உன்னை நினைத்து...
وَمِنَ النَّاسِ مَنْ يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ
وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ
அல்லாஹ்வின் திருப்தியை நாடி தம்மை அர்ப்பணித்துக் கொள்வோரும் மனிதர்களில் உள்ளனர். (இத்தகைய நல்)அடியார்கள் மீது அல்லாஹ் மிகுந்த பரிவுடையவன் ஆவான். திருக்குர்ஆன்:- 2:207
ஒரு மனிதன் பாவத்தையோ அல்லது தனக்கு பலன் தரும் ஏதேனும் ஒன்றையோ அல்லாஹ்வுக்காக
தவிர்த்துக் கொண்டால், அதற்காக மற்றோரு அழகிய
பகரத்தை அல்லாஹுதஆலா தராமல் இருப்பதில்லை. அதாவது, நம்முடைய சிறிய பெரிய அனைத்து தியாகங்களுக்கும் நற்கூலி கிடைத்தே தீரும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَا مِنْ مُسْلِمٍ يَنْظُرُ إِلَى مَحَاسِنِ امْرَأَةٍ ثُمَّ يَغُضّ بَصَرَهُ
إِلَّا أَخْلَفَ اللَّهُ لَهُ عِبَادَةً يَجِدُ حَلَاوَتَهَا ) ஒரு பெண்ணின் அழகை முதல்முறையாகப் பார்த்து (அதில்
மயங்கி விடாமல்) உடனே பார்வையைத் தாழ்த்திக்கொண்ட முஸ்லிமுக்கு வழிபாட்டில் இன்பம்
தேடும் வாய்ப்பை அல்லாஹ் வழங்காமல் இருப்பதில்லை. அறிவிப்பாளர்:- அபூ உமாமா (ரலி) அவர்கள்
நூல்:- முஸ்னது அஹ்மது, தஃப்சீர் இப்னு கஸீர்
அந்நூர் வசனம்-30, மஜ்மஉஸ்
ஸவாயித்
இலாபம் தந்த வியாபாரம்
சுஹைப் பின் ஸினானூர் ரூமி (ரலி) என்ற நபித்தோழர், நூறு வயது உடையவர். அவர் மக்காவிலிருந்து புறப்பட்டு
மதீனாவிற்கு புலம்பெயர்ந்து செல்லும் போது, குறைஷியர் இவரைப் பின்தொடர்ந்து வந்து தாக்க முற்பட்டனர்.
இவருடன் வந்த ஒருவரை குறைஷியர் கொன்றும் விட்டனர்.
தனி நபராக இருந்த அவர் தன்னிடமிருந்த அம்புக்கூட்டை கையிலெடுத்து, ( يَا مَعْشَرَ قُرَيْشٍ لَقَدْ عَلِمْتُمْ إِنِّي أَرْمَاكُمْ رَجُلًا
بِسَهمٍ وَاَیمُ اللَّهِ لَا تَصِلُونَ اِلَيَّ
حَتَّی اَرمِیَکُم بِکُلِّ سَهْمٍ فِي كِنَانَتِي
ثُمَّ أَضْرِبَکُم بِسَيْفِي مَا بَقِيَ فِي يَدِي مِنهُ شَیءٌ ثُمَّ شَأنَکُم بَعدَ
ذٰلِكَ وَإِنْ شِئْتُمْ دَلَلْتُكُمْ عَلَى مَالِي بِمَكَّةَ وَتُخَلُّو سَبِيلِي )
"குறைஷியரே! உங்களில் அம்பெய்வதில்
அதிகத் தேர்ச்சி பெற்றவன் நான்தான் என்பதை நீங்கள் நன்கறிவீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக!
என் அம்புக்கூட்டிலுள்ள அம்புகளெல்லாம் தீர்ந்து போகும் வரை ஒவ்வொரு அம்பாலும் உங்களைத்
தாக்குவேன். அதன்பிறகு என் வாள் என் கையில் இருக்கும் வரை உங்களோடு போராடுவேன். (அதுவரை நீங்கள் என்னை நெருங்க முடியாது.) அதற்கு பிறகு தான் நீங்கள் நாடுவது நடக்கும். எனவே,
நீங்கள் விரும்பினால் நான்
உங்களுக்கு வேறு ஒரு வழி சொல்கிறேன். அதாவது என் செல்வம் மக்காவில் உள்ளது. அதை அடையாளம்
காட்டி விட்டால் (அதை எடுத்து கொண்டு) என்னை என் வழியில் விட்டு விடுவீர்களா?”
என்று கேட்டார். குறைஷியர்
"ஆம்" என்று கூறினர். அவ்வாறே (செல்வம் உள்ள) அவ்விடத்தைக் காட்டியதும்,
குறைஷியர் அவரை விட்டுவிட்டனர்.
அதன்பிறகு இவர் மதீனா வந்தடைந்ததும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைச் சந்தித்தார்.
அப்போது அண்ணலார், ( أَبَا يَحْيَى رَبِحَ البَيْعُ رَبِحَ البَيْعُ ) "அபூயஹ்யா! உமது வியாபாரம் இலாபம் தந்து விட்டது. உமது வியாபாரம் இலாபம் தந்துவிட்டது"
என்று கூறிவிட்டு, (தலைப்பில் காணும்) திருவசனத்தை ஓதிக்காட்டினர்கள். அப்போது அவர்
அதிகம் மகிழ்ச்சியடைந்தார். நூல்:- தஃப்சீர்
காஸின், ரூஹுல் மஆனி,
அஹ்சனுத் தஃபாசீர், கன்ஸுல் உம்மால்
அண்ணலாரின் துணைவியர்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா சென்றபின், நண்பர்கள் அன்போடு வழங்கிய அன்பளிப்புக்கள், அண்டைவீட்டார் கொடுத்த இரவல் கறவை ஒட்டகங்கள் மூலம் கிடைக்கும் பாலைக்கொண்டு தம் குடும்பத்தாரின் பசியை ஓரளவுக்குத் தணித்தார்கள். பல நாட்கள் அண்ணலாரின் துணைவியர் இல்லங்களில் (அறைகளில்) அடுப்பு எரிந்ததில்லை. சில பேரிச்சம் பழத் துண்டுகளும் தண்ணீரும் தான் அவர்களின் உணவாக இருந்தன. பல சமயங்களில் அந்தப் போதாக்குறையான உணவுகூட அவர்களுக்குக் கிடைப்பதில்லை.
இந்த சூழ்நிலையில்தான் ஒருமுறை அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அன்பு துணைவியர் அண்ணலாரைச்
சூழ்ந்துகொண்டு குடும்பச் செலவுக்கு கூடுதலான தொகை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
பேச முடியாத அளவிற்கு துக்கம் மேலிட்டவர்களாக அண்ணலார் அமைதி காத்தார்கள். பின்னர்
ஒரு மாத காலம் அண்ணலார் தம் துணைவியரிடமிருந்து விலகியிருந்தார்கள். அப்போது தான் அல்லாஹுதஆலா,
நபியே! ஒன்று, நீர் உம்முடைய துணைவியரைவிட்டுப் பிரிந்து விடுவீராக! இவ்வுலக வாழ்க்கையும் அதன் அலங்காரமும் யாரிடத்தில் அவர்களுக்கு கிடைக்குமோ அவர்களிடம் அவர்கள் சென்றுவிடட்டும். அல்லது அல்லாஹ்வையும் அவன் தூதரையும் மறுஉலகையும் விரும்பினால், நீர் இருக்கும் இந்த நெருக்கடியான சூழலில் உம்முடன் வாழ்ந்து அவர்கள் பொறுமை காக்கட்டும். அவ்வாறு பொறுமை காத்தால், அதற்காக அல்லாஹ்விடம் அவர்களுக்கு அதிகமான வெகுமதிகள் கிடைக்கும். எனவே, இவ்விரண்டில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளுமாறு உம்முடைய துணைவியாருக்கு நீர் விருப்ப உரிமை வழங்குவீராக! என்று தன் தூதருக்கு சில (33:28,29) திருவசனங்களின் மூலம் கட்டளையிட்டான்.
அப்போது அண்ணலாரின் துணைவியர் அல்லாஹ்வையும் அவன் தூதரையும் மறு உலகையுமே தேர்ந்தெடுத்துக் கொண்டனர். பொறுமை காக்க சம்மதித்தனர். இது, துணைவியாரின் நன்னடத்தை உயர் பண்பு ஆகியவற்றை காட்டியது. இதற்குப் பரிசாகவே உயர்ந்தோன் அல்லாஹ் கீழ்காணும் திருவசனத்தை அருளினான்.
(நபியே!) இதற்கு மேல் (வேறு) பெண்களுக்கு உமக்கு அனுமதியில்லை. (அவ்வாறே, இப்போது இருக்கும்) துணைவியாருக்கு மாற்றாக அவர்களை நீர் ஆக்கிக்கொள்வதற்கும் அனுமதியில்லை. அவர்களின் அழகு உம்மைக் கவர்ந்தாலும் சரியே! (ஆனால்,) உமது வலக் கரம் உடைமையாக்கிக் கொண்ட (அடிமைப்) பெண்களைத் தவிர. அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் கண்காணிப்பவனாக இருக்கிறான். (33:52)
அதாவது, நபியே! இனிமேல் வேறு எந்த பெண்ணை பெண்களை புதிதாக மணம் முடித்துக்கொள்ளவும், மனைவியரில் எவரையும் விவகாரத்து செய்துவிட்டு அவரிடத்தில் வேறு ஒருவரை மனைவியாக்கிக் கொள்ளக்கூடாது என இறைவன் அறிவித்தான். அதன்பிறகு அண்ணலார் வேறு எவரையும் மணமுடிக்கவும் இல்லை. நூல்:- தஃப்சீர் இப்னுகஸீர்
பாய்ச்சல் குதிரைகள்
ஒருநாள் மாலைப் பொழுதில் அதிகமாக வணக்க வழிபாடுகளில் ஈடுபடக்கூடிய மன்னராகவும்,
இறைத்தூதராகவும் இருந்த சுலைமான் (அலை) அவர்கள் முன் இருபதாயிரம் உயர் ரக பாய்ச்சல்
குதிரைகள் அணிவகுத்து காட்டப்பட்டன.
அப்போது சுலைமான் (அலை) அவர்கள் குதிரைகளின் அணிவகுப்பைப் பார்வையிடுவதில் மும்முரமாக
ஈடுபட்டிருந்தார்கள். அதனால் அஸர் தொழுகையின் நேரம் அன்னாருக்கு தவறிப்போனது. பின்னர்
சுதாரித்து கொண்டு அந்த தொழுகையை நிறைவேற்றிவிட்டு, தொழுகையிலிருந்து
கவனத்தைத் திசை திருப்பிய அந்த குதிரைகளை என்னிடம் கொண்டு வாருங்கள் என்று கூறி, அவற்றை அறுத்து பலியிட்டுவிட்டார்கள். இதைப்பற்றி
திருக்குர்ஆன் (38:31,32,33) விவரிக்கிறது. நூல்:-
தஃப்சீர் இப்னு கஸீர்
சுலைமான் (அலை) அவர்கள் குதிரைகளை அறப்போருக்கும் மற்ற பயணத்திற்கும் பயன்படுத்தி
வந்தார்கள். எனவே, உயர் ரக பாய்ச்சல் குதிரைகள் அன்னாருக்கு பிரியமாகவும்
இருந்தது.
(இந்நிகழ்வுக்கு பிறகுதான்)
அன்னாருக்கு அல்லாஹ் காற்றை வசப்படுத்தி தந்தான். எனவே, அன்னார் காலைக் காற்றின்
மூலம் ஒரு மாதப் பயணத் தூரத்தையும், மாலைக் காற்றின் மூலம்
ஒரு மாதப் பயணத் தூரத்தையும் கடந்து விடுவார்கள் என்கிறது திருக்குர்ஆன் (34:12).
ஹசன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது. இறைத்தூதர் சுலைமான் (அலை) அவர்கள் காலை
வேளையில் தமது தரைவிரிப்பின் மீது ஏறி டமாஸ்கஸ் (சிரியா) நகரத்திலிருந்து புறப்படுவார்கள்.
இஸ்த்தகர் (ஈரான்) வந்து சேர்ந்து அங்கு (அன்றைய) காலை உணவை உட்கொள்வார்கள். பின்னர்
மாலை வேளையில் இஸ்த்தகர் நகரிலிருந்து புறப்பட்டு காபூல் நகரை (ஆப்கானிஸ்தான்) அடைந்து
அங்கேயே இரவு தங்குவார்கள்.
வேகமாக பயணிக்கும் ஒருவருக்கு டமாஸ்கஸ் - இஸ்த்தகர் ஆகிய நகரங்களுக்கிடையிலான தொலை
தூரத்தைக் கடக்க ஒரு மாதம் பிடிக்கும். இவ்வாறே இஸ்தக்கர் - காபூல் நகரங்களுக்கிடையிலான
தொலை தூரத்தைக் கடக்கவும் வேகமாகச் செல்லும் பயணிக்கு ஒரு மாதம் தேவைப்படும். நூல்:- தஃப்சீர் இப்னு கஸீர்
சுலைமான் (அலை) அவர்கள் இறைவழிப்பாட்டை விட்டும் திசைத்திருப்பக்கூடிய உலக
செல்வமான அந்த உயர் ரக பாய்ச்சல் குதிரைகளை வேண்டாமென அறுத்துப் பலியிட்டுவிட்டார்கள்.
அதன்பிறகு தான் அல்லாஹ், சுலைமான் (அலை) அவர்களுக்கு விரைவாகப் பயணிப்பதற்கு அந்த குதிரைகளைவிட
சிறந்ததாக விளங்கும் காற்றை வசப்படுத்தித்தந்தான்.
புதுத்துணி விற்றப் பணம்
ஒருமுறை ஃபாத்திமா (ரலி) அவர்களும், அவர்களின் குடும்பத்தினரும் மூன்று நாட்கள்வரை தொடர்ந்து எதுவும் சாப்பிடாமல் பட்டினியாக இருந்தார்கள். குடும்பத்தின் பசி, பட்டினி பொறுக்க முடியாமல் தங்களின் பிரியமான புதுத்துணியொன்றை தனது அருமைக் கணவர் அலீ (ரலி) அவர்களிடம் கொடுத்து இத்துணியை விற்றுப் பணம் கொண்டு வாருங்கள் என்று சொன்னார்கள்.
அலீ (ரலி) அவர்கள், தனது மனைவி கொடுத்த துணியை கடைத் தெருவுக்கு கொண்டு போய் ஆறு
வெள்ளிக்காசுகளுக்கு விற்றார்கள். ஆனால் அந்த ஆறு வெள்ளிக்காசுகளையும் கொண்டு வரும்போது
ஒரு ஏழை மனிதர் அலீ (ரலி) அவர்களிடம் ஏதாவது தாருங்கள் என்று கேட்டார். அப்போது அலீ
(ரலி) அவர்கள் அதனை அப்படியே தர்மம் செய்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள்.
வழியில் ஒரு மனிதர் ஒரு ஒட்டகத்தை பிடித்துக் கொண்டு வந்து கொண்டிருந்தார். அலீ (ரலி) அவர்களைப் பார்த்தவுடன் ( يَا أبا الحسن اشْتَرِ هَذِهِ النَّاقَةَ ) “அபுல்ஹஸன் அவர்களே! இந்த ஒட்டகத்தை விலைக்கு வாங்கிக் கொள்வீர்களா?” என்று கேட்டார்கள். அலீ (ரலி) அவர்கள் ( مَا مَعِي ثَمَنُهَا ) “இந்த ஒட்டகத்தை வாங்க என்னிடம் பணம் இல்லை” என்றார்கள். அவர், ( إِلَى أَجَلٍ فَاشْتَرَاهَا بِمِائَةٍ ) “(பரவாயில்லை) இதனை நூறு வெள்ளிக்காசுகளுக்கு தவணை முறையில் உமக்கு விற்பனை செய்கிறேன். பணத்தைப் பிறகு தரலாம். (அது பற்றி கவலை இல்லை)” என்றார்.
உடனே அலீ (ரலி) அவர்கள் அந்த ஒட்டகத்தை வாங்கிக் கொண்டு சென்றார்கள். சிறிது தூரம் தான் சென்றிருப்பார்கள். மற்றொருவர் அங்கு வந்து ( أَتَبِيعُ هَذِهِ النَّاقَةَ؟ ) “அபுல்ஹஸன் அவர்களே! இந்த ஒட்டகத்தை விற்பனை செய்கின்றீர்களா?” என்று வினவினார்.
ஆச்சரியப்பட்ட அலீ (ரலி) அவர்கள் ( نَعَمْ، وَاشْتَرَيْتُهَا بِمِائَةٍ ) “இதை நான் நூறு வெள்ளிக்காசுகளுக்கு வாங்கினேன். (நீர் எவ்வளவு தருவீர்?)” என்று கேட்டார்கள். அவர், ( وَلَكَ مِنَ الرِّبْحِ سِتُّونَ ) நான் இந்த ஒட்டகத்தில் இருந்து உங்களுக்கு 60 வெள்ளிக்காசுகள் இலாபம் கிடைக்குமாறு வாங்கிக் கொள்கிறேன்” (அதாவது 160 வெள்ளிக்காசுகளுக்கு வாங்கிக் கொள்கிறேன்)” என்று கூறினார். அலீ (ரலி) அவர்கள், சரியென சம்மதித்து ஒட்டகத்தை ஒப்படைத்து 160 வெள்ளிக்காசுகளைப் பெற்றுக்கொண்டார்கள்.
சிறிது தூரம் சந்தோஷமாக நடந்து கொண்டிருந்தார்கள். அப்பொழுது முதலில் ஒட்டகத்தை தவணை முறையில் கொடுத்தவர் அங்கு வந்து, ( بِعْتَهُ النَّاقَةَ؟ ) “(அபுல் ஹஸன் அவர்களே!) ஒட்டகத்தை விற்பனை செய்துவீட்டீரா? என்று வினவினார். அலீ (ரலி) அவர்கள் ஆம்! என்று கூறியதும் அவர், ( ادْفَعْ إِلَيَّ دَيْنِي ) “(அப்படியானால் வாக்குப்படி) எனக்கு சேர வேண்டிய தொகையைக் கொடுத்து விடுங்கள்” என்று கேட்டார். உடனே அலீ (ரலி) அவர்கள் நூறு வெள்ளிக்காசுகளை கொடுத்துவிட்டு மீதி 60 வெள்ளிக்காசுகளை எடுத்துக் கொண்டுபோய் தனது அன்பு மனைவி பாத்திமா (ரலி) அவர்களிடம் கொடுத்தார்கள்.
ஆச்சரியப்பட்ட ஃபாத்திமா (ரலி) அவர்கள் ( مِنْ أَيْنَ لَكَ هَذَا؟ ) “(நான் கொடுத்த துணிக்கு) இவ்வளவு பணம் எப்படி உங்களுக்குக் கிடைத்தது?” என்று வினவினார்கள்.
அலீ (ரலி) அவர்கள், ( تَاجَرْتُ مَعَ اللَّهِ بِسِتَّةٍ فَأَعْطَانِي سِتِّينَ ) “(உமது துணியை விற்ற) ஆறு வெள்ளிக்காசுகளை வைத்து அல்லாஹ்வுடன் வியாபாரம் செய்தேன். அல்லாஹ் அதை அறுபதாக பெருக்கித் தந்தான்” என்று கூறி நடந்ததை விவரித்தார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்களும் சந்தோஷப்பட்டார்கள்.
உடனே அலீ (ரலி) அவர்கள், அருமை பெருமானார் (ஸல்) அவர்களிடம் சென்று நடந்த சம்பவங்களை எடுத்துச் சொன்னார்கள். இதைக் கேட்ட அண்ணல் நபி (ஸல்) அவர்கள், ( الْبَائِعُ جِبْرِيلُ، وَالْمُشْتَرِي مِيكَائِيلُ، وَالنَّاقَةُ لفاطمة تَرْكَبُهَا يَوْمَ الْقِيَامَةِ ) “(அலீயே! உம்மிடம்) ஒட்டகத்தை விற்றவர் (வானவர்) ஜிப்ரீல் (அலை) ஆவார்கள். (உம்மிடமிருந்து) ஒட்டகத்தை வாங்கியவர் (வானவர்) மீக்காயீல் (அலை) ஆவார்கள். மறுமைநாளில் அந்த ஒட்டகம் ஃபாத்திமாவுக்குரிய வாகனமாகும்” என்று சொன்னார்கள். நூல்:- சீரத்துல் ஹலபிய்யா, நுஜ்ஹத்துல் மஜாலிஸ்
சிறந்த பகரம்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். படுக்கை, போர்வை, மனைவி மக்களின் அரவணைப்பு
ஆகியவற்றை உதறிவிட்டு (இறைவணக்கம் புரிய) அதிகாலையில்
எழும் செல்லும் மனிதனை பார்த்து இறைவன் வியப்படைகிறான். இறைவன் வானவர்களை நோக்கி, என்னுடைய இந்த அடியானை
பாருங்கள். படுக்கை, போர்வை, மனைவி மக்கள் அரவணைப்பு ஆகியவற்றை
உதறிவிட்டு அதிகாலையில் (இறைவணக்கம் புரிய) எழுந்து விட்டான். எதற்காக? இந்த அடியானுக்கு
என்ன வேண்டும்? (அவன் எழுந்தது) எனது அருள் மீது ஆசை வைத்தா? அல்லது எனது தண்டனைக்கு
பயந்தா? என்று கேட்கிறான். பின்னர் இறைவன், "வானவர்களே உங்களையே சாட்சியாக வைத்துக் கூறுகிறேன். நான், அவன் ஆசைப்பட்டதை
அவனுக்கு நிச்சயமாக கொடுப்பேன். அவன் எதைப்பற்றி பயப்படுகிறானோ நிச்சயமாக அதிலிருந்து
அவனைப் பாதுகாப்பேன்" என்று கூறினான். நூல்:- முஸ்னது அஹ்மத்
உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். ( مَا تَرَكَ اَحَدٌ مِّنکُم لِلّٰهِ شَيءًا اِلَّا اٰتَاهُ اللّٰهُ مِمَّا
هُوَ خَیرٌ لَّهُ مِنهُ مِن حَیثُ لَا یَحتَسِبُ ) எவரொருவர் அல்லாஹ்விற்காக
ஒரு பொருளை இழப்பாரோ அவருக்கு அதைவிடச் சிறந்ததை அவர் அறியா புறத்திலிருந்து அல்லாஹ்
வழங்குவான். நூல்:- கன்ஸுல் உம்மால், ஹயாத்துஸ் ஸஹாபா பாகம்-2 பக்கம்-826
கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ تَرَكَ الْكَذِبَ وَهُوَ بَاطِلٌ بُنِيَ لَهُ فِي رَبَضِ الْجَنَّةِ وَمَنْ تَرَكَ الْمِرَاءَ وَهُوَ مُحِقٌّ بُنِيَ لَهُ فِي وَسَطِهَا وَمَنْ حَسَّنَ خُلُقَهُ بُنِيَ لَهُ فِي أَعْلاَهَا ) ஒருவர் பொய்யை அதுவோ அசத்தியம் என்று தெரிந்ததும் (அல்லாஹ்வுக்காக) கைவிட்டால், அவருக்காகச் சொர்க்கத்தின் கீழ்தளத்தில் மாளிகை எழுப்பப்படும். ஒருவர் விதண்டாவாதத்தை அவர் உண்மையே உரைப்பவரானாலும் (அல்லாஹ்வுக்காக) கை விட்டால், அவருக்காகச் சொர்க்கத்தின் நடுப்பகுதியில் மாளிகை எழுப்பப்படும். ஒருவர் தம் குணங்களை (அல்லாஹ்வுக்காக) அழகுபடுத்திக் கொண்டால் அவருக்காகச் சொர்க்கத்தின் மேல்தளத்தில் மாளிகை எழுப்பப்படும். அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-1916
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( وَمَنْ تَرَكَ لُبْسَ ثَوْبِ جَمَالٍ وَهُوَ يَقْدِرُ عَلَيْهِ تَوَاضُعًا
كَسَاهُ اللَّهُ حُلَّةَ الْكَرَامَةِ ) எவர் அழகு ஆடையை அணிய
சக்தி பெற்றிருந்தும் பணிவின் காரணமாக அதனை அணியாமல் இருந்தாரோ அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தின்
ஆடைகளை அணிவித்து கௌரவிப்பான். நூல்:- அபூதாவூத்-4147 முஸ்னது அஹமத்-15066
பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ كَظَمَ غَيْظًا وَهُوَ يَسْتَطِيعُ أَنْ يُنَفِّذَهُ دَعَاهُ اللَّهُ
يَوْمَ الْقِيَامَةِ عَلَى رُءُوسِ الْخَلاَئِقِ حَتَّى يُخَيِّرَهُ فِي أَىِّ الْحُورِ
شَاءَ ) யார் தமது கோபத்தை
செயல்படுத்த சக்தி பெற்றிருந்தும் அதை மென்று விழுங்கிவிடுகிறாரோ அவரை அல்லாஹ் மறுமை
நாளில் படைப்பினங்களுக்கு முன்னால் அழைப்பான். சொர்க்கக் கண்ணிகளில் (ஹூருல் ஈன்) அவர்
விரும்பும் யாரையும் தேர்ந்தெடுத்துக்கொள்ள அவருக்கு உரிமை அளிப்பான். அறிவிப்பாளர்:-
முஆத் பின் அனஸ் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-1944
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( يَقُولُ اللَّهُ سُبْحَانَهُ ابْنَ آدَمَ إِنْ صَبَرْتَ وَاحْتَسَبْتَ عِنْدَ الصَّدْمَةِ الأُولَى لَمْ أَرْضَ لَكَ ثَوَابًا دُونَ الْجَنَّةِ ) தூயோன் அல்லாஹ் கூறுகிறான்: ஆதமுடைய மகனே! (மனிதா!) துன்பம் ஏற்பட்ட முதல் கட்ட நிலையிலேயே நீ பொறுமை காத்து, நன்மையை எதிர்பார்த்தால், உனக்கு நான் சொர்க்கத்தைவிடக் குறைவான வெகுமதியைக் கொடுப்பதில் திருப்தியடைய மாட்டேன். அறிவிப்பாளர்:- அபூஉமாமா (ரலி) அவர்கள் நூல்:- இப்னுமாஜா-1586, முஸ்னது அஹ்மத், அல்அதபுல் முஃப்ரத்-535
துன்பம் ஏற்பட்ட முதல் கட்டத்தில் அதைத் தாங்கிக் கொண்டு பொறுமை காப்பது பாராட்டத்
தகுந்தவையாகும் அதை விடுத்து துன்பம் தாக்கியவுடன் புலம்புவது எல்லாம் புலம்பி விட்டு
பதற்றத்தை எல்லாம் வெளிப்படுத்திவிட்டு, பிறகு படுவதற்கு ஒன்றுமில்லை என்ற இறுதி கட்டத்தில்
அமைதி அடைவது பொறுமை ஆகாது அதற்கு இறைவனிடம் நன்மையும் கிடைக்காது. ஏனெனில், நாள்கள்
கடந்துவிட்டால் துயரம் மறைவதும் அந்த அளவு குறைவதும் இயற்கையாகும். இதில் தனிச்சிறப்பு
எதுவும் இல்லை.
துன்பத்தின் ஆரம்பகட்டத்தில் அல்லாஹ்வுக்காக அதை சகித்துக்கொண்டால் அதற்கான நற்கூலியாக,
தண்டனை பெறாமல் சொர்க்கம்
செல்லும் நற்பேற்றை அல்லாஹ் வழங்குவான் என்பது இதன் பொருளாகும். தண்டனைக்குப் பின்
சொர்க்கம் செல்லும் கூட்டத்தாரில் இவர்கள் சேர மாட்டார்கள்.
சொர்க்கவாசி? அல்லது நரகவாசியா?”
கலீஃபா ஹாரூன் அல்ரஷீத் (ரஹ்) அவர்கள் பேரறிஞர் இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்களிடம், “நான் சொர்க்கவாசி? அல்லது நரகவாசியா?” என்று வினவினார். அதற்கு இமாமவர்கள் கலீஃபா நோக்கி, "நீங்கள் பாவம் செய்யும் சந்தர்ப்பம் கிடைத்தும் அல்லாஹ்வுக்கு அஞ்சி அதை செய்யாமல் விட்டதுண்டா?"
கலீஃபா, “ஆம்! ஒருமுறை நான்
ஒரு பெண்மீது வெகு நாட்களாக ஆசை கொண்டிருந்தேன். அவளுடன் உறவு கொள்வதற்கும் முயற்சித்தேன்.
அவள் எனக்கு இடம் தராமல் விலகிக்கொண்டே இருந்தாள். ஒருநாள் இரவில் அவள் தனிமையில் இருந்தாள்.
இந்த நேரத்தைப் பயன்படுத்தி அவளை நெருங்கினேன். அவளும் தடை சொல்லவில்லை. அப்போது எனது
மனசாட்சி 'ஹாரூனே! உன்னை நீ
மக்களை ஆளும் மன்னனாக இருந்து கொண்டு இந்த தவறான காரியத்தைச் செய்யலாமா? மறுமை நாளில் அல்லாஹ்விடம் இதற்கான கேள்வி உண்டு
என்பதை மறந்து விட்டாயா?' என்று பேச ஆரம்பித்தது.
அப்போது அல்லாஹ்வுக்கு பயந்து அந்தப் பெண்ணை விட்டும் விலகி விட்டேன்" என்று கூறினார்.
இமாமவர்கள், "கலீஃபாவே! நீங்கள்
சொர்க்கவாசி தான்" என்று கூறிவிட்டு, “எவன் தன் இறைவனின் சந்நிதியில் (விசாரணைக்காக) நிற்பதைப் (பற்றிப்) பயந்து,
(தப்பான) சரீர இச்சையை விட்டுத்
தன்னைத் தடுத்துக்கொண்டானோ அவன் செல்லுமிடம் நிச்சயமாகச் சொர்க்கம் தான்.” (திருக்குர்ஆன்:-
79:40,41) என்ற திருவசனங்களை
ஓதிக்காட்டினார்கள்.
அல்லாஹ்வுக்காக செய்யும் அனைத்து தியாகங்களுக்கும் அழகிய பலன் உண்டு. எனவே,
அல்லாஹ்வின் அன்பைப் பெற தியாகங்கள்
புரியும் அழகிய பண்பாளர்களாக அல்லாஹுத்தஆலா நம்மை வாழச் செய்வானாக! ஆமீன்!
மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951
அல்ஹம்து லில்லாஹ் ஹஜ்ரத் அருமையான பதிவு
ReplyDeleteஅல்லாஹ் உங்கள் இல்மில் பரகத் செய்வானாக
ReplyDelete