Search This Blog

Thursday, 23 March 2023

உடல் உறுப்புகளைப் பேணி நோன்பிருப்போமாக!

 

உடல் உறுப்புகளைப் பேணி நோன்பிருப்போமாக!

 

فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ

 உங்களில் எவர் (ரமளானாகிய) அம்மாதத்தை அடைகிறாரோ அதில் அவர் நோன்பு நோற்கவும். திருக்குர்ஆன்:- 2:185

 

உலகில் பரவலாக இம்மாதத்தில் ரமளானில் முஸ்லிம்கள் இறைவனுக்கு நோன்பு நோற்கிறார்கள். ஆனால், நோன்பின் முழுப் பயனையும் பெறக்கூடிய நோன்பாளிகள் மிகவும் குறைவு என்று தான் சொல்லவேண்டும். நோன்பு என்பது வாயையும், ஆசையையும் கட்டுப்படுத்துவது மட்டுமல்ல; ஐம்புலன்களையும் கட்டுப்படுத்த வேண்டும். மனிதனுக்கும் அல்லாஹ்வுக்கும் அதிக நெருக்கத்தை ஏற்படுத்தும் சாதனமாக திகழ்வது ஐம்புலன்களையும் கட்டுப்படுத்தி நோற்கும் நோன்பாகும்.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ لَمْ يَدَعْ قَوْلَ الزُّورِ وَالْعَمَلَ بِهِ فَلَيْسَ لِلَّهِ حَاجَةٌ فِي أَنْ يَدَعَ طَعَامَهُ وَشَرَابَهُ ) யார் பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளை விட்டு விடவில்லையோ அவர் தமது உணவையும் பானத்தையும் விட்டுவிடுவதில் அல்லாஹ்வுக்கு எந்த தேவையுமில்லை. அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-1903

 

உடலுறுப்புக்கள் அனைத்தும் நோன்பு இருக்க வேண்டும். அதாவது, உடலின் ஒவ்வொரு உறுப்பும் நற்செயலில் ஈடுபட வேண்டும். எந்த உறுப்புகளிலிருந்தும் தீய செயல்களை எதுவும் வெளியாகவேக்கூடாது. அதுதான் உண்மையான நோன்பாகும்.

 

இமாம் ஙஸ்ஸாலீ (ரஹ்)  அவர்கள் கூறுகிறார்கள். நோன்பிருப்பவர் கண், காது, நாவு, கை, கால், வயிறு ஆகிய ஆறு உறுப்புகளைப் பேணி காப்பது அவசியமாகும்.

 

கண்களைப் பேணுவோம்

 

மனிதர்களில் சிலர் இருக்கின்றனர். அவர்கள் அறிவில்லாமல் வீணான பேச்சுக்களை விலைக்கு வாங்கி (அவற்றால் மக்களை) அல்லாஹ்வின் பாதையிலிருந்து வழிகெடுக்கவும், அல்லாஹ்வின் பாதையைப் பரிகாசமாக்கிக் கொள்ளவும் (முயல்கின்றனர்). இத்தகையவருக்கு இழிவு தரும் வேதனையுண்டு. திருக்குர்ஆன்:- 31:6

 

நபித்தோழர் ஃபள்ல் பின் அப்பாஸ் (ரலி அவர்கள் அருமை நாயகம் - ஸல் அவர்களுக்கு) பின்புறம் ஒட்டகத்தில் அமர்ந்து கொண்டிருந்தபோது, 'கஸ்அம்' எனும் கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண் வந்தார். உடனே ஃபள்ல் (ரலி) அவர்கள் அப்பெண்ணை பார்க்க, அப்பெண்ணும் இவரைப் பார்த்தார். (இதைக் கவனித்த நபியவர்கள்,) ஃபள்ல் (ரலி) அவர்களின் முகத்தை வேறு திசையில் திருப்பினார்கள். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-1513

 

பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களை நோக்கி, ( يَا عَلِيُّ لاَ تُتْبِعِ النَّظْرَةَ النَّظْرَةَ فَإِنَّ لَكَ الأُولَى وَلَيْسَتْ لَكَ الآخِرَةُ ) "அலீ! (ஒரு அந்நியப் பெண்ணை) ஒரு தடவை பார்த்துவிட்டுப் பிறகு மறுபடியும் பார்க்காதே! ஏனெனில், முதல் பார்வை உன்னுடையது. இரண்டாவது பார்வை உன்னுடையதன்று. (மாறாக, அது ஷைத்தானுடையது.) என்று கூறினார்கள். அறிவிப்பாளர்:- புரைதா (ரலி) அவர்கள் நூல்:-  அபூதாவூத்-1837, திர்மிதீ-2698, முஸ்னது அஹ்மத், ஹாக்கிம்

 

ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களிடம் "எதார்த்தமாக (அந்நியப் பெண் மீது) பார்வை விழுவதைப் பற்றிக் கேட்டேன். அப்போது நபியவர்கள், ( اِصْرِفْ بَصَرَكَ ) "உனது பார்வையை (உடனடியாகத்) திருப்பிக்கொள்" என்று கூறினார்கள். நூல்:- முஸ்லிம்-4363, அபூதாவூத்-1836, திர்மிதீ-2697, தாரமீ, முஸ்னது அஹ்மத்

 

முதலாவது, கண்களைப் பேணிப் பாதுகாக்கவேண்டும். அல்லாஹ்வால் தடைசெய்யப்பட்ட, பார்க்கக்கூடாத செயல்களையும், இடங்களையும் பார்ப்பதைவிட்டும் கண்களை பாதுகாத்திட வேண்டும்.

 

அந்நியப் பெண் மீது எதார்த்தமாக பார்வைப்படுதல், இது முதல் பார்வையாகும். அவற்றை அல்லாஹ் மன்னிக்கக்கூடும். பெண் என்று தெரிந்த பிறகு பார்வையை உடனே வேறு பக்கம் திருப்பிவிட வேண்டும். மாறாக, அவளை தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருந்தால், அது ஷைத்தானின் பார்வை. அது குற்றமாகும்.

 

ஒரு ஆலிமிடம், "முதல் பார்வை நம்முடையது. இரண்டாவது பார்வை ஷைத்தானுடையது. அது குற்றமாகும். எனவே,  முதல் பார்வையிலேயே அவளை கூர்ந்து குறுகுறுவென பார்த்துக்கொண்டே இருந்தால் குற்றமாகுமா? ஹள்ரத்" என்று ஒருவர் கேட்டார். இவருக்கு என்ன பதில் சொல்வது?

 

அந்நியப் பெண்களை நேரடியாக பார்ப்பது எப்படி தடைச்செய்யப்பட்டதோ அதேபோல் செல்போன்கள், செய்தித்தாள்கள், போஸ்டர்கள் மூலம் பார்ப்பதும் அறவே கூடாது. துவைத்து காயவைக்கப்பட்ட பெண்களின் ஆடைகளைக்கூடப் பார்ப்பது கூடாது என மார்க்கம் கூறுகிறது.

 

இக்காலத்தில் பாருங்கள். டி.வி.யில் நிகழ்ச்சிகளை தொகுத்து தருபவர்களில் அதிகமானோர் அழகுள்ள, அரைகுறை ஆடை அணிந்து தன்னை அளவு கடந்து அலங்கரித்த பெண்கள்தான். அதிலும் பெண்கள் புன்சிரிப்புடன்தான் காட்சியளிக்க வேண்டும் என்பது நிபந்தனை வேறு.

 

நோன்பிருந்து கொண்டு டி.வி. மற்றும் செல்போனில் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற அகப்பக்கங்களைப் பார்ப்பதினால் நோன்பின் மாண்புகள் சிதைந்துவிடுகிறது. நோன்பு திறந்த பின்பு இரவு நேரங்களில் டி.வி. செல்போனில் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற அகப்பக்கங்களைப் பார்த்தாலும் சரியே, நோன்பு காலங்களை கண்ணியப்படுத்தவில்லை என்ற பெரும் குற்றத்திற்கு ஆளாக நேரிடும். ஏன் இந்த மாதத்திலாவது வீண் விளையாட்டு, கேளிக்கை, டி.வி., செல்ஃபோன் போன்றவைகளுக்கு விடுமுறையளிக்க வேண்டுமே?

 

காதுகளைப் பேணுவோம்

 

நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது. ஒருமுறை நான் வாகனத்தில் அப்துல்லாஹ் பின் உமர் ரலி அவர்களுக்கு பின்னால் அமர்ந்து பயணம் மேற்கொண்டிருந்தேன்‌. அப்போது அவர்கள் இசைக் கருவியுடன் பாடிக்கொண்டிருந்த ஓர் இடையனை கடந்து சென்றார்கள். உடனே அவர்கள் தமது விரல்களைத் தம்முடைய காதுகளில் வைத்துக்கொண்டு அந்தப் பாதையை விட்டு ஒதுங்கித் தொலைவாகச் சென்றார்கள். பிறகு அவர்கள் என்னிடம் ( يَا نَافِعُ هَلْ تَسْمَعُ شَيْئًا ) "நாஃபிஉ! இப்போது நீர் ஏதேனும் சப்தத்தை செவியுறுகிறாயா?" என்று வினவினார்கள். அதற்கு நான், "இல்லை" என்றேன்.

 

அப்போது அவர்கள் தம்முடைய விரல்களை காதுகளில் இருந்து (வெளியே) எடுத்தார்கள். பிறகு அவர்கள், ( كُنْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَسَمِعَ مِثْلَ هَذَا فَصَنَعَ مِثْلَ هَذَا ) "நான் அருமை நாயகம் (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அப்போது நபியவர்கள், இதுபோன்ற (இசை சப்தத்) தை செவியுற்றார்கள். அந்நிலையில் நபியவர்கள் இவ்வாறே செய்தார்கள்" என்று கூறினார்கள். நூல்:- அபூதாவூத்-4278, முஸ்னது அஹ்மத்

 

இரண்டாவது, காதுகளைப் பேணிப் பாதுகாக்கவேண்டும். நாவினால் எவ்விஷயங்களை பேசுவது தடை செய்யப்பட்டுள்ளதோ அதை காதால் கேட்பதும் கூடாது. இசை கேட்பதும், அல்லாஹ்வின் நினைவை விட்டும் திருப்புகின்ற வீணான பாடல்கள், பேச்சுக்கள், கதைகள் ஆகியவைகளை விட்டும் காதுகளை பேணுவது அவசியமாகும்.

 

நமது சமுதாயம் இன்று நலிந்து, நொந்து போயுள்ளது. எந்த வீட்டை கேட்டாலும் பசி, பட்டினி, மிடிமை, தரித்திரம், செய்யும் தொழிலில் அபிவிருத்தியின்மை, வீட்டில் நிம்மதி இல்லை, சண்டை சச்சரவு என புலம்பல். காரணம், இசை என்ற ஷைத்தான் நமது வீட்டுக்குள்ளே நிரந்தரமாக குடிகொண்டு விட்டான். நமது வீடுகள் அவனுடைய ராஜ்ஜியங்கள் என்று ஆகிவிட்டது. எப்போது ஷைத்தானின் ராஜ்ஜியம் தகர்க்கப்படுகிறது அப்போதுதான் நாம் வாழ்வில் வெற்றி பெறுவோம்.

 

நாவைப் பேணுவோம்

 

நீங்கள் பேசினால் சரியான சொல்லையே பேசுங்கள். திருக்குர்ஆன்:- 33:70

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( وَالصِّيَامُ جُنَّةٌ فَإِذَا كَانَ يَوْمُ صَوْمِ أَحَدِكُمْ فَلاَ يَرْفُثْ يَوْمَئِذٍ وَلاَ يَسْخَبْ فَإِنْ سَابَّهُ أَحَدٌ أَوْ قَاتَلَهُ فَلْيَقُلْ إِنِّي امْرُؤٌ صَائِمٌ )  நோன்பு (பாவங்களில் இருந்து காக்கும்) கேடயமாகும் உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் நாளில் அருவருப்பாக (ஆபாசமாக)ப் பேச வேண்டாம். கூச்சலிட்டு சச்சரவு செய்ய வேண்டாம். யாரேனும் அவரை ஏசினால் அல்லது வம்புக்கிழுத்தால் “நான் நோன்பு நோற்றிருக்கிறேன்” என்று அவர் கூறிவிடட்டும். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-1904, முஸ்லிம்-2118

 

உங்களில் ஒருவர் மற்றெவரையும் புறம் பேச வேண்டாம். உங்களில் எவனும் தன்னுடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவானா? அதனை நீங்கள் வெறுப்பீர்களே! (புறம் பேசுவதும் அவ்வாறே. இவ்விஷயங்களில்) அல்லாஹ்வுக்குப் பயந்துகொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் (பாவத்திலிருந்து) விலகுபவர்களை அங்கீகரிப்பவனும் கிருபை செய்பவனாகவும் இருக்கின்றான்.  திருக்குர்ஆன்:- 49:12

 

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. நோன்பு நோற்றிருந்த நிலையில் இருவர் லுஹரோ அல்லது அஸரோ தொழுது கொண்டிருந்தனர். நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் தங்களது தொழுகையை நிறைவு செய்ததும் அவ்விருவரையும் நோக்கி! ( أعِيدا وُضُوءَكُما وصَلاتَكُما وامْضِيا في صَوْمِكُما، واقْضِيا يَوْمًا آخَرَ مَكانَهُ ) "உங்களது உளூவையும், தொழுகையையும் மீட்டுங்கள். நோன்பை பூர்த்தி செய்யுங்கள். (அத்துடன்) வேறொரு நாளில் அதை (நோன்பை) மீண்டும் நோற்றிடுங்கள்" என்று கூறினார்கள். அதற்கு அவ்விருவரும், ( لِمَ يا رَسُولَ اللَّهِ؟ ) "நாயகமே! ஏன் இவ்வாறு கூறுகிறீர்கள்?" என்று கேட்டனர். அதற்கு நபியவர்கள், ( قَدِ اغْتَبْتُما فُلانًا ) "நீங்கள் இருவரும் இன்னாரைப் பற்றி புறம் பேசிவிட்டீர்கள்" என்று கூறினார்கள். நூல்:- பைஹகீ, தஃப்சீர் துர்ருல் மன்ஸூர் அல்ஹுஜுராத் வசனம்-12

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள், புறம் பேசுவது உளூ, தொழுகை, நோன்பு ஆகியவைகளை முறிப்பதற்கு நெருங்குமளவுக்கு கடினமான செயல் என்பதை உணர்த்துவதற்காகவே இவ்வாறு கூறினார்கள்.

 

புறம் பேசுதல் போன்ற தீய செயல்களில் ஈடுபடும்போது, செய்த நற்செயல்களும் வீணாகி விடுகிறது. மேலும், நற்செயல்களில் ஈடுபடுவதே சிரமமாக தோன்றும். மாறாக, இறையச்சம் கொண்டவர்களாகவே வாழ்ந்தால் நற்செயல்களில் ஈடுபடுவது மிக இலகுவாகும்.

 

ஒருமுறை இறைத்தூதர் மூசா (அலை) அவர்கள் காலத்தில் பனீ இஸ்ரவேலர்களுக்கு மழையின்றி பஞ்சம் ஏற்பட்டது. அப்போது மூசா (அலை) அவர்களும் அவர்களின் தோழர்களும் மழை இறக்கித் தரும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள். இவ்வாறு பிரார்த்தனையில் பலமுறை ஈடுபட்டும் பயன் ஒன்றும் இல்லை. அப்போது மூசா (அலை) அவர்கள் மிகவும் கவலையுற்றார்கள்.

 

உடனே, மூசா (அலை) அவர்களுக்கு இறைவனிடமிருந்து, "மூசா! உங்களுடன்  பாவி ஒருவர் (கோள்மூட்டுபவர்) இருக்கிறார். அவரை அப்புறப்படுத்துங்கள். உங்கள் பிரார்த்தனை நிறைவேற்றப்படும்" என்று இறைச்செய்தி வந்தது. அதை செவியுற்ற மூசா (அலை) அவர்கள், "இறைவா! எங்களுடன் இருக்கும் அந்தப் புறம் பேசுபவரை காண்பித்துக்கொடு! எங்களை விட்டும் அவரை நீக்கிவிடுகிறோம்" என்றார்கள். அதற்கு இறைவன்( يَا مُوسَى إِنِّي أَبْغَضُ النَّمَامِينَ أَفَأَكُونُ نَمَّامًا ؟"கோள்மூட்டுபவர்கள்மீது நான் பகைமை கொண்டிருக்கும்போது, (அவரைக் காண்பிப்பதற்காக) நானே கோள்மூட்டுபவனாக ஆக வேண்டுமா?" என்றான்.

 

பிறகு அந்தப் பாவி மனம்வருந்தி, இறைவனிடம் பாவமன்னிப்பு தேடினார். அதன் பிறகு மழை பொழிந்தது. நூல்:- கிதாபுத் தவ்வாபீன் இமாம் இப்னு குதாமா

 

மூன்றாவது, நாவின் மூலம் ஏற்படக்கூடிய தீய செயல்களான பொய், புறம், கோள், வீண் பேச்சு இவைகளைத் தவிர்த்துக் கொள்ளவேண்டும்.

 

புறம் பேசுவது கொடிய பாவங்களில் ஒன்றாகும். ஒரு மனிதன் திருடுகிறான், பொய் பேசுகிறான், விபச்சாரம் புரிகிறான், மது அருந்துகிறான் இப்படிப்பட்டவனைப் பற்றி மற்றவர்களிடம் நாம் பேசினால், அவ்வாறு புறம் பேசியவதின் மூலம் மிகப்பெரும் பாவத்தில் ஈடுபட்டு விட்டோம்.

 

மேற்கண்ட பாவம் செய்தவன் ஏதேனும் ஒரு சமயத்தில் அழுது தொழுது இறைவனிடம் பாவ மன்னிப்பு மேற்கொண்டு, தன்னுடைய பாவக்கறைகளை நீக்கிக்கொள்ளக்கூடும். ஆனால், அவனைப் பற்றி பேசிய நம்முடைய பாவக்கறை நீங்காது. நம்மால் புறம் பேசப்பட்டவன் நம்மை மன்னிக்காத வரை இறைவன் நம்முடைய பாவத்தை மன்னிக்கமாட்டான். புறம் பேசுவதினால் நமக்கு என்ன லாபம்? என்ற சற்று யோசிக்க வேண்டும்.

 

கை, கால்களை பேணுவோம்

 

நான்காவது, கைகளை பேணி பாதுகாக்க வேண்டும். இறைவன் வெறுக்கின்ற காரியங்களைவிட்டும், மேலும் பிறரை அநியாயமாக அடிப்பது, தீமைகளின் பக்கம் சுட்டிக்காட்டுவது போன்றவைகளை விட்டும் கைகளை தடுத்துக் கொள்ளவேண்டும்.

 

ஐந்தாவது, கால்களைப் பேணிக் கொள்ளவேண்டும். மார்க்கத்திற்கு முரணான தீய காரியங்களுக்கு செல்வதைவிட்டும் கால்களை தடுத்துக் கொள்ளவேண்டும்.

 

வயிற்றைப் பேணுவோம்

 

நோன்பாளியாக இருந்த நபித்தோழர் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களிடம் நோன்பை நிறைவு செய்வதற்காக உணவு கொண்டு வரப்பட்டது. அப்போது அவர்கள், "என்னைவிட சிறந்தவரான நபித்தோழர் முஸ்அப் பின் உமைர் (ரலி) அவர்கள் கொல்லப்பட்டபோது அவரது உடல் ஒரு சால்வையால் சவக்கோடி அணிவிக்கப்பட்டது. அப்போது அவரது தலை மறைக்கப்பட்டால், அவரது கால்கள் வெளியே தெரிந்தன. கால்கள் மறைக்கப்பட்டால் தலை வெளியே தெரிந்தன. மேலும் நபித்தோழர் ஹம்ஸா (ரலி) அவர்களும் கொல்லப்பட்டார்கள் அவரும் என்னை விட சிறந்தவர்தாம். (அவரும் அதுபோலவே பற்றாக்குறை மிக்க சிறிய சால்வையால் சவக்கோடி அணிவிக்கப்பட்டார்.)

 

பிறகு (அந்த ஏழ்மை நிலை நம்மை விட்டும் நீங்கி இதோ நீங்கள் காண்கிறீர்களே) இந்த அளவிற்கு நமக்கு இந்த உலகில் வசதி வாய்ப்புகள் வழங்கப்பட்டன. நாங்கள் இதை புரிந்த நற்செயல்களுக்கு பிரதிபலன் மிக விரைவில் (இவ்வுலகிலேயே) நமக்கு கொடுக்கப்பட்டுவிட்டதோ என்று நாம் அஞ்சுகிறோம்" எனக் கூறினார்கள். பிறகு தமக்காக கொண்டுவரப்பட்ட உணவை உண்ணாமல் அப்படியே விட்டுவிட்டு அழலானார்கள். அறிவிப்பாளர்:- இப்ராஹீம் (ரஹ்) அவர்கள் நூல்:-  புகாரீ-1275

 

நபித்தோழர்கள் மார்க்கம் அனுமதித்த முறையில் தாம் சம்பாதித்த பொருள்களை உண்ண மறுத்துள்ளார்களே! அவர்கள் எங்கே? நாம் எங்கே? ஆனால், இன்று சிலர் நோன்பு காலங்களில் எந்த பள்ளிவாசல் நோன்புக்கஞ்சி ருசியாகவும், போண்டா, வடை, பஜ்ஜி, மற்றும் குளிர்பானங்கள் போன்ற தின்பண்டங்கள் அதிகமாகவும் கிடைக்கும் என்று யோசித்தும் ஒவ்வொரு பள்ளிவாசலாக செல்வதை பார்க்க முடிகிறது. இலவசமாக எது கிடைத்தாலும் அதை கொண்டு வயிற்றை நிரப்பிக் கொள்ளலாம் என்று நினைப்பது நோன்பின் மாண்பை சிதைத்து விடுமல்லவா?

 

ஒருமுறை கௌசுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து அவ்ராது (வழமையாக ஓதும் சில வசனங்கள்) கேட்டார். அப்போது கௌசுல் அஃலம் அவர்கள், "நீங்கள் மூன்று நாள்கள் நோன்பு நோற்க வேண்டும். அதுவும் மார்க்கம் அனுமதிக்காத எந்த உணவு கலந்து விடக்கூடாது. எச்சரிக்கையாக இருக்கவும்" என்றார்கள். அந்த மனிதரும் திரும்பிச் சென்று 30 நாள்கள் கழித்து வந்து, "ஹள்ரத் அவர்களே! தாங்கள் கூறியபடி மூன்று நாள்கள் நோன்பு நோற்றுவிட்டேன்" என்று கூறினார். கௌசுல் அஃலம் அவர்கள், "நண்பரே! மூன்று நாள்கள் நோன்பிருக்க, 30 நாள்கள் ஏன் ஆனது?" என்று வினவினார்கள்.

 

அதற்கு அவர், "ஹள்ரத் அவர்களே! தாங்கள் கூறியபடி 27 நாட்கள் மார்க்கம் அனுமதித்த பரிசுத்தமான உணவைத் தேடி அலைந்தேன். கடைசியில் தண்ணீர் தான் பரிசுத்தமான பானம் என்று அறிந்துகொண்டேன். மார்க்கம் அனுமதிக்காத அசுத்தமான எதுவும் அதில் கலந்து இருக்க முடியாது. எங்கும் தாராளமாக கிடைக்கும். எனவே, நான் இரு வேளைக்கும் (ஸஹர் இஃப்தார்) மூன்று நாள்கள் வெறும் தண்ணீர் பருகி நோன்பு நோற்றேன்" என்றார். கௌசுல் அஃலம் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்து இருகரம் உயர்த்தி பிரார்த்தித்தபோது, வானம் இடி இடித்தது. பூமி நடுங்கியது பிரார்த்தனை ஒப்புக்கொள்ளப்பட்டது. "நண்பரே! நீங்கள் பக்குவம் பெற்று விட்டீர்கள். நீங்கள் சென்று வரலாம்" என்று கூறி அனுப்பி விட்டார்கள்.

 

ஆறாவது, வயிற்று பேணிக் கொள்ளவேண்டும். மார்க்கம் அனுமதிக்காத வியாபாரங்கள் மூலம் சம்பாதித்த உணவு, பானம் சிறிதளவேனும் வயிற்றுனுள் சென்று விடாமல் மிகக் கவனமாக இருக்கவேண்டும்.

 

நாம் உண்ணும் உணவில் பேணுதலைக் கடைப்பிடித்தால்  நம்முடைய விஷயத்திலும் இறைவன் பெரும் அதிசயத்தை நிகழ்த்தக்கூடும். பள்ளிவாசலுக்குச் சென்று அங்குள்ள உணவுகளைக் கொண்டு நோன்பு திறப்பதைவிட நம் வீட்டிலேயே நோன்பு திறப்பது மிகவும் பேணுதலாகும். நோன்பின் முழு பயன்களையும் நாம் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால் வயிற்றைப் பேணி பாதுகாத்துக் கொள்ள வேண்டும். ஐம்புலன்களை கட்டுப்படுத்தி நோன்பிருந்து, இறையருளை முழுமையாக பெறுவோமாக! ஆமீன்!


(இந்த கட்டுரை 14 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது.)

  

மௌலவி, மு.முஹம்மது ஹைதர் அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

No comments:

Post a Comment

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...