Search This Blog

Thursday, 15 December 2022

தாழ்வாக எண்ணாதே!

 

தாழ்வாக எண்ணாதே!

 

أَمْ أَنَا خَيْرٌ مِنْ هَذَا الَّذِي هُوَ مَهِينٌ وَلَا يَكَادُ يُبِينُ

 

அர்ப்பமானவரும் தனது கருத்தைத் தெளிவாக எடுத்துரைக்க இயலாதவருமான இவரைவிட (மூசாவைவிட) நான் சிறந்தவன் அல்லவா? (என்று ஃபிர்அவ்ன் கேட்டான்.)   திருக்குர்ஆன்:- 43:52

 

நம்மைவிட வயது, அறிவு, அழகு, பொருளாதாரம் ஆகியவற்றால் குறைந்தவர்களை தாழ்வாக எண்ணுவது தவிர்க்கப்பட வேண்டிய மாபாதகச் செயலாகும். 


மேலும், தன்னைத்தானே மட்டமாகக் கருதுவதும் தாழ்வுமனப்பான்மை ஆகும். அது முன்னேற்றத்திற்கான தடை கற்களாகும். பலமுறை தோற்றுப்போனாலும் முயற்சிகள் மட்டும் தொடர்ந்துக்கொண்டே இருந்தால் வெற்றி காணலாம். எனவே, தாழ்வு மனப்பான்மையைத் தவிர்த்து, உன்னால் முடியும் என்ற உந்துசக்தி மிக அழகானது என்கிறது இஸ்லாம்.

 

நலவுகள் தவறிவிடலாம்

 

அல்லாஹுதஆலா மிகுந்த கண்ணியத்துடன் படைத்த ஆதி மனிதர் ஆதம் (அலை) அவர்களை ஷைத்தான் தாழ்வாக எண்ணினான். அதனால் தான் அவன் வழிகெட்டுபோய், இறைவனின் சாபத்திற்கு ஆளானான்.

 

கொடியோன் அபூலஹப் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை தனது தம்பியின் மகன் தானே என்று தாழ்வாக எண்ணினான். அதனால்தான் அவன் (ஈமான் எனும்) இறைநம்பிக்கை கிடைக்கபெறாமல் வழிகெட்டுப்போனான். ஆனால், ஹம்ஸா (ரலி) அவர்கள் அண்ணலாரை தனது அண்ணன் மகன் என்று மட்டும் எண்ணாமல் அதையும் தாண்டி, இவர் ஒரு இறைத்தூதர் என்று எண்ணினார்கள். அதனால் தான் அவர்களுக்கு இறைநம்பிக்கை கிடைக்கப்பெற்று (ஷஹீத் எனும்) உயிர்த்தியாகி என்ற உயரிய விருதைப் பெற்றார்கள். எனவே, நாம் சில நேரங்களில் பிறரை தாழ்வாக எண்ணுவதன் மூலம் நமக்கு கிடைக்க வேண்டிய நலவுகள் தவறிவிடலாம்.

 

இறைத்தூதர் மூசா (அலை) அவர்கள் சிறுவராக இருந்தபோது தீக்கங்கை எடுத்து தமது நாவில் போட்டுகொண்டதால் அவரது நாக்கில் சிறிது பாதிப்பு ஏற்பட்டது. அந்த பாதிப்பு  சிறதளவு நீடித்தது. எனவே, ஃபிர்அவ்ன், இந்த சின்னஞ்சிறு குறை எடுத்துரைத்து அதன் மூலம் மூசா (அலை) அவர்களை தாழ்வாக எண்ணி, அவரை விடவும் நான் தான் சிறந்தவன் எனும் கருத்தில் இவ்வாறு கூறினான் என தலைப்பில் காணும் திருவசனம் கூறுகிறது.

 

மூசா (அலை) அவர்கள் சிறிதளவு திக்குவாய்க்காரராக இருந்தாலும், அவர்கள் அந்த குறையை நீக்குமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள். அந்த குறை நீங்கியது என திருக்குர்ஆன் (20:27,28,36) இயம்புகிறது.

 

உன்னை நீயே தாழ்வாக எண்ணாதே என்கின்ற இஸ்லாம், பிறரையும் அவ்வாறு எண்ணாதே என்று கூறுகிறது. அதாவது தன்னை உயர்வாக எண்ணி, பிறரை தாழ்வாக எண்ணுவது தீய  குணமாகும். இந்தத் தீய குணம் ஷைத்தான் மற்றும் பிர்அவ்ன், அபூலஹப் போன்ற தீயவர்களிடம் இருந்ததாக திருக்குர்ஆன் இயம்புகிறது. சுருங்கக்கூறின், இது தவிர்க்கப்பட வேண்டிய ஷைத்தானிய குணமாகும்.

 

கேலி கிண்டல்

 

அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருமுறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களை ஒரு மரத்தில் ஏறி அதன் கிளை ஒன்றை ஒடித்து வர கட்டளையிட்டார்கள். (உடனே அன்னார் மரத்தில் ஏறிய போது) சில நபித்தோழர்கள், அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களுடைய கெண்டைக்கால் மெலிந்திருப்பதைப் பார்த்து சிரித்துவிட்டார்கள். அப்போது அண்ணலார், ( مَا تَضْحَكُونَ‏؟‏ لَرِجْلُ عَبْدِ اللهِ أَثْقَلُ فِي الْمِيزَانِ مِنْ أُحُدٍ‏ ) "நீங்கள் ஏன் சிரிக்கிறீர்கள்? அப்துல்லாஹ்வின் கால் (நன்மை தீமைகளை நிறுக்கப்படும்) தராசில் உஹது மலையைவிட கனமிக்கது" என்று கூறினார்கள். நூல்:- அல்அதபுல் முஃப்ரத்-237

 

ஒருவருடைய உடல் ஊனத்தை குறித்து கேலி கிண்டல் செய்து அவரை தாழ்வுமனப்பான்மைக்கு ஆளாக்கக்கூடாது. மாறாக, அவரிடமுள்ள ஏதேனும் ஒரு திறமையை வைத்து அவரை ஊக்கப்படுத்த வேண்டும். அவர் திறமையை அவருக்கும், வெளி உலகத்திற்கும் புரிய வைக்க வேண்டும். இதையே இஸ்லாம் விரும்புகிறது. மாற்றுத்திறனாளிகள் சாதித்தவை ஏராளம் என்பதை உலகம் அறியும்.

 

மதிப்பிற்குரியோர்

 

நபித்தோழர்களில் ஜுலைபீப் (ரலி) அவர்கள் தன்னைப்பற்றி தாழ்வு மனப்பான்மை கொண்டிருந்தார். காரணம், அவர் குள்ளமானவராகவும் அழகற்றவராகவும் இருந்தார். மேலும், அவருக்கு முகத்தில் சிவப்புத் தேமல் இருந்தது. இதனால் இவருக்கு யாரும் பெண் கொடுக்க முன்வரவில்லை.

 

ஒருமுறை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஜுலைபீப் (ரலி) அவர்களை அழைத்து, "நீர் ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை?" என்று வினவினார்கள். அதற்கு ஜுலைபீப் (ரலி) அவர்கள், "அருவருப்பான தோற்றம் கொண்ட எனக்கு இந்த மதீனாவில் யார் பெண் கொடுப்பார்?" என்று விரக்தியுடன் கூறினார்.

 

அண்ணலார், "தோழரே அல்லாஹ்விடத்தில் நீ ஒன்றும் அருவருப்பானவராக இல்லை. ஊரில் இன்னார் வீட்டுக்கு சென்று உனக்குப் பெண் கேள்!" என்று சொல்லி அனுப்பினார்கள். அவரும் அவ்வாறே சென்று அவ்வீட்டினரிடம் பெண் கேட்டார். அவ்வீட்டினர் முதலில் தயங்கினாலும், பிறகு, இதுவே அண்ணலாரின் விருப்பம் என்று உணர்ந்து அவர்களின் மகளை அவருக்கு மணமுடித்து கொடுத்தார்கள்.

 

ஜுலைபீப் (ரலி) அவர்களின் திருமண வாழ்க்கை மிக்க மகிழ்ச்சியோடு சென்றுகொண்டிருந்தது. அதன் பிறகு ஜுலைபீப் (ரலி) அவர்கள் ஒரு அறப்போரில் கலந்துகொண்டார். அப்போரில் முஸ்லிம்களுக்கு அல்லாஹ் போர்ச்செல்வங்களை வழங்கினான். அப்போது அண்ணலார், "(உங்களில்) யாரையேனும் காணாமல் நீங்கள் தேடுகிறீர்களா? என்று கேட்டுவிட்டு, 'நான் ஜுலைபீபைக் காணாமல் தேடுகிறேன். நீங்களும் அவரைத் தேடுங்கள்' என்று கூறினார்கள். கொல்லப்பட்டவர்களிடையே அவர் தேடப்பட்டார். (எதிரிகளில்) ஏழு பேரின் உடல்களுக்கு அருகில் அவரது உடலை கண்டனர். ஜுலைபீப் அந்த எழுவரையும் கொல்ல, அவர்களும் ஜுலைபீபைக் கொன்று விட்டிருந்தனர்.

 

அண்ணலார் வந்து ஜுலைபீப் (ரலி) அவர்களுக்கு அருகில் நின்று, ( قَتَلَ سَبْعَةً ثُمَّ قَتَلُوهُ هَذَا مِنِّي وَأَنَا مِنْهُ هَذَا مِنِّي وَأَنَا مِنْهُ ) "இவர் எதிரிகளில் ஏழு பேரைக் கொன்றார். அவர்களும் இவரைக் கொன்றுவிட்டனர். (இதோ) இவர் என்னைச் சேர்ந்தவர். நான் இவரைச் சேர்ந்தவன். என்று இருமுறை கூறினார்கள். பிறகு அவரை தமது (முன்)கையில் வைத்து தூக்கிக் கொண்டார்கள். அண்ணலாரின் கைகளைத் தவிர (கட்டிலாக) வேறெதுவும் அவருக்கு இருக்கவில்லை. பிறகு குழி தோண்டப்பட்டு அண்ணலாரே அவரது உடலை அடக்கம் செய்தார்கள். நூல் முஸ்லிம்-4877, முஸ்னது அஹ்மத், இப்னு ஹிப்பான், அல்இஸாபா, உசுதுல் ஙாபா

 

அருமை நாயகம் (ஸல்) அவர்களின் திருக்கரத்தால் நல்லடக்கம் செய்யப்படும் நற்பாக்கியம் ஜுலைபீப்  (ரலி) அவர்களுக்கு கிடைத்தது. ஒரு மனிதனுக்கு இதைவிட பெரும்பாக்கியம் என்ன வாய்த்துவிட முடியும்? உருவத்தைப் போலவும் பெயரைப் போலவும் சுருக்கமாய் வாழ்ந்து மறுமையின் நிகரற்ற பெருமைக்கு உரியவராகிப்போனார் ஜுலைபீப்  (ரலி) அவர்கள்.

 

கட்டிப் பிடித்துக்கொண்டார்கள்

 

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது கிராமவாசிகளில் ஒருவரான ஸாஹிர் பின் ஹராம் அல்அஷ்ஜயீ (ரலி) அவர்கள் அருமை நாயகம் (ஸல்) அவர்களுக்கு கிராமத்திலிருந்து (காய்கறிகள் பழவகைகள் மற்றும் பல) பொருள்களைக் கொண்டு வந்து அன்பளிப்பாக வழங்கிவந்தார். அவர் (மதீனாவிலிருந்து) புறப்பட்ட விரும்பும் போது (அவருக்கு தேவையான நகர்ப்புற மளிகைப் பொருள்களை) அண்ணலார் அவரிடம் வழங்குவார்கள். அண்ணலார் அவரை நேசித்து வந்தார்கள் அவர் (தோற்றத்தில்) அவலட்சணமானவராக இருந்தார்.

 

ஒருநாள் அவர் தனது வணிகப் பொருள்களை விற்பனை செய்து கொண்டிருந்தார். அந்நிலையில் அண்ணலார் அவரிடம் வருகை தந்து அவர் பார்க்காத வகையில் பின்புறத்திலிருந்து (தமது கைகளை அவரது அக்குளுக்குக் கீழ் நுழைத்து) அவரைக் கட்டிப் பிடித்துக்கொண்டார்கள். அப்போது அவர், "யார் அது என்னை விடுங்கள்" என்று கூறினார்.

 

அந்நிலையில் (தமது ஓரக்கண்ணால்) திரும்பிப் பார்த்து அண்ணலாரை அடையாளம் கண்டுகொண்டார். (தன்னை அரவணைத்திருப்பவர்) அண்ணலார் தான் என அறிந்ததும் அவர் தமது முதுகை அண்ணலாரின் நெஞ்சுடன் தாராளமாக சேர்த்துக் கொள்ளலானார்.

 

அப்போது அண்ணலார், ( مَنْ يَشْتَرِي هَذَا الْعَبْدَ ) "இந்த அடிமையை விலைக்கு வாங்குபவர் யார்? என (தமாஷாக)  வினவினார்கள். அப்போது ஸாஹிர் (ரலி) அவர்கள், ( يَا رَسُولَ اللهِ، إِذًا وَاللَّهِ تَجِدُنِي كَاسِدًا ) "நாயகமே! என்னை விற்றால் அல்லாஹ்வின் மீதாணையாக, மலிவான பொருளாகவே என்னை பெற்றுக்கொள்வீர்கள்" (நல்ல விலை போகுமளவுக்கு நானொன்றும் தகுதியானவனல்ல)" என்று கூறினார். அதற்கு அண்ணலார், ( لَكِنْ عِنْدَ اللهِ لَسْتَ بِكَاسِدٍ أَوْ قَالَ‏ أَنتَ عِنْدَ اللهِ غَالٍ‏ ) “என்றாலும், அல்லாஹ்விடத்தில் நீர் மலிவானவர் அல்லர்" என்றோ அல்லது  “நீர் அல்லாஹ்விடம் விலைமதிப்பானவர் ஆவீர்" என்றோ கூறினார்கள். நூல்:- ஷமாயில் திர்மிதீ-239

 

ஸாஹிர் (ரலி) அவர்கள் அருவருப்பான தோற்றமுடையவராக இருந்தாலும், நற்குணமுடையவராக இருந்தார். அருமை நாயகம் (ஸல்) அவர்கள், "நீர் இந்த நற்குணத்தால் இறைவனிடம் மதிப்புமிக்கவராக திகழ்கின்றீர்" என்று பாராட்டி, அவரிடமிருந்த தாழ்வு மனப்பான்மையையும் நீக்கியுள்ளார்கள்.  ஒருவருடைய அருவருப்பான தோற்றத்தை வைத்து அவர் இழிவானவர்  என கருதக்கூடாது என்று இந்த நபிமொழி அறிவுறுத்துகிறது.

 

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது. உமர் (ரலி) அவர்கள், ( أَبُو بَكْرٍ سَيِّدُنَا، وَأَعْتَقَ سَيِّدَنَا. يَعْنِي بِلاَلاً )  "அபூபக்ர் எங்கள் தலைவராவார். அவர்கள், எங்கள் தலைவர் பிலாலை (விலைக்கு வாங்கி) விடுதலை செய்தார்கள்" என்று சொல்லுவார்கள். நூல்:- புகாரீ-3754

 

அபிசீனிய கருப்பின அடிமைகளில் ஒருவரான பிலால் பின் ரபாஹ் (ரலி) அவர்கள் "பனூ ஜமஹ்" கூட்டத்தாரின் அடிமையாக இருந்தார். இவர்  இஸ்லாத்தைத் தழுவினார் என்பதற்காக கடுமையாகச் சித்திரவதை செய்யப்பட்டார். அவரைக் கொடுமை செய்ததில் உமைய்யா பின் கலஃப் என்பவனுக்குப் பெரும் பங்கு உண்டு. அத்தனை கொடுமைகளையும் தாங்கிக்கொண்டு, தான் கொண்ட கொள்கையில் பிலால் (ரலி) அவர்கள் உறுதியுடன் இருந்தார். இதனால், அபூபக்ர் (ரலி) அவர்கள் பிலால் (ரலி) அவர்களை விலைக்கு வாங்கி விடுதலை செய்தார்கள். அன்னார் ஹிஜ்ரி 20 ஆம் ஆண்டு (கி.பி. 641) டமாஸ்கஸ் நகரில் தமது 63 ஆவது வயதில் இறந்தார். நூல்:- இர்ஷாதுஸ் ஸாரீ, ஃபத்ஹுல் பாரீ

 

அப்துர் ரஹ்மான் பின் ஹர்மலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது. கருத்த ஒரு மனிதர் சயீது பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்களிடம் கேள்வி கேட்க வந்தார். அப்போது சயீது (ரஹ்) அவர்கள் அவரை நோக்கி, ( لَا تَحْزَنَ مِنْ أَجْلِ أَنَّكَ أَسْوَدُ فَإِنَّهُ كَانَ مِنْ أَخْيَرِ النَّاسِ ثَلَاثَةٌ مِنَ السُّودَانِ  بِلَالٌ وَمِهْجَعٌ مَوْلَى عُمَرَ وَلُقْمَانُ الْحَكِيمُ كَانَ أَسْوَدَ نُوبِيًّا ذَا مَشَافِرَ )  "நீ கருப்பாக இருக்கிறாய் என்பதனால் கவலைப்படாதே! ஏனென்றால், மக்களில் மிகச் சிறந்தவர்களில் மூவர் கருப்பர் இனத்தைச் சேர்ந்தவர்கள் தான். 1) பிலால் (ரலி) அவர்கள். 2) உமர் (ரலி) அவர்களின் அடிமையாயிருந்த மிஹ்ஜஉ (ரலி) அவர்கள். 3) தத்துவஞானி லுக்மான் (அலை) அவர்கள். இவர் நூபாவைச் சேர்ந்தவர். தடித்த உதடுகளுள்ள கருப்பர்" என்று  கூறினார்கள். நூல்:- தஃப்சீர் தபரீ, அல்பிதாயா வந்நிஹாயா

 

உடல் உறுப்பை இழந்தவர்

 

ஜனாதிபதி அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆட்சி காலத்தில், தன்னை நபியென்று வாதிட்ட பொய்யன் முசைலாவுக்கு எதிராக சென்ற பெரும் படையில் (அனுமதிப் பெற்று) உம்மு அம்மாரா (ரலி) அவர்களும் கலந்துகொண்டார்கள். அந்தப் போரில் அவ்வீரப் பெண்மணியின் வலது கை துண்டாகிப்போனது.


ஒரு கை இல்லாமல் தன்னை பார்ப்பவர்கள் என்ன எண்ணுவார்கள்? என்று கூச்சப்பட்டு பெரும்பாலும் வீட்டைவிட்டு வெளியே வராமலேயே இருந்தார்கள்.

 

ஜனாதிபதி அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆட்சி காலம் முடிந்து ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் காலம் வந்தது. உம்மு அம்மாரா (ரலி) அவர்கள் குறித்து இவ்வாறு செய்தி கேள்விப்பட்ட உமர் (ரலி) அவர்கள், ஒருநாள் பள்ளிவாசலின் சொற்பொழிவு மேடையில் நின்றவாறு, "மக்களே! உம்மு அம்மாரா எங்கே?" என்று கேட்டார்கள்.

 

யாருக்கும் தெரியாமல் கடைக்கோடியில் இருந்த உம்மு அம்மாரா (ரலி) அவர்கள், "ஜனாதிபதி அவர்களே! இதோ இருக்கிறேன்"  என்று மெதுவாக கூறினார்கள்.

 

உமர் (ரலி) அவர்கள், "உம்மு அம்மாரா! உமது கை துண்டிக்கப்பட்டுவிட்டது என்பதற்காக நீர் கூச்சப்படுகின்றோ? வெட்கத்தால் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கின்றீரோ? உம்மு அம்மாரா! உனக்கு ஒரு நற்செய்தி கூறட்டுமா? நீர் சொர்க்கத்தில் நுழைவதற்கு முன்னரே உமது உடலின் ஒரு உறுப்பு சொர்க்கத்தில் நுழைந்து விட்டது" என்று (உற்சாகப்படுத்தும் விதமாகக்) கூறினார்கள்.

 

அவ்வளவுதான். உமர் (ரலி) அவர்களின் இந்த வார்த்தையைச் செவியுற்றதும் பள்ளிவாசலில் கூடியிருந்த அனைவரும் (அல்லாஹு அக்பர்) "இறைவன் மிகப் பெரியவன்" என்று தக்பீர் முழக்கமிட்டனர். பின்னர் உம்மு அம்மாரா (ரலி) அவர்கள் ஒரு கையில்லாமல் மக்களுக்கு முன் முன்னர் தைரியமாகவும் மகிழ்ச்சியாகவும் நடமாடினார்கள்.

 

நாம் பிறரை தாழ்வாக எண்ணாமலும், நம்மை நாமே தாழ்வான எண்ணாமலும் வாழும் சிறந்தப் பண்பாளர்களாக அல்லாஹுத்தஆலா நம்மை வாழ செய்வானாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்-9840535951

 

4 comments:

  1. அல்ஹம்து லில்லாஹ் அருமை யான கட்டுரை அல்லாஹ் உங்கள் இல்மில் பரகத் செய்வானாக

    ReplyDelete
  2. Masha Allah hazarath
    Allah barkath saivanaga

    ReplyDelete
  3. தங்களின் கட்டுரைகளைத்தான் என்னுடைய அதிகமான ஜும்ஆ உரைகளில் பயன்படுத்துகிறேன்.
    பாரக்கல்லாஹ் ஹஜ்ரத்

    ReplyDelete

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...