قُلْ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
(நபியே) நீர் கூறுவீராக: நிச்சயமாக என் தொழுகை, என் (குர்பானி போன்ற மற்ற) வழிபாடு, என் வாழ்வு, என் மரணம் (ஆகிய அனைத்தும்) அனைத்துலகங்களையும் படைத்து பரிபாலிக்கின்ற அல்லாஹ்வுக்கே உரித்தானவை. திருக்குர்ஆன்:- 6:162
இன்றைய காலகட்டத்தில் தொழுகை, நோன்பு, தான தர்மம், ஹஜ் உம்ரா போன்ற வழிபாடுகளில் ஈடுபடுவோர் அதிகரித்துக் கொண்டே வருகின்றனர். ஆனால், இது போன்ற வழிபாடுகள் மூலம் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைப் பெற வேண்டும் என்ற மனத்தூய்மையுடன் ஈடுபடுவோர் அரிதாகி வருகின்றனர் என்பதே பேருண்மையாகும்.
நற்செயல் என்பது கடுகைவிட சிறியதாக அல்லது மலையைவிட பெரியதாக இருந்தாலும் சரியே! அது அல்லாஹ்வுக்காக மட்டும் என்ற மனத்தூய்மையுடன் அமைந்துவிட்டால், அதுவே நமது வெற்றிக்கு காரணமாக அமைந்துவிடக்கூடும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِنَّ اللَّهَ لاَ يَنْظُرُ إِلَى صُوَرِكُمْ وَأَمْوَالِكُمْ وَلَكِنْ يَنْظُرُ إِلَى قُلُوبِكُمْ وَأَعْمَالِكُمْ ) நிச்சயமாக அல்லாஹ் உங்களின் உருவங்களையோ, செல்வங்களையோ பார்க்கமாட்டான். ஆயினும் உங்களுடைய உள்ளங்களையும், செயல்களையுமே பார்க்கிறான். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-5012, அபூதாவூத், திர்மிதீ, நசாயீ, இப்னுமாஜா
நாம் எந்த ஒரு செயலை செய்யும்போதும் நமது மனநிலை எப்படி இருக்கின்றன. மனத்தூய்மை நிறைந்திருக்கிறதா? அல்லது உலக இலாப நோக்கம் எதுவும் இருக்கிறதா? என்று தான் அல்லாஹ் பார்க்கிறான். நமது மனநிலையை பொறுத்தே அல்லாஹ் முடிவு செய்கிறான். நமது தோற்றமும், செயல்களும் மனத்தூய்மையின்றி எவ்வளவு தான் அழகானதாய் ஒளி சிந்தினாலும், வெளிப்பார்வைக்கு பிரம்மாண்டதாக காட்சியளித்தாலும் அல்லாஹ்விடம் அவற்றுக்கு எத்தகைய மதிப்பும் இருப்பதில்லை.
பலன் கிட்டும்
பூமியில் அவர்களுக்கு(த் தீமையை) நிச்சயமாக நான் அழகானதாகக் காட்டுவேன்; அவர்கள் அனைவரையும் கட்டாயமாக நான் வழி தவறச்செய்வேன் என்று (இப்லீஸ்) கூறினான். எனினும் அவர்களில் மனத்தூய்மை உள்ள உன் (நல்) அடியார்களைத் தவிர, (அவர்களை வழி கெடுக்க என்னால் முடியாது) என்று கூறினான். திருக்குர்ஆன்:-15:39,40
அபூஃபிராஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருவர் நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களிடம் இறைநம்பிக்கை என்றால் என்ன? என்று வினவினார். அதற்கு அண்ணலார் (அல்இக்லாஸ்) "மனத்தூய்மை" என்று பதிலளித்தார்கள். நூல்:- பைஹகீ
மௌலானா ரூமி (ரஹ்) அவர்கள் கூறியதாவது. ஒருமுறை அலீ (ரலி) அவர்கள் போர் களத்தில் எதிரி ஒருவனை வீழ்த்தி அவனது நெஞ்சின் மீதேறி அமர்ந்து அவனை வெட்டி வீழ்த்த தயாராகி விட்டார்கள். அப்போது அவன் சற்றென அலீ (ரலி) அவர்கள் முகத்தில் காரி உமிழ்ந்துவிட்டான். எச்சில் துப்பிய எதிரியின் செயல் அலீ (ரலி) அவர்களுக்கு பெரும் எரிச்சலை உண்டு பண்ணியது. ஆனாலும் எவ்வித சலனமுமின்றி அவனை எதுவும் செய்யாமல் அமைதியாக எழுந்துவிட்டார்கள். அவர்களது முகம் மட்டும் கடுமையாகவே காணப்பட்டது.
அவனுக்கோ ஆச்சரியம். ஆத்திரமூட்டும் தனது செயலால் சீற்றம் கொண்டு வேகமாகவல்லவா தான் கொல்லப்பட்டிருக்க வேண்டும்? தன்னை கொல்லாமல் எழுந்துவிட்டதை எண்ணி, ஒன்றும் புரியாமல் அதற்குரிய காரணத்தை அலீ (ரலி) அவர்களிடம் வினவினான்.
அதற்கு அலீ (ரலி) அவர்கள் "நீ என்னை காரீ உமிழ்வதற்கு முன் என் மனநிலை சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் இடையிலான இந்த போரில் சத்தியம் வெல்ல வேண்டும். என்ற தூய எண்ணம் மேலோங்கி இருந்தது. நான் இந்த போரில் அசத்தியத்தில் இருக்கும் உன்னை அல்லாஹ்வுக்காக மட்டுமே கொல்ல எண்ணினேன். ஆனால் நீ என் முகத்தில் காரி உமிழ்ந்ததால் உன் மீது எனக்கு தனிப்பட்ட வகையில் கோபம் ஏற்பட்டுவிட்டது.
இந்த நிலையில் நான் உன்னைக் கொன்றிருந்தால் தனிப்பட்ட என் கோபத்தால் நான் உன்னை கொன்றதாக ஆகிவிடும். அல்லாஹ்வின் மார்க்கத்திற்காக கொன்றதாகாது. இறைவனுக்காக செய்யப்படாத எந்த செயலையும் அவன் ஏற்பதில்லை. அதற்கு கூலியும் கொடுப்பதில்லை. என் சொந்த விருப்பு வெறுப்புக்கு நான் இடமளிப்பதில்லை. எனது செயல்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்காகவே இருக்கும்" என்றார்கள். இந்த விளக்கத்தை செவியுற்ற அந்த எதிரி அலீ (ரலி) அவர்களது மனத்தூய்மையைப் போற்றி வியந்தவராக தன்னையும் மனத்தூய்மையைப் போதிக்கும் தூய இஸ்லாமிய மார்க்கத்தில் இணைத்து கொண்டார்.
நாம் மனத்தூய்மையுடன் ஒரு செயலை செய்யும்போது நமக்கு மட்டுமல்ல பிறருக்கும் அதனால் பலன் கிட்டும் என்பது தெளிவாகிறது.
ஆற்றல் மிக்கது
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( سَبْعَةٌ يُظِلُّهُمُ اللَّهُ فِي ظِلِّهِ يَوْمَ لاَ ظِلَّ إِلاَّ ظِلُّهُ وَرَجُلٌ تَصَدَّقَ بِصَدَقَةٍ فَأَخْفَاهَا حَتَّى لاَ تَعْلَمَ يَمِينُهُ مَا تُنْفِقُ شِمَالُهُ ) அல்லாஹ் தனது (அரியாணையின்) நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத அந்த மறுமை நாளில் தனது நிழலில் ஏழு சாரார்களுக்கு நிழல் அளிப்பான். அதில் ஒரு சாரார் வலக்கரம் என்ன செலவளித்தது? என்பதை இடக்கரம் அறியாத அளவுக்கு இரகசியமாக கொடையளித்தவர். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-1423, முஸ்லிம்-1869
கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ் பூமியைப் படைத்த போது (நிலையாக நிற்காமல் கடுமையாக அதிர்ந்து) ஆடலாயிற்று. அந்நிலையில் அல்லாஹ் மலைகளைப் படைத்தான். பூமியின் மீது உறுதியாக நெருக்குமாறு பணித்தான். அப்போது இது தன் இயல்பு நிலைக்குத் திரும்பி தனக்குரிய இடத்தில் நேராக உறுதியாக நின்றது.
அப்போது வானவர்கள் மலைகளின் வலுவைக் கண்டு வியந்தனர். "இறைவா! உனது படைப்புகளில் மலைகளைவிட மிக வலுவான பொருள் ஏதாவது உண்டா?" என்று கேட்டனர் அதற்கு இறைவன், "ஆம்! இரும்பு உள்ளது" என்றான்.
அப்போது வானவர்கள், "இறைவா! உனது படைப்புகளில் இரும்பைவிட வலுவான பொருள் உள்ளதா?" என்று கேட்டனர். அதற்கு இறைவன், "ஆம்! நெருப்பு உள்ளது" என்றான்.
அப்போது வானவர்கள், "இறைவா! உனது படைப்புகளில் நெருப்பைவிட வலுவான பொருள் உள்ளதா?" என்று கேட்டனர். அதற்கு இறைவன், "ஆம்! தண்ணீர் உள்ளது" என்றான்.
அப்போது வானவர்கள், "இறைவா! உனது படைப்புகளை தண்ணீரைவிட வலுவான பொருள் உள்ளதா?" என்று கேட்டனர். அதற்கு இறைவன், "ஆம்! காற்று இருக்கிறது" என்றான். அப்போது வானவர்கள், "இறைவா! உனது படைப்புகளில் காற்றைவிட அதிக வலுவான பொருள் உள்ளதா?" என்று கேட்டனர். அதற்கு இறைவன், ( نَعَمِ ابْنُ آدَمَ تَصَدَّقَ بِصَدَقَةٍ بِيَمِينِهِ يُخْفِيهَا مِنْ شِمَالِهِ ) "ஆம்! தனது இடக்கைக்குக்கூட தெரியாமல் தன் வலக்கையினால் தர்மம் செய்யும் மனிதன் உள்ளான்" என்று கூறினான். அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-3281
பிரார்த்தனைக்கு போதிய பலன்
நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களில் மூன்று பேர் (ஒன்றாக வெளியூருக்கு) நடந்து சென்றனர். செல்லும் வழியில் ஒரு குகையில் இரவு தங்கும்படியான (சூழல்) ஏற்பட்டு அதில் அவர்கள் நுழைந்தனர். (அப்போது) மலையிலிருந்து பெரும் பாறையொன்று உருண்டு வந்து அவர்கள் இருந்த குகையின் வாசலை அடைத்துவிட்டது. அப்போது அவர்கள், ( إِنَّهُ لاَ يُنْجِيكُمْ مِنْ هَذِهِ الصَّخْرَةِ إِلاَّ أَنْ تَدْعُوا اللَّهَ بِصَالِحِ أَعْمَالِكُمْ ) "நீங்கள் (மனத்தூய்மையுடன்) செய்த நற்செயலைக் கூறி அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதைத் தவிர வேறு எதுவும் உங்களை பாறையிலிருந்து காப்பாற்றாது" என்று தமக்குள் கூறிக் கொண்டனர்.
அவ்வாறே அவர்களில் ஒவ்வொருவரும் தான் செய்த நற்செயல்களைக் கூறி இறைவனிடம் பிரார்த்தித்தார்கள். அதன் பலனால் அந்தப் பாறை கொஞ்சக் கொஞ்சமாக விலகி பிறகு முழுமையாக விலகியது. அவர்கள் வெளியேறிச் சென்றனர். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-2272, முஸ்லிம்
நம்முடைய நற்செயல்கள் மனத்தூய்மையுடன் அமைந்துவிட்டால் நிச்சயமாக அது ஏற்றுக்கொள்ளப்படும். அதன் மூலம் அல்லாஹ்வின் அன்பையும் பெறலாம். மேலும் அதனுடைய பரக்கத்தால் (அருள்வளம்) நம்முடைய பிரார்த்தனைகள் நிறைவேறும். கஷ்டங்கள் அகற்றப்படும் என தெளிவுபடுத்துகிறது இந்த நபிமொழி.
இன்று நம்முடைய நற்செயல்களில் மனத்தூய்மை குறைந்து விட்டதால் நம்முடைய பிரார்த்தனைக்கு போதிய பலன் கிடைக்கவில்லை. உலகின் பல பகுதிகளிலும் முஸ்லிம்கள் நசுக்கப்படுகின்றனர். பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படும் இடங்களான மக்கா மதீனா போன்ற இடங்களிலும், பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படும் நேரங்களான தஹஜ்ஜுத் எனும் அதிகாலை பொழுதிலும் ஐவேளை தொழுகைக்கு பிறகும்; “இறைவா! இணைமறுப்பாளர்களுக்கு எதிராக முஸ்லிம்களுக்கு வெற்றியைத் தா! உதவி செய்!” என்றெல்லாம் உலக முஸ்லிம்கள் பிரார்த்தனையில் ஈடுபடத்தான் செய்கிறார்கள். ஆனாலும் போதிய பலன் கிட்டவில்லையே. இதற்கு முஸ்லிம்களிடம் மனத்தூய்மை குறைந்து போய்விட்டதே காரணம் என்று கூறினால் அது மிகையாகாது.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். தூய எண்ணமுடையோருக்கு ஓர் நற்செய்தி! அவர்கள் இருள்களின் ஒளிவிளக்குகள். அவர்களின் காரணத்தால் பெரும் பெரும் குழப்பங்களும் விலகிவிடுகின்றன. அறிவிப்பாளர்:- சஃப்வான் (ரலி) அவர்கள் நூல்:-பைஹகீ
படிப்பினை பெறலாம்
அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைத் தேடுவதற்கன்றி (பெருமைக்காக) நீங்கள் (எதையும்) செலவு செய்யாதீர்கள். திருக்குர்ஆன்:- 2:272
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் (முற்காலத்தில்) ஒருவர் நான் இன்றிரவு (இரகசியமாக) தர்மம் செய்யப்போகிறேன் எனக் கூறி (இரவில்) தர்மப் பொருளுடன் வெளியே வந்து (தெரியாமல்) அதை ஒரு விபச்சாரியிடம் கொடுத்து விட்டார்.
காலையில் மக்கள் மூலம் இதனை அறிந்த அவர், இறைநாட்டத்தை ஏற்றுக்கொண்டவராக இறைவனை புகழ்ந்துவிட்டு (முன் செய்தது வீணாகிவிட்டது என்றெண்ணி) இரண்டாவது நாள் இரவில் தர்மப் பொருளுடன் வெளியே வந்து (தெரியாமல்) அதை ஒரு பணக்காரரின் கையில் கொடுத்து விட்டார்.
காலையில் மக்கள் மூலம் இதனை அறிந்த அவர், இறைநாட்டத்தை ஏற்றுக்கொண்டவராக இறைவனை புகழ்ந்து விட்டு (இதுவும் வீணாகிவிட்டது என்றெண்ணி) மூன்றாவது நாள் இரவில் தர்மப் பொருளுடன் வெளியே வந்து (தெரியாமல்) அதை ஒரு திருடனின் கையில் கொடுத்து விட்டார். காலையில் மக்கள் மூலம் இதனை அறிந்த அவர், இறைநாட்டத்தை ஏற்றுக்கொண்டவராக இறைவனை புகழ்ந்தார்.
பிறகு (கனவில்) அவரிடம் (வானவர்) அனுப்பிவைக்கப்பட்டு (பின்வருமாறு) கூறப்பட்டது. ( أَمَّا صَدَقَتُكَ فَقَدْ قُبِلَتْ أَمَّا الزَّانِيَةُ فَلَعَلَّهَا تَسْتَعِفُّ بِهَا عَنْ زِنَاهَا وَلَعَلَّ الْغَنِيَّ يَعْتَبِرُ فَيُنْفِقُ مِمَّا أَعْطَاهُ اللَّهُ وَلَعَلَّ السَّارِقَ يَسْتَعِفُّ بِهَا عَنْ سَرِقَتِهِ ) உமது தர்மம் ஏற்கப்பட்டுவிட்டது. விபச்சாரிக்கு நீர் கொடுத்த தர்மம் அவள் விபச்சாரத்திலிருந்து விலகி கற்பைப் பேணக் காரணமாக அமையலாம். பணக்காரனுக்கு கொடுக்கப்பட்ட தர்மத்தால் அவன் படிப்பினை பெற்று அல்லாஹ் தனக்கு வழங்கியவற்றிலிருந்து தர்மம் செய்யக்கூடும். திருடனுக்கு கொடுக்கப்பட்ட தர்மத்தால் அவன் களவைக் கைவிடக் காரணமாக அமையலாம். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-1421, முஸ்லிம்-1856
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إنَّ صَدَقَةَ السِّرِّ تُطْفِئُ غَضَبَ الرَّبِّ ) இரகசியமாகச் செய்யப்படும் தர்மம் அல்லாஹ்வின் கோபத்தை அணைத்து விடுகிறது. அறிவிப்பாளர்:- அபூஉமாமா (ரலி) அவர்கள் நூல்:- தப்ரானீ, மஜமஉஸ் ஸவாயித், தஃப்சீர் துர்ருல் மன்ஸூர் அல்பகரா வசனம்-271
பிறருக்கு ஆர்வமூட்டுவதற்காக பகிரங்கமாக தர்மம் செய்யலாம். எனினும் முகஸ்துதி ஏற்படும் என்ற அச்சம் இருந்தால் இரகசியமாக கொடுப்பதே சிறந்தது.
மனத்தூய்மையுடன் தர்மம் செய்யும்போது அது தவறுதலாக தகுதியில்லாத இடத்திற்கு சென்றுவிட்டாலும் அதை நினைத்து கவலைப்பட்டு சோர்ந்து விடாமல் தொடர்ந்து செய்யும்போது அதை அல்லாஹ் அந்த அடியானின் பரிசுத்தமான எண்ணத்திற்காக ஏற்றுக்கொள்கிறான். மனத்தூய்மையுடன் ஒரு நற்செயலை செய்யும்போது அது தீயவர்களையும் திருத்திவிடலாம்.
அபூஉமாமா (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அபூதர்தா (ரலி) அவர்கள் வந்து, ( أيُّ الصَّدَقَةِ أفْضَلُ؟ ) “நாயகமே! தர்மத்தில் எது சிறந்தது?” என்று வினவினார். அண்ணலார் ( سِرٌّ إلى فَقِيرٍ، أوْ جُهْدٌ مِن مُقِلٍّ ) "ஏழைகளுக்கு இரகசியமாக தர்மம் அளிப்பது அல்லது திக்கற்றவர்களைத் தேடி உதவுவதுமாகும்" என்று கூறிவிட்டு (2:271) வசனத்தை ஓதிக் காட்டினார்கள். நூல்:- தஃப்சீர் துர்ருல் மன்ஸூர் அல்பகரா வசனம்-271
நமது முன்னோர்கள் இரகசியமாக தர்மம் செய்வதை அதிகம் விரும்பினர். தனக்கு கொடுத்தவர் யார் என்பதை பெற்றுக் கொள்பவர்கூட தெரிந்து கொள்வதையும் அவர்கள் விரும்பியதில்லை. இதனால் தான் சிலர் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளைத் தேர்ந்தெடுத்து தர்மம் செய்வார்கள்.
வேறு சிலர் தூங்கிக் கொண்டிருப்பவர்களின் அருகிலோ அல்லது அவரது மூட்டைச்முடிச்சுகளிலோ, சட்டைப் பாக்கெட்டிலோ போட்டு விடுவார்கள். இன்னும் சிலர் தன்னைப் பற்றி தெரிந்துக் கொள்ளக் கூடாது என்பதற்காகவும், வாங்கிக் கொள்பவர் வெட்கப்படக்கூடாது என்பதற்காகவும் பிறர் மூலம் கொடுத்து அனுப்புவார்கள். சுருங்கக் கூறின் தர்மத்தின் மூலம் இறைவனின் பொருத்தத்தைப் பெறுவது மட்டுமே அவர்களது நோக்கமாக இருந்தன.
எண்ணங்களை ஆய்வு செய்ய வேண்டும்
ஒருமுறை ஜனாதிபதி அலீ (ரலி) அவர்கள் கூஃபா நகரின் பள்ளிவாசலொன்றில் அமர்ந்திருந்தார்கள். அப்போது ஒரு கிராமவாசி அப்பள்ளிக்கு வந்து விரைவாக தொழுதுவிட்டுத் திரும்பினார். அதை கண்காணித்துக் கொண்டிருந்த அலீ (ரலி) அவர்கள் அந்த கிராமவாசியை அழைத்தார்கள். "நண்பரே தொழுகையை இவ்வளவு வேகமாக தொழக்கூடாது" என்று கூறி அவருக்கு தொழுகைகளின் முறைகளையும் அதில் பேணப்பட வேண்டிய நிதானத்தையும் முறையாக கற்றுக்கொடுத்தார்கள். அவரை மீண்டும் திரும்பத் தொழுமாறு பணித்தார்கள்.
அம்மனிதரும் அலீ (ரலி) அவர்கள் கற்றுத் தந்த முறைப்படியே தொழுது திரும்பினார். அப்போது அலீ (ரலி) அவர்கள், “நண்பரே! பாராட்டுக்கள். இப்போதுதான் நீர் முறையாக தொழுதீர்!” என்று கூறினார்கள்.
அதை செவியுற்ற அம்மனிதர், “ஜனாதிபதி அவர்களே! நீங்கள் எப்படி வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளுங்கள். ஆனால் எனது கணிப்பில் நான் தொழுத முதல் தொழுகையே சிறந்ததாகப்படுகிறது. ஏனெனில், அது அல்லாஹ்வுக்காக மட்டும் தொழுகப்பட்டது. எனது இரண்டாவது தொழுகை தாங்கள் குறைக் கண்டுவிடக்கூடாதே! என்ற எண்ணத்தில் நிறைவேற்றப்பட்டது!” என்று கூறினார். அவர் மனத்தூய்மைக்கு முதலிடம் அளித்ததை அறிந்த ஜனாதிபதி அலீ (ரலி) அவர்கள் வாயடைத்துப் போனார்கள்.
மனத்தூய்மையின்றி மிக நேர்த்தியாக எந்த காரியங்களை செய்தாலும் அதனால் அவனுக்கு எவ்வித முன்னேற்றமும் ஏற்படப்போவதில்லை. இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழிமுறைப்படியும் மனத்தூய்மையுடனும் எதனை செய்தாலும் அதுதான் அவனது வாழ்வின் முன்னேற்றத்தை உருவாக்கும்.
நாம் எதனை செய்தாலும், எந்த பணியில் ஈடுபட்டாலும் நம்முடைய எண்ணங்களை ஆய்வு செய்தவாறு இருக்க வேண்டும். எந்தவொரு நொடியும் நம்முடைய வாழ்வு சத்தியத்தை விட்டு விலகிச் சென்று விடக்கூடாது அல்லவா?
சந்தேகப்படக்கூடாது
மேலும் இறையச்சம் உடையவர் தான் அதிலிருந்து தப்பித்துக் கொள்வார். (அவர் பாவத்திலிருந்து தன்னைப்) பரிசுத்தமாக்கிக் கொள்வதற்காக தன்னுடைய பொருளை(த் தானமாக)க் கொடுக்கிறார். கைமாறு செய்யும் அளவுக்கு எவருக்கும் அவர் நன்றிக் கடன் படவில்லை. ஆனாலும் அவர் உயர்வுமிக்க தம் இறைவனின் திருப்தியைப் பெறுதவற்காகவே இதைச் செய்கிறார். (இறைவன் அவருக்கு அளிக்கும் கொடைப்பற்றி) பின்னர் அவரும் திருப்தியடைவார். திருக்குர்ஆன்:- 92:17,18,19,20,21
மக்கா வாழ்க்கையின் ஆரம்ப காலகட்டத்தில் இஸ்லாமை ஏற்றுக்கொண்டோர் மீது அதிலும் குறிப்பாக அடிமைகள் மீது வன்கொடுமைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. அச்சமயம் அபூபக்ர் (ரலி) அவர்கள் அந்த அடிமைகளை விலை கொடுத்து வாங்கி அவர்களுக்கு விடுதலை வழங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் பிலால் (ரலி) அவர்களும் ஒருவர்.
அப்போது சிலர் ( مَا فَعَلَ ذَلِكَ أَبُو بَكْرٍ بِبِلَالٍ إِلَّا لِيَدٍ كَانَتْ لِبِلَالٍ عِنْدَهُ ) "பிலால் (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு முன்பு ஏதேனும் உபகாரம் செய்திருக்க வேண்டும். அதற்கு பிரதி உபகாரமாகத்தான் அபூபக்ர் (ரலி) அவர்கள் இவ்வாறு செய்கிறார்" என்று கூறினர். இவர்களின் எண்ணம் தவறானது என்பதை நிரூபிக்கவும், அபூபக்ர் (ரலி) அவர்களின் மனத்தூய்மையை புகந்துரைக்கப்படவும் (92:17,18,19,20,21) மேற்கண்ட திருவசனங்கள் அருளப்பட்டது. நூல்:- தஃப்சீர் பஙவி, தஃப்சீர் காஸின்
மனத்தூய்மையுடன் நற்செயல்கள் செய்பவர்களின் நற்செயல்களை பிற மக்கள் சந்தேகிப்பதைக்கூட இறைவன் விரும்புவதில்லை.
மறைக்க முயற்சிக்க வேண்டும்
"மனத்தூய்மையானது எனது இரகசியங்களில் மிக அரியதோர் இரகசியமாகும். அதை என் அடியார்களுள் நான் நாடியவரின் சிந்தனையில் தான் வைப்பேன்" என்று இறைவன் ஹதீஸ் குத்சியில் கூறியுள்ளான்.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் முஆத் (ரலி) அவர்களிடம் ( يَا مُعَاذُ أَخْلِصْ دِينَكَ يَكْفِكَ الْقَلِيلُ مِنَ الْعَمَلِ ) "முஆத் நீர் மார்க்கத்தில் மனத்தூய்மையை கடைப்பிடிப்பீராக! அப்படி செய்வீராயின், குறைந்த வணக்கமே உமக்கு போதும்!" என்று கூறினார்கள். நூல்:- ஹாகிம், அல்ஹில்யா இமாம் அபூநயீம், அல்இக்லாஸ் இமாம் இப்னு அபீதுன்யா
ஆன்மீக ஞானி பிஷ்ருல் ஙாபி (ரஹ்) அவர்கள் கூறினார்கள். உனது தவறுகளை மக்களிடம் நீ மறைப்பது போல், நீ நற்செயல்களையும் மறைத்து செய்! அதற்கு பெயர் தான் மனத்தூய்மை ஆகும்.
இறைநேசர் மஃரூபுல் கர்கீ (ரஹ்) அவர்கள் தங்களது இதயத்தை நோக்கி, "ஓ இதயமே! மனத்தூய்மையுடன் நடந்து கொள்! அவ்வாறு நடந்து கொள்வாயானால் ஈடேற்றம் பெறுவாய்!" என்று அடிக்கடி சொல்பவராக இருந்தார்கள்.
அல்லாஹ்வுக்காகவே செய்யப்படும் நற்செயல்கள் அனைத்திற்கும் நற்கூலி உண்டு. பிறர் பார்த்து மெச்ச வேண்டும் என்பதற்காகவோ, பிறர் இழிச்சொல்லைத் தடுப்பதற்காகவோ நமது நற்செயல்கள் அமைந்துவிட்டால் அந்தோ அது தான் முகஸ்துதி ஆகும். இது பாவங்களில் ஒன்றாகும்.
பெருமிதம் பேசுதல்
அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ( أَرَأَيْتَ الرَّجُلَ يَعْمَلُ الْعَمَلَ مِنَ الْخَيْرِ وَيَحْمَدُهُ النَّاسُ عَلَيْهِ ) "ஒரு மனிதர் (மனத்தூய்மையுடன்) நற்செயல் புரிகிறார். அதற்காக அவரை மக்கள் பாராட்டி பேசுகின்றனர். இதைப்பற்றி தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?" என்று வினவப்பட்டது. அண்ணலார், ( تِلْكَ عَاجِلُ بُشْرَى الْمُؤْمِنِ ) "அது இறைநம்பிக்கையாளருக்கு முன்கூட்டியே வரும் நற்செய்தியாகும்" என்றார்கள். நூல்:- முஸ்லிம்-5144
ஒருவர் நற்செயல் புரிய அதைப் பார்த்து மக்கள் பாராட்டினால், அது அல்லாஹ்விடம் ஏற்கப்பட்டதற்கு ஓர் அடையாளமாக இருக்கலாம். அத்துடன் இத்தகைய பாராட்டு அவரை தற்பெருமைக்கு தூண்டாது. அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தவே தூண்டும்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருவர் (அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் வந்து) நாயகமே! ஒருவர் ஒரு நற்செயலை இரகசியமாகவே செய்கிறார். ஆனால் அது வெளியே தெரிந்து விடும்போது, அது அவருக்கு பெருமிதத்தைத் தந்து விடுகிறதே (அவர் செய்த செயல் முகஸ்துதியில் சேருமா?) என்று வினவினார்.
அதற்கு அண்ணலார், ( لَهُ اَجْرَانِ اَجْرُ السَّرِّ وَاَجْرُ الْعَلَانِيَةِ ) "அவருக்கு இரகசியமாக செய்ததற்குரிய நன்மையும், (பிறருக்கு முன்மாதிரியாக) வெளிப்பட்டு விட்டதற்கான நன்மையும் என இரு நன்மைகள் உண்டு" என்று பதிலளித்தார்கள். நூல்:- திர்மிதீ-2306, இப்னுமாஜா -4226
பேரறிஞர் ஹசன் அல்பசரீ (ரஹ்) கூறுகிறார்கள். ஒரு பெண் தனக்கு ஏற்படும் மாதவிடாயை பிறரிடம் சொல்ல எப்படி வெட்கப்படுவாளோ அப்படித்தான், ஒரு நற்செயலை செய்து விட்டு அதை பற்றி பிறரிடம் சொல்ல வெட்கப்பட வேண்டும். அல்லாஹ் அதை வெளிப்படுத்திவிட்டால், "அது எனது திறமையால் நிகழ்ந்ததல்ல, அல்லாஹ்வின் அருளாகும்" என்று கூற வேண்டும்.
இரகசியமாக செய்த நற்செயல் வெளியே தெரிந்தவுடன், அதற்காக மக்கள் தம்மை பாராட்டுவார்கள், கண்ணியப்படுத்துவார்கள் என்ற எதிர்பார்ப்பால் அவர் பெருமிதம் அடைந்தால் அது அவருக்கு தீங்கு தான். அது முகஸ்துதியாகவே கருதப்படும். மாறாக தமது நற்செயலை மக்கள் அறிந்து தம்மைப் போன்றே அவர்களும் நற்செயல் புரியவேண்டும். என எண்ணி அவர் பெருமிதம் கொண்டிருந்தால் அது முகஸ்துதி ஆகாது. மாறாக அவரைப் போன்று செயல்படுபவர்களுக்கு கிடைக்கும் நன்மை போன்றது இவருக்கும் கிடைக்கும் என்பதே இந்த நபிமொழியின் கருத்தாகும்.
நிர்பந்த நிலையில்
ஆம்! எவர் (அல்லாஹ்வுக்காக) நன்மை செய்து தன்னை முற்றிலும் அல்லாஹ்வுக்கு அர்ப்பணம் செய்து விடுவாரோ அவர் செய்யும் நன்மையின் கூலி அவருடைய இறைவனிடம் உண்டு. மேலும் இத்தகையவர்களுக்கு எவ்வித பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். திருக்குர்ஆன்:- 2:112
மொகலாயர்கள் ஆட்சி காலத்தில் வாழ்ந்த குத்புத்தீன் பக்தியார் (ரஹ்) அவர்கள் மரண வேளையில் தனக்கு ஜனாஸா தொழுகை நடத்துபவர் 1) வயதுக்கு வந்ததிலிருந்து தஹஜ்ஜுத் (எனும் அதிகாலை) தொழுகையை தொழும் பழக்கமுடையவராகவும், 2) தொடர்ந்து அசர் தொழுகையுடைய முன் சுன்னத்தை பேணி வருபவராகவும், 3) அந்நியப் பெண்களை காமப் பார்வை பார்க்காதவராகவும், 4) ஜமாஅத் எனும் கூட்டுத் தொழுகையில் முதல் தக்பீர் தஹ்ரிமா தவறாமல் பேணி வருபவராகவும் இருக்க வேண்டும். ஆகிய நான்கு விதமான சிறப்பம்சங்கள் பெற்றிருக்க வேண்டும் என்று மரண சாசனம் செய்திருந்தார்.
பிறகு அன்னார் இறந்தவுடன் அன்னாரது புனித உடல் லுஹர் தொழுகை நேரத்தில் ஜனாஸா தொழுகை நடத்த பள்ளிவாசலுக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் அன்னாரது மரண சாசனத்தை நினைத்து யாரும் ஜனாஸா தொழுகை நடத்த முன் வரவில்லை. அசர் தொழுகை நேரம் வந்தது மக்கள் ஒன்று கூடினர். ஆனால் யாரும் ஜனாஸா தொழுகை நடத்த முன் வரவில்லை. மங்ரிப் தொழுகை நேரம் வந்தது மக்கள் ஒன்று கூடினர். ஆனால், யாரும் ஜனாஸா தொழுகை நடத்த முன் வரவில்லை. பிறகு இஷா தொழுகை நேரம் வந்தது மக்கள் ஒன்று கூடினர். ஆனால் யாரும் ஜனாஸா தொழுகை நடத்த முன் வரவில்லை.
இறுதியாக அப்பகுதியின் ஆட்சியாளராக இருந்த ஷம்சுத்தீன் இல்திமாஸீ (ரஹ்) அவர்கள் கண்ணியமிகு குத்புத்தீன் பக்தியார் (ரஹ்) அவர்கள் முகத்திரையை நீக்கி விட்டு எனக்கும் அல்லாஹ்வுக்கும் இருந்த இரகசியமாக இந்த வணக்கங்களை நீர் இன்று மக்களிடையே பகிரங்கப்படுத்தி விட்டீரே! என கண் கலங்கியவாறு ஜனாஸா தொழுகையை நடத்தினார்கள். நூல்:- ஹிக்காயத்துல் அவ்லியா
புகழ்போதை வேண்டாம்
எவர் (தன் செயலுக்கு) இந்த உலகத்தின் நன்மையை (மட்டும்) விரும்புகின்றாரோ அவருக்கு அதனை (மட்டும்) அளிப்போம். திருக்குர்ஆன்:-3:145
தாவூஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, ( يَا رَسُولَ اللَّهِ، إِنِّي أَقِفُ الْمَوَاقِفَ أُرِيدُ وَجْهَ اللَّهِ، وَأُحِبُّ أَنْ يُرَى مَوْطِنِي ) “நாயகமே! போர்க்களங்கள் பலவற்றை சந்திக்கிறேன். அவற்றில் அல்லாஹ்வின் அன்பை நாடுகிறேன். அதே வேளையில் (அவற்றில்) எனது பங்களிப்பை (மக்களால்) கவனிக்கப்பட வேண்டும் என்றும் விரும்புகிறேன். (இது சரியா?)” என்று வினவினார். அண்ணலார் அவருக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை.
அப்போது தான் "யார் தம்முடைய இறைவனின் சந்திப்பை எதிர்பார்க்கிறாரோ அவர் நற்செயல் புரியட்டும். அவர் தம் இறைவனுக்கு செய்யும் வழிபாட்டில் வேறு யாரையும் இணையாக்க வேண்டாம்." (18:110) எனும் திருவசனம் அருளப்பட்டது. நூல்:- தஃப்சீர் இப்னுகஸீர்
நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். எவர் தாம் செய்த நற்செயல் பற்றி மக்கள் மத்தியில் விளம்பரம் செய்கிறாரோ அல்லாஹ் அவருடைய அந்த பகட்டான செயல் பற்றிய செய்தியைத் தனது படைப்புகளின் செவிகளுக்கு எட்ட செய்துவிடுவான். மேலும், அவரை இழிவுக்கும், அவமானத்துக்கும் ஆளாக்கிவிடுவான். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) அவர்கள் நூல்:- பைஹகீ
இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். எதில் பிரபல்யம் நோக்கமாகி விடுகிறதோ அந்த நற்செயல் வீணாகிவிடும். ஏனெனில் ஸகாத் கடமையாக்கப்பட்டதே பொருளாசையை நீக்குவதற்காகத்தான். ஆனால் புகழாசை எனும் நோயானது மக்களை பொருளாசையைவிட மிகைத்தே உள்ளது. இவ்விரு குணங்களுமே மறுமையில் நாசத்தை சந்திக்க வைத்துவிடும். நூல்:- இஹ்யா
புகழ்போதை கொண்ட மனிதன் தான் செய்த நற்செயல் பற்றிய செய்தி மக்களுக்கு தெரியவேண்டும். என்று விரும்புவான். அந்த நற்செயல் பற்றிய செய்தியையும் அல்லாஹ் மக்களுக்கு தெரியப்படுத்தி விடுவான். மேலும் இவன் புகழ் போதை உள்ளவன், அற்பமானவன் என்பதையும் இத்துடன் சேர்த்து அல்லாஹ் மக்களுக்கு தெரியப்படுத்தி விடுவான்.
இதனால் அவன் செய்த நற்செயலுக்காக மக்கள் அவன் மீது நல்லெண்ணமோ, மன நிறைவோ அடையமாட்டார்கள். மாறாக அவனுடைய குறுகிய நோக்கும், அற்ப புத்தியும் தாம் மக்களுக்கு பெரிதாகத் தோன்றும்.
இவ்வாறாக, இறைவன் இத்தகைய புகழ்போதை உள்ளவர்களை இழிவுப்படுத்திவிடுவான். அவர்களுக்கு மக்களின் உள்ளங்களை கொள்ளை கொள்கின்ற நற்பேறும் கிட்டுவதில்லை. எனவே நற்செயல்கள் செய்யும்போது பிறரின் நன்றியையும், புகழையும் எதிர்பார்க்கக்கூடாது.
நாம் முகஸ்துதியை முழுமையாக விட்டொழித்து, சிறிய பெரிய அனைத்து நற்செயல்களிலும் மனத்தூய்மையுடன் ஈடுபட அல்லாஹுத்தஆலா அருள்பாலிப்பானாக! ஆமீன்!
மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை, செல்-9840535951
No comments:
Post a Comment