Search This Blog

Sunday, 29 January 2023

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

 

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

 

وَجَزَاءُ سَيِّئَةٍ سَيِّئَةٌ مِثْلُهَا

 

ஒரு தீங்கின் சரியான தண்டனை, அதைப் போல் தீங்கு செய்வதே ஆகும். திருக்குர்ஆன்:- 42:40

 

மனிதனின் ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு. மனிதன் செய்யும் தீங்குகள் சிறியது பெரியது என எதுவாக இருந்தாலும் அதற்கான கூலி தீங்காகவே அமையக்கூடும். அந்தக் கூலி எப்போது வேண்டுமானாலும் கிடைக்கப்பெறலாம். அதனால் தான் தீங்கு செய்ய எண்ணும்போது சற்று யோசித்துப் பார்க்க வேண்டும்.

 

நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ ضَارَّ ضَارَّ اللَّهُ بِهِ وَمَنْ شَاقَّ شَاقَّ اللَّهُ عَلَيْهِ ) யார் (பிறருக்குத்)  தீங்கிழைக்கிறாரோ அவரை அல்லாஹ் தீங்கில் சிக்கவைப்பான். யார் (பிறரைத்) துன்புறுத்துகிறாரோ அவரை அல்லாஹ் துன்பத்தில் ஆழ்த்துவான். அறிவிப்பாளர்:- அபூஸிர்மா (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-1863, இப்னுமாஜா-2333

 

பதிலடி கொடு

 

எனவே உங்களிடம் எவரேனும் வரம்பு மீறினால் அவர் எந்த அளவுக்கு உங்களிடம் வரம்பு மீறினாரோ அந்த அளவுக்கே நீங்கள் பதிலடிகொடுங்கள் திருக்குர்ஆன்:- 2:194

 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. (ஒருமுறை) என்னுடைய அனுமதியின்றி (நபியவர்களின் மனைவியருள் ஒருவரான) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் மிகுந்த கோபத்துடன் என் வீட்டினுள் நுழைந்து விட்டார். அது எனக்கே தெரியாது. பின்னர் அவர், ( حَسْبُكَ إِذَا قَلَبَتْ لَكَ ابْنَةُ أَبِي بَكْرٍ ذُرَيّعَتَيهَا ) "நாயகமே! அபூபக்ரின் இளைய மகள் தம் இரு சிறு கைகளையும் புரட்டுவதே உங்களுக்குப் போதுமா? (மற்ற மனைவியர் விஷயத்தில் கவனம் செலுத்த மாட்டீர்களா?)" என்று வினவினார். பின்னர் என்னிடம் திரும்பி (என்னை) ஏசினார். ஆனால், நான் அவரைப் புறக்கணித்து விட்டேன். (அவர் பேசியதற்கு எதிராக நான் எதுவும் பேசவில்லை.)

 

அப்போது அண்ணல் நபி (ஸல்) அவர்கள், ( دُونَكِ فَانْتَصِرِي ) "(ஆயிஷாவே!) உன்னை நீ பாதுகாத்துக்கொள்ள எதையாவது பேசு" என்று கூறினார்கள். (நபியவர்கள் அனுமதி கொடுத்தவுடன்) நான் சென்று, அவருடைய வாயில் உமிழ்நீர் காயும் வரை பிடிபிடியென்று பிடித்துவிட்டேன். நான் பேசியதற்கு எதிராக அவர் எதையும் திரும்பப் பேசவில்லை. அப்போது நபியவர்களின் முகம் (மகிழ்ச்சியால்) ஒளிர்ந்ததைப் பார்த்தேன். நூல்:- இப்னுமாஜா-1971, முஸ்னது அஹ்மத்

 

அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு நபித்தோழர்கள் அவ்வப்போது அன்பளிப்புக்கள் வழங்குவது உண்டு. அது பெரும்பாலும் ஆயிஷா (ரலி) அவர்களின் வீட்டில் நபியவர்கள் தங்கியிருக்கும் நாள்களில் அன்பளிப்புக்கள் வரும். இதனால் மற்ற மனைவியருக்கு ஆதங்கம். இது ஆயிஷா (ரலி) அவர்களுக்கு தெரியாமலேயே இருந்தது.

 

ஒருநாள் நபியவர்களின் மனைவியரில் ஒருவரான ஸைனப் (ரலி) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களின் வீட்டினுள் கோபமாக வந்து, அபூபக்ரின் செல்ல மகள் ஆயிஷாவின் கை அசைவுகள் உங்களுக்குப் போதும்தானே என்று கேட்டார்.

 

பிறகு தம்மை நோக்கி ஸைனப் (ரலி) அவர்கள் திரும்பியபோது அவரது பார்வையை ஆயிஷா (ரலி) அவர்கள் நாசூக்காகத் தவிர்த்தார்கள். இருந்தாலும் தமது மனக் காயத்திற்கு மருந்திடும் வகையில் பதிலுக்குப் பதில் பேச ஆயிஷா (ரலி) அவர்களுக்கு நபியவர்கள் அனுமதி கொடுத்தார்கள்.

 

அவர்களிடம் அனுமதி பெறாமல் அவர்களது வீட்டினுள் ஸைனப் (ரலி) அவர்கள் நுழைந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஜைனப் (ரலி) அவர்களின் நாக்கு வறண்டு போனது. இதை அடுத்து பிரச்சினை முடிவுக்கு வந்தது. தனக்கு நேர்ந்த மனக்காயத்திற்கு பதில் தர ஆயிஷா (ரலி) அவர்களுக்கு இருந்த உரிமையை நபியவர்கள் நிலைநாட்டினார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நூல்:- ஃபைய்ளுல் கதீர்

 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களுக்காக "ஹரீர்" என்ற உணவை சமைத்தேன். நான் அப்போது அங்கு வந்து அமர்ந்த சவ்தா (ரலி) அவர்களிடம்  "சாப்பிடுங்கள்" என்று கூறினேன். நபியவர்கள் எனக்கும் சவ்தா (ரலி) அவர்களுக்கும் மத்தியில் அமர்ந்திருந்தார்கள். ஆனால் சவ்தா (ரலி) அவர்கள் சாப்பிட்ட மறுத்துவிட்டார். "கண்டிப்பாக நீங்கள் அதை சாப்பிட்டே ஆகவேண்டும். அல்லது அதை உங்களது முகத்தில் பூசி விடுவேன்" என்று கூறினேன். அப்போதும் அவர் சாப்பிட மறுத்துவிட்டார். நான் ஹரீராவில் எனது கையை வைத்து அவரது முகத்தில் பூசி விட்டேன். இதை பார்த்த நபியவர்கள் சிரித்தவர்களாக ஹரீராவில் சவ்தாவிற்காக தனது கரத்தை வைத்து சவ்தாவிடம் "ஆயிஷாவின் முகத்தில் நீ இதைப் பூசி விடு!" என்று கூறினார்கள். நூல்:- அல்ஹைஸமி

 

பழிக்குப்பழி

 

(அநீதிக்கு) நீங்கள் தண்டனை வழங்குவதானால் உங்கள் மீது எந்த அளவுக்கு அக்கிரமும் புரியப்பட்டதோ அதே அளவுக்குத் தண்டனை வழங்குங்கள். திருக்குர்ஆன்:- 16:126

 

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. யூதனொருவன் ஒரு சிறுமியை அவளது வெள்ளி நகைக்காகக் அவளது தலையைக் கல்லால் நசுக்கி விட்டான். உயிர் ஊசலாடிக் கொண்டிருந்த அந்த சிறுமி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டது. அவளிடம் நபியவர்கள், ( اَقَتَلَكِ فُلَانٌ ) "இந்த மனிதரா உன்னைத் தாக்கினார்?" என்று கேட்டார்கள். அவள் "இல்லை" என்று தலையால் சைகை செய்தாள். மீண்டும் நபியவர்கள், "இன்ன மனிதராக உன்னைத் தாக்கினார்?" என்று கேட்டார்கள். அவள் அப்போதும் "இல்லை" என்று தலையாட்டினாள். தொடர்ந்து மூன்றாவது முறையாக அவளிடம், "இன்ன மனிதரா உன்னை தாக்கினார்?" என்று (மூன்றாவது முறை ஒரு மனிதரின் பெயரைக் குறிப்பிட்டுக்) கேட்டபோது அவள் "ஆம்" என்று தலையால் சைகை செய்தாள். ஆகவே, அந்த யூதனை (அழைத்து வந்து விசாரித்து, அவனது அவன் குற்றத்தை ஒப்புக் கொண்டதும்) இரு கற்களுக்கிடையே வைத்து அவ(னது தலையி)னை (நசுக்கி)க் கொல்லுமாறு நபியவர்கள் உத்தரவிட்டார்கள். நூல்:- புகாரீ-2413, முஸ்லிம்-3453

 

திட்டமிட்டு செய்யப்பட்ட கொலைக்கு மரண தண்டனை வழங்கவேண்டும். எந்த ஆயுதத்தால் எந்த முறையில் கொலை நடந்ததோ அதே முறையில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்கிறது இஸ்லாமிய குற்றவியல் சட்டம்.

 

செய்தது செய்யப்படும்

 

தீமைகளை எவர்கள் செய்தபோதிலும் தீமைக்குரிய கூலி அதைப்போன்ற தீமையே! திருக்குர்ஆன்:- 10:27

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( بَرُّوا آبَاءَكُمْ تَبَرَّكُمْ أَبْنَاؤُكُمْ وَعِفِّوا عَنْ نِسَاءِ النَّاسِ تَعِفَّ نِسَاؤُكُمْ ) உங்கள் பெற்றோருக்கு நீங்கள் பணிவிடை செய்யுங்கள். உங்கள் பிள்ளைகள் உங்களுக்கு பணிவிடை செய்வார்கள். அந்நியப் பெண்களை பத்தினியாக இருக்கவிடுங்கள். உங்கள் பெண்கள் பத்தினியாக இருப்பார்கள். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- ஹாகிம், தப்ரானீ

 

இறைநேசர் ஸாபித்துல் புனானீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ஒருநாள் கடைவீதியில் ஒரு வாலிபன் ஒரு முதியவரை அடித்து கொண்டிருந்தான். அதைப்  பார்த்த நான் அவ்வாலிபனை தடுக்க முற்பட்டேன். அப்போது அந்த முதியவர், "அவனை ஒன்றும் செய்துவிடாதீர். அவன் என் மகன் தான். என் பாவத்தால் தான் நான் இவ்வாறு சோதிக்கப்படுகிறேன். அதாவது, நான் வாலிபனாக இருந்தபோது இதே இடத்தில் இவ்வாறு தான் என் தந்தையை அடித்து நோவினை செய்தேன். அந்த பாவத்தின் கூலியைத்தான் இப்போது அனுபவிக்கிறேன்" என்றார்.

 

நாம் பெற்றோருக்கு பணிவிடை செய்தால் வருங்காலத்தில் நமது பிள்ளைகள் நமக்கு பணிவிடை செய்வார்கள். நாம் அடுத்த வீட்டு பெண்களுடன் விபச்சார தீங்கை செய்தால் அதற்குக் கூலி, நமது வீட்டுப் பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபடக்கூடும் என்பதில் மிகுந்த கவனம் தேவை. அல்லாஹ் நம்மை இந்த நிலையை விட்டும் பாதுகாப்பானாக. விதைத்தது தானே முளைக்கும்.

 

இன்று பிள்ளைகளாய் இருப்பவர்கள் தான் நாளை பெற்றோர்களாய் மாறுகிறார்கள். "முன்பகல் செய்யின் பிற்பகல் விளையும்" என்ற பழமொழியை மனதில் இருத்தி வாழ வேண்டும். 


இன்று நமது பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்தால், நாளை நமது பிள்ளைகள் நம்மை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடுவர். முதியோர் இல்லங்கள் மூடப்படாமல் நீடித்து இருப்பதற்குரிய காரணம் புரிகிறதா?

 

ஒருவன் (காதல் என்ற பெயரில் எவளோ ஒருத்தியை அல்லது ஒருவனை அழைத்துக்கொண்டு வீட்டைவிட்டு ஓடிப்போகுதல் போன்ற) பெரும் தவறை செய்து பெற்றோருக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்திவிட்டால், அவன் மகன் அல்லது மகள் அதேபோல் ஒரு பெரும் தவறை செய்து அவனுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தக்கூடும். அதுவே, அவன் செய்த தவறுக்குரிய தண்டனையாக ஆகிவிடும். இதுவே வாழ்க்கையின் யதார்த்தமாகும்.

 

குற்றமாகாது

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( وَإِنَّ الرَّجُلَ لَيُحْرَمُ الرِّزْقَ لِلْخَطِيئَةِ يَعْمَلُهَا ) மனிதன் செய்யும் பாவத்தினால் அவனுடைய வாழ்வாதாரம் (ரிஸ்க்) தடுக்கப்படுகிறது. அறிவிப்பாளர்:- ஸவ்பான் (ரலி) அவர்கள் நூல்:- இப்னுமாஜா-87


ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. (ஒருமுறை) ஹின்த் பின்த் உத்பா (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து நாயகமே! (என் கணவர்) அபூசுப்யான் கருமியான மனிதர். எனக்கும், என் குழந்தைக்கும் செலவுக்கு போதிய பணத்தை அவர் தருவதில்லை. நான் அவரிடமிருந்து அவருக்கு தெரியாமல் (திருட்டுத்தனமாக) எடுத்துக் கொண்டதைத்தவிர (போதுமான தொகையை அவர் தர மாட்டார்) என்று கூறினார். அதற்கு அண்ணலார் ( خُذِي مَا يَكْفِيكِ وَوَلَدَكِ بِالْمَعْرُوفِ )  "உனக்கும், உன் குழந்தைக்கும் போதுமானதை நியாயமான அளவுக்கு நீ எடுத்துக் கொள்!" என்று கூறினார்கள்.   நூல்:- புகாரீ-5364

 

குடும்பச் செலவுக்கு போதுமான தொகை வைத்திருந்தும் அதை தர மறுக்கும் கருமியான தன் கணவனிடமிருந்து அவனுக்கே தெரியாமல் வீட்டு செலவுக்கு போதுமான தொகையை மனைவி எடுத்துக் கொண்டால் அது திருட்டு குற்றமாகாது. அதற்காக அவளை தண்டிக்கவும் கூடாது என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடு.

 

கணவனின் கஞ்சத்தனம் என்ற தீங்குக்கு தண்டனை தான், அவனுடைய பணம் அவனுக்கு தெரியாமல் திருடப்படுகிறது. கஞ்சத்தனம் என்ற தீங்குக்கு திருட்டு என்ற தீங்கு தண்டனையாக வழங்கப்பட்டது.

 

கொடுங்கோலர்கள்

 

ஆகவே, தீமை செய்தவர்களுக்கு அவர்களுடைய (தீய) செயலுக்குத் தக்கவாறு (தீமையைக்) கூலியாகக் கொடுக்கின்றான். திருக்குர்ஆன்:- 53:31

 

அப்பாசிய (கலீஃபா) ஆட்சியாளர்களான மஅமூன் மற்றும் அவரின் சகோதரர் முஅத்தஸிம் ஆகியோர் குர்ஆன் இறைவனுடைய படைப்பாகும். படைப்புகள் அனைத்தும் யுக முடிவு நாளில் அழிந்து விடுவது போன்று, குர்ஆனும் அழிந்து போகும் என்ற "முஅத்தஸிலா" கொள்கை உடையவர்களாக இருந்தனர்.

 

தமது கொள்கைக்கு யார் உடன்படவில்லையோ அவர்களுக்குச் சிறை தண்டனையும், அதன் பின்னரும் கட்டுப்படாவிட்டால் கசையடியும் கொடுக்கப்படும் என்று அறிவித்தனர். அன்றைய தலைமை நீதிபதியாக அஹ்மத் பின் அபீ துஆத் என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார்.

 

இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்கள், குர்ஆன் அல்லாஹ்வின் வாக்கு. எனவே, அது அழியாது என்ற "அஹ்லுஸ் ஸுன்னா" கொள்கை உடையவராக இருந்தார்கள்.

 

இந்த ஆட்சியாளர்கள் தமது கொள்கைக்கு ஒத்துவராத இமாமவர்களுக்கு ஆடைகள் கிழிந்து போகும் அளவிற்கு கடுமையான கசையடிகள் வழங்கினர். மேலும், இமாமவர்களை சிறையில் தள்ளி அவர்கள் நகர முடியாத அளவுக்கு பலமான சங்கிலிகளால் காலில் விலங்கிட்டனர். இமாமவர்களை இது போன்ற சொல்லொன்னா கொடுமைகளுக்கு ஆளாக்கினர்.

 

கொடுமை உச்சத்திற்குச் சென்ற பிறகு ஆட்சியாளரே மனமிறங்கி, இமாமவர்களை விடுவித்துமாறு கூறியும், தலைமை நீதிபதி அஹ்மத் பின்  அபீ துஆத் அதற்குச் சம்மதிக்கவில்லை. இந்தத் தலைமை நீதிபதி தான் இமாமவர்களை வதை செய்வதில் முன்னணியில் நின்றவர்.

 

கொடுமையாளர்களின் காலம் கடந்தது. கலீஃபா முஅத்தஸிமின் மகன் அல்முத்தவக்கில் என்பவர் கலீஃபாவாக ஆனார். அவர், இமாமவர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட கொடுமைகள் அனைத்திற்கும் முடிவுகட்டினார். மேலும், இதுவரை தலைமை நீதிபதியாக இருந்த அஹ்மத் பின் அபீ துஆதின் பதவியைப் பறித்து, அவரை கீழிறக்கினார். அவர் பக்தாதிலிருந்து துரத்தப்பட்டார். அவருடைய இயக்கம் வரையறை செய்யப்பட்டது. அவருடைய வாழ்வின் இறுதி நான்கு ஆண்டுகளில் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார். இறப்பு நெருங்கியபோது, அவர் முழுமையாக வாதநோயின் பிடியில் சிக்கித் தவித்தார். அவர் இறந்தபோது, மிகச் சிலரே அவருக்கு (ஜனாஸா தொழுகை) இறப்புத் தொழுகையில் கலந்து கொண்டனர்.

 

அல்லாஹ் உங்களின் விரோதிக்கு சரியான தண்டனை கொடுத்துவிட்டான் என்று ஒருவர் இமாமவர்களிடம் தெரிவித்தபோது, இமாமவர்கள் ஒன்றுமே சொல்லாமல் அமைதியாக இருந்துவிட்டு, பிறகு தலைப்பில் காணும் திருவசனத்தை முழுமையாக ஓதிக் காட்டினார்கள்.

 

மேலும், ( أَدِّ الأَمَانَةَ إِلَى مَنِ ائْتَمَنَكَ وَلاَ تَخُنْ مَنْ خَانَكَ )  "உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்டதை நிறைவேற்றுங்கள். உங்களை ஏமாற்றியவரைக்கூட நீங்கள் ஏமாற்றாதீர்கள்" (அபூதாவூத்-3068) என்ற நபிமொழியையும் கூறினார்கள். நூல்:- மஅல் அஇம்மா


பாவத்தின் ஊதியம் எப்படி இருக்கும் தெரியுமா? நாம் எதை யாருக்கு செய்தோமோ அதை அப்படியே நமக்கு வேறொருவர் மூலமாக நடக்கும். அவர்களுக்கு எப்படி வலித்ததோ அப்படியே அச்சு பிசகாமல் நமக்கும் வலிக்கும். எதை தருகிறோமோ அதை அப்படியே எடுத்துக்கொள்வோம். எவரையும் இலகுவாக விட்டுவிடுவதில்லை இறைவன். பாவத்திற்கு நிகர் பாவமே கூலியாக கிடைக்கக்கூடும்.

 

சோதனைகளுக்கும் தண்டனைகளுக்கும் காரணம்

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

( لَمْ تَظْهَرِ الْفَاحِشَةُ فِي قَوْمٍ قَطُّ حَتَّى يُعْلِنُوا بِهَا إِلاَّ فَشَا فِيهِمُ الطَّاعُونُ وَالأَوْجَاعُ الَّتِي لَمْ تَكُنْ مَضَتْ فِي أَسْلاَفِهِمُ الَّذِينَ مَضَوْا )  எந்த ஒரு கூட்டத்தினரிடம் ஒழுக்கக்கேடான தீங்குகள் தோன்றி அவற்றை அவர்கள் வெளிப்படையாகச் செய்யும் அளவுக்குப் போய்விட்டால், கொள்ளை நோயும் முன் வாழ்ந்த அவர்களின் முன்னோர்களுக்கிடையே ஏற்பட்டிராத விதவிதமான நோய்களும் அவர்களிடையே நிச்சயம் பரவும்.

 

( وَلَمْ يَنْقُصُوا الْمِكْيَالَ وَالْمِيزَانَ إِلاَّ أُخِذُوا بِالسِّنِينَ وَشِدَّةِ الْمَؤُنَةِ وَجَوْرِ السُّلْطَانِ عَلَيْهِمْ ) அவர்கள் எடை அளவையிலும் நிறுவையிலும் குறைவு செய்யும்போது பஞ்சம், கடும் நெருக்கடி, நாடாளும் மன்னரின் அடக்குமுறை ஆகியவற்றின் பிடியில் சிக்குவார்கள்.

 

( وَلَمْ يَمْنَعُوا زَكَاةَ أَمْوَالِهِمْ إِلاَّ مُنِعُوا الْقَطْرَ مِنَ السَّمَاءِ وَلَوْلاَ الْبَهَائِمُ لَمْ يُمْطَرُوا ) அந்த சமூக மக்கள் தமது செல்வங்களுக்கான (ஸகாத் எனும்) கட்டாயக் கொடையை வழங்காமல் தம்மிடம் வைத்துக் கொள்வார்கள். அதன் விளைவாக வான் மழை பொழிவது நிறுத்தப்பட்டு விடும். கால்நடைகள் மற்றும் இல்லாதிருந்தால் மழை பொழிவது முற்றிலும் நின்றுபோகும்.

 

( وَلَمْ يَنْقُضُوا عَهْدَ اللَّهِ وَعَهْدَ رَسُولِهِ إِلاَّ سَلَّطَ اللَّهُ عَلَيْهِمْ عَدُوًّا مِنْ غَيْرِهِمْ فَأَخَذُوا بَعْضَ مَا فِي أَيْدِيهِمْ ) அந்த மக்கள் அல்லாஹ்வின் ஒப்பந்தத்தையும் அவனது தூதரின் ஒப்பந்தத்தை முறித்து விடும்போது அல்லாஹ், அவர்களின் மீது மற்றவர்களிலிருந்து பகைவர்களை ஏற்படுத்தி அடக்கி ஆளச் செய்வான். எனவே பகைவர்கள், அவர்களின் கைவசம் இருக்கும் சிலவற்றையும் பறித்து கொள்வார்கள்.

 

( وَمَا لَمْ تَحْكُمْ أَئِمَّتُهُمْ بِكِتَابِ اللَّهِ وَيَتَخَيَّرُوا مِمَّا أَنْزَلَ اللَّهُ إِلاَّ جَعَلَ اللَّهُ بَأْسَهُمْ بَيْنَهُمْ )  அந்த சமூகத்தாரின் தலைவர்கள் அல்லாஹ்வின் வேதத்தின்படி தீர்ப்பு வழங்காமல் அல்லாஹ் தமக்கு அருளியவற்றை தேர்ந்தெடுக்காமல் செயல்படும்போது அவர்களில் சிலரை சிலருக்குப் பகைவர்களாய் ஆக்கிவிடுவான். (அதனால் பிளவுகள் தோன்றும். இறைவேதனை இறங்கும்.) அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் நூல்:- இப்னுமாஜா-4009, ஹுல்யத்துல் அவ்லியா இமாம் அபூநயீம், ஹாக்கிம், தப்ரானீ, ஸஹீஹ் ஜாமிஉ-7978 

 

பாவச் செயல்கள் ஆற்றுவது சோதனைகளையும் தண்டனையும் உருவாக்கித் தரும் என்று இந்த நபிமொழி எச்சரிக்கிறது.

 

மனிதன் அருவருப்பான காரியங்கள் செய்யும்போது அதற்குரிய கூலியும் அருவருப்பாகத்தானே இருக்கும்.

 

சென்னை போன்ற சில பெருநகரங்களில் அவ்வபோது மழைநீர் பெருக்கெடுத்து ஆங்காங்கே தேங்கி நிற்பதை அறிவோம். காரணம் ஏரி, குளங்களும் பிளாட் போட்டு பில்டிங்காக மாற்றிவிட்டதால் நீருக்கு வடிகால் இல்லை. மறுபுறம் கிணற்றில், போரிங்கில் வறட்சி. காரணம், மழைநீரை உள்ளே உறிஞ்சி (தேக்கி) பாதுகாத்து திருப்பித் தரும் விளைச்சல் நிலம், மண் தரை யாவும் தார் சாலையாக, சிமெண்ட் சாலையாக பளிங்கி தரையாக மாற்றியதால்.

 

அவ்வபோது, மழை வெள்ளத்தால் சென்னையில் சேதாரம் என்கிறோமே! இதைப் பற்றி என்றாவது நாம் சிந்தித்தோமா?

 

முகம் சுளிக்கும் அருவருப்பான பாவக்காரியங்களையும்விட்டும், அல்லாஹுத்தஆலா நம்மையும் நமது சந்ததிகளையும் பாதுகாப்பானாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

 

1 comment:

  1. அல் ஹம்து லில்லாஹ் அருமையான கட்டுரை உங்களுடைய இல்மில் அல்லாஹ் பரகத் செய்வானாக

    ReplyDelete

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...