Search This Blog

Tuesday, 21 September 2021

கடனில் கண்ணியம் காப்போம்!

 கடனில் கண்ணியம் காப்போம்!


يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا تَدَايَنْتُمْ بِدَيْنٍ إِلَى أَجَلٍ مُسَمًّى فَاكْتُبُوهُ


இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் ஒரு குறித்த தவணையின்மீது (உங்களுக்குள்) கடன் கொடுத்துக்கொண்டால் அதை எழுதிக்கொள்ளுங்கள். திருக்குர்ஆன்:- 2:282


மனிதனின் அன்றாட வாழ்வில் கடன் முக்கிய இடம் வகிக்கின்றது. கடன் கொடுக்கவோ வாங்கவோ இல்லாமல் மனிதனால் வாழ முடியாது. மனித வாழ்க்கையில் கடன் இரண்டறக் கலந்துள்ளது.


சாதாரண மனிதன் முதல் பெரும் பெரும் கோடிஸ்வரன் வரை கடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுகின்றான். அவ்வாறே நாடுகளுக்கிடையிலும் கடன் பரிமாற்றம் நடைபெறுகின்றது. முறையற்ற கடனால் (கொடுக்கல் வாங்கல்) நிம்மதி கெடுகின்றது. உறவுகள் முறிகின்றன. குடும்பங்கள் பிரிகின்றன. நட்புகள் தொலைகின்றன. மானம் மரியாதை மறைகின்றன. சிலவேளை கொலைகளிலும் முடிவடைகின்றன.


கடன் என்பது நாளைய வருவாயை இன்றே செலவு செய்து தீர்த்து விடுவதற்குப் பெயராகும். நாளைய தேவைக்கு இன்றே சேமிப்பவன் அறிவாளி. நாளைய வருவாயை இன்றே தீர்ப்பவன் கடனாளி.


குறிப்பிட்ட காலத்திற்குள் திருப்பித் தருவதாகக் கூறிப் பெறும் பணம் (Loan), முதலில் பொருளை வாங்கிக் கொண்டு, பின்னர் அதற்குப் பணம் தரும் முறை (Credit), பிறர் பொருளைப் பிறகு திருப்பித் தருவதாகக் கூறிப் பெறும் இரவல் (Borrowing) ஆகியவை அனைத்தும் கடனே ஆகும்.


தேநீர் பருகிவிட்டு கடன் சொல்வது முதல் வீட்டுக்கடன், கார் கடன் என எல்லாப் பொருள்களையும் கடனுக்கே பெற்றுக்கொள்கின்ற நிலை வந்திருக்கிறது.


புது வீடு அல்லது புது வாகனம் வாங்கியுள்ளேன் என்று சொல்பவர்களிடம் ஓன் வீடா அல்லது லோன் வீடா? என்றும், ஓன் வாகனமா அல்லது லோன் வாகனமா? என்று கேட்கும் நிலை இருக்கிறது.


வியாபார உலகில் கடனுக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. ஒரு வியாபாரத்தைத் தொடங்குவதற்கும் அதை நடத்திச் செல்வதற்கும் அதில் அவ்வபோது ஏற்படும் கஷ்ட நஷ்டங்களை சமாளிப்பதற்கும் கடன் பெரிதும் கை கொடுத்து உதவுகிறது. தற்போதைய உலகில் கடன், வியாபாரத்தின் இன்றியமையாத பகுதியாக ஆகிவிட்டிருக்கிறது. எந்தளவுக்கென்றால், கடன் (கொடுக்கல் வாங்கல்) நின்றுவிட்டால் சிறிய பெரிய வியாபார நிறுவனங்களெல்லாம் நின்று போய்விடும்.


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( أَلاَ وَخَيْرُهُمُ الْحَسَنُ الْقَضَاءِ الْحَسَنُ الطَّلَبِ أَلاَ وَشَرُّهُمْ سَيِّئُ الْقَضَاءِ سَيِّئُ الطَّلَب ) அறிந்து கொள்ளுங்கள்! கொடுப்பதிலும் வாங்குவதிலும் முறையாக நடந்துகொள்பவரே அவர்களில் மிகவும் சிறந்தவர்; கொடுப்பதிலும் வாங்குவதிலும் முறைதவறி நடந்துகொள்பவரே அவர்களில் மிகவும் கெட்டவர். அறிவிப்பாளர்:- அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-2117


பதினெட்டு மடங்கு


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். رَأَيْتُ لَيْلَةَ أُسْرِيَ بِي عَلَى باب الْجَنَّةِ مَكْتُوبًا الصَّدَقَةُ بِعَشْرِ أَمْثَالِهَا وَالْقَرْضُ بِثَمَانِيَةَ عَشَرَ ) நான் விண்ணுலக (மிஃராஜ்) பயணத்திற்காக அழைத்துச் செல்லப்பட்ட இரவில் சொர்க்கத்தின் வாசலில் "தர்மத்திற்கு அதைப் போன்று பத்து மடங்கு (நன்மைகள்) உண்டு. கடனுக்குப் பதினெட்டு மடங்கு (நன்மைகள்) உண்டு" என்று எழுதப்பட்டிருப்பதைக் கண்டேன். அப்போது நான் ( يَا جِبْرِيلُ مَا بَالُ الْقَرْضِ أَفْضَلُ مِنَ الصَّدَقَةِ ) (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்களிடம், தர்மத்தைவிட கடன் கொடுப்பது அதிக சிறப்படையக் காரணம் என்ன? என்று வினவினேன். அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள், ( لأَنَّ السَّائِلَ يَسْأَلُ وَعِنْدَهُ وَالْمُسْتَقْرِضُ لاَ يَسْتَقْرِضُ إِلاَّ مِنْ حَاجَةٍ ) "ஏனெனில், யாசகம் கேட்பவர் (சில நேரங்களில் தேவைக்கேற்ற காசு) இருக்கவே யாசிப்பார். ஆனால், கடன் கேட்பவர் தேவைக்காகவே கேட்கிறார்" என்றார்கள். அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- இப்னுமாஜா-2422 தப்ரானீ, ஷுஅபுல் ஈமான் லில்பைஹகீ


கைஸ் பின் ரூமீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது. சுலைமான் பின் உதுனான் (ரஹ்) அவர்கள் ஊதியம் வந்ததும் திருப்பித் தருவதன் பேரில் அல்கமா (ரஹ்) அவர்களுக்கு ஆயிரம் வெள்ளிக்காசுகள் கடன் கொடுத்தார்கள். ஊதியம் வந்ததும் அல்கமா (ரஹ்) அவர்களிடம் சுலைமான் (ரஹ்) அவர்கள் சென்று தான் கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்டு கடுமையாக நடந்து கொண்டார்கள். அல்கமா (ரஹ்) அவர்களும் கோபப்பட்ட நிலையில் கடனை திருப்பிக் கொடுத்தார்கள்.


சில மாதங்கள் கழிந்த பின்னர் மறுபடியும் அல்கமா (ரஹ்) அவர்கள் சுலைமான் (ரஹ்) அவர்களிடம் சென்று, "எனக்கு ஊதியம் வரும் வரை (கால அவகாசம் அளித்து) ஆயிரம் வெள்ளிக்காசுகள் கடன் கொடுப்பீராக! என்று கேட்டார்கள். அதற்கு சுலைமான் (ரஹ்) அவர்கள், "ஆம் கண்ணியத்துடனும் (தாராளமாகப்) பெற்றுக்கொள்ளுங்கள்!" என்று கூறிவிட்டு, தம் மனைவியிடம் முத்திரையிடப்பட்ட காசுப் பையை எடுத்துவா! என்று கூற, அவரும் பையுடன் வந்தார். பிறகு சுலைமான் (ரஹ்) அவர்கள் அல்கமா (ரஹ்) அவர்களிடம், "நீர் (சில மாதங்களுக்கு முன்னர்) என்னிடம் கொடுத்த அந்த (ஆயிரம்) வெள்ளிக்காசுகள்தான் இவை. அவற்றிலிருந்து ஒரேயொரு  வெள்ளிக்காசைக்கூட நான் தொடவில்லை" என்று கூறினார்கள்.


அதற்கு அல்கமா (ரஹ்) அவர்கள், "(அன்று) என்னிடம் அவ்வாறு (கடுமையாக) நடந்து கொள்ள என்ன காரணம்? என்று கேட்டார்கள். அதற்கு சுலைமான் (ரஹ்) அவர்கள், உன்னிடமிருந்து நான் செவியுற்ற ஒரு நபிமொழிதான் அதற்கு காரணம்" என்று கூறிவிட்டு, ( مَا مِنْ مُسْلِمٍ يُقْرِضُ مُسْلِمًا قَرْضًا مَرَّتَيْنِ إِلاَّ كَانَ كَصَدَقَتِهَا مَرَّةً ) "ஒரு முஸ்லிம் மற்றொருவருக்கு இரண்டு முறை கடன் கொடுத்தால் (அதன் மொத்தத் தொகையையும்) ஒருமுறை தர்மம் செய்ததைப் போன்றே அமையும்" என்ற இந்த நபிமொழியை நினைவுபடுத்தினார்கள். நூல்:- இப்னுமாஜா-2421


பதிவு செய்தல்


(இவ்வாறு எழுதும்போது) உங்கள் ஆண்களில் இருவரை சாட்சிகளாக்கிக்கொள்ளுங்கள். இரு ஆண்கள் இல்லையென்றால், நீங்கள் திருப்தி அடையும் ஓர் ஆணும் இரண்டு பெண்களும் சாட்சிகளாக இருக்கட்டும். அவ்விரு பெண்களில் ஒருவர் மறந்துவிட்டால் மற்றொருவர் நினைவூட்டுவார். அழைக்கப்படும்போது சாட்சிகள் மறுக்க வேண்டாம். (கடன்) சிறிதாயினும் பெரிதாயினும் அதன் தவணையை குறிப்பிட்டு எழுதுவதில் நீங்கள் அலட்சியம் காட்ட வேண்டாம். திருக்குர்ஆன்:- 282


கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். கஅப் (ரலி) அவர்களின் நண்பரான அபூ சுலைமான் அல்மர்அஷீ (ரஹ்) அவர்கள் ஒருமுறை தம் தோழர்களிடம், "அநீதியிழைக்கப்பட்ட ஒருவர் இறைவனிடம் முறையிட்டும் அவரது பிரார்த்தனையை இறைவன் ஏற்கவில்லை. அவரைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?" என்று கேட்டார். அதற்கு தோழர்கள், "அது எவ்வாறு நடந்திருக்க முடியும்? (அநீதியிழைக்கப்பட்டவனின் பிரார்த்தனை இறைவன் எவ்வாறு ஏற்றுக் கொள்ளாமல் இருப்பான்)" என்று வினவினர்.


அப்போது அவர் கூறினார்: ஒரு குறிப்பிட்ட தவணையை ஏற்படுத்தி அவர் வியாபார ஒப்பந்தம் செய்தார். ஆனால், அதற்கு அவர் சாட்சியும் ஏற்படுத்தவில்லை அதைப் பதிவு செய்யவுமில்லை. பின்னர் அவருக்குச் சேர வேண்டிய பொருளை, அவர் யாரிடம் வியாபார ஒப்பந்தம் செய்தாரோ அவர் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் அவர் இறைவனிடம் பிரார்த்தித்தார். ஆனால், அவர் (கடன் ஒப்பந்தத்தை எழுதி வைத்துக் கொள்ள வேண்டும் என்ற) இறைவனின் கட்டளைக்கு மாறு செய்த காரணத்தால் அவரது பிரார்த்தனையை இறைவன் ஏற்கவில்லை. நூல்:- தஃப்ஸீர் இப்னு கஸீர் அல்பகரா வசனம்-282


சாட்சி தேவை


அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இஸ்ரவேலர்களில் ஒருவர் மற்றொருவரிடம் தமக்கு ஆயிரம் பொற்காசுகள் கடனாகக் கேட்டார். கடன் கேட்கப்பட்டவர், "சாட்சிகளை என்னிடம் கொண்டு வா!" அல்லது பிணையேற்கும் ஒருவரை என்னிடம் கொண்டு வா! என்று கூறினார். கடன் கேட்டவர், "சாட்சிக்கும் பிணையேற்கவும் அல்லாஹ்வே போதுமானவன்" என்றார்.


பிறகு கடன் கேட்கப்பட்டவர், "நீர் கூறுவதும் உண்மைதான்" என்று கூறி, குறிப்பிட்ட தவணைக்குள் திருப்பித் தரவேண்டும் என்று ஆயிரம் பொற்காசுகளை அவருக்குக் கொடுத்தார். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-2291


கடன் சம்பந்தமாக ஒழுங்குகள் சரிவர பேணப்படாதபோது பிரச்சனைகள்  ஏற்படுவது தவிர்க்க முடியாததாக ஆகிவிடுகிறது. கடன் கொடுக்கும்போது வாங்கும்போது சாட்சிகள் வைத்து, தேதியையும், தொகையையும் எழுதிக்கொள்ள வேண்டுமென இறைமறை இயம்புகிறது. கடன் விஷயத்தில் கொடுத்த வாக்கை நிறைவேற்றிப் பழகவேண்டும்.


தாராளமாக...


மேலும், (கடன் வாங்கியவன் அதைத் தவணைப்படி தீர்க்கமுடியாமல்) அவன் கஷ்டத்தில் இருந்தால் (அவனுக்கு) வசதி ஏற்படும் வரையில் எதிrபார்த்திருங்கள். மேலும், (இதிலுள்ள நன்மைகளை) நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால் (அதை அவனுக்கே) நீங்கள் தானம் செய்துவிடுவது (பிறருக்கு தானம் செய்வதைவிட) உங்களுக்கு மிகவும் நன்மையாகும். திருக்குர்ஆன்:- 2:280


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ كَانَ لَهُ عَلَي رَجُلٍ حَقٌّ فَمَنْ اَخَّرَهُ كَانَ لَهُ بِكُلِّ يَوْمٍ صَدَقَةٌ ) ஒருவருக்கு மற்றொருவர் செலுத்த வேண்டிய (கடன் போன்றவை) ஏதேனும் இருந்து, கடன் கொடுத்தவர், அந்த கடனாளிக்கு அதைத் திருப்பிச் செலுத்துவதற்கு தவணை கொடுத்தால், ஒவ்வொரு நாளுக்குப் பகரமாகத் தர்மம் செய்த நன்மை கடன் கொடுத்தவருக்குக் கிடைக்கும். அறிவிப்பாளர்:- இம்ரான் பின் ஹுசைன் (ரலி) அவர்கள் நூல்:-  முஸ்னது அஹமத்


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உங்களுக்கு முன்னர் வாழ்ந்த மக்களில் ஒரு மனிதரின் உயிரை வானவர்கள் வரவேற்று அவரிடம், ( أَعَمِلْتَ مِنَ الْخَيْرِ شَيْئًا )"நீர் (உமது வாழ்நாளில்) ஏதேனும் நன்மை செய்திருக்கிறீரா?" என கேட்டனர். அதற்கு அம்மனிதர், ( أُنْظِرُ الْمُوسِرَ، وَأَتَجَاوَزُ عَنِ الْمُعْسِرِ ) "(நான் மக்களுக்கு கடன் கொடுத்து வந்தேன்.)  வசதியானவருக்கு அவகாசம் வழங்குமாறும், சிரமப்படுபவர்களின் கடனைத் தள்ளுபடி செய்யும் நான் என் ஊழியர்களுக்கு கட்டளையிட்டிருந்தேன்" என்று கூறினார். உடனே ( فَتَجَاوَزُوا عَنْهُ ) "அவருடைய தவறுகளை கண்டு கொள்ளாமல் விட்டுவிடுங்கள்" என்று (அல்லாஹ் வானவர்களிடம்) கூறினான். அறிவிப்பாளர்:- ஹுதைஃபா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-2077, முஸ்லிம்-3179


அப்துல்லாஹ் பின் அபீகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது. (என் தந்தை) அபூகத்தாதா (ரலி) அவர்கள், தமக்கு கடன் தரவேண்டிய ஒருவரை தேடினார்கள். அவர் தலைமறைவாகிவிட்டார். பின்னர் அவரைக் கண்டபோது அவர், "நான் (வசதியின்றி) சிரமப்படுபவன்" என்று கூறினார். அதற்கு அபூகத்தாதா (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் மீது சத்தியமாகவா? என்று கேட்டார்கள். அவர் "அல்லாஹ்வின் மீது சத்தியமாகத்தான்" என்றார். அபூகத்தாதா (ரலி) அவர்கள், அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ( مَنْ سَرَّهُ أَنْ يُنْجِيَهُ اللَّهُ مِنْ كُرَبِ يَوْمِ الْقِيَامَةِ فَلْيُنَفِّسْ عَنْ مُعْسِرٍ أَوْ يَضَعْ عَنْهُ ) 'மறுமை நாளின் துயரங்களிலிருந்து அல்லாஹ் காப்பாற்ற வேண்டுமென விரும்புகின்றனர், (கடனை அடைக்க முடியாமல்) சிரமப்படுபவருக்கு அவகாசம் அளிக்கட்டும். அல்லது கடனை தள்ளுபடி செய்துவிடட்டும்' என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்" என்றார்கள். நூல்:- முஸ்லிம்-3184


அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ أَنْظَرَ مُعْسِرًا كَانَ لَهُ بِكُلِّ يَوْمٍ صَدَقَةٌ وَمَنْ أَنْظَرَهُ بَعْدَ حِلِّهِ كَانَ لَهُ مِثْلُهُ فِي كُلِّ يَوْمٍ صَدَقَةٌ )  (கடனை அடைக்க முடியாமல்) சிரமப்படும் ஒருவருக்கு யார் அவகாசம் அளிக்க அவருக்கு (அந்த அவகாசம் முடியும் வரை) ஒவ்வொரு நாளைக்கும் ஒரு தர்மம் செய்த நன்மை உண்டு. அந்த அவகாசம் முடிந்த பின்னரும் (கடனை அடைக்க முடியாமல்) சிரமப்படுபவருக்கு யார் (மீண்டும்) அவகாசம் அளிக்கிறாரோ அவருக்கு அதைப் போன்றே ஒவ்வொரு நாளுக்கும் ஒரு தர்மம் செய்த நன்மை உண்டு. அறிவிப்பாளர்:- புரைதா அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் நூல்:- இப்னுமாஜா-2409, முஸ்னது அஹ்மத்-21968


சிரமப்படுவோருக்கு கடன் கொடுத்து உதவுவது மிகச் சிறந்த தர்மமாகும். அவ்வாறு கடன் வாங்கியவர் உரிய காலத்தில் கடனைத் திருப்பித் தர இயலாமல் சிரமப்பட்டால், அவருக்கு வட்டியில்லாமல் அவகாசம் அளிப்பது மிகவும் நன்மைக்குரிய செயலாகும். வசதி படைத்தவர் கடன் வாங்கியிருந்தால், அவரிடம் நளினமாக நடந்து கொள்வதும், ஏழையாக இருந்தால் கடனை தள்ளுபடி செய்துவிடுவதும் சிறப்புக்குரிய நற்செயலாகும் என்கிறது இஸ்லாம்.


கடன்பட்டவருடன் பண்பாகவும், கனிவாகவும் நடந்திட வேண்டும். அவரது பலவீனத்தைப் பயன்படுத்தி இலாபம் பெறக்கூடாது. அவரது நிர்பந்த நிலையை அனுசரித்து நடக்க வேண்டும். மேலும், முடிந்த அளவு அவருக்கு சலுகைகள், அவகாசங்கள் அளிக்க வேண்டும். தகுதியானோருக்கு கடன் வழங்குவது ஓர் சமுதாயச் சேவை என்று உணர வேண்டும்.


எண்ணத்தைப் பொறுத்து...


கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ أَخَذَ أَمْوَالَ النَّاسِ يُرِيدُ أَدَاءَهَا أَدَّى اللَّهُ عَنْهُ، وَمَنْ أَخَذَ يُرِيدُ إِتْلاَفَهَا أَتْلَفَهُ اللَّهُ ) யார் மக்களின் பணத்தை (அல்லது பொருட்களைத்) திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறாரோ அவர் சார்பாக அல்லாஹ்வே அதைத் திருப்பிச் செலுத்துவான். எவன் திருப்பிச் செலுத்தும் எண்ணமின்றி அதை (ஏமாற்றி) அழித்துவிடும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அல்லாஹ்வும் அவனை அழித்துவிடுவான். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-2387


அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( أَيُّمَا رَجُلٍ يَدَيَّنُ دَيْنًا وَهُوَ مُجْمِعٌ أَنْ لاَ يُوَفِّيَهُ إِيَّاهُ لَقِيَ اللَّهَ سَارِقًا ) கடனை (திருப்பிச்) செலுத்தக்கூடாது என்ற தீர்மானத்துடன் எந்த மனிதன் கடன் வாங்குகின்றானோ அவன் திருடனாகவே அல்லாஹ்வை சந்திப்பான். அறிவிப்பாளர்:- ஸுஹைப் அல்கைர் அர்ரூமீ (ரலி) அவர்கள்  நூல்:- இப்னுமாஜா-2401, மஜ்மஉஸ் ஸவாயித், ஸஹீஹ் அத்தர்ஙீபு வத்தர்ஹீபு 


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِنَّ اللَّهَ مَعَ الدَّائِنِ حَتَّى يَقْضِيَ دَيْنَهُ مَا لَمْ يَكُنْ فِيمَا يَكْرَهُ اللَّهُ ) கடன் பெற்றவர் தம் கடனை நிறைவேற்றுகின்ற வரை அவருடன் அல்லாஹ் இருக்கிறான். அந்தக் கடன் அல்லாஹ் வெறுக்கும் (தீய) செயலுக்காக வாங்கபடாத வரை. அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் ஜஅஃபர் (ரலி) அவர்கள் நூல்:- இப்னுமாஜா-2400,தாரமீ-2482,ஹாகிம்


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். கடன் வாங்கியவர் (அதை நிறைவேற்றாமல்) இறந்துவிட்டால் மறுமையில் அவருடைய கடன் (அவர் செய்த நன்மைகளிலிருந்து எடுத்துக்கொடுத்து) செலுத்தப்படும்; மூன்று காரணங்களுக்காகக் கடன் வாங்கியவர்களைத் தவிர.


1. அல்லாஹ்வின் பாதையில் போராடுபவர். அவர் தனது வலிமை குன்றியதால் கடன் வாங்கி, அதன்மூலம் அல்லாஹ்வுடைய எதிரிக்கும் தம்முடைய எதிரிக்கும் எதிராக வலிமையை வளர்த்துக் கொண்டவர். 

2. ஒருவருக்கு அருகில் (வாழ்ந்த) முஸ்லிம் ஒருவர் இறந்துவிடுகிறார். அப்போது அவருக்கு (கஃபன்) சவக்கோடி அணிவிக்கவும், அவருடைய உடலை மறைக்கவும் கடன் வாங்குவதைத் தவிர வேறு வழியில்லை (என்ற நிலையில் கடன் வாங்கியவர்). 

3. ஒருவர் வாழ்க்கைத் துணையின்றி தனியாக இருப்(பதால் தவறிழைத்து விடுவ)தை நினைத்து அல்லாஹ்வை அஞ்சுகிறார். தமது மார்க்கத்தைப் பாதுகாப்பதற்காக (கடன்வாங்கி) மணம் முடித்துக்கொள்கிறார். எனவே, இம்மூவரின் கடனையும் மறுமை நாளில் அல்லாஹ் நிறைவேற்றுவான். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் நூல்:- இப்னுமாஜா-2426


இஸ்லாம் ஒரு புறம் கடனைச் சிறந்த முறையில் திருப்பிக் கொடுத்திட வேண்டுமென, கடன் வாங்கியவருக்குக் கட்டளையிடுகிறது. மறுபுறம், கடன் வாங்கியவரிடம் மென்மையாக நடந்து கொள்ளுமாறு கடன் கொடுத்தவருக்கு அறிவுறுத்துகிறது.


கையில் காசு இருந்தாலும்கூட கிரிடிட் கார்ட் (கடன் அட்டை) பயன்படுத்தி பொருள் வாங்குவதில் பெருமை கொள்ளும் காலமிது. காலமுழுக்க கடனாளியாக வாழ்வதையே பெருமையாக எண்ணுகிறார்கள் என்று பொருள். இது புத்திசாலித்தனமல்ல.


பதைப்பதைப்பு


(இறந்தவரின்) மரண சாசனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னரே (அவருடைய மீதமுள்ள சொத்தில் பாகம் பிரிக்க வேண்டும்.) திருக்குர்ஆன்:- 4:11


இறந்தவரின் சொத்தை பாகம் பிரிக்கப்படுவதற்கு முன்னர் அவர்மீது கடன் ஏதேனும் இருந்தால் அதை முதலில் நிறைவேற்றவேண்டும். இதுவே இறைவேதமான குர்ஆனின் கட்டளை.


அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் அண்ணல் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அவர்கள், ( مَا أُحِبُّ أَنَّهُ يُحَوَّلُ لِي ذَهَبًا يَمْكُثُ عِنْدِي مِنْهُ دِينَارٌ فَوْقَ ثَلاَثٍ، إِلاَّ دِينَارًا أُرْصِدُهُ لِدَيْنٍ )  “உஹுத் மலையை பார்த்தபோது, இந்த மலை எனக்காகத் தங்கமாக மாற்றப்பட்டு, அதிலிருந்து ஒரேயொரு தங்கக் காசுகூட என்னிடம் மூன்று நாட்களுக்கு மேல் தங்கி இருப்பதை நான் விரும்பமாட்டேன்; கடனை அடைப்பதற்காக நான் எடுத்து வைக்கின்ற தங்கக் காசை தவிர" என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-2388


ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் தொழுகையில் பிரார்த்தனை செய்யும் போது, ( اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْمَأْثَمِ وَالْمَغْرَمِ ) "இறைவா! பாவத்திலிருந்தும் கடனிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்" என்று கூறுவார்கள். (இதைச் செவியுற்ற) ஒருவர் அண்ணலாரிடம், ( مَا أَكْثَرَ مَا تَسْتَعِيذُ يَا رَسُولَ اللَّهِ مِنَ الْمَغْرَمِ ) "நாயகமே! தாங்கள் கடன்படுவதிலிருந்து இவ்வளவு அதிகமாகப் பாதுகாப்பு கோருவதற்குக் காரணம் என்ன? என்று வினவினார். அதற்கு அண்ணலார், ( إِنَّ الرَّجُلَ إِذَا غَرِمَ حَدَّثَ فَكَذَبَ وَوَعَدَ فَأَخْلَفَ ) "மனிதன் கடன்படும்போது பொய் பேசுகிறான்; வாக்குறுதி தந்து விட்டு (அதற்கு) மாறு செய்கிறான்" என்று பதிலளித்தார்கள். நூல்:- புகாரீ-2397


கடன்பட்டார் நெஞ்சம் போல், களங்கி நின்றான் இலங்கை வேந்தன்.


அந்தக் காலத்தில் கடன் வாங்கியோர், வாங்கி கடனை நிறைவேற்றும்வரை கடனை நினைத்து பதட்டநிலையிலேயே இருப்பார்கள். இதைதான் இந்த முதுமொழி கூறுகிறது. ஆனால், இன்று கடன் கொடுத்தவன், கொடுத்த கடன் மீண்டும் முறையாக வந்துவிடுமா? என்று  களங்கி நின்றான்.


அழகிய முறையில் திருப்பிச் செலுத்துவது


அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒரு மனிதர் அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம் கொடுத்த கடனை வாங்குவதற்காக வந்து கடுஞ்சொற்களைப் பயன்படுத்தினார். நபித்தோழர்கள் அவரை(ப் பிடித்து)க் கண்டிக்கத் தயாராயினர். அப்போது நபியவர்கள், ( دَعُوهُ فَإِنَّ لِصَاحِبِ الْحَقِّ مَقَالاً ) "அவரை விட்டுவிடுங்கள்; கடன்கொடுத்தவருக்கு (இவ்வாறு) பேச உரிமை உண்டு" என்று கூறிவிட்டு, ( أَعْطُوهُ سِنًّا مِثْلَ سِنِّهِ ) “அவருக்குக் கொடுக்க வேண்டிய ஒட்டகத்தின் வயதுடைய ஒட்டகமொன்றை கொடுங்கள்" என்றார்கள். மக்கள் நாயகமே! அவருக்குக் கொடுக்க வேண்டிய ஒட்டகத்தைவிட அதிக வயதுடைய ஒட்டகங்களைத் தவிர வேறு இல்லை" என்றனர்.


நபியவர்கள், ( أَعْطُوهُ فَإِنَّ مِنْ خَيْرِكُمْ أَحْسَنَكُمْ قَضَاءً ) "அதையே வாங்கி அவருக்குக் கொடுத்து விடுங்கள். ஏனெனில், (வாங்கிய கடனை) அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவரே உங்களில் சிறந்தவர் ஆவார்" என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-2306 முஸ்லிம்-3272


அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடமிருந்து கடனாகப் பெற்ற ஒட்டகத்தை அவர் கேட்டு வந்தார். அப்போது அதைவிட வயது அதிகமான நல்ல ஒட்டகத்தை திருப்பிச் செலுத்தும்போது இவ்வாறு கூறியதாக வந்துள்ளது. கடனை திருப்பிச் செலுத்தும்போது சிறந்த பொருளைத் தரவேண்டும் என்றும், அது உயர்ந்த பண்பாகும் என்றும் நபியவர்கள் தெரிவிக்கிறார்கள்.


கடன் பெற்றவர் கடனைத் திரும்பச் செலுத்தும்போது மனம் விரும்பி, கொஞ்சம் கூடுதலாக, சிறந்ததைக் கொடுக்கலாம். சிறந்த பொருளை, அல்லது விலை உயர்ந்த பொருளை திருப்பிச் செலுத்துவது வட்டியாகிவிடாதா என்ற ஒரு சந்தேகம் எழலாம். கடன் கொடுக்கும்போதே முன்நிபந்தனையிட்டுக் கூடுதலாகத் தரவேண்டும் என்று பேசி வைத்துக்கொண்டு தருவதுதான் தடை செய்யப்பட்டதாகும். இது, கடன் பெற்றவர் தாமாக விரும்பி மகிழ்ச்சியாகக் கொடுப்பதாகும், இது தடை செய்யப்பட்டதன்று. நூல்:- அல்மின்ஹாஜ்


மனிதனுடைய இயலாமையைப் பயன்படுத்தி கடன் கொடுப்பவர் கடனாளியைக் கடுமையாக அல்லது மனிதாபிமானமற்ற முறையில் நடத்துவது பாவச் செயல் என இஸ்லாம் இயம்புகிறது.


ஒருவர் உமர் (ரலி) அவர்களிடம் வந்து, மற்றொருவரைக் குறித்து இவர் நல்ல மனிதர் என்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது உமர் (ரலி) அவர்கள், நிறுத்து! அவரைப்பற்றி உனக்கு என்ன தெரியும்? நீர் அவருடைய அண்டைவீட்டாராக இருந்திருக்கிறீரா? அல்லது அவருடன் பயணித்திருக்கிறீரா? அல்லது அவருடன் (கடன் போன்று பணம்) கொடுக்கல் வாங்கல் ஏதேனும் செய்திருக்கிறீரா? என்று கேட்டார்கள். 


ஒருவரை நல்லவர் என்று சான்று பகிர்வதற்கு முன்னர், இந்த மூன்றில் ஏதாவது ஒன்றையாவது அனுபவித்திருக்க வேண்டும் என்பது உமர் (ரலி) அவர்களின் நிலைப்பாடு.


அநியாயம்


அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَطْلُ الْغَنِيِّ ظُلْمٌ ) வசதியுள்ளவர் (தமது கடனை அடைக்காமல் கடன் கொடுத்தவரிடம் தவணை சொல்லி) தள்ளிப்போடுவது அநியாயமாகும். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-2400


அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لَيُّ الْوَاجِدِ يُحِلُّ عِرْضَهُ وَعُقُوبَتَهُ ) வசதியுள்ளவர் (கடனைத் தீர்க்காமல்) இழுத்தடித்துக் கொண்டே சென்றால் அதற்காக அவருக்கு தண்டனை அளிப்பதும் அவரது மானத்தை வாங்குவதும் செல்லும். அறிவிப்பாளர்:- அஷ்ஷரீத் பின் ஸுவைத் (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ, இப்னுமாஜா-2418


சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். (பலர் முன்னிலையில்) "நீ எனக்கு தரவேண்டிய கடனை அடைக்காமல் இழுத்தடிக்கிறாய்" என்று கூறுவதே கடனாளியின் மானத்தை வாங்குவதாகும். அவனைச் சிறையில் தள்ளுவது அவனுக்குத் தரும் தண்டனையாகும். நூல்:- புகாரீ-2401 பாடம் கடன் கொடுத்தவருக்கு பேச உரிமை உண்டு.


கடன் வாங்கியவர் அதை ஒப்படைக்க வசதி ஏற்படுமாயின் உடனே ஒப்படைத்து விட வேண்டுமே தவிர, காலதாமதம் செய்து விடக்கூடாது. பிறகு பார்க்கலாம் என்று பிற்படுத்தும் போது அதனை ஒப்படைப்பதற்கான ஒவ்வொரு வாய்ப்பும் தவறிப் போய்க்கொண்டே இருக்கும் என்பதில் கவனம் தேவை


கடன் வாங்கிய ஒருவர், உரிய காலத்தில் கடனை நிறைவேற்ற வசதி இருந்தும் வேண்டுமென்றே கடனைக் கொடுக்காமல் இழுத்தடிப்பது தடை செய்யப்பட்டதாகும். இந்தக் குற்றத்தைச்  செய்பவரது சாட்சியத்தை ஏற்கக் கூடாது எனும் அளவுக்கு அறிஞர்கள் சிலர் இதைக் கடுமையான குற்றமாக கருதுகிறார்கள். இந்தக் குற்றத்திற்குச் சிறை தண்டனை வழங்கலாம் என அறிஞர்கள் கூறுகிறார்கள். நூல்:- அல்மின்ஹாஜ், தக்மிலா


இறைவா! இந்த புத்தாண்டில் இருந்து என்னுடைய கடன் தொல்லையைத் தீர்த்து விடு! அல்லது எனக்கு கடன் கொடுத்தவர்களைத் தீர்த்து விடு! என்று ஒருவன் பிரார்த்தித்தானாம்.


கடன் வாங்கிவிட்டு ஓடி ஒழியக்கூடிய பலரின் மனநிலை இப்படித்தான் இருக்கிறது.


நீங்களே தொழுகை நடத்துங்கள்


சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது. நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அமர்ந்திருந்தபோது ஒரு பிரேதம் (ஜனாஸா) கொண்டுவரப்பட்டது.  நபித்தோழர்கள், "நீங்கள் இவருக்குத் தொழுகை நடத்துங்கள்" என்று அண்ணலாரிடம் கூறினர். அண்ணலார், ( هَلْ تَرَكَ شَيْئًا ) "இவர் எதையேனும் விட்டுச் சென்றிருக்கிறாரா? என்று கேட்டார்கள். நபித்தோழர்கள், "இல்லை" என்றனர். அண்ணலார், ( فَهَلْ عَلَيْهِ دَيْنٌ ) "இவர் கடனாளியா? என்று  கேட்டார்கள். நபித்தோழர்கள், ( ثَلاَثَةُ دَنَانِيرَ ) "மூன்று தங்கக் காசுகள் கடன் வைத்திருக்கிறார்" என்று கூறினர். அண்ணலார், ( صَلُّوا عَلَى صَاحِبِكُمْ ) "உங்கள் தோழருக்கு நீங்களே தொழுகை நடத்துங்கள்" என்று கூறிவிட்டார்கள். அப்போது அபூகத்தாதா (ரலி) அவர்கள், ( صَلِّ عَلَيْهِ يَا رَسُولَ اللَّهِ، وَعَلَيَّ دَيْنُهُ ) "நாயகமே! இவரது கடனுக்கு நான் பொறுப்புஇவருக்குத் தொழுகை நடத்துங்கள் என்று கூறியதும், அவருக்கு அண்ணலார் தொழுகை நடத்தினார்கள். நூல்:-  புகாரீ-2289, திர்மிதீ-989, நசாயீ-1936, இப்னுமாஜா-2398


கடன் விஷயத்தில் மிகுந்த கவனத்துடனும் பொறுப்புடனும் நடந்து கொள்ள வேண்டும்; மனித உரிமைகள் விஷயத்தில் அசட்டையாக இருக்கக்கூடாது என்பதை உணர்த்துவதற்காகவே கடனாளியாக இறந்தவருக்கு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தொழவைக்க மறுத்தார்கள். அல்லது பிற மனிதர்களின் உரிமைகளைப் பறித்து, அவர்களுக்கு அநீதி இழைத்த ஒருவர், தமக்காக மற்றவர்கள் செய்யும் பிரார்த்தனை ஏற்கப்படாமல் போவதற்கு தாமே காரணமாகிவிடுகிறார் என்பதும் காரணமாக இருக்கலாம்.


இஸ்லாமிய ஆரம்பக் காலத்தில் கடனை அடைக்காமல் இறந்துவிட்டவரின் பிரேதத்திற்கு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் முன் நின்று தொழுவிக்காமல் இருந்தார்கள். பின்னர் இஸ்லாமிய அரசின் கருவூலத்தில் நிதி சேர்ந்த போது அன்றைய ஆட்சியாளராக இருந்த நபியவர்கள் அரசு நிதியிலிருந்து அக்கடனை நிறைவேற்றியதுடன் தாமே முன்னின்று தொழுகையும் நடத்தினார்கள்.


எனவேதான், கடனை அடைக்க இயலாத நிலையில் ஒருவர் இறந்து விடும் போது, இஸ்லாமிய அரசு தனது பொது நிதியிலிருந்து (பைத்துல்மால்) அவர்களுக்காகக் கடனைச் செலுத்தியது.


மன்னிக்கப்படாது


அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்கள் (ஒருமுறை) எங்களிடையே நின்றுகொண்டு, ( أَنَّ الْجِهَادَ فِي سَبِيلِ اللَّهِ وَالإِيمَانَ بِاللَّهِ أَفْضَلُ الأَعْمَالِ ) “அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவதும் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வதும் நற்செயல்களிலேயே மிகவும் சிறந்ததாகும்" என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர் எழுந்து, "நாயகமே! நான் அல்லாஹ்வின் பாதையில் (அறப்போரில்) கொல்லப்பட்டால் என் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுமா, கூறுங்கள்? என்று கேட்டார்.


அதற்கு நபியவர்கள், ( نَعَمْ إِنْ قُتِلْتَ فِي سَبِيلِ اللَّهِ وَأَنْتَ صَابِرٌ مُحْتَسِبٌ مُقْبِلٌ غَيْرُ مُدْبِرٍ ) "ஆம், நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் பொறுமையுடனும் (இறைவனுக்காக எனும்) தூய எண்ணத்துடனும் புறமுதுகிட்டு ஓடாமல் முன்னோக்கிச் சென்று கொல்லப்பட்டால், (உங்கள் அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்படும்)" என்று பதிலளித்தார்கள். பிறகு, (சிறிது நேரம் கழித்து) நபியவர்கள், ( كَيْفَ قُلْتَ ) “எப்படி கேட்டீர்கள் (மீண்டும் சொல்லுங்கள்?) என்று கேட்டார்கள். அந்த மனிதர், "நான் அல்லாஹ்வின் பாதையில் (அறப்போரில்) கொல்லப்பட்டால், என் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுமா, கூறுங்கள்?" என்று கேட்டார்.


மீண்டும் நபியவர்கள், ( نَعَمْ وَأَنْتَ صَابِرٌ مُحْتَسِبٌ مُقْبِلٌ غَيْرُ مُدْبِرٍ إِلاَّ الدَّيْنَ فَإِنَّ جِبْرِيلَ عَلَيْهِ السَّلاَمُ قَالَ لِي ذَلِكَ ) "ஆம், நீங்கள் பொறுமையுடனும் (இறைவனுக்காக எனும்) தூய எண்ணத்துடனும் புறமுதுகிட்டு ஓடாமல் முன்னோக்கிச் செல்லும்போது (கொல்லப்பட்டு விட்டால் உங்கள் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விடுகின்றன.) ஆனால், கடனைத் (திருப்பித் தராத பாவத்தைத்) தவிர! ஏனெனில், (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னிடம் (இப்போதுதான்) இவ்வாறு கூறினார்" என்றார்கள். நூல்:- முஸ்லிம்-3830, திர்மிதீ-1634, நசாயீ-, முஸ்னது அஹ்மத், ஹாகிம், தப்ரானீ


இந்த நபிமொழி, மனித உரிமைகளின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிதல், அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டு உயிர்த்தியாகம் செய்தல் முதலான மிக உயர்ந்த நற்செயல்கள்கூட மனித உரிமைகள் தொடர்பான பாவங்களுக்குப் பரிகாரமாக அமையாது. அல்லாஹ் தொடர்புடைய பாவங்களுக்கு மட்டுமே அவை பரிகாரமாக அமையும். நூல்:- அல்மின்ஹாஜ், துஹ்ஃபத்துல் அஹ்வதீ


கடனாளியின் வணக்க வழிபாட்டுக்கு அல்லாஹ்விடம் அங்கீகாரமில்லை. அவருடைய கடன் நிறைவேற்றப்படும்வரை அவர் நிலை இழுபறிதான். தனக்கு எப்போது மரணம் வரும் என்பதை யாரும் அறிவதில்லை. எனவே, குண்டூசி முதல் பெரியப் பொருள்கள்வரை (EMI எனும்) தவணைமுறையில் வாங்குவதையே வாடிக்கையாக வைத்திருப்பவர்கள் சிந்திக்க வேண்டுமே! 


அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( نَفْسُ الْمُؤْمِنِ مُعَلَّقَةٌ بِدَيْنِهِ حَتَّى يُقْضَى عَنْهُ ) (கடனாளியாக இறந்துவிட்ட) இறைநம்பிக்கையாளரின் உயிர் அவரது கடன் அடைக்கப்படாத வரை அவரது கடனுடன் தொங்கிய நிலையில் விடப்படுகிறது. அறிவிப்பாளர்:-  அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-998, இப்னுமாஜா-2404, முஸ்னது அஹ்மத்-9302, தாரிமீ-2478, இப்னு ஹிப்பான்


கடனை அடைக்காமல் இறந்துவிட்ட இறைநம்பிக்கையாளர் தொடர்பான தீர்ப்பு நிறுத்தி வைக்கப்படும். தீர்ப்பு கிடைக்காமல் தவிக்கும் நிலையை அவர் சந்திப்பார். அவர் சார்பாக கடன் அடைக்கப்படுகிறதா என எதிர்பார்க்கப்படும். அவர் சொத்துக்களை விட்டுச்சென்றிருந்தால் அதிலிருந்தோ, அவர் சொத்துக்களை விட்டுச் செல்லாத நிலையில் அவருடைய வாரிசுகளின் சொத்துகளிலிருந்தோ அக்கடன் அடைக்கப்பட வேண்டும்.


இவ்விரு நிலைகளிலும் இல்லாமலிருந்து, வாழும்போது அவர் கடனை அடைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்து, கடனைச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டிருந்தால் அவரது கடனை அல்லாஹ் வேறு முறையில் நிறைவேற்றுவான். அவர் செய்திருக்கும் நன்மைகளிலிருந்து குறிப்பிட்ட அளவு எடுத்துக் கடன் கொடுத்தவரின் கணக்கில் சேர்த்து விடுவான்.


அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ فَارَقَ الرُّوحُ الْجَسَدَ وَهُوَ بَرِيءٌ مِنْ ثَلاَثٍ دَخَلَ الْجَنَّةَ مِنَ الْكِبْرِ وَالْغُلُولِ وَالدَّيْنِ ) மூன்று விஷயங்களிலிருந்து நீங்கிய நிலையில் யாருடைய உயிர் உடலிலிருந்து பிரிகிறதோ அவர் (நிச்சயம்) சொர்க்கம் செல்வார். அவை: 1. பெருமை 2. பொதுச் சொத்தில் கையாடல் 3. கடன். நூல்:- திர்மிதீ-1497 இப்னுமாஜா-2403 முஸ்னது அஹ்மத்-21335, தாரிமீ-2479, ஹாக்கிம்


கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ مَاتَ وَعَلَيْهِ دِينَارٌ أَوْ دِرْهَمٌ قُضِيَ مِنْ حَسَنَاتِهِ لَيْسَ ثَمَّ دِينَارٌ وَلاَ دِرْهَمٌ ) யார் தம்மீது ஒரு தங்கக் காசு அல்லது வெள்ளிக் காசு கடன் உள்ள நிலையில் (அதை நிறைவேற்றாமல்) இறந்துவிட்டாரோ (மறுமை நாளில்) அவருடைய நன்மைகளிலிருந்து அது நிறைவேற்றப்படும். (ஏனென்றால், எடுத்துக் கொடுப்பதற்கு) அங்கே (மறுமையில்) தங்கக் காசோ வெள்ளிக் காசோ கிடையாது. அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் நூல்:- இப்னுமாஜா-2405, முஸ்னது அஹ்மத்-5855


அன்பளிப்பு கூடுமா?


யஹ்யா பின் அபீஇஸஹாக் அல்ஹுனாயீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது. நான் அனஸ் (ரலி) அவர்களிடம், "எங்களில் ஒருவர் தம்முடைய சகோதரருக்குப் பொருளைக் கடன் கொடுக்கிறார். (அப்போது) அவர் (கடன் கொடுத்தவருக்கு) அன்பளிப்பு கொடுக்கிறார் (இது கூடுமா)?" என்று வினவினேன்.


அனஸ் (ரலி) அவர்கள், ( إِذَا أَقْرَضَ أَحَدُكُمْ قَرْضًا فَأَهْدَى لَهُ أَوْ حَمَلَهُ عَلَى الدَّابَّةِ فَلاَ يَرْكَبْهَا وَلاَ يَقْبَلْهُ إِلاَّ أَنْ يَكُونَ جَرَى بَيْنَهُ وَبَيْنَهُ قَبْلَ ذَلِكَ ) "உங்களுள் ஒருவர் கடன் கொடுக்கும்போது கடன் வாங்கியவர் அவருக்கு அன்பளிப்பு கொடுத்தால் அல்லது வாகனத்தில் ஏற்றி விட்டால் அதில் அவர் ஏறவும் வேண்டாம்; அதை ஏற்கவும் வேண்டாம் . இதற்கு முன் அவருக்கும் இவருக்கும் இடையே அவ்வாறான நடைமுறை இருந்தாலே தவிர, என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்" என தெரிவித்தார்கள். நூல்:-  இப்னுமாஜா-2423,  பைஹகீ


யஸீத் பின் ஹாரூன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. ஒருநாள் பேரறிஞர் இமாம் அபூஹனீஃபா (ரஹ்) அவர்கள் வெயிலில் ஒரு வீட்டின் வாசல் அருகே அமர்ந்திருந்தார்கள். நான் அவர்களிடம் (அந்த வீட்டின்) நிழலுக்கு சென்று நீங்கள் அமரலாமே! என்றேன். அதற்கு இமாமவர்கள் அந்த வீட்டுக்குரியவர் என்னிடம் சில வெள்ளிக்காசுகள் கடன் வாங்கியுள்ளார். அதனால் அவர் வீட்டின் நிழலில் நான் அமர விரும்பவில்லை. (ஏனெனில் அது கூட வட்டியாகி விடுமே என்ற அச்சம் தான்) என்று பதிலளித்தார்கள்.      நூல்:- மளாஹிருல் ஹக்- 4/739


சுமார் 6666 திருவசனங்கள் அடங்கிய குர்ஆனில், கொடுக்கல் வாங்கல் பற்றி அறிவுறுத்தும் (2:282) வசனம் தான் மிகப்பெரியது என்பது கவனிக்கத்தக்கது. எனவே, கொடுக்கல் வாங்கல் எனும் கடன் விஷயத்தில் இறைகட்டளைகளைப் பேணி, மிகுந்த கவனத்தோடும், பேணுதலோடும் இருக்கவேண்டும். எனவே, நாம் கடன்களில் கண்ணியம் பேணி, இறையருளைப் பெறுவோமாக! ஆமீன்!


மௌலவி, மு.முஹம்மது ஹைதர் அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951 

 


No comments:

Post a Comment

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...