Search This Blog

Tuesday, 21 September 2021

பராஅத் இரவு

 

பராஅத் இரவு


إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةٍ مُبَارَكَةٍ إِنَّا كُنَّا مُنْذِرِينَ فِيهَا يُفْرَقُ كُلُّ أَمْرٍ حَكِيمٍ


நிச்சயமாக இதனை அருள்வளம் மிகுந்த ஓர் இரவில் (முதல் முறையாக) இறக்கி வைத்து, நிச்சயமாக நாம் (இதன் மூலம்) அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றோம். உறுதியான எல்லா காரியங்களும் அதில்தான் நம்முடைய கட்டளையின்படி (நிர்மாணிக்கப்பட்டு) பிரித்துக் கொடுக்கப் படுகின்றன.     திருக்குர்ஆன்:- 44:3,4


மனித வாழ்க்கைக்கு நிம்மதி என்பது மிகவும் அத்தியாவசியமான தேவை என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இல்லை.


அந்த நிம்மதியைப் அடைந்து கொள்ள இன்றியமையாத மூன்று அம்சங்களை மனிதன் பெற்றிருப்பது அவசியமாகும் அவை.


1. வளமான (ரிஸ்க் எனும்) வாழ்வாதாரம். 2. அதை அனுபவிப்பதற்கு தேவையான ஆரோக்கியமான நீண்ட ஆயுள். 3. நோய் நொடிகள், கஷ்டங்கள், துன்பங்கள், ஆபத்துகள் இல்லாத சூழ்நிலை ஆகியவைகளாகும்.


ஒரு மனிதனுக்கு இம்மூன்றில் ஒன்று பூரணமாகக் கிடைத்து, மற்ற இரண்டும் கிடைக்கவில்லை என்றாலும், அல்லது, இம்மூன்றில் இரண்டு கிடைத்து ஒன்று கிடைக்கவில்லை என்றாலும் நிம்மதி என்பது கேள்விக்குறியே!


ஓர் இறைநம்பிக்கையாளனைப் பொறுத்த வரையில் இம்மூன்றுமே கிடைக்கப் பெறுவது என்பது இறைவன் வழங்கும் இனிய அருட்கொடைகள் ஆகும்.


ஆகவே தான், பராஅத் இரவு அன்று இம்மூன்று அம்சங்களையும் முன்வைத்து, மூன்று யாசீன் ஓதி எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் முறையிடும் அழகிய வழிமுறையை நம் முன்னோர்கள் ஏற்படுத்தி இருக்கின்றார்கள். இது கட்டாயமாக்கப்பட்டதல்ல. விரும்பியவர்கள் ஓதலாம். மூன்று யாசீன் ஓத முடியாதவர்கள் ஒரு யாசீன்கூட ஓதலாம். மக்ரிப் தொழுகைக்குப்பின் பஜ்ர் நேரம் வரும்வரை எப்போதுவேண்டுமானாலும் ஓதலாம். ஓதத் தெரியாதவர்கள் பிரார்த்தனையில் மட்டுமாவது ஈடுபடலாம். எதுவும் கட்டாயமல்ல.


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

( مَنْ قَرَأَ يس حِينَ يُصْبِحُ، أُعْطِيَ يُسْرَ يَوْمِهِ حَتَّى يُمْسِيَ، وَمَنْ قَرَأَهَا فِي صَدْرِ لَيْلِهِ، أُعْطِيَ يُسْرَ لَيْلَتِهِ حَتَّى يُصْبِحَ

யார் காலை நேரத்தில் யாசீனை ஓதுவாரோ அவரின் அன்றைய தினத்தின் காரியங்கள் (அனைத்தும்) மாலை வரை இலேசாக்கித் தரப்படும். யார் யாசீனை இரவின் ஆரம்பத்தில் ஓதுவாரோ அவரின் அன்றைய இரவின் காரியங்கள் (அனைத்தும் மறுநாள்) காலை வரை இலேசாக்கித் தரப்படும்.  அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் நூல்:- தாரிமீ


திருக்குர்ஆனின் விரிவுரையாளர் இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். (புனிதமிகு) ஷஅபான் பதினைந்தாம் நாள் இரவுக்கு நான்கு (சிறப்புப்) பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது.


1. ( لَيْلَةَ اَلرَّحْمَةِ ) அல்லாஹ்வின் பிரத்யேக ரஹ்மத் இறங்குவதால் "ரஹ்மத்தான இரவு" எனப்படுகிறது.   


2. ( لَيْلَةَ اَلْمُبارَكَةَ ) (பரக்கத் எனும்) அருள்வளம் பொழியும் இரவு என்பதால் "முபாரக்கான இரவு" எனப்படுகிறது.


3. ( لَيْلَةَ اَلصَّكِّ ) விதி நிர்ணையிக்கப்படும் இரவு என்பதால் "சீட்டு வழங்கப்படும் இரவு" எனப்படுகிறது.


4. ( لَيْلَةَ اَلْبَراءَةِ ) இந்த இரவில் அதிகமான நரகவாசிகளுக்கு விடுதலையளிக்கப்படுவதால் "பராஅத் இரவு" எனப்படுகிறது. நூல்:- தஃப்சீர் குர்துபீ, தஃப்சீர் ரூஹூல் மஆனி 


அன்றைய இரவில்...


அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

( إِذَا كَانَتْ لَيْلَةُ النِّصْفِ مِنْ شَعْبَانَ فَقُومُوا لَيْلَهَا وَصُومُوا يَوْمَهَا. فَإِنَّ اللَّهَ يَنْزِلُ فِيهَا لِغُرُوبِ الشَّمْسِ إِلَى سَمَاءِ الدُّنْيَا فَيَقُولُ أَلاَ مِنْ مُسْتَغْفِرٍ فَأَغْفِرَ لَهُ أَلاَ مُسْتَرْزِقٌ فَأَرْزُقَهُ أَلاَ مُبْتَلًى فَأُعَافِيَهُ أَلاَ كَذَا أَلاَ كَذَا حَتَّى يَطْلُعَ الْفَجْرُ

ஷஅபான் பதினைந்தாம் நாள் இரவு வந்தால், அதன் இரவில் நின்று தொழுங்கள். அதன் பகலில் நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில், அல்லாஹ் அவ்விரவில் சூரியன் மறைந்ததும் முதல் வானத்திற்கு இறங்குகிறான். "என்னிடம் பாவமன்னிப்பு தேடுபவர் இல்லையா? அவருக்கு நான் பாவ மன்னிப்பு வழங்குகிறேன். வாழ்வாதாரத்தைத் தேடுபவர் இல்லையா? அவருக்கு நான் வாழ்வாதாரம் வழங்குகிறேன். சோதனைக்குள்ளானவர் இல்லையா? அவருக்கு நிவாரணத்தை வழங்குகிறேன். இதைக் கேட்பவர் இல்லையா? இதைக் கேட்பவர் இல்லையா? என்று அதிகாலை தோன்றும் வரை கேட்டுக் கொண்டே இருக்கிறான்." அறிவிப்பாளர்:- அலீ (ரலி) அவர்கள் நூல்:- இப்னுமாஜா-1378, ஷுஅபுல் ஈமான் லில் பைஹகீ-3542, தஃப்சீர் துர்ருல் மன்ஸூர், தஃப்சீர் ரூஹுல் மஆனி


அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 ( خَمْسُ لَيَالٍ لَا يُرَدُّ فِيهِنَّ الدُّعَاءُ: لَيْلَةُ الْجُمُعَةِ، وَأَوَّلُ لَيْلَةٍ مِنْ رَجَبَ، وَلَيْلَةُ النِّصْفِ مِنْ شَعْبَانَ، وَلَيْلَةُ الْعِيدِ، وَلَيْلَةُ النَّحْرِ

ஐந்து இரவுகளில் பிரார்த்திக்கும் பிரார்த்தனை மறுக்கப்படுவதில்லை.  1. ஜும்ஆ நாளின் இரவு. 2. ரஜப் மாத ஆரம்ப இரவு. 3. ஷஅபான் மாத பதினைந்தாம் நாள் இரவு. 4. (ஈதுல் ஃபித்ர் எனும்) ஈகை பெருநாள் இரவு. 5. (ஈதுல் அள்ஹா எனும்) தியாகத் திருநாள் இரவு.  அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் நூல்:- ஷுஅபுல் ஈமான் லில் பைஹகீ, தாரீக் திமிஷ்க் இப்னு அசாகிர், முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக் 4/317  


இதைப்போன்று இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

 ( إنَّ الدُّعَاءَ يُسْتَجَابُ فِي خَمْسِ لَيَالٍ فِي لَيْلَةِ الْجُمُعَةِ، وَلَيْلَةِ الْأَضْحَى، وَلَيْلَةِ الْفِطْرِ، وَأَوَّلِ لَيْلَةٍ مِنْ رَجَبٍ، وَلَيْلَةِ النِّصْفِ مِنْ شَعْبَانَ )

1.ஜும்ஆ நாளின் இரவில், 2. (ஈதுல் அள்ஹா எனும்) தியாகத் திருநாள் இரவில், 3. (ஈதுல் ஃபித்ர் எனும்) ஈகை பெருநாள் இரவில், 4. ரஜப் மாத ஆரம்ப இரவில், 5. ஷஅபான் மாத பதினைந்தாம் நாள் இரவில் ஆகிய ஐந்து நேரங்களில் கேட்கப்படும் பிரார்த்தனை ஒப்புக்கொள்ளப்படும்.    நூல்:-  அல்உம்மு-1/264


ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் ஷஅபான் மாத பதினைந்தாம் நாள் இரவு தொழுதார்கள். அப்போது நீண்ட நேரம் (நெற்றியை தரையில் வைத்த நிலையில்) சிரவணக்கத்தில் (சுஜூதில்) இருந்தார்கள். அப்போது நான் நபியவர்கள் மரணித்து விட்டார்களோ என்று நினைத்து அவர்களின் காலின் பெருவிரலை அசைத்துப் பார்த்தேன். அது அசைந்தது. அப்போதுதான் நான் மகிழ்ச்சிடைந்தேன். பிறகு நபியவர்கள் சஜ்தாவில் (பின்வருமாறு) ஓதியதை கவனித்துக் கேட்டேன்.


 ( اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِرِضَاكَ مِنْ سَخَطِكَ وَبِمُعَافَاتِكَ مِنْ عُقُوبَتِكَ وَأَعُوذُ بِكَ مِنْكَ لاَ أُحْصِي ثَنَاءً عَلَيْكَ أَنْتَ كَمَا أَثْنَيْتَ عَلَى نَفْسِكَ ‏ )


"அல்லாஹும்ம இன்னீ அஊது பிரிளாக்க மின் சகத்திக்க வமுஆஃபாத்திக்க மின் உகூபத்திக்க வஅஊது பிக்க மின்க்க இலைக்க ஜல்ல வஜ்ஹுக்க லா உஹ்ஸீ ஸனாஅன் அலைக்க அந்த கமா அஸ்னைத்த அலா நஃப்ஸிக்க"


பொருள்: இறைவா! உனது திருப்பொருத்தத்தைக்கொண்டு உனது கோபத்தை விட்டும் பாதுகாவல் தேடுகிறேன். உனது மன்னிப்பைக்கொண்டு உனது தண்டனையை விட்டும் பாதுகாவல் தேடுகிறேன்.  உன் (கண்டிப்பி)னை விட்டும் உன் (கருணையி)னைக் கொண்டு பாதுகாவல் தேடுகிறேன். உனது புகழ் கீர்த்தி மிக்கது. நீ உன்னை புகழ்ந்ததைப்போல நான் உன்னைப் புகழ இயலாதவனாக இருக்கிறேன்.


நான் இரவில் செவியுற்றதை காலையில் நபியவர்களிடம் கூறினேன். நபியவர்கள், ( يَا عَائِشَةُ تَعَلَّمْتِهُنَّ ؟ "، فَقُلْتُ: نَعَمْ ) "ஆயிஷா! இந்த பிரார்த்தனையைக் கற்றுக் கொண்டாயா? என்று கேட்டபோது, நான் 'ஆம்' என்றேன். நபியவர்கள், ( تَعَلَّمِيهِنَّ وَعَلِّمِيهِنَّ، فَإِنَّ جِبْرِيلَ عَلَيْهِ السَّلَامُ عَلَّمَنِيهِنَّ وَأَمَرَنِي أَنْ أُرَدِّدَهُنَّ فِي السُّجُودِ ) "இந்த பிரார்த்தனையை தானும் கற்றுக்கொண்டு பிறருக்கும் கற்றுக் கொடுங்கள். (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் இதைக் கற்றுக் கொடுத்து, (சஜ்தா எனும்) சிரவணக்கத்தில் இதைத் திரும்பத் திரும்ப ஓதுமாறு எனக்கு உத்தரவிட்டார்கள்என்று கூறினார்கள். நூல்:- அத்தர்ஙீபு வத்தர்ஹீபு, ஷுஅபுல் ஈமான் லில் பைஹகீ-3556 


அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 ( يَفْتَحُ اللَّهُ الخَيْرَ في أرْبَعِ لَيالٍ؛ لَيْلَةِ الأضْحى والفِطَرِ ولَيْلَةِ النِّصْفِ مِن شَعْبانَ  وفي لَيْلَةِ عَرَفَةَ إلى الأذانِ

அல்லாஹ் நான்கு இரவுகளில் நன்மையின் வாசலை (ஃபஜ்ரின்) பாங்கு வரை திறந்து வைத்திருக்கிறான். 1. (ஈதுல் அள்ஹா எனும்) தியாகத் திருநாள் இரவு. 2. (ஈதுல் ஃபித்ர் எனும்) ஈகை பெருநாள் இரவு. 3. ஷஅபான் மாத பதினைந்தாம் நாள் இரவு. 4. அரஃபா நாளின் இரவு. அறிவிப்பாளர்:- ஆயிஷா (ரலி) அவர்கள் நூல்:- தஃப்சீர் துர்ருல் மன்ஸூர்


மண்ணறைவாசிகளைச் சந்தித்தல்


ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒரு நாள் இரவு அருமை நாயகம் (ஸல்) அவர்களைக் காணாமல் நான் தேடினேன். அவர்களைத் தேடிக்கொண்டு வந்தபோது அவர்கள் 'அல்பகீஉ' எனும் பொது மையவாடியில் விண்ணை நோக்கி தலையை உயர்த்தியவாறு இருந்தார்கள்.


(என்னைக் கண்டதும்) அவர்கள், ( يَا عَائِشَةُ أَكُنْتِ تَخَافِينَ أَنْ يَحِيفَ اللَّهُ عَلَيْكِ وَرَسُولُهُ ) "ஆயிஷா! அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உனக்கு அநீதி இழைத்துவிடுவார்கள் என நீ அஞ்சிக் கொண்டிருந்தாயா?" என்று கேட்டார்கள். நான், "இதுவெல்லாம் எனக்கில்லை. எனினும் தங்கள் மனைவியருள் ஒருரிடம் தாங்கள் சென்று விட்டீர்களோ என நான் எண்ணினேன்" என்று கூறினேன்.


அப்போது அண்ணலார், ( إِنَّ اللَّهَ تَعَالَى يَنْزِلُ لَيْلَةَ النِّصْفِ مِنْ شَعْبَانَ إِلَى السَّمَاءِ الدُّنْيَا فَيَغْفِرُ لأَكْثَرَ مِنْ عَدَدِ شَعَرِ غَنَمِ كَلْبٍ ) “உயர்ந்தோன் அல்லாஹ் ஷஅபான் மாதத்தின் பதினைந்தாம் இரவில் முதல் வானத்திற்கு இறங்கி, 'கல்பு' குலத்தாரின் ஆடுகளின் ரோமங்களை விட அதிகமான (மக்களுக்குப்) பாவமன்னிப்பு வழங்குகிறான்" என்று கூறினார்கள். நூல்:- திர்மிதீ-670, இப்னுமாஜா-1379, முஸ்னது அஹ்மத்-24825, முஸன்னப் இப்னு அபீஷைபா, அல்பஸ்ஸார், பைஹகீ-3545, முஸ்னது அப்து பின் ஹுமைத்-1509


பராஅத் இரவைப்போன்று இறைவனின் விஷேச கருணை இறங்கும் இரவுகளில் (கப்ரு ஸியாரத் எனும்) மண்ணறைவாசிகளைச் சந்தித்து அவர்களுக்காகப் பிரார்த்திப்பது விரும்பத்தக்க செயல் எனத் தெளிவாகிறது.


நோன்பில் கவனம்


உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது. (ஒருமுறை) நான் ( يَا رَسُولَ اللَّهِ لَمْ أَرَكَ تَصُومُ شَهْرًا مِنَ الشُّهُورِ مَا تَصُومُ مِنْ شَعْبَانَ )  "நாயகமே! தாங்கள் ஷஅபான் மாதத்தில் நோன்பு நோற்கும் அளவு வேறு எந்த மாதத்திலும் நோன்பு நோற்பதை நான் காணவில்லையேஎன்று வினவினேன். அண்ணலார், ( ذَلِكَ شَهْرٌ يَغْفُلُ النَّاسُ عَنْهُ بَيْنَ رَجَبٍ وَرَمَضَانَ وَهُوَ شَهْرٌ تُرْفَعُ فِيهِ الأَعْمَالُ إِلَى رَبِّ الْعَالَمِينَ فَأُحِبُّ أَنْ يُرْفَعَ عَمَلِي وَأَنَا صَائِمٌ ) "ரஜப் மாதத்திற்கும், ரமளான் மாதத்திற்கும் மத்தியில் உள்ள இந்த மாதத்தில் மக்கள் (நற்காரியங்கள் செய்யாமல்) பொடுபோக்காக இருக்கிறார்கள்.  இந்த மாதத்தில்தான் அகிலங்களின் அதிபதியிடம் (அல்லாஹ்விடம்) நல்லறங்கள்  (அனைத்தும்)  எடுத்துக்காட்டப்படுகின்றன. எனவே, நான் நோன்பு நோற்ற நிலையில் என் நல்லறங்கள் எடுத்துக்காட்டப்படுவதை நான் விரும்புகிறேன்" என்றார்கள். நூல்:- நசாயீ-2317, முஸ்னது அஹ்மத்-20758, பைஹகீ-3540


அதாவு பின் யஸார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. ( لَمْ يَكُنْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي شَهْرٍ أَكْثَرَ صِيَامًا مِنْهُ فِي شَعْبَانَ وَذَلِكَ أَنَّهُ تُنْسَخُ فِيهِ آجَالُ مَنْ يَمُوتُ فِي السَّنَةِ ) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஷஅபான் மாதத்தில் அதிக நோன்பு நோற்பதைப் போல் வேறு எந்த மாதத்திலும் நோற்பவர்களாக இருக்கவில்லை. அந்த ஆண்டு மரணிக்க உள்ளவர்களின் தவணை அம்மாதத்தில் மாற்றப்படுகிறது என்பதே இதற்குக் காரணம்.  நூல்: முஸன்னப் இப்னு அபீஷைபா-9764, ஃபளாயிலுர் ரமளான்- இப்னு அபீதுன்யா, தஃப்சீர் துர்ருல் மன்ஸூர்


ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. அண்ணல் நபி அவர்கள் (ஒருமுறை) ஷஅபான் முழுவதும் நோன்பு நோற்றார்கள். நபியவர்களிடம் இதைப்பற்றி வினவினேன். நபியவர்கள், ( إنَّ اللَّهَ يَكْتُبُ فِيهِ كُلَّ نَفْسٍ مَيِّتَةٍ تِلْكَ السَّنَةَ، فَأُحِبُّ أنْ يَأْتِيَنِي أجَلِي وأنا صائِمٌ ) "நிச்சயமாக அல்லாஹ் இந்த வருடத்தில் இறப்பவர்களைப் பற்றி இந்த மாதத்தில் தான் எழுதுகிறான். எனவே, எனது முடிவு (மரணம்) வரும் போது நான் நோன்பாளியாக இருக்க விரும்புகிறேன்" என்று பதிலளித்தார்கள். நூல்:- முஸ்னது அபீயஅலா- 8/311, தஃப்சீர் துர்ருல் மன்ஸூர்


தலைவிதி நிர்ணயிக்கப்படுகிறது


அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ( هَل تدرين مَا هَذِه اللَّيْل؟ يَعْنِي لَيْلَةَ النِّصْفِ مِنْ شَعْبَانَ ) (ஒருமுறை என்னிடம்) ஷஅபான் பதினைந்தாம் நாள் (இரவான பராஅத்) இரவின் சிறப்பு என்னவென்று அறிவாயா? என்று வினவினார்கள். நான், “அவ்விரவில் என்ன சிறப்பு இருக்கிறது?” கேட்டேன். அண்ணலார், ( فِيهَا أَنْ يُكْتَبَ كلُّ مَوْلُودٍ مِنْ بَنِي آدَمَ فِي هَذِهِ السَّنَةِ وَفِيهَا أَنْ يُكْتَبَ كُلُّ هَالِكٍ مِنْ بَنِي آدَمَ فِي هَذِهِ السَّنَةِ وَفِيهَا تُرْفَعُ أَعْمَالُهُمْ وَفِيهَا تَنْزِلُ أَرْزَاقُهُمْ )  இதில் தான் இந்த வருடத்திற்கான மனித பிறப்பும், இறப்பும் எழுதப்படும். இதில் தான் அவர்களின் நற்செயல்கள் உயர்த்தப்படும். இதில் தான் அவர்களின் (ரிஸ்க் எனும்) வாழ்வாதாரங்கள் இறங்கும்என்றார்கள். நூல்:- மிஷ்காத்-பக்கம்-115, பாபு கியாமு ஷஹ்ரு ரமளான்


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

( تُقْطَعُ اَلْآجالُ مِن شَعْبانَ إلى شَعْبانَ حَتّى أنَّ اَلرَّجُلَ لَيَنْكِحُ ويُولَدُ لَهُ وقَدْ خَرَجَ اِسْمُهُ في اَلْمَوْتى

ஒரு ஷஅபான் மாதத்திலிருந்து மற்றொரு ஷஅபான் மாதம் வரை மனிதர்களின் வாழ்நாள் நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு மனிதன் திருமணம் முடித்து குழந்தை பெற்றெடுக்க இருப்பான். அவன் பெயர் மரணிப்பவர்களின் பட்டியலில் இடம் பெற்றிருக்கும். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள்   நூல்:- தஃப்சீர் தபரீ, பைஹகீ-3558, தஃப்சீர் துர்ருல் மன்ஸூர், தஃப்சீர் ரூஹூல் மஆனி, இப்னு ஸன்ஜவீஹ், தைலமீ, ஃபத்ஹுல் கதீர் ஷவ்கானீ-4/801,


அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 ( فِي لَيْلَةِ اَلنِّصْفِ مِن شَعْبانَ يُوحِي اَللَّهُ تَعالى إلى مَلَكِ اَلْمَوْتِ بِقَبْضِ كُلِّ نَفْسٍ يُرِيدُ قَبْضَها في تِلْكَ اَلسَّنَةِ

ஷஅபான் மாதம் பதினைந்தாம் இரவில் உயிர்களைக் கைப்பற்றும் (மலக்குல் மவ்த் எனும்) வானவருக்கு, “வரும் ஆண்டில் யார் யாருடைய உயிர்களை கைப்பற்ற வேண்டும்என்பதைப்பற்றிய இறைச்செய்தியை அல்லாஹ் அறிவிப்பான். அறிவிப்பாளர்:- ராஷித் பின் சஅத் (ரலி) அவர்கள் நூல்:- தஃப்சீர் துர்ருல் மன்ஸூர், தஃப்சீர் ரூஹூல் மஆனி


மன்னிக்கப்படாதவர்கள்


கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

( إِنَّ اللَّهَ لَيَطَّلِعُ فِي لَيْلَةِ النِّصْفِ مِنْ شَعْبَانَ فَيَغْفِرُ لِجَمِيعِ خَلْقِهِ إِلاَّ لِمُشْرِكٍ أَوْ مُشَاحِنٍ

அல்லாஹ் ஷஅபான் மாதத்தின் பதினைந்தாம் இரவில் தனது (கருணைப்) பார்வையைச் செலுத்துகிறான். (தனக்கு) இணை கற்பிப்பவனையும் (பிற முஸ்லிமிடம்) பகைமைக்கொண்டிருப்பவனையும் தவிர, தன் படைப்புகளில் (தன் அடியார்களில்) மற்ற அனைவரையும் மன்னிக்கிறான். அறிவிப்பாளர்:- அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் நூல்:- இப்னுமாஜா-1380, ஷுஅபுல் ஈமான் லில் பைஹகீ-3552, இப்னு ஹிப்பான், தப்ரானீ


அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

( يَطَّلِعُ اللَّهُ عَزَّ وَجَلَّ إِلَى خَلْقِهِ لَيْلَةَ النِّصْفِ مِنْ شَعْبَانَ فَيَغْفِرُ لِعِبَادِهِ إِلَّا لِاثْنَيْنِ مُشَاحِنٍ وَقَاتِلِ نَفْسٍ

வல்லமையும் கண்ணியமும் மிக்க அல்லாஹ் ஷஅபான் மாதத்தின் பதினைந்தாம் இரவில் தனது (கருணைப்) பார்வையைச் செலுத்துகிறான். தனது அடியார்களில் இருவரைத் தவிர மற்றெல்லோரையும் மன்னித்து விடுகிறான். 1. (பிற முஸ்லிமிடம்) பகைமைக்கொண்டிருப்பவன். 2. தற்கொலை செய்துகொண்டவன். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள்  நூல்:- முஸ்னது அஹ்மத்-6353, மிஷ்காத் பக்கம்-115 பாபு கியாமு ஷஹ்ரு ரமளான், தஃப்சீர் ரூஹூல் மஆனி


கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 ( إِذَا كَانَ لَيْلَةُ النِّصْفِ مِنْ شَعْبَانَ اطَّلَعَ اللَّـهُ رَبُّ الْعَالَمِينَ إِلَى خَلْقِهِ، فَيَغْفِرُ لِلْمُؤْمِنِينَ، وَيُمْلِي لِلْكَافِرِينَ، وَيَدَعُ أَهْلَ الْحِقْدِ بِحِقْدِهِمْ حَتَّى يَدَعُوهُ

ஷஅபான் மாதம் பதினைந்தாவது இரவு வந்துவிட்டால் அகிலங்களின் அதிபதியான அல்லாஹ் தனது படைப்பினங்கள் மீது (கருணைப்) பார்வையைச் செலுத்துகிறான். (அவ்விரவில்) இறைநம்பிக்கையாளர்களின் பாவங்களை மன்னிக்கிறான். இறைமறுப்பாளர்களுக்கு (திருந்த) அவகாசமளிக்கிறான். குரோதக்காரர்கள் அச்செயலைவிட்டும் தவிர்ந்துக்கொள்ளும்வரை (அவர்களின் பாவங்களை மன்னிக்காமல்) விட்டு விடுகிறான். அறிவிப்பாளர்:- அபீ ஸஅலபா அல்ஹுஷனீ (ரலி) அவர்கள் நூல்:- ஷுஅபுல் ஈமான் லில் பைஹகீ-3551, தப்ரானீ, கன்ஸுல் உம்மால், சஹீஹுல் ஜாமிஉ இமாம் அல்பானீ-1898


அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 ( إِنَّ اللهَ عَزَّ وَجَلَّ يَطْلُعُ عَلَى عِبَادِهِ فِي لَيْلَةِ النِّصْفِ مِنْ شَعْبَانَ فَيَغْفِرُ لِلْمُسْتَغْفِرِينَ، وَيَرْحَمُ الْمُسْتَرْحِمِينَ، وَيُؤَخِّرُ أَهْلَ الْحِقْدِ كَمَا هُمْ

நிச்சயமாக வல்லமையும் கண்ணியமும் மிக்க அல்லாஹ் ஷஅபான் மாதம் பதினைந்தாம் இரவில் தமது அடியார்கள்மீது தனது (கருணைப்) பார்வையைச் செலுத்துகிறான். எனவே, (அவ்விரவில்) பாவமன்னிப்புக் கோருபவர்களை மன்னிக்கிறான். அருள்வளம் தேடுவோருக்கு அருள்புரிகிறான். குரோதக்காரர்கள் மற்றும் அவர்களைப் போன்றோருக்கு (திருந்துவதற்கு) அவகாசமளிக்கிறான். அறிவிப்பாளர்:- ஆயிஷா (ரலி) அவர்கள் நூல்:- அத்தர்ஙீபு வத்தர்ஹீபு, ஷுஅபுல் ஈமான் லில் பைஹகீ-3554 


நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

( أَتَانِي جِبرِيلُ عليه السلامُ فقال : هٰذِهِ لَيلةُ النِّصفِ مِن شَعبَانَ ، وَللهِ فِيهَا عُتقاءُ من النارِ بِعدَدِ شُعُورِ غَنَمِ كَلْبٍ ، لا يَنظرُ اللهُ فيها إلى مُشرِكٍ ، ولا إِلَى مُشَاحِنٍ ، وَلَا إِلَى قاطِعِ رَحِمٍ ، وَلَا إِلَى مُسْبِلِ ، وَلَا إِلَى عَاقٍّ لِوالِدَيْهِ ، وَلَا إِلَى مُدْمِنِ خَمْرٍ

(ஒருநாள்) வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னிடம் வந்து, “(நாயகமே!)   இன்றிரவு ஷஅபான்மாதம் பதினைந்தாம் நாள் இரவாகும். அல்லாஹ் மீதாணையாக! இந்த இரவில் பனூகல்ப்கூட்டத்தார்களின் ஆடுகளில் உள்ள ரோமங்களின்  எண்ணிக்கையளவு நரகத்தில் உள்ளவர்களுக்கு விடுதலை அளிக்கப்படுகிறது. (இந்தளவுக்கு கருணை உள்ளம் கொண்ட) அல்லாஹ் (தனக்கு) இணை கற்பிப்பவன், (பிற முஸ்லிமிடம்) பகைமைக்கொண்டிருப்பவன், உறவைத் துண்டித்து வாழ்பவன்,  (பெருமைகொண்டு) ஆடைகளை  கரண்டைக்காலுக்கு கீழ் உடுத்துபவன், பெற்றோரைத் துன்புறுத்துபவன், தொடர்ந்து மது குடிப்பவன்  ஆகியோரை (கருணைப் பார்வை) பார்க்கவே மாட்டான். அறிவிப்பாளர்:- ஆயிஷா (ரலி) அவர்கள்  நூல்:- ஷுஅபுல் ஈமான் லில் பைஹகீ-3556


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  

( إِذَا كَانَ لَيْلَةُ النِّصْفِ مِنْ شَعْبَانَ نَادَى مُنَادٍ: هَلْ مِنْ مُسْتَغْفِرٍ فَأَغْفِرَ لَهُ، هَلْ مِنْ سَائِلٍ فَأُعْطِيَهُ فَلَا يَسْأَلُ أَحَدٌ شَيْئًا إِلَّا أُعْطِيَ إِلَّا زَانِيَةٌ بِفَرْجِهَا أَوْ مُشْرِكٌ

ஷஅபான் மாதம் பதினைந்தாம் நாள் இரவு வந்து விட்டால் ஒரு அழைப்பாளர் அழைக்கிறார். (அதாவது அல்லாஹ் அழைக்கிறான்) உங்களில் யாரேனும் பாவமன்னிப்பு கோருபவர் உண்டா? (அவ்வாறு கோரினால்) அவர்களின் பாவங்களை மன்னிக்கிறேன். உங்களில் யாரேனும் (தம்முடைய தேவை நிறைவேற வேண்டுமென) கேட்பவர் உண்டா? நான் அவர்களுக்கு அதை நிறைவேற்றித்தருகிறேன். (இந்த தினத்தில் இதுபோன்று ஹலாலானதை) கேட்பவர் எவருக்கும் கொடுக்காமல் இருப்பதில்லை. ஆனால், விபச்சாரி தன் தொழிலுக்காக கேட்பதையும், இணைவைப்பாளன் கேட்பதையும் தவிர. (இவர்கள் போன்றோருக்கு கொடுக்கப்படமாட்டாது.) அறிவிப்பாளர்:-உஸ்மான் பின் அபில் ஆஸ் (ரலி) அவர்கள் நூல்:- ஷுஅபுல் ஈமான் லில் பைஹகீ-3555


வீண் வாதமே!


இமாம் இப்னு ரஜப் அல்ஹன்பலி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

 ( وَلَيْلَةُ النِّصْفِ مِنْ شَعْبَانَ كَانَ التَّابِعُونَ مِنْ أَهْلِ الشَّامِ؛ كَخَالِدِ بْنِ مَعْدَانَ، وَمَكْحُولٍ، وَلُقْمَانَ بْنِ عَامِرٍ، وَغَيْرِهِمْ يُعَظِّمُونَهَا، وَيَجْتَهِدُونَ فِيهَا فِي الْعِبَادَةِ، وَعَنْهُمْ أَخَذَ النَّاسُ فَضْلَهَا وَتَعْظِيمَهَا

ஷாம் தேசத்தைச் சேர்ந்த இமாம் காலித் பின் மஅதான் (ரஹ்), இமாம் மக்ஹூல் (ரஹ்), இமாம் லுக்மான் பின் ஆமிர் (ரஹ்) போன்ற மிகப்பெரும் தாபியீன்கள் ஷஃபான் மாத நடுப்பகுதி இரவின்போது பெரும் முயற்சி எடுத்து வணக்க வழிபாடுகள் புரிந்து அதை கண்ணியப்படுத்துவார்கள். மக்களும் அவர்களின் செயல்பாடுகளைப் பார்த்தே அந்நாளின் சிறப்பையும், கண்ணியத்தையும் தெரிந்து கொண்டனர்.  நூல்:- லதாயிஃபுல் மஆரிப் பக்கம்-161


(பராஅத் இரவு எனும்) ஷஅபான் மாத பதினைந்தாம் இரவில் விழித்திருந்து வணங்குவதை நன்மையைக்குரிய செயலாக கருதுவது (பித்அத் எனும்) அடிப்படையற்றவை என்று சிலர் வாதிடுகின்றனர்.


எந்த விஷயத்தைப் பற்றி ஆதாரம் குர்ஆனிலோ நபிமொழியிலோ, நபித்தோழர்களின் நடைமுறையிலோ, தாபியீன்களுடைய செயல்பாட்டிலோ இல்லாவிட்டால் மட்டுமே, அந்த விஷயத்தை மார்க்கத்தின் (தீனின்) பகுதியாக கருதுவது (பித்அத் எனும்) அடிப்படையற்றவை ஆகும்.


முஸ்லிம் சமுதாயத்தில் நபித்தோழர்களின் காலம், தாபியீன்கள் காலம், தபஅ தாபியீன்கள் காலம் ஆகிய காலத்தை "சிறந்த காலம்" என்று நபிமொழியில் வர்ணிக்கப்பட்டுள்ள இந்த காலத்தவர்கள் ஷஅபான் மாதம் பதினைந்தாம் இரவுக்கு முக்கியத்துவம் கொடுத்து உபரியான வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்கள் என்பது ஆதாரபூர்வமானது. எனவே, இதை (பித்அத் எனும்) அடிப்படையற்றவை என்று கூறுவது எந்த வகையிலும் சரியல்ல.


பராஅத் இரவை குறித்து வரும் நபிமொழிகள் (ளயீஃப்) பலகீனமானது,  (முர்ஸல்) அறிவிப்பாளர் தொடரில் நபித்தோழர் பெயர் விடுபட்டுள்ளது எனக்கூறி முற்றிலுமாக இந்த இரவின் சிறப்புகளை மறுப்பது சரியல்ல.


நபிமொழிதுறை வல்லுநர்கள், மார்க்கச் சட்ட நிபுணர்கள் ஆகியோரின் தீர்ப்பு என்னவென்றால், ஒரு நபிமொழியின் அறிவிப்பாளர் தொடரை கவனித்து பலகீனமானதாக இருக்கிறது. ஆனால், அதை உறுதிப்படுத்தும் வகையில் அதே கருத்தில் வேறு பல நபிமொழிகள் வந்தால் அந்த நபிமொழியின் பலகீனம் நீங்கி விடுகிறது.


இது சம்பந்தமாக கிட்டதட்ட இருபதிற்கும் மேற்பட்ட நபிமொழிகளும், பத்து நபித்தோழர்களின் அறிவிப்புகளும் வந்துள்ளன. 1.அபூபக்ர் (ரலி) 2.அலீ (ரலி) 3.ஆயிஷா (ரலி) 4.அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) 5.முஆத் பின் ஜபல் (ரலி) 6.அபூஹுரைரா (ரலி) 7. அபூ ஸஅலபா (ரலி) 8.அவ்ஃப் பின் மாலிக் (ரலி) 9.அபூ மூஸா அஷ்அரீ (ரலி) 10.உஸ்மான் பின் அபில் ஆஸ் (ரலி) ஆகிய நபித்தோழர்கள், மற்றும் (தாபிஈன்கள் எனும்) இரண்டாம் தலைமுறையினர், (தபவுத்தாபிஈன்கள் எனும்) மூன்றாம் தலைமுறையினர், இமாம்கள் நல்லோர்கள் இந்த இரவின் சிறப்புகளையும் அதில் வணக்க வழிபாடு செய்வதையும் சிறப்பித்து கூறியிருப்பதாலும் இஸ்லாமியர்கள் இந்த இரவை சிறப்பாகக் கருதி வணக்க வழிபாடு செய்கிறார்கள்.


பலவீனமான நபிமொழிகளைக் கொண்டு சட்டம் இயற்ற முடியாதே தவிர, வணக்க வழிபாடு செய்வது கூடும் என்பது நபிமொழித்துறை அறிஞர்களின் கருத்து.


எனவே, நடுநிலை சிந்தனைக்குரிய மார்க்க அறிஞர்கள் இந்த இரவில் விழித்திருந்து வணக்கம் புரிவது நன்மைக்குரிய செயலாகும்என்கிறார்கள். 


எனவே, நாம் இதுபோன்ற புனிதமிகு இரவுகளில் மனத்தூய்மையுடன் வணக்க வழிபாடுகள் புரிந்து இறையருளைப் பெறுவோமாக! ஆமீன்!


மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951.

 


3 comments:

  1. மாஷா அல்லாஹ்

    மிகவும் அற்புதமாக ஷஃபான் மாதத்தின் சிறப்புகள் பற்றிய
    கட்டுரையை தொகுத்து வழங்கியுள்ளீர்கள்

    அல்ஹம்துலில்லாஹ்

    அல்லாஹ் உங்களுக்கு மென்மேலும் பயனுள்ள கல்வி ஞானங்களையும் ஆரோக்கியமான நீண்ட ஆயுளையும் வளமான செழிப்பான பரகத்தான ரிஸ்கையும் வழங்கி பேரருள் புரிவானாக 🤲

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ்

    மிகவும் அற்புதமாக ஷஃபான் மாதத்தின் சிறப்புகள் பற்றிய
    கட்டுரையை தொகுத்து வழங்கியுள்ளீர்கள்

    அல்ஹம்துலில்லாஹ்

    அல்லாஹ் உங்களுக்கு மென்மேலும் பயனுள்ள கல்வி ஞானங்களையும் ஆரோக்கியமான நீண்ட ஆயுளையும் வளமான செழிப்பான பரகத்தான ரிஸ்கையும் வழங்கி பேரருள் புரிவானாக

    ReplyDelete

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...