என் பார்வையில் நான்
فَلَا تُزَكُّوا أَنْفُسَكُمْ هُوَ أَعْلَمُ
بِمَنِ اتَّقَى
உங்களை தூய்மையானவர்கள் என்று நீங்களே தற்புகழ்ச்சி செய்துகொள்ளாதீர்கள்.
உண்மையில் யார் இறையச்சம் உடையவர் என்பதை அவனே நன்கறிந்தவன். திருக்குர்ஆன்:- 53:32
தன்னை உயர்வாகவும், பிறரைத் தாழ்வாகவும்
எண்ணும் பழக்கம் தவிர்க்கப்பட வேண்டியவை ஆகும். கர்வம் கொண்ட ஒருவன் தான், தன்னிலையை உயர்வாகக் காட்ட விரும்புவான். எனவே,
அவன் பிறரைத் தரக்குறைவாக பேசுவான். "அவர்
அறியாதவர்; விளக்கம் குறைந்தவர்;
தூர நோக்கில்லாதவர்; மனத்தூய்மையற்றவர்" என்பன போன்ற அமைப்பில் பேசுவான். இவ்வாறு
கூறுவதன் மூலம் மேற்கூறிய பலவீனங்களை விட்டும், தான் நீங்கியவன் என உணர்த்துவதே உள்நோக்கமாக இருக்கும்.
இவ்வாறு பேசுபவர்கள், நாம் யாரைப்பற்றிக்
குறைவாக கூறுகின்றோமோ அவரைவிட, நமது இச்செயலால் நாம்
தாழ்ந்து சென்று கொண்டிருக்கிறோம் என்பதை உணர வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( وَإِيَّاكُمْ وَالتَّمَادُحَ فَإِنَّهُ الذَّبْحُ ) தற்புகழ்ச்சி குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். அது தன்னைத்
தானே கத்தியால் அறுத்துக் கொள்வதாகும். நூல்:- முஸ்னது அஹ்மத் தஃப்சீர் இப்னு கஸீர்
அந்நிசா வசனம்-49
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ تَعَظَّمَ فِي نَفْسِهِ, وَاخْتَالَ فِي مِشْيَتِهِ, لَقِيَ اَللَّهَ وَهُوَ عَلَيْهِ غَضْبَانُ ) யார் தம்மை மனதிற்குள் பெரியவராக எண்ணுகிறாரோ அல்லது கர்வத்துடன் நடக்கிறாரோ அவர் (மறுமையில்) தம்மீது அல்லாஹ் கோபம் கொண்டிருக்கும் நிலையில் தான் அவனைச் சந்திப்பார். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் நூல்:- அல்அதபுல் முஃப்ரத்-549, முஸ்னது அஹ்மத்-5723, ஹாகிம், புலூகுல் மராம்-1540
தற்பெருமை என்பது, ஒருவர் தம்மைப் பற்றியும் தம்மைச் சார்ந்தவர்களை பற்றியும் பெருமைப்பட்டுக்கொள்வது; மற்றவர்களைக் காட்டிலும் தானே உயர்ந்தவன் என இறுமாப்புக்கொள்வது; சபைகளில் தமக்கே முதலிடம் மதிப்பும் கிடைக்க வேண்டும் என எதிர்பார்ப்பது; யாரும் தனக்கு முதலில் முகமன் கூறாவிட்டால் சினம்கொள்வது; விவாதத்தின்போது சத்தியத்தை மறப்பது; பொதுமக்களை நோக்கும்போது விலங்குகளைப் பார்ப்பதுபோன்று பார்ப்பது முதலான செயல்பாடுகள் எல்லாமே தற்பெருமையில் அடங்கும். அவற்றில் ஒன்றுதான் நடக்கும்போது கர்வத்தோடு நடந்து செல்வதும்.
இவ்வாறு நடந்து கொள்பவர், தம்மீது கோபம் கொண்டவனாகவே அல்லாஹ்வை மறுமையில் சந்திப்பார். காரணம், உண்மையில் பெருமைக்குரியவன் யாரென்றால், அனைத்து அதிகாரங்களும் ஆற்றல்களும் உடைய அல்லாஹ் ஒருவன் மட்டுமே. அவனே பெருமைகொள்ளத் தக்கவன். அப்படியிருக்க, அவனோடு போட்டிபோடுவதைப் போன்று, அவனால் உருவாக்கப்பட்ட மனிதன் நடந்துகொண்டால் கோபம் கொள்ளாமல் இருப்பானா?
அவன் நாடினால், மன்னிக்கலாம்; அவன் நாடினால், தண்டிக்கலாம். இது அவனது விருப்பத்தைப் பொறுத்தது. ஆனால், ஒன்று மட்டும் உண்மை. மனிதனின் இந்தப் பெருமையும் கர்வமும் பெரும் பாவங்களில் ஒன்றாகும். நூல்:- ஃபைளுல் கதீர், அத்தய்சீர்
யூத, கிறிஸ்தவர்களின் எண்ணம்
(நபியே) தம்மைத் தாமே
தூய்மையானவர்கள் எனக் கருதி கொள்வோரை நீர் பார்க்கவில்லையா? (அவர்கள் கருதுவது போலன்று) மாறாக, தான் நாடுவோரையே அல்லாஹ் தூய்மையானவர்களாக ஆக்குகிறான். அணுவளவும்
அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள். திருக்குர்ஆன்:- 4:49
மார்க்க மேதைகளான ஹசன் அல்பஸரீ (ரஹ்), கத்தாதா (ரஹ்) போன்றோர் கூறுகிறார்கள். யூதர்களும்
கிறிஸ்தவர்களும், "நாங்கள் அல்லாஹ்வின் பிள்ளைகளும் அவனுடைய நேசர்களும்
ஆவோம்" (5:18) என்று கூறி வந்தனர். அவ்வாறே "யூதர்களாக அல்லது கிறிஸ்தவர்களாக
இருப்போரைத் தவிர வேறு யாரும் ஒருபோதும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்"
(2:111) என்றும் கூறிவந்தனர். அவர்கள் தொடர்பாகவே மேற்காணும் வசனம் அருளப்பெற்றது.
நூல்:- தஃப்சீர் இப்னு கஸீர்
பேரறிஞர் இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். மேற்காணும் (4:49) வசனம் ஒருவரை ஒருவர் முகப்புகழ்ச்சி செய்வதையும்,
தம்மைத் தாமே தூய்மையாளர்கள் என கருதி கொள்வதையும்
கண்டித்து அருளப்பெற்றது.
உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். ஒருவர் தமது கருத்தைக் கொண்டு பெருமிதம் கொள்வதையே
உங்கள் விஷயத்தில் நான் மிகவும் அஞ்சுகிறேன். ( مَنْ قَالَ: أَنَا مُؤْمِنٌ، فَهُوَ كَافِرٌ. وَمَنْ قَالَ: هُوَ عَالَمٌ،
فَهُوَ جَاهِلٌ. وَمَنْ قَالَ: هُوَ فِي الْجَنَّةِ، فَهُوَ فِي النار ) யார் தம்மை(த் தூய்மையான)
இறைநம்பிக்கையாளர் என்று கூறுகிறாரோ அவர் (இறைவனை) மறந்தவர் ஆவார். நான் ஓர் அறிஞன்
என்று யார் (தம்மைத் தாமே) புகழ்கிறாரோ அவர் முட்டாள் ஆவார். யார் (தம்மைத் தாமே தூய்மைப்படுத்தி)
நான் சொர்க்கத்தில் இருப்பேன் என்று கூறுகிறாரோ அவர் நரகத்தில் தான் இருப்பார். தல்ஹா
பின் உபைத்துல்லாஹ் (ரலி) அவர்கள் நூல்:- தஃப்சீர் இப்னு மர்தவைஹி, தஃப்சீர் இப்னு கஸீர் அந்நிசா வசனம்-49, கஷ்ஃபுல் காஃபா
வணக்க வழிபாடுகள்
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நாங்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு இறைவழிபாடும் வீரத்தீரமும்
நிறைந்த ஒருவர் இருந்தார். அவரைப்பற்றி பேராசான் பெருமானார் (ஸல்) அவர்களிடம் நாங்கள்
குறிப்பிட்டபோது, அவர் அங்கு வந்தார்.
நாங்கள், ( هَا هُوَ ذَا ) "இதோ இவர் தான்" என்று கூறினோம். அங்கு வந்த அவர் யாருக்கும் சலாம் கூறவில்லை.
அப்போது நபியவர்கள் அவரிடம், ( نَشَدْتُكَ بِاللَّهِ هَلْ قُلْتَ حِينَ
وَقَفْتَ عَلَى الْمَجْلِسِ مَا فِي الْقَوْمِ أَحَدٌ أَفْضَلُ مِنِّي ) "அல்லாஹ்வின் மீதாணையாக! உம்மிடம் நான் கேட்கிறேன். 'மக்களில் என்னைவிட சிறந்தவர் யாரும் இல்லை'
என்று நீங்கள் சபையில் நிற்கும்போது கூறினீரா?”
என்று கேட்டார்கள். அதற்கு அவர், “அல்லாஹ்வின் மீதாணையாக, ஆம்!” என்று கூறினார். பிறகு அவர் தொழுவதற்கு பள்ளிவாசலுக்குள்
சென்றுவிட்டார்.
நபியவர்கள், ( مَنْ يَقْتُلُ
الرَّجُلَ ) "இந்த மனிதரை கொல்பவர்
யார்?" என்று கேட்டார்கள்.
அபூபக்ர் (ரலி) அவர்கள் நான் அவரைக் கொல்கிறேன் என்று கூறிவிட்டு, பள்ளிவாசலுக்குள் நுழைந்தார்கள். அப்போது அவர் சஜ்தாவில்
இருந்தார். எனவே, அவரைக் கொல்லாமல் வந்துவிட்டார்கள். அப்போது நபியவர்கள்,
( مَا فَعَلْتَ
) "என்ன செய்தீர்?" என்று கேட்டார்கள்.
அபூபக்ர் (ரலி) அவர்கள், ( كَرِهْتُ
أَنْ أَقْتُلَهُ وَهُوَ يُصَلِّي وَقَدْ نُهِيتَ عَنْ قَتْلِ
الْمُصَلِّينَ ) "(நாயகமே!) நீங்கள் தான் தொழுதுக்கொண்டிருப்பவரை கொல்லக்கூடாது என்று தடுத்துள்ளீர்கள்.
எனவேதான், நான் அவரை கொல்வதை
வெறுத்தவனாக (அவரைக் கொல்லாமல்) வந்துவிட்டேன்" என்று கூறினார்கள்.
பிறகு உமர் (ரலி) அவர்கள், நான் அவரைக் கொல்கிறேன்
என்று கூறியவாறு, பள்ளிவாசலுக்குள்
நுழைந்தார்கள். அப்போது அவர் சஜ்தாவில் இருந்தார். உமர் (ரலி) அவர்கள் அவரைக் கொல்லாமல்
வந்துவிட்டார்கள். நபியவர்கள் "என்ன ஆனது?" என்று கேட்டார்கள். உமர் (ரலி) அவர்கள், ( وَجَدْتُهُ وَاضِعًا وَجْهَهُ فَكَرِهْتُ أَنْ أَقْتُلَهُ
) "(நாயகமே!) அவர் சஜ்தாவில் இருக்கக்
கண்டேன். எனவேதான், நான் அவரை கொல்வதை
வெறுத்தவனாக (அவரைக் கொல்லாமல்) வந்துவிட்டேன்" என்று கூறினார்கள்.
பிறகு நபியவர்கள், ( مَنْ يَقْتُلُ
الرَّجُلَ ) "இந்த மனிதரை கொல்பவர்
யார்?" என்று கேட்டார்கள்.
அப்போது அலீ (ரலி) அவர்கள், "நான் (கொல்கிறேன்)"
என்றார்கள். நபியவர்கள், ( أَنْتَ
إِنْ أَدْرَكْتَهُ ) "நீ அவரைப் பிடித்துவிட்டால் (கொன்றுவிடு!)" என்று கூறினார்கள். அலீ (ரலி)
அவர்கள் பள்ளிவாசலுக்குள் நுழைந்தபோது அவர் பள்ளிவாசலை விட்டு சென்றுவிட்டார். அலீ
(ரலி) அவர்கள், ( مَا
وَجَدْتُهُ ) "(நாயகமே!) நான் அவரைக்
காணவில்லை” என்று கூறினார்கள். நூல்:- மஜ்மஉஸ் ஸவாயித்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ( يَظْهَرُ الْإِسْلَامُ حَتَّى يَخْتَلِفَ التُّجَّارُ فِي الْبَحْرِ
وَحَتَّى تَخُوضَ الْخَيْلُ فِي سَبِيلِ
اللَّهِ ثُمَّ يَظْهَرُ قَوْمٌ يَقْرَؤُونَ الْقُرْآنَ يَقُولُونَ مَنْ أَقْرَأُ
مِنَّا مَنْ أَفْقَهُ مِنَّا مَنْ أَعْلَمُ مِنَّا ) “கடலில் வியாபாரம் பெருகும்
அளவுக்கு, இறைவழியில் குதிரைகள்
புறப்படும் அளவுக்கு இஸ்லாம் வெளியாகும். (அந்தளவுக்கு முஸ்லிம்கள் அதிகமாகிவிடுவார்கள்)
பின்பு எங்களைவிட (எவரும்) படித்தவர் உண்டா? எங்களைவிட (எவரும்) மார்க்க சட்டங்களை புரிந்தவர்
உண்டா? (பொது விஷயத்தில்)
எங்களைவிட (எவரும்) அறிந்தவர் உண்டா? என்று கூறி, குர்ஆனை ஓதும் சில கூட்டம் வெளியாகும்” என்று கூறினார்கள். பிறகு நபியவர்கள் தம் தோழர்களை நோக்கி! ( هل في أولئكَ مِن خيرٍ ) “அவர்களிடம் நற்செயல்கள் ஏதேனும்
இருக்குமா?” என்று கேட்டார்கள்.
அதற்கு தோழர்கள், “அல்லாஹ்வும் அவனது தூதருமே அறிந்தவர்கள்” என்று கூறினார். நபியவர்கள், ( أولئكَ منكم مِن هذه الأُمَّةِ فأولئكَ هم وَقودُ النَّارِ ) “அவர்களும் இந்த சமுதாயத்தை சார்ந்தவர்கள்தான். (எனினும்) அவர்கள் நரகத்தின் விறகுகள் தான்” என்று கூறினார்கள். அறிவிப்பாளர்:- உமர் (ரலி) அவர்கள் நூல்:- அல்முஅஜமுல்
அஸ்வத் இமாம் தப்ரானீ, பஸ்ஸார்
மற்றவர்களைவிட நான் உயர்ந்தவன் என்ற எண்ணம் கொண்டவன், எவ்வளவு பெரிய வணக்கசாலியாக இருந்தாலும் சரி, அவன் வாழ்வதற்கு தகுதியானவன் அல்லர். அவன் கொல்லப்பட
வேண்டியவனே என்பது நபியவர்களின் நிலைப்பாடு என இந்த நிகழ்வு எடுத்துரைக்கிறது.
சிலருக்கு, தாம் செய்கின்ற இறைவழிபாடுகளும்
இன்ன பிற நல்லறங்களும், "மக்களைவிட நானே சிறந்தவன்"
என்ற எண்ணத்தை தோற்றுவித்து விடுகிறது. இது அபாயம் என்று அவர்கள் உணர்வதில்லை.
அறிவாற்றல்
ஒவ்வொரு அறிஞனுக்குமேல் அறிஞன் இருக்கிறான். திருக்குர்ஆன்:- 12:76
ஒருநாள் உமர் (ரலி) அவர்கள் ஒரு கடை வீதியில் ஒரு மனிதரைக் கடந்து சென்றார்கள்.
அப்போது அந்த மனிதர் (பின்வருமாறு) ( اللهم اجْعَلْنِي مِنْ عِبَادِكَ القَلِيْلِ ) “யா அல்லாஹ்! என்னை
நீ உன்னுடைய குறைவான அடியார்களில் ஒருவராக ஆக்குவாயாக”என்று பிரார்த்தனை செய்து கொண்டேயிருந்தார்.
இதை கவனித்த உமர் (ரலி) அவர்கள் அவரிடம், ( مِنْ أَيْنَ أَتَيْتَ بِهَذَا الدُّعَاءِ؟ ) “நீ இந்த பிரார்த்தனையை எங்கிருந்து பெற்றுக்கொண்டாய்” என்று கேட்டார்கள்.
அதற்கு அவர் ( إنَّ اللهَ
يَقُوْلُ فِي كِتَابِهِ العَزِيْزِ: وَقَلِيلٌ مِّنْ عِبَادِيَ الشَّكُورُ ) “நிச்சயமாக அல்லாஹ்
தன் வேதத்தில் (பின்வருமாறு) “மேலும் என் அடியார்களில் நன்றி செலுத்துவோர் குறைவானவர்களே” (என்று கூறினோம்).
என்று” கூறுகிறான். இந்த
வசனத்திலிருந்து பெற்றுக் கொண்டேன்” என்றார்.
உடனே உமர் (ரலி) அவர்கள் அழுதவாறு ( كُلُّ النَّاسِ أَفْقَهُ مِنْكَ يَا عُمَرَ ) “உமரே! உன்னைவிட எல்லா
மக்களும் மார்க்கத்தில் மிகுந்த அறிவுள்ளவர்கள் இருக்கிறார்களே என்று கூறினார்கள்.
நூல்:- முஸன்னஃப் இப்னு அபீஷைபா, அஸ்ஸுஹ்து இமாம் அஹ்மத், தஃப்சீர் குர்துபீ
தாபிஈன்களில் மூத்தவரான அப்துர்ரஹ்மான் பின் அபீலைலா (ரஹ்) அவர்கள் என்ற கூறுகிறார்கள். ( أَدْرَكْتُ عِشْرِينَ وَمِائَةً مِنَ الْأَنْصَارِ مِنْ أَصْحَابِ
رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يُسْأَلُ أَحَدُهُمْ
الْمَسْأَلَةَ فَيَرُدُّهَا إِلَى هَذَا، وَهَذَا إِلَى هَذَا، حَتَّى تَرْجِعَ
إِلَى الْأَوَّلِ مِنْهُمْ، مَا مِنْهُمْ مِنْ أَحَدٍ إِلَّا وَدَّ أَنَّ أَخَاهُ
كَفَاهُ الْفُتْيَا ) நான் என் காலத்தில் அன்சாரித்தோழர்களில் 120
நபித்தோழர்களைப் பார்த்திருக்கிறேன். ஒரு கேள்வி கேட்கப்பட்டால்
அவர்களில் யாரும் உடனே பதில் சொன்னதில்லை. ஒருவர் இன்னொருவரை கை காட்டுவார். அவர் இன்னொரு
நபித்தோழரை அடையாளம் காட்டுவார். இப்படியே மாறி மாறி கடைசியாக ஆரம்பமாக கேள்வி கேட்கப்பட்ட
அந்த நபித்தோழரையே அடையாளம் காட்டப்படுவார். அவர்களில் அனைவரும் மார்க்கத் தீர்ப்பு
வழங்குவதில் தன்னை விட மற்றவர்கள் தான் பொறுத்தமானவர்கள் என்றே கருதக்கூடியவர்களாக
இருந்தார்கள். நூல்:- தாரிமீ, அஸ்ஸுஹ்து இமாம் இப்னு முபாரக்
அறிஞர்களில் ஒரு சிலரிடம் "உங்கள் பேச்சிலும், எழுத்திலும் ஓர் வசீகரம் இருக்கிறது" என்று மக்கள் கூறிவிட்டால்
போதும், வையகத்தில் நம்மைவிட கற்றறிந்தவர் எவரும் இல்லை
என்றே எண்ணிவிடுகிறார்கள். அவர்கள் பார்வையில் மற்ற அறிஞர்கள் சிறியவர்களாகவே தென்படுகிறனர்.
"வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு" என்பதை
மறந்துவிடுகிறார்கள்.
பட்டங்களும், பதவிகளும்
கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் இவ்வாறு பிரார்த்தனை செய்ய கற்றுத்தந்துள்ளார்கள்.
( اللَّهُمَّ اجْعَلْنِي فِي
عَيْنِي صَغِيرًا وَ فِي أَعْيُنِ النَّاسِ كَبِيرًا ) இறைவா! எனது பார்வையில் என்னை சிறியவனாகவும், மக்கள் பார்வையில் என்னை பெரியவனாகவும் காட்டுவாயாக!
நூல்:- சில்சிலத்தள் ளயீஃபா-911 இமாம் அல்பானீ
பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் மிக்தாத் பின்
அம்ர் (ரலி) அவர்களை ஒரு படைக்கு தளபதியாக அனுப்பி வைத்தார்கள். எல்லாம் படையினர் வெற்றிகரமாக
திரும்பி வந்தனர். அப்போது நபியவர்கள், "என்ன மிக்தாத்! தலைமை பொறுப்பு எவ்வாறு இருந்தது?"
என்று கேட்டார்கள். மிக்தாத் (ரலி) அவர்கள்,
"அந்தப் பதவியில் இருக்கிறபோது
என்னை நான் காணும்போது, ஏதோ நான் உயர்வானவனாகவும்
மற்றவர்கள் கீழானவர்களாகவும் எனக்குத் தெரிந்தது. என் மனதுக்குள் என்னென்னமோ என்ன ஓட்டங்கள்
ஓடியது. நான்தான் பெரிய மனிதன், மற்றவர்களெல்லாம்
சிறியவர்கள் என்ற எண்ணம் தோன்றியது. எனவே, இனிமேல் என்னை இரண்டு பேருக்குக்கூடத் தலைவராக
நியமித்து விடாதீர்கள்" என்று கூறினார்.
ஆம்! பட்டங்களும், பதவிகளும் சிலருக்கு தற்புகழ்ச்சியையும், கர்வத்தையும் உண்டாக்கிவிடுகிறது. அதனால் தான்,
இஸ்லாமிய வரலாற்றில் நல்லோர்கள் பலரும் பட்டங்கள்,
பதவிகள் என எதுவும் வேண்டாம் என்று விரண்டோடினார்கள்.
இன்று ஒரு ஜமாத்துடைய தலைவர், செயலாளர் அல்லது நிர்வாக
உறுப்பினர் என ஒரு சிறு பதவி கிடைத்துவிட்டாலும் கூட அதையெண்ணி பெருமிதம் கொண்டு தம்மை
அனைவரும் மதிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடையோர் சமூகத்தில் உண்டு.
இந்தப் பெயர்கள் வேண்டாம்
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது. ஸைனப் (ரலி) அவர்களுக்கு முதலில் 'பர்ரா' (நல்லவள்) என்று பெயர் இருந்தது. அப்போது "அவர் தம்மைத்
தாமே பரிசுத்தப்படுத்திக் கொள்கிறார்" என்று மக்களால் சொல்லப்பட்டது. ஆகவே,
அவருக்கு கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் ஸைனப்
(அழகிய தோற்றம் உடைய நறுமணச் செடி) என்று பெயர் சூட்டினார்கள். நூல்:- புகாரீ-6192, முஸ்லிம்-4335
முஹம்மத் பின் அம்ர் பின் அதாஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது. ஸைனப் பின்த் அபீசலமா
(ரலி) அவர்கள் என்னிடம், "உன்னுடைய மகளுக்கு
என்ன பெயர் சூட்டினாய்?" என்று வினவினார்கள்.
அதற்கு நான் 'பர்ரா' (நல்லவள்) என்று பெயர் சூட்டினேன் என்றேன். அப்போது
அவர்கள் அருமை நாயகம் (ஸல்) அவர்கள் இந்தப் பெயரைச் சூட்ட வேண்டாமெனத் தடை செய்துள்ளார்கள்.
(முதலில்) எனக்கு 'பர்ரா' (நல்லவள்) என்ற பெயரே சூட்டப்பட்டிருந்தது.
அப்போது நபியவர்கள், ( لاَ
تُزَكُّوا أَنْفُسَكُمُ اللَّهُ أَعْلَمُ بِأَهْلِ الْبِرِّ مِنْكُمْ
) "உங்களை நீங்களே பரிசுத்தப்படுத்திக்
கொள்ளாதீர்கள். உங்களில் நல்லவர் யார் என அல்லாஹ்வே நன்கறிந்தவன்" என்று கூறினார்கள்.
"அப்படியானால் அவருக்கு நாங்கள் என்ன பெயர் சூட்டுவது?" என்று மக்கள் கேட்டார்கள். நபியவர்கள்,
( سَمُّوهَا زَيْنَبَ
) "அவருக்கு 'ஸைனப்' (மென்மையான உடலுடையவள், நறுமணமும் அழகிய தோற்றமும் உள்ள செடி) என்று பெயர் சூட்டுங்கள்"
என்றார்கள். நூல்:- முஸ்லிம்-4337, அபூதாவூத்-4302 திர்மிதீ-2764, இப்னுமாஜா-3723
அண்ணல் நபி (ஸல்) அவர்களின் மனைவியர் ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி), ஜுவைரிய்யா (ரலி) மற்றும் நபியவர்களின் வளர்ப்பு
மகள் ஸைனப் பின்த் அபீசலமா ரலி ஆகியோருக்கு முதலில் பர்ரா (நல்லவள்) என்று தான் பெயர்
இருந்தது. அதன் பிறகு நபியவர்கள் அந்தப் பெயரை மாற்றி வேறு பெயர் வைத்தார்கள். நூல்:-
ஃபத்ஹுல் பாரீ
நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِنَّ أَخْنَعَ اسْمٍ عِنْدَ اللَّهِ رَجُلٌ تَسَمَّى مَلِكَ
الأَمْلاَكِ ) மறுமைநாளில் அல்லாஹ்விடம்
மிகவும் கேவலமான பெயர் (உலகில்) ஒரு மனிதன் "மலிக்குல் அம்லாக்" (மன்னாதி
மன்னன்) என்று பொய் பெயர் சூட்டி கொள்வதாகும்.
மேலும் சுஃப்யான் (ரஹ்) அவர்கள் கூறினார்கள். (பாரசீக மொழியில்) "ஷாஹன் ஷாஹ்"
என்றாலும் மன்னாதி மன்னன் என்று தான் பொருளாகும். நூல்:- புகாரீ-6206, முஸ்லிம்-4338
தம்மைத் தாமே உயர்ந்தவர்களாகக் காட்டிக் கொள்ளும் பெயர்களைச் சூட்டுவது சரியல்ல.
அழிப்பதற்கு சமம்
அபூபக்ரா நுஃபைஉ பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களுக்கு அருகில் ஒரு
மனிதர் இன்னொரு மனிதரைப் பற்றிப் புகழ்ந்து பேசினார். அப்போது நபியவர்கள், ( وَيْحَكَ. قَطَعْتَ عُنُقَ صَاحِبِكَ ) "உமக்கு நாசம்தான்!
உன் சகோதரரின் கழுத்தைத் துண்டித்துவிட்டாயே! உன் சகோதரரின் கழுத்தைத் துண்டித்துவிட்டாயே"
என்று பலமுறை கூறினார்கள்.
பிறகு,
"உங்களில் ஒருவர் தம் நண்பரைப்
புகழ்ந்தேயாக வேண்டும் என்றிருந்தால், "இன்ன மனிதரைப் பற்றி நான் (இவ்வாறு) எண்ணுகிறேன்" என்று (மட்டும்) கூறட்டும்.
அல்லாஹ்வே அவரைக் குறித்து விசாரணை (செய்து முடிவு) செய்பவன் ஆவான். நான் அல்லாஹ்வை
முந்திக்கொண்டு யாரையும் தூய்மையானவர் என்று கூறமாட்டேன். அவரைப் பற்றி இன்னின்னவாறு
கருதுகிறேன் என்றுகூட, அவர் அவ்வாறு இருக்கிறார்
என அறிந்தால் மட்டுமே கூறட்டும். நூல்:- புகாரீ-2662, முஸ்லிம்-5727, முஸ்னது அஹ்மத்
ஹம்மாம் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. ஒரு மனிதர் (ஜனாதிபதி) உஸ்மான் (ரலி) அவர்களைப் புகழ்ந்து பேசலானார்.
அப்போது மிக்தாத் பின் அம்ர் (ரலி) அவர்கள் அவரை நோக்கிச் சென்று முழந்தாளிட்டு அமர்ந்து, அவரது முகத்தில் பொடிக்கற்களை அள்ளி வீசலானார்கள். மிக்தாத்
(ரலி) அவர்கள் உடல் பருமனான மனிதராயிருந்தார்கள். (எனவே தான், முழந்தாளிட்டு அமர்ந்தார்கள்.)
அப்போது உஸ்மான் (ரலி) அவர்கள் அவரைப் பார்த்து, "உமக்கு என்ன ஆயிற்று?" என்று கேட்டார்கள்.
அதற்கு மிக்தாத் (ரலி) அவர்கள், "நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள், (
إِذَا رَأَيْتُمُ
الْمَدَّاحِينَ فَاحْثُوا فِي وُجُوهِهِمُ التُّرَابَ ) 'அளவுக்கதிகமாகப் புகழ்பவர்களை நீங்கள் கண்டால் அவர்களுடைய முகங்களில் மண்ணை அள்ளி
வீசுங்கள்'
என்று கூறினார்கள்" என்றார்கள்.
நூல்:- முஸ்லிம்-5731
ஒருவரை அளவு கடந்த புகழும்போது அவருக்கு தலைக்கணமும் கர்வமும் ஏற்பட வாய்ப்பு உண்டு.
மேலும், அவரிடம் இல்லாத பண்புகளையும் இருப்பதாகக் கூறி புகழ்கின்ற
நிலையும் உருவாகும். இது அவரது முன்னேற்றத்தைப் பாதிக்கும். ஏனெனில், தாம் நிறையவே சாதித்துவிட்டதாக அவர் எண்ணத் தொடங்கிவிடுவார்.
ஆகவேதான், அவ்வாறு புகழ்வது ஒருவரை அழிப்பதற்கு சமமாகும் என்கிறது
மேற்காணும் நபிமொழி.
திரும்பிப் பார்
ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் சொற்பொழிவு மேடை மீதேறி, "நான் என்னுடைய சிற்றன்னையின் ஆடுகளை மேய்த்துக்
கொண்டிருப்பேன். அவர் அதற்குப் பகரமாக என் கை நிறைய பேரித்தம்பழங்களை அளிப்பார்"
என்று கூறிவிட்டு, கீழே இறங்கி விட்டார்கள்.
அப்போது அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள், "ஜனாதிபதி அவர்களே! (சில பேரித்தம்பழங்களுக்காக ஆடு மேய்த்தவன்
என) தேவையின்றி உங்களை நீங்களே ஏன் தாழ்த்தி பேசவேண்டும்?" என்று கேட்டார்.
உமர் (ரலி) அவர்கள், "நான் தனிமையில் இருக்கும்
போது, 'நீ (இன்னைக்கு) ஜனாதிபதி ஆவாய்!
(இன்று) உன்னைவிட சிறப்பானவன் யார்?' என்று என்னுடைய உள்ளம் பெருமை கொள்கிறது. அதற்கு புத்தி புகட்டவேண்டுமில்லையா?
அதற்காகத்தான் வேறொன்றுமில்லை" என்று பதிலளித்தார்கள்.
நூல்:- தாரீக் தபரீ
நாம் ஓர் உயர்ந்த நிலைக்கு வந்த பிறகு, நமக்கு ஓர் கர்வம் ஏற்படக்கூடும். எனவே, அந்நேரத்தில் நாம் நம்முடைய கடந்த காலத்தை நினைத்து பார்க்கும்போது, நம்மைப் பற்றி நமக்கு உயர்ந்த மதிப்பீடு ஏற்படாமல் பாதுகாக்கப்படலாம்.
நபியவர்கள்
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள், ( فَإِنَّهُ لَنْ
يُدْخِلَ الْجَنَّةَ أَحَدًا عَمَلُهُ ) "யாரையும் அவரது இறைவழிபாடு ஒருபோதும் சொர்க்கத்தில் நுழைவிக்காது” என்று கூறினார்கள். மக்கள், "தங்களையுமா, நாயகமே? என்று கேட்டார்கள். அண்ணலார், ( وَلاَ أَنَا إِلاَّ أَنْ يَتَغَمَّدَنِيَ اللَّهُ مِنْهُ بِرَحْمَةٍ ) "என்னையும்தான்; அல்லாஹ் தனது கருணையால் என்னை அரவணைத்துக் கொண்டாலே தவிர"
என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-6464, முஸ்லிம்-5430
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைத்தூதர்களின் தலைவராகவும், இறைவனுக்கு மிகவும் உவப்பானவராகவும், வணக்க வழிபாடுகளில்
ஊறி திளைத்த நல்லடியாராகவும் இருந்தபோதும், தன் நிலை எண்ணி பெருமை கொள்ளாதபோது, பிறரைவிட நாம் எந்த வகையில் உயர்ந்தவர்களாகி விட்டோம் என்று
நாம் நம் நிலையை எண்ணிப்பார்க்க வேண்டும்.
இமாம் பக்ர் பின் அப்துல்லாஹ் அல்முஜ்னி (ரஹ்) அவர்கள் கூறினார்கள். உன்னைவிட வயதில்
மூத்தவர்களை கண்டால் “இவர் என்னைவிட இறைநம்பிக்கையிலும், நல்லறம் புரிவதிலும் முந்திக்கொண்டார். எனவே, இவர் என்னை விட சிறந்தவர்” என்று நினைத்துக்கொள்வீராக.
உன்னை விட வயதில் குறைந்தவர்களைக் கண்டால் “பாவங்கள் புரிவதிலும், குற்றங்கள் செய்வதிலும் இவரை விட நான் முந்திக்கொண்டேன்.
எனவே, இவர் என்னைவிட சிறந்தவர்” என்று நினைத்துக்கொள்வீராக.
உன்னுடைய சகோதர்கள் உன்னை கண்ணியப்படுத்தினால், சிறப்பு செய்தால் “அது அவர்களின் பெருந்தன்மை” என்று நினைத்துக்கொள்வீராக.
உன்னிடம் அவர்கள் நடந்து கொள்வதில் ஏதேனும் குறைகளைக் கண்டால், “இதற்கு நான் செய்த
பாவம்தான் காரணம்” என்று நினைத்துக்கொள்வீராக.
பணிவுள்ளவர்கள்
ஆயிஷா (ரலி) அவர்கள் இறப்பின் நெருக்கத்தில் இருந்தார்கள். அப்போது அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் அன்னையவர்களை
நலம் விசாரிக்க வந்து அனுமதி கோரினார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் அவரை அனுமதிக்கலாமா?
வேண்டாமா? என்று சற்றே தயங்கினார்கள். அவர் தன்னை புகழத் தொடங்கிவிடுவார்
என்று அஞ்சியது தான் அதற்கு காரணம். பிறகு அவர் உள்ளே நுழைய அனுமதித்தார்கள்.
உள்ளே நுழைந்த அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் ஆதியில் இருந்தே தங்களுடைய
பெயர் 'உம்முல் முஃமினீன்'
(இறைநம்பிக்கையாளர்களின் தாய்)
ஆக இருந்தது. அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு மிகவும் பிரியமான வாழ்க்கை துணைவியாக தாங்கள்
திகழ்ந்தீர்கள். அல்லாஹுத்தஆலா தாங்கள் மூலமாகத்தான் தயம்மும் எனும் சலுகையை இந்த சமுதாயத்திற்கு
வழங்கினான். மேலும், தங்களுடைய கற்பின்
பெருமையை திருக்குர்ஆன் மூலம் உலகத்திற்கே உணர்த்தினான். இந்த இறைவசனங்கள் உலகுள்ளவரை
பள்ளிவாசல்களின் மிஹ்ராப்களில் என்றென்றும் ஓதப்படும். உயிர்ப்பறவை கூட்டை விட்டு வெளியேற
வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது. நெருக்கமான தோழர்களை சந்திக்க உள்ளீர்கள்" என்று
கூறத் தொடங்கினார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்கள், "அப்துல்லாஹ்! சற்று
நிதானியுங்கள். என்னை புகழ்வதை நிறுத்துங்கள். யாராலும் கவனிக்கப்படாத ஒரு பொருளாக
நான் இருந்திருக்கக்கூடாதோ என எனக்குத் தோன்றுகிறது" என்று கூறினார்கள். நூல்:-
ஹாகிம்
நல்லடியார்கள், பிறர் தன்னைப் புகழும்போது, அதையெண்ணி பெருமிதம்
கொள்ளாமல், அந்தப் புகழ்ச்சிக்கு தாம் தகுதியில்லை என்றே எண்ணுவார்கள்.
ஒருமுறை ஊரில் போதிய மழையின்றி பஞ்சம் ஏற்பட்டது. அப்போது மக்கள் அனைவரும்
துன்னூன் அல்மிஸ்ரி (ரஹ்) அவர்களிடம் திரண்டு வந்து, "மழைக்காக பிரார்த்தனை செய்யுங்கள்" என்று
கேட்டுக்கொண்டனர். அப்போது அன்னார் பாவிகள் இருக்கின்ற ஊரில் இப்படித்தான் மழை
இறங்காது. அனேகமாக, இந்த ஊரின்
மிகப்பெரிய பாவியாக என்னையே நான் கருதுகிறேன். எனவே, நான் இங்கிருந்து வெளியேறி விடுகிறேன் என்று கூறி, ஊரிலிருந்து வெளியேறி விட்டார்கள்.
பெரும்பாலும், இறைநேசர்கள்
தங்களை பாவிகளாகவே கருதுவார்கள். அவர்கள் மிகப்பெரிய சாதனையே புரிந்திருந்தாலும்
"நான் பெரிய மனிதன்" என்று ஆணவம் கொள்ளமாட்டார்கள்.
பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ تَوَاضَعَ لِلَّهِ رَفَعَهُ اللَّهُ، فَهُوَ فِي نَفْسِهِ
صَغِيرٌ، وَفِي أَعْيُنِ النَّاسِ عَظِيمٌ، وَمَنْ تَكَبَّرَ وَضَعَهُ اللَّهُ،
فَهُوَ فِي أَعْيُنِ النّاسِ صَغِيرٌ، وَفِي نَفْسِهِ كَبِيرٌ، حَتَّى لَهُوَ
أَهْوَنُ عَلَيْهِمْ مِنْ كَلْبٍ أَوْ خِنْزِيرٍ ) யார் அல்லாஹ்வுக்காகக் கீழ்படிதலையும் பணிவையும் மேற்கொள்கிறாரோ,
அவருக்கு அல்லாஹ் உயர்வு அளிக்கிறான். அவர் தன்னைக்
குறித்து சிறியவராக கருதுகின்றார் ஆனால், மக்களின் பார்வையிலோ பெரியவராக தெரிகின்றார். யார் பெருமையடிக்கின்றாரோ அவரை அல்லாஹ்
சிறுமைப்படுத்துகிறான். தான் பெரிய மனிதர் என்று தன்னைக் குறித்து அவர் நினைத்துக்
கொண்டிருக்க, மக்களின் பார்வையில்
சிறியவராகி விடுகின்றார். எந்த அளவுக்கெனில் அவர்களின் எதிரில் நாய் அல்லது பன்றியை
விட அவர் இழிவடைந்து போகிறார். அறிவிப்பாளர்:-
உமர் (ரலி) அவர்கள் நூல்:- தஃப்சீர் துர்ருல் மன்ஸூர் அந்நஹ்ல் வசனம்-23,
கன்ஸுல் உம்மால், மிஷ்காத்
எனவே, என்றென்றும் நமது
பார்வையில் நம்மை பெரியவனாக எண்ணாமல், சிறியவனாகவே எண்ணும் அழகிய சிந்தனையை அல்லாஹுத்தஆலா
நமக்கு வழங்கி அருள்புரிவானாக! ஆமீன்!
மௌலவி
மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951
மாஷா அல்லாஹ் அருமை அல்லாஹ் தங்களின் கல்வியில் பரகத் செய்வானாக
ReplyDelete