Search This Blog

Tuesday, 7 March 2023

தகுதிக்கேற்ப

 

தகுதிக்கேற்ப

 

وَيُؤْتِ كُلَّ ذِي فَضْلٍ فَضْلَهُ

 

அருளுக்கு தகுதியுடைய ஒவ்வொருவருக்கும் (அல்லாஹ்) தன் அருளை பொழிகிறான். திருக்குர்ஆன்:- 11:3

 

அகிலத்தின் அதிபதியான ஏக இறைவன் அல்லாஹுத்தஆலா கல்வி, செல்வம், அதிகாரம், சோதனை ஆகியவற்றை தகுதியுடையோருக்குத்தான் வழங்குவான். அல்லாஹ் யாருக்கு எதை, எவ்வளவு, எப்போது தரவேண்டும் என்பதை மிகவும் அறிந்தவன் ஆவான்.

 

அல்லாஹ், தகுதியவற்றவருக்கு இவற்றை வழங்கினால் அழிவைத் துவக்கிவைக்கின்றான் என்றே பொருளாகும். தகுதியற்றவர்கள் கையில் சிக்கிய எதுவும் தரங்கெட்டுப்போகும் என்பதில் ஐயமில்லை.

 

தமக்கு என்ன தகுதி உள்ளதோ அதற்கு ஆசைப்படுவதும் அதற்காக முயற்சிப்பதும் தவறாகாது. மாறாக, தகுதிக்கு மீறி ஆசைப்படுவதும் முயற்சிப்பதும் வீணானவையே. அது அழிவில் ஆழ்த்திவிடும்.

 

“முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படுவதுப்போல்” என்பது கிராமத்துச் சொல்வழக்கு

 

இறைத்தூதர்களின் ஞானம்

 

பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( وَاللَّهِ لَوْ تَعْلَمُونَ مَا أَعْلَمُ لَضَحِكْتُمْ قَلِيلاً وَلَبَكَيْتُمْ كَثِيرًا وَمَا تَلَذَّذْتُمْ بِالنِّسَاءِ عَلَى الْفُرُشِ وَلَخَرَجْتُمْ إِلَى الصُّعُدَاتِ تَجْأَرُونَ إِلَى اللَّهِ ) நான் அறிவதை நீங்கள் அறிவீர்களாயின் குறைவாகவே சிரிப்பீர்கள்; அதிகமாக அழுவீர்கள்; மஞ்சங்களில் மனைவியருடன் இன்பம் துய்க்கமாட்டீர்கள். (மாறாக) நீங்கள் (வீடுகளை விட்டு) தெருக்கை நோக்கிச் சென்று அல்லாஹ்விடம் பணிந்து இறைஞ்சிக் கொண்டிருப்பீர்கள். அறிவிப்பாளர்:-  அபூதர் (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-2234

 

மறைமுகமாக சில பேரறிவு, இறைத்தூதர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. அந்த பேரறிவை உள்வாங்கிக் கொள்ளும் தகுதி சாமானிய மனிதர்களுக்கு இல்லை என்று இந்த நபிமொழி விவரிக்கிறது.

 

அல்லாஹ் எவருக்கு எந்தளவுக்கு தகுதி உள்ளதோ அந்த அளவுக்கு தான் அவருக்கு கல்வியையும், பிற அறிவையும் வழங்குவான்.

 

பிறருக்கு வழங்குதல்

 

ஒருமுறை ஆயிஷா (ரலி) அவர்கள் பயணத்தில் இருந்தார்கள். காலை உணவை வைக்கும்படி பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்கள். அப்போது நல்ல ஆடைகள் உடுத்திய ஒரு செல்வந்தர் கடந்து சென்றார். அவரை உணவு உண்ண அழைக்கும்படி ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். அழைக்கப்பட்டதும் அவர் வாகனத்தில் இருந்து இறங்கினார். உணவு உண்டார். அதன் பின் சென்று விட்டார். யாசகர் ஒருவர் வந்தார்.

 

அவருக்கு ஒரு ரொட்டித்துண்டை கொடுக்கும்படி உத்தரவிட்டார்கள். இந்த வித்தியாசத்தைப் பற்றி கேட்கப்பட்டபோது, ஆயிஷா (ரலி) அவர்கள்,   “நான் செய்தது போல் செய்யாதவரை இந்த செல்வந்தர் நம்மை கொண்டு சந்தோஷம் அடைந்திருக்க மாட்டார். இந்த யாசகர் யாசகம் கேட்டார். அவர் திருப்திப்படும் ஒன்றை கொடுக்கும்படி கூறினேன். ( أَنْزِلُوا النَّاسَ مَنَازِلَهُمْ )  ‘மக்களிடம் அவரவர்களின் தரத்துக்கேற்ப நடந்து கொள்ளுங்கள்’ என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நமக்கு கட்டளையிட்டுள்ளார்கள்” என கூறினார்கள் நூல்:- அபூதாவூத்-4202, கஷ்ஃபுல் ஃகஃபா

 

பாத்திரமறிந்து பிச்சை இடு! என்பது தமிழ் சொல்வழக்கு.

 

நம்மில் பலர் "அவன் இவனெல்லாம் எப்படி எப்படியோ இருக்கிறான். ஆனால், நான் எவ்வளவு பாடுபட்டாலும் என்னிடம் போதிய செல்வம் வந்து சேர்வதில்லை" என்று புலம்புபவர்கள் உண்டு. நிரப்பமான செல்வம் வழங்கப்பட்டு அதை நிர்வகிக்கும் திறன் நம்மிடம் இல்லாமல் இருக்கலாம். அதனால் அல்லாஹ் நமக்கு நிரப்பமான செல்வத்தைத் தராமல் இருக்கலாம்.

 

அவன் இவனெல்லாம் அந்த இந்த பதவிகளில் இருக்கிறான். நானும் அதற்காக பல்வேறு வழிகளில் முயற்சிக்கிறேன். ஆனாலும், முடியவில்லையே" என்று அங்காலயிப்பார்கள். நாம் அதற்காக கடுமையாக முயற்சித்தும் நமக்கு அது கிடைக்காதபோது, நாம் அந்த பதவிக்கு தகுதியில்லாமல் இருக்கலாம் என்று எண்ண வேண்டுமே தவிர, அல்லாஹ்வை குறை சொல்லக்கூடாது.

 

நபித்தோழர்களாக ஆவதற்கு...

 

அப்துர் ரஹ்மான் பின் ஸுபைர் பின் நுஃபைர் (ரஹ்) தமது தந்தை வாயிலாக அறிவிக்கிறார். மிக்தாத் பின் அல்அஸ்வத் (ரலி) அவர்களோடு ஒருநாள் அமர்ந்திருந்தோம். அப்போது அவரைக் கடந்து சென்ற ஒருவர், (மிக்தாத் - ரலி அவர்களிடம்), ( طُوبَى لِهَاتَيْنِ الْعَيْنَيْنِ اللَّتَيْنِ رَأَتَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَاللَّهِ لَوَدِدْنَا أَنَّا رَأَيْنَا مَا رَأَيْتَ، وَشَهِدْنَا مَا شَهِدْتَ ) "அருமை நாயகம் (ஸல்) அவர்களைக் கண்ட இந்த இரு கண்களுக்கும் சுபசோபனம் உண்டாகட்டும்! அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் கண்டதை நாங்களும் கண்டிருக்கவேண்டும் எனவும், நீங்கள் கலந்து கொண்டதில் நாங்களும் கலந்து கொண்டிருக்கவேண்டும் என்றும் ஆசைப்பட்டோம்" என்று கூறினார்.

 

அவர் கூறிய வார்த்தைகள் மிக்தாத் (ரலி) அவர்களை கோபமூட்டியது. அவர் நல்லதுதானே கூறினார். (ஏன் இவர் கோபப்படுகிறார்) என நான் ஆச்சரியப்பட்டேன். பின்பு மிக்தாத் (ரலி) அவர்கள் அவரை நோக்கிப் பின்வருமாறு கூறினார்கள்.

 

( مَا يَحْمِلُ الرَّجُلَ عَلَى أَنْ يَتَمَنَّى مُحْضَرًا غَيَّبَهُ اللَّهُ عَنْهُ ) அல்லாஹ் எந்தச் சபையைவிட்டு இவரை இல்லாமலாக்கிவிட்டானோ அந்தச் சபையில் அவர் இருந்திருக்க ஆசைப்பட அவரை எது தூண்டியது?

 

( لَا يَدْرِي لَوْ شَهِدَهُ كَيْفَ كَانَ يَكُونُ فِيهِ، وَاللَّهِ، لَقَدْ حَضَرَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَقْوَامٌ أَكَبَّهُمُ اللَّهُ عَلَى مَنَاخِرِهِمْ فِي جَهَنَّمَ لَمْ يُجِيبُوهُ، وَلَمْ يُصَدِّقُوهُ، أَوَلَا تَحْمَدُونَ اللَّهَ، إِذْ أَخْرَجَكُمْ تَعْرِفُونَ رَبَّكُمْ، مُصَدِّقِينَ لِمَا جَاءَ بِهِ نَبِيُّكُمْ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَدْ كُفِيتُمُ الْبَلَاءَ بِغَيْرِكُمْ؟ ) நபியவர்களின் சபையில் அவர் இருந்திருந்தால் அவர் முஸ்லிமாக இருந்திருப்பாரா? (அல்லது) இறைநிராகரிப்பாளராக இருந்திருப்பாரா? என்று அவர் அறியமாட்டார். அல்லாஹ்வின் மீதாணையாக! நரகில் மூக்குத் துவாரங்களின் மீது முகம் குப்புற விழுந்தக் கூட்டத்தினரும் நபியவர்களின் காலத்தில் இருந்துள்ளனர். (ஏனெனில்) அவர்கள் நபியவர்களின் அழைப்பை ஏற்கவில்லை; நபியவர்களை நம்பவுமில்லை. நீங்கள் அல்லாஹ்வைப் புகழ மாட்டீர்களா? ஏனெனில் உங்களை அவன் வெளியாக்கியபோது உங்களுடைய இறைவனைத் தவிர வேறு எதையும் நீங்கள் அறியாதிருந்தீர்கள். பிறகு உங்களுடைய நபியவர்கள் கொண்டு வந்ததை நீங்கள் நம்பினார்கள். மற்றவர்களால் ஏற்படுகின்ற சோதனையால் மட்டும் நீங்கள் போதுமாக்கப்பட்டீர்கள்.

 

( وَاللَّهِ لَقَدْ بُعِثَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى أَشَدِّ حَالٍ بُعِثَ عَلَيْهَا نَبِيٌّ قَطُّ، فِي فَتْرَةٍ وَجَاهِلِيَّةٍ، مَا يَرَوْنَ أَنَّ دِينًا أَفْضَلُ مِنْ عِبَادَةِ الأَوْثَانِ، فَجَاءَ بِفُرْقَانٍ فَرَّقَ بِهِ بَيْنَ الْحَقِّ وَالْبَاطِلِ، وَفَرَّقَ بِهِ بَيْنَ الْوَالِدِ وَوَلَدِهِ، حَتَّى إِنْ كَانَ الرَّجُلُ لَيَرَى وَالِدَهُ أَوْ وَلَدَهُ أَوْ أَخَاهُ كَافِرًا، وَقَدْ فَتْحَ اللَّهُ قُفْلَ قَلْبِهِ بِالإِيمَانِ، فَلاَ تَقَرُّ عَيْنُهُ، وَهُوَ يَعْلَمُ أَنَّ حَبِيبَهُ فِي النَّارِ ) அல்லாஹ்வின் மீதாணையாக! எந்த நபியும் அனுப்பப்படாத மிக மோசமான காலகட்டத்தில்தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பப்பட்டார்கள். அந்த மக்கள் இஸ்லாமிய மார்க்கத்தைவிட சிலை வணக்கத்தை சிறந்ததாக கருதினர். நபியவர்கள் கொண்டு வந்த சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் மத்தியில் பிரித்துக் காட்டக்கூடிய மார்க்கத்தை ஏற்றதன் காரணமாகவே தந்தைக்கும் மகனுக்கும் இடையில் பிரிவினை ஏற்பட்டது. எந்த அளவுகென்றால் ஒருவர் தம் தந்தையையோ தம் மகனையோ தம் சகோதரனையோ இறைநிராகரிப்பாளர் ஆக காணுவார். ஆனால், அவர் உள்ளத்தின் பூட்டை அல்லாஹ் இறைநம்பிக்கையால் திறந்துவிட்டு இருப்பான். அதனால் அவருடைய கண் குளிர்ச்சியடையவில்லை. ( அதாவது, தாம் மட்டுமே இறைநம்பிக்கையாளராக இருக்க, தமது குடும்பத்தினர் இணைவைப்பாளர்களாக இருக்கிறார்களே) தமது நேசத்திற்குரிய இவர்கள் நரகத்தில் நுழைவார்களே என்று அவர் அறிந்துள்ளார். (எனவே, இதனால் அவர் முழுமையாக சந்தோஷமடையவில்லை.) நூல்:- அல்அதபுல் முஃப்ரத்-87, இப்னு ஹிப்பான், ஹில்யா இமாம் ஆபூநயீம்

 

அல்லாஹ், அண்ணல் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நம்மை பிறக்கச் செய்திருந்தால் நாமும் நபித்தோழராக ஆகியிருப்போமே, அந்த பெரும்பாக்கியம் நமக்கு கிடைக்காமல் போய்விட்டதே என்று நம்மில் பலரும் அவ்வப்போது எண்ணவதுண்டு. ஆனால், நபித்தோழராக ஆகும் தகுதி நமக்குண்டா? என்று சிந்திப்பதில்லை.

 

அல்லாஹ், கடுமையான சோதனைகளைப் பொறுத்துக்கொள்ளும் திறன்பெற்றவர்கள் மற்றும் உயர்ந்த மனம் கொண்டவர்களை மட்டும் தான் நபித்தோழர்களாக தேர்ந்தெடுத்தான். ஒவ்வொன்றிற்கும் ஒரு தகுதி தேவைப்படுவதுப்போல், நபித்தோழர்களாக ஆவதற்கும் சில தகுதிகள் தேவை என்பதை மறந்துவிடக்கூடாது.

 

அல்லாஹ், எந்த காலத்திற்கு எவர்கள் தகுதியானவர்களோ அவர்களைத்தான் அந்தந்த காலத்தில் பிறக்கச் செய்கிறான் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

 

உயரிய அந்தஸ்துகள் பெற...

 

அல்லாஹ் எந்த ஆன்மாவையும் அதன் வலிமைக்கேற்பவே தவிர (பொறுப்புக்களைக் கொடுத்துச்) சிரமப்படுத்தமாட்டான். திருக்குர்ஆன்:- 2:286

 

முஹம்மது பின் காலித் (ரஹ்) அவர்கள் தமது பாட்டனார் மூலம் அறிவிப்பதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِنَّ الْعَبْدَ إِذَا سَبَقَتْ لَهُ مِنَ اللَّهِ مَنْزِلَةٌ لَمْ يَبْلُغْهَا بِعَمَلِهِ ابْتَلاَهُ اللَّهُ فِي جَسَدِهِ أَوْ فِي مَالِهِ أَوْ فِي وَلَدِهِ ) அல்லாஹ் ஓர் அடியாருக்கு ஒரு அந்தஸ்தையும் முன்பே நிர்ணயித்திருக்க, அதை அவர் தமது நற்செயல்களால் பெறாதபோது அல்லாஹ் அவருக்கு உடலில் அல்லது செல்வத்தில் அல்லது அவரின் குழந்தைகளில் சோதனையை ஏற்படுத்துவான்.   

 

அபூதாவூத் (ஆகிய நான்) கூறுகிறேன். "(உடலில், பொருளாதாரத்தில், குழந்தைகளில் சோதனை ஏற்படுத்தி) பின்பு அவரை (அவருக்கு ஏற்பட்ட) சோதனை மீது பொறுமையாகவும் இருக்க வைப்பான்" எனும் வாசகத்தை (அப்துல்லாஹ் பின் முஹம்மத்) அந்நுஃபய்லிய்யு (ரஹ்) அவர்கள் அதிகமாகக் கூறியுள்ளார்கள். நூல்:- அபூதாவூத்-2686

 

ஒருமுறை இறைத்தூதர் மூசா (அலை) அவர்கள் ஒரு காட்டின் வழியாக சென்றபோது ஒரு மனிதரைச் சந்தித்தார்கள். அம்மனிதர் நபியவர்களிடம், ( يَا مُوسَى، سَلِ اللَّهَ لِي فِي حَاجَةٍ يَقْضِيهَا لِي هُوَ أَعْلَمُ بِهَا ) “மூசா (அலை) அவர்களே! எனக்கு ஒரு தேவை இருக்கின்றது. அதை அல்லாஹ் மிக அறிந்தவனாக இருக்கின்றான். எனக்கு அது நிறைவேற அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்றார். மூசா (அலை) அவர்கள் அவ்வாறே பிரார்த்தித்தார்கள்.

 

சற்று நேரம் கழித்து மூசா (அலை) அவர்கள் அவ்வழியே திரும்பி வந்தபோது அம்மனிதர் காட்டு விலங்குகளால் கடித்து குதறப்பட்டு இறந்த நிலையில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்கள். பிறகு, ( مَا بَالُ هَذَا يَا رَبِّ؟ ) “இறைவா! இம்மனிதனுக்கு என்ன நேர்ந்தது?” என்று வினவினார்கள். அதற்கு அல்லாஹ், ( يَا مُوسَى إِنَّهُ سَأَلَنِي دَرَجَةً عَلِمْتُ أَنَّهُ لَمْ يَبْلُغْهَا بِعَمَلِهِ فأصبته بما ترى لا جعلها وَسِيلَةً لَهُ فِي نَيْلِ تِلْكَ الدَّرَجَةِ ) “மூசா! அம்மனிதர் என்னிடம் உயர்ந்த அந்தஸ்தை கேட்டார். அவர் அந்த தகுதியை தன்னுடைய நற்காரியங்களால் பெறமாட்டார் என்பதை நான் அறிவேன். எனவே, அந்த தகுதியை அவர் பெறுவதற்காக, நீங்கள் கண்ட இந்த சோதனையை அவருக்கு கொடுத்து, அதையே அவருடைய அந்தஸ்துக்கு காரணமாக ஆக்கினேன்” என்று பதிலளித்தான். நூல்:- தஃப்சீர் அல்குர்துபீ அஷ்ஷூரா வசனம்-30

 

மனிதனின் தகுதிக்கேற்பவே சோதனைகள் ஏற்படும். இதுவே, அல்லாஹ்வின் நியதி.

 

மனிதன் தமது வாழ்க்கையில் உயர்வைப் பெற சில தகுதிகள் வேண்டும். அதற்காக சில சிரமங்களையும், சோதனைகளையும் அனுபவிக்கும் நிலை ஏற்படும். சிரமங்களின்றி உயர்வுகள் கிடையாது.

 

"நோகாமல் நொங்கு திண்ணமுடியாது" என்பது கிராமத்துச் சொல்வழக்கு.

 

சொர்க்கவாசிகள்

 

அப்துர் ரஹ்மான் பின் ஹுஜைரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது. இறைத்தூதர் மூசா (அலை) அவர்கள் (அல்லாஹ்விடம்) ( يَا رَبِّ خَلقُك الَّذِينَ خَلَقْتَهُمْ، جَعَلْتَ مِنْهُمْ فَرِيقًا فِي الْجَنَّةِ وَفَرِيقًا فِي النَّارِ، لَوْ مَا أَدْخَلْتَهُمْ كُلَّهُمُ الْجَنَّةَ؟ ) "என் இறைவா! நீ படைத்த உன் படைப்புகளில் ஒரு சாராரை சொர்க்கவாசிகளாகவும் மற்றொரு சாராரை நரகவாசிகளாகவும் ஆக்கியிருக்கின்றாயே! அவர்கள் அனைவரையும் நீ சொர்க்கத்தில் நுழையச் செய்திருக்கலாமே?" என்று வினவினார்கள்.

 

அப்போது அல்லாஹ், ( يَا مُوسَى، ارْفَعْ ذَرْعك ) "மூசாவே! (அறுவடை செய்யப்பட்ட) உமது பயிர்களை எடுத்துக் கொள்வீராக" என்றான். அவ்வாறே அவற்றை மூசா (அலை) அவர்கள் எடுத்துக் கொண்டார்கள். பிறகு ( قَدْ رَفَعْتُ ) "எடுத்துக் கொண்டேன்" என்று கூறினார்கள். மறுபடியும் அல்லாஹ், "எடுத்துக் கொள்வீராக!" என்றான். அதன்படி மூசா (அலை) அவர்கள் எதையும் விட்டு வைக்காமல் எடுத்துக்கொண்டார்கள். பிறகு "இறைவா! நான் அனைத்தையும் எடுத்துக்கொண்டேன்" என்றார்கள். (மூன்றாவது முறை) அல்லாஹ், "எடுத்துக் கொள்வீராக!" என்றான். அப்போது மூசா (அலை) அவர்கள், ( قَدْ رَفَعْتُ، إِلَّا مَا لَا خَيْرَ فِيهِ )  "(இறைவா!) எதில் எந்தப் பயனும் இல்லையோ அதைத் தவிர அனைத்தையும் எடுத்துக்கொண்டேன்" என்றார்கள். இறுதியில் அல்லாஹ், ( كَذَلِكَ أُدْخِلُ خَلْقِي كُلَّهُمُ الْجَنَّةَ، إِلَّا مَا لَا خَيْرَ فِيهِ ) "இவ்வாறு தான் நான் எனது படைப்பினங்கள் அனைவரையும் சொர்க்கத்தில் நுழைவித்துவிட்டேன்; எந்த நன்மையும் இல்லாதவர்களைத் தவிர" என்று பதிலளித்தான். நூல்:- தஃப்சீர் தபரீ, தஃப்சீர் இப்னுகஸீர் அஷ்ஷூரா வசனம்-8

 

அல்லாஹுத்தஆலா தமது அடியார்கள் அனைவரையும் சொர்க்கத்தில் நுழைவித்தாலும் அவனுக்கு எவ்வித நஷ்டமும் ஏற்படப்போவதில்லை. எனவே, அனைவருக்கும் சொர்க்கம் கிடைத்தால் என்ன? என்று நம்மில் பலரும் எண்ணுகிறோம். ஆனால், அல்லாஹ்வின் பார்வையில் சொர்க்கத்தைப் பெற தகுதி வேண்டுமென புலப்படுகிறது. மேலும்,  தகுதியில்லாவர்களுக்கெல்லாம் சொர்க்கம் கிடைத்துவிட்டால், அது  மதிப்பற்றதாக ஆகிவிடும் என்பதும் புலப்படுகிறது. மேலும் அல்லாஹ்,  எந்த தகுதியுமில்லாத (சருகுகள் எனும்) பதர்களைத் தான் நரகத்தில் நுழைவிக்கிறான் என்பதும் புலப்படுகிறது.

 

தலைமை

 

அபூதர் (ரலி) அவர்கள் நான் அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம், "நாயகமே! எனக்கு ஏதேனும் (அரசுப்) பதவி வழங்கக்கூடாதா? என்று கேட்டேன். நபியவர்கள், يَا أَبَا ذَرٍّ إِنَّكَ ضَعِيفٌ وَإِنَّهَا أَمَانَةٌ وَإِنَّهَا يَوْمَ الْقِيَامَةِ خِزْىٌ وَنَدَامَةٌ إِلاَّ مَنْ أَخَذَهَا بِحَقِّهَا وَأَدَّى الَّذِي عَلَيْهِ فِيهَا ) ‏ ) "அபூதரே! நீர் பலவீனமானவர் அது (பதவி) ஓர் அமானிதப் பொருளாகும். அதை முறைப்படி அடைந்து அதில் தமக்குரியப் பொறுப்புக்களை நிறைவேற்றியவரைத் தவிர மற்றவர்களுக்கு அது (மறுமை நாளில்) இழிவும் துயரமும் ஆகும்" என்று கூறினார்கள். நூல்:- முஸ்லிம்-3729, கன்ஸுல் உம்மால்

 

அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது. பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் என்னிடம், ( يَا أَبَا ذَرٍّ إِنِّي أَرَاكَ ضَعِيفًا وَإِنِّي أُحِبُّ لَكَ مَا أُحِبُّ لِنَفْسِي لاَ تَأَمَّرَنَّ عَلَى اثْنَيْنِ ) "அபூதர்! உம்மை நான் பலவீனமானவராகவே காண்கிறேன். எனக்கு நான் விரும்புவதையே உமக்கும் விரும்புகிறேன். இருவருக்குக்கூட நீர் தலைமை ஏற்காதீர். அநாதையின் சொத்துக்கு பொறுப்பேற்காதீர்" என்று கூறினார்கள். நூல்:- முஸ்லிம்-3730

 

அபூதர் (ரலி) அவர்கள் உலகத்தில் துறவிபோல் வாழ்வதில் அலாதி பிரியமுடையவர். பிறரும் இவ்வாறு தான் வாழவேண்டும் என்று எண்ணுபவர் ஆவார்.

 

உதாரணமாக: இவரை பொறுப்பில் நியமித்திருந்தால் என்ன நடக்கும்? யாராவது இவரிடம் வந்து நிதி கேட்டு வந்தால், உடனே இவர் "உனக்கு எதற்காக இவ்வளவு பணம்" என்று ஆன்மீக ரீதியாக கேள்வி கேட்க ஆரம்பித்துவிடுவார். உலகத்தை அதிகம் அனுபவிப்பது தவறு என்ற எண்ணத்தில் வாழ்ந்தவர். உலகத்தில் ஓரிரு சுகங்களை அனுபவித்துவிட்டவர்களிடம்கூட சண்டைக்கு சென்றிருக்கிறார். கால ஓட்டத்தில் ஏற்படும் வாழ்க்கை மாற்றங்களை விரும்பாதத் துறவி இவர்.

 

அபூதர் (ரலி) அவர்கள், நோன்பு துறக்கும் நேரத்தில் தட்டில் கொஞ்சம் அதிகமாக உணவு வைத்திருந்தவர்களிடம் சண்டையிட்டிருக்கிறார்கள். நபியவர்களுடைய காலத்தில் இப்படி இருந்ததா? நீ இப்போது மட்டும் எப்படி இப்படி இருக்கலாம்? என்றெல்லாம் சண்டையிட்டிருக்கிறார்கள்.

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் இவரின் குணநலன்களை புரிந்து வைத்திருந்தார்கள். இவருக்கு எந்த பொறுப்பும் ஒத்துவராது என்பதை நபியவர்கள் விளங்கி வைத்திருந்தார்கள். எனவேதான், இவருக்கு எந்த பொறுப்பையும் நபியவர்கள் வழங்கவில்லை.

 

நாடு, வீட்டு எதுவாக இருந்தாலும் அதன் தலைமைக்கென்று சில தகுதிகள் உண்டு. அதை அறியாதவர்களால் தான் பிரச்சனைகள் ஏற்படுகிறது.

 

தமிழ்நாட்டின் முதலமைச்சர்களில் ஒருவரிடம் (ஐம்பது வருடங்களாக சட்டசபைக்கு சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.) பத்திரிகையாளர்கள், "உங்கள் ஆட்சி பிரமாதமாக உள்ளது. நீங்கள் ஏன் பிரதமர் பதவிக்கு போட்டியிடக்கூடாது? என்று வினவினர். அதற்கு அவர், "என் உயரம் எனக்குத் தெரியும்" என்று அழகிய முறையில் பதிலளித்தார்.

 

பாழ்பட்டுப்போகும்

 

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது. ஓர் சபையில் நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் மக்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது, அவர்களிடம் கிராமவாசி ஒருவர் வந்து, "மறுமைநாள் எப்போது வரும்?" என கேட்டார். நபியவர்கள் தமது பேச்சை முடித்துவிட்டு, ( أَيْنَ أُرَاهُ السَّائِلُ عَنِ السَّاعَةِ ) "மறுமை நாளைப் பற்றி கேட்டவர் எங்கே? என வினவினார்கள். உடனே அவர், "நாயகமே! இதோ நான் தான்" என்றார். நபியவர்கள், ( فَإِذَا ضُيِّعَتِ الأَمَانَةُ فَانْتَظِرِ السَّاعَةَ ) "நம்பகத்தன்மை பாழ்படுத்தப்பட்டால் மறுமை நாளை நீர் எதிர்பார்க்கலாம்" என்று கூறினார்கள். அவர், "அது எவ்வாறு பாழ்படுத்தப்படும்?" என்று கேட்டார். அதற்கு நபியவர்கள், ( إِذَا وُسِّدَ الأَمْرُ إِلَى غَيْرِ أَهْلِهِ فَانْتَظِرِ السَّاعَةَ ) "தகுதியற்றவர்களிடம் பொறுப்பு ஒப்படைக்கப்படும்போது நீர் மறுமை நாளை எதிர் பாரும்" என்று பதிலளித்தார்கள். நூல்:- புகாரீ-59

 

சிறிய பெரிய எந்த பொறுப்பாக இருந்தாலும் அதைப்பற்றிய ஞானமுள்ளவரிடம் ஒப்படைக்கப்பட்டால் அதன் மூலம் நன்மை பயக்கும். மாறாக, அதைப்பற்றிய ஞானமில்லாதவரிடம் ஒப்படைக்கப்பட்டால், அது பாழ்பட்டுப்போகும் என்பதில் சந்தேகமில்லை.

 

உலகத்தை சீராக்கும் ஆட்சியும் அதிகாரமும் இன்று உலகில் பெரும்பாலும் தகுதியில்லாதவர்களிடமே ஒப்படைக்கப்படுகிறது என்பதே உண்மை. அரசாட்சி மட்டும் என்றில்லை. சாதாரண ஒரு அலுவலக நிர்வாகம் கூட தகுதியில்லாதவர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

 

அரசியல் கட்சிகளில் ரவுடித்தனம் புரிபவர்களும் படிப்பறிவு, பட்டறிவு இல்லாதவர்களும் கூட "எம்.எல்.ஏ, எம்.பி." என்ற  பெரிய பொறுப்புகளில் அமர்த்தப்படுகின்றனர். இப்படி பொறுப்புக்கு வருபவர், தனக்கு வழங்கப்படும் பொறுப்பு பற்றியோ அந்தப் பொறுப்புக்குறிய அதிகார வரம்பு பற்றிய அறிவில்லாதவர்களாக உள்ளனர்.

 

தகுதியில்லாதவர்களின் தலைமை காரணமாக அவனுக்குக் கீழ் இருக்கும் மக்கள் சொல்லொணாத் துன்பங்களுக்கு ஆளாகிவிடுகின்றனர். அதிரடிச் சட்டங்கள் மூலம் அடாவடி நிர்வாகமுறை காரணமாக பெரும் அவலத்திற்கும் அவதிக்கும் ஆளாகவேண்டிய நிலை பொதுமக்களுக்கு ஏற்படுகிறது. இந்த கடும் சோதனைகளில் இருந்து விடுபட தகுதியற்றவர்களுக்கு பொறுப்புகளை வழங்காமல் இருப்பதே முறையாகும் என்பதே மேற்காணும் நபிமொழியின் கருத்தாகும்.

 

தென் அமெரிக்காவில் உள்ள கல்லூரி ஒன்றின் வாசலில் உள்ள வாசகம்:

எந்த நாட்டையும் அழிக்க அணுகுண்டோ அல்லது பயங்கர ஆயுதங்களோ தேவையில்லை. கல்வித் தரம் தாழ்ந்து, மேலும் மாணவர்களின் தேர்ச்சி தவறான முறைகளால் அளவிடப்பட்டாலே, அது நாடுகளின் அழிவுக்கு வழிவகுக்கும்.

 

தரமற்ற கல்வியால், மருத்துவர்கள் கரங்களாலேயே நோயாளிகள் இறக்க நேரிடும். பொறியாளர்கள் கட்டும் கட்டடங்கள் இடிந்து விழ நேரிடும். பொருளாதார மேதைகளால் பணம் மதிப்பிழக்கும். நீதிபதிகளின் கரங்களால் நீதி சாகும்.

 

சுருங்கக்கூறின் தகுதியற்றவர்களை உயர்ந்த அதிகாரங்களில் அமர்த்திவிட்டால், அவர்கள் அந்த அதிகாரத்தின் மதிப்பறியாது அதை துஷ்பிரயோகம் செய்வார்கள். அப்போது உலகம் நல்லொழுக்க மாண்புகளை இழந்து உருக்குலைந்து போகும். காலப்போக்கில் உலகம் அழிந்து மறுமை நாள் ஏற்படும்.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு மனிதர்களையும் அவரவர் தகுதிக்கேற்ற இடத்திலேயே அமர்த்தினார்கள்.

முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களிடம் அறிவாற்றலும் மார்க்க ஞானமும் இருந்த காரணத்தால், அவர் யமன் நாட்டிற்கு ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

உமர் (ரலி) அவர்களிடம் கண்டிப்பும் நேர்மையும் இருந்த காரணத்தால், அவர், 'ஸக்காத் நிதி' அதிகாரியாக நியமிப்பட்டார்.

காலித் பின் வலீத் (ரலி) அவர்களிடம் போர் பயிற்சியும் தலைமைப் பண்பும் இருந்த காரணத்தால் அவர், படைத்தளபதியாக நியமிப்பட்டார்.

பிலால் (ரலி) அவர்களிடம் நம்பகத்தன்மையும் நிர்வாகத் திறமையும் இருந்த காரணத்தால், அவர் பைத்துல்மால் அரசு கருவூலம் காப்பாளராக நியமிக்கப்பட்டார்.

(பிற்காலத்தில்) ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களிடம் கல்வித்தகுதி, அறிவுக்கூர்மை, நினைவாற்றல் ஆகிய திறமைகள் இருந்த காரணத்தால், அவர், திருக்குர்ஆனை தொகுக்கும் மகத்தான பணிக்கு நியமிக்கப்பட்டார்.

அனஸ் (ரலி) அவர்களிடம் வலிமையும் மன உறுதியும் இருந்த காரணத்தால், அவர் தண்டனைகளை நிறைவேற்றும் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

ஆனால், அபூதர் (ரலி) அவர்கள் போன்றவர்களிடம் இருந்த பலவீனத்தை கருத்தில் கொண்டுதான் அவர்களை பொறுப்பு வகிக்க நபியவர்கள் அனுமதிக்கப்படவில்லை.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திற்கு பிறகு ஜனாதிபதி அபூபக்ர் (ரலி) அவர்களும் அதே வழிமுறையைத்தான் கடைபிடித்தார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் மக்களை அவரவர் தகுதிகேற்ற பதவிகளில் அமர்த்தினார்கள். தகுதியில்லாத சிலர் பதவி கேட்டு வந்தபோது, அவர்களை அபூபக்ர் (ரலி) அவர்கள் திருப்பியனுப்பவும் தயங்கவில்லை.

 

இறைத்தூதர் ஷுஐப் (அலை) அவர்களின் மகளார் இறைத்தூதர் மூசா (அலை) அவர்களை பணிக்கு அமர்த்திக்கொள்ளலாம் எனத் தம் தந்தையாரிடம் யோசனை கூறியதைப் பற்றி அல்லாஹ் தெரிவிக்கின்றான்.

 

என் தந்தையே! நீங்கள் இவரைக் கூலிக்கு அமர்த்திக் கொள்ளுங்கள். நிச்சயமாக (இந்த) நம்பிக்கையான பலசாலியை நீங்கள் கூலிக்கு அமர்த்தி கொள்வது மிக நல்லது என அவ்விரு பெண்களில் ஒருவர் கூறினார். திருக்குர்ஆன்:- 28:26

 

ஏற்றுக்கொண்ட பொறுப்பை நிறைவேற்றுவதில் 'பலசாலி' என்றும் ஒப்படைக்கப்படும் அமானிதத்தைக் காப்பதில் 'நம்பிக்கையானவர்' என்றும் இங்கே கூறப்பட்டுள்ளது.

 

சுருங்கக்கூறின், காரியங்கள் ஒவ்வொன்றுக்கும் தகுதியும் திறமையும் தேவைப்படுகிறது. தகுதியில்லாதவர்களிடம் கொடுக்கப்படும் எதுவும் உருப்படாது என்ற சிந்தனை நமக்கு வேண்டும். எனவே, அல்லாஹுத்தஆலா நமக்கு சொர்க்கவாசிகளுக்குரிய தகுதியை தந்து, நம்மை சொர்க்கத்தில் நுழைவிப்பானாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை.  செல்: 9840535951

 

No comments:

Post a Comment

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...