நமது இஸ்லாமிய வாழ்க்கை
فَقَدْ لَبِثْتُ فِيكُمْ عُمُرًا مِنْ قَبْلِهِ
أَفَلَا تَعْقِلُونَ
நிச்சயமாக நான் இதற்கு முன்னரும் நீண்ட காலம் உங்களுடன் வசித்துள்ளேன் (அல்லவா?
நான் பொய் சொல்பவன் அல்லர் என்பதை நீங்கள் நன்கறிந்திருக்கிறீர்கள்.
இதைகூட), நீங்கள் விளங்க வேண்டாமா?
திருக்குர்ஆன்:-
10:16
முஸ்லிம்களாகிய நாம் கடைபிடிக்கும் சுய ஒழுக்கம், நீதி நேர்மை, பொதுநலம் ஆகியவற்றை காண்கின்ற நமது பக்கத்து வீட்டார், கொடுக்கல் வாங்கல் மூலம் பழகுவோர், மற்றும் சக மனிதர்களுக்கும் நாம் வாழ்கின்ற இஸ்லாமிய வாழ்க்கையின்மீது
ஆசை வரவேண்டும்.
ஆம்! வாழ்ந்தால் இவர்களைப் போன்றல்லவா வாழ வேண்டும்? என்று அவர்கள் எண்ணம்கொள்ள வேண்டும். இஸ்லாம் கூறுகின்ற நல்லொழுக்க
மாண்புகளின் பக்கம் அவர்களின் கவனம் திரும்ப வேண்டும். அந்த அளவிற்கு நாம் தூய இஸ்லாமியர்களாக
வாழப் பழக வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆரம்பக் காலத்தில் மக்காவாசிகளிடம், “ஏக இறைவன் அல்லாஹுத்தஆலா
மட்டும் தான். நான், அவனின் தூதர் ஆவேன்” என்று கூறி, இஸ்லாமியப் பிரசாரத்தை மேற்கொண்டபோது இறைமறுப்பாளர்கள் பொய்யெனக் கூறி அதை ஏற்க
மறுத்தனர்.
அப்போதுதான் அல்லாஹுத்தஆலா, “என்னை நபியாக அனுப்பி வைக்கும்வரை நான் உங்களுக்கு
மத்தியில் தான் பிறந்து வளர்ந்தேன். அப்போதெல்லாம் என் வாய்மை குறித்தோ, நம்பகத்தன்மை
குறித்தோ நீங்கள் சந்தேகம் கொண்டதில்லை. நன்கு அறிந்தே இருந்தீர்கள். என்னை மாசுபடுத்துகின்ற
எந்த குறையையும் என்னிடம் நீங்கள் கண்டதில்லை. ஆகவே, என்னுடைய பரிசுத்தமான வாழ்க்கையே
நீங்கள் இறைநம்பிக்கை கொள்ள உங்களுக்கு போதுமாகாதா?” என்று இவ்வாறு அந்த மக்களிடம் நபியவர்களை அல்லாஹ் கேட்குமாறு கூறுகிறான். இதையே
தலைப்பில் காணும் திருவசனம் தெளிவுபடுத்துகிறது.
சுருங்கக்கூறின், நபியவர்கள் செய்த இஸ்லாமிய பிரச்சாரத்திற்கு அவர்களின் பரிசுத்தமான
வாழ்க்கையே ஆதாரமாகும் என்கிறது திருக்குர்ஆன்.
வள்ளல் குணம்
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் (வந்து) இரு மலைகளுக்கிடையே இருக்கும்
(அளவுக்கு அதிகமான) ஆடுகளை (நன்கொடையாகக்) கேட்டார். நபி (ஸல்) அவர்கள் அவற்றைக் கொடுத்தார்கள்.
அவர் தம் சமுதாயத்தாரிடம் சென்று, ( أَىْ قَوْمِ أَسْلِمُوا فَوَاللَّهِ إِنَّ
مُحَمَّدًا لَيُعْطِي عَطَاءً مَا يَخَافُ الْفَقْرَ ) "என் மக்களே! நீங்கள்
இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! முஹம்மத் அவர்கள் வறுமையை அஞ்சாமல்
தாராளமாக நன்கொடைகள் வழங்குகிறார்" என்று கூறினார்.
அந்த மனிதர் உலக ஆதாயத்திற்காக இஸ்லாத்தை ஏற்றிருந்தாலும், இஸ்லாத்தைத் தழுவிய சிறிது காலத்திற்குள் அவருக்கு
இஸ்லாம் இந்த உலகத்தையும் அதிலிருப்பவற்றையும்விட மிகவும் உவப்பானதாக ஆகிவிடும். நூல்:-
முஸ்லிம்-4630
இந்த நபிமொழியில் வரக்கூடிய மனிதர் ஸஃப்வான் பின் உமையா பின் கலஃப் என்பவர் ஆவார்.
இவர் அறியாமைக் காலத்தில் மக்களுக்கு மத்தியில் மதிப்பிற்குரியவராக கருதப்பட்டார்.
ஹுனைன், தாயிஃப் ஆகிய போர்களில் எதிரிகள்
அணியில் நின்று போர் புரிந்தார். இருந்தாலும், ஹுனைன் போரில் கிடைத்த போர் செல்வங்களில் ஏராளமான ஆடுகளை ஸஃப்வானுக்கு
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வழங்கினார்கள். "இதற்கு ஒரு நபியின் மனம் தான் இடமளிக்கும்"
என்று நபியவர்களை ஸஃப்வான் பாராட்டினார். பின்னர் அவர் இஸ்லாத்தை ஏற்றார். நூல்:- அல்இஸாபா,
உசுதுல் ஙாபா
ஸஃப்வான் அவர்கள், “நாம் கேட்ட திரண்ட
செல்வத்தை கொஞ்சம்கூட யோசிக்காமல் அதை வாரிவிட்டாரெனில் இவர் சாதாரண மனிதராக இருப்பதற்கு
சாத்தியமில்லை. உண்மையாகவே இவர் ஓர் இறைத்தூதராக இருக்கக்கூடும். இவர் எடுத்துரைக்கின்ற
இஸ்லாம் சத்திய மார்க்கமாகத்தான் இருக்கக்கூடும்” என்று எண்ணியவாறே, என் மக்களே! இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று
அறைக்கூவல் விடுத்தார்.
பேராசான் பெருமானார் (ஸல்) அவர்களின் சொல்லால் இஸ்லாமானவர்களைவிட, அவர்களின் செயலால் இஸ்லாமானவர்களே அதிகம் என்கிறது அவர்களின் புனித வரலாறு.
தீர்ப்பைத் தேடி
ஒருநாள் ஜனாதிபதி அலீ (ரலி) அவர்களின் கவச ஆடை ஒன்று காணாமல்
போய்விட்டது. அந்த கவச ஆடையை (இஸ்லாமிய அரசிடம் வரி செலுத்தி வாழ்கின்ற சகோதர சமயத்தவர்
எனும்) திம்மி காஃபிர் ஒருவர் கூஃபா நகரத்தின் சந்தையில் விற்றுக் கொண்டிருந்தார்.
இதை அடையாளம் கண்ட அலீ (ரலி) அவர்கள் அந்த திம்மி காஃபிரிடம், ( هَذِهِ دِرْعِي سَقَطَتْ عَنْ جَمَلٍ لِي فِي
لَيْلَةِ كَذَا وَفِى مَكَانِ كَذَا ) “இது என்னுடைய கவச ஆடை. இன்ன இடத்தில் இன்ன இரவில் எனது ஒட்டகத்திலிருந்து
இது கீழே விழுந்து தவறிவிட்டது" என்று கூறி, கேட்டார்கள்.
திம்மி காஃபிர், ( بَلْ هِيَ دِرْعِي وَفِى يَدِي يَا أَمِيرَ
الْمُؤْمِنِينَ ) "ஜனாதிபதி அவர்களே! அந்த கவச ஆடை என்னுடையதுதான்.
இதோ என் கையில் இருக்கிறது பாருங்கள்" என்று கூறினார்.
அலீ (ரலி) அவர்கள், ( إِنَّمَا هِيَ دِرْعِي ، لَمْ أَبِعْهَا مِنْ
اَحْدٍ وَلَمْ أَهَبْهَا لِأَحَدٍ حَتَّى تَصِيرَ إِلَيْكَ ) "நிச்சயமாக இந்த கவச
ஆடை என்னுடையதுதான். இதை நான் யாரிடத்திலும் விற்கவும் இல்லை; யாருக்கும் அன்பளிப்பாகவும் வழங்கவும் இல்லை; எப்படியோ இது உன்னிடம் வந்து சேர்ந்துவிட்டது. (எனவே, அதை என்னிடம் தந்துவிடுவீராக)" என்று கூறினார்கள்.
திம்மி காஃபிர், ( بَيْنِي وَبَيْنَكَ قَاضَى الْمُسْلِمِينَ ) "உங்களுக்கும் எனக்கும்
இடையே (அழகிய முறையில்) தீர்ப்பளிக்கக்கூடிய ஓர் முஸ்லிம் நீதிபதியிடம் செல்லுவோம்
வாருங்கள்" என்று கூறினார்.
இருவரும் நீதிபதி ஷுரைஹ் (ரஹ்) அவர்களிடம்
சென்று தத்தமது வாதத்தை முன் வைத்தனர். விவரத்தை கேட்டறிந்த நீதிபதி ஷுரைஹ் (ரஹ்) அவர்கள், "ஜனாதிபதி அவர்களே! இந்த கவச ஆடை உங்களுடையது என்பதற்கு
இரண்டு சாட்சிகள் வேண்டும் இருக்கிறதா?" என்று கேட்டார்.
அலீ (ரலி) அவர்கள், ( نَعَمْ مَوْلَايَ قَنْبَرٌ وَوَلَدِي الْحَسَنُ يَشْهَدَانِ لِي ) "ஆம்! என்னுடைய அடிமை
கன்பர் மற்றும் என்னுடைய மகன் ஹசன் ஆகிய இருவரும் எனக்குரிய சாட்சியாளர்கள் ஆகும்"
என்றார்கள்.
நீதிபதி ஷுரைஹ் (ரஹ்) அவர்கள், ஜனாதிபதி அவர்களே! தந்தைக்கு ஆதரவாக மகனுடைய சாட்சியம் ஏற்கப்பட
மாட்டாது" என்று கூறினார்கள்.
அலீ (ரலி) அவர்கள், ( يَا سُبْحَانَ اللَّهِ ! رَجُلٌ مِنْ أَهْلِ الْجَنَّةِ لَا
تَجُوزُ شَهَادَتُهُ ؟ ! أَمَا سَمِعْتَ إِنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ
عَلَى وَسَلَّمَ - قَالَ : " اَلْحَسَنُ وَالْحُسَيْنُ سَيِّدَا شَبَابِ
أَهْلِ الْجَنَّةِ ) “சுப்ஹானல்லாஹ்!
சொர்க்கவாசிகளில் ஒருவரை சாட்சியாக ஏற்றுக்கொள்ள முடியாதா? ஹசன் ஹுசைன் ஆகிய இருவரும் சொர்க்கவாசிகளில் உள்ள வாலிபர்களின்
தலைவர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதை நீங்கள் கேள்விபட்டதில்லையா?" என்றார்கள்.
நீதிபதி ஷுரைஹ் (ரஹ்) அவர்கள், ( بَلَى يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ ، غَيْرَ أَنِّى لَا أُجِيزُ شَهَادَةَ
الْوَلَدِ لِوَالِدِهِ )
“ஆம் அறிவேன். இருந்தாலும், தந்தைக்கு ஆதரவாக
மகனின் சாட்சியை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.
அலீ (ரலி) அவர்கள், திம்மி காஃபிரை நோக்கி! ( خُذْهَا فَلَيْسَ عِنْدِي شَاهِدٌ غَيْرُهُمَا ) "இந்த கவச ஆடையை நீயே எடுத்துக்கொள். இந்த இரண்டு பேரை தவிர்த்து
என்னிடம் வேறு சாட்சியாளர்கள் இல்லை" என்று கூறினார்கள்.
திம்மி காஃபிர், ( وَلَكِنِّي اَشْهَدُ بِأَنَّ الدِّرْعَ لَكَ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ ) "ஜனாதிபதி அவர்களே!
இந்த கவச ஆடை உங்களுடையதுதான் என்று நான் சாட்சி சொல்லுகிறேன். ( يَا اللَّهُ أَمِيرَ الْمُؤْمِنِينَ
يُقَاضِينِي أَمَامَ قَاضِيهِ وَقَاضِيهِ يَقْضَى لِي عَلَيْهِ ) இறைவா! முஸ்லிம்களின் தலைவர் (ஜனாதிபதி அவர்கள்) என்னை குறித்து நீதிபதியிடம் தீர்ப்புக் கேட்கிறார். நீதிபதியோ ஜனாதிபதிக்கு
எதிராக தீர்ப்பளிக்கிறார். ( اَشْهَدُ أَنَّ الدِّينَ الَّذِي يَأْمُرُ بِهَذَا لَحَقٌّ ) இந்த சத்தியத்தைத் தான், இந்த மார்க்கம் எடுத்துரைக்கிறது என்று
நான் சாட்சியம் பகிருகிறேன்" என்று கூறினார். பிறகு ஷஹாதத் கலிமா கூறி இஸ்லாமானார்.
பிறகு திம்மி காஃபிர், ( اعْلَمْ أَيُّهَا الْقَاضِي أَنَّ الدِّرْعَ
دِرْعُ أَمِيرِ الْمُؤْمِنِينَ ، وَاَنَّنِى اتَّبَعْتُ الْجَيْشَ وَهُوَ
مُنْطَلِقٌ إِلَى " صِفِّينَ " فَسَقَطَتِ الدِّرْعُ عَنْ جَمَلِهِ
فَأَخَذْتُهَا ) “நீதிபதி அவர்களே
அறிந்து கொள்ளுங்கள்! இந்த கவச ஆடை ஜனாதிபதி அவர்களுடையதுதான். ஜனாதிபதி அவர்கள் ஸிஃப்பீன்
போருக்கு சென்றபோது நான் அந்தப் படையினரைப் பின்தொடர்ந்தேன். அப்போது அவர்களின் ஒட்டகத்திலிருந்து
இந்த கவச ஆடை கீழே விழுந்துவிட்டது. அதை நான் எடுத்துக் கொண்டேன்” என்று கூறினார்.
அலீ (ரலி) அவர்கள் அவரிடம், ( أَمَا وَانَّكَ قَدْ أَسْلَمْتَ فَأَنَّى
وَهَبْتُهَا لَكَ وَوَهَبْتُ لَكَ مَعَهَا هَذَا الْفَرَسَ أَيْضًا ) "இப்போது நீர் முஸ்லிமாகிவிட்டீர். எனவே, அந்த கவச ஆடையை உனக்கே நான் அன்பளிப்பு செய்துவிட்டேன். மேலும், இதோ இந்தக் குதிரையையும் உனக்கு நான் அன்பளிப்பு செய்கின்றேன்"
என்று கூறி அவரிடம் கொடுத்தார்கள்.
இமாம் ஷஅபீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அதன் பிறகு அந்த மனிதர்
(பெரும் குழப்பவாதிகளான) ஹவாரிஜியாக்களுக்கு எதிராக நடைபெற்ற 'நஹ்ரவான்' போரில் அலீ (ரலி)
அவர்களுடன் கலந்து கொண்டு கொல்லப்பட்டு உயிர்த்தியாகி ஆனார். நூல்:- அல்பிதாயா வந்நிஹாயா, சுவரும் மின் ஹயாத்துத் தாபிஈன்
நாட்டின் ஜனாதிபதியான அலீ (ரலி) அவர்கள் நினைத்திருந்தால் தமது அதிகாரத்தை பயன்படுத்தி அந்த
திம்மி காஃபிரிடமிருந்து தமது கவச ஆடையை பிடுங்கியிருக்க முடியும். அதை யாராலும் தடுக்கவும்
முடியாது. அப்படி இருந்தும், அவர்கள் அவ்வாறு செய்யவில்லை.
இருவருக்கு மத்தியில் வழக்கு என்று வந்துவிட்டால் அதிகாரத்தை பயன்படுத்துவதைவிட, அது குறித்து தீர விசாரித்து, நீதி நேர்மையான தீர்ப்பு
வேண்டும் என்று எண்ணினார்கள்.
அலீ (ரலி) அவர்களின் பரிசுத்தமான இஸ்லாமிய வாழ்க்கை, ஒரு இறைமறுப்பாளருக்கு இறைநம்பிக்கையையும், சொர்க்கத்தையும் பெற்றுத்தந்துள்ளது.
அண்டை வீட்டார்
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ
الآخِرِ فَلْيُحْسِنْ إِلَى جَارِهِ ) அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியவர் தம் அண்டை வீட்டாருக்கு நன்மை செய்யட்டும். அறிவிப்பாளர்:- அபூஷுரைஹ்
அல்குஸாஈ (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-6019, முஸ்லிம்-77, இப்னுமாஜா-3662
அப்துல்லாஹ் பின் முபாரக் (ரஹ்) அவர்களது அண்டை வீட்டில் ஒரு யூதர் வசித்து வந்தார்.
இமாம் அவர்கள் தமக்காக எந்த பொருளை வாங்கினாலும் அதை இரண்டாக வாங்குவார்கள். ஒன்றை
தமக்காகவும் மற்றொன்றை அந்த யூதருக்காகவும் வாங்குவார்கள். தங்கள் குழந்தைகளுக்கு துணிமணிகள்
வாங்கினால் அதே தரத்தில் அந்த யூதருடைய பிள்ளைகளுக்கும் துணிமணி வாங்குவார்கள்.
ஒருமுறை முஸ்லிமான ஒருவர் தன்னுடைய வீடு இமாம் அவர்களது வீட்டிற்கு அருகில் அமைய
வேண்டும் என்று ஆசைப்பட்டார். மிகப்பெரிய இமாமுக்கு அடுத்த வீட்டுக்காரர் என்ற நற்பெயர்
தமக்கு கிடைக்கும் என்பதற்காக அவ்வாறு ஆசைப்பட்டார்.
எனவே, அந்த யூதரிடம் சென்று
தமது நோக்கத்தை எடுத்துரைத்து, அவரது வீட்டை விலைக்கு
பேசினார். அதற்கு அந்த யூதர், "நீங்கள் இரண்டாயிரம் தங்கக்காசுகளை எனக்கு
கொடுத்தால், எனது வீட்டை உங்களுக்குக்
கொடுத்துவிடுகிறேன்" என்று கூறினார். அதற்கு அந்த முஸ்லிம், "இந்தத் தொகை மிகவும் அதிகமாகிமாயிற்றே" என்றார். அதற்கு அந்த யூதர், "ஆயிரம் வெள்ளிக்காசுகள் தான் இந்த வீட்டிற்கான விலை.
மற்றொரு ஆயிரம் வெள்ளிகாசுகள் அப்துல்லாஹ் பின் முபாரக் (ரஹ்) அவர்களை அண்டை வீட்டாராக பெற்றுக் கொள்வதற்கான விலை" என்று கூறினார்.
பிறகு அந்த யூதர், இமாம் அவர்களிடம் வந்து, "நிச்சயமாக தாங்கள் இருக்கிற மார்க்கம் உண்மையானது. உங்கள் வழியாக
உங்களின் மார்க்கத்தை காண்கிறேன்" என்று கூறியவராக கலிமாவைக் கூறி இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.
நமது அண்டை வீட்டார் எந்த சமயத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுடன் நல்லுறவை
பேண, அவர்களிடம் அன்புடன்,
பண்பாக, பாசமாக நடந்துகொள்ள வேண்டும். முடிந்தவரை அவர்களுக்கு உதவியாக
இருப்பது மிகவும் நல்லது.
அவர்கள்மீது எப்போதும் மரியாதையுடனும் அக்கறையுடனும் இருக்க வேண்டும். அவ்வப்போது
முடிந்தளவு அவர்களுக்கு அன்பளிப்பு வழங்கலாம். அவர்களுக்கு எந்த வகையிலும் கெடுதி ஏற்படுத்திவிடக்
கூடாது. இவை இறைநம்பிக்கையை பசுமையாக்கும்; சிறந்த செயலாக மதிக்கப்படுகிறது.
பாவமன்னிப்பு
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لَوْ أَخْطَأْتُمْ حَتَّى تَبْلُغَ
خَطَايَاكُمُ السَّمَاءَ ثُمَّ تُبْتُمْ لَتَابَ عَلَيْكُمْ ) உங்களுடைய பாவங்கள் வானத்தை அடையும் அளவிற்கு
நீங்கள் பாவம் செய்தாலும் பிறகு (குற்றங்களுக்காக மனம் வருந்தி) நீங்கள் பாவமன்னிப்பு
கோரினால், அல்லாஹ் உங்களுடைய பாவமன்னிப்பை ஏற்றுக்கொள்வான். அறிவிப்பாளர்:-
அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- இப்னுமாஜா-4238
புழைல் பின் இயாள் (ரஹ்) அவர்கள் இஸ்லாமாவதற்கு முன் ஒரு கொள்ளை கூட்டத்தின் தலைவராக இருந்தார்கள். முதியோர்
முதல் சிறுவர்கள் வரை இவர் பெயரைக் கேட்டாலே அஞ்சுவார்கள் தொட்டில் குழந்தைகள்கூட உலகில்
என பெயர் கூறியதும் வாய்மூடி மௌனம் சாதிக்கும் அவர் அனேக மக்களின் பொருள்களை வழிப்பறி
செய்து வாழ்ந்து வந்தார்.
ஒருநாள் திருக்குர்ஆன் (54:17) வசனத்தை செவியுற்று மனமாற்றம் அடைந்தார். பிறகு
தமது தீய செயல்களை விட்டும் நீங்கி, முன் செய்த தவறான காரியங்களை நினைத்து வருந்தி தூய்மையான
முறையில் பாவமன்னிப்பு கோரினார்.
பிறகு அன்னார், யார் யாருடைய பொருள்களை வழிப்பறி செய்தார்களோ அவர்களுக்குரிய
பொருள்களைத் திரும்ப கொடுத்துவிட்டார்கள். திரும்ப கொடுக்கவேண்டிய சில பொருள்கள் தம்
கைவசமில்லாததால் அதற்குரியவர்களிடம் மன்னிப்பு கேட்டார்கள்.
அவ்வாறு ஒரு யூதரிடம் மன்னிப்பு கேட்டபோது அவர் மட்டும் மன்னிக்கவே மாட்டேன் என
பிடிவாதம் செய்தார். அன்னார் எவ்வளவோ கெஞ்சி கேட்டும், அந்த யூதர் எனது பொருளில்
சிறிதளவாவது தந்தாலின்றி மன்னிக்கப் போவதில்லை என உறுதியாக கூறிவிட்டார். முடிவில்
அன்னாருடைய பரிதாபத்தைக் கண்டு மனமிளகி ஒருபிடி மண்ணையாவது அள்ளித் தன்னிடம் கொடுத்தால்
மன்னித்து விடுவதாகக் கூறினார்.
இதைக்கேட்ட அன்னார் மனம் கலங்கியவராய் ஒருபிடி மண்ணை அள்ளி, "பிஸ்மில்லாஹ்" என்று கூறி, இதோ வாங்கிக்கொள்! என்று அந்த யூதருடைய சட்டைப்
பைக்குள் போட்டார்கள். அவர் அதைச் சோதித்து பார்த்தபோது அத்தனையும் பொன்னாக இருக்கக்
கண்டு ஆச்சரியமுற்று, உம்முடைய பாவமன்னிப்பு அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்க
வேண்டும். ஏனெனில், தவ்ராத் வேதத்தில், "யாருடைய பாவமன்னிப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டதோ அவர் மண்ணை அள்ளிக் கொடுத்த போதிலும்
பொன்னாகிவிடும்" என்று சொல்லப்பட்டிருப்பதை கேட்டிருக்கிறேன். இது உமது விஷயத்தில்
நடந்திருப்பதால் காணும்போது, உம்முடைய மார்க்கமே உண்மையான மார்க்கம் என்று கூறியவாறு
அந்த யூதர் திருக்கலிமா கூறி, இஸ்லாத்தைத் தழுவினார். நூல்:- தத்கிரத்துல் அவ்லியா
கொடுக்கல் - வாங்கல்
பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( أَلاَ وَخَيْرُهُمُ الْحَسَنُ الْقَضَاءِ
الْحَسَنُ الطَّلَبِ أَلاَ وَشَرُّهُمْ سَيِّئُ الْقَضَاءِ سَيِّئُ الطَّلَب ) அறிந்துகொள்ளுங்கள்! கொடுப்பதிலும் வாங்குவதிலும் முறையாக நடந்துகொள்பவரே
அவர்களில் மிகவும் சிறந்தவர்; கொடுப்பதிலும் வாங்குவதிலும் முறைதவறி நடந்துகொள்பவரே
அவர்களில் மிகவும் கெட்டவர். அறிவிப்பாளர்:- அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் நூல்:-
திர்மிதீ-2117
பிரிட்டிஷ் அரசு 1914 ஆண்டுவாக்கில் உலகின்
பெரும் வல்லரசாய்த் திகழ்ந்தது. மத்திய கிழக்கிலுள்ள ஒரு நாட்டில் பிரிட்டிஷ் தூதரகத்தின்
அதிகாரியாகப் பணியாற்றி வந்தார் மர்மடியூக் பிக்தால் என்பவர்.
ஒருநாள் அவர் தம் வீட்டு மாடியில் உட்கார்ந்துகொண்டிருந்தபோது கீழே தெருவில் ஒரு
விந்தையான காட்சியைக் கண்டார். நல்ல உடற்கட்டும் உறுதியும் உள்ள ஓர் இளைஞனை ஒரு கிழவர்
திட்டிக்கொண்டும் அடித்துக்கொண்டும் இருந்தார். கிழவரின் அத்தனை அடிகளையும் தாங்கிக்கொண்டு
அமைதியாகச் சிலைபோல் நின்றிருந்தான் அந்த இளைஞன்.
இதைப் பார்த்த பிக்தாலுக்கு வியப்பு எல்லையைக் கடந்தது. அவர் மாடியிலிருந்து இறங்கி
வந்து இளைஞனையும் முதியவரையும் அழைத்து விசாரித்தார். அடிபட்ட போதெல்லாம் வாயே திறக்காத
அந்த ஆடு மேய்க்கும் இளைஞன் இப்போது பேசினான். ஐயா, நான் இந்தப் பெரியவரிடம் கொஞ்சம் பணம் கடன் வாங்கியிருந்தேன்.
தவணைக் காலம் முடிந்த பிறகும்கூட என்னால் அதைத் திருப்பித் தர இயலவில்லை. அதனால்தான்
பெரியவருக்குக் கோபம் வந்து என்னை அடிக்கிறார்.’’
ஆடு மேய்க்கும் இளைஞனின் குரலில் இருந்த அமைதியும் அடக்கமும் பிக்தாலைக் கவர்ந்தன.
வாங்கின கடனைத் திருப்பித் தரவேண்டும் என்ற எண்ணம் உனக்கு உள்ளது. இன்றில்லாவிட்டாலும்
நாளை கொடுக்கத்தான் போகிறாய். அதற்காக இத்தனை அடிகளைத் தாங்க வேண்டுமா? அந்த முரட்டுக் கிழவரைத் தடுத்து நிறுத்தி நீயும்
இரண்டு அடி கொடுத்திருக்க வேண்டியதுதானே? என்று பிக்தால் இப்படிக் கூறியதும் இளைஞன் துடித்துப் போய்விட்டான்.
அப்படிச் சொல்லாதீர்கள் ஐயா. கடன் தொகையை அதற்குரிய காலத்தில் திருப்பிக் கொடுத்துவிடுங்கள்’என்பது எங்களின் அருமைத்
தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனையாகும். அதில் நான் தவறிவிட்டதே பெரிய பாவமாகும்.
இப்பெரியவரைத் தடுத்து நிறுத்தி, அவரைத் திருப்பி அடிப்பதன்
மூலம் நான் மேலும் பாவியாக வேண்டுமா?’’ இளைஞனின் பதில் பிக்தாலைத் திகைப்படையச் செய்தது. அவருடைய சிந்தனை சுழன்றது.
‘நபிகள் நாயகம் 1400 ஆண்டுகளுக்கு முன்பு சொன்னதை இன்றும்கூட ஒருவன்
பின்பற்றுகிறான் என்றால், அதுவும் கல்வியறிவு இல்லாத ஆடு மேய்க்கும் இளைஞன்கூட இவ்வளவு
உறுதியாகப் பின்பற்றுகிறான் என்றால் அந்த போதனைகளின் மகத்தான சக்தியை என்னவென்று சொல்வது?
பிரமித்து நின்றார் பிக்தால். அதற்குப் பிறகு இவர் இஸ்லாமியத் திருநெறியை ஆராய்ந்து
ஏற்றுக்கொண்டார். அரபு மொழியைக் கசடறக் கற்றார். திருக்குர்ஆனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த
முதல் முஸ்லிம் எனும் பெயரையும் தட்டிச் சென்றார்.
ஒரு முஸ்லிம், கொடுக்கல் வாங்கலில் நீதி நேர்மையைக் கடைபிடித்து வாழும்போது,
இதை கவனிக்கும் சகோதர சமயத்தவர்கள், வாழ்ந்தால் இந்த முஸ்லிமைப் போன்று வாழவேண்டும்
என்று எண்ணம் கொள்வார்கள்.
உண்மை பேசு
பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( قُلِ الْحَقَّ وَلَوْ كَانَ مُرًّا ) உண்மையைப் பேசு. அது கசப்பாக
இருந்தாலும் சரியே! அறிவிப்பாளர்:- அபூதர் (ரலி) அவர்கள் நூல்:- இப்னு ஹிப்பான்
19 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ஆங்கிலேயர் இந்தியா முழுவதையும் கைப்பற்றிவிட்டனர்.
அப்போது உத்தரப்பிரதேசம் மாநிலம் முஸ்ஃப்பர் நகர் மாவட்டம் காந்தலா என்றொரு நகரில்
இந்துக்களும் முஸ்லிம்களும் கணிசமாக வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதியில் ஆங்கிலேயர்
ஒருவர் மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்தார்.
அச்சமயம் காந்தலா நகரிலுள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தை முஸ்லிம்கள் தங்களுக்குரிய
வணக்கஸ்தலம் என வாதிட்டனர். அதே இடத்தை இந்துக்கள் அது தங்களுக்குரிய வணக்கஸ்தலம் என
வாதிட்டனர். இருதரப்பினரும் விட்டுக் கொடுப்பதாக இல்லை வாதங்களும் பிரதிவாதங்களும்
முற்றிக்கொண்டே சென்றன. அமைதி நிலவுவதாக தெரியவில்லை. இந்த பிரச்சனை முற்றி, பெரும் கலவரமாகக்கூட உருவெடுக்கலாம் என்ற நிலைமை வந்தது.
இது, ஆங்கிலேய கலெக்டருக்கு பெரிய தலைவலியாக போயிற்று.
இருதரப்பினரிடமும் தங்கள் கோரிக்கைகளுக்கு ஆதாரப்பூர்வமான ரெக்கார்டுகளைக் கொண்டு வரும்படி
அவர் உத்தரவிட்டார். இரு தரப்பினரிடமும் போதிய ஆதாரங்கள் இல்லை. "எங்கள் அனுபவத்தில்
தான் பிரச்சனைக்குரிய இடம் இருந்து வருகிறது" என்று மட்டும் இரு சாராரும் சொல்லி
வாதிட்டனர். இரு தரப்பினரிடமும் போதிய உறுதியான பதிவுகள் இல்லை. இது, அந்த கலெக்டருக்கு மிகவும் தர்ம சங்கடமாக ஆகிவிட்டது.
திடீரென அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. முஸ்லிம்களின் பிரதிநிதிகள் சிலரை அழைத்தார்.
அவர்களை நோக்கி, "இந்த இடம் உங்களுக்குத்தான்
சொந்தம் என்கிறீர்கள். ஆனால், அதற்குரிய ஆதாரங்கள்
இல்லை. இந்த இடம் உங்கள் அனுபவத்தில் உள்ளது தான் என்று, இந்துக்களில் இருந்து கண்ணியமிக்க யாரையாவது ஒருவர் உங்களுக்காக
சாட்சியம் அளிக்க முன் வருவாரா?" என்று வினவினார்.
முஸ்லிம்கள், "அப்படி சாட்சியம்
அளிக்க யாரும் முன் வர மாட்டார்கள்" என
பதிலளித்தனர்.
கலெக்டர் இதே கேள்வியை இந்துக்களிடமும் கேட்டார். அப்போது இந்துக்களில் சிலர், "இப்பகுதியில் முஸ்லிம் பெரியவர், மார்க்க அறிஞர் ஒருவர் இருந்து வருகிறார். அவர் பொய்யே சொல்ல
மாட்டார். உண்மைதான் பேசுவார். அந்த முதியவரை நீங்கள் கூப்பிட்டுவிட்டு நேரில் விசாரித்துப்
பாருங்கள்" என்று கூறினர்.
"முஃப்தீ இலாஹி பக்ஸ்" குடும்பம் என்றால் முஸஃப்பர் நகர் மாவட்டத்திலேயே
மிகவும் பிரபலமான குடும்பம் மார்க்கப்பற்றுக்கும் நல்லொழுக்கத்திற்கும் பெயர் பெற்ற
குடும்பம். மேலும், ஆங்கிலேயர்களை எதிர்த்துப்
போராடி வீர மரணமடைந்த பெரியார் "சையது அஹ்மத் ஷாரீ (ரஹ்) அவர்களின் கலீஃபாவான
அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்களின் மாணவர் தான் முஃப்தீ இலாஹி பக்ஸ் குடும்பத்தைச் சார்ந்த
அந்த முதியவர்.
உடனே அந்த கலெக்டர் அந்த முஸ்லிம் பெரியவரை அழைத்து மக்கள் முன்னிலையில் இதுகுறித்து
விசாரித்தார். அதற்கு அந்த முஸ்லிம் பெரியவர் காந்தலா நகரில் உள்ள அந்த பிரச்சனைக்குரிய
இடம் இந்துக்களின் அனுபவத்தில் தான் இருந்து வருவதை தாம் இளமையில் இருந்தே பார்த்திருப்பதாக
கூறினார். பிறகு இந்த சாட்சியத்தை ஆங்கிலேய கலெக்டர் ஏற்று அதன் பிரகாரமே தீர்ப்பு
வழங்கினார்.
மாவட்ட கலெக்டர் முன்பு உண்மையை பேசிய பெரியவரின் இச்செயலைக் கண்டு அங்கு கூடியிருந்த
இந்துக்கள்கூட அசந்து போயினர். அவர்களால் தங்களது கண்களையே நம்ப முடியவில்லை தங்களது
சமுதாயத்தைச் சார்ந்தவர்களுக்கு பாதகமானது என்று நன்கு தெரிந்திருந்தும்கூட இந்த பெரியவர்
உண்மையையே கூறியிருக்கிறார் என்று அவர்களுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. இந்து பிரதிநிதிகளில்
ஒரு சிலர் கலெக்டர் அலுவலகத்திலேயே அப்பெரியவரின் கையைப் பிடித்து நன்றி கூறினர்.
அதற்கு அவர், "நான் எனது கடமையைச்
செய்தேன். உண்மையை கூறும்படி எனது மார்க்கம் போதிக்கிறது. என் வாழ்நாளில் அதை நான்
கடைபிடித்துவருகிறேன். அதிலிருந்து வழிதவற நான் விரும்பவில்லை. இனி எஞ்சியிருக்கும்
காலங்களிலும் அவ்வழியை விட்டு நீங்காதிருக்க இறைவன் என்னை அருள்புரிவானாக" என்று
பதிலளித்தார். உண்மையை நிலைநிறுத்த பெரியவர் எடுத்துக்கொண்ட அசாதாரணமான துணிச்சலைக்
கண்டு அந்த இடத்திலேயே பலர் அவரின் கையைப்பிடித்து திருக்கலிமா கூறி இஸ்லாத்தில் இணைந்தனர்.
நபியின் கண்ணியத்தை பாதுகாக்க
ஒருதடவை வெளிநாட்டை சேர்ந்த ஒர் கிருத்துவ ஆங்கிலேயர் இந்தியாவுக்கு சுற்றுலா வந்தார்
இந்நிலையில் மன்னர் ஷாஜஹான் அவர்கள் கட்டிய பிரமாண்டமான ஜும்ஆ பள்ளிவாசலைச் சுற்றிப்
பார்ப்பதற்காக அதன் படிகளில் ஏறிக்கொண்டிருந்தபோது கால் நடக்க முடியாத ஒரு முஸ்லிம்
ஏழைத்தோழர் அவரிடம் யாசகம் கேட்டார்
உடனே அந்த ஆங்கிலேயர் தன்னுடைய பேண்ட் பாக்கெட்டிலிருந்து பணத்தை எடுக்கும்போது,
ஒரு பெரும் தொகை கீழே விழுந்துவிட்டது. அது அவருக்கு தெரியவில்லை. அந்தப் பணத்தை பார்த்த ஏழைத்தோழர் உடனே ஆங்கிலேயரை சத்தமிட்டு அழைத்தார்.
கூட்டத்தின் நெருக்கடியில் சென்றதால் ஆங்கிலேயர் காதில் விழவில்லை. அவர் அவ்விடத்தை
விட்டும் சென்றுவிட்டார்
அந்த ஏழைத்தோழர் அந்தப் பணத்தை எடுத்து தனது அழுக்கான சாக்குப்பையில் வைத்து கொண்டார்.
சில வருடங்களுக்கு பின் அந்த ஆங்கிலேயர் மீண்டும் அதே ஜும்ஆ பள்ளிவாசலுக்கு வந்தபோது
அவரை அடையாளம் கண்டுகொண்ட ஏழைத்தோழர் அவரை அழைத்தார். காசு கேட்கத் தான் யாசகர் அழைக்கிறார்
என்றெண்ணி ஆங்கிலேயர் காசு கொடுக்க அவர் அருகில்
சென்றார்.
அந்த ஏழைத்தோழர் தன் சாக்குப் பையில் வைத்திருந்த 5000/- ருபாய் பெரும் மதிப்புள்ள
பணக்கட்டை ஆங்கிலேயர் அவரிடம் கொடுத்து நடந்த விவரம் சொன்னதும், உடனே அந்த ஆங்கிலேயர்,
“நீ என்ன முட்டாளா? இந்த பணத்தை எடுத்த
தேவையுள்ள நீ செலவு செய்து இருக்கலாமே, எனக்கு என்ன தெரியவா போகிறது? இதை இவ்வளவு காலம்
பாதுகாத்து வைத்து என்னிடம் கொடுக்கிறாயே!” எனக் கூறினார்
அப்போது அந்த ஏழைத்தோழர் முஸாஃபிர், “நண்பரே! நாளை மறுமையில் உங்களுடைய நபி ஈஸா
(அலை) அவர்கள் எங்கள் நபி
முஹம்மத் (ஸல்) அவர்களிடம், “என்னுடைய சமூகத்தைச் சேர்ந்த ஒருவரின் பணத்தை உங்கள் சமூகத்தைச் சேர்ந்த
ஒரு முஸ்லிமான யாசகர் ஏமாற்றிவிட்டார் என்ற வார்த்தையை சொன்னால் எங்கள் கண்மணி நாயகம்
(ஸல்) அவர்களின் மனம் வேதனைப்படாதா?
அது அவர்களுக்கு தலைக்குனிவு ஏற்படுமே! எங்களின்
உயிருக்கும் மேலானா மாநபி (ஸல்) அவர்கள் மனம் வேதனைப்பட்டு தலைக்குனிந்து நிற்பதை என்னால் தாங்கிக்கொள்ள
முடியாது. அதனால் தான் உங்கள் பணத்தை பாதுகாத்து வைத்து எனக்கு தேவையிருந்தும் நபியின்
கண்ணியத்தை பாதுகாக்க உங்களிடம் கொடுக்கிறேன் என யாசகரான அந்த ஏழைத்தோழர் கூறியதும்
அவரின் சொன்ன பதிலை கேட்டு கண்ணீர் மலைபோல் ஓடிய நிலையில் அந்த ஆங்கிலேயர் டில்லி ஜும்ஆ
பள்ளிவாசலுக்குள் சென்றார். கலிமா கூறி முஸ்லிமாகியே வெளியே வந்தார். நூல்:- இறைநேசர்களின்
சரிதை
நல்லடக்கம்
சிறந்த சிந்தனையாளரும், எழுத்தாளருமான
மேலப்பாளையம் (அப்துல் காதிர் எனும்) ரஹ்மத் ராஜகுமாரன் என்பவர் தாம் கேட்ட ஜும்ஆ சொற்பொழிவு ஒன்றை
குறிப்பிகிறார். அந்த சொற்பொழிவின்
சாரம்சம்:
ஒரு மெளலவி சென்னையிலிருந்து சூரத் (குஜராத்) செல்வதற்கு நவஜீவன் Exp – இரயிலில் பயணம் போயிருக்கிறார். அவர் பயணம் செய்யும்
இரயில் கோச்சில் 50 வயது மதிக்கத்தக்க
இரண்டு நண்பர்கள்; நண்பர்களில் ஒருவர்
முஸ்லிம். மற்றொருவர் இந்து சகோதரர் .இருவருமே சிறு வயது பிராயத்திலேயே நண்பர்கள்.
இரண்டுபேரும் பங்குதாரர்களாக சென்னையில் ஜவுளி ரெடிமேட் வியாபாரம் செய்து வருகின்றனர்.
ஜவுளி கடைக்கு ரெடிமேட் துணிகள் கொள்முதல் செய்வதற்காக சூரத் செல்கின்றனர்.
நடுநிசி இரவு. முஸ்லிம் நண்பருக்கு திடீரென ஹார்ட் அட்டாக். இந்து சகோதரர் பதறுகிறார்.
மொத்த கோச் பயணிகளும் விழித்தெழிந்து உதவி செய்ய முன் வருகின்றனர். நம்ம மெளலவியும்
மிக மும்முரமாக கவனம் செலுத்துகிறார் . கொஞ்ச நேரத்தில் முஸ்லிம் நண்பர் இறந்துவிடுகிறார்.
(இன்னாலில்லாஹி...)
இரயில் நிறுத்தப்படுகிறது. TTR , ரயில்வே போலீஸ் உட்பட அந்த இந்து சகோதரரிடம் கலந்து ஆலோசித்து, “பக்கத்தில் ஒரு சின்ன கிராமம் வருகிறது. அந்த கிராமம்
முஸ்லிம்கள் பெருவாரியாக வாழுபவர்கள். அக்கிராமத்தில் உள்ளவர்கள் மேற்கொண்டு நடப்பதைக்
கவனித்துக் கொள்வார்கள். உங்கள் நண்பரின் பிரேதத்தை அந்த சின்ன கிராம இரயில்வே ஸ்டேஷனில்
இறக்கிவைக்கிறோம்" என்றனர்.
அந்த இந்து சகோதருடன் நம்ம மெளவியும் இறங்கிக் கொண்டார். ரயில் 'அப்பாடா ' என்று இறக்கிவைத்து விட்டு ஊர்ந்து போனது. நம்ம மெளலவி பயணத்தை
ரத்து செய்து துணைக்கு இறங்கிய இந்த உதவி இந்து சகோதரருக்கு மிக்க ஆறுதலாக இருந்தது.
பொழுது புலர்ந்தது. சூரத்திற்கு போகிற வழியில் உள்ள அந்த சின்ன கிராம ரயில்வே ஸ்டேஷன்
மாஸ்டர், கிராமத்திற்கு போன் செய்ததும்,
அந்த கிராமவாசிகள் பத்து பேர் பிரேதத்தை கொண்டு
செல்ல சந்தூக்குடன் வந்தனர்.
அதற்குள் இந்து சகோதரர் முஸ்லிம் நண்பரின் வீட்டிற்கும், உறவினருக்கும் செய்தியை தெரியப்படுத்திவிட்டு,
நண்பரை நல்லடக்கம் செய்வதற்கும் அனுமதியும் பெறுகிறார்.
இதை அந்த கிராமத்தவர்களிடம் தெரியப்படுத்தினார்.
அந்த கிராமத்தவர்கள் பிரேதத்தை தூக்கி அந்த சந்தூக்கில் வைத்து தங்களது கிராமத்திற்கு
கொண்டு சென்று, பிரேதத்தை தொட்டுத்
தழுவி தங்கள் உறவினர் போல குளிப்பாட்டி,
கபனிட்டு, பள்ளிவாசலில் வைத்து தொழுகையும் நடத்தினர்.
பின்னர் கபருஸ்தானில் ஏற்கனவே கிராமத்தவர்கள் தோண்டி வைத்திருந்த குழியில் முஸ்லிம்
நண்பரை அடக்கம் செய்துவிட்டு, அந்த பள்ளிவாசல் இமாம்
மற்றும் கிராமத் தலைவர்கள் பிரேத அடக்க சான்றிதழ் எழுதி கொடுத்துவிட்டு, இறப்புப் பதிவு ரிஜிஸ்டரில் இந்து நண்பரின் கையெப்பத்தையும் ஆதார் அட்டை நகலையும் பெற்றுக்கொண்டனர் .
இந்து நண்பர் அந்த பள்ளிவாசல் இமாம் மற்றும் கிராமத்தவர்களிடம், "என் நண்பரின் அடக்கச் செலவு எவ்வளவு?” என்று கேட்டார்.
அவர்கள், "உங்கள் நண்பரின் சொந்த
பணம் உங்களிடம் இருக்கிறதா? இருந்தால், அவருடைய பணத்தில் கபன் துணிக்குரிய தொகையை மட்டும் தாருங்கள்"
என்றனர்.
அந்த இந்து சகோதரர், "பிரேதத்தைத் தூக்கி
வந்த செலவு, குளிப்பாட்டிய செலவு,
(கப்ரு) குழிதோண்டிய செலவு இதற்கெல்லாம் கொடுப்பதற்கு
என் முஸ்லிம் நண்பரின் சொந்த பணம் என்னிடம் இருக்கிறது . அதையும் உங்களுக்குத் தருகிறேன்"
என்றார்.
அவர்கள், "நண்பரே! உங்களுடைய முஸ்லிம் நண்பர்
எங்களுக்கு சகோதரர். அவருடைய பிரேத (கபன்) துணியைத் தவிர மற்ற செலவுகள் அனைத்தும் எங்கள்
சகோதருக்கு நாங்கள் செய்துகொள்வோம்" என்றனர்.
இந்து நண்பரின் கண்ணீர் வெள்ளமாக பாய்கிறது. "என் முஸ்லிம் நண்பரை நீங்கள்
பார்த்ததும் கிடையாது; பழகியதும் கிடையாது.
எப்படி இதெல்லாம்?” என்றார்.
அவர்கள், "நாங்கள் மட்டும் அல்லர்,
இந்த உலகில் எங்கு முஸ்லிம் இறந்தாலும் அவரை அநாதைப்
பிணமாக ஒருபோதும் அடக்கவிடமாட்டார்கள்"
என்றனர். இந்த வார்த்தை, இந்து நண்பரின் உள்ளத்தை உலுக்கிவிட்டது.
இந்து நண்பர், "நானும் இஸ்லாத்தை
தழுவியிருந்தாலுமா?” என்று கேட்டார். அவர்கள், "நிச்சயமாக, நீங்களும் எங்கள் சகோதரர்தான் " என்றனர். அந்த இந்து சகோதார்
அடுத்த நிமிடம், “நான் இஸ்லாத்தை இப்போதே
தழுவுகிறேன்” என்றார்.
பள்ளிவாசல் இமாம் அவர்கள் அவரின் கரத்தை பிடித்து "லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர்
ரசூலுல்லாஹ்" என்கிற கலிமாவை சொல்லிக்கொடுத்தார். அவரும் கூறி, இஸ்லாமிய சகோதரானார்.
வலைத்தளத்தில் வாசித்தவை
தனது தாய் தந்தைக்கு
நன்றி செய்யும்படி மனிதனுக்கு நாம் நல்லுபதேசம் செய்தோம். திருக்குர்ஆன்:- 31:14
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரலி அவர்கள் கூறியதாவது. நான் கண்மணி பெருமானார் (ஸல்)
அவர்களிடம், ( أَىُّ الْعَمَلِ أَحَبُّ إِلَى اللَّهِ ) "அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயல் எது?" வினவினேன். நபியவர்கள், ( الصَّلاَةُ عَلَى وَقْتِهَا ثُمَّ
بِرُّ الْوَالِدَيْنِ ) "தொழுகையை அதற்குரிய
நேரத்தில் நிறைவேற்றுவது. பிறகு பெற்றோருடன் நல்லவிதமாக நடந்து கொள்வது" என்று
கூறினார்கள். நூல்:- புகாரீ-527, திர்மிதீ
பிரான்ஸ் நாட்டிலுள்ள பாரீஸ் நகர பள்ளிவாசல்
ஒன்றுக்கு வந்த ஓர் சிறுவன் பள்ளிவாசல் இமாமிடம் வந்து, "உங்கள் பாடசாலையில் பயில்வதற்காக
என் அம்மா என்னை அனுப்பி வைத்துள்ளார்." என்றான். இமாம், "எங்கே உன் அம்மா? நான் அவரிடம் சில விளக்கங்கள்
கேட்க வேண்டும்" என்றார்.
சிறுவன், "அவர் சாலையில் நிற்கிறார்.
அவர் முஸ்லிமில்லை என்பதால் இங்கே வர சாத்தியப்படவில்லை" என்றான். அந்தச் சிறுவனைப்
பற்றி அறியும் ஆவலில் இமாம் விரைந்து வெளியே வந்தார்.
வெளியே நின்றிருந்த அந்தத் தாய், "என் வீட்டுக்கு அருகில் ஒரு முஸ்லிம் பெண் குடியிருக்கிறார்.
பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பும்போது அவரின் கைகளை பிள்ளைகள் முத்தமிடுகிறார்கள். அந்தக்
குடும்பத்தில் எப்போதும் மகிழ்ச்சி நிலவுகிறது.
இமாம் அவர்களே! இந்த ஊரில் எந்த முஸ்லிமும் தன் பெற்றோரை முதியோர் இல்லத்தில் விட்டதை
நான் பார்க்கவில்லை. என் பிள்ளையைப் பிடியுங்கள். நீங்கள் உங்கள் பெற்றோருக்குச் செய்வதை
அவன் எனக்குச் செய்யக்கூடும்” என்று கூறினாள்.
ஓர் ஆய்வறிக்கை
ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழக பேராசிரியர் ஹுசைன் அஸ்காரி இஸ்லாமிய நாடுகள் எப்படி இஸ்லாமிய நாடுகளாக இருக்கின்றன என்று ஆய்வு செய்தார். இஸ்லாத்தில் அரசு மற்றும் சமுதாய விதிகளைப் பின்பற்றும் நாடுகளைத் தேடிப் பார்த்ததில், இஸ்லாமிய விதிகளை அன்றாட வாழ்வில் கடைப்பிடிப்பவர்கள் முஸ்லிம் நாடுகள் இல்லை என்பது தெரியவந்தது.
முஸ்லிம்கள் தான் உலகில் மற்றவர்களைவிட (பயான் எனும்) இஸ்லாமிய அறிவுரைகளை அதிகமாகக் கேட்கிறார்கள். அதாவது, முஸ்லிம்கள் கடந்த அறுபது ஆண்டுகளில், வெள்ளிக்கிழமை பிரசங்கத்தை குறைந்தது 3000 முறை கேட்டிருக்கிறார்கள். ஆனாலும் எந்த முஸ்லிம் நாடும் உலகின் சிறந்த நாடாக திகழவில்லை.
இஸ்லாமிய ரீதியாக (பொது மனித ஒழுக்கங்களுக்கு) மிகவும் இணக்கமான நாடு நியூசிலாந்துக்கு அடுத்தபடியாக லக்சம்பர்க் என்றும் பின்னர் அயர்லாந்து, ஐஸ்லாந்து, பின்லாந்து, டென்மார்க் ஆறாவது மற்றும் கனடா ஏழாவது இடத்தைப் பிடித்தன என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
மலேசியா 38-வது இடத்திலும், குவைத் 48-வது இடத்திலும், பஹ்ரைன் 64-வது இடத்திலும், வியக்கத்தக்க வகையில் சவூதி அரேபியா 131-வது இடத்திலும் உள்ளது. குளோபல் எகனாமி ஜர்னலில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வில், வங்கதேசத்தின் நிலை சவூதியைவிட கீழே உள்ளது.
முஸ்லிம்கள் குர்ஆன், ஹதீஸ், (சுன்னா எனும்) நபிவழி, தொழுகை, நோன்பு, ஹிஜாப், தாடி, உடை போன்றவற்றில் மிகவும் கவனமாக இருக்கிறார்கள். ஆனால், சமூகம், தொழில், வாழ்க்கையில் இஸ்லாத்தின் சட்டங்களைப் பின்பற்றுவதில்லை என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
ஒரு சீன தொழிலதிபர் கூறியது குறிப்பிடத்தக்கது. முஸ்லிம் தொழிலதிபர்கள் எங்களிடம் நம்பர் டூ போலியான பொருள்களை தயாரிக்க ஆர்டர்களுடன் வருகிறார்கள். மற்றும் அத்தகைய மற்றும் பிரபலமான நிறுவனத்தின் லேபிளை வைக்கக் கூறுகிறார்கள். பின்னர் எங்களுடன் சாப்பிடுங்கள் என்று சொன்னபோது, "இது ஹலால் இல்லை. அதனால் நான் சாப்பிடமாட்டேன்" என்று கூறினார்கள். அப்படியானால் போலிப் பொருள்களை விற்பது ஹலாலா?
ஒரு ஜப்பானிய புதிய முஸ்லிம் சொன்னார். மேற்கத்திய நாடுகளில் முஸ்லிமல்லாதவர்கள் இஸ்லாத்தின் விதிகளைப் (பொது மனித ஒழுக்கங்களை) பின்பற்றுவதை நான் காண்கிறேன். கிழக்கு நாடுகளில் நான் இஸ்லாமைப் காண்கிறேன். ஆனால், அதை முழுமையாகப் பின்பற்றி வாழும் முஸ்லிம்களை காணவில்லை.
இஸ்லாம் இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது, ஒன்று 'ஈமான்' அதாவது, இறைநம்பிக்கையின் பொதுப் பிரகடனம். மற்றொன்று 'இஹ்சான்' அதாவது, இது நியாயமான சமூக நெறிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் உணரப்படுகிறது. இந்த இரண்டையும் ஒன்றாகப் பின்பற்றாதவரின் இறைநம்பிக்கை முழுமைபெறாமல் போய்விடும். இது குறித்து ஒவ்வொரு முஸ்லிமும் கவனம் செலுத்த வேண்டும்.
நமது இஸ்லாமிய வாழ்க்கை, பிறருக்கு இறைநம்பிக்கையைக் கற்றுத்தரும்
அளவிற்கு நாம் அழகிய முன்மாதிரியாக திகழவேண்டும். அல்லாஹுத்தஆலா அதற்கு அருள்புரிவானாக!
ஆமீன்!
மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951
No comments:
Post a Comment