Search This Blog

Wednesday, 12 July 2023

ஏற்கப்படாது

 

ஏற்கப்படாது

 

يَا أَيُّهَا النَّاسُ كُلُوا مِمَّا فِي الْأَرْضِ حَلَالًا طَيِّبًا وَلَا تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُبِينٌ

 

மனிதர்களே! பூமியில் உள்ளவற்றில் அனுமதிக்கப்பட்ட தூய்மையானதை உண்ணுங்கள். ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றி விடாதீர்கள். அவன் உங்களுக்கு பகிரங்க எதிரியாவான். திருக்குர்ஆன்:- 2:168

 

வட்டி, திருட்டு, வழிப்பறி, சூது, பந்தயம், ஏமாற்றுதல் போன்ற தவறான தொழில் செய்து உண்பவர்கள் தகாத உணவையே உட்கொள்கிறார்கள். இவ்வாறு வயிறு நிரம்பியவர்களின் உடலில் ஓடும் இரத்தம் தகாத உணவினால் உற்பத்தி செய்யப்பட்டதாகும். இந்நிலையில் இவர்கள் புரியும் வணக்கங்கள் பிரார்த்தனைகள் இன்ன பிற நற்காரியங்கள் அனைத்தும் இறைவனிடம் அங்கீகாரத்தைப் பெறமுடியாமல் வீணாகி விடுகின்றன.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لاَ تُقْبَلُ صَلاَةٌ بِغَيْرِ طُهُورٍ وَلاَ صَدَقَةٌ مِنْ غُلُولٍ ) அங்கத்தூய்மை (உளூ) செய்யாமல் எந்தத் தொழுகையும் ஏற்கப்படாது; மோசடி செய்த பொருளால் செய்யப்படும் எந்த தான தர்மமும் ஏற்கப்படாது. அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-381, அபூதாவூத்-54, நசாயீ-2477, இப்னுமாஜா-267, முஸ்னது அஹ்மத், தாரிமீ

 

தடைசெய்யப்பட்ட உணவு

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள், ( يُطِيلُ السَّفَرَ أشْعَثَ أغْبَرَ، يَمُدُّ يَدَيْهِ إلى السَّماءِ، يا رَبِّ، يا رَبِّ، ومَطْعَمُهُ حَرامٌ، ومَشْرَبُهُ حَرامٌ، ومَلْبَسُهُ حَرامٌ، وغُذِيَ بالحَرامِ، فأنَّى يُسْتَجابُ لذلكَ؟ ) "ஒருவர் தலைவிரி கோலத்துடன் புழுதிபடிந்த நிலையில் நீண்ட பயணம் மேற்கொள்கிறார். அவர் தம் கரங்களை வானை நோக்கி உயர்த்தி, 'என் இறைவா! என் இறைவா!' என்று பிரார்த்திக்கிறார். ஆனால், அவர் உண்ணும் உணவு (ஹராம் எனும்) தடைசெய்யப்பட்டதாக இருக்கிறது; அவர் அருந்தும் பானம் தடைசெய்யப்பட்டதாக இருக்கிறது; அவர் அணியும் உடை தடைசெய்யப்பட்டதாக இருக்கிறது; (ஹராம் எனும்) தடைசெய்யப்பட்ட உணவையே அவர் உட்கொண்டிருக்கிறார். இத்தகையவருக்கு எவ்வாறு (அவரது பிரார்த்தனை) ஏற்கப்படும்?" என்று கூறினார்கள். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-1844, திர்மிதீ-2915

 

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருமுறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் தலைப்பில் காணும் (2:168) வசனம் ஓதிக் காட்டப்பட்டது. உடனே சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் எழுந்து, ( يَا رَسُولَ اللَّهِ، ادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مُسْتَجَابَ الدَّعْوَةِ ) "நாயகமே! பிரார்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படும் மனிதனாக நான் ஆவதற்கு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள்" என்று என்றார்கள்.

 

அதற்கு நபியவர்கள், ( يَا سَعْدُ، أَطِبْ مَطْعَمَكَ تَكُنْ مُسْتَجَابَ الدَّعْوَةِ، وَالذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ، إِنَّ الرَّجُلَ ليَقْذفُ اللُّقْمَةَ الْحَرَامَ فِي جَوْفه مَا يُتَقبَّل مِنْهُ أَرْبَعِينَ يَوْمًا، وَأَيُّمَا عَبْدٍ نَبَتَ لَحْمُهُ مِنَ السُّحْت وَالرِّبَا فَالنَّارُ أَوْلَى بِهِ ) "சஅதே! தூய்மையான உணவையே உண்ணுவீராக. பிரார்த்தனைகள் ஏற்கப்படும் மனிதனாக நீர் ஆகிவிடுவீர். இறைவன் மீதாணையாக! ஒரு மனிதன் தடை செய்யப்பட்ட உணவில் ஒரு கவளத்தைத் தனது வயிற்றில் இடுகிறான். அதனால் நாற்பது நாள்கள் அவன் (புரியும் நற்செயல்கள்) ஏற்கப்படுவதில்லை. எந்த அடியானின் சதை முறைகேடான சம்பாத்தியத்தாலும் வட்டியாலும் வளர்ந்ததோ அந்தச் சதைக்கு நரகமே ஏற்ற இடமாகும்" என்று கூறினார்கள்.


இந்நிகழ்விற்கு பிறகு சஅத் (ரலி) அவர்கள் முன்பை விட உணவு விஷயத்தில் இன்னும் அதிகம் கவனம் செலுத்தினார்கள். அன்னார் வீட்டில் ஒரு ஆடு இருந்தது. அந்த ஆட்டின் பாலைத் தான் வீட்டில் உள்ளவர்கள் அருந்துவார்கள். ஒருநாள் அந்த ஆடு பக்கத்து வீட்டுக்காரரின் நிலத்தில் அனுமதியின்றி நுழைந்து அங்கிருந்த புற்களை மேய்ந்துவிட்டது. இதையறிந்த அன்னார் அன்று முதல் ஆடு இறக்கும் வரை அதிலிருந்து கறக்கும் பாலை அருந்துவதை நிறுத்திவிட்டார்கள். காரணம், அனுமதியின்றி நுழைந்து மேய்ந்த புல்லின் தாக்கம் அந்த ஆட்டின் பாலில் வெளிப்பட்டுவிடுமோ அது அனுமதியில்லாத உணவாக மாறிவிடுமோ என்று பேணுதல்தான். நூல்:- இப்னு மர்தவைஹி,  தஃப்சீர் இப்னு கஸீர் அல்பகரா வசனம்-168, ஜாமிஉல் உலூம் வல்ஹிகம் இமாம் ரஜப், தப்ரானீ

 

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருமுறை ஹசன் பின் அலீ (ரலி) அவர்கள் தர்மப் பேரிச்சம் பழங்களில் ஒன்றை எடுத்து வாயில் போட்டார். இதைக் கண்ட அருமை நாயகம் (ஸல்) அவர்கள், ( كِخٍ كِخٍ ـ لِيَطْرَحَهَا أَمَا شَعَرْتَ أَنَّا لاَ نَأْكُلُ الصَّدَقَةَ ) ‏  "சீ...சீ... கீழே போடு; நாம் தர்மப் பொருளை சாப்பிடக்கூடாது என்பது உனக்குத் தெரியாதா?" என்றார்கள். நூல்:- புகாரீ-1491, முஸ்லிம்-1939

 

வீட்டுப் பெரியவர்கள் சிறியவர்களிடம் இதில் இன்னின்ன நல்லவை இருக்கிறது. எனவே, அதை உண்ணலாம். இதில் இன்னின்ன கெடுதிகள் இருக்கிறது. தடுக்கப்பட்டவை. எனவே, அதை உண்ணக்கூடாது; அது பாவம் என்றெல்லாம் கற்பிக்க வேண்டும்.

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( أَيُّها النَّاسُ، إنَّ اللَّهَ طَيِّبٌ لا يَقْبَلُ إلَّا طَيِّبًا ) மக்களே! அல்லாஹ் பரிசுத்தமானவன். பரிசுத்தமானதைத் தவிர மற்றதை ஏற்றுக்கொள்ளமாட்டான். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-, திர்மிதீ-2989,

 

சந்தேகமானவற்றைத் தவிர்ப்பது

 

இறைத்தூதர்களை தூய்மையானவற்றை உண்ணுங்கள். நற்செயல் புரியுங்கள். நிச்சயமாக நான் நீங்கள் செய்கின்றவற்றை நன்கறிந்தவன் ஆவேன். திருக்குர்ஆன்:- 23:51

 

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கீழே கிடந்த பேரிச்சம் பழத்தைக் கடந்து சென்றார்கள். அப்போது, ( لَوْلاَ أَنْ تَكُونَ صَدَقَةً لأَكَلْتُهَا ) "இது தர்ம (சதகா)ப் பொருளாக இருக்காது என்றிருந்தால், இதை நான் சாப்பிட்டிருப்பேன்" என்றார்கள். நூல்:-  புகாரீ-2055, முஸ்லிம்

 

அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கும் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கும் ஸகாத் பொருள்கள் (ஹராம் எனும்) தடுக்கப்பட்டதாகும். எனவே, கீழே கிடந்த அந்த பேரிச்சம்பழம் ஸகாத் பொருளாக இருந்துவிடக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் அதை உண்பதை நபியவர்கள் தவிர்த்துக் கொண்டார்கள். சந்தேகமானவற்றைத் தவிர்ப்பது விரும்பத்தக்கது. சட்டப்படி அதை எடுத்து உண்பது குற்றம் ஆகாது.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ تَصَدَّقَ بِعَدْلِ تَمْرَةٍ مِنْ كَسْبٍ طَيِّبٍ ـ وَلاَ يَقْبَلُ اللَّهُ إِلاَّ الطَّيِّبَ وَإِنَّ اللَّهَ يَتَقَبَّلُهَا بِيَمِينِهِ ) யார் தூய்மையான சம்பாத்தியத்தில் ஒரு பேரிச்சம் பழத்தின் மதிப்புக்கு தர்மம் செய்தாரோ, அல்லாஹ் தூய்மையானதைத் தவிர வேறெதையும் ஏற்றுக் கொள்வதில்லை. அதை நிச்சயமாக அல்லாஹ் தனது வலக்கரத்தால் ஏற்றுக்கொள்கிறான். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-1410, முஸ்லிம்

 

மாலிக் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ( لِأَن یَترُكَ الرَّجُلِ دِرْهَمًا حَرَامًا خَیرَ لَهُ مِنْ انْ یصُدِّقَ بِمَٸةِ الْفِ دِرْهَمٍ )  (ஹராம் எனும்) தடுக்கப்பட்ட வழியில் ஒரு திர்ஹம் ஈட்டுவதைக் கைவிடுவது, ஒரு லட்சம் திர்ஹம்கள் தானம் செய்வதைக் காணச் சிறந்தது.  நூல்:- அல்முஜாலஸத்து வஜவாஹிருல் இல்ம் 5/125

 

செய்யும் வியாபாரம் அனுமதிக்கப்பட்ட முறையில் முறையில் இருக்க வேண்டும். சிலர் எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயெ இருக்கிறார்கள். அனுமதிக்கப்படாத முறையில் சம்பாதித்து எவ்வளவு தர்மம் செய்தாலும் எந்தவொரு நன்மையும் கிடைக்கபோவதில்லை.

 

யூசுப் ‌இப்னு அஸ்பாத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

( أَنَّ الشَّابَّ إِذَا تَعَبَّدَ قَالَ الشَّيْطَانُ لِأَعْوَانِهِ انْظُرُوا مِنْ أَيْنَ مَطْعِمُهُ فَإِنْ كَانَ مَطْعَمَ سُوءٍ قَالَ دَعُوهُ يَتْعَبْ وَيَجْتَهِدُ فَقَدْ كَفَاكُمْ نَفْسَهُ إِنَّ اجِّهَادَهُ مَعَ أَكْلِ الْحَرَامِ لَا يَنْفَعُهُ )

ஒரு இளைஞன் வணக்க வழிபாடு செய்ய துவங்கும்போது, ​​ஷைத்தான் அவனது உதவியாளர்களிடம் இவ்வாறு கூறுவான்: நீங்கள்‌ அவனின்‌ வருமானத்தை பரிசோதித்துப் பாருங்கள். அவனின்‌ வருமானம் அனுமதிக்கப்படாத முறையில் இருந்தால், அவனை விட்டுவிடுங்கள். அவன் கடினமாக முயற்சித்து வணக்க வழிபாடு புரியட்டும், (அவனைக் கெடுக்க நீங்கள் முயற்சிக்க வேண்டாம்) அவன் அனுமதிக்கப்படாத உணவை சாப்பிட்டுக்கொண்டு எவ்வளவு முயற்சித்து கஷ்டப்பட்டு வணக்க வழிபாடு புரிந்தாலும் அதை கெடுக்க அவனே போதுமானவன். (அதன் மூலம் அவனுக்கு எந்த பயனுமில்லை.) நூல்:- அல்கபாஇர் இமாம் அத்தஹபீ, ஷுஅபுல் ஈமான்

 

அனுமதிக்கப்படாத (ஹராமான) உணவை உண்பவன் எவ்வளவு சிரமப்பட்டு வணக்க வழிபாடு புரிந்தாலும், ஒருபோதும் அதை இறைவன் ஏற்றுக்கொள்ளமாட்டான். 

 

இறைநேசர் இப்ராஹீம் அத்ஹம் (ரஹ்) அவர்களிடம், "இறைவனின் திருநாமங்களில் (இஸ்முல் அஃளம் எனும்) மிக மகத்தானது எது?" என்று ஒருவர் கேட்டார். அன்னார், "அனுமதிக்கப்படாத முறையில் ஒரு கவள உணவு, உன் வயிற்றினுள் சென்றுவிடாமல் பாதுகாத்துக்கொள். மனதிலிருந்து உலக ஆசையை வெளியேற்று. பிறகு, எந்தத் திருநாமத்தை விரும்புகிறாயோ, அதனை ஓதுவாயாக! அதுவே 'இஸ்முல் அஃளம்' ஆகிவிடும்." என்று பதிலளித்தார்கள். நூல்:- ஃபவாயிதுல் ஃபுஆது, பக்கம்-97

 

சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ( مَنْ أَنْفَقَ الْحَرَامَ فِي الطَّاعَةِ كَمَنْ طَهَّرَ الثَّوْبَ بِالْبَوْلِ وَالثَّوْبِ لَا يُطَهِّرُهُ إِلَّا الْمَاءُ وَالذَّنَبَ لَا يُكَفِّرُهُ إِلَّا الْحَلَالُ ) தடுக்கப்பட்ட வருவாயை நற்காரியத்திற்கு செலவழிப்பவன், சிறுநீரில் ஆடையை சுத்தம் செய்பவனைப் போன்றவனாவான். ஆடையை தண்ணீரில் தான் சுத்தம் செய்யமுடியும். (அதுபோல்) அனுமதிக்கப்பட்ட வருவாய் மூலம் செய்யப்படும் நற்காரியங்கள் தான் பாவத்திற்குரிய பரிகாரமாகும். நூல்:- அல்கபாஇர் இமாம் அத்தஹபீ

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنِ اشْتَرَى ثَوْبًا بِعَشَرَةِ دَرَاهِمَ وَفِي ثَمَنِهِ دِرْهَمٌ حَرَامٌ ، لَمْ يَقْبَلِ اللَّهُ لَهُ صَلَاةً مَا كَانَ عَلَيْهِ ) பத்து வெள்ளிக்காசுகள் கொடுத்து ஒருவர் ஓர் ஆடையை வாங்கினார். அதில் ஒன்பது வெள்ளிக்காசுகள் ஹலாலாகும். ஒரேயொரு வெள்ளிக்காசு மட்டும் ஹராமாகும். இந்த ஆடையை அவர் அணிந்திருக்கும் காலமெல்லாம் அவரது தொழுகை ஏற்றுக்கொள்ளப்படாது. அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்னது அஹ்மத், மிஷ்காத் பக்கம்:243

 

ஒருமுறை ஜனாதிபதி அலீ (ரலி) அவர்கள் கூஃபா நகர பள்ளிவாசல் ஒன்றிற்கு தொழச் சென்றபோது தன்னுடைய வாகனத்தை அங்கிருந்த ஒரு அடிமையிடம் கொடுத்து (இதைக் கொஞ்ச நேரம் பிடித்திரு! என்று கூறி அவனிடம் கொடுத்து) விட்டு சென்றார்கள். தொழுது முடித்த பிறகு, அந்த அடிமைக்கு (அன்பளிப்பாகக்) கொடுப்பதற்கு ஒரு பொற்காசை எடுத்துக்கொண்டு வந்தார்கள். வந்து பார்த்தபோது (வாகனம் மட்டுமே நிற்கிறது) வாகனத்தின் கடிவாளத்தைக் காணவில்லை. (அதை அவன் எடுத்துக்கொண்டு தலைமறைவாகிவிட்டான் என்பதை அறிந்துகொண்டார்கள்.) பிறகு அங்கிருந்த ஒருவரை அழைத்து வாகனத்துக்குரிய கடிவாளம் ஒன்றை வாங்கிவர ஒரு பொற்காசை கொடுத்து அனுப்பினார்கள். அவரும் வாங்கி வந்து கொடுத்தார்.

 

வாங்கி வந்த கடிவாளத்தை பார்த்த அலீ (ரலி) அவர்கள், ( سُبْحَانَ اللَّهِ! إِنَّهُ خِطَامُ دَابَّتِي ) “சுப்ஹானல்லாஹ்! இது என்னுடைய வாகனத்தின் கடிவாளம் ஆயிற்றேஎன்றார்கள். கடிவாளத்தை வாங்கி வந்தவர், ( اشْتَرَيْتُهُ مِنْ غُلَامٍ بِدِينَارٍ ) “இதை ஒரு அடிமையிடம் இருந்துதான் ஒரு பொற்காசுக்கு வாங்கினேன்என்று கூறினார்.

 

அலீ (ரலி) அவர்கள், ( سُبْحَانَ اللَّهِ! أَرَدْتُ أَنْ أُعْطِهِ إِيَّاهُ حَلَالًا، فَأَبَى إِلَّا أَنْ يَأْخُذَهُ حَرَامًا ) “சுப்ஹானல்லாஹ்! நான், அந்த ஒரு பொற்காசை (ஹலால் எனும்) அனுமதிக்கப்பட்ட முறையில் அவனுக்கு கொடுக்க நாடினேன். ஆனால் அவனோ அதை மறுத்தவனாக (ஹராம் எனும்) தடுக்கப்பட்ட முறையில் அதை எடுத்துக்கொண்டானேஎன்று கூறினார்கள். நூல்:- இஸ்ராஜுல் மஸாபீஹி லிஜல்சத்தி ஸலாத்தித் தராவீஹ் பாடம்-21 ஆம் இரவு

 

"ஆக்கப் பொறுத்தவன்; ஆறாப் பொறுக்கவேண்டாமா?" என்பது கிராமத்துச் சொல்வழக்கு.

 

அந்த அடிமை கொஞ்ச நேரம் பொறுத்திருந்தால் அந்த ஒரு பொற்காசு ஹலாலான முறையில் அவனுக்கு கிடைத்திருக்கும். அவன் அவசரப்பட்டதால் அதே ஒரு பொற்காசு தான் கிடைத்தது. ஆனால், அது ஹராமான முறையில் கிடைத்தது.

 

ஒருவருக்கு இவ்வளவுதான் பொருளாதாரம் கிடைக்கவேண்டும் என இருந்தால் அது எப்படியும் கிடைத்துவிடும். அதை பெறுவதில் தான் மனிதன் அறியாமையால் அவசரப்பட்டுவிடுகிறான். அலீ (ரலி) அவர்கள் அவனுக்கு ஒரு பொற்காசு கொடுத்துவிடலாம் என நினைத்தார்கள். அவன் பொறுமையுடன் நின்றிருந்தால், அவனுக்கு கிடைக்கவேண்டிய பொருள் (ஹலால் எனும்) அனுமதிக்கப்பட்ட முறையில் கிடைத்திருக்கும். அதில் அருள்வளம் ஏற்பட்டிருக்கும். கடிவாளத்தை களவாடி சென்று விற்றதால் அவனுக்கு கிடைக்கவேண்டிய பொருள் கிடைத்துவிட்டது. ஆனால், அந்தப் பொருளில் அருள்வளம் அகற்றப்பட்டிருக்கும். திருடிய குற்றத்திற்கான அவன் பாவத்திற்குரியவனாக ஆகிவிட்டான்.

 

ஒருசில மனிதர்கள் பேராசையால் உந்தப்பட்டு ஷைத்தானின் சூழ்ச்சிக்கு ஆளாகி தடுக்கப்பட்ட காரியங்களில் ஈடுபட்டு, அனுமதிக்கப்பட்ட முறையில் கிடைக்கும் பொருளாதாரத்தை அனுமதிக்கப்படாத முறையில் பெற்றுக்கொள்கின்றனர். இது முற்றிலும் பெரும் பாவமான செயலாகும்.

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( يَا أَنَسُ أَطِبْ كَسْبَكَ تَجِبُ دَعْوَتُكَ فَإِنَّ الرَّجُلَ لَيَرْفَعُ اللُّقْمَةَ مِنَ الْحَرَامِ إِلَى فِيهِ فَلَا يُسْتَجَابُ لَهُ دَعْوَةُ أَرْبَعِينَ يَوْمًا ) அனஸ்! உன் உழைப்பை சுத்தமாக்கிக் கொள்! தகாத உழைப்பிலிருந்து ஒரு கவளம் (உணவு) சென்றால் நாற்பது நாள்களுக்குப் பிரார்த்தனைகள் ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது. நூல்:- தப்ரானீ, பைஹகீ, அல்கபாஇர் இமாம் அத்தஹபீ

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ لَمْ يُبَالِ مِنْ أَيْنَ اكْتَسَبَ الْمَالَ لَمْ يُبَالِ اللَّهُ مِنْ أَيِّ بَابٍ أَدْخَلَهُ النَّارَ ) தன் உழைப்பைப் பற்றி பொருட்படுத்தாதவனை அவன் எந்த வாசல் வழியாக நரகில் நுழைவதையும் அல்லாஹ் பொருட்படுத்தமாட்டான். நூல்:- அல்கபாஇர் இமாம் அத்தஹபீ

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لِأَنْ يَجْعَلَ أَحَدُكُمْ فِي فِيهِ تُرَابًا خَيْرٌ مِنْ أَنْ يَجْعَلَ فِي فِيهِ حَرَامًا ) தகாத உணவை வாயில் வைப்பதைவிட மண்ணைக் கொண்டு அவன் வாயை நிரப்புவது மேலானதாகும். நூல்:- முஸ்னது அஹ்மத், அல்கபாஇர் இமாம் அத்தஹபீ

 

நபிமொழித் துறை நிபுணர் பேரறிஞர் அப்துல்லாஹ் பின் முபாரக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ( لِأَنْ أَرُدَّ دِرْهَمًاً مِنْ شُبْهَةٍ أَحَبُّ إِلَيّ مِنْ أَنْ أَتَصَدَّقَ بِمِائَةِ أَلْفٍ وَمِائَةٍ ) (ஹலாலா ஹராமா என அறிந்து கொள்ள முடியாத) சந்தேகத்திற்குரிய ஒரு வெள்ளிக்காசை நான் வேண்டாம் எனக் கூறுவது, ஒரு இலட்சம் வெள்ளிக்காசுகளை தர்மம் செய்வதைவிட எனக்கு உவப்பானதாகும். நூல்:- அல்கபாஇர் இமாம் அத்தஹபீ, ஃபிக்ஹுல் அவ்லவியாத் அறிஞர் யூசுஃப் அல்கர்ளாவீ

 

நாம் உண்ணும் உணவிலும், உடுத்தும் உடையிலும், செலவளிக்கக்கூடிய காசு பணத்திலும் ''ஹராம் ஹலாலைபேணுபவராய் இருத்தல் மிகவும் அவசியம்

 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு அடிமை ஒருவன் இருந்தான். அவன் (அடிமை என்ற முறையில் தன் எசமானாகிய) அபூபக்ர் (ரலி) அவர்களுக்குத் (தனது சம்பாத்தியத்தில்) நிர்ணயிக்கப்பட்ட தொகையைச் செலுத்தி வந்தான். அபூபக்ர் (ரலி) அவர்கள் அவன் செலுத்தும் தொகையிலிருந்து உண்டு வந்தார்கள்.

 

ஒருநாள் அவன் ஏதோ ஒரு பொருளை கொண்டு வந்தான். அதிலிருந்து அபூபக்ர் (ரலி) அவர்கள் சிறிது உண்டார்கள். அப்போது அவர்களிடம் இருந்த அந்த அடிமை, "இது என்ன என்று உங்களுக்கு தெரியுமா?" என்று கேட்டான். அபூபக்ர் (ரலி) அவர்கள், "இது என்ன?" என்று கேட்டார்கள்.

 

அவன் நான் அறியாமை காலத்தில் ஒரு மனிதருக்குக் குறி சொல்லி வந்தேன். எனக்கு நன்றாகக் குறி சொல்லத் தெரியாது. ஆயினும், (குறி சொல்லத் தெரிந்தவன் போல் நடித்து) அவரை நான் ஏமாற்றி விட்டேன். அவர் அதற்காக எனக்குக் கூலி கொடுத்தார். நீங்கள் உண்டது (குறி சொன்னதற்காக) எனக்குக் கூலியாக கிடைத்த அந்தப் பொருளிலிருந்து தான்" என்று கூறினான்.

 

உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள் தமது கையை (வாய்க்குள்) நுழைத்துத் தம் வயிற்றிலிருந்த அனைத்தையும் வாந்தி எடுத்துவிட்டார்கள். எனினும் ஒரு கவளம் உணவு வெளியேறவில்லை.

 

( إِنَّ هَذِهِ لَا تَخْرُجُ إِلَّا بِالْمَاءِ ) “தண்ணீர் குடித்து முயற்சி செய்யுங்கள்” என்று சொல்லப்பட்டது. உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி, தண்ணீர் குடித்துவிட்டுத் தொண்டையில் விரலைச் செலுத்தி வாந்தி எடுத்தார்கள். சாப்பிட்ட (அனைத்து) உணவும் வெளியேறிவிட்டது.

 

அப்போது அபூபக்ர் (ரலி) அவர்களிடம், "அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவானாக! இந்த ஒரு கவளத்தை வெளியேற்றவா இவ்வாறு கஷ்டப்பட்டீர்கள்?" என  வினவப்பட்டது. அதற்கு அவர்கள், ( لَوْ لَمْ تَخْرُجْ إِلَّا مَعَ نَفْسِي لَأَخْرَجْتُهَا ) "ஆம்! என் உயிருடன் தான் அக்கவள உணவு வெளியேறுவதாயிருந்தாலும் அவ்வாறே செய்திருப்பேன். ஏனெனில், ( كُلُّ جَسَدٍ نَبَتَ مِنْ سُحْتٍ فَالنَّارُ أَوْلَى بِهِ ) 'ஹராமானதை உண்ட உடலுக்கு நரகமே மிகத் தகுதியான இடம்' என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியதை கேட்டுள்ளேன்" என்றார்கள். நூல்:- புகாரீ-3842, ஹில்யத்துல் அவ்லியா 1/31, அல் கபாஇர் இமாம் அத்தஹபீ,

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( وَلَا يَكْسِبُ عَبْدٌ مَالًا حَرَامًا فَيُنْفِقُ مِنْهُ فَيُبَارَكُ لَهُ فِيهِ وَلَا يَتَصَدَّقُ مِنْهُ فَيُقْبَلُ مِنْهُ وَلَا يَتْرُكُهُ خَلْفَ ظَهْرِهِ إِلَّا كَانَ زَادَهُ إِلَى النَّارِ إِنَّ اللَّهَ لَا يَمْحُو السَّيءَ بِالسَّيِّءِ وَلَكِنْ يَمْحُو السَّيءَ بِالْحُسَنِ  ) ஒரு மனிதன் தவறான வழிமுறையில் சம்பாதித்து செலவழித்தால் அதில் அவனுக்கு அருள்வளம் செய்யப்படுவதில்லை. மேலும் அதிலிருந்து அவன் தானதர்மம் செய்தால் அது ஏற்றுக்கொள்ளப்படாது. அதை அவன் விட்டு விட்டு இறந்துவிட்டால், அதுவே அவன் நரகத்திற்கு செல்வதற்குரிய சாதனமாகும். நிச்சயமாக அல்லாஹ் கெட்டதை கொண்டு கெட்டதை அழிப்பதில்லை. மாறாக, நல்லதைக் கொண்டே கெட்டதை அழிக்கின்றான் அறிவிப்பாளர்:-  அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் நூல்:- அல்கபாஇர் இமாம் அத்தஹபீ, முஸ்னது ஷுஅப், ளஈஃபுல் ஜாமிஉ-1625

 

ஒருவன் தவறான வழிகளில் சம்பாதித்த காசு பணத்தின் மூலம் சேமித்த தங்கம் வெள்ளி போன்ற ஆபரணங்கள், கட்டிடங்கள், தோட்டங்கள்  இன்ன பிற சொத்துக்களை சேமித்து வைத்துவிட்டு இறந்துவிட்டால் அந்த திரண்ட சொத்துக்கள் இருக்கும்வரை இவனுக்கு வேதனைத் தொடரும் என்கிறது இந்த நபிமொழி.

 

தவறான வருவாய் மூலம் தமது வாரிசுகளுக்கு சொத்து சேகரிப்பவன் தமக்குத் தாமே தீங்கிழைத்துக்கொள்கிறான். அந்த சொத்தின் மூலம் அவனின் வாரிசுகளும் நிம்மதி பெறப்போவதில்லை.

 

இமாம் கஸ்ஸாலீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ஒருவன் ஹராமானவற்றை சாப்பிட்டால் அவன் தெரிந்து சாப்பிட்டாலும் தெரியாமல் சாப்பிட்டாலும், அவன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவனது உடல் உறுப்புகள் பாவங்களில் ஈடுபட்டுவிடும். நூல்:- இஹ்யா

 

பாலையோ அல்லது விஷத்தையோ தெரிந்து சாப்பிட்டாலும் அல்லது தெரியாமல் சாப்பிட்டாலும் அதன் பாதிப்பு உடலில் ஏற்பட்டுவிடுவதைப் போன்று ஹராமான உணவின் தாக்கம் அவனது செயல்பாடுகளில் கண்டிப்பாக வெளிப்படும்.

 

பேரறிஞர் மௌலானா அஷ்ரஃப் அலீ தானவி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ஹராமான உணவை சாப்பிடுவதால் நான்கு விதமான தீங்குகள் ஏற்படுகிறது. 1) உள்ளத்தின் ஒளி மங்கிவிடுகிறது. 2) தீய எண்ணங்கள் மற்றும் மனக்குழப்பங்கள் ஏற்பட்டுவிடுகிறது. 3)  சோம்பல் மற்றும் சடைவு இயல்பாகிவிடுகிறது. 4)  நற்காரியங்கள் புரிய ஊக்கம் ஏற்படுவதில்லை. நூல்:- ஜஸாயே அஃமால்

 

நகரங்களில் ஆன்லைன் மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் பெருகிவிட்டன. அதனால் வீடுகளில் சமைத்து உண்ணும் பழக்கம் குறைந்து வருகிறது.  

 

கையில் ஒரு ஸ்மார்ட் போன் இருந்தால் போதும். நாம் ஆர்டர் செய்யும் சைவ, அசைவ உணவுகள் வீடு தேடி வரும் அவசர காலம் இது. இக்காலத்தில் முஸ்லிம்கள் ஹலால் உணவு பற்றி விழிப்புணர்வுடன் இருப்பது கட்டாயமாகும். ஹலாலான உணவு வணக்க வழிபாடுகள் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கான அடிப்படை என்று மார்க்கம் வலியுறுத்துகிறது.

 

உணவங்களில் உள்ள அசைவ உணவை தவிர்ந்து கொள்வதே சிறந்தது. உணவகங்களில் உள்ள ஹலால் போர்டை பார்த்து நாம் ஏமாந்து விடக்கூடாது. அசைவ உணவை உண்ண வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அதைப் பற்றி தீர விசாரிக்க வேண்டும்.

 

குர்ஆனை மனனமிட

 

பேரறிஞர் துல்ஃபிகார் அஹ்மத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். நான் பார்த்த ஒரு நிகழ்வை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்: அமெரிக்காவில் உள்ள எங்கள் மதரஸாவில் ஒரு சிறுவன் இரண்டு ஆண்டுகளில் கடைசி ஜுஸ்வை மட்டும் ஓதியிருந்தான். அதற்கு மேல் நகரவே இல்லை. இவ்வளவு காலதாமதம் ஆகிறதே என்று நமக்கு பெரும் நெருடலாக இருந்தது. ஆனால், அச்சிறுவன் ஸ்கூலில் முதல் மார்க் வாங்கியவன். (Presidential Award) ஜனாதிபதி விருதுக்கு அவனது பெயர் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. அப்படிப்பட்ட பையனுக்கு நேர்ந்த சோதனை என்ன? ஏன் குர்ஆனிய அறிவை விட்டும் ஏன் தூரமாக்கப்பட்டிருக்கிறான்? என்ற சிந்தனையில் இருந்தேன்.

 

ஒருநாள் ஒரு விஷயம் மனதில் நெருடியது. அவனை அழைத்து, "நீ என்ன சாப்பிடுகிறாய்?" என்று கேட்டேன். அதற்கு அச்சிறுவன், "ஏழெட்டு அமெரிக்க ஹோட்டல்களின் பெயர்களைச் சொல்லி இந்த ஹோட்டலில் இது சாப்பிடுவேன்; அந்த ஹோட்டலில் அது சாப்பிடுவேன்" என்று அடுக்கினான். அப்போதுதான் வெளியில் உள்ள ஹராமான உணவுகளை உட்கொள்ளுவதின் பீடை தான் அவனுக்கு குர்ஆனின் பரக்கத்தை இழக்க செய்துவிட்டது என்று புரிந்தது.

 

அந்த அப்பாவி சிறுவன் முன்னால் ஓதிக் கொண்டிருக்க, பின்னுள்ளதை மறந்து விடுகிறான். அவன் குறித்து ஆசிரியர்களுக்கும் சிரமமாகிவிட்டது.  எனவே, அவனது பெற்றோரை அழைத்து, "உங்கள் மகனுக்கு வெளி உணவு வாங்கிக் கொடுப்பீர்கள் என்றால், அவனை கையோடு அழைத்துச் சென்று நீங்களே ஓதிக் கொடுங்கள். எங்களிடம் தான் அவன் ஓத வேண்டும் என்றால் வெளி உணவு வாங்கித் தர மாட்டோம் என்று வாக்குறுதி கொடுங்கள்" என்று கூறினோம்.

 

அச்சிறுவனின் தாய் மார்க்க பற்றுள்ள பெண்ணாக இருந்தார். தந்தையும் ஹலாலாக முறையில் சம்பாதிப்பவராக இருந்தார். எனவே, இருவரும் அவனுக்கு வீட்டில் ஹலாலான சாப்பாடு தான் கொடுப்போம் என்று வாக்குறுதிய அளித்தனர். பிறகு நமக்கே திகைப்பை உண்டாக்கும் நிகழ்வு நடந்தது. ஆம்! அச்சிறுவன் அடுத்த ஒரே வருடத்தில் முழு குர்ஆனையும் ஓதி முடித்துவிட்டான். இப்படித்தான் நமது உணவு நம்மில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

 

சாக்லேட், பிஸ்கட் போன்ற உணவுப் பொருள்கள், மருந்து வகைகள் சிலவற்றில் பன்றிக் கொழுப்பு, அபீன், ஆல்கஹால் போன்ற ஹராமான சில கலவைகள் கலக்கப்படுவதாக அவற்றை தயாரிக்கின்ற நிறுவனமே கூறுகிறது. எனவே, அவ்வகையான உணவுப் பொருள்களையும் மருந்துகளையும் நாம் உண்ணும்போது, அது நம்மிடம் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது உறுதி.

 

மனிதனின் நல்லறங்கள் அல்லாஹ்விடம் அங்கீகாரம் பெறுவதற்கு, அவன் அனுமதிக்கப்பட்டதை (ஹலாலைப்) பேணியவனாக இருக்க வேண்டும். எனவே, நாம் சம்பாத்தியத்தில் ஹலாலைப் பேணி வாழ்வதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

 

1 comment:

  1. ماشاءاللهபயானுக்கு ஏற்ற அற்புதமான தகவல்கள்.

    ReplyDelete

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...