல்லாஹுத்தஆலா அருள்புரிவானாக! ஆமீன்!
மௌலவி, மு.முஹம்மது
ஹைதர் அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951
No comments:
Post a Comment