அநீதிக்கு ஆளானோரின் பிரார்த்தனை
فَدَعَا رَبَّهُ أَنِّي مَغْلُوبٌ فَانْتَصِرْ
இறுதியில் அவர் (இறைத்தூதர்
நூஹ்-அலை அவர்கள்) தம் இறைவனை அழைத்தார்: “நான் தோற்றுப்போய் இருக்கின்றேன். நீ இப்போது இவர்களைப் பழி வாங்குவாயாக!” திருக்குர்ஆன்:- 54:10
யூதர்கள், சுமார் எழுபத்தைந்து ஆண்டுகளாக அரபு முஸ்லிம்களின் தாயகமான ஃபலஸ்தீனத்தை கொஞ்ச கொஞ்சமாக ஆக்கிரமித்து வருகின்றனர். தினந்தோறும் ஃபலஸ்தீனர் மீது போர்த்தொடுத்து முதியோர், குழந்தைகள், பெண்கள் என்றும் பாராமல் அநியாயமாக கொன்றொழித்து, அவர்களின் உடமைகளை சூரையாடி வருகின்றனர்.
அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வல்லரசுகள் யூதர்களின் இந்த அநியாயத்திற்கு நியாயம் கற்பித்து, அவர்களுக்கு அனைத்து நிலைகளிலும் உதவி புரிகின்றனர்.
மேலும், இன்றைய பெரும்பாலான ஊடகங்களும் இந்த அயோக்கியர்களை நீதவான்களாகவும், தமது உடமைக்காக போராடும் உண்மையான போராளிகளை அயோக்கியர்களாகவும், தீவிரவாதிகளாகவும் சித்தரிக்கின்றனர்.
அநியாயத்திற்கு துணை நிற்கும் அனைவரும் அயோக்கியர்களே! இவர்கள் அனைவரும் இவர்கள் செய்த அநியாயத்திற்குரிய பிரதிபலனை நிச்சயமாக ஒருநாள் அனுபவித்தே தீருவார்கள்.
யாராக இருந்தாலும் சரியே, "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்" என்பது இறைவனின் நியதி.
அநீதி என்பது ஒரு
கொடுமையான செயல். அநீதியிழைப்பது மார்க்கத்தில் தடை செய்யப்பட்டது. எனவே, இதற்கு மறுமையில்
பதில் சொல்லியாக வேண்டும்.
அதிகாரத்தை துஷ்பிரயோகம்
செய்வது, ஏழை எளியோரின் உரிமையை வழங்க மறுப்பது, பலவீனமானவர்களிடம் அடித்து பிடுங்குவது, பிறர்மீது அவதூற்றைப் பரப்புவது, பேசியபடி வேலை வாங்கி கொண்டு கூலியை மட்டும் குறைத்துக்
கொடுப்பது, வாங்கும் கூலிக்கு
ஒழுங்காக வேலை செய்யாமல் முதலாளியை ஏமாற்றுவது, பெற்றோர் மற்றும்
மனைவி மக்களுக்கு போதிய உணவு உடை உறைவிடம் வழங்காமல் கஞ்சத்தனம் செய்வது இவ்வாறு அநீதத்தின்
பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.
அநீதியிழைக்கப்பட்டவன்
முஸ்லிமாகவோ அல்லது இறைமறுப்பாளனாகவோ யாராக இருந்தாலும் சரி, அவனின் பிரார்த்தனை உடனே ஏற்றுக்கொள்ளப்படும் என்கிறது இஸ்லாம்.
அநீதமிழைக்கப்பட்டவனின்
ஒரு பிரார்த்தனை அநீதமிழைத்தவனின் வாழ்க்கையை சின்னாபின்னமாக சிதைத்து விடும். பிரார்த்தனை
வேண்டாம், இவனின் ஒரு முனங்கல் போதும் அநீதமிழைத்தவனை அழித்துவிடும்.
அருமை நாயகம் (ஸல்)
அவர்கள் கூறினார்கள். ( اتَّقُوا الظُّلْمَ
فَإِنَّ الظُّلْمَ ظُلُمَاتٌ يَوْمَ الْقِيَامَةِ ) அநீதியிழைப்பதிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள்.
ஏனெனில், அநீதியானது மறுமைநாளில் பல இருள்களாக காட்சி தரும்.
அறிவிப்பாளர்:- ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் முஸ்லிம்-5034
கண்மணி பெருமானார்
(ஸல்) அவர்கள் கூறினார்கள். ( ثَلاَثُ
دَعَوَاتٍ مُسْتَجَابَاتٌ لاَ شَكَّ فِيهِنَّ دَعْوَةُ الْوَالِدِ وَدَعْوَةُ الْمُسَافِرِ
وَدَعْوَةُ الْمَظْلُومِ ) மூன்று பிரார்த்தனைகள் (இறைவனிடம்) ஏற்றுக்கொள்ளப்படுவதில்
எவ்விதச் சந்தேகமும் இல்லை. 1.தந்தை (தன் பிள்ளைக்கு எதிராக) செய்யும் பிரார்த்தனை. 2.பயணியின் பிரார்த்தனை. அநீதத்திற்குள்ளானவரின் பிரார்த்தனை. அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:-
அபூதாவூத்-1313, திர்மிதீ-3360, முஸ்னது அஹ்மத்-7510
அப்துல்லாஹ் பின்
அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. அண்ணல்
நபி (ஸல்) அவர்கள் முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு (கவர்னராக) அனுப்பி
வைத்தார்கள். அப்போது அண்ணலார், ( اتَّقِ دَعْوَةَ الْمَظْلُومِ، فَإِنَّهَا لَيْسَ بَيْنَهَا وَبَيْنَ
اللَّهِ حِجَابٌ ) "அநீதியிழைக்கப்பட்டவனின்
பிரார்த்தனையை அஞ்சுங்கள். ஏனெனில், அவர் செய்யும் பிரார்த்தனைக்கும்
அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை" என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-2448, முஸ்லிம்-29, திர்மிதீ-1937
அநீதி என்பது இரண்டு
பாவங்களை கொண்டிருக்கிறது. 1. பிற மனிதரின் உரிமையைப்
பறிப்பது; அல்லது அவரை அவமானப்படுத்துவது. 2. இறைவனுக்கு மாறு செய்யத் துணிவது. தடுக்க சக்தி
இல்லாத பலவீனமான மனிதனுக்குத்தான் பெரும்பாலும் அநீதியிழைக்கப்படுகிறது. எனவே, இது கடுமையான பாவமாக கருதப்படுகிறது. இதயத்தில்
ஈரமில்லாதவனே கொடுமைகள் செய்ய முன்வருவான். அவனது உள்ளம் இருட்டடைந்துவிடுகிறது. நல்வழி
என்ற வெளிச்சம் அதில் இருக்காது. இத்தகையவன் மறுமையில் இருளுக்கு மேல் இருளில் சிக்கித்
தவிப்பதுதான் சரியான தண்டனையாக இருக்கும். நூல்:- ஃபத்ஹுல் பாரீ
சில நேரத்தில் அநீதியிழைத்தவன் உறங்கிக் கொண்டிருப்பான். அநீதத்திற்குள்ளானவன் எழுந்து, அங்கத்தூய்மை (உளூ) செய்து, நூஹ் (அலை) அவர்கள் பிரார்த்தித்த தலைப்பில் கண்ட பிரார்த்தனையைக் கேட்பான். அநீதிக்கு ஆளானவனின் பிரார்த்தனை அல்லாஹ்விடம் சென்றடையும். அவன் தன் அடியானுக்கு உதவுமாறு வானவர்களுக்கு கட்டளையிடுவான்.
பொய் வழக்கு
சயீத் பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது. அர்வா பின் உவைஸ் என்ற பெண் எனக்குரிய வீட்டின் ஒரு பகுதி தொடர்பாக வழக்காடினாள். அப்போது நான், "அவளையும் அந்த வீட்டையும் விட்டு விடுங்கள். ஏனெனில், ( مَنْ أَخَذَ شِبْرًا مِنَ الأَرْضِ بِغَيْرِ حَقِّهِ طُوِّقَهُ فِي سَبْعِ أَرَضِينَ يَوْمَ الْقِيَامَةِ ) 'யார் நியாயமின்றி (பிறருக்குச் சொந்தமான) ஒரு சாண் நிலத்தைக் கைப்பற்றிக் கொள்கிறாரோ, அவரது கழுத்தில் மறுமைநாளில் அந்த நிலத்தி(ன் மேற்பகுதியி)லிருந்து ஏழு பூமிகள் வரை (செல்லும் பகுதி) மாலையாக மாட்டப்படும்' என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன். ( اَللَّهُمَّ إِنْ كَانَتْ كَاذِبَةً فَأَعْمِ بَصَرَهَا وَاجْعَلْ قَبْرَهَا فِي دَارِهَا ) "இறைவா! அவள் தனது வாதத்தில் பொய் சொல்பவளாக இருந்தால், அவளது பார்வையை பறித்துவிடு. அவளது சவக்குழியை அந்த வீட்டிலேயே அமைத்துவிடு" என்று கூறினேன்.
இந்த நபிமொழியை ஸைத்
(ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் முஹம்மது
(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: பின்னர் நான் அந்தப் பெண்ணை பார்வையற்றவளாகப் பார்த்தேன்.
அவள் சுவர்களைத் தடவிக்கொண்டு இருந்தாள். ( أَصَابَتْنِي
دَعْوَةُ سَعِيدِ بْنِ زَيْدٍ ) "சயீத் (ரலி) அவர்களின்
பிரார்த்தனை எனது விஷயத்தில் பலித்துவிட்டது" என்று கூறுவாள். இந்நிலையில் அவள்
(ஒருநாள்) தனது வீட்டில் நடந்து கொண்டிருந்தபோது வீட்டுக்குள் இருந்த கிணறு ஒன்றை
அவள் கடந்து சென்றாள். அப்போது அதில் அவள் (தவறி) விழுந்துவிட்டாள். அது அவளது சவக்குழியாக
அமைந்தது. நூல்:- முஸ்லிம்-3290
பிறர் சொத்தை அபகரிக்க
எண்ணி, பொய் வழக்கு போட்டு காரியம் சாதிக்க முயற்சிப்பவர்களின் இறுதிநிலை மிகவும் மோசமாக
இருக்கும் என்பதை மறந்துவிடக்கூடாது.
அநீதத்தால் பாதிக்கப்பட்டவர்களை
பொதுமக்களுக்கு மத்தியில் வைத்து அவமானப்படுத்தினால், அவர்கள் யாராக இருந்தாலும் சரியே, அவர்கள் சாபமிட்டால்
அது நிறைவேறிவிடும். ஒருவரை பஞ்சாயத்து அல்லது காவல் நிலையம், நீதிமன்றத்திற்கு இழுத்து பொதுமக்கள் முன்பு அவமானப்படுத்தி, அவர் உண்மையாளராக இருந்தால் அவமானப்படுத்தப்பட்ட அவருடைய வாயிலிருந்து வருகின்ற
சாப வார்த்தை நிச்சயமாக பழித்துவிடும்.
அவதூறு கூறாதே!
ஜாபிர் பின் சமுரா
(ரலி) அவர்கள் கூறியதாவது. (கூஃபாவின் ஆளுநர்) சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களைப்
பற்றி கூஃபாவாசிகள் (சிலர் ஜனாதிபதி) உமர் (ரலி) அவர்களிடம் முறையிட்டனர். சஅத் (ரலி)
அவர்கள் முறையாகத் தொழுவிப்பதில்லை என்பதும் அவர்களின் முறையீடுகளில் ஒன்றாக இருந்தது.
ஆகவே, உமர் (ரலி) அவர்கள் சஅத் (ரலி) அவர்களிடம் ஆளனுப்பி அவர்களை வரவழைத்து
இதைப் பற்றி விசாரித்தார்கள்.
அதற்கு சஅத் (ரலி)
அவர்கள்,
"அல்லாஹ்வின் மீதாணையாக! அண்ணல்
நபி (ஸல்) அவர்கள் தொழுது காட்டிய முறைப்படியே நான் அவர்களுக்கு தொழுவித்துவந்தேன்.
அதில் நான் எந்த ஒன்றையும் குறை வைக்கவில்லை" என்று பதிலளித்தார்கள். இதையொட்டி
உமர் (ரலி) அவர்கள் ஒருவரை சஅத் (ரலி அவர்களுடன் கூஃபாவுக்கு அனுப்பிவைத்து, சஅத் (ரலி) அவர்கள் தொடர்பாக கூஃபாவாசிகளிடம் விசாரணை
நடத்தினார்கள். விசாரிக்கச் சென்றவர் கூஃபாவாசிகளிடம் விசாரணை மேற்கொண்டார். (கூஃபாவிலிருந்த)
ஒரு பள்ளிவாசல் விடாமல் எல்லாவற்றிலும் அவரைப்பற்றி விசாரித்தார். அனைவரும் சஅத்
(ரலி) அவர்களை மெச்சி நல்ல விதமாகவே கூறினர்.
இறுதியில் உசாமா பின்
கத்தாதா என்பவர் எழுந்து, எங்களிடம் நீங்கள்
வேண்டிக் கொண்டதன் பேரில் நான் (எனது கருத்தைக்) கூறுகிறேன்: "சஅத் அவர்கள் (தாம்
அனுப்பும்) படைப் பிரிவுடன் தாம் செல்லமாட்டார். (பொருட்களை) சமமாகப் பங்கிடமாட்டார்.
தீர்ப்பளிக்கும்போது நீதியாக நடக்க மாட்டார்" என்று (அவதூறு) கூறினார்.
இதைக் கேட்ட சஅத்
(ரலி) அவர்கள், ( أَمَا وَاللَّهِ لأَدْعُوَنَّ بِثَلاَثٍ،
اللَّهُمَّ إِنْ كَانَ عَبْدُكَ هَذَا كَاذِبًا، قَامَ رِيَاءً وَسُمْعَةً فَأَطِلْ
عُمْرَهُ، وَأَطِلْ فَقْرَهُ، وَعَرِّضْهُ بِالْفِتَنِ ) "அறிந்துகொள்ளுங்கள்: அல்லாஹ்வின் மீது சத்தியமாக
மூன்று பிரார்த்தனைகளை நான் செய்யப் போகிறேன்" என்று கூறிவிட்டு, "இறைவா! உன்னுடைய இந்த அடியார் (என்னைப் பற்றிக்
கூறிய குற்றச்சாட்டில்) பொய் சொல்லியிருந்தால், பகட்டாகவும் புகழுக்காகவும்
அவர் இவ்வாறு குறை கூற முன்வந்திருந்தால், அவரது வாழ்நாளை நீட்டி
(அவரை தள்ளாமையில் வாட்டி) விடுவாயாக! அவரது ஏழ்மையையும் நீட்டுவாயாக! அவரைப் பல சோதனைகளுக்கு
ஆளாக்குவாயாக!" என்று பிரார்த்தனை புரிந்தார்கள்.
இதன் அறிவிப்பாளரான
அப்துல் மலிக் பின் உமைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: பின்னர் (சஅத் அவர்கள் மீது
பொய்யான குற்றச்சாட்டுகளைச் சொன்ன அந்த மனிதர் பல சோதனைகளுக்கு உள்ளானார்.) அவரிடம்
(நலம்) விசாரிக்கப்பட்டால், ( شَيْخٌ كَبِيرٌ مَفْتُونٌ،
أَصَابَتْنِي دَعْوَةُ سَعْدٍ )
“நான் சோதனைக்குள்ளான முதுபெரும் வயோதிகனாக இருக்கிறேன்; சஅத் அவர்களின் பிரார்த்தனை என் விஷயத்தில் பலித்து
விட்டது" என்று கூறுவார்.
மேலும், அப்துல் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: பின்னாளில்
அவரை நான் பார்த்திருக்கிறேன். முதுமையினால் அவருடைய புருவங்கள் அவருடைய கண்கள் மீது
விழுந்து விட்டிருந்தன. அவர் சாலைகளில் செல்லும் அடிமைப் பெண்களிடம் சில்மிஷம் செய்பவராக
இருந்தார். நூல்:- புகாரீ-755
உஹதுப் போர் அன்று
அருமை நாயகம் (ஸல்) அவர்கள், இறைவா! சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களின் பிரார்த்தனையை
ஏற்றுக் கொள்வாயாக! அவரது அம்பை குறிக்கும் இடத்தில் சரியாக விழச் செய்வாயாக! என்று
அவருக்காக பிரார்த்தனை செய்துள்ளார்கள். அண்ணலாரின் பிரார்த்தனையின் சிறப்பினால் பிரார்த்தனை
உடனடியாக அங்கீகரிக்கப்படுமளவு முக்கியமானவர்களில் ஒருவராக சஅத் (ரலி) அவர்களை அல்லாஹ்
ஆக்கிவிட்டான். மக்கள் அவர்களிடம் தங்களின் நலனுக்காக பிரார்த்திக்குமாறு வேண்டுவார்கள்.
அவர்களின் (பத்துஆ) கெட்ட பிரார்த்தனையில் இருந்து பயந்து கொண்டிருப்பார்கள்.
பிறரின் நற்பெயருக்குக்
களங்கம் விளைவித்து, அதன்மூலம் தன் பெயரை நிலைநாட்ட எண்ணும் குழப்பவாதிகள், என்றாவது ஒருநாள் கேவலத்திற்கு ஆளாவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
மாளிகை மண்ணோடு மண்ணானது
நிச்சயமாக அல்லாஹ்
அநீதியாளர்களை நேசிப்பதில்லை. திருக்குர்ஆன்:- 42:40
தவ்ராத் வேத அறிஞரும், தாபிஈன்களில் ஒருவருமாகிய வஹப் பின் முனப்பஹ் (ரஹ்)
கூறியதாவது. முன்னொரு காலத்தில் ஒரு மன்னன் இருந்தான். அவன் ஒரு மாளிகையைக் கட்டினான்.
அந்த அழகிய மாளிகைக்குப் பக்கத்தில் ஒரு கிழவியின் குடிசை இருந்தது. மன்னன் அதை விலைக்குத்
தரும்படி கேட்டான். அவள் கொடுக்கவில்லை. அக்குடிசை தன்னுடைய மாளிகையின் அழகை கெடுத்து
கொண்டிருந்தது என்று எண்ணி, எப்படியாவது அக்குடிசையை
இல்லாமலாக்க வேண்டுமென மன்னன் உறுதிபூண்டான். ஒருநாள் கிழவி வெளியூருக்குப் போன சந்தர்ப்பத்தைப்
பயன்படுத்தி மன்னன் குடிசையை அழித்துவிட்டான்.
திரும்பி வந்த கிழவி
குடிசையைக் காணாது திகைத்தாள். வானத்தை நோக்கி தலையை உயர்த்தியவாறு, "எல்லா உலகையும் படைத்தாளும் இரட்சகனே! நான் வெளியூர்
சென்றிருந்தேன், நீ எங்கு சென்றாய்? எனக்கு இழைக்கப்பட்ட இந்த அநியாயத்தை நீ ஏன் தடுக்கவில்லை? என கேட்டாள். உடனே அல்லாஹ், வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்களை அனுப்பி மன்னனின்
மாளிகையை மண்ணோடு மண்ணாகும்படி கட்டளையிட்டான். அக்கணமே மாளிகையை இருந்த இடம் தெரியாமல்
அழிக்கப்பட்டுவிட்டது. நூல்:- அல்கபாஇர் இமாம்
அத்தஹபீ
பேரறிஞர் அலீ (ரலி), இமாம் ஷாபிஈ (ரஹ்) போன்றோர் கூறியதாவது. ( تَنَامُ عَینُكَ وَالمَظلُومُ مُنتَبِهٌ یَدعُو عَلَیكَ وَعَینُ اللّٰهِ
لَم تَنَمِ ) உமது கண்கள் உறங்கினாலும்
உன்னால் அநியாயம் செய்யப்பட்டவன் உறங்குவதில்லை. அப்போது அவன், ஒருபோதும் உறங்காத அல்லாஹ்விடம் உனக்கெதிராகப் பிரார்த்தனை செய்கிறான்.
அல்லாஹ் மனிதனுக்கு
கல்வி, பொருள், பதவி ஆகியவற்றை ஆக்கத்திற்கு
கொடுக்கின்றான். ஆனால், மனிதன் அதைக்கொண்டு அநியாயம் செய்து அழிவுக்கு காரணமாக்கிக்
கொள்கிறான்.
திருக்குர்ஆனை நன்கு ஆய்வு செய்தால் ஒரு விஷயம் தெளிவாகத் தெரியும். "இணைவைத்த காரணத்தினால் ஒரு சமுதாயத்தை அழித்தோம்" என்ற வசனங்களைவிட "அவர்கள் அநியாயக்காரர்களாக இருந்தார்கள். எனவே, அவர்களை அழித்தோம்" எனும் வசனங்கள்தாம் அதிகம் இருக்கும்.
ஒரு தனி மனிதனோ, ஒரு சமுதாயமோ அவர்கள் அழிவை நோக்கிச் செல்கிறார்கள்
என்பதற்கான அறிகுறி, அவர்கள் எல்லைமீறி அடக்குமுறைகளையும் அநீதிகளையும் நிகழ்த்துவதுதான்.
ஹஜ்ஜாஜின்
இறுதிநிலை
பல நூறு பேர்களை (பல நபித்தோழர்கள் உட்பட) கொன்று குவித்து அநீதமிழைத்த ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப் என்பவன், தாபிஈன்களில் ஒருவரான அநீதிக்கு எதிராக பொங்கி எழுந்த பேரறிஞர் சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்களை அரண்மனைக்கு இழுத்து வரசெய்து, அன்னாரைக் கொல்வதற்கு ஆயத்தமானபோது, அன்னார் தமது இறுதி பிரார்த்தனையாக, ( اَللّٰهُمَّ لَا تُسَلِّط الحَجَّاجَ عَلَی اَحَدٍ بَعدِي ) “இறைவா! "எனக்குப் பின் யார் மீதும் ஹஜ்ஜாஜைச் சாட்டிவிடாதே!" பிரார்த்தித்தார்கள்.
ஆம்! சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்களின் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக்கொண்டான்.
சயீத் (ரஹ்) அவர்கள் கொல்லப்பட்ட பின், ஹஜ்ஜாஜ் கடுமையான காய்ச்சலால் பீடிக்கப்பட்டு அவதிப்பட்டான். ஒவ்வொரு இரவும் படுக்கையில் ஹஜ்ஜாஜ் ஓலமிடுவான். தூக்கமின்றி தவிப்பான். சயீத் பின் ஜுபைர் என்னைத் தூங்கவிடாமல் செய்துவிட்டாரே எனக் கத்துவான்.
சயீத் (ரஹ்) அவர்கள்
மரணித்து மிகச் சரியாக பதினைந்தாம் நாள் ஹஜ்ஜாஜ் அச்சத்திலேயே மரணமடைந்தான். சயீத்
(ரஹ்) அவர்கள் பிரார்த்தித்தவாறு அன்னாருக்குப் பின் யார் மீதும் அல்லாஹ் ஹஜ்ஜாஜை சாட்டவில்லை.
நூல்:- சுவரும் ஹயாத்தித் தாபிஈன்
ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப்
தனது காவலில் வைத்து கொலை செய்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து இருபதாயிரத்தை எட்டியது.
என (அறிஞர்கள்) கணக்கிட்டுள்ளனர். நூல்:- திர்மிதீ-2146
ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப்
அஸ்ஸகஃபீ என்பவர் ஹிஜ்ரீ 45 ஆம் ஆண்டு (கி.பி.665) தாயிஃப் நகரில் பிறந்தார். உமைய்யா ஆட்சியாளர்களில் ஒருவரான மர்வானுடனும் பின்னர்
அவர் மகன் அப்துல் மலிக் பின் மர்வானுடனும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். அப்துல்
மலிக் பின் மர்வான் (ஹிஜ்ரீ 65, கி.பி. 685) ஆட்சி காலத்தில் புனித நகரங்களான மக்காவுக்கும்
மதீனாவுக்கும் ஹஜ்ஜாஜ் ஆட்சியராக நியமிக்கப்பட்டார். பின்னர் ஈராக்கின் ஆட்சியாளரானார்.
ஹஜ்ஜாஜ் 25 ஆண்டு கால ஆட்சியில் பல கொடுமைகளை அரங்கேற்றினார். அவர் ஹிஜ்ரீ 75 ஆம் ஆண்டு
(கி.பி. 695) 'வாசித்' நகரில் தமது 54 ஆம்
வயதில் மரணித்தார்.
சிறைக்கொடுமை
அபூகாலித் பின் யஹ்யா
அல்பர்மகி என்பவர் கலீஃபா ஹாரூன் ரஷீத் அவர்களுக்கு பாலூட்டிய பெண்ணின் கணவர் ஆவார்.
ஒருவகையில் கலீஃபா ஹாரூன் ரஷீத் அவர்களின் வளர்ப்புத் தந்தை ஆகும். ஹாரூன் ரஷீத் அவர்களிடம்
இவருக்குப் பெரும் செல்வாக்கு இருந்தது. கலீஃபா இவரை மிகுந்த கண்ணியத்துடன் நடத்தினார்.
எண்பது வயதைக் கடந்த முதியவர். வசதி வாய்ப்பு மிக்க செல்வச் சீமான்.
கலீஃபா ஹாரூன் ரஷீத்
ஒரு நாள் திடீரென இவரையும் இவருடைய மகன் காலிதையும் கைது செய்து சிறையில் அடைத்தார்.
அத்துடன் நிற்கவில்லை. இவருடைய ஏனைய குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் மரணதண்டனை
வழங்கியதோடு, அவரது செல்வம் முழுவதையும்
பிடுங்கி (பைத்துல்மால் எனும்) பொதுச் சொத்தில் சேர்த்தார்.
காலித் தந்தை மீது
அதிகப் பாசம் கொண்டவர். அது குளிர்காலம். எனவே, சிறைக்குள் இருக்கும்
தண்ணீர் மிகவும் குளிராக இருந்தது. அதில் (உளூ எனும்) அங்கத்தூய்மை போது செய்ய இயலாது.
அங்கு அடுப்போ விறகோ எதுவும் இருக்காது. ஆயினும், சிறையில் தந்தை சிரமப்படக் கூடாது
என்பதற்காக மகன் வியப்புக்குரிய செயலைச் செய்வார். ஒவ்வொரு நாளும் ஒரு பாத்திரத்தில்
தண்ணீர் எடுத்து முகட்டில் தொங்கவிடப்பட்டிருக்கும் விளக்கு வெளிச்சத்தில் பாத்திரத்தைக்
காட்டி இரவெல்லாம் சூடு பண்ணுவார். அதிகாலை பாங்கு சொல்லும் வரை அவ்வாறு செய்வார்.
அப்போதுதான் அந்த தண்ணீர் கொஞ்சமாவது குளிர் விட்டுப் போயிருக்கும். பின்னர் அந்தத்
தண்ணீரை அங்கத்தூய்மை செய்வதற்காக தந்தையிடம் கொடுப்பார்.
சிறையில் வசதிகளை
அனுபவிப்பதை அணுவளவும் அனுமதிக்காத சிறை அதிகாரிகள் அந்த விளக்கையும் ஒருநாள் அங்கிருந்து
அகற்றினர். ஆனால் தந்தைக்குச் செய்யும் பணிவிடையை மகன் நிறுத்தவில்லை. ஒரு தோல் பாத்திரத்தில்
தண்ணீர் எடுத்து தமது வயிற்றுப் பகுதியின் ஆடையை விலக்கி வயிற்றுக்கும் தொடைக்கும்
இடையே அந்தத் தண்ணீர்ப் பாத்திரத்தை வைத்தவாறு அதிகாலை பாங்கு சொல்லும் வரை சுவரில்
சாய்ந்து அமர்ந்து கொள்வார். காலையில் அந்தத் தண்ணீரை தந்தைக்குக் கொடுப்பார்.
இந்த அளவுக்கு அன்புடனும்
பாசத்துடனும் நடந்து கொள்ளும் குடும்பம் ஏன் சிறையில் வாடுகிறது? மனைவி மக்கள் சேர்த்து
வைத்த செல்வம் என அனைத்தையும் இழந்து தந்தையும் மகனும் மட்டும் ஏன் தனிமைச் சிறையில்
கைதிகளாக அடைக்கப்பட்டனர்? மனதில் கேள்வி எழத்தான்
செய்கிறது.
இந்தக் கேள்வியை மகனே
ஒருநாள் தந்தையிடம் கேட்டார். அருமைத் தந்தையே! நமக்கு ஏன் இந்த இழிநிலை? இதற்கான காரணம் என்ன? நாம் என்ன தவறு செய்தோம்?
தந்தை கூறினார்: அருமை
மகனே! நம்மால் அநீதிக்குள்ளானவர் நமக்கெதிராக நடுநிசியில் கேட்ட பிரார்த்தனையின் பிரதிபலன்
தான் இது. நாம் நிம்மதியாக தூங்கினோம். ஆனால், நம்மால் அநீதிக்குள்ளானவர்
தூங்கவில்லை. நாம் அவரை மறந்தோம். ஆனால், அல்லாஹ் மறக்கவில்லை.
நமது வாசல்கள் அடைக்கப்பட்டன. ஆனால், வானத்தின் வாசல்கள்
திறந்தே இருந்தன.
பிறகு, சிறையிலேயே அந்த முதியவரின் உயிர் பிரிந்தது. ஒருமுறை ஹாரூன் ரஷீத் அவர்களிடம், "உங்கள் வளர்ப்பு தந்தையோடு
ஏன் இவ்வாறு நடந்து கொண்டீர்கள்?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், "அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஏன் இவ்வாறு செய்தேன்
என்பதை எனது வலக்கை அறிந்தால்கூட அந்த கையையும் நான் துண்டிப்பேன்" என்றார்.
ஹாரூன் ரஷீத் ஏன்
தமது வளர்ப்புத் தந்தையைச் சிறை வைத்தார்? அவருடைய ஏனைய குடும்ப
உறுப்பினர்களுக்கு ஏன் மரண தண்டனை வழங்கினார்? அப்படி அவர்கள் யாருக்கு
என்ன அநீதி இழைத்தவர்கள் என்பதற்கான காரணம் இன்றுவரை அறியப்படவில்லை.
உலகில் சில நேரங்களில்
அநீதியாளர்களுக்கு கிடைக்கும் இது போன்ற தண்டனைகளுக்கு பின்னால் ஏதோவொரு விடை தெரியாத
காரணம் இருக்கத்தான் செய்கிறது. அல்லாஹ்வே மிக அறிந்தவன்.
அநீதி இழைத்தவர் நிம்மதியாய்
இரவில் தூங்கலாம். ஆனால், அநீதி இழைக்கப்பட்டவர்
இரவில் தூங்குவதில்லை. அவரது கைகள் எப்போதும் தன்னை நோக்கி உயரும் என இறைவனும் காத்திருக்கிறான்.
திடீரென வியாபாரத்தில்
ஏற்படும் பெரும் இழப்பு, உடனடியாக முடிந்திருக்க
வேண்டிய எத்தனையோ பணிகள் எவ்வித காரணமுமின்றி தாமதமாகுதல், மனைவி பிள்ளைகள் மூலம் ஏற்படும் நிம்மதியின்மை, நெஞ்சுக்குள் எப்போதும் இருக்கும் ஒருவித எரிச்சல், எவ்வித காரணமும் இல்லாமல் ஏற்படும் தலைவலி மற்றும் மன உளைச்சல் ஆகியவை எல்லாம் அநீதி இழைக்கப்பட்ட யாரோ ஒருவர்
கேட்ட பிரார்த்தனையின் விளைவு ஆக இருக்கக்கூடும். எந்த வகையில் நாம் அநீதமிழைத்தோம்
என்பதைக்கூட நாம் மறந்திருப்போம். ஆனால், அல்லாஹ் ஒருபோதும்
மறப்பதில்லையே!
வன்கொடுமை
கப்பாப் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதற்காக அவரின் எஜமானியும், குறைஷித் தலைவர்களும் செய்த வன்கொடுமைகள் ஏராளம்.
ஒருநாள் கப்பாப் (ரலி) அவர்களுக்கு கடுமையான சித்ரவதை செய்யப்பட்டுக்கொண்டிருந்தபோது, இதைப்பார்த்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர் அருகே சென்று ஆறுதல்மொழி கூறி அவருக்கு தெம்பூட்டிவிட்டு சென்றார்கள்.
இதைப் பொறுக்க முடியாத கொடுமைக்காரி உம்மு அன்மார், பட்டறைக்கல்லில் இருந்து பழுக்கக் காய்ச்சப்பட்ட இரும்புக் கம்பியொன்றை எடுத்து வந்து கப்பாப் (ரலி) அவர்களின் தலையில் சூடு போட்டாள். இதை தினசரி வழக்கமாகவே ஆக்கிக்கொண்டாள்.
கப்பாப் (ரலி) அவர்கள் இந்த வேதனை தாளாமல் சுய நினைவு இழந்தவராக மயக்கமுற்று கீழே வீழ்ந்தார்கள். இதன்பிறகு அந்த கொடுமைக்காரி உம்மு அன்மாருக்கு எதிராக பிரார்த்திக்கப்பட்டது.
அதன் விளைவு, மறுநாள் உம்மு அன்மாருக்கு தாங்க முடியாத அளவுக்கு கடுமையான தலைவலி ஏற்பட்டது. அது நாளுக்கு நாள் தீவிரமானதே தவிர, குறையவில்லை. இதற்கான காரணமும் புரியவில்லை.
எனவே, அதற்குண்டான அனைத்து வைத்தியங்களையும் செய்து பார்த்தாள். அதனால் கடுகளவுகூட எந்த பயனுமில்லை. அதன் வேதனை தாங்கமுடியாமல் அவள் கத்தும்போது அவளின் குரல் நாயின் குரைத்தலாக மாறிப்போனது. மக்களெல்லாம் அவளிடமிருந்து விலகிக்கொண்டனர்.
கடைசியாக ஒரு வைத்தியர் வந்து, "இந்தப் பிரச்சனைக்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது என்று சொல்லிவிட்டு, பழுக்கக் காய்ச்சப்பட்ட இரும்புக் கம்பியால் தலையில் சூடு போட்டால் இது சரியாகிவிடலாம்" என்றார். எனவே, அதையும் செய்துவிடலாம் என்று முடிவு செய்தாள். அவள் நாள்தோறும் கொல்லன் பட்டறைக்குச் செல்வாள். பழுக்கக் காய்ச்சப்பட்ட இரும்புக் கம்பியால் தம் தலையில் சூடு வைக்க சொல்லுவாள். அவ்வாறே வைக்கப்பட்டது. கடைசியாக அதன் காரணமாகவே அவள் இறந்தும் போனாள்.
கேட்க ஆளில்லாத அப்பாவி
மக்களை வன்கொடுமைக்கு ஆளாக்குவோர், நிச்சயமாக சொல்லொணா
துயரங்களுக்கு ஆளாவார்கள். அதில் சந்தேகமில்லை. அவர்களுக்கு ஏற்படும் துயரங்கள் வெளி
உலகுக்கு தெரியாமல்கூட போகலாம். அல்லது மறைக்கப்படலாம். ஆனால், செய்தது செய்யப்படும் என்பது உறுதி.
தனி மனிதனோ அல்லது
ஆட்சியாளர்களோ யாராக இருந்தாலும் சரி, அநீதமிழைத்தால் அதற்கான
பின்விளைவுகளை அனுபவித்தே ஆகவேண்டும்.
உரியவரிடம்
பரிகாரம் தேடினால்...
சவூதி அரேபியாவைச் சேர்ந்த அறிஞர் முஹம்மத் அப்துர் ரஹ்மான் அல்அரீஃபீ அவர்கள் கூறுகிறார்கள். எனது நண்பர் ஒருவர் குர்ஆன் முழுவதையும் மனனம் செய்தவர். மிகுந்த இறையச்சமுடையவர். குர்ஆனைக்கொண்டு ஓதிப்பார்ப்பதில் தேர்ச்சிப்பெற்றவர்.
ஒருமுறை என்னிடம் அவர் தமது அனுபவம் ஒன்றை கூறினார்: என்னிடம் மிகப் பெரிய ஓர் வியாபாரி வந்து, "ஹள்ரத்! எனது இடக்கையில் மிகுந்த வலியாக உள்ளது. என்னால் இரவில் தூங்க முடியவில்லை. பகலில் சற்று இளைப்பாறகூட முடியவில்லை. இதற்காக நான் நிறைய மருத்துவர்களை ஆலோசித்து, நிறைய மருந்துகளையும் உட்கொண்டுவிட்டேன். அதனால் எந்த பயனும் கிடைக்கவில்லை. வலிதான் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இது எனது வாழ்க்கையையே துன்பமாக ஆக்கிவிட்டது. என்மீது கண்ணேறு பட்டிருக்கலாமோ, அல்லது என்மீது யாராவது மந்திரித்து ஊதிவிட்டிருக்கலாமோ என்று அஞ்சுகிறேன்" என்றார்.
நான் குர்ஆனின் பல
வசனங்களைகொண்டு ஓதிவிட்டேன். இருப்பினும் அவருடைய நிலையில் மாற்றமில்லை. அவர் எனக்கு
நன்றி சொல்லிவிட்டு சென்றுவிட்டார். இதே போன்று மூன்று முறை என்னிடத்தில் ஓதி பார்ப்பதற்கு
வந்தார். நானும் எனக்குத்தெரிந்த வசனங்களையெல்லாம் ஓதிவிட்டு பார்த்தேன். இருப்பினும்
அவருடைய நிலையில் மாற்றமில்லை. அவருடைய வலி மட்டும் அதிகரித்துக்கொண்டே போனது.
பிறகு இறுதியாக நான் அவரிடம், "உங்களுடைய இந்த வலி, நீங்கள் ஏற்கனவே செய்துவிட்ட பாவங்களுக்கான தண்டனையாக இருக்கலாம்; அல்லது நீங்கள் பலவீனர் யாருக்காவது அநியாயம் செய்திருக்கலாம்; அல்லது யாருடைய உரிமையையாவது பறித்திருக்கலாம்; அல்லது வேறு ஏதேனும் தவறு செய்திருந்தால் அதற்காக உடனடியாக அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கேட்டுவிட்டு, நீங்கள் பிறரிடமிருந்து பறித்துக்கொண்ட உரிமைகளை அவர்களுக்கு உரிய முறையில் வழங்கி விடுங்கள்; உங்களுடைய கடந்த காலப் பாவங்கள் அனைத்திற்கும் அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேடுங்கள்" என்று கூறினேன்.
நான் சொன்னதை விரும்பாத அந்த வியாபாரி, "நான் ஒருபோதும் யாருக்கும் அநியாயம் செய்யவில்லை; யாருடைய உரிமையிலும் வரம்புமீறவில்லை" என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.
பல நாட்களுக்குப்
பிறகு நான் அவரை ஒரு முறை சந்தித்தேன். அவர் எந்த மருந்தும் சிகிச்சையும் இல்லாமல்
தமது கை நலமாகிவிட்டதாக தெரிவித்தார். "அது எப்படி?" என்றேன். அவர், ஹள்ரத்! நீங்கள் கூறியவற்றை நான் ஆழமாக சிந்தித்தேன்.
அப்போது என்னுடைய நினைவுக்கு ஒன்று வந்தது.
அதாவது, நான் எனது
வீட்டை மாளிகையைப் போன்று கட்டிக்கொண்டிருந்தபோது எனது அந்த வீட்டுக்கு அருகில் ஒரு
துண்டு நிலம் இருந்தது. நான் அதையும் என் நிலத்தோடு சேர்த்துக் கொண்டு என் வீட்டை மேலும்
அழகுபடுத்த விரும்பினேன். அந்தத் துண்டு நிலம் ஒரு விதவைப் பெண்ணுக்குரியதாக இருந்தது.
நான் அந்த நிலத்தை அப்பெண்ணிடம் விலைக்கு கேட்டேன். ஆனால், அப்பெண் தர மறுத்துவிட்டாள். இறுதியாக நான் என்
அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த துண்டு நிலத்தையும் கைப்பற்றிவிட்டேன். பிறகு அவள் அந்த
நிலத்திற்கு அடிக்கடி வந்து, அங்கு கட்டடப் பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்களிடம் சத்தமிடுவாள்.
அவர்களை வேலை செய்யவிடாமல் தடுக்க முயல்வாள். ஆனால், அவர்களோ அவளைப் பைத்தியக்காரி என நினைத்து கேலி
செய்வார்கள். அவள் அங்கு வந்து அழுவாள். வானத்தை நோக்கிக் கைகளை ஏந்துவாள். நான் அதை
என் கண்களால் கண்டுள்ளேன்.
ஒருவேளை அவள் இருள்
சூழ்ந்த இரவுகளில் எனக்கு எதிராக செய்த பிரார்த்தனைதான் மிகக் கடுமையாக என்னை பாதித்துவிட்டது
என்று நினைத்தேன். அவளைத் தேடி அலைந்து ஒரு வழியாக அவளைக் கண்டுபிடித்துவிட்டேன். நான்
அவளை சந்தித்து, அழுது, என்னை மன்னிக்குமாறு கெஞ்சினேன். அவருடைய நிலத்திற்கான
அபராதத் தொகையை அவள் பெற்றுக்கொள்ளச் சம்மதிக்கும் வரை, நான் அங்கேயே அமர்ந்துவிட்டேன்.
பிறகு அவள் என்னை மன்னித்து எனக்காகப் பிரார்த்தனை செய்தாள். அல்லாஹ்வின் மீதாணையாக!
அவள் பிரார்த்தனைக்குப்பின் தன் கைகளைக் கீழே போட்டதும் என் கைகள் நலமடைந்ததை உணர்ந்தேன்.
மேலும், அவளுடைய பிரார்த்தனைதான்
எந்த மருந்தும் குணப்படுத்த முடியாத என் கைகளைக் குணப்படுத்தியது" என மன உருக்கத்தோடு கூறினார். நூல்:- இஸ்தம்திஃ பிஹயாதிக்க பக்கம்-238
எனவே, நாம் யாருக்கும் அநீதமிழைத்துவிடாமல் நம்மை தற்காத்து கொள்ள வேண்டும். அப்படியே
நாம் ஏதோ ஒரு சூழ்நிலையில் அநீதமிழைத்துவிட்டாலும்கூட உடனே உஷாராகி அவனிடம் உரிய வகையில்
மன்னிப்பு தேடிட வேண்டும். அவன் மனதார மன்னித்துவிட்டால் தப்பித்தோம். இல்லையெனில், நம் நிலை படுமோசமாகி விடும் என்பதில் கவனம் தேவை.
நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் கூறினார்கள். ( مَنْ دَعَا عَلَى مَنْ
ظَلَمَهُ فَقَدِ انْتَصَرَ ) தனக்கு அநீதி செய்தவருக்கு
எதிராகப் பிரார்த்தித்தவர் (அவரை) பழி வாங்கிவிட்டார். அறிவிப்பாளர்:- ஆயிஷா (ரலி)
அவர்கள் நூல்:- திர்மிதீ-3465
அநீதமிழைக்கப்பட்டவர் அநீதமிழைத்தவரை பலி வாங்க அடிக்க வேண்டாம், குத்த வேண்டாம், ஏசிபேசி கத்தி கூச்சல் போட வேண்டாம். மாறாக, சிறியதொரு சாப வார்த்தை வெளியிட்டால் போதும். முழுமையாக பலி வாங்கப்பட்டது என்று பொருள். சாபம் பெற்றவன் நிச்சயமாக ஒருநாள் நஷ்டத்தை சந்திப்பான். இதையே இந்த நபிமொழியின் கருத்து.
"உப்பு திண்டவன்
தண்ணீர் குடித்துத்தான் ஆகவேண்டும். தப்பு செய்தவன் தண்டனை அனுபவிக்க வேண்டும்"
என்பது கிராமத்துச் சொல்வழக்கு.
நாம் சாபத்திற்குள்ளாக்கும்
காரியங்களை விட்டும் தவிர்ந்திருக்க வேண்டும். சாப வார்த்தை மிகவும் வீரியமானது. குறிப்பாக
யாருக்கும் பொருள் ரீதியாகவோ, உடல் ரீதியாகவோ, மனரீதியாகவோ அநீதம் செய்வதை விட்டும் தவிர்ந்திருக்க
வேண்டும்.
பிறரின் சாபத்திற்கு
நாம் ஆளாகிவிடாமலும், நாமும் பிறரை சபித்துவிடாமலும்
அல்லாஹுத்தஆலா நம்மை பாதுக்காப்பானாக! ஆமீன்!
மௌலவி, மு.முஹம்மது ஹைதர் அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951
This comment has been removed by the author.
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு
ReplyDeleteமாஷா அல்லாஹ் அருமையான விளக்கம்
சிறந்த வழிகாட்டுதல்
எளிய முறையில்
புரியும் விதத்தில்
அற்புதமான கட்டுரை
கட்டுரை படிக்கும் பொழுது ஒவ்வொரு உணர்த்துதலான செய்திகளிலும் உள்ளத்தில் ஆழமாக அச்சம் ஏற்படுகிறது.
வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் பிறருடைய நிலையில் அதீத கவனத்தோடு நாம் நடந்து கொள்ள வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வு ஆழமாகவே உள்ளத்தில் பதிந்து விடுகிறது
இன்ஷா அல்லாஹ் இந்த கட்டுரை பல்லாயிரம் மக்கள் செவிகளில் உலமாக்களின் வாயிலாக சிறந்த முறையில் அல்லாஹ் கேட்க செய்வானாக
பல்லாயிரம் மக்களுடைய உள்ளத்தில் இறுதி மூச்சு உரையிலும் இந்த அச்ச உணர்வுகள் இருந்து ஒருவருக்கும் அநீதம் செய்யாமல் உள்ளச்சத்தோடு உயர்ந்த மனிதர்களாக வாழ அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக
ஹைதர் அலி இம்தாதி ஹழ்ரத் பெருந்தகை அவர்களுக்கு
அல்லாஹ் கல்வி ஞானத்திலும் பரிபூரண ஆரோக்கியத்திலும் நீண்ட ஆயுளிலும் பரக்கத் செய்து காலமெல்லாம் நிறைய நல் வழிகாட்டுதலை இச்சமூகத்திற்கு எழுத்தின் வழியாகவும்
பயான் மற்றும் வாழ்வியலில் வாழ்ந்து காட்டும் வழியாகவும் வழங்கி நல்லருள் புரிவானாக
இந்தக் கட்டுரையை வாசிக்க கூடிய வாசித்து மக்களுக்கு எடுத்துச் சொல்லக்கூடிய ஒவ்வொருவருக்கும் இந்த
நற்கியத்தை அல்லாஹ் வழங்குவானாக
ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன் 🤲