Search This Blog

Thursday, 5 May 2022

எப்படி இருக்கீங்க...

 

எப்படி இருக்கீங்க...


 قال الله تعالى : وَاِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِيْنِ

 

قال رسول الله صلى الله عليه وسلم : مَا سُئِلَ اللَّهُ شَيْئًا أَحَبَّ إِلَيْهِ مِنْ أَنْ يُسْأَلَ الْعَافِيَةَ


அல்ஹம்துலில்லாஹ். ரமளான் மாதத்தின் கடமையான 30 நோன்புகளை நிறைவேற்றியுள்ளோம். அந்த நோன்பு நாட்களில் நம்முடைய உணவுஉறக்கம்உடற்பயிற்சி எல்லாம் கொஞ்சம் முன்பின் இருந்திருக்கலாம். இதை இனிமேல் சரிசெய்து உடல்நலம் பேணுவதில் அக்கறையுடன் இருக்கவேண்டும்.

 

உலகில் மனிதன் படைக்கப்பட்டதன் நோக்கம் அகில உலக இறைவனான அல்லாஹுதஆலாவை வணங்குவதற்காகத்தான். அவனை வணங்கி வாழ்வதற்கு மிக தேவையானது உடல் ஆரோக்கியம். வணக்கம் செய்யும் முறைகளைக் கற்றுத்தந்த அல்லாஹுதஆலா மனிதன் நோய்களிலிருந்து பாதுகாப்பு பெற்று உடல் ஆரோக்கியத்துடன் வாழ்வதற்குரிய வழிமுறைகளையும் கற்றுத்தந்துள்ளான்.


وَاِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِيْنِ

 

(இறைத்தூதர் இப்ராஹீம்-அலை அவர்கள் கூறினார்கள்.) நான் நோயுற்றால் அவனே (அல்லாஹ்வே) என்னை குணப்படுத்துவான்.   திருக்குர்ஆன்:- 26:80


பிரார்த்தனையின் போது

 

நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் கூறினார்கள். ( مَا سُئِلَ اللَّهُ شَيْئًا أَحَبَّ إِلَيْهِ مِنْ أَنْ يُسْأَلَ الْعَافِيَة ‏ ) "அல்லாஹ்விடம் கேட்கப்படும் பிரார்த்தனைகளில் ஆரோக்கியத்தைத்தவிர மிகவும் அவனுக்கு பிரியமான பிரார்த்தனை வேறு எதுவும் இல்லை.    அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள்    நூல்:- திர்மிதீ-3515

 

நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் கூறினார்கள். ( سَلُوا اللَّهَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فَإِنَّ أَحَدًا لَمْ يُعْطَ بَعْدَ الْيَقِينِ خَيْرًا مِنَ الْعَافِيَةِ ) அல்லாஹ்விடம் உடல் ஆரோக்கியத்தையும், இறைமன்னிப்பையும் கேளுங்கள். ஏனெனில் நிச்சயமாக இறைநம்பிக்கைக்கு பிறகு உடல் ஆரோக்கியத்தைவிட சிறந்த (பாக்கியத்)தை எவரும் வழங்கப்பட்டதில்லை.   அறிவிப்பாளர்:- முஆத் பின் ரிஃபாஆ (ரலி) அவர்கள்       நூல்:- திர்மிதீ-3558

 

அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து நாயகமே! (அல்லாஹ்விடம் கேட்பதற்கு) எந்த பிரார்த்தனை சிறந்தது? என்று வினவினார். நபியவர்கள், ( سَلْ رَبَّكَ الْعَافِيَةَ وَالْمُعَافَاةَ فِي الدُّنْيَا وَالآخِرَةِ ) “உனது இறைவனிடம் இரு உலகிலும் ஆரோக்கியம் கிடைக்கப்பெற பிரார்த்திப்பீராக!என்று கூறினார்கள். அவர் இரண்டாவது நாள் அண்ணலாரிடம் வந்து இதே கேள்வியைக் கேட்டபோது, இதையே பதிலாக சொல்லப்பட்டது. அவர் மூன்றாவது நாள் அண்ணலாரிடம் வந்து இதே கேள்வியைக் கேட்டபோது, அதற்கு அண்ணலார் அவரிடம் இதையே பதிலாக சொல்லிவிட்டு ( فَإِذَا أُعْطِيتَ الْعَافِيَةَ فِي الدُّنْيَا وَأُعْطِيتَهَا فِي الآخِرَةِ فَقَدْ أَفْلَحْتَ ) "உனக்கு இம்மையிலும், மறுமையிலும் ஆரோக்கியம் வழங்கப்பட்டு விட்டால் நீ வெற்றி பெற்று விட்டாய்" என்று கூறினார்கள்.  அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள்     நூல்:- திர்மிதீ-3512

 

ஒருமுறை இறைத்தூதர் மூசா (அலை) அவர்கள் அல்லாஹ்விடம், “இறைவா! ஒரு விளக்கத்திற்காக, நீ மூசாவாகவும் நான் இறைவனாகவும் இருந்தால் நீ என்னிடம் என்ன கேட்பாய்? என்று வினவினார். அதற்கு அல்லாஹ், “நான் ஆரோக்கியத்தைத்தான் கேட்பேன்” என்று பதில் கூறினான்.

 

நாம் என்றென்றும் ஆரோக்கியத்துடன் வாழ அல்லாஹ்விடம் அதற்காக விண்ணப்பிக்க வேண்டும். எந்த நேரங்களில் பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படும் என்று நாம் அறிந்திருக்கிறோமோ அந்த நேரங்களில் மறவாமல் ஆரோக்கியத்தை பிரார்த்திக்க வேண்டும்.

 

மூன்றில் ஒரு பாகம்

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَا مَلأَ آدَمِيٌّ وِعَاءً شَرًّا مِنْ بَطْنٍ بِحَسْبِ ابْنِ آدَمَ أُكُلاَتٌ يُقِمْنَ صُلْبَهُ فَإِنْ كَانَ لاَ مَحَالَةَ فَثُلُثٌ لِطَعَامِهِ وَثُلُثٌ لِشَرَابِهِ وَثُلُثٌ لِنَفَسِهِ ) மனிதன் நிரப்பக் கூடிய பைகளில் வயிற்றைவிட மோசமானது வேறதுவுமில்லை. மனிதன் அவன் முதுகை நிமிர்த்தக்கூடிய சில கவள உணவுகளே போதும். அதற்கு மேலும் உண்ண வேண்டுமெனில் (வயிற்றில்) மூன்றில் ஒரு பாகத்தை தனது உணவுக்காகவும், மற்றொரு பாகத்தை தனது பானத்திற்காகவும், மற்றொரு பாகத்தை தனது சுவாசத்திற்காகவும் அவன் ஒதுக்கிக் கொள்ளட்டும். அறிவிப்பாளர்:- மிக்தாம் பின் மஃதீகரிப் (ரலி) அவர்கள்    நூல்:- திர்மிதீ-2380

 

எகிப்து மன்னர் முகவ்கிஸ் அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு பலவிதமான அன்பளிப்புகளை அனுப்பியிருந்தார். அதில் ஒரு மருத்துவரும் இருந்தார். அனைத்து அன்பளிப்புக்களையும் ஏற்றுக்கொண்ட அண்ணலார் அந்த மருத்துவரை மட்டும் திருப்பி அனுப்பி விட்டார்கள். காரணம் நாங்கள் பசித்த பிறகே உண்ணுகிறோம். சற்று பசியிருக்கும்போதே உணவைவிட்டும் எழுந்து விடுகிறோம். அதனால் அந்த மருத்துவரின் உதவி எங்களுக்கு தேவைப்படாதுஎன்று கூறினார்கள்.   நூல்:- முஹம்மதுர் ரசூலுல்லாஹ்

 

வயிறு நிரம்ப உண்ணுவதுதான் திருப்தியாக உண்டதாகும் என்று பலரும் நினைக்கிறார்கள். அது தவறாகும். நாம் உண்ணும்போது பசி அடங்கி விட்டாலே உடலுக்கு போதுமான உணவு கிடைத்துவிட்டது என்று பொருள். அந்த அளவோடு நிறுத்தி கொள்ள வேண்டும். பசி அடங்கிய பிறகும் ருசிக்காக மேலும் மேலும் உண்ணுவதே, உடல் நலக்குறைவுக்கு பிரதான காரணமாகும்.

 

குடலில் செரிமானத்துக்குத் தேவையான சுரநீர்கள் (Digestive Enzymes)  சுரக்கின்ற நேரங்களிலேயே இந்த பசி உணர்வு ஏற்படுகிறது.

 

குடல் இயங்குவது, செரிமான சுரநீர்கள் சுரப்பது ஆகியவை நமது கட்டுப்பாட்டில் இல்லை. இறைவன் வகுத்த விதியின்படி அவை நடைபெறுகின்றன. இறைவன் வகுத்துள்ள அந்த பசி உணர்வு ஏற்படுகின்ற நேரங்களில் உண்பதே சிறந்ததாகும்.

 

மேலும் உடலுக்கேற்ற உணவும், உணவுக்கேற்ற உடல் உழைப்பும் ஆரோக்கியத்திற்கு அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது. உணவு உண்ணுவதில் கவனமும், கட்டுபாடும் தேவை.

 

இமாம் கஸ்ஸாலீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ஒரு மனிதன் அளவுக்கு அதிகமாக உண்ணும்போது அவனுக்கு மதமதப்பு ஏற்படுகிறது. அவனது உடல் உறுப்புகள் தேவையில்லாததை எல்லாம் செய்ய ஆவல் கொள்கிறது. இறுதியில் மனிதன் பாவக்காரியங்களில் விழுந்து விடுகிறான்.

 

ஒருவர் விருந்து சாப்பிட்டுவிட்டு வெளியே வந்து தனது செருப்பைத் தேடிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு ஒரு சிறுவன் வந்தான். உடனே அவர் அவனை அழைத்து தம்பி! எனது செருப்பை என்னால் தேடி எடுக்க முடியவில்லை. அதனால் இன்ன அடையாளமுள்ள எனது செருப்பைத் தேடி எடுத்து கொடு! என்று அவனிடம் உதவி கோரினார்.

 

அந்த சிறுவன் உங்களால் குனிந்துத் தேடி எடுக்க முடியாதோ? என்றான். அதற்கு அவர் "தம்பி! என்னால் குனிய இயலுமானால் விருந்தில் வைத்த வாழைப்பழத்தையும் அல்வவா சாப்பிட்டு வந்திருப்பேன். என்னால் குனிய முடியாதவாறு கழுத்துவரை அல்லவா சாப்பிட்டு விட்டு வந்துள்ளேன்" என்றார். 


உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் சீராக இரத்தம் சப்ளை செய்வது மூளைதான். நாம் அதிகம் சாப்பிட்டும்போது இரைப்பைக்கு அதிகமாக இரத்தம் அனுப்ப உத்தரவிடுகிறது. இரைப்பை உள்வாங்கிய உணவை ஜீரணிக்க அதிக இரத்தம் அதற்கு தேவைப்படுகிறது. இப்படி இரைப்பைக்கு அதிக இரத்தம் செல்வதால் மற்ற உறுப்புகளுக்கும், மூளைக்கும் குறைவான அளவே இரத்தம் போய் சேர்வதால் அவைகளுக்கு சோர்வு உண்டாகி, களைப்பு ஏற்பட்டு விடுகிறது. இதனால் மூளைக்கு  சிந்தனை திறனும், மற்ற உறுப்புகளுக்கு செயல் திறனும் குறைந்து போய் விடுகிறது. இதனால் எல்லா வகையிலும் பலவீனம், உடல் தளர்வு ஏற்படுகிறது.

 

மன விருப்பம்

 

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்களது உணவு விரிப்பில் உடும்புக் கறி உண்ணப்பட்டது. அண்ணலாரின் மனம் உடும்புக் கறியை விரும்பாததால் அதை உண்பதை அண்ணலார் தவிர்த்தார்கள். நூல்:- புகாரீ-2575, முஸ்லிம்-3944, திர்மிதீ-1712

 

நம் மனதுக்கு ஒரு உணவு ஒவ்வவில்லை என்றால், அதனை தவிர்ந்து கொள்வதே நன்மையாகும். குடும்பத்தினர், நண்பர்கள் வற்புறுத்துகிறார்கள் என்பதற்காகவோ அல்லது அவர் சொல்லியும் அதை நாம் உண்ணாவிட்டால் அவரால் நமக்கு காரியம் ஆகாமல் போய்விடும் என்ற அச்சத்தினாலோ நம் மனத்துக்கு ஒவ்வாத ஒன்றை சாப்பிட்டால், சில நேரம் அது வாந்தியாக வெளியே வந்து விடக்கூடும். அல்லது அதன் மூலம் உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

 

நம்முடைய மனதிற்கும், உடலுக்கும் ஒருவித தொடர்பு உண்டு. சில நேரம் நோய் உண்டாவதற்கு மனம் ஒரு முக்கிய காரணம் என்பதை மருத்துவர்கள் மறுக்க முடியாது. மனதில் டென்ஷன் அதிகமாகும்போது அவை உடல் சார்ந்த நோய்களாக வெடிக்கின்றன. இதைத்தான் "சைக்கோமேட்டிக்" என்கிறார்கள்.

 

நம் மனம் வேண்டாம் என்று ஒதுக்குகின்ற உணவுகளையும், மருத்துவரின் ஆலோசனையின்படி நமது உடல் ஏற்றுக்கொள்ளாத உணவுகளையும் தவிர்க்க வேண்டும். நம் மனம் விரும்பினாலும் அது தவிர்க்கப்பட  வேண்டிய (ஹராமான) உணவாக இருந்தால் அதனையும் தவிர்க்க வேண்டும்.

 

அளவான உறக்கம்

 

உங்கள் உறக்கத்தை இளைப்பாறுதலாக ஆக்கினோம். இரவை ஆடையாக்கினோம். பகலை வாழ்க்கை (வசதிகளைத் தேடிக்கொள்ள) ஆக்கினோம்.  திருக்குர்ஆன்:- 78:9,10,11

 

நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِذَا نَعَسَ أَحَدُكُمْ فِي الصَّلاَةِ فَلْيَنَمْ حَتَّى يَعْلَمَ مَا يَقْرَأُ ) உங்களில் ஒருவர் தொழுகையில் கண்ணயர்ந்து விடுவாரானால், தாம் என்ன ஓதுகிறோம் என்பதை சரியாக அறியும் வரை அவர் (தொழுகையிலிருந்து விலகி) உறங்கிக் கொள்ளட்டும்.                                   அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள்   நூல்:-புகாரீ-213

 

அபூபர்ஸா (ரலி) அவர்கள் கூறியதாவது. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இஷா தொழுகைக்கு முன் உறங்குவதையும் இஷா தொழுகைக்குப்பின் (உறங்காமல்) பேசிக்கொண்டிருப்பதையும் வெறுப்பவர்களாக இருந்தார்கள்.    நூல்:- புகாரீ-568

 

அப்துல்லாஹ் பின் அம்ரு பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் இரவெல்லாம் நின்று வணங்குவதை பற்றி அறிந்து கொண்ட அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அது பற்றி என்னிடம் விசாரித்து விட்டு, ( وَقُمْ وَنَمْ ) “நீ (இரவில் சிறிது நேரம்) தொழுவீராக! (சிறிது நேரம்) உறங்குவீராக!என்று கூறினார்கள்.     நூல்:-புகாரீ-1153

 

வாழ்வில் வெற்றி பெற்றிட உழைப்பு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் ஓய்வும், உறக்கமும். உழைப்புக்கு இணையான முக்கியத்துவத்தை உறக்கத்திற்கும் அல்லாஹ் தந்துள்ளான்.

 

மனிதன் பகலில் நன்றாக ஓடியாடி உழைத்திட வேண்டுமானால் அவன் இரவில் நன்றாக உறங்கிட வேண்டும் என்பது இறைவன் வகுத்த விதி.

 

பிறந்த குழந்தை தினமும் 16 - 20 மணிநேரம் உறங்குகிறது. காரணம் குழந்தையின் நீண்ட நேர உறக்கம் அதன் மூளை வளர்ச்சிக்கும், உடல் வளர்ச்சிக்கும் மிகவும் உதவுகிறது. 3 முதல் 5 வயது வரை உள்ளவர்கள் 11 மணிநேரம் உறங்க வேண்டும். சராசரி மனிதன் 7 -  8 மணிநேரம் உறங்க வேண்டும்.

 

உறக்கம் களைப்பைப் போக்குகிறது என்கிறது திருக்குர்ஆன். இரவு பகல் மாறி மாறி வருவது நம்மை உறங்க வைக்க இறைவன் ஏற்படுத்திய "கன்ட்ரோல் ஸ்விட்ச்" என்றே கூற வேண்டும்.

 

நம்முடைய மூளையின் செல்களுக்கு அதிகப்படியான வேலைகள் தருவதும், அவற்றை அளவுக்கு மீறி தூண்டுவதும் நரம்பு மண்டலத்தின் இயல்பான செயல்பாட்டுக்கு இடையூறு ஏற்படுத்தும். இதனால் நரம்புத் திசுக்களையும் பாதிக்கும். இது அடிக்கடி தொடர்ந்து நிகழ்வது ஆபத்து. இதைத் தடுப்பது தான் உறக்கம். மூளையில் சேர்ந்திருக்கும் நச்சுக்களை அகற்றும் அளவுக்கு நிம்மதியாக நன்றாக உறங்க வேண்டும். இல்லாவிட்டால் நரம்பு தூண்டல்கள் அதிகமாகிவிடும். அது உடல் ஆரோக்கியத்தை கெடுத்து விடும். எனவே நாம் ஆரோக்கியமாக வாழ்ந்திட போதிய உறக்கம் அவசியமாகும்.

 

ஒரு மனிதன் தொடர்ந்து 14 நாட்கள் கொஞ்சம்கூட உறங்காமல் இருந்தால் அவன் இறந்துவிடுவான் என்கிறது ஒரு மருத்துவ ஆய்வு.

 

பின்னரவில் தான் இன்று பலரும் உறங்கச் செல்கின்றனர். இதனால் இவர்களால் ஆழ்ந்த உறக்கத்தைப் பெறமுடிவதில்லை. வேலைகளை ஒழுங்குபடுத்தி இரவு 9 மணிக்கு படுக்கையறைக்குள் புகுந்து விடுவது நல்லது. பின்னரவில் விழித்திருந்து செய்யும் வேலையை அதிகாலை 4 மணிக்குக்கூட செய்யலாம். இதனால் உறக்கம் கெடாமல், ஆரோக்கியம் பாதுகாக்கப்படுவதோடு அதிகாலையில் எழும் நல்ல பழக்கமும் உருவாகும்.

 

போதிய உறக்கம் இல்லாவிட்டால் எளிதில் எரிச்சல் ஏற்படும். வேலைகளில் கவனம் செலுத்த முடியாது. செயல் திறன் குறைந்து விடும். இதயப் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

 

உள்ளுறுப்புகள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட நேரத்தில் தமது பிரதானப் பணியைச் செய்கின்றன. நாள் முழுவதும் உடலில் சேரும் கழிவுகளை நீக்கும் வேலையை நள்ளிரவில் ஆழ்ந்த உறக்கத்தினால் உடல் குளிர்ந்திருக்கும் போது தான் கல்லீரல் செய்கிறது.

 

நள்ளிரவு வரை உறங்காமல் இணையதளம் அல்லது தொலைக்காட்சியில் இணைந்திருந்தால் உடலில் கழிவு நீக்கம் நடைபெறாமல் மறுநாள் சோர்வாகவே இருக்கும். இதனால் உடல் ஆரோக்கியம் கெட்டுப்போகும்.

 

இரவில் போதிய அளவு உறங்காமல் நெடுநேரம் இறைவணக்கம் புரிவதையே இஸ்லாம் விரும்புவதில்லை எனும்போது இரவில் நெடுநேரம் வரை பணம் சம்பாதிப்பதில் ஈடுபடுவோரையும், வெட்டி அரட்டையில் பொழுதைக் கழிப்பவர்களையும் என்னவென்று சொல்வது?

 

இரவு உறக்கம் எனும் ஆரோக்கியத்தை இழந்துவிட்டு பணம் சம்பாதிப்பதின் மூலம் என்ன பயன் பெறமுடியும்? வாழ்க்கையை எப்படி அனுபவிக்க முடியும்?

 

ஊக்க மருந்து

 

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது. (ஒருமுறை) கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் ஒரு பெண்ணைப் பார்த்தார்கள். (இதுபோன்ற சமயத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காக) உடனே அண்ணலார் தம் மனைவி ஸைனப் (ரலி) அவர்களிடம் சென்றார்கள். அப்போது அவர் தமக்குரிய ஒரு தோலைப் பதனிட்டுக் கொண்டிருந்தார். அவரிடம் அண்ணலார் தமது தேவையை நிறைவேற்றிவிட்டு பிறகு தம் தோழர்களிடம் புறப்பட்டு வந்து, ( إِنَّ الْمَرْأَةَ تُقْبِلُ فِي صُورَةِ شَيْطَانٍ وَتُدْبِرُ فِي صُورَةِ شَيْطَانٍ فَإِذَا أَبْصَرَ أَحَدُكُمُ امْرَأَةً فَلْيَأْتِ أَهْلَهُ فَإِنَّ ذَلِكَ يَرُدُّ مَا فِي نَفْسِهِ ‏ ) "ஒரு பெண் (நடந்து வந்தால்) ஷைத்தான் (தூண்டிவிடும்) கோலத்திலேயே முன்னோக்கி வருகிறாள். எனவே உங்களில் ஒருவரது பார்வை ஒரு பெண் மீது விழுந்து (இச்சையைக் கிளறி) விட்டால், உடனே அவர் தம் மனைவியிடம் செல்லட்டும். ஏனெனில் அது அவரது மனதில் தோன்றும் (கெட்ட) எண்ணத்தை அகற்றி விடும்.   நூல்:-முஸ்லிம்-2718, அபூதாவூத், திர்மிதீ-1078

 

திருமணத்திற்கு பின் குடும்ப பாரம் என்ற தடைக்கல்லை எண்ணி மனிதன் தளர்ந்து விடாமல் இருக்க ஊக்க மருந்தாய் அமைகிறது தாம்பத்திய உறவு.

 

உடலுறவு எண்ணம் தம்பதியருக்கு எப்போது வருகிறதோ அப்போதே அதில் ஈடுபடலாம். உடலுறவு என்பது உடல் ஆரோக்கியத்திற்கு உரமாக இருக்கிறது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

 

உடலுறவின் போது  உச்சநிலை இன்பம் (Orgasm) ஏற்படுகிறது. இதன் மூலம் ஏற்படும் இரத்த உயர்வால் உடம்பிலுள்ள எல்லா உறுப்புகளிலும் இரத்த ஓட்டம் சீராக நடைபெறுவதால் இரத்த அழுத்தம் என்பது வராது. குறிப்பாக மூளைக்கு புதிய இரத்தம் பாய்வது அதிகரிக்கிறது. மேலும் உடலுறவால் மூளையின் திறனும் அதிகரிக்கிறது. இதனால் அதிகப்படியான செயல்திறனை ஆற்றும் படியான உயர்ந்த நிலையை மூளை அடைகிறது.

 

ஆண்கள் உடலுறவில் ஈடுபடும் போது அவர்கள் உடலில் சுரக்கும் செக்ஸ் ஹார்மோன் (Testosterone) “டெஸ்டிரோஸ்டீரோன்என்பது வலி நிவாரணியாக செயல்பட்டு மூட்டுகளில் ஏற்படும் வலி, அழற்சி (Inflammation) ஆகியவற்றைக் குறைக்கிறது.

 

Dr.சாரா பிரீவேர் கூறுகிறார். உடலுறவின் போது பெண்களின் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அளவை அதிகரிக்க செய்கிறது. இது பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பு. அவர்களை எலும்பு முறிவு நோய் (Osteoporosis) லிருந்து பாதுகாக்கிறது.

 

உடலுறவு என்பது ஒருவித உடற்பயிற்சியாக அமைவதால் அதன் மூலம் கொழுப்பு (Fat) குறைவதாக தெரிய வந்துள்ளது.

 

ரஷ்ய நாட்டின் பிரபல செக்ஸ்லாஜிஸ்ட் Dr. மார்கோவிட்ஸ் கூறுகிறார். டென்ஷன் தான் இதயத்தின் முதல் எதிரி. ஆரோக்கியமான உடலுறவு தான் டென்ஷனை விரட்டும் விலையில்லா மாமருந்து.

 

மாதத்தில் ஒரு மட்டும் உடலுறவில் ஈடுபடுவோரில் பலரும் இதய நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவக் குழு ஒன்று நீண்ட ஆய்வுக்கு பிறகு இதனை தெரிவித்துள்ளது.

 

உணர்ச்சிகளை எப்படி தவறான வழிகளில் செலவழிப்பது அபாயகரமானதோ அவ்வாறே, உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டாலும், காமம் பித்தமாகி தலைக்கு ஏறி பலவித பாதிப்புகளையும் அது ஏற்படுத்திவிடும் என்பது மருத்துவக் கூற்று.

 

உடலில் தேங்கியிருந்து கொண்டு உடல் நலத்திற்கு ஊறுவிளைவிக்கின்ற நீர்மங்கள், முறையான உடலுறவின் மூலம் வெளியேறுவதால் உடல் புத்துணர்ச்சி பெறுகிறது. இதனால் தான் உடலுறவு என்பது உடல்நலம் காக்கும் காரணிகளில் மிக முக்கியமானது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

 

ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் கணவன் மனைவியை நான்கு மாதங்களுக்கும் அதிகமாக பிரிந்து இருக்கக்கூடாது என்று கட்டளையிட்டார்கள்.

 

மனிதனின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டே கணவன் மாதக்கணக்கில் அல்லது வருடக்கணக்கில் மனைவியைவிட்டு பிரிந்து போய் வெளிநாட்டில் இருந்து சம்பாதிப்பதை இஸ்லாம் விரும்புவதில்லை.

 

உடல் வலி, உடல் களைப்பு, கண்நோய், தலைவலி, காய்ச்சல், இருமல் ஆகிய வியாதிகளுக்கு பிறகும்; வயிறு நிரம்ப உண்ட பிறகும்; வாந்தி பேதி, காலரா, தொற்று நோய்கள் பரவுகின்ற சமயங்களிலும் உடலுறவை தவிர்ந்து கொள்வது நல்லது.

 

அதிகமாக உடலுறவு கொள்வதை வழமையாக்கிக் கொண்டால், கண் பார்வைக் குறைவு, உட்கார்ந்து எழுந்திருப்பதில் சிரமம், நீர்ப்பை பலம் குன்றி வீங்கி விடுதல், உடல் பலக்குறைவு, கிட்னி கெட்டுப்போகுதல், அடிக்கடி சிறுநீர் கழித்தல்,கல்லடைப்பு போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

 

ஒரே சமயத்தில் முதல்முறை உறவு கொள்வது இச்சையாகும். இரண்டாவது முறை உறவு கொள்வது இன்பமாகும். மூன்றாவது முறை உறவு கொள்வது பலக்குறைவாகும். நான்காவது முறை உறவு கொள்வது நோயை உண்டாக்கும்.

 

எனவே நடுநிலையான உடலுறவு மனிதனின் உடல் ஆரோக்கியத்தையும், ஆயுளையும் அதிகரிக்க செய்கிறது எனக் கண்டறியப்பட்டுள்ளது.

 

அடக்கக்கூடாது

 

நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் கூறினார்கள். ( وَلاَ يُصَلِّي وَهُوَ حَقِنٌ حَتَّى يَتَخَفَّفَ )  "மலம் ஜலத்தை அடக்கிக் கொண்டு தொழக்கூடாது. மலம் ஜலத்தை வெளியாக்கி தன் வயிற்றை இலகுவாக்கிக் கொண்டு தொழ வேண்டும்.                    அறிவிப்பாளர்:- சஃப்வான் (ரலி) அவர்கள்  நூல்:- முஸ்லிம்-969,  அபூதாவூத்-83

 

மலம் ஜலத்தை அடக்கிக் கொண்டு எந்த செயலையும் நிம்மதியாக செய்ய முடியாது. அதிலும் குறிப்பாக தொழுகைக்கு மிக முக்கியமானது மன அமைதி. மலம் ஜலத்தை அடக்கிக் கொண்டு தொழும்போது விரைவில் தொழுது முடிக்க வேண்டும் என்ற எண்ணம் தான் மேலோங்கி இருக்கும். அதனால் அதில் அவசரம் காட்ட நேரிடும். அப்போது மன அமைதி சீர்குலைந்து விடுவதால் தொழுகை பரிபூரணத்துவம் அடைவதில்லை.

 

மலம் ஜலத்தை அடக்குவதால் மூளை, குடல்கள், நரம்புகள் ஆகியவை பாதிப்படைகின்றன. மேலும் வாயுதொந்தரவு, சிறுநீரகத்தில் கல்அடைப்பு போன்ற உபாதைகளும் ஏற்படும் என்கிறது மருத்துவ உலகம்.

 

5-10 வயதுள்ளவர்களின் சிறுநீர்ப்பை 100-150 மி.லி. சிறுநீரையும், 22 - 25 வயதுள்ளவர்களின் சிறுநீர்ப்பை 350- 400 மி.லி சிறுநீரையும் தேக்கி வைக்க இயலும். பலமணி நேரம் அடக்கி வைத்து சிறுநீர் கழிப்பவர்களுக்கு சிறுநீர் முழுவதும் வெளியேறாது. விட்டு விட்டு தான் வெளியேறும். இந்த பழக்கம் தொடர்ந்தால் சிறுநீர் பையின் சுருங்கி விரியும் தன்மை குறைந்துவிடக் கூடும்.

 

மேலும் மலத்தை நீண்ட நேரம் அடக்குவதால் மலம் இறுகி மூலநோய் அல்லது மலச்சிக்கலுக்கு வழி வகுக்கும். மேலும் மலக்குடல் பாதிப்படையும். இதனால் மலம் கழிக்கும் போது இரத்தம் வெளியேறும். மலத்தை அடக்கும் பழக்கத்தால், சாப்பிட்டவுடன் மலம் கழிக்கும் பிரச்சினை (இரிட்டபிள் பௌல் சிண்ட்ரோம் - Irritable Bowel Syndrome) உருவாகலாம்.

 

மலம் ஜலத்தை அடக்கிக் கொண்டு தொழக்கூடாது என்று மார்க்கம் இயம்புகின்றபோது மலம் ஜலத்தை அடக்கிக் கொண்டு பணம் சம்பாதிப்பதை என்னவென்று சொல்வது?

 

வியாபாரத் தளத்தில் பலரும் மலம் ஜலத்தை அடக்கிக் கொண்டு சம்பாதிக்கின்றனர். இயற்கை உபாதைகளை அடக்குவதால் நிச்சயமாக உடல் ஆரோக்கியம் கெட்டுப் போகும். பணத்தால் கெட்டுப் போன உடல் ஆரோக்கியத்தை மீண்டும் முழுமையாக பெற்றிட முடியாது என்பதில் கவனம் தேவை.

 

இன்றைய மனிதன் செல்வத்தை சம்பாதிக்க ஆரோக்கியத்தை இழக்கிறான். இழந்த ஆரோக்கியத்தைப் பெற செல்வத்தை இழக்கிறான்.

 

நாம் வியாதிகளுக்கு சித்த மருத்துவத்தை அணுகினால் அங்கே நமக்கு பேதி போவதற்கான மருந்தையே முதலில் தருவார்கள். காரணம் குடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றிய பிறகு தான் மருத்துவம் செய்ய வேண்டும். அப்போது தான் அது முழுமையாக பயன் தரும் என்று அந்தத் துறை மருத்துவர்கள் கூறுகின்றனர்.

 

அடிக்கடி மலம் ஜலத்தை அடக்குவதால் அது குடல்களில் ஆங்காங்கே தங்கிவிடுவதற்கு வாய்ப்பிருக்கிறது அதன் மூலம் பற்பல நோய்கள் ஏற்படலாம்.

 

உடற்பயிற்சி

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் ( أَلاَ إِنَّ الْقُوَّةَ الرَّمْىُ ) வலிமை என்பது அம்பு எறியும் பயிற்சியாகும்என்று மும்முறை கூறினார்கள்.    நூல்:- முஸ்லிம்-3880

 

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது. அண்ணல் நபி (ஸல்)அவர்கள் மெலிய வைக்கப்பட்ட (பயிற்சியளிக்கப்பட்ட) குதிரைகளை "ஹஃப்யா எனுமிடத்திலிருந்து ஸனியத்துல் வதா" எனும் மலைக்குன்று வரை (ஓட்டப்பந்தயத்தில்) ஓட வைத்தார்கள். மெலிய வைக்கப்படாத  (பயிற்சியளிக்கப்படாத) குதிரைகளை "ஸனியத்துல் வதா"விலிருந்து "பனூ ஸுரைக்" பள்ளிவாசல் வரை (பந்தயத்தில்) ஓடச் செய்தார்கள். நானும் பந்தயத்தில் (என் குதிரையுடன்) கலந்து கொண்டேன்.    நூல்:- புகாரீ-2868, முஸ்லிம், அபூதாவூத் -2211, திர்மிதீ-1621

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் குறி தவறாது அம்பு எறியுதல், ஓட்டப்பந்தயம், குதிரையேற்றம் போன்றவைகளிலும் கவனம் செலுத்தியுள்ளார்கள். காரணம் இவைகள் உடற்பயிற்சிகளில் உள்ளவையே ஆகும்.

 

மனிதன் தன் உடலை ஆரோக்கியமாகவும், கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்ள போதிய உடற்பயிற்சி மிகவும் முக்கியமாகும் என்பதை உணர வேண்டும்.

 

உடற்பயிற்சியில் கவனமில்லாதவர்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படுவது இயல்பாகும். அருமை நாயகம் (ஸல்) அவர்கள் போர் பயிற்சி அளிக்கப்பட்ட மற்றும் பயிற்சி அளிக்கப்படாத குதிரைகளுக்கு ஓட்டப்பந்தயம் நடத்துவது மூலம் அந்த குதிரைகளின் ஆரோக்கியத்தை பேணுவதில் கவனம் செலுத்தியுள்ளார்கள்.

 

சமுக அமைப்பு, வயது, உடல் நலம் ஆகியவைக்கேற்ப உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். உடற்பயிற்சிகள் ஒருபோதும் கடினமானதாக இருந்துவிடக்கூடாது. மெதுவாக நடப்பது, ஓடுவது, நீச்சலடிப்பது என மனதுக்கு பிடித்த பயிற்சிகளை செய்ய வேண்டும்.

 

போதிய உடற்பயிற்சி ஆரோக்கியத்தையும், கவனக்குவிப்புத் திறனையும் அதிகரிக்கும். மேலும் மனக் குழப்பத்தைப் போக்கும், ஆற்றலை புதுப்பிக்கும், உடல் தசைகள் இறுக்கமடைவதோடு கெட்டக் கொழுப்பையும் குறைக்கும், அதிக இரத்த அழுத்தப் பிரச்சனை, இதய நோய்கள், சுவாசக் கோளாறுகள், நீரிழிவு நோய் இது போன்ற இன்னும் பல நோய்களை கட்டுப்படுத்தும்.

 

எனவே நாம் இஸ்லாம் கூறும் வழிமுறைகளில் உடல் ஆரோக்கியம் பேணி அதன் மூலம் அதிக இறைவழிபாடுகள் புரிந்து இறையருளைப் பெற அல்லாஹ் அருள்பாலிப்பானாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அlலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

No comments:

Post a Comment

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...