Search This Blog

Tuesday, 6 May 2025

செயல் புயல்

 

செயல் புயல்

 

فَانْطَلَقَا حَتَّى إِذَا أَتَيَا أَهْلَ قَرْيَةٍ اسْتَطْعَمَا أَهْلَهَا فَأَبَوْا أَنْ يُضَيِّفُوهُمَا فَوَجَدَا فِيهَا جِدَارًا يُرِيدُ أَنْ يَنْقَضَّ فَأَقَامَهُ

(கிள்ர் – அலை, மூசா - அலை ஆகிய) அவ்விருவரும் (தொடர்ந்து) நடந்தனர். இறுதியில் இருவரும் ஒரு கிராமத்தாரிடம் வந்து, தங்களுக்கு உணவளிக்குமாறு அம்மக்களிடம் வேண்டினர். ஆனால், அவர்களோ அவ்விருவருக்கும் விருந்தளிக்க மறுத்துவிட்டனர். பிறகு அவர்கள் அங்கு விழக்கூடிய நிலையில் இருந்த ஒரு சுவற்றைக் கண்டனர். ஆகவே, அவர் (அதற்கு மண் அப்பி செப்பனிட்டு) அதனை (விழாது) நிலை நிறுத்தி வைத்தார். திருக்குர்ஆன்:-18:77

 

ஒரு ஆட்சியாளர் தமது குடிமக்களிடம், ஒரு தலைவர் தமது தொண்டர்களிடம், ஒரு ஆசிரியர் தமது மாணவர்களிடம், ஒரு கணவன் தமது மனைவியிடம், ஒரு தந்தை தமது பிள்ளைகளிடம் ஒரு நல்லதைப் பற்றிச் சொல்வதைவிட, தாமே செய்து காட்டினால் அது மிகுந்த பலனைத் தரும்.

 

சொன்னதை செய்! அதை நீயே முதலில் செய்! மாற்றம் உன்னிலிருந்தே தொடங்கட்டும்! இக்கோட்பாட்டை பின்பற்றுபவர்கள் மட்டுமே வாழ்வில் வெற்றி பெற முடியும். சமூகத்தில் தாக்கங்களை ஏற்படுத்த முடியும். ஊருக்கு மட்டும் உபதேசம் செய்யும் உத்தமர்களால் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 23 ஆண்டுகளில் அரேபிய மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டார்கள். அரேபிய சமூகத்தில் முழுமையான மாற்றங்களை கொண்டு வந்தார்கள். அதற்கான காரணங்களில் ஒன்றுதான் சொல்லியதைச் செய்வார்கள். எல்லோருக்கும் முன்னதாக செய்வார்கள். சமயக் கடமைகள், நற்பண்புகள், சமூக சேவை, அநீதிகளுக்கு எதிரான போராட்டம் என எல்லாவற்றிலும் அவர்களே முதல் ஆளாக நிற்பார்கள்‌. அவர்களுடைய வாழ்வில்  இதற்கு பல சான்றாக  உள்ளது.

 

செப்பனிடும் பணியில்

 

மூசா (அலை) மற்றும் கிள்ர் (அலை) ஆகிய இருவரும் தமது பயணத்தில் இடிந்துவிழும் நிலையில் இருந்த ஓர் அநாதைச் சிறுவனுக்குரிய வீட்டை உடனே செப்பனிட்டார்கள். அவர்கள் அந்த செப்பனிடும் பணிக்கு உதவியாக அங்கிருந்த எவரையும் அழைக்கவுமில்லை. அந்த ஊராரிடம் எந்த பிரதிபலனை எதிர்பார்க்கவுமில்லை. இதுகுறித்து தலைப்பில் காணும் தெரு வசனம் விவரிக்கிறது.

 

நாம் ஓர் இயலாதவனுக்கு உதவும் நோக்கில் இவனுக்கு உதவுங்கள் என்று பிறரிடம் சொல்வதைவிட, முதலில் நம்மால் முடிந்தவரை அவனுக்கு உதவ வேண்டும். அதன் பிறகு தான் பிறரிடம் அது குறித்து கூற வேண்டும். அப்போது தான் அந்தச் சொல்லுக்கு மதிப்பு இருக்கும்.

 

சமையல் பணி

 

ஒரு பயணத்தில் அருமை நாயகம் (ஸல்) அவர்கள் சமையல் செய்வதில் தாங்களும் ஒத்துழைக்க வேண்டும் என எண்ணியவாறு விறகு சேகரித்து வர எழுந்தபோது, நபித்தோழர்கள் சமையலுக்குரிய அனைத்தையும் தாங்களே செய்து முடிப்பதாக கூறினர். அப்போது நபியவர்கள், "நான் உங்களைவிட மேலானவனாகக் கருதிக்கொள்ள விரும்பவில்லை. தன் சக தோழர்களில் தன்னை மேலானவனாக ஆக்கிக்கொள்ள விரும்பும் அடியானை அல்லாஹ் பிரியப்பட மாட்டான். எனவே, நான் உங்களில் ஒருவன். என்னை நீங்கள் தனிமைப்படுத்திவிடாதீர்கள்" என்று கூறியவர்களாய் எழுந்து சென்று விறகு சேகரித்துக் கொண்டு வந்தார்கள்.

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள், “நான் ஒரு இறைத்தூதர். உங்களுக்குரிய தலைவர். எனவே, நீங்கள் எனக்கு பணிவிடை செய்வது உங்களுக்கு நன்மையைத் தரும்” என்று சொல்லிக்கொண்டு ஒரு ஓரத்தில் அமர்ந்து விடவில்லை. நமக்குரிய சமையல் பணியில் எனக்கும் பங்கு உண்டு என்றார்கள்.

 

கட்டுமான பணி

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு சென்றவுடன் முதல் முயற்சியாக பள்ளிவாசல் ஒன்றை அமைப்பதற்கு ஏற்பாடு செய்தார்கள். அந்த பள்ளிவாசல் கட்டுமான பணி மேற்கொண்டபோது நபியவர்கள் கல், மண் சுமந்து சென்றார்கள். எந்த அளவுக்கென்றால் நபியவர்களின் மார்பு பகுதி புழுதியடைந்துவிட்டது. நபியவர்கள் அந்த கட்டுமான பணியில் நபித்தோழர்களை உற்சாகப்படுத்தும் வகையில்,

 

( اللهم لا عَيْشَ إِلَّا عَيْشُ الآخِرَة  فَاغْفِرْ لِلْأَنصَارِ وَالمُهَاجِرَة‏ هَذَا الحِمَالُ لَا حِمَالَ خَيْبَرْ  هـَـذَا أَبـَــرُّ رَبِّنَا وَأطْـهَر‏ ) இறைவா! மறுமை வாழ்வைத் தவிர (உண்மையான) வேறு வாழ்வு இல்லை. அன்சாரிகள் முஹாஜிர்களை நீ மன்னிப்பாயாக! இந்த சுமை கைபருடைய சுமையல்ல. இது எங்கள் இறைவனிடம் (சேமித்து வைக்கப்படும்) நீடித்த நன்மையும் (கைபரின் சுமையைவிடப்) பரிசுத்தமானதாகும்" என்று கவிதை படித்தார்கள். 

 

நபியவர்களின் இந்த கவிதை சொற்கள் நபித்தோழர்களுக்கு வேலையில் மிகுந்த உற்சாகத்தை அளித்தது. நபித்தோழர்களும் உற்சாகம் மிகுந்து, ( لَئِنْ قَعَدْنَا وَالنَّبِيُّ يَعْمَلُ لِذَاكَ مِنَّا الْعَمَلُ الْمُضَلَّلِ ) "இறைத்தூதர் பணி செய்ய, நாம் அமர்ந்தால் அது வழிகெட்ட செயலல்லவோ" என்று கவிதைப் படித்தார்கள். அறிவிப்பாளர்:- சுராக்கா பின் மாலிக் (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-3906, அல்பிதாயா வந்நிஹாயா, அர்ரஹீகுல் மக்தூம்

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களுக்கு பள்ளிவாசலின் அவசியத்தை எடுத்துச்சொல்லி, அப்படி ஒரு கட்டடம் வேண்டும். அதைக் கட்டுங்கள் என்று வெறுமனே கட்டளையிடவில்லை. அல்லது கட்டடப் பணி நடைபெறும்போது அருகில் அமர்ந்துகொண்டு ஆலோசனை மட்டும் சொல்லும் மேஸ்திரி வேலையை மட்டும் செய்யவில்லை களத்தில் இறங்கி பணியாற்றியுள்ளார்கள்.

 

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது. பத்ர் போர் காலகட்டத்தில் (நபித்தோழர்கள்) ஒவ்வொரு மூன்று பேருக்கும் தலா ஓர் ஒட்டகம் என்ற விதத்திலேயே நாங்கள் (வாகன வசதி பெற்று) இருந்தோம். (அந்த வகையில்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் பயணத் தோழர்களாக அபூ லுபாபா (ரலி) அவர்களும் அலீ (ரலி) அவர்களும் இருந்தனர்.

 

நபியவர்கள் நடந்து வர வேண்டிய முறை வந்தது. அப்போது அவ்விருவரும் "(நாயகமே!) உங்களுக்காக நாங்கள் நடக்கிறோம். (நீங்களே தொடர்ந்து வாகனத்தில் சவாரி செய்யுங்கள்)" என்றனர்.

 

அப்போது நபியவர்கள், ( مَا أَنْتُمَا بِأَقْوَى مِنِّي وَلَا أَنَا بِأَغْنَى عَنِ الْأَجْرِ مِنْكُمَا ) "(வேண்டாம்!) நீங்கள் இருவரும் (நடப்பதற்கு) என்னைவிட மிகவும் வலிமை பெற்றோரும் அல்லர். உங்களைவிட நான் பிரதிபலன் தேவையற்றவனும் அல்லன்" என்று சொல்லிவிட்டார்கள். நூல்:- முஸ்னது அஹ்மத்-3706

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள், “நான் இந்தப் போர்படையின் தளபதியாகும். எனவே, நான் தனியாக ஒரு ஒட்டகத்தில் பயணிக்கிறேன். நீங்கள் ஒரு ஒட்டகத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் முறை வைத்து பயணித்து வாருங்கள்” என்று தன்னை தனிமைப்படுத்தி தன்னை உயர்வாக கருதி சொல்லவில்லை. எல்லோருக்குமான சட்டமே எனக்கும் பொருந்தும் என்றார்கள்.

 

கல், மண் சுமந்தார்கள்

 

ஹிஜ்ரி 4 ஆண்டு (கி.பி.625) ஷவ்வால் மாதம் மதீனா நகர்மீது எதிரிகள் பெரும் படையுடன் வந்து தாக்க எண்ணியிருந்தனர். அதை அறிந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தற்காப்புக்காக மதீனா நகரைச் சுற்றி பெரும் அகழ் தோண்ட உத்தரவிட்டார்கள்.

 

பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது. அகழ்ப் போரின்போது அருமை நாயகம் (ஸல்) அவர்களும் அகழ் தோண்டினார்கள். அப்போது அவர்கள் மண்ணைச் சுமந்து எடுத்துச்சென்று கொண்டிருந்ததை நான் பார்த்தேன். அவர்களது வயிற்றின் சருமத்தை என்னைவிட்டு மண் மறைத்துவிட்டிருந்தது. (அவர்களின் வயிற்றில் புழுதி படிந்திருந்தது.) நபியவர்கள் நிறைய உரோமம் உடையவராக இருந்தார்கள். நூல்:- புகாரீ-4106

 

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள். நாங்கள் அகழ்ப் போரின்போது அகழ் தோண்டிக்கொண்டிருந்தோம். அப்போது கெட்டியான பாறையொன்று வெளிப்பட்டது. (அதை எவ்வளவோ முயன்றும் எங்களால் உடைக்க முடியவில்லை.) உடனே இதைப்பற்றி கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களிடம  தெரிவிக்க, அப்போது நபியவர்கள், ( أَنَا نَازِلٌ ) "நான் இறங்கிப் பார்க்கிறேன்" என்று கூறிவிட்டு எழுந்து (உளி போன்ற) குந்தாலி எடுத்து பாறையின்மீது ஓங்கி அடித்தார்கள். அது குறுமணலாக மாறியது. நூல்:- புகாரீ-4101

 

சுத்தப்படுத்தினார்கள்

 

அபூசயீத் அல்குத்ரி (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலின் கிப்லா திசைச் சுவரில் (உமிழப்பட்டிருந்த) சளியைக் கண்டார்கள். உடனே சிறு கல் ஒன்றால் அதைச் சுரண்டி (தூய்மை படுத்தி)னார்கள். நூல்:- புகாரீ-414, அபூதாவூத்-406, இப்னுமாஜா-753

 

மதீனாவின் மன்னராய் விளங்கிய மாநபி பெருமானார் (ஸல்) அவர்கள், "யார் அங்கே? இதை சுத்தப்படுத்துங்கள்" என்று ஒரு உத்தரவிட்டிருந்தால் போதும், அதை செய்துமுடிக்க ஒன்றுக்கும் மேற்பட்டோர் அங்கு தயார் நிலையில் இருந்தனர். ஆயினும், அதை தாங்களே சுத்தப்படுத்தினார்கள் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

 

வாரி வழங்குதல்

 

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒரு மனிதர் கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களிடம் வந்து, "எனக்கு (கடுமையான பசி)த் துன்பம் ஏற்பட்டுள்ளது" என்று கூறினார். நபியவர்கள் தம் துணைவியரில் ஒருவரிடம் ஆளனுப்பி (அவர்களிடம் உணவு ஏதேனும் இருக்கிறதா என்று கேட்டு வரச் சொன்)னார்கள். அதற்கு அத்துணைவியார், ( وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ مَا عِنْدِي إِلاَّ مَاءٌ ) "அல்லாஹ்வின் மீதாணையாக! என்னிடம் தண்ணீரைத் தவிர வேறு எதுவும் இல்லை" என்று பதிலளித்தார்.

 

பிறகு (தம் துணைவியரில்) மற்றொருவரிடம் ஆளனுப்பியபோது, அவரும் அதைப் போன்றே பதிலளித்தார். முடிவில் ஒவ்வொரு துணைவியரிடமிருந்தும் அதே பதிலே வந்தது. "இல்லை; அல்லாஹ்வின் மீதாணையாக! என்னிடம் தண்ணீரைத் தவிர வேறெதுவும இல்லை" என்றே கூறினர்.

 

அப்போது நபியவர்கள் (தம் தோழர்களை நோக்கி!), ( مَنْ يُضِيفُ هَذَا اللَّيْلَةَ رَحِمَهُ اللَّهُ ) "இன்றிரவு இவருக்கு விருந்தளிப்பவர் யார்? அவருக்கு அல்லாஹ் அருள்புரிவான்" என்று கேட்டார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர் எழுந்து, "நான் (இவருக்கு விருந்தளிக்கிறேன்) நாயகமே! என்று சொல்லி, (அவரை அழைத்துக்கொண்டு) தம் வீட்டுக்குச் சென்றார். நூல்:- முஸ்லிம்-4175

 

மிக்தாத் பின் அஸ்வத் (ரலி) அவர்கள் கூறியதாவது. நானும் என்னிரு நண்பர்களும் பசியால் காதும் கண்ணும் (அடைபட்டுப்) போய்விட்ட நிலையில் வந்து நபித்தோழர்களுக்கு முன்னால் தலைகாட்டினோம். (வறுமை சூழ்ந்திருந்த அந்த நிலையில்) அவர்களின் எவரும் எங்களை (விருந்தாளியாக) ஏற்றுக்கொள்ளவில்லை.

 

எனவே, நாங்கள் பேராசான் பெருமானார் (ஸல்) அவர்களிடம் சென்றோம். நபியவர்கள் எங்களை தம் வீட்டாரிடம் அழைத்துச் சென்றார்கள். அங்கு மூன்று பெட்டை வெள்ளையாடுகள் இருந்தன. நபியவர்கள், ( احْتَلِبُوا هَذَا اللَّبَنَ بَيْنَنَا ) "இவற்றிலிருந்து பால் கறந்து நம்மிடையே பகிர்ந்துகொள்வோம்" என்று சொன்னார்கள். அவ்வாறே நாங்கள் பால் கறந்து எங்களில் ஒவ்வொருவரும் தமக்குரிய பங்கைப் பருகினோம். நூல்:- முஸ்லிம்-4177

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள், “கேட்டு வருவோருக்கு முதலில் தம்மிடம் இருந்தால் அதை வழங்குவது. பிறகு தான் பிறரிடம் வழங்குங்கள் என்று என்றுரைப்பது மிக ஏற்றமென” எண்ணினார்கள்.

 

எந்த நற்செயலையும் முதலில் தாம் செய்யவே ஆசைப்படவேண்டும். பிறகு தான் பிறருக்கு அதைப்பற்றி எடுத்துரைக்க வேண்டும்.

 

பெண் குழந்தைகள்

 

அபூகத்தாதா (ஹாரிஸ் பின் ரிப்ஈ) அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் புதல்வி ஸைனபுக்கும் - அபுல்ஆஸ் பின் ரபீஆ பின் அப்தி ஷம்ஸ் (ரலி) அவர்களுக்கும் பிறந்த (தம் பேத்தி) உமாமா பின்த் ஸைனபை (தமது தோளில்) சுமந்துகொண்டு தொழுவார்கள்.

 

சிரவணக்கம் செய்யச் செல்லும்போது உமாமாவை இறக்கிவிடுவார்கள்; எழுந்து நிற்கும்போது (மீண்டும்) உமாமாவை (தமது தோளில்) தூக்கிக்கொள்வார்கள். நூல்:- புகாரீ-516 முஸ்லிம்-943, நசாயீ1189

 

இமாம் ஃபாகிஹானீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அன்றைய அரபியர்கள் பெண் குழந்தைகளை சுமந்துச் செல்வதை வெறுத்துவந்தனர். உமாமா (ரலி) அவர்களைத் தோளில் சுமந்ததன் மூலம், இந்த தவறானப் பழக்கத்தைத் தகர்த்து எறிவதே அருமை நாயகம் (ஸல்) அவர்களின் நோக்கமாக இருந்தது. தொழுகையில்கூட பெண் குழந்தைகளை சுமக்கலாம்; அது வெறுக்கத்தக்க செயல் அல்ல என்பதை நபியவர்கள் செயலின் மூலம் காட்டினார்கள்.

 

பேச்சின் மூலம் விளக்குவதைவிட செயலின் மூலம் விளக்குவது அதிக பலனைத் தரும்.

 

இமாம் ஹஸன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ( عِظِ النَّاسَ بِفِعْلِكَ وَلَا تَعِظْهُمْ بِقَوْلِكَ ) நீ உனது செயலால் மக்களுக்கு உபதேசம் செய்! உனது சொல்லால் (மட்டுமே) அவர்களுக்கு உபதேசம் செய்யாதே! நூல்:- ஸுஹ்து இமாம் அஹ்மது இப்னு ஹன்பல்-1559

 

சொல்லால் உபதேசிப்பதைவிட செயலால் உபதேசிப்பது மிக அதிகம் பலன் தரக்கூடியதாகும். அதாவது, நாம் நல்லதை எடுத்து நடக்கவேண்டும். பிறகு,  அதை பிறருக்கு நாம் உபதேசம் செய்ய வேண்டும். நாம் பிறருக்கு உபதேசம் செய்வதற்கு முன்னர் நாம் அந்த நல்லதை நமக்குள் கொண்டு வர வேண்டும். பிறகு, அதை பிறருக்கு நாம் உபதேசிக்க வேண்டும். அது நல்ல மாற்றத்தை விரைவாக உண்டாக்கும்.

 

சுருங்கக்கூறின், சொல்லைவிட செயலுக்கே வீரியம் அதிகம். எனவே, நாம் நற்காரியங்களை செய்வதில் முதலாமானவராக இருப்பதற்கு அல்லாஹ் அருள்புரிவானாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

No comments:

Post a Comment

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...