படிப்படியாக...
وَقُرْآنًا فَرَقْنَاهُ لِتَقْرَأَهُ عَلَى النَّاسِ عَلَى مُكْثٍ
وَنَزَّلْنَاهُ تَنْزِيلًا
(நபியே!) மக்களுக்கு
நீர் சிறிது சிறிதாக ஓதிக்காட்டவே இந்த குர்ஆனை நாம் பகுதிப்பகுதியாக பிரித்தோம். அதைப்
படிப்படியாகவும் இறக்கி வைக்கிறோம். திருக்குர்ஆன்:- 17:106
அல்லாஹ் தன் படைப்புகளை படிப்படியாக உருவாக்கினான். தன் கட்டளைகளையும் ஒரேயடியாகப் பிறப்பிக்காமல் படிப்படியாக தந்தான். இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகள் தொழுகை, நோன்பு என்பது ஒன்றன் பின் ஒன்றாகவே கடமையானது. தடை செய்யப்பட்டவையும் ஒன்றன்பின் ஒன்றாக தடைசெய்யப்பட்டன. ஒரே வீச்சில் அனைத்தும் தடை செய்யப்படவில்லை.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இந்த சமுதாயத்தை உறுதிமிக்க இறைநம்பிக்கையாளர்களாக படிப்படியாகவே கட்டமைத்தார்கள்.
குண்டாக இருப்பவருக்கு படிப்படியாக உடம்பு குறைந்தால் தான் நல்லது. அதைப்போல் ஒல்லியாக இருப்பவருக்கு படிப்படியாக உடம்பு ஏறினால் நல்லது. நிலையானது. திடீரென உடல் எடை குறைந்தாலும், கூடினாலும் அவ்வளவு நல்லதல்ல என்பது மருந்துவர்களின் கூற்று. முன்னேற்றம் என்பது படிப்படியாக உயர்வதாகும். அதுவே நிலையானது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( يَسِّرُوا وَلاَ تُعَسِّرُوا، وَبَشِّرُوا وَلاَ تُنَفِّرُوا ) (மார்க்க விஷயங்களில் மக்களிடம்) எளிதாக நடந்து கொள்ளுங்கள். (மக்களைச்) சிரமப்படுத்தாதீர்கள். நற்செய்தி(களை அதிகமாக) சொல்லுங்கள். வெறுப்பேற்றிவிடாதீர்கள். அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-69
இறைக்கடமைகள் விதியாக்கப்பட்டது
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்கள் முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு (கவர்னராக) அனுப்பி வைத்தபோது அவரிடம் (பின்வருமாறு) கூறினார்கள்.
நீங்கள் வேதம் வழங்கப்பெற்ற ஒரு சமுதாயத்தாரிடம் செல்கிறீர்கள். எனவே, அவர்களிடம் நீர் போய்ச்சேர்ந்ததும் (முதலாவதாக) 'அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை' என்றும், 'முஹம்மத் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள்' என்றும் (ஓரிறைக்கொள்கையை) உறுதி மொழியும்படி அவர்களை அழைப்பீராக!
அவர்கள் இதற்கு (இசைந்து) உமக்குக் கட்டுப்பட்டுவிட்டால் 'அல்லாஹ், தினமும் ஐவேளைத் தொழுகையை அவர்கள்மீது கடமையாக்கியுள்ளான்' என்பதை அவர்களுக்கு அறிவிப்பீராக! அவர்கள் இதற்கும் (இசைந்து) உமக்குக் கட்டுப்பட்டுவிட்டால், 'நிச்சயமாக அல்லாஹ், அவர்கள்மீது ஸக்காத்தைக் கடமையாக்கியுள்ளான்; அது அவர்களில் செல்வந்தர்களிடமிருந்து பெறப்பட்டு, அவர்களில் உள்ள ஏழைகளுக்கு வழங்கப்பட வேண்டும்' என அவர்களுக்கு அறிவிப்பீராக! அவர்கள் இதற்கும் (இசைந்து) உமக்குக் கட்டுப்பட்டுவிட்டால், அவர்களின் செல்வங்களில் (இருந்து ஸகாத் வசூலிக்கும்போது) உயர்தரமானவற்றை வசூலிக்கவேண்டாம் என எச்சரிக்கிறேன். நூல்:- புகாரீ-1496, திர்மிதீ
தல்ஹா பின் உபைதுல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது. நஜ்து வாசிகளில் ஒருவர் தலைவிரி கோலத்துடன் (பயணம் முடிந்த கையோடு) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, இஸ்லாமிய கடமைகளைப் பற்றி வினவினார்.
நபியவர்கள், "(நாளொன்றுக்கு) பகலிலும் இரவிலும் ஐந்து தொழுகைகள் (நிறைவேற்றுவது இஸ்லாத்தின் விதியாகும்)" என்று பதிலளித்தார்கள். உடனே அவர், இவற்றைத் தவிர வேறு (தொழுகைகள்) ஏதேனும் என்மீது (விதிக்கப்பட்டு) உள்ளதா?" என கேட்க, "இல்லை; நீயாக விரும்பித் தொழும் (கூடுதலான) தொழுகையைத் தவிர" என்று நபியவர்கள் கூறினார்கள்.
அடுத்து ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது (இஸ்லாத்தின் விதியாகும்) என நபியவர்கள் (அவரிடம்) கூறினார்கள். அவர், "இதைத் தவிர வேறு (நோன்புகள்) ஏதேனும் என்மீது (விதிக்கப்பட்டு) உள்ளதா? என்று கேட்க, "இல்லை; நீயாக விரும்பி நோற்கும் (கூடுதலான) நோன்பைத் தவிர" என்று நபியவர்கள் கூறினார்கள்.
மேலும், ஸகாத் (வழங்குவது இஸ்லாத்தின் விதி என்பது) பற்றியும் அவரிடம் நபியவர்கள் எடுத்துரைத்தார்கள். அவர், "இதைத் தவிர வேறு ஏதேனும் (தர்மம்) என்மீது (விதியாக்கப்பட்டு) உள்ளதா? எனக் கேட்க, "இல்லை; நீயாக விரும்பிச் செய்யும் (கூடுதலான) தர்மத்தைத் தவிர" என்று நபியவர்கள் கூறினார்கள். அந்த மனிதர், "அல்லாஹ்வின் மீதாணையாக! இதற்கு மேல் நான் அதிகமாகச் செய்யவுமாட்டேன்; இதைக் குறைக்கவுமாட்டேன்" என்று கூறியபடி திரும்பிச் சென்றார். நபியவர்கள், ( أَفْلَحَ إِنْ صَدَقَ ) "அவர் தாம் கூறியதில் உண்மையாளராக இருந்தால் வெற்றியடைந்துவிட்டார்" என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-46, முஸ்லிம்-8
புதிதாக இஸ்லாத்தை ஏற்றோரின் இதயங்களை ஈர்க்கும் விதமாக, இறைக்கடமைகளைப்பற்றி தொடக்கத்தில் ஒவ்வொன்றாக மென்மையாகச் சொல்லப்பட்டால் தான் ஈர்ப்பு ஏற்படும். அதை பின்பற்ற தோன்றும். கடைசியில் உளப்பூர்வமான ஈடுபாடு வரும். ஆரம்பத்திலேயே அவர்கள் மீது சிரமங்களை சுமத்தாமல் இருக்க வேண்டும். இதுபோல் பாவங்களைச் செய்யக்கூடாது என்று அவர்களை தடுப்பதும் கூட மெல்ல மெல்ல தடுக்கவேண்டும்.
மக்களின் அறிவுத் திறனுக்கும் தகுதிக்கும் ஏற்ப சிறு சிறு விஷயங்களில் தொடங்கி படிப்படியாக பெரிய விஷயங்களை நோக்கி சென்று, பிறகு விளக்கங்கள் தரவேண்டும்.
மது தடைசெய்யப்பட்டது
இதற்கு ஒரு தெளிவான சான்று, மது விலக்கப்பட்ட விதம் மூன்று நிலைகளில் படிப்படியாக இது நிறுத்தப்பட்டது.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது. மது மூன்று கட்டங்களாகத் தடைசெய்யப்பட்டது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (மக்காவில் இருந்து புலம்பெயர்ந்து) மதீனாவுக்கு வந்தபோது அங்குள்ள மக்கள் மது அருந்திக் கொண்டும் சூதாட்டத்தின் வருமானத்தை பயன்படுத்திக் கொண்டும் இருந்தனர். அப்போது மதுவைப் பற்றியும், சூதாட்டத்தைப் பற்றியும் அந்த மக்கள் அண்ணலாரிடம் (விளக்கம்) கேட்டனர்.
அப்போதுதான், "(நபியே!) மதுவைப் பற்றி உம்மிடம் வினவுகின்றனர். அவ்விரண்டிலும் பெரும் பாதிப்பும் மக்களுக்குச் சில பயன்களும் உள்ளன என்று கூறுவீராக" (2:219) எனும் வசனத்தை அல்லாஹ் அருளினான்.
அப்போது மக்கள், அவ்விரண்டும் நமக்குத் தடை செய்யப்படவில்லை. மாறாக, அவ்விரண்டிலும் பெரும் பாதிப்பும், மக்களுக்குச் சில பயன்களும் உள்ளன என்று அல்லாஹ் கூறுகிறான்" என சொல்லிக்கொண்டு, தொடர்ந்து மது அருந்தி வந்தனர்.
இறுதியில் ஒருநாள் (மக்காவிலிருந்து மதீனாவுக்கு புலம்பெயர்ந்து வந்த) முஹாஜிர்களில் ஒருவர் தம் தோழர்களுக்கு இமாமாக இருந்து மஃரிப் தொழுகை நடத்தினார். அதில் ஓத வேண்டிய குர்ஆன் வசனத்தில் அவர் தவறிழைத்தார். அதையடுத்து முந்திய வசனத்தைவிட (2:219) கண்டிப்புக்குரிய வசனம் ஒன்றை அல்லாஹ் அருளினான்.
இறைநம்பிக்கை கொண்டோரே! நீங்கள் போதையில் இருக்கும் போது தொழுகையை நெருங்காதீர்கள்; (போதை தெளிந்து) நீங்கள் என்ன கூறுகிறீர்கள் என்பதை அறிந்து கொள்கின்ற வரை. (4:43)
அதன் பின்னரும் மக்கள் மது அருந்தி கொண்டுதான் இருந்தனர். ஆனால், அவர்களில் ஒருவர் தெளிந்த நிலையில் தொழுகைக்கு வரும் அளவுக்கு மட்டுமே மது அருந்துவார். பின்னர் இந்த வசனத்தைவிட (4:43) கண்டிப்புக்குரிய வேறு ஒரு வசனம் அருளப்பெற்றது.
இறைநம்பிக்கைகொண்டோரே! மது, சூது, நட்டு வைக்கப்பட்ட சிலை (போன்ற)வை, (குறி பார்க்கும்) அம்புகள் ஆகியவை ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயலாகும். எனவே, அதைக் கைவிடுங்கள். (இதன் மூலம்) நீங்கள் வெற்றி பெறலாம். (5:90) எனும் இந்த வசனம் அருளப் பெற்றதும் மக்கள், "எங்கள் இறைவா! நாங்கள் விலகிக் கொண்டோம்" என்றனர். நூல்:- முஸ்னது அஹ்மத், தஃப்சீர் இப்னு கஸீர்
அடிமைமுறை ஒழிக்கப்பட்டது
இஸ்லாம் உலகில் தோன்றிய காலத்தில் அடிமைமுறை இருந்தது. மனிதனை மனிதன் அடிமைப்படுத்தி வைத்திருக்கும் அவலம் உலகெங்கிலும் பரவிக்கிடந்தன. இதை அடியோடு ஒழித்திட வேண்டும் என்பதே இஸ்லாத்தின் நிலைபாடு. ஆனால், அதை ஒரே வீச்சில் செய்திடவில்லை. அப்படி தடை செய்திருந்தால் அது சமூக, பொருளாதார வாழ்வில் மிகப் பெரும் அழிவை ஏற்படுத்தி இருக்கும். எனவே, முதலில் அடிமைத்தனத்தை ஆதரிக்கும் வழிகளை படிப்படியாக இறுக்கமாக்கி, பின்னர் அதை காலப்போக்கில் முழுவதுமாக ஒழித்திட வழி கண்டது இஸ்லாம்.
ஒரு சமுதாய அமைப்பின் அன்றாட வாழ்வின் முழுமையானதொரு இஸ்லாமிய வாழ்வை ஏற்படுத்த வேண்டுமென்றால் படிப்படியாகவே அதை செய்ய வேண்டும். இது இறைவனின் வழி.
ஒரே வீச்சில்
இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் ஐந்தாவது ஜனாதிபதி உமர் பின் அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்களின் மகனார் அப்துல் மலிக் (ரஹ்) அவர்கள் இறையச்சம் மிக்க வீரமான வாலிபர். ஒருநாள் தம் தந்தையிடம், "என் அருமைத் தந்தையே! ஏன் மார்க்க விஷயங்கள் பலவற்றை நீங்கள் உங்கள் ஆட்சியில் நடைமுறைக்குக் கொண்டு வராமல் இருக்கிறீர்கள்? உங்களுக்கு என்ன ஆயிற்று? (நான் ஜனாதிபதியாக இருந்தால்) உங்களையும் என்னையும் கொதிநீர் பாத்திரத்தில் தூக்கி வீசினாலும்கூட உண்மை நிலைபெறவே முதலிடம் தருவேன். சோதனைகளை பொருட்படுத்தமாட்டேன்" என்றார்.
ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்திருக்கும் தந்தையிடம் ரோஷமும் இறையச்சமும் நிறைந்த மகன் கூறுவதைப் பாருங்கள். அநீதிகள், குழப்பங்களின் அடிச்சுவடுகள், முறையற்ற செயல்கள் இவற்றையெல்லாம் தாமதமின்றி உடனடியாக அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒரே வீச்சில் வீழ்த்திட வேண்டுமென நினைக்கிறார்.
எனினும் நேர்மையின் சிகரமாய் நின்ற ஜனாதிபதி உமர் (ரஹ்) அவர்கள் தம் மகனிடம், ( لَا تَعَجَّلْ يَا بُنَيَّ ؛ فَإِنَّ اللَّهَ ذَمَّ الْخَمْرَ فِي الْقُرْآنِ مَرَّتَيْنِ ، وَحَرَّمَهَا فِي الْمَرَّةِ الثَّالِثَةِ ، وَأَنَا أَخَافُ أَنْ أَحْمِلَ النَّاسَ عَلَى الْحَقِّ جُمْلَةً فَيَدْفَعُوهُ ) "என்னருமை மகனே! அவசரப்படாதே, அருள்மறையில் அல்லாஹ் மதுவின் தீமைகளை எடுத்துரைத்து ஒரு தடவை பழித்தான். மூன்றாவது முறைதான் அதைத் தடை செய்தான். எனவே, மக்கள் மீது ஒரேயடியாக உண்மை, வாய்மை எனும் சுமைகளை ஏற்றினால் அவற்றை முழுவதுமாக அவர்கள் விட்டுவிடுவார்கள். பிறகு அதுவே பெரும் பெரும் குழப்பமாகி விடும் என்று நான் அஞ்சுகிறேன்" என்று கூறினார்கள். நூல்:- அல்முவாஃபகாத், ஃபிக்ஹுல் அவ்லவிய்யாத் யூசுஃப் அல்கர்ளாவீ
ஜனாதிபதி என்ற உயர் பொறுப்பில் இருந்த அந்த மாமனிதர் நுண்ணறிவுத் திறனுடனும் படிப்படியாகவும் காரியங்களைச் சாதிக்க விரும்பினார். தவறானவற்றை தடை செய்திட அல்லாஹ் கடைபிடித்து காட்டிய வழி இது. அவர் படிப்படியாக, ஆனால் உறுதியாக சீர்திருத்தம் செய்தார். இதுவே சரியான போக்கு. எளிதான வழி.
பிறரை நல்வழிப்படுத்தல், சீர்திருத்தம் செய்தல் போன்றவற்றை படிப்படியாகவே செய்யவேண்டும். இதுவே, நல்ல பலனைத்தரும். மாறாக, அவசரப்பட்டு தடால்புடால் என்றால், மக்கள் நம்மை "ஆர்வக்கோளாறு" என்று ஒதுக்கித்தள்ளிவிடுவார்கள்.
வெறுப்பு தோன்றிவிடலாம்
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களிடம் (கஅபாவை ஒட்டியுள்ள ஹிஜ்ர் எனும்) வளைந்த சுவரை பற்றி, "இதுவும் கஅபாவில் சேர்ந்ததா?" வினவினேன். அதற்கு அண்ணலார் "ஆம்" என்றார்கள். நான், அப்படியானால் கஅபாவுடன் இதை அவர்கள் ஏன் இணைக்கவில்லை?" என்று வினவினேன். அதற்கு அண்ணலார் ( إِنَّ قَوْمَكِ قَصَّرَتْ بِهِمُ النَّفَقَةُ ) "உன் சமூகத்தாருக்கு நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டு இருந்தது" என்று பதிலளித்தார்கள்.
நான்" கஅபாவின் வாசலை உயரமாக வைத்திருப்பதற்கு காரணம் என்ன?" என்று வினவினேன். அதற்கு அண்ணலார், ( فَعَلَ ذَلِكِ قَوْمُكِ لِيُدْخِلُوا مَنْ شَاءُوا وَيَمْنَعُوا مَنْ شَاءُوا، وَلَوْلاَ أَنَّ قَوْمَكِ حَدِيثٌ عَهْدُهُمْ بِالْجَاهِلِيَّةِ فَأَخَافُ أَنْ تُنْكِرَ قُلُوبُهُمْ أَنْ أُدْخِلَ الْجَدْرَ فِي الْبَيْتِ وَأَنْ أُلْصِقَ بَابَهُ بِالأَرْضِ ) "தாம் நாடியவர்களை உள்ளே அனுமதிப்பதற்காகவும் தாம் நாடியவர்களைத் தடுத்து விடுவதற்காகவும்தான் உன் சமூகத்தார் அவ்வாறு செய்தார்கள். உன் சமூகத்தார் அறியாமைக் காலத்துக்கு நெருக்கமானவர்கள். (புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்கள்) என்பதால், அவர்களின் உள்ளத்தில் வெறுப்பு தோன்றும் என்ற அச்சம் (மட்டும்) எனக்கில்லாவிட்டால், நான் இந்த வளைந்த சுவரை கஅபாவுடன் இணைத்து அதன் வாயிலை(க் கீழிறக்கி) பூமியோடு சேர்த்தாற்போல் ஆக்கியிருப்பேன்" என்று பதிலளித்தார்கள் நூல்:- புகாரீ-1584, முஸ்லிம்-2592
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றிக்குப் பின்னர் கஅபா எனும் இறை இல்லத்தை இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்களின் அடித்தளத்தில் (செவ்வக வடிவத்திலும்), மக்கள் நலனுக்கு ஏற்றபடி (இரு வாசல் வைத்து) கட்ட விரும்பினாலும் அதைச் செய்யவில்லை. புதிதாக இஸ்லாத்தை தழுவிய குறைஷியர் "இவர் என்ன எல்லாவற்றையும் அடியோடு மாற்றி அமைக்கிறார்" என்றெண்ணி, வெறுப்படைந்து விடக்கூடும் என்று அஞ்சினார்கள்.
ஆட்சிக்கு வந்தவுடன் சீர்திருத்தம் செய்கிறேன் என்ற பெயரில் மக்கள் இதுவரை செய்து வந்த சில பழக்க வழக்கங்களை தவறு என்று கூறி, அதை உடனடியாக மாற்றி அமைக்க நினைத்தால் அது மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்திவிடலாம்.
அது தவறான பழக்க வழக்கம் என்று, படிப்படியாக சொல்லி, முதலில் அவர்களுக்கு புரியவைத்து, அதன் பிறகு, “இதை மாற்றி அமைத்தால் சிறப்பாக இருக்குமே” என்று அவர்களையே எண்ண வைக்க வேண்டும். அதன் பிறகு அதை மாற்றி அமைத்தால் யாரும் ஆட்சேபனை செய்யமாட்டார்கள்.
மரணத்திற்கான அறிகுறிகள் படிப்படியாக வந்து பிறகு மரணம் ஏற்படுவதே நல்லது. அதன்மூலம் இறைவனிடம் பாவமன்னிப்புக் கோரலாம். திருந்துவதற்குரிய வாய்ப்புகள் கிடைக்கலாம். தமது கொடுக்கல் - வாங்கல் பற்றி தமது குடும்பத்தாரிடம் தெரிவிக்கலாம். (வசிய்யத் எனும்) இறுதிவிருப்பம் தெரிவிக்கலாம். ஆனால், திடீர் மரணத்தால் இதுபோன்ற வாய்ப்புகள் கிடைக்காது. எனவேதான், திடீர் மரணம் என்பது அவ்வளவு சிறப்பல்ல.
மனிதனுக்கு ஏற்படும் இன்பமோ துன்பமோ எதுவாக இருந்தாலும் அது படிப்படியாக ஏற்படுவதே நல்லது. மாயாஜாலத்தைப் போல் திடீரென ஏற்படும் எதுவும் அவ்வளவு நல்லதல்ல. சிலருக்கு திடீரென கேட்ட, இன்ப அதிர்ச்சி அல்லது துன்ப அதிர்ச்சியினால் இதயத்துடிப்பு நின்று விடுவதுண்டு. (அதாவது ஹார்ட் அடாக் ஏற்படுவதுண்டு.)
கருவறையில் குழந்தையின் வளர்ச்சி படிப்படியாகத்தான் உயர்கிறது. உலகில் உள்ள அனைத்து உயிரினங்களின் வளர்ச்சியும் படிப்படியாகத்தான் ஏற்படுகிறது. எந்த விதையும் அது, தூவியவுடன் மரமாகிவிடுவதில்லை. படிப்படியாக வளர்வதுக்கென்று ஓர் குறிப்பிட்ட காலநேரம் உண்டு. இதுவே இறைவன் ஏற்படுத்திய நியதி.
எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்யும் எந்தவொரு வேலையும் சரிப்பட்டு வராது.
இவருக்கு இந்தக் குர்ஆனை ஏன் ஒரே தடவையில் மொத்தமாக இறக்கவில்லை என்று இறைமறுப்பாளர்கள் கேட்கின்றனர். இதைக்கொண்டு உமது இதயத்தை உறுதிப்படுத்தவே (படிப்படியாக இறக்கினோம்.) திருக்குர்ஆன்:- 25:32
தவ்ராத் போன்ற முன் வந்த இறைவேதங்கள் எல்லாம் ஒட்டுமொத்தமாக இறக்கப்பட்டதால் என்னவோ அவைகளையெல்லாம் பாதுகாக்கப்படாமல் போய்விட்டது. ஆனால், இறுதி வேதமாக இறக்கப்பட்ட திருக்குர்ஆன் சூழ்நிலைக்கேற்ப படிப்படியாக இறங்கியதால், பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களின் உள்ளங்களில் பாதுகாப்பாக இருக்கிறது.
அணைக்கட்டில் இருக்கும் தண்ணீரை திடீரென திறந்துவிட்டால் அது பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, அதில் இருக்கும் தண்ணீரை கொஞ்சக்கொஞ்சமாக படிப்படியாகத் திறந்து விடுவதுதான் புத்திசாலித்தனமாக செயலாகும். அதுவே பயனைத் தரும்.
சென்னைக்கு அருகில் இருக்கும் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து ஒரேயடியாக தண்ணீரை திறந்து விடும்போது தான், சென்னை தண்ணீரில் மூழ்கிய தத்தளிக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் திறந்துவிடபடும்போது பாதிப்பு அவ்வளவாக இருப்பதில்லை.
நம்மிடம் உள்ள நல்ல பழக்கம் கெட்ட பழக்கம் அனைத்தும் படிப்படியாகத்தான் உருவாகுகிறது. எனவே, எந்த காரியமாக இருந்தாலும் படிப்படியாக செய்வதே சிறப்பு. அல்லாஹுத்தஆலா நம்மை புத்திசாலிகளாக வாழச் செய்வானாக! ஆமீன்!
மௌலவி, மு.முஹம்மது ஹைதர் அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951
No comments:
Post a Comment