Search This Blog

Wednesday, 21 June 2023

தியாகிகள்

 

தியாகிகள்

 

قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَى فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانْظُرْ مَاذَا تَرَى قَالَ يَا أَبَتِ افْعَلْ مَا تُؤْمَرُ سَتَجِدُنِي إِنْ شَاءَ اللَّهُ مِنَ الصَّابِرِينَ

 

(இறைத்தூதர் இப்ராஹீம்-அலை அவர்கள் நடமாடக்கூடிய வயதை அடைந்த தமது மகனார் இஸ்மாயில்-அலை அவர்களை நோக்கி!) என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்தித்துச் சொல்வீராக! என்று கூறினார். (மகனார் இஸ்மாயீல்-அலை) என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால், என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள். என்று கூறினார். திருக்குர்ஆன்:- 37:102

 

தியாகம் என்றாலே இறை மார்க்கத்திற்காக அல்லது பிறருடைய நலனுக்காக தனது சொந்த நலனை அல்லது தன்னையே இழக்க துணிவது தான். இறைவனின் அன்பைப் பெரும் நோக்கில் வீடு வாசல், சொத்து சுகம், ஆசாபாசம் ஏன்? பெத்த பிள்ளையே ஆனாலும் அர்ப்பணம் செய்ய முன்வருவது தியாகம் ஆகும். இதையே இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்கள் வரலாறு நமக்கு கற்றுத்தருகிறது.

 

இப்ராஹீம் (அலை) அவர்களின் குடும்பம்

 

இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்கள், அல்லாஹ் கூறினான் என்பதற்காக தமது மனைவி மற்றும் பால்குடி குழந்தையை மக்கள் நடமாட்டம் இல்லாத பாலைவனத்தில் விட்டு விட்டு, “இறைவா! என் மனைவி பிள்ளைகளை காப்பாற்றுவாயாக! அவர்கள் உணவில் அருள்வளம் புரிவாயாக! இந்த இடத்தை மக்கள் விரும்பும் இடமாக ஆக்குவாயாக!” என்றெல்லாம் பிரார்த்தனை செய்துவிட்டு அவர்களிடம் கொஞ்சம் உணவையும் தண்ணீரையும் மட்டும் கொடுத்துவிட்டு இறைவனுக்காக திரும்பிப் பார்க்காமல் சென்றார்கள். அப்போது நபியவர்களின் மனைவி ஹாஜர் (அலை) அவர்கள் இவ்வாறு எங்களை இங்கு விட்டு விட்டு செல்கிறீர்களே! ( آللَّهُ الَّذِي أَمَرَكَ بِهَذَا ) "அல்லாஹ் தான் உங்களுக்கு இப்படி கட்டளையிட்டானா? என்று கேட்க, நபியவர்கள், "ஆம்" என்று சொன்னார்கள். அதற்கு ஹாஜர் (அலை) அவர்கள், ( إِذًا لاَ يُضَيِّعُنَا ) "அப்படியென்றால் அவன் எங்களைக் கைவிட மாட்டான்" என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-3364, அல்பிதாயா வந்நிஹாயா

 

“இது இறைவனின் உத்தரவே” என்று தமது கணவர் கூறியதும் அந்த அம்மையார் எதுவும் பேசாமல் கோபப்படாமல் கணவரின் செயலுக்கு கட்டுப்பட்டார்கள். இதுவே, இறைவனுக்குரிய தியாகத்தில் மிகவும் உயர்ந்ததாகும்.

 

இப்ராஹீம் (அலை) அவர்களின் வயோதிகப் பருவமான எண்பத்தி ஆறாவது வயதில் தான் முதல் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையை அறுத்து பலியிடுவதாக கனவு கண்டபோது அதை இறை உத்தரவு என்று உறுதி கொண்டு, அந்த உத்தரவை தமது மனைவி மக்களிடம் எடுத்துரைத்தார்கள். அதற்கு அவர்களும் கட்டுப்பட்டார்கள் என்பதுதான் இங்கே கவனிக்கத்தக்கது. இதுவே, தியாகங்களுக்கான முன்னோடியாகும்.

 

ஹாஜர் (அலை) அவர்கள் முன்னிலையில் ஷைத்தான் தோன்றி, "உமது ஒரேயொரு மகனை உமது கணவர் அறுத்து பலியிட அழைத்துச் செல்கிறாரே தாய் பாசத்தால் அதை நீ தடுத்திருக்க வேண்டாமா?" என்று வஞ்சக வார்த்தை கூறியபோது தான், ஹாஜர் (அலை) அவர்கள் வஞ்சகன் ஷைத்தானை அங்கிருந்து கல்லால் அடித்து விரட்டினார்கள். அதுவே, இன்று ஹஜ் யாத்திரிகர்கள் ஷைத்தானுக்கு கல் எறியும் வணக்கமாக மாறிப் போயிருக்கிறது.

 

தந்தை சொல்லுக்கு கட்டுப்பட்ட தனயன் இஸ்மாயீல் (அலை) அவர்கள் பலிப் பிராணியாகி முகங்குப்புறப் படுத்துக்கொண்டபோது இப்ராஹீம் (அலை) அவர்கள் பிஸ்மில்லாஹ் கூறி அறுப்பதற்கு தக்பீர் கூறினார்கள். அப்போது அந்தச் சிறுவர் மரணத்திற்கு தயாராகி "ஷஹாதத்" கலிமாவை கூறினார். நூல்:- அல்பிதாயா வந்நிஹாயா

 

இப்ராஹீம் (அலை), இஸ்மாயீல் (அலை) ஆகிய இருவரின் தியாகத்தின் நினைவாகவே, நாம் வருடந்தோறும் ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய பிராணிகளை குர்பானி கொடுத்து வருகிறோம்.

 

பேரறிஞர் இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். (தியாகிகளின் முன்னோடியான) இப்ராஹீம் (அலை) அவர்களைப் பற்றி அல்லாஹ் திருக்குர்ஆனில் 35 இடங்களில் புகழ்ந்து கூறியுள்ளான். அவற்றுள் அல்பகரா அத்தியாயத்தில் மட்டும் 15 தடவை கூறியுள்ளான். நூல்:- அல்பிதாயா வந்நிஹாயா

 

இறைவனுக்காக செய்யும் தியாகத்தில் நாங்கள் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்லர் என்பது போல், இப்ராஹீம் (அலை) அவர்கள் மற்றும் அவர்களின் மனைவி மக்களின் நிலைபாடு அமைந்துள்ளது.

 

சுருங்கக்கூறின்: இப்ராஹீம் (அலை) அவர்கள் இறைவனுக்காக தமது பெற்றோர், மனைவி, மக்கள், பொருளாதாரம் என அனைத்தையும் தியாகம் செய்ய தயாராக இருந்தார்கள். எனவே, இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு இருந்த தியாக உணர்வை சில வரிகளில் சுருக்கிவிட இயலாது.

 

மிகவும் உயர்வானது

 

உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (ஹிஜ்ரி) எட்டாம் ஆண்டு ஜமாத்துல் ஊலா மாதம் மூத்தா என்னும் இடத்திற்கு தமது படைப்பிரிவு ஒன்றை அனுப்பினார்கள். அப்படை பிரிவினருக்கு ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்களை தளபதியாக நியமித்து, ( زَيْدُ بْنُ حَارِثَةَ أَمِيرُ النَّاسِ، فَإِنْ قُتِلَ زَيْدٌ فَجَعْفَرُ بْنُ أَبِي طَالِبٍ، فَإِنْ قُتِلَ جَعْفَرٌ فَعَبْدُ اللَّهِ بْنُ رَوَاحَةَ، فَإِنْ قُتِلَ عَبْدُ اللَّهِ بْنُ رَوَاحَةَ فَلْيَرْتَضِ الْمُسْلِمُونَ بَيْنَهُمْ رَجُلًا، فَلْيَجْعَلُوهُ عَلَيْهِمْ ) "ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்கள் வீரர்களுக்குத் தளபதியாக இருப்பார். அவர் (போரில்) கொல்லப்பட்டால் ஜஅஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் தளபதியாக இருப்பார். அவரும் கொல்லப்பட்டால் அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்கள் தளபதியாக இருப்பார்.  அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்களும் கொல்லப்பட்டால் முஸ்லிம் வீரர்கள் தமக்கு மத்தியில் விரும்பும் ஒருவரைத் தேர்வு செய்து அவரை தங்களுக்கு தளபதியாக அமைத்துக் கொள்ளவும்" என்று கூறினார்கள்.

 

அவ்வாறே அந்த போரில் நபியவர்கள் குறிப்பிட்ட மூன்று நபித்தோழர்களும் கொல்லப்பட்டு உயிர்த்தியாகியாக ஆனார்கள். நூல்:- சீரத்து இப்னு ஹிஷாம், மஃகாஸீ இமாம் வாகிதீ, தலாயிலுந் நுபுவ்வா இமாம் பைஹகீ, அல்பிதாயா வந்நிஹாயா

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சொல்லிய வார்த்தையின் மூலம் தாம் நிச்சயமாக இந்தப் போரில் கொல்லப்படுவோம் என்று அந்த மூன்று நபித்தோழர்களுக்கும் உறுதியாகத் தெரியும். தாம் இறக்கப்போவது உறுதியாகத் தெரிந்த பின்னரும்கூட அந்தப் போரில் அவர்கள் கலந்து கொண்டதற்கு காரணம் அல்லாஹ்வுக்காக தமது உயிரைத் தியாகம் செய்வதை உயர்ந்த இறைவழிபாடாக அவர்கள் கருதினார்கள்.

 

இறைவனின் அன்புக்காக மட்டுமே என்று நாம் செய்கின்ற சிறிய பெரிய அனைத்து நற்செயலும் தியாகமே! ஆனால், அதில் மிக உயர்ந்த தியாகம் என்பது அறப்போரில் பங்கெடுத்து அல்லாஹ்விற்காக உயிரைத்தியாகம் செய்வதேயாகும். 


இஸ்லாம் தியாகத்தால் உருவானது. சதையை சகதையாக்கி, செந்நீரைத் தண்ணீராக விட்டு கலக்கி, எலும்பைச் செங்கலாக அடிக்கி, உயிரை கரணையாக்கி, கோடான கோடி உத்தமர்களால் எழுப்பப்பட்டதே இந்த இஸ்லாம்.

 

நபித்தோழர்கள்

 

அல்லாஹ்வும் அவர்களைப் பற்றி திருப்தியடைவான். அவர்களும் அல்லாஹ்வைப் பற்றி திருப்தி அடைவார்கள். திருக்குர்ஆன்:- 98:8


உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது. அண்ணல் நபி (ஸல்)அவர்கள் (தபூக் செல்வதற்கு முன்பு ஒருநாள் நிதி திரட்டிக்கொண்டிருந்தார்கள். அப்போது) தர்மம் செய்யுமாறு எங்களுக்கு கட்டளையிட்டார்கள். அப்போது என்னிடம் செல்வம் அதிகமாக இருந்தது. எனவே,  என்னுடைய செல்வத்தில் பாதியை நபியவர்களிடம் கொண்டு வந்தேன்.

 

அபூபக்ர் (ரலி) அவர்கள் தங்களிடம் இருந்த அனைத்து பொருள்களையும் கொண்டு வந்திருந்தார்கள். அப்போது நபியவர்கள், ( يا أبا بَكرٍ مَا أَبْقَيْتَ لأَهْلِكَ )  "அபூபக்ரே! உம்முடைய குடும்பத்தாருக்கு எதை விட்டு விட்டு வந்தீர்கள்?" என்று கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், ( أَبْقَيْتُ لَهُمُ اللَّهَ وَرَسُولَهُ ) “அவர்களுக்கு அல்லாஹ்வையும், அவருடைய தூதரையும் (அதாவது அவ்விருவரின் திருப்தியையும்) விட்டு வந்தேன்" என்று கூறினார்கள்.   நூல்:- அபூதாவூத்-1429 திர்மிதீ-3598, தாரிமீ-1601, ஹாகிம்

 

நம்மைப் படைத்த அல்லாஹ்வா? அல்லது தமது குடும்பமா? என்று யோசிக்கும்போது தம்மை படைத்த இறைவன் தான் முக்கியம் என்று முடிவெடுப்பது நல்லோர்களின் பண்பாகும். இறைத்தியாகிகளுக்கு இறைத்திருப்தியும் மிக விரைவாகவே கிடைத்துவிடும். 


அல்லாஹ்வுக்காக ஒன்றை தியாகம் செய்யும்போது அல்லாஹ், அதன் பரக்கத்தால் நமது குடும்பத்தை சிறப்பாக வாழ வைப்பான் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த நற்சிந்தனை இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்கள் நமக்கு கற்றுத் தந்தவையாகும்.

 

பெற்றோர்

 

அவனை அவனுடைய தாய் சிரமத்துடன் சுமந்தாள். சிரமத்துடனேயே அவனை அவள் ஈன்றாள். அவனைச் சுமப்பதற்கும் பால்குடி மறக்கச் செய்வதற்கும் முப்பது மாதங்கள் ஆகும்.   திருக்குர்ஆன்:- 46:15

 

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், பிடரியில் தமது தாயை தூக்கி வைத்துக்கொண்டு கஅபாவை தவாப் செய்துகொண்டிருந்த ஒரு மனிதனை கண்டார்கள். அப்போது அவர், ( يَا ابْنَ عُمَرَ أَتَرَانِي جَازَيْتُهَا ) “அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களே! நான் என் தாய்க்கு பிரதி உபகாரம் செய்துக் கொண்டிப்பதைப் பார்க்கிறீர்களா? என்று கேட்டார். அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் (அவரிடம்), ( وَلَا بِطَلْقَةٍ وَاحِدَةٍ مِنْ طَلَقَاتِهَا وَلَكِنْ قَدْ أَحْسَنْتَ وَاللَّهُ يُثِيبُكَ عَلَى الْقَلِيلِ كَثِيرًا )  "இல்லவேயில்லை; உன்னை பெற்றெடுக்கும்போது அவள் விட்ட ஒரு மூச்சுக்கு இது ஈடாக மாட்டாது. என்றாலும், நீர் நன்மையையே செய்திருக்கிறீர், அல்லாஹ், உமக்கு சிறியவற்றுக்கும் நிரப்பமான வெகுமதியை வழங்குவானாக!" என்று கூறினார்கள். நூல்:- அல்கபாஇர் இமாம் அத்தஹபீ

 

தமது பெற்றோருக்கு ஒரு சிறிய நலவை செய்துவிட்டு, ஏதோ அவர்களுக்கு முழுமையான பிரதி உபகாரம் செய்தது போல் எண்ணிக்கொள்ளாதே மனிதா! என்கிறது இந்த நிகழ்வு.

 

ஒரு பெண் தனது வயிற்றில் வளரும் சிசுவை பெற்றெடுக்க பிரசவத்தின்போது வயிற்றை கிழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டாலும்கூட அதற்கும் அவள் தயங்குவதில்லை. அவள் தனது குழந்தைக்காக உடல் ஆரோக்கியத்தையும் தியாகம் செய்ய துணிந்துவிடுகிறாள்.

 

மனிதன் பிறப்பதற்கு இறைவனுக்கு அடுத்து பெற்றோரே காரணம். ஒரு பெண் கர்ப்பம் தரித்தது முதல் பெற்றெடுத்துப் பாலூட்டி வளர்த்து ஆளாக்கும்வரை அவள் செலுத்தும் அக்கறை, காட்டும் பாசம், செய்யும் பணிவிடைகள், படும் அவஸ்தைகள் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை. அவள் தனது பிள்ளைகளுக்காக செய்யும் தியாகத்திற்கு ஈடு ஏதுமில்லை என்கிறது திருக்குர்ஆன்.

 

அப்துல்லாஹ் பின் அம்ரு பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒரு மனிதர் அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, "நாயகமே! என்னிடத்தில் செல்வமும் இருக்கிறது. எனக்கு ஒரு மகனும் இருக்கின்றான். (இந்நிலையில்) என்னுடைய தந்தை எனது செல்வத்தின் மீது தேவையாகிறார். (எனக்கும் கொடுத்தாக வேண்டும் என்று வற்புறுத்துகிறார். நான் என்ன செய்வது?)" என்று வினவினார். அதற்கு நபியவர்கள், ( أَنْتَ وَمَالُكَ لِوَالِدِكَ ) "நீயும் உமது செல்வமும் உன்னுடையத் தந்தைக்குச் சொந்தமானதே. (அதாவது, உன் தந்தைக்கு நீ கொடுக்கத்தான் வேண்டும். அது உம்மீது கடமையாகும்)" என்று கூறினார்கள். நூல்:- அபூதாவூத்-3063, இப்னுமாஜா-2283, முஸ்னது அஹ்மத்

 

பிள்ளைகள் பெற்றோருக்கு பொன்னையும், பொருளையும் எவ்வளவுதான் அள்ளித்தந்தாலும்கூட பிள்ளைகளுக்காக பெற்றோர்கள் செய்த  தியாகத்திற்கு ஈடாகாது.

 

குழந்தையின் கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொள்ளும் ஜீவன் தான் தந்தை. தாம் ஒழுங்காக உண்ணாவிட்டாலும் உடுத்தாவிட்டாலும் அதை பொருட்படுத்தாமல் தம்முடைய பிள்ளைகள் நன்றாக இருக்கவேண்டும் என்று நினைத்து ஓடாய் தேய்ந்து மெழுகாய் உருகுபவர் அவர். அவர்களின் நிறைவைத் பார்த்து ஏற்படும் கண்குளிர்ச்சி ஒன்றையே பெரும் செல்வமாக கருதுபவர். எனவே, தந்தையின் தியாகத்திற்கு ஈடில்லை.

 

கணவர்

 

ஆண்களே பெண்களை நிர்வகிப்போர் ஆவர். அவர்களின் சிலரைவிட வேறு சிலரை அல்லாஹ் மேன்மையாக்கியாருப்பதும், ஆண்கள் தம் செல்வங்களை (பெண்களுக்காக)ச் செலவு செய்வதுமே இதற்குக் காரணம். எனவே, நல்ல பெண்கள் கட்டுப்பட்டு நடப்பார்கள். (கணவன்) இல்லாத நேரத்தில் அல்லாஹ்வின் பாதுகாப்பைக் கொண்டு (தமது கற்பையும் கணவனின் உடமைகளையும்) அவர்கள் பாதுகாப்பார்கள். திருக்குர்ஆன்:- 4:34

 

அல்லாஹ் குடும்பத்தின் தலைமைப் பொறுப்பை ஆணிடம் கொடுத்திருக்கிறான் என்பதை மேற்கண்ட வசனம் சுட்டிக்காட்டுகிறது. ஏனென்றால், அந்தப் பொறுப்பை ஏற்று நடத்த அவனால் முடியும் என்ற சிறப்புத் தன்மையை அவன் பெற்றிருக்கிறான். குடும்பத் தலைவரின் மிக முக்கிய பொறுப்பு, தம்முடைய குடும்ப உறுப்பினர்களை பாதுகாப்பதும் அவர்களுக்கு பாதுகாப்பான மகிழ்ச்சியான சூழ்நிலையை உருவாக்கிக் கொடுப்பதுமாகும்.

 

பாதுகாப்பு என்ற பதம் பொதுவாக உடல், உணர்வு மற்றும் எல்லாவித நலன்களையும் உள்ளடக்கிக் கொள்கிறது. கணவன் தன் மனைவியை எல்லா விதத்திலும் பாதுகாக்க  முயற்சிப்பது கடமையாகும் என்கிறது இஸ்லாம்.

 

முஆவியா பின் ஹைதா (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருவர் பேராசான் பெருமானார் (ஸல்) அவர்களிடம், "கணவன் தன் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமை என்ன?" என்று கேட்டார். அதற்கு நபியவர்கள், ( أَنْ يُطْعِمَهَا إِذَا طَعِمَ وَأَنْ يَكْسُوَهَا إِذَا اكْتَسَى ) "அவன் உண்ணும்போது அவளுக்கும் உணவளிக்கட்டும். உடுத்தும்போது அவளுக்கும் உடையணிவிக்கட்டும்" என்று கூறினார்கள். நூல்:- அபூதாவூத்-1830, இப்னுமாஜா-1840, முஸ்னது அஹ்மத், இப்னு ஹிப்பான், ஹாகிம்

 

ஒரு ஆண்மகன் ஒரு பெண்ணை மணமுடித்ததிலிருந்து இறப்பைச் சந்திக்கும் வரை, அவளைப் பாதுகாத்து பராமரிப்பதற்கும் அவளின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கும் அல்லும் பகலும் பாடுபடுகிறான். ஊன் உறக்கத்தை இழக்கிறான். சிலவேளை உடல் ஆரோக்கியத்தையும் இழக்கிறான்.

 

இன்பமூட்டும் விளையாட்டினாலும், ஆனந்தமூட்டும் வார்த்தைகளாலும் தமது மனைவிக்கு அவ்வபோது மகிழ்ச்சியூட்டி, தங்கள் இருவரிடையே உள்ள உறவை செழிப்பாக்குகிறான். மனைவியின் இதயத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக ஓடாய் தேய்கிறான்.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لَوْ كُنْتُ آمِرًا أَحَدًا أَنْ يَسْجد لِأَحَدٍ لأمرتُ الْمَرْأَةَ أَنْ تَسْجُدَ لِزَوْجِهَا، مِنْ عِظَم حَقِّه عَلَيْهَا )  (அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் யாரும் சிரவணக்கம் செய்யலாகாது. அவ்வாறு,) மனிதர்களில் ஒருவர் மற்றொருவருக்கு சிரவணக்கம் (சஜ்தா) செய்யுமாறு நான் கட்டளையிடுவதானால், கணவருக்குச் சிரவணக்கம் செய்யுமாறு மனைவிக்கு நான் கட்டளையிட்டுயிருப்பேன். அந்த அளவிற்கு மனைவி, கணவனுக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறாள். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-1079 இப்னுமாஜா-1842, முஸ்னது அஹ்மத், இப்னு அபீஷைபா, தப்சீர் இப்னு கஸீர்

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لَوْ تَعْلَمَ الْمَرْأَةُ حَقَّ الزَّوْجِ، لَمْ تَقْعُدْ مَا حَضَرَ غَدَاؤُهُ وَعَشَاؤُهُ حَتَّى يَفْرُغَ مِنْهُ ) ஒரு பெண் தன் கணவனின் உரிமையை அறிந்து கொண்டால் அவன் தன் பகல் உணவையோ இரவு உணவையோ சாப்பிட்டு முடிக்கிற வரை அவள் (சாப்பிட) அமர மாட்டாள். அறிவிப்பாளர்:- முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் நூல்:- தப்ரானீ, அல்பஸ்ஸார், ஸஹீஹுஜ் ஜாமிஉ-5259


அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒரு மனைவி தன் கணவனுக்குச் செய்ய வேண்டிய கடமையானது, அவனுக்கு (உடலில்) ஒரு புண் இருந்து அவள் அதை (சுத்தப்படுத்துவதற்காக தன் நாவினால்) நக்கினாலும் அவள் அவனுடைய கடமையை நிறைவேற்றியவளாக ஆக மாட்டாள். அறிவிப்பாளர்:- அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் நூல்:- ஹாக்கிம், இப்னு ஹிப்பான்

 

மனைவி தமது கணவனுக்காக முகம் சுளிக்கத்தக்க செயலையே செய்ய முற்பட்டாலும், அவள் அவனுடைய கடமையை நிறைவேற்றியவளாக ஆக மாட்டான். காரணம், அவளுக்காக அவன் செய்த தியாகங்கள் இதைவிட ஏராளம்.

 

பிறருக்கே முன்னுரிமை

 

மேலும், தாங்களே தேவையுள்ளவர்களாய் இருந்தாலும்கூட, தங்களைவிடப் பிறருக்கே முன்னுரிமை வழங்குகின்றார்கள். உண்மையாதெனில், யார் தங்கள் மனத்தின் உலோபித்தனத்திலிருந்து காப்பாற்றப்பட்டார்களோ அவர்களே வெற்றி பெறக்கூடியவர்களாவர்.  திருக்குர்ஆன்:- 59:9

 

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒரு மனிதர் கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களிடம் வந்து, "நாயகமே! எனக்கு (தாங்க முடியாத பசித்) துன்பம் ஏற்பட்டுள்ளது" என்று கூறினார். நபியவர்கள் (தம் தோழர்களை நோக்கி!),أَلاَ رَجُلٌ يُضَيِّفُ هَذِهِ اللَّيْلَةَ يَرْحَمُهُ اللَّهُ ) ‏ ) "இன்றிரவு இவருக்கு விருந்தளிக்கும் ஆள் உண்டா? அவருக்கு அல்லாஹ் அருள்புரிவான்" என்று கூறினார்கள்.

 

அப்போது அன்சாரிகளில் ஒருவர் (அபூதல்ஹா-ரலி அவர்கள்) "நாயகமே! நான் (இவருக்கு விருந்தளிக்கிறேன்)" என்று சொல்லி (அவரை அழைத்துக்கொண்டு) தம் வீட்டாரிடம் சென்று தம் துணைவியாரை நோக்கி, "(இவர்) நபியவர்களின் விருந்தாளி. (இவருக்குத் தராமல்) எதையும் நீ (உன்னிடமே) சேமித்து வைத்துக் கொள்ளாதே!" என்று கூறினார்.

 

அதற்கு அவர் மனைவி, "அல்லாஹ்வின் மீதாணையாக! நம் குழந்தைகளின் உணவைத் தவிர என்னிடம் வேறெதுவுமில்லை" என்று பதிலளித்தார். அவர், "(நம்) குழந்தைகள் உணவு உண்ண விருப்பினால் அவர்களை (எப்படியாவது சமாதானப்படுத்தி) தூங்கச் செய்துவிடு! பிறகு நீ வந்து, (வீட்டில் இருக்கும் உணவைத் தயாராக எடுத்து வைத்துவிட்டு, விளக்கை ஏற்றிவிடுவது போல் பாவனை செய்து) விளக்கை அணைத்துவிடு! (இருப்பதை விருந்தாளிக்குக் கொடுத்துவிட்டு) இன்றிரவு நாம் வயிற்றைச் சுருக்கிக்கொள்வோம்" என்று கூறினார். அவ்வாறே அவர் (மனைவி) செய்தார்.

 

பிறகு (விருந்தளித்த) அம்மனிதர் காலையில் நபியவர்களிடம் சென்றபோது, நபியவர்கள், ( لَقَدْ عَجِبَ اللَّهُ عَزَّ وَجَلَّ مِنْ فُلاَنٍ وَفُلاَنَةَ ) "இன்னார் இன்னாரை (உங்கள் இருவரை)க் கண்டு வல்லமையும் மாண்புமிக்க அல்லாஹ் வியப்படைந்தான்" என்று கூறினார்கள். அப்போதுதான் (மேற்காணும்) திருவசனம் அருளப்பெற்றது. நூல்:-  புகாரீ-4889, முஸ்லிம்

 

ஒருவன், ஆயிரம் ரூபாய் வைத்திருக்கிறான். அதிலிருந்து நூறு ரூபாயை தர்மம் செய்தால் அதற்கு பெயர் தியாகமல்ல. மாறாக! கடும் பசியிலிருக்கும் ஒருவனுக்கு ஒரு ரொட்டித் துண்டு கிடைக்கிறது. அதை உண்ணப்போகும்போது ஒரு வயது முதிர்ந்த மூதாட்டி பசியால் துவண்டிருப்பதைப் பார்க்கிறான். சற்றும் தன் பசியைப் பற்றிக் கவலைப்படாமல் அந்த ரொட்டித்துண்டை அந்த மூதாட்டிக்கு கொடுத்துவிடுகிறான் இதற்கு பெயர்தான் தியாகம்.

 

தனக்கு  தேவையென்றிருக்கும் ஒன்றை தன்னைவிட மிகவும் தேவையான ஒருவருக்கு அளிப்பதுதான் தியாகம். இதைத்தான் நபித்தோழர்கள் தங்களின் வாழ்க்கையில் செயல்படுத்திக்காட்டினார்கள்.

 

சலுகைகள் உண்டு  

 

கைஸ் பின் அபீ ஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. பத்ருப் போரில் கலந்து கொண்டவர்களின் (வருடாந்தர உதவித்) தொகை (நபர் ஒருவருக்கு, தீனார்/திர்ஹம்) ஐயாயிரம் ஐயாயிரமாக இருந்தது. உமர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சிக் காலத்தின்போது, "உதவித் தொகையை) மற்றவர்களைவிட இவர்களுக்கு அதிகமாக்கித் தருவேன்" என்று கூறினார்கள்.                                           நூல்:- புகாரீ-4022

 

பத்ருப்போரில் கலந்துகொண்ட நபித்தோழர்கள் தான் நபித்தோழர்களில் உயர்ந்த அந்தஸ்துடையவர்கள். எனவேதான், அவர்களின் தியாகத்தை மதிக்கும் விதமாக ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் அந்தப் பத்ரு நபித்தோழர்களுக்கு மட்டும் சில சிறப்புச் சலுகைகள் வழங்கியிருந்தார்கள் என்கிறது வரலாறு.

 

அப்துல்லாஹ் பின் மஅகில் அல்முஸனீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது. சஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி- இறந்தபோது) அவர்களுக்கு ஜனாஸா தொழுகை தொழவித்த) அலீ (ரலி) அவர்கள் (வழக்கமாகக் கூறும் தக்பீரைவிடக் கூடுதலாக ஒருமுறை) தக்பீர் கூறினார்கள்.

 

(இது பற்றி அவர்களிடம் கேட்கப்பட்ட போது) "சஹ்ல் (பின் ஹுனைஃப் - ரலி) அவர்கள் பத்ருப் போரில் கலந்து கொண்டார்கள். (பத்ருப் போரில் கலந்து கொண்டவருக்குப் பிறரைவிட தனிச் சிறப்பு உண்டு. அதனால் கூடுதல் தக்பீர் கூறினேன்)" என்று அலீ (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள்.  நூல்:- புகாரீ-4004

 

அன்சார்களில் ஒருவரான சஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி) அவர்கள் ஹிஜ்ரீ 38-ம் ஆண்டு (கி.பி.658) இறந்தார்கள். இவரது ஜனாஸாவுக்கு தொழுவித்த அலீ (ரலி) அவர்கள் மொத்தம் ஐந்து தக்பீர்கள் சொன்னார்கள் என்றும், ஆறு தக்பீர்கள் சொன்னார்கள் என்றும் இரு தகவல்கள் காணப்படுகிறது.   நூல்:- ஃபத்ஹுல் பாரீ, உம்தத்துல் காரீ

 

இந்திய திருநாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளுக்கு என்று சில சலுகைகள் இருக்கிறது. அதைப்போல், நாட்டின் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் தனது உயிரையும் தியாகம் செய்ய துணிந்திருக்கும் அந்த ராணுவ வீரர்களுக்கு என்று சில சலுகைகள் இருக்கிறது.

 

மறவாதே

 

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ( أُرِيتُ النَّارَ فَإِذَا أَكْثَرُ أَهْلِهَا النِّسَاءُ يَكْفُرْنَ ) “(நான் சூரிய கிரகணத் தொழுகையில் இருந்தபோது) எனக்கு நரகம் காட்டப்பட்டது. நரகவாசிகளில் அதிகம்பேர் பெண்களாகவே இருந்தனர். பெண்கள் நிராகரிக்கின்றனர்” என்று கூறினார்கள். “இறைவனையா அவர்கள் நிராகரிக்கிறார்கள்? என்று கேட்கப்பட்டது. நபியவர்கள், ( يَكْفُرْنَ الْعَشِيرَ، وَيَكْفُرْنَ الإِحْسَانَ، لَوْ أَحْسَنْتَ إِلَى إِحْدَاهُنَّ الدَّهْرَ ثُمَّ رَأَتْ مِنْكَ شَيْئًا قَالَتْ مَا رَأَيْتُ مِنْكَ خَيْرًا قَطُّ )  "கணவனை நிராகரிக்கிறார்கள். (அதாவது அவன் செய்த) உதவிகளுக்கு நன்றி செய்ய மறுக்கிறார்கள். அவர்களில் ஒருத்திக்குக் காலமெல்லாம் நீ உதவி செய்து, பிறகு உன்னிடம் ஏதேனும் (குறை) ஒன்றை அவள் கண்டால், உன்னிடத்திலிருந்து எந்த நலனையும் நான் கண்டதேயில்லை என்று சொல்லிவிடுவாள்" எனப் பதிலளித்தார்கள். நூல்:- புகாரீ-29

 

கணவனின் தியாகத்தை மனைவி மதிக்காது நன்றி கெட்டத்தனமாக  சுடுசொல் சொல்லும்போது, அவள் நரகத்தில் தண்டனைப் பெற நேரிடும் என்கிறது இந்த நபிமொழி.

 

அல்லாஹ் தியாகங்களை மதிக்கக்கூடியவன். எனவேதான், இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்கள் மற்றும் அவரது குடும்பத்தார்களின் தியாகங்களை நினைவு கூறுவதற்காகவே அல்லாஹ் நமக்கு வருடந்தோறும் (ஈதுல் அல்ஹா எனும்) பக்ரீத் பெருநாளை  தந்துள்ளான்.

 

தியாகங்களை மதிக்காமல் கொச்சைப்படுத்துவது ஷைத்தானின் பண்பாகும். எனவே, அந்த குணமுள்ளவர்கள் நரகத்தால் தண்டிக்கப்படுவதற்கு ஏற்றமானவர்களே ஆகும்.

 

இப்ராஹீம் (அலை) அவர்களின் வழி வந்த நல்லோர்கள், இஸ்லாத்திற்கு தியாகியானார்கள். பெற்றோர், பிள்ளைகளுக்கு தியாகியானார்கள். கணவன், மனைவிக்கு தியாகியானான். ஓர் இறைநம்பிக்கையாளர், பிற மக்களுக்கு தியாகியானார்.

 

ஆக, இவற்றில் மனத்தூய்மை இருந்தால் அவர்கள் அல்லாஹ்விடம் தியாகியாகி விடுவார்கள்.

 

உண்மையாகவே, அல்லாஹ்வுக்காக செய்யும் அனைத்து தியாகங்களும் உயர்ந்த இறைவழிபாடே ஆகும்.

 

இறை தியாகிகள் அல்லாஹ்விடம் மதிப்புக்கும், சலுகைக்கும் உரியவர்களே என்பதை நாம் உணர்ந்து செயல்பட அல்லாஹுத்தஆலா அருள்புரிவானாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

2 comments:

  1. ماشاء الله بارك الله في علمك

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ் 💐 வாழ்த்துக்கள் பாரகல்லாஹ் ஹஜ்ரத்...

    ReplyDelete

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...