அன்பு மலர்கள்
رَبِّ هَبْ لِىْ مِنَ الصّٰلِحِيْنَ
(இறைத்தூதர் இப்ராஹீம் - அலை அவர்கள்) என் இறைவா! நல்லோர்களில் (ஒருவரை) நீ எனக்கு(ச்
சந்ததியாக) வழங்கி அருள் புரிவாயாக!" என்றார். திருக்குர்ஆன்:- 37:100
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14 ம் தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. குழந்தைகளை மகிழ்விப்பதற்காக கொண்டாடப்படும் தினம்
குழந்தைகள் தினம்.
குழந்தைகள் மனிதனுக்கு கண் குளிர்ச்சியானவர்கள். அவர்களால் தான் மனிதனுக்கு வாழ்க்கையில்
ஒரு பிடிப்பு ஏற்படுகிறது. வாழ்க்கை இனிமை பெறுகிறது. வாழும் போதும், வாழ்க்கைக்கு பிறகும்
அவர்கள் மூலம் இனிமை காண விரும்புவோர் குழந்தை வளர்ப்பில் இஸ்லாமிய வழிகாட்டுதலை பின்பற்ற
வேண்டும்.
அழகிய முறையில் அவர்களை வளர்க்கும்போது அவர்களது இதயங்களில் நற்சிந்தனைகள் பிரகாசிக்கும்.
உள்ளங்கள் நற்பண்புகளின் ஊற்றாகத் திகழும். பிறகு அவர்கள் குணக்குன்றாக பரிணமித்து
விடுவார்கள். நற்பண்புகள் உள்ள பிள்ளைகள் தான் உண்மையில் மனித வாழ்வின் அலங்காரமாகத்
திகழ முடியும்.
பொருளும், மக்களும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய அலங்காரங்களே. திருக்குர்ஆன்:-18:46
முதல் வார்த்தை
மர்யம் (அலை) அவர்கள் ஆண் துணையின்றி நபி ஈசா (அலை) அவர்களைப் பெற்றெடுத்துக்கொண்டு
ஊரார்கள் முன் வந்தபோது அம்மக்கள் மர்யம் (அலை) அவர்களை தவறான பெண் என்று விமர்ச்சித்தனர்.
அப்போதுதான் மர்யம் (அலை) அவர்கள் தன் மடியில் இருக்கும் தன் குழந்தையிடம் இவர்களுக்கு
பதில் சொல்லுமாறு ஜாடை செய்தார்கள். பால்குடி குழந்தையாக இருந்த ஈசா (அலை) அவர்கள்
பேசிய முதல் வார்த்தையைப் பற்றி திருமறை பேசுகிறது.
நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய ஓர் அடிமை. அவன் எனக்கு ஒரு வேதத்தைக் கொடுத்து நபியாகவும்
என்னை ஆக்குவான். திருக்குர்ஆன்:- 19:30
இறைத்தூதர் ஈசா (அலை) அவர்கள் பேசிய முதல் வார்த்தை நான் "அல்லாஹ்வின் அடிமை"
என்ற இறைசிந்தனைக்குரிய வார்த்தையாகும்.
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إذا أفصَحَ أولادُكُم فَعَلِّموهُم لا إلهَ إلاَّ اللّهُ ) "உங்கள் குழந்தைகள் பேச முற்படும்போது லா
இலாஹ இல்லல்லாஹு" என்று கற்றுக் கொடுங்கள். அறிவிப்பாளர்:- அம்ர் பின் ஷுஅய்ப்
(ரலி) அவர்கள் நூல்:- கன்ஸுல் உம்மால்,
அமலு அல்யவ்மு வல்லைல் லித்தீனூரீ
குழந்தை தன் இதழ் விரித்து முதலில் சொல்லும் சொல் "லா இலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர்
ரசூலுல்லாஹ்" என்ற கலிமாவாக இருக்கவேண்டும். அதற்கு பெற்றோர் அந்த குழந்தையின்
சிந்தனையில் நீங்கா இடம்பிடிக்கும்வரை அந்த திருக்கலிமாவை சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும்.
நாம் சொல்ல சொல்ல அது மனதில் பதிந்துவிடும்.
அதன் கை கால்களை அசைத்து உலுக்கி "லா இலாஹ இல்லல்லாஹு" என்று சொல்லிக்கொண்டே நாம் கொஞ்சிக் கொண்டிருக்கும்போது
ஒருநாள் திடீரென மகிழ்ச்சிக்கிடையில் சப்தமிட்டு உரைத்துவிடும்.
கொஞ்சிப் பேச, விளையாட வேண்டும்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( أَكْرِمُوْا أَوْلَادَكُم، وَأَحْسِنُوْا أَدَبَهُم يُغفَرُ لَكُمْ ) உங்கள் குழந்தைகளைக் கண்ணியப்படுத்துங்கள். நல்லொழுக்கத்தால்
அவர்களை அலங்கரியுங்கள்; அதனால், உங்கள் பாவங்கள் மன்னிக்கப்படும்.
அறிவிப்பாளர்: அனஸ் (ரலி) அவர்கள் நூல்:-
இப்னுமாஜா-3671
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَن کَانَ عِندَهُ صَبِیٌ فَلیَتَصَابَ لَهُ
) குழந்தைகள் உங்கள் அருகில் இருக்கும் போது நீங்களும் குழந்தைகளைப் போல் நடந்துகொள்ளுங்கள். நூல்:- இப்னு அஸாகிர்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்பாஸ் (ரலி) அவர்களின் பிள்ளைகளான அப்துல்லாஹ், உபைதுல்லாஹ, கஸீர் (ரலி) ஆகிய மூவரையும் அணிவகுக்கச் செய்து, ( مَنْ سَبَقَ اِلَيَّ فَلَهُ كَذَا وَكَذَا ) "யார் என்னிடம் முதலில் ஓடிவருகிறாரோ அவருக்கு இன்னின்னது (பரிசாகக்) கிடைக்கும்" என்று கூறுவார்கள். சிறுவர்கள் அண்ணலாரிடம் ஓடி வந்து அவர்களது நெஞ்சிலும், முதுகிலும் விழுவார்கள். அப்போது அண்ணலார் அச்சிறுவர்களை கட்டியணைத்து முத்தமிடுவார்கள். நூல்:- முஸ்னது அஹ்மத்-1739
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் ஹசன் (ரலி) அல்லது ஹுசைன் (ரலி) அவர்களின் கரத்தைப்
பிடித்து அவர்களது பாதத்தை தனது பாதத்தின் மீது வைத்து பிறகு "நீ மேலே ஏறு"
என்று கூறுவார்கள். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- அல்அதபுல் முஃப்ரத், முஃஜமுத் தப்ரானீ
அரசு அதிகாரியாக இருந்த ஆமிர் (ரலி) அவர்கள் ஒருமுறை ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களைச்
சந்திக்க அவருடைய வீட்டுக்கு சென்றார். அப்போது உமர் (ரலி) அவர்கள் படுத்திருந்தார்கள்.
குழந்தைகள் அவருடைய மார்பில் ஏறி விளையாடிக் கொண்டிருந்தனர். ஆமிர் (ரலி) அவர்கள் இதனைக்
கண்ணியக்குறைவான செயலாக எண்ணினார். அவரின் முகத்தை பார்த்து அவரது எண்ணத்தை விளங்கிக்கொண்ட உமர் (ரலி) அவர்கள், "ஆமீரே! உமது குழந்தைகளிடம் எவ்வாறு நடந்து கொள்கிறீர்?" என வினவினார்கள்.
ஆமீர் (ரலி) அவர்கள், ஆஹா! நமக்கு பேச சந்தர்ப்பம் கிடைத்துவிட்டது என்றெண்ணி, "ஜனாதிபதி
அவர்களே! நான் வீட்டில் நுழைந்துவிட்டால், வீட்டில் இருக்கும் அனைவருக்கும்
ஒரு அச்சம் ஏற்பட்டு விடும். தத்தமது இடத்தில் அமைதியாக அமர்ந்து விடுவார்கள்" என்று
பதிலளித்தார். இதனை செவியுற்ற உமர் (ரலி) அவர்கள், "ஆமீர்! அன்பின் சிகரமாக விளங்கிய
முஹம்மத் (ஸல்) அவர்களின் சமுதாயத்தில் உள்ள ஒருவராக நீ இருந்த போதும், ஒரு முஸ்லிம் தன்
குடும்பத்தினருடன் எந்த அளவு மென்மையுடனும், அன்புடனும் நடந்து கொள்ளவேண்டும்
என்பதை புரிந்து கொள்ளாமல் நீ இருக்கிறாயே!" என்றார்கள்.
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்கள் சிறுவர்களைக்
கடந்து சென்றபோது (முகமன்) சலாம் கூறினார்கள். நூல்:- முஸ்லிம்- 4377, திர்மிதீ-2696
நாம் எவ்வளவு பெரிய அந்தஸ்துடனும்,
மதிப்புடனும் இருந்தாலும்
அது பிள்ளைகளிடம் பற்று பாசத்தை வெளிப்படுத்துவதற்கு தடையாகிவிடக் கூடாது.
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் சிறு பிள்ளைகளை அள்ளி அணைத்து முத்தமிடுவதையும், அவர்களிடம் கொஞ்சிப்
பேசுவதையும், அவர்கள் மீது கருணை மழை பொழிவதையும் அதிகம் விரும்பியுள்ளார்கள்.
பிறர் பார்க்கும்போது தன் குடும்பத்தில் உள்ள சிறு பிள்ளைகளைக்கூட தூக்கிக் கொஞ்ச வெட்கப்படுபவர்கள்
இதனை எண்ணிப்பார்க்க வேண்டுமே!
பெற்றோரின் பண்பும், பரிவும் தான் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து. இறைவனுக்கு
அடுத்து பெற்றோர்தான் குழந்தைகளுக்கு அரண். நாம் அளிக்கும் அன்பின் மூலம்தான் அரண்
உறுதி பெறும். ஆனால், கண்டிப்பு என்ற பெயரில் குழந்தைகள் வன்கொடுமைக்கு ஆளாகி விடக்கூடாது.
நமது உயிரினும் மேலான
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( أَدِّبُوْا أَوْلَادَكُم عَلَى ثَلَاثِ خِصَالٍ : حُبِّ نَبِيِّكُم،
وَحُبِّ أَهْلِ بَيتِهِ، وَعَلَى قِرَاءَةِ الْقُرآن ) உங்கள் பிள்ளைகளுக்கு மூன்று விஷயங்களைக் கற்பியுங்கள்.
உங்கள் நபியின் மீது அன்பு வைத்தல், நபியுடைய குடும்பத்தினர் மீது அன்பு வைத்தல், குர்ஆன் ஓதி வருதல். நூல்:- தைலமீ, கன்ஸுல் உம்மால்
நமது உயிரினும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வரலாற்றிலிருந்து சிறுசிறு
சம்பவங்கள், போதனைகள், அண்ணலாரின் மாண்புகள், வாழ்க்கை முறைகள்
ஆகியவற்றை பிள்ளைகளுக்கு அடிக்கடி எடுத்துரைக்க வேண்டும். இதன் மூலம் அண்ணலார் மீதும், அண்ணலாரின் குடும்பத்தினர்
மீதும் அவர்களுக்கு ஆழமான அன்பு உண்டாகும். அண்ணலாரின் வாழ்வைப் பின்பற்றும் ஆசை ஏற்படும்.
நமது குழந்தைகளிடம் உண்ணும்போதும்,
உறங்கும்போதும், உடுத்தும்போதும் அருமை
நாயகம் (ஸல்) அவர்கள் இப்படி இப்படி தான் செய்வார்கள் என்று எல்லா நிலைகளிலும் அண்ணலாரையே
முன்னுதாரணமாக சொல்ல வேண்டும். நான் அண்ணலார் மீது அளவு கடந்த பிரியம் வைத்துள்ளேன்
என்று அவர்களிடம் அவ்வபோது எடுத்துரைக்க வேண்டும். நமது செயல்பாட்டையும் அவர்கள் முன்
அவ்வாறு அமைத்து கொள்ள வேண்டும்.
கதைகள் சொல்லலாம்
ஒருமுறை நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலுக்கு சென்றுக் கொண்டிருந்தார்கள்.
அப்போது சில சிறுவர்கள் அண்ணலாரை சூழ்ந்து கொண்டு, "நாயகமே! தாங்கள் தங்களின் பேரப் பிள்ளைகளை
முதுகில் சுமக்கிறீர்களே! எங்களையும் சுமங்களேன்!" என்று கேட்டுக் கொண்டார்கள்.
உடனே அண்ணலார் பிலால் (ரலி) அவர்களை தனது வீட்டுக்கு அனுப்பி சில்லறை காசுகள் எடுத்து
வருமாறு கூறினார்கள். அவர் எடுத்து வந்ததும், அந்தக் காசுகளை சிறுவர்களிடம்
கொடுத்த அண்ணலார் "எனது சகோதரர் நபி யூசுப் (அலை) அவர்களை, அவரது சகோதரர்கள்
சில வெள்ளிக்காசுகளுக்கு விற்று விட்டதாக அல்லாஹ் (12:20) கூறுகிறான். அதைப் போன்று நானும் உங்களை
இந்த காசுகளுக்கு விலைக்கு வாங்கிக் கொண்டேன். எனவே, உங்களை என் வீட்டுக்கு தூக்கிக்
கொண்டு போகிறேன்!" என்று கூறினார்கள். நூல்:- தஃப்சீர் ரூஹுல் பயான், யூசுப் வசனம்-20
சிந்து படையெடுப்பின்போது முஹம்மத் பின் காசிம் (ரஹ்) அவர்கள் தன் கூடாரத்தின்
முன்புறத்தில் இருந்த ஒரு பெரிய திடலில் தன் வீரர்களை ஒன்றுக் கூட்டினார். வீரமரணம்
எய்வதைப்பற்றி இஸ்லாம் கூறும் கருத்துக்களைப்பற்றி உள்ளம் உருகும் வண்ணமாக எடுத்துரைத்தார்.
இந்த எழுச்சிப்பேருரையில் அவர் கூறிய கருத்தாவது: நமது நாட்டிலிருந்து உங்களில்
பலருடைய தாயார்களிடமிருந்து எனக்கு கடிதங்கள் வந்துள்ளன. அதில் “மலைபோல் நிலைத்து
நிற்கும் எங்களது மக்கள் உறுதியாக யுத்தக்களத்தில்
நிற்பார்கள். என்று பூரணமாக நம்புகிறோம். ஏனெனில், குழந்தைப் பிராயத்தில் நாங்கள் அவர்களை
மடியில் சீராட்டும்போதும் தொட்டில் தாலாட்டும்போதும் நபித்தோழர்களின் வீர தீரக் காவியங்களையும்
பத்ரு, உஹுது, ஹுனைன், யுத்தங்களின் சம்பவங்களையும்
கூறி வளர்த்துள்ளோம். அவர்களுக்கு இத்தகைய பயிற்சியை அளித்துள்ளோம். அதனால் அவர்கள் நிராசையடைய மாட்டார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது” என எழுதப்பட்டிருந்தது. நூல்:- ஸீம் ஹிஜாஸியின் "முஹம்மத் பின் காசிம்"
குழந்தைகளுக்கு கதைகளின் மீது மிகுந்த விருப்பமுண்டு. எனவே, இரவு படுக்கும்போது
நல்லொழுக்கத்தைப் புகட்டும் குர்ஆன் கூறும் இறைத்தூதர்களின் வரலாறுகள், நபித்தோழர்கள், இறைநேசர்கள் வரலாறுகள்
கற்பிக்கலாம். நற்சிந்தனை உள்ள கவிகளை தாலாட்டாக படிக்கலாம். எனவே, முதலில் பெற்றோர் இஸ்லாமிய
வரலாறுகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
மேலும், அவ்வபோது இஸ்லாமியக் கொள்கைகள், பிடிப்பினைச் சம்பவங்கள், சின்ன சின்ன துஆக்கள்
கற்பிக்க முயற்சிக்க வேண்டும்.
தாங்கள் கேட்கும் சம்பவங்களிலுள்ள கதாபாத்திரங்களைப் போல் நடந்து கொள்ளச் சில நேரங்களில்
பிள்ளைகள் விரும்புவார்கள். எனவே, சரித்திரங்களை, சம்பவங்களைத் தேர்வு செய்வதில்
பெற்றோர் கவனமாக இருக்கவேண்டும். பேய் கதைகள், மாயாஜாலக் கதைகள், பாட்டி வடை பொறித்தக்
கதை போன்ற கற்பனைக் கதைகள் சொல்வதன் மூலம் பிள்ளைகளின் பிஞ்சு மனங்களில் பயம், கோழைத்தனம், ஏமாற்றும் குணம் போன்ற
தீய தாக்கம் உண்டாகி விடும்.
ஈகை உள்ளம்
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் ஸைனப் பின்த்
ஜஹ்ஷ் (ரலி) அவர்களை திருமணம் செய்தபோது எனது
தாயார் உம்மு சுலைம் (ரலி) அவர்கள் சிறுபிள்ளையாக இருந்த என்னை அழைத்து "அனஸ்!
(புதுமாப்பிள்ளையாக இருக்கும்) அருமை நாயகம் (ஸல்) அவர்களுக்கு காலை உணவாக (பேரிச்சம்பழம், நெய், பாலாடைக்கட்டி ஆகியவற்றின்
மூலம் தயாரித்த) 'ஹைஸ்' எனும் இந்த பலகாரத்தை கொண்டு
போய்க் கொடு" என்று கூறி அனுப்பி வைத்தார். நானும் அதை கொண்டு போய் அண்ணலாரிடம்
கொடுத்தேன். நூல்:- புகாரீ-5163, முஸ்லிம்-2803, நசாயீ-3334
சில சமயங்களில் குழந்தைகளின் மூலமாக பிறருக்கு அன்பளிப்பு வழங்குதலையும், ஏழைகளுக்கு உணவு அல்லது
பண உதவியையும் செய்ய வையுங்கள். இதனால் அன்பளிப்பு வழங்குதல் என்ற நல்ல பழக்கம் அவர்களுக்கு
உருவாகும். மேலும், ஏழை எளியோருடன் நல்ல முறையில் நடந்து கொள்ளவேண்டும். அவர்களுக்கு
தான தர்மம் செய்ய வேண்டும் என்ற உணர்வும் அந்த குழந்தைகளுக்கு உருவாகும். சிலசமயம்
உண்ணும் பருகும் பொருள்களை சகோதர சகோதரிகள் தம்மிடையே தாமே பங்கிட்டுக் கொள்ளும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும். இதனால் பிறருடைய உரிமைகளைப் பாதுகாக்கவும், நீதியில் நிலைத்து
நிற்கும் நற்பழக்கமும் அவர்களுக்கு ஏற்படும்.
வணக்கத்தில் ஆர்வம்
ருபய்யிஉ பின்த் முஅவ்வித் (ரலி) அவர்கள் கூறியதாவது. முஹர்ரம் மாதம் பத்தாம் நாளில்
நாங்கள் ஆஷூரா நோன்பு நோற்று எங்கள் சிறு பிள்ளைகளையும் நோன்பு நோற்க செய்வோம். அவர்களில்
ஒருவர் (பசியால்) உணவு கேட்டு அழும்போது நோன்பு திறக்கும் நேரம் வரும்வரை (அவர்கள்
பசியை மறந்திருப்பதற்காக) அவர்களிடம் விளையாட்டுப் பொருள்களைக் கொடுப்போம். நூல்:-
புகாரீ-1960
நமது பிள்ளைகளிடம் தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் போன்ற கட்டாயக்
கடமைகளின் சிறப்புகளையும், அதன் அவசியத்தையும், அதை நிறைவேற்றாவிட்டால்
என்ன தண்டனை கிடைக்கும் என்பதைப் பற்றியும் விவரிக்க வேண்டும்.
பாராட்டுதல்
திருக்குர்ஆனை நூல் வடிவில் தொகுக்கப்பெற்றதில் பெரும் பங்கு வகித்த ஸைத் பின்
ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த புதிதில்
மதீனாவாசிகள் தங்களது குழந்தைகளை கொண்டு வந்து இவர்களின் நல்வாழ்வுக்காக பிரார்த்திக்குமாறு
அண்ணலாரிடம் வேண்டிக்கொண்டார்கள். எனது குடும்பத்தினரும் 11 வயது நிரம்பிய சிறுவனான
என்னை அழைத்து வந்து அண்ணலார் முன் நிறுத்தி நான் குர்ஆனிலுள்ள சில அத்தியாயங்களை மனனமிட்டு
இருப்பதாக புகழ்ந்து கூறினர். அப்போது அண்ணலார் என்னிடம் சில வசனங்களை ஓதிக் காட்டும்படி
கூறினார்கள். அப்போது நான் கஹ்ஃப் அத்தியாயத்தை முழுமையாக ஓதிக் காட்டினேன். இதனை செவியுற்ற
அண்ணலார் என்னை வெகுவாக பாராட்டினார்கள்
பிள்ளைகள் ஏதேனும் நல்லவற்றை செய்ய கண்டால் அவர்களை பாராட்டி உற்சாகப்படுத்த வேண்டும். அந்த பாராட்டு தான் அவர்களை மென்மேலும் நல்லவற்றின் பக்கம் இழுத்துச் செல்லும் உந்து
சக்தியாகும்.
நல்லுபதேசம் செய்ய வேண்டும்
இறைநம்பிக்கையாளர்களே! உங்களையும்,
உங்கள் குடும்பத்தினரையும்
நரக நெருப்பைவிட்டுக் காப்பாற்றிக்கொள்ளுங்கள். அதனுடைய எரிகட்டை மனிதர்களும், கற்களுமாகும். திருக்குர்ஆன்:- 66:6
லுக்மான் தனது மகனுக்கு நல்லுபதேசம் செய்யக் கருதிய சமயத்தில் அவரை நோக்கி
"என் அருமை மகனே! நீ அல்லாஹ்வுக்கு (ஒன்றையும்) இணையாக்காதே! ஏனென்றால் இணைவைப்பது
நிச்சயமாக மிகப்பெரும் அநியாயமாகும்" என்று கூறினார். திருக்குர்ஆன்:- 31:13
என் அருமை மகனே! தொழுகையைக் கடைப்பிடித்தொழுகு, நன்மையான காரியங்களை ஏவிக் கொண்டே, பாவமான காரியங்களில்
இருந்து (மனிதர்களை) விலக்கி வா. உனக்கு ஏற்படும் கஷ்டங்களை பொறுமையுடன் நீ சகித்துக்கொள்.
நிச்சயமாக இது எல்லா காரியங்களிலும் வீரமிக்கச் செயலாகும். திருக்குர்ஆன்:- 31:17
(பெருமை கொண்டு) உன் முகத்தை மனிதர்களைவிட்டுத் திருப்பிக்கொள்ளாதே! பூமியில்
பெருமையடித்துக்கொண்டு நடக்காதே! நிச்சயமாக கர்வம் கொண்டு பெருமையடிக்கும் எவரையும்
அல்லாஹ் நேசிப்பதில்லை. திருக்குர்ஆன்:- 31:18
அவ்வாறே (இறைத்தூதர்) இப்ராஹீம் தன்னுடைய சந்ததிகளுக்கும் உபதேசித்தார். (இறைத்தூதர்) யஃகூபும்
(தன்னுடைய சந்ததிகளை நோக்கி) "என் சந்ததிகளே! உங்களுக்காக அல்லாஹ் இ(ஸ்லா)ம் மார்க்கத்தையே
தேர்ந்தெடுத்திருக்கிறான். ஆதலால் நீங்கள் உண்மையான முஸ்லிம்களாக அன்றி இறந்துவிட வேண்டாம்" (என்றே கூறினார்). திருக்குர்ஆன்:- 2:132
நாத்திகம், இணைவைத்தல், (பித்அத் எனும் மார்க்க வழிகாட்டுதல்
இல்லாத) நூதனத்தைக் கடைப்பிடித்தல் போன்றவற்றின் மூலம் மறுமையில் ஏற்படும் நஷ்டத்தைப்
பற்றியும் பிள்ளைகளுக்கு நளினமான முறையில்
உபதேசிக்க வேண்டும்.
பிள்ளைகள் உள்ளம் பிறர் உடமைகளைப் பார்த்து ஆசைப்படுவதில் ஆர்வம் கொண்டது. ஆகவே, "உன் உடமைகளை பிறருக்கு கொடு. ஆனால் பெருமைக் கொள்ளாதே! பிறருடைய உடமைகளை விரும்பாதே!" என்று அவர்களுக்கு போதிக்க வேண்டும்.
பெரியவர்களுக்கு மரியாதை
நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لأَنْ يُؤَدِّبَ الرَّجُلُ وَلَدَهُ خَيْرٌ مِنْ أَنْ يَتَصَدَّقَ
بِصَاعٍ ) ஒருவர் தம்
பிள்ளைக்கு (ஒரேயொருமுறை) நல்லொழுக்கம் போதிப்பதானது. ஒரு ஸாஉ அளவு தர்மம் கொடுப்பதைவிடச்
சிறந்தாகும். அறிவிப்பாளர்:- ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-1874
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَا نَحَلَ وَالِدٌ وَلَدًا مِنْ نَحْلٍ أَفْضَلَ مِنْ أَدَبٍ حَسَنٍ
) தந்தை ஒருவர், தம் பிள்ளைக்கு வழங்கும் அன்பளிப்புகளிலேயே மிகவும்
சிறந்ததாக நல்லொழுக்கத்தைவிட வேறெதையும் வழங்குவதில்லை. அறிவிப்பாளர்:- அம்ரு பின்
சயீத் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-1875
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருமுறை நாங்கள் நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள் அருகில் இருந்தோம். அப்போது அண்ணலாரிடம் பேரிச்ச மரக் குருத்தொன்று கொண்டு
வரப்பட்டது. அதைக் கண்ட அண்ணலார், மரங்களில் ஒரு வகை உள்ளது. அது முஸ்லிமுக்கு உதாரணமாகும்.
(அது என்ன மரம்?) என்று வினவினார்கள்.
"அது பேரிச்ச மரம்தான்" என்று நான் சொல்ல நினைத்தேன். ஆனால் அப்போது
நான் அங்கிருந்தவர்களிலெல்லாம் வயதில் சிறியவனாக இருந்தேன். (மூத்தவர்கள் மௌனமாயிருக்க
நான் கூறுவதா என்று எண்ணி மரியாதைக்காக) மௌனமாயிருந்துவிட்டேன். அப்போது அண்ணலார்
"அது பேரிச்சமரம்" என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-72
ஆசிரியர், மார்க்க அறிஞர்கள், உறவினர்கள், வயதில் மூத்தவர்கள்
ஆகியோரை மதிக்கும் பண்பைக் கற்றுக்கொடுத்து
அதன் அவசியத்தை உணர்த்த வேண்டும். இது போன்ற நல்ல பழக்கங்களை வற்புறுத்தியேனும் வரவழைக்க
வேண்டும்.
வெளியே செல்லும்போது
ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் சிறுவராக இருந்தபோது தந்தை அப்துல்லாஹ்
பின் ஹிராம் (ரலி) அவர்கள் (மக்காவில் இருந்த அருமை நாயகம் (ஸல்) அவர்களை சந்தித்து
இஸ்லாமைத் தழுவி அண்ணலாரின் தூதுத்துவத்தை தங்கள் கூட்டத்தாருக்கும் தெரிவிப்போம் என்று
வாக்குறுதி கொடுக்கும் நிகழ்ச்சியான) அகபா உடன்படிக்கையில் கலந்து கொள்வதற்காக மதீனாவிலிருந்து
மக்காவுக்கு வரும்போது தனது 12 வயது மகன் ஜாபிரையும்
உடன் அழைத்து வருகிறார். அகபா உடன்படிக்கை என்பது புகழ் பெற்ற வரலாற்று நிகழ்வாகும். இந்த உடன்படிக்கை இணைவைப்பாளர்களான குறைஷிகளுக்கு
தெரிந்தால் பேராபத்து நிகழும்.
அப்துல்லாஹ்விடம் பிற தோழர்கள் “உங்கள் மகனுக்கு ஏதாவது சம்பவித்து விடும் என்று நீங்கள் பயப்படவில்லையா?” என்ற வினவினர். “என் மகனுக்கு இது போன்ற ஒரு சந்தர்ப்பம் அவன் வாழ்வில் இனிமேல் வருவது அபூர்வமே. எனவேதான் அவனையும் இதில் பங்கு பெற வைக்கின்றேன்.” என்று அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் பதிலளித்தார்.
நாம் தொழுகைக்காக பள்ளிவாசலுக்குச் செல்லும்போதும், மார்க்கச் சொற்பொழிவுகள் கேட்கவோ, திக்ரு மஜ்லிஸ் எனும்
இறைதியானக் கூட்டம் போன்ற இஜ்திமாக்களில் கலந்துக் கொள்ளவோ செல்லும்போதும், மார்க்க அறிஞர்களை
சந்திக்கச் செல்லும்போதும் நமது பிள்ளைகளையும் அழைத்து செல்லவேண்டும். அவ்வாறு அழைத்துச்
செல்வதற்கு முன்பு அவற்றின் அவசியத்தையும், கண்ணியத்தையும் அவர்களுக்கு
போதிக்க வேண்டும்.
கண்டிக்க வேண்டும்
இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறினார்கள். தடுக்கப்பட்ட விஷயங்களிலிருந்து பிள்ளைகளைப்
பேணிப் பாதுகாப்பது தந்தையின் பொறுப்பாகும்.
இறைநேசர் நாகூர் ஷாகுல் ஹமீது (ரஹ்) அவர்கள் தனது வளர்ப்பு மகனார் யூசுஃப் (ரஹ்)
அவர்கள் ஒரே ஒரு நேரத் தொழுகையில் தக்பீர் தஹ்ரீமா தவற விட்டுவிட்டார். அதனால் அவருடன்
ஷாகுல் ஹமீது (ரஹ்) அவர்கள் மூன்று நாட்கள் பேசவில்லை என்பது வரலாற்றுச் செய்தி.
பாரசீக கவிஞர் இமாம் சஅதீ (ரஹ்) அவர்களது
சிறுபிராயத்தில் அன்னாரின் தந்தையார் அதிகாலை நேர தஹஜ்ஜுத் தொழுகைக்காக எழுந்து தன்
மகனையும் தொழும்படி ஏவி, குர்ஆன் ஓதுமாறு பணித்து சரியாக ஓதுகிறாரா? என கவனித்துக் கொண்டிருப்பார்கள்.
இவ்வாறு ஒருமுறை குர்ஆன் ஓதிக்கொண்டிருந்த சஅதீ (ரஹ்) அவர்களது கவனம் வீட்டில் தொழாமல்
தூங்கிக் கொண்டிருந்தவர்களின் மீது திரும்பியது.
உடனே தந்தையை நோக்கி! "தந்தையே! இவர்கள் இப்படி தூங்கிக் கொண்டிருக்கிறார்களே! இவர்களுக்கு
அல்லாஹ்வின் அச்சமில்லையா?" என வினவினார். உடனே அன்னாரின் தந்தை "இதோ பார்
சஅதீ! மற்றவர்களைப் பற்றி குறைக் கூறுவதாக இருந்தால், நீயும் குர்ஆனை மூடிவைத்துவிட்டுத்
தூங்கிவிடு! பிறரைப்பற்றி குறைக் கூறுவது பெரும் பாவமாகும்" எனக் கூறிக் கண்டித்தார்கள்.
பிறரை குறைக் கூறுதல், சண்டையிடுதல், கெட்ட வார்த்தைகள் பேசுதல், சாபமிடுதல், பொய் பேசுதல், பெருமையடித்தல் போன்ற
கெட்ட நடத்தைகளில் இருந்து விலகியிருக்குமாறு அவ்வபோது பிள்ளைகளை எச்சரிக்க வேண்டும்.
பிள்ளைகள் ஏதேனும் தவறை செய்யும் போது அதனை உடனே கண்டிக்க வேண்டும். மாறாக
"அவர்கள் சிறுபிள்ளைகள் தானே" என்றும், "போகப்போக சரியாகி
விடுவார்கள்" என்றும் சமாதானம் கூறி அவர்களை வீணாக்குவது சரியல்ல. கெட்டுப்போன
விதை எவ்வாறு நல்ல செடியாக வளரும்? நமது பிள்ளைகள் வருங்காலத்தில் நற்குணமுள்ளவர்களாக
திகழ வேண்டுமென்றால் இஸ்லாமிய சிறப்புகளையும், அது கூறும் நற்பண்புகளையும்
அவர்களின் குழந்தைப் பருவத்திலிருந்தே விதைத்து வர வேண்டும்.
நமது பிள்ளைகள் ஆசைப்பட்டு கேட்கும் பொருள்களில் அவசியமானது எது? அனாவசியமானது எது? என்பதையும், நமது பொருளாதார நிலை
என்ன? என்பதையும் அவர்களுக்கு போதிக்க வேண்டும். அவர்கள்
அடம் பிடிக்கிறார்கள் என்பதற்காக அவர்கள் கேட்கும் பொருள்களையெல்லாம் வாங்கி கொடுப்பது
முறையல்ல.
சிறுபிள்ளைகளுக்கு நாம் போதிக்கும் ஒழுக்கங்கள் அவர்களின் பிற்காலத்து வாழ்க்கையை
சீராக்கிவிடும். சிறு பிள்ளையிலிருந்தே ஹலால்
- ஹராம் உடைய உணர்வு ஏற்பட வேண்டும். அப்பொழுது தான் வாழ்க்கை
தூய்மையாகும்.
அழகிய நடைமுறை
அப்துல்லாஹ் பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருமுறை அருமை நாயகம் (ஸல்)
அவர்கள் எங்கள் வீட்டில் இருந்தார்கள். அப்போது நான் குழந்தையாக இருந்தேன். என் தாயார்
"வா... வா... உனக்கு ஒரு பொருள் தருகிறேன்" என்று கூறி என்னை அழைத்தார்.
அப்போது அண்ணலார் என் தாயாரிடம், "குழந்தைக்குக் கொடுக்க என்ன வைத்திருக்கிறீர்கள்?" என்று வினவினார்கள். என் தாயார், "நாயகமே!
பேரிச்சம்பழம் வைத்திருக்கிறேன் என்று பதிலளித்தார்.
அண்ணலார் என் தாயாரிடம் ( أَمَا إِنَّكِ لَوْ لَمْ تُعْطِيهِ شَيْئًا كُتِبَتْ عَلَيْكِ كِذْبَةٌ
) "அறிந்து கொள்ளுங்கள். உங்கள் பிள்ளைக்கு நீங்கள் இப்போது எதுவும் கொடுக்கவில்லை
என்றால், உங்கள் மீது ஒரு பொய் (என்ற பாவம்) பதிவு செய்யப்படும்" என்று கூறினார்கள். நூல்:- அபூதாவூத்-4991
இவர் சிறுபிள்ளையாக இருக்கும்போது நடந்த நிகழ்வை நினைவில் வைத்திருந்து அறிவிக்கிறார். சிறுபிள்ளைகளுக்கு முன்னிலையில் நடைபெறும் சில நிகழ்வுகள் பசுமரத்தில் அறைந்த ஆணி போல்
காலத்திற்கும் நினைவில் வைத்திருப்பார்கள் என்பதை பெற்றோர் கவனத்தில் கொள்ளவேண்டும்.
உதாரணமாக, உயரமான அலமாரியில் உள்ள பொருள் ஒன்றை நமது குழந்தை
எடுத்துக் கொண்டிருக்கிறது. அதனை முறையாக எடுக்க அதனால் இயலாது எனும் பொழுது, "சற்று
பொறு! இதோ என்னுடைய வேலைகளை முடித்துவிட்டு வந்து எடுத்துத் தருகின்றேன்" என்று நாம்
கூறுகின்றோம். அவ்வாறு கூறிவிட்டால் நாம் நமது வேலைகளை உடனே முடித்துக்கொண்டு நமது
குழந்தைக்கு உதவ வேண்டும்.
மறக்கக் கூடாது..! நாம் கூறியதை நிறைவேற்ற வேண்டும். அவ்வாறில்லை என்றால் அந்தக் குழந்தை மீண்டும் அலமாரியில் உள்ள பொருளை எடுக்க முனையும். அதனால் இயலாத நிலையில், பொருள்கள் தவறிக் கீழே விழுந்த பின்பு அந்தக் குழந்தையை கோபித்துப் பயன் என்ன? ஒன்று, அதனை இப்பொழுது எடுக்க இயலாது. மற்ற வேலைகளைப் பாருங்கள், பின்பு எடுத்துக் கொள்ளலாம் என்று நாம் கூறி இருந்தால், அந்தக் குழந்தை தன்னுடைய முயற்சியைக் கைவிட்டு விட்டு வேறு வேலையின் பக்கம் தனது கவனத்தைத் திருப்பி இருக்கும். ஆனால், "சற்று பொறு!" என்று நாம் கூறிய பின்பு, சற்றுக் காத்திருந்துவிட்டு நாம் வராததால் அந்தக் குழந்தை முயற்சி செய்து பார்த்திருக்கிறது.
தவறு நம்மீது, குழந்தையின் மீதல்ல. நாம் அடிக்கடி இப்படி நடந்து
கொள்பவர் என்றால் பின்பு நாம் சீரியஸாக எதனைச்
சொன்னாலும், அதனை ஒரு பொருட்டாகவே குழந்தை எடுத்துக் கொள்ளாது
என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பிற மக்களிடம் பொய் சொல்லும் முன் நூறு முறை யோசி! உன் குழந்தைக்கு முன்னால் பொய் சொல்லும் முன் இலட்சம்
முறை யோசி! சிரியா
நாட்டுப் பழமொழி.
நாம் அடிக்கடி பொய் பேசக்கூடிய பெற்றோராக இருந்தால், அவர்கள் நமது வார்த்தைக்கு மதிப்புக் கொடுக்க மாட்டார்கள். நாம் உண்மையையே
பேசினாலும்கூட அவர்கள் நம்ப மாட்டார்கள்.
பிள்ளைகள் முன்னிலையில் பெற்றோர் சண்டையிட்டுக் கொண்டாலும், கொஞ்சிக் குளாவிக்
கொண்டாலும் பிள்ளைகள் உள்ளம் சீர்குலைந்துபோகும் என்பதில் பெற்றோர்களுக்கு கவனம் தேவை.
தங்கள் குழந்தை எதையும் புரிந்து கொள்ளாது என்ற நினைப்பில் அதன் முன்னிலையில் தீயவற்றை
பேசுவதும், செய்வதும் மாபெரும் தவறாகும். அவர்கள் முன்னிலையில் செய்யப்பட்ட அனைத்தும்
அந்தப்பிஞ்சு மனதில் பதிந்துவிடும் என்பதை பெற்றோர் மறந்துவிடக் கூடாது
பிரார்த்திப்பது
(இறைத்தூதர் இப்ராஹீம்-அலை) என் இறைவனே! என்னையும் என் சந்ததிகளையும் (உன்னைத்) தொழுது
வருபவர்களாக ஆக்கிவை. திருக்குர்ஆன்:-
14:40
நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மூன்று பிரார்த்தனைகள் (இறைவனிடம்)
ஏற்புக்குரியவை ஆகும். அதில் எந்த ஐயமுமில்லை. அவைகளில் ஒன்று பிள்ளைக்காகத் தந்தை
செய்யும் (சாதகமான) பிரார்த்தனை ஆகும். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள்
நூல்:- இப்னுமாஜா-3862
அப்துல்லாஹ் பின் முபாரக் (ரஹ்) அவர்கள் இளமையில் பெரும் பாவியாகவே இருந்தார்கள்.
ஆனால் இவரது பெற்றோர்கள் இவருக்காக செய்த தர்மங்களும், பிரார்த்தனைகளும்
இவரை மார்க்கத்தின் பெரும் சட்ட மேதையாக மாற்றியது என்பது வரலாறு.
பிள்ளைகளின் நல்வாழ்வுக்காக பெற்றோர் அடிக்கடி தான தர்மங்களும், பிரார்த்தனையும் செய்ய
வேண்டும்.
கண்காணிப்புத் தேவை
இமாம் சஅதீ (ரஹ்) அவர்கள் குழந்தை வளர்ப்பைப் பற்றி கூறியதாவது. உங்கள் பெயர் உலகில்
நிலைத்திருக்க வேண்டுமெனில் நற்குணத்துடன் கல்வியைப் போதித்து, பிள்ளைகளை உருவாக்குங்கள்.
படிக்கும்போது பிள்ளையின் படிப்பைப் பாராட்டி ஆர்வத்தை வளருங்கள். நன்மை, தீமையை எடுத்துச்
சொல்லுங்கள். தீமையை செய்யும்போது கண்டிக்கத் தவறாதீர்கள். தீயவர்களுடன் பழகுகிறார்களா? என்பதை கண்காணித்துக் கொண்டேயிருங்கள்.
பெற்றோர் பிள்ளைகளின் சிநேகங்களையும், அவர்களின் பழக்க வழக்கங்களையும், அவர்கள் பேசும்போது
பயன்படுத்தும் வார்த்தைகளையும் கவனிக்கவேண்டும். பரீட்சைக்குப் படிப்பதிலிருந்து சிறுசிறு
பிரச்சினைகளைக்கூட அவர்கள் எப்படி அணுகுகிறார்கள், எப்படி வெற்றி கொள்கிறார்கள், எப்படி மோதி விழுகிறார்கள்
என்பதை மிக நுணுக்கமாக்க கவனிக்கவேண்டும். இதற்கு தகுந்தாற்போல் அவர்களுக்கு நாம்
நேரம் ஒதுக்க வேண்டும்.
சரியில்லை என்று எங்கெல்லாம் நமக்குப் படுகிறதோ அதை அன்போடும், பொறுமையோடும் சுட்டிக்காட்ட
வேண்டும். குறைகளை மட்டும் சொல்லாமல் அதற்கான தீர்வுகளையும் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
படிப்பு தேவை
உங்கள் குழந்தைகளுக்குக் குர்ஆன் கற்பிக்க வேண்டியதைக் கட்டாயக் கல்வியாக ஆக்கிக்கொள்ளுங்கள்.
குழந்தைகள் முதலாவதாகக் குர்ஆனைக் கற்கத் தொடங்கும்போது, அவர்களின் பெற்றோர்களின்
பாவங்கள் உடனே மன்னிக்கப்படும். தீங்குகள் அகலும் என்கிறது ஒரு நபிமொழி.
இறைநேசர் திப்பு சுல்தான் (ரஹ்) அவர்கள் கூறினார்கள். குழந்தைக்கு பள்ளிக் கல்வி வழங்காத
தந்தை, கடமையை மறந்தவன் ஆவான்.
தன்னிடமுள்ள செல்வத்தால், பதவியால் சாதித்ததைவிட தன்னிடமுள்ள கல்வி ஞானத்தால்
சாதித்தவர்களே அதிகம். எனவே, கல்வி ஞானம் என்பது மிக முக்கியமானதாகும். அல்லாஹ் விதித்த
சோதனையில் வெற்றி பெறுவதற்கும், பூமியிலுள்ள சாதனங்களை முறையாகப் பயன்படுத்துவதற்கும்
கல்வியறிவு தேவை.
பள்ளிக்கூடத்திற்கு செல்லும் பிள்ளைகளிடம் அடிக்கடி அவர்களின் இறைநம்பிக்கையை பரிசோதித்துக்
கொண்டே இருக்கவேண்டும். காரணம் கிருஸ்துவ பள்ளிகளில் கிருஸ்துவக் கொள்கையையும், இந்துக்களின் பள்ளியில்
பல தெய்வக் கொள்கையையும், முஸ்லிம்களில் சிலர் நடத்தும் பள்ளியில்கூட சுன்னத்
வல்ஜமாஅத் கொள்கைக்கு எதிரான கொள்கையையும் பயிற்றுவிக்கப்படுகின்ற அபாயம் இருக்கிறது.
குழந்தைகளை நல்லவர்களாக வளர்ப்பதற்கு பெற்றோர்கள் டாக்டராகவோ, இன்ஜினீயராகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை.
இமாம்
ஷாஃபியீ (ரஹ்), இமாம் புகாரீ (ரஹ்) போன்ற இஸ்லாமிய மார்க்கத்தின் சட்ட மேதைகளும், ஹதீஸ் கலை வல்லுநர்களும், சிந்தனையாளர்களும், சாதனையாளர்களும் எளிய
குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவர்கள் தான். ஒரு குழந்தை சிறந்த அறிவாளியாகவும், சமூக அக்கறையுள்ள
மனிதனாகவும் உருவாக்குவதில் பெற்றோருக்கு முக்கியப் பங்குள்ளது.
நமது பிள்ளைகள் உலகில் படிப்பில், பொருளாதாரத்தில் சிறந்தவர்களாக விளங்குவதற்கு பாடுபடுவது மட்டும் நமது கடமையல்ல. அவர்களுக்கு நல்லொழுக்கத்தைக் கற்று தந்து, அவர்களின் மூலம் நாமும் இம்மை, மறுமையில் நன்மைகள் பெற்று, அவர்களையும் இம்மை மறுமையில் வெற்றிக்குரியவர்களாக ஆக்கவும் முயற்சிக்கவேண்டும்.
எனவே, நாம் நமது பிள்ளைகளை நல்லொழுக்கமும், மார்க்க ஞானமும் நிறைந்த சிறந்த பிள்ளைகளாக வளர்த்து ஆளாக்குவதற்குண்டான திறனை அல்லாஹுத்தஆலா நமக்கு வழங்கி அருள்புரிவானாக! ஆமீன்!
மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ
இம்தாதி, இமாம்: நீலாங்கரை,
சென்னை. செல்: 9840535951
அருமை...
ReplyDeleteஅல்ஹம்துலில்லாஹ் மிகவும் பயனுள்ள தகவல்கள் இந்த வாரம் இதை பேசினேன்
ReplyDeleteதங்களுடைய சேவைகள் தொடர துஆ செய்கிறேன்
.
அருமை
Deleteஹதீஸ்களை அரபியில் போடுகிறீர்கள். குர்ஆன் வசனங்களையும் அரபியில் பதிவு செய்தால் நன்றாக இருக்கும் ஹஜ்ரத்.
ReplyDelete