அல்லாஹ்வின் ஆனந்தம்
إِنَّ اللَّهَ يُحِبُّ التَّوَّابِينَ وَيُحِبُّ الْمُتَطَهِّرِينَ
நிச்சயமாக அல்லாஹ் (பாவத்தை விட்டு) வருத்தப்பட்டு மீளுகிறவர்களையும், பரிசுத்தவான்களையும் விரும்புகிறான். திருக்குர்ஆன்:-
2:222
எதிர்வரும் ரமளான் மாதத்தில் தவறாத ஜமாஅத் தொழுகை, நோன்பு, தஹஜ்ஜுத் தொழுகை, பாவமன்னிப்பு தேடுதல், வணக்கங்களால் பள்ளிவாசலை அலங்கரித்தல், பிறருக்கு பயனளிக்கும் வழிகளில் வாரி வழங்குதல், அல்லாஹ் வழங்கிய அருள்வளங்களுக்கு நிரப்பமாக நன்றி கூறுதல் ஆகிய இதுபோன்றவற்றை ஆர்வத்துடன் செய்யவேண்டும்.
நாம் ஒருவரை நேசித்தால் என்ன செய்வோம்? அவருக்கு பிரியமானதை
செய்து வருவோம். அவர் மனம் கவரும்படி நடந்து கொள்வோம். அவருக்கு பிடிக்காதவற்றை செய்ய
நினைக்க மாட்டோம். அவரோடு நாம் கொள்ளும் அனைத்து தொடர்புகளையும் அழகாக மேலும் அழகாக
ஆக்குவோம்.
இதுபோன்றுதான் நாம் இறைவனை அதிகம் நேசிக்க ஆரம்பித்துவிட்டால், அந்த இறைகாதல் நமக்குள் குடிகொண்டுவிட்டால் அவன் ஆணையிட்டதை செய்யாமல் நம்மால்
இருக்கவே முடியாது. அவன் விரும்பாதவற்றின் பக்கம் நெருங்கி நிற்கக்கூட மனம் வராது.
அவன் மனம் கவர்ந்த இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்வியலை நன்கு கற்று அதன்படியே
வாழ ஒவ்வொரு நிமிடமும் முயற்சிப்போம். அவனுக்கு முன் நமது அடிமைத்தனத்தை அழகாகவும்
செம்மையாகவும் எடுத்துக் காட்ட எப்போதும் முயற்சி செய்து கொண்டே இருப்போம்.
நாம் எல்லோரும் அல்லாஹ்வை பிரியப்படுவதாக சொல்கிறோம். ஆனால், அல்லாஹ் யாரை பிரியப்படுகிறான்
என்றும், எந்தெந்த செயல்கள் அல்லாஹ்வை ஆனந்தப்படுத்தும் என்றும்
நாம் அறிந்து கொள்ள வேண்டுமல்லவா?
வாருங்கள்! அதைப்பற்றிய சில
விஷயங்களை அறிந்து கொள்வோம்.
ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, ( أَيُّ الشُّهَدَاءِ أَفْضَلُ؟ ) “(நாயகமே!) சிறந்த உயிர்த்தியாகி என்பவர் யார்?” என்று வினவினார். அதற்கு நபியவர்கள், ( الَّذِينَ إِنْ يُلْقَوْا فِي الصَّفِّ لاَ يَلْفِتُونَ وُجُوهَهُمْ حَتَّى يُقْتَلُوا ، أُولَئِكَ يَنْطَلِقُونَ فِي الْغُرَفِ الْعُلَى مِنْ الْجَنَّةِ ، وَيَضْحَكُ إِلَيْهِمْ رَبُّهُمْ ، وَإِذَا ضَحِكَ رَبُّكَ إِلَى عَبْدٍ فِي الدُّنْيَا فَلا حِسَابَ عَلَيْهِ ) போர் களத்தில் முதல் வரிசையில் நின்று போராடி தாம் கொல்லப்படும் வரை எங்கும் திரும்பாமல் நிலைத்து நிற்கின்றவர்கள்தான், (அல்லாஹ்விடம்) உயிர்த்தியாகிகளில் மிகச் சிறந்தவர்கள் ஆவர். இவர்கள் சொர்க்கத்தில் உயர்ந்த அறைகளில் புரள்வார்கள். அவர்களைப் பார்த்து உமது இறைவன் சிரிப்பான். உலகத்தில் ஒருவரை (அவரின் நற்செயலில் ஏதேனும் ஒன்றைப்) பார்த்து உமது இறைவன் சிரித்துவிட்டால் அவருக்கு விசாரணையே கிடையாது” கூறினார்கள். அறிவிப்பாளர்:- நுஐம் பின் ஹம்மார் (ரலி) அவர்கள் நூல்:- கிதாபுல் ஜிஹாத்-48 இமாம் இப்னு முபாரக், முஸ்னது அஹ்மத், தப்ரானீ அபூயஅலா, அஸ்மாஉ வஸ்ஸிஃபாத் இமாம் பைஹகீ, தஃப்சீர் துர்ருல் மன்ஸூர் ஆலுஇம்ரான் வசனம்-171
ஜமாஅத்துடன் தொழுவது
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِنَّ اللهَ تَبَارَكَ وَتَعَالَي لَيَعْجَبُ مِنَ الصَّلاَةِ فِي الْجَمْعِ
) ஜமாஅத்துடன் தொழுவதால் அல்லாஹ்
மகிழ்ச்சி அடைகிறான். அறிவிப்பாளர்:- உமர் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்னத் அஹ்மத், மஜ்மஉஸ் ஸவாயித்
ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் சுலைமான் அபீ ஹஸ்மா (ரலி) அவர்களை கடைத்தெருவின் மேற்பார்வையாளராக
நியமித்திருந்தார்கள். ஒருநாள் அவர்கள் ஃபஜ்ர் தொழுகையில் காணப்படவில்லை. உமர் (ரலி)
அவர்கள் தொழுகை முடிந்ததும் அவருடைய வீட்டுக்குச் சென்று அவர்களின் தாயாரிடம்,
( لَمْ أَرَ سُلَيْمَانَ فِي
الصُّبْحِ ) "(இன்று) நான் சுலைமான் (ரலி) அவர்களை ஃபஜ்ருத் தொழுகைக்கு காணவில்லையே! (காரணம்
என்ன)?" என்று கேட்டார்கள்.
அதற்கு அவ்வம்மையார், "சுலைமான் இன்று இரவு
முழுவதும் நஃபில் தொழுவதில் ஈடுபட்டிருந்ததால் தூக்கம் மிகைத்து ஃபஜ்ரு தொழுகை நேரத்தில்
கண்ணயர்ந்துவிட்டார்" என்று கூறினார். இதை கேட்ட உமர் (ரலி) அவர்கள், (
لأَنْ أَشْهَدَ صَلاَةَ الصُّبْحِ
فِي الْجَمَاعَةِ أَحَبُّ إِلَيَّ مِنْ أَنْ أَقُومَ لَيْلَةً ) "இரவு முழுவதும் (நஃபில் எனும்) உபரியான
தொழுகைகள் தொழுவதை விட ஜமாஅத்துடன் ஃபஜ்ரு தொழுவதே எனக்கு மிகப் பிரியமானதாகும்"
என்று கூறினார்கள். நூல்:- முவத்தா மாலிக்-296
பாவமன்னிப்புக் கோருவது
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒரு மனிதன் தமது ஒட்டகத்தில் தமது பயண உணவையும் தண்ணீர் நிரம்பிய தோல் பையையும் ஏற்றிக்கொண்டு பயணம் செய்தான். வறண்ட பாலைவனத்தில் அவன் சென்று கொண்டிருந்த போது மதிய ஓய்வு நேரம் வரவே, அவன் இறங்கி ஒரு மரத்தின் கீழ் தம்மையும் அறியாமல் உறங்கிவிட்டான். அப்போது அவரது ஒட்டகம் காணாமல் போய்விட்டது. அவன் விழித்தெழுந்தபோது ஒட்டகத்தைக் காணாததால் பல இடங்களில் தேடிப்பார்த்தும் அதை அவனால் கண்டுபிடிக்கமுடியவில்லை. உணவும் நீரும் கிடைக்காத இந்த வறண்ட பாலைவனத்தில் நான் வசமாக மாட்டிக் கொண்டேன். இனி நான் சாக வேண்டியதுதான் என்றெண்ணி முன்பு ஓய்வெடுத்த இடத்திற்கே திரும்பி வந்து அமர்ந்து உறங்கினான்
பிறகு (திடீரென) அவன் விழித்துப் பார்த்தபோது அவனுக்கருகில் அவனது ஒட்டகம் இருந்தது. அதில் அவனது பயண உணவும் நீரும் இருந்தன. அப்போது அவன் தனது ஒட்டகத்தாலும், உணவாலும் அடைகின்ற மகிழ்ச்சியைவிட, இறைநம்பிக்கையாளர் பாவமன்னிப்புக் கோரி மீட்சி பெறுவதால் அல்லாஹ் அதிகம் மகிழ்கிறான். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் மஸ்ஊது (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-6308, முஸ்லிம்-5296, திர்மிதீ-2422
பேரறிஞர் ஹசன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது. அல்லாஹுத்தஆலா, ( وَعِزَّتِي لَا أَحْجُبُ عَنْهُ التَّوْبَةَ مَا لَمْ يُغَرغِر بِالْمَوْتِ، وَلَا يَدْعُونِي إِلَّا أَجَبْتُهُ، وَلَا يَسْأَلُنِي إِلَّا أَعْطَيْتُهُ، وَلَا يَسْتَغْفِرُنِي إِلَّا غَفَرْتُ لَهُ ) "எனது வல்லமையின் மீதும் மாண்பின் மீதும் ஆணையாக! மரணம் மனிதனின் தொண்டைக்குழியை அடைக்காதவரையில் பாவமன்னிப்பை அவனிடமிருந்து தடுக்கமாட்டேன்; என்னை அழைத்துப் பிரார்த்தித்தால் அவனுக்குப் பதிலளிக்காமல் இருக்கமாட்டேன்; என்னிடம் கேட்டால் அவனுக்குக் கொடுக்காமல் இருக்கமாட்டேன்; என்னிடம் பாவமன்னிப்புக் கோரினால் அவனுக்கு மன்னிப்பு வழங்காமல் இருக்கமாட்டேன்" என்று கூறினான். நூல்:- தஃப்சீர் இப்னு அபீஹாத்திம், தஃப்சீர் இப்னுகஸீர் ஸபஉ வசனம்-20
பாவம் என்பது நமது எண்ணத்தோடும் செயலோடும் ஒன்றிணைந்துள்ளது. நாம் உறுதியாக செய்யக்கூடாது என்று நாட்டம் கொண்டாலே தவிர அதனைத் தடுத்திட முடியாது.
மனிதன் தான் செய்துவிட்ட பாவத்தை எண்ணி வருந்தி, அந்தப் பாவத்தைக் கைவிட்டு, இனிமேல் அதை செய்யமாட்டேன் என உறுதி எடுத்துக்கொண்டு இறைவனிடம் பாவமன்னிப்புக் கோருவதே இஸ்லாத்தில் பாவமீட்சி (அத்தவ்பா) எனப்படுகிறது. ஒருவன் சிறிய பெரிய எந்த பாவத்தைச் செய்துவிட்டாலும் உடனுக்குடன் அதற்காக பாவமீட்சி பெற வேண்டும். இறைவன் தனது கருணையால் அந்தப் பாவத்தை மன்னித்து, மகிழ்ச்சியும் அடைவான்.
இரவுத் தொழுகை
(நபியே) இரவில் ஒரு பகுதியில் (விழித்து) தஹஜ்ஜுத் எனும் தொழுகையை அதை (குர்ஆனை)க் கொண்டு நிறைவேற்றுவீராக! திருக்குர்ஆன்:- 17:79
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்கள் இரவு நேரத்தில் தம்
பாதங்கள் வீங்கும் அளவுக்கு நின்று வழிபடுவார்கள். ஆகவே நான், ( لِمَ تَصْنَعُ هَذَا يَا رَسُولَ اللَّهِ وَقَدْ غَفَرَ اللَّهُ لَكَ
مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ ) "நாயகமே! ஏன் இப்படி செய்கிறீர்கள்! தங்களின் முந்தைய
பிந்தைய தவறுகளை அல்லாஹ் மன்னித்து விட்டானே?" என்று கேட்டேன். அதற்கு
அவர்கள், ( أَفَلاَ أُحِبُّ أَنْ أَكُونَ عَبْدًا شَكُورًا ) "(ஆயிஷா!) நான் நன்றியுள்ள
அடியானாக இருக்க விரும்ப வேண்டாமா?"
என்று கேட்டார்கள். நூல்:- புகாரீ-4837, முஸ்லிம்-5433
அருமை நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் செய்துள்ள அருட்கொடைகள் ஏராளம். அவற்றுக்கு நன்றி தெரிவிக்க கால் கடுக்க நபியவர்கள் நின்று வழிபட்டுள்ளார்கள். நன்றி என்பதே உதவி செய்தவரின் உதவியைப் புரிந்துகொண்டு அதை சிலாகிப்பது தான். அல்லாஹ் செய்த அருட்கொடைகளை ஒப்புக்கொண்டு அவற்றிற்காக அவனைப் புகழ்ந்து பாராட்டி அவனுக்கு எப்போதும் கீழ்ப்படிந்து நடப்பது அல்லாஹ்வுக்கு நாம் செய்யும் நன்றியாகும். ஒவ்வொருவரும் தமக்கு வழங்கப்பட்டுள்ள அருட்கொடைகளை எண்ணி, தமது சக்திக்கேற்ப அல்லாஹ்வைத் தொழுது வழிபட்டு, அவனுக்கு நன்றி செலுத்த வேண்டும்.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
( ثَلاَثَةٌ يُحِبُّهُمُ اللهُ وَيَضْحَكُ إِلَيْهِمْ وَيَسْتَبْشِرُ بِهمْ:
الَّذِي إِذَا انْكَشَفَتْ فِئَةٌ قَاتَلَ وَرَاءَهَا بِنَفْسِهِ لِلّهِ وَالَّذِي لَهُ امْرَأَةٌ حَسَنَةٌ وَفِرَاشٌ لَيِّنٌ
حَسَنٌ فَيَقُومُ مِنَ اللَّيْلِ فَيَقُولُ: يَذَرُ شَهْوَتَهُ وَيَذْكُرُنِي وَلَوْشَاءَ
رَقَدَ، وَالَّذِي إِذَا كَانَ فِي سَفَرٍ وَكَانَ مَعَهُ رَكْبٌ فَسَهِرُوا ثُمَّ
هَجَعُوا فَقَامَ مِنَ السَّحَرِ )
அல்லாஹ் மூவரை நேசிக்கிறான். அவர்களைக் கண்டு அளவில்லா ஆனந்தம் அடைகிறான். 1) தமது தோழர்கள் அனைவரும் போர்க்களத்தை விட்டு ஓடிய பின்னும் தனித்து நின்று அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி போராடுபவர். 2) தனக்கு அருகில் அழகிய மனைவி இருக்க மிருதுவான படுக்கையும் இருக்க, (இவையனைத்தையும் விட்டுவிட்டு) தஹஜ்ஜுத் எனும் இரவுத் தொழுகையில் ஈடுபடுபவர். இவரைக் கண்டதும் அல்லாஹ் வானவர்களிடம், "பாருங்கள்! தனது ஆசைகளை விட்டு விட்டு என்னை நினைப்பதில் ஈடுபட்டுள்ளார், அவர் விரும்பினால் தூங்கியிருக்க முடியும்" என்று (பெருமையாக) கூறுகின்றான். 3) ஒரு கூட்டத்தாருடன் ஒருவர் பயணம் செய்கிறார். அக்கூட்டத்தினர் இரவில் நீண்ட நேரம் விழித்திருந்த பின் தூங்கிவிட, அவர் மட்டும் இரவின் இறுதியில் தஹஜ்ஜுத் எனும் இரவுத் தொழுகை தொழுகிறார். அறிவிப்பாளர்:- அபூதர்தா (ரலி) அவர்கள் நூல்:- தப்ரானீ
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِنَّ اللَّهَ لَيَضْحَكُ إِلَى ثَلاَثَةٍ لِلصَّفِّ فِي الصَّلاَةِ وَلِلرَّجُلِ يُصَلِّي فِي جَوْفِ اللَّيْلِ وَلِلرَّجُلِ يُقَاتِلُ - أُرَاهُ قَالَ - خَلْفَ الْكَتِيبَةِ ) அல்லாஹ் மூவரைக் கண்டு (மகிழ்ந்து) சிரிக்கின்றான். 1)தொழுகை வரிசையில் நிற்பவர். 2) நடு இரவில் தொழுகின்ற மனிதர். 3) அறப்போரில் படையினருக்கு பின்னாலிருந்து போரிட்டுக் கொண்டிருக்கும் மனிதர். அறிவிப்பாளர்:- அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் நூல்:- இப்னுமாஜா-196
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( اَنَّ شَرَفَ المُؤْمِنِ قِيَامُهُ بِاللَّيْلِ
) இரவில் விழித்திருந்து தொழுவதில் இறைநம்பிக்கையாளரின் கண்ணியம் இருக்கிறது. அறிவிப்பாளர்:-
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் நூல்:- தப்ரானீ,
அத்தர்ஙீபு வத்தர்ஹீபு
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( عَلَيْكُمْ بِقِيَامِ اللَّيْلِ فَإِنَّهُ دَأْبُ الصَّالِحِينَ قَبْلَكُمْ
وَإِنَّ قِيَامَ اللَّيْلِ قُرْبَةٌ إِلَى اللَّهِ وَمَنْهَاةٌ عَنِ الإِثْمِ وَتَكْفِيرٌ
لِلسَّيِّئَاتِ وَمَطْرَدَةٌ لِلدَّاءِ عَنِ الْجَسَدِ ) இரவு வழிபாட்டைக் கடைபிடியுங்கள். ஏனெனில், அது உங்களுக்கு முன் வாழ்ந்த நல்லோர்களின் நடைமுறையாகும்.
மேலும் இரவு வழிபாடு அல்லாஹ்வின் பக்கம் நெருக்கமாக்கி வைக்கும்; குற்றத்திலிருந்து தடுக்கும்; பாவங்களுக்குப் பரிகாரமாக அமையும்; மேலும் உடலிலிருந்து நோயை விரட்டும். அறிவிப்பாளர்:-
பிலால் (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-3462
இப்னு ஜரீர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. ஒரு முறை உமர் (ரலி) அவர்கள் பள்ளிவாசலுக்கு வந்தார்கள். அப்போது ஒருவர், ( اللَّهُمَّ دَعَوْتَنِي فَأَجَبْتُ، وَأَمَرْتَنِي فَأَطَعْتُ، وَهَذَا السَّحَرُ فَاغْفِرْ لِي ) "இறைவா! என்னை நீ அழைத்தாய்; நான் பதிலளித்தேன். எனக்கு நீ கட்டளையிட்டாய்; உனக்கு நான் கட்டுப்பட்டேன். இது பின்னிரவு (ஸஹர்) நேரமாகும். எனவே என்னை மன்னிப்பாயாக" என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்ததை செவியேற்றார்கள். அதை செவியுற்றபோது அந்தக் குரல் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் வீட்டில் இருந்து வருவதைக் கண்டார்கள்.
பிறகு அது குறித்து உமர் (ரலி) அவர்கள் வினவினார்கள். அப்போது அப்துல்லாஹ் இப்னு
மஸ்வூத் (ரலி) அவர்கள், ( إِنَّ يَعْقُوبَ أخَّر بَنِيهِ إِلَى السِّحْرِ
) “யஅகூப் (அலை) அவர்கள் தம் மக்களிடம், "நான் உங்களுக்காக என் இறைவனிடம் விரைவில் பாவமன்னிப்புக்
கோருவேன்" என்று சொல்லி, பின்னிரவு நேரம்வரை
தாமதப்படுத்தினார்கள் என்று கூறினார்கள். நூல்:- தஃப்சீர் தபரீ, தஃப்சீர் இப்னு அபீ ஹாத்திம், தஃப்சீர் இப்னு கஸீர் அத்தியாயம் யூசுஃப் வசனம்-98
இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். "தஹஜ்ஜுத் நேரத்தில்
கேட்கப்படும் பிரார்த்தனை என்பது குறி தவறாத அம்பைப் போன்றது!"
பள்ளிவாசலே உறைவிடம்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ் தனது (அரியாணையின்) நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத அந்த மறுமை நாளில் தனது நிழலில் ஏழு சாரார்களுக்கு நிழல் அளிப்பான். அதில் ஒரு சாரார் பள்ளிவாசல்களுடன் (எப்போதும்) தொடர்பு வைத்துக்கொள்ளும் இதயமுடையவர். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-1423, முஸ்லிம்-1869
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَا تَوَطَّنَ رَجُلٌ مُسْلِمٌ الْمَسَاجِدَ لِلصَّلاَةِ وَالذِّكْرِ إِلاَّ تَبَشْبَشَ اللَّهُ لَهُ كَمَا يَتَبَشْبَشُ أَهْلُ الْغَائِبِ بِغَائِبِهِمْ إِذَا قَدِمَ عَلَيْهِمْ ) முஸ்லிமான ஒரு மனிதர் தொழுகைக்கும் (இறைவனை) நினைவுகூர்ந்து போற்றுவதற்கும் பள்ளிவாசல்களையே (உள்ளார்ந்த) உறைவிடங்களாக ஆக்கிக்கொண்டால், பயணம் சென்றிருந்த ஒருவர் இல்லம் திரும்பும்போது அவருடைய வீட்டார் (அகமும் முகமும் மலர) மகிழ்ச்சி அடைவதைப்போன்று அல்லாஹ்வும் மகிழ்ச்சி அடைகிறான். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- இப்னுமாஜா-792, இப்னு ஹிப்பான்
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
( لاَ يَتَوَضَّأُ أَحَدُكُمْ فَيُحْسِنُ وُضُوءَهُ وَيُسْبِغُهُ، ثُمَّ يَأْتِي الْمَسْجِدَ لاَ يُرِيدُ إِلاَّ الصَّلاَةَ فِيهِ إِلاَّ تَبَشْبَشَ اللهُ إِلَيْهِ كَمَا يَتَبَشْبَشُ أَهْلُ الْغَائِبِ بِطَلْعَتِهِ ) ஒருவர் தொழுகின்ற ஒரே நோக்கத்தோடு அழகிய முறையிலும் நிறைவாகவும் அங்கத்தூய்மை செய்து, பள்ளிவாசலை நோக்கிப் புறப்பட்டு வரும்போது, வெளியூர் சென்றிருந்த ஒருவர் வீடு திரும்பும் போது அவருடைய வீட்டார் மகிழ்ச்சி அடைவதை போன்று அல்லாஹ்வும் மகிழ்ச்சி அடைகின்றான். நூல்:- முஸ்னது அஹ்மத்-7720, ஹாகிம்-728, இப்னு குஸைமா-1491
மற்ற சில அறிவிப்புகளில் "அவர் பள்ளிவாசலை விட்டும் வெளியேறும் வரை அவ்வாறு
அல்லாஹ் மகிழ்ச்சி அடைகிறான்" என பதிவாகியுள்ளது. நூல்:- முஸ்னது அஹ்மத்-8000,
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
( مَنْ أَلِفَ الْمَسْجِدَ أَلِفَهُ
اللهُ
) எவர் பள்ளிவாசலை நேசிக்கிறாரோ அவரை அல்லாஹ் நேசிக்கிறான். அறிவிப்பாளர்:- அபூஸஈத் அல்குத்ரீ (ரலி) அவர்கள்
நூல்:- தப்ரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்
பள்ளிவாசலில் தன் இதயத்தைப் பறிகொடுத்து வாழும் நல்லடியார்களுக்கு மறுமையில் கிடைக்க இருக்கும் பாக்கியம் எவ்வளவு மகத்துவமானது என்பதை இந்த நபிமொழி உணர்த்துகிறது.
மறுமை நாளில் மனிதர்களை கிடுகிடுக்க வைக்கும் அதிபயங்கரமான குழப்பங்களுக்கு மத்தியில்
பள்ளிவாசலோடு மனமொன்றிப்போனவர்களுக்கு கொஞ்சம் சுகம் கிடைக்கும் என்றால் அது விலை மதிக்க
முடியாததல்லவா?
பள்ளிவாசலை தங்குமிடமாக்கிக் கொள்வதன் கருத்து: இறைவழிபாடு புரிய பள்ளிவாசலுக்கு
அதிகம் சென்று வருவதாகும்.
நன்றியுணர்வு
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِنَّ اللَّهَ لَيَرْضَى عَنِ الْعَبْدِ أَنْ يَأْكُلَ الأَكْلَةَ، أَوْ يَشْرَبَ الشَّرْبَةَ فَيَحْمَدَهُ عَلَيْهَا ) ஒரு தடவை (அல்லது ஒரு கவளம்) சாப்பிட்ட பிறகு அதற்காக அல்லாஹ்வைப் புகழக்கூடிய அல்லது ஒரு தடவை (அல்லது ஒரு மிடறு) தண்ணீர் பருகிய பிறகு அதற்காக அல்லாஹ்வை புகழக்கூடிய அடியார் மீது அல்லாஹ் மகிழ்ச்சி அடைகின்றான். அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- ஷமாயில் திர்மிதீ-194
உடல் இயக்கத்திற்கு தேவையான உணவு பானங்களை உண்ட பிறகு, அதை தந்த அல்லாஹ்வுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவன் விரும்பும் வார்த்தைகளால் அவனை புகழ்ந்துரைத்து, நம்முடைய நன்றியுணர்வை வெளிப்படுத்தவேண்டும். இதன்மூலம் நாம் அல்லாஹ்வையே சந்தோஷப்படுத்தியவர்களாக ஆவோம். மேலும், நாம் இறையருளையும் இறைவனின் நற்பரிசையும் அதிகமாக பெறமுடியும்.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.( أَوَّلُ مَنْ يُدْعَى إِلَى الْجَنَّةِ الَّذِينَ يَحْمَدُونَ اللَّهَ
في السَّرَّاءِ وَالضَّرَّاءِ ) செல்வ நிலையிலும், வறுமையான நிலையிலும், அல்லாஹுவைப் புகழ்ந்தவர்களைத்தான். முதன் முதலாக
சொர்க்கத்திற்கு அழைக்கப்படுவர்கள். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் நூல்:ஹாகிம்
இறைத்தூதர் தாவூத் (அலை) அவர்கள் (இறைவனிடம்)
( كَيْفَ أَشْكُرُكَ، وَالشُّكْرُ نِعْمَةٌ مِنْكَ؟ ) "என் இறைவா! நான் உனக்கெப்படி (முழுமையாக)
நன்றி செலுத்த இயலும்? நான் உனக்குச் செய்யும் நன்றி கூட நீ எனக்கு நல்கிய
அருட்கொடை தானே?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ், ( الْآنَ شَكَرْتَنِي حِينَ عَلِمْتَ أَنَّ النِّعْمَةَ مِنِّي ) "(தாவூதே!) இப்போதுதான் நீர் எனக்கு நன்றி செலுத்தியவராகிறீர்"
என்று (பதில்) கூறினான். அதாவது அருட்கொடை என்பது என்னிடமிருந்தே கிடைக்கிறது (தன்னுடைய
திறமையால் அல்ல) என்று நீ தெளிவாகத் தெரிந்து கொண்டபோதே, நீர் நன்றி செலுத்திவிட்டீர் என்று இறைவன் கூறினான். நூல்:- தஃப்சீர் இப்னு கஸீர்
ஸபஉ வசனம்-13
பயனளிப்பவர்
அன்றி (பிறருக்கு உதவியும்) நன்மையும் செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ் (பிறருக்கு) நன்மை செய்பவர்களை நேசிக்கின்றான். திருக்குர்ஆன்:- 2:195
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
( أَحَبُّ النَاسِ إلَى
اللَّهِ أنْفَعُهُمْ لِلنَّاسِ ) மனிதர்களில் அல்லாஹ்வுக்கு
மிகவும் பிரியமானவர். பிற மனிதர்களுக்கு பயனளிப்பவரே ஆவார். அறிவிப்பாளர்:- ஜாபிர்
(ரலி) அவர்கள் நூல்:- தப்ரானீ, தாரகுத்னீ, ஜாமிஉஸ் ஸஙீர்
முஹம்மது பின் இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. மதீனாவில் ஒரு கூட்டத்தார் வாழ்ந்து
கொண்டிருந்தனர். எங்கிருந்து தங்களின் வாழ்க்கைத் தேவைகளை பெற்று வாழ்கின்றனர் என்பதையும், அவர்களுக்கு யார் வழங்குகின்றார்கள் என்பதையும் அவர்களில் எவரும் அறிய மாட்டார்.
அலீ பின் ஹுஸைன் (ரஹ்) அவர்கள் மரணம் அடைந்ததும் அக்கூட்டத்தார் தங்களுக்குக் கிடைத்து
வந்தது கிடைக்காமல் தவிப்பிற்குள்ளாயினர். அலீ பின் ஹுஸைன் (ரஹ்) அவர்கள் தாம், இரவு நேரங்களில் தங்களிடம் வந்து உதவிகளைக் கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார்கள்
என்பதை அப்போது தான் அறிந்து கொண்டனர். அன்னார் இறந்த பின் முதுகு மற்றும் புஜங்களில்
ஏழைகள், விதவைகளின் வீடுகளுக்கு தோல் பைகளை சுமந்து கொண்டு
வந்து கொடுத்ததால் ஏற்பட்ட தழும்புகள், வடுக்கள் இருப்பதைக்
கண்டனர். நூல்:- ஹில்யத்துல் அவ்லியா இமாம் அபூநயீம், இஷ்திராகிய்யதுல் இஸ்லாம்-முஸ்தஃபா
ஸபாஈ
“நீ சென்ற பிறகு, உன் தர்மத்தை உண்டவர், உன்னால் தொழுகைக்கு எழப்பப்பட்டவர், உன் வார்த்தையால் ஆறுதல் பெற்றவர், உன்னால் இரகசியமாக உபதேசிக்கப்பட்டவர், மலர்ந்த முகத்துடன் உன்னால் வரவேற்கப்பட்டவர் இழப்புணர்வை அடைவர்” என்றார் ஓர் அறிஞர்.
அல்லாமா இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ( وَهُوَ أَعْلَى مَقَامَات الطَّاعَة ) இறைவழிபாட்டின் படித்தரங்களில் உயர்ந்தது,
பிறருக்கு நன்மை செய்வதே ஆகும்.
நாம், அல்லாஹ் ஆனந்தப்படும்
நற்காரியங்களை நிரப்பமாக செய்து, அதன்மூலம் இறையருளைப் பெறுவோமாக! ஆமீன்!
மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ
இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951
No comments:
Post a Comment