திருத்திக்கொள்வார்கள்
وَلَا يَأْتَلِ أُولُو الْفَضْلِ مِنْكُمْ وَالسَّعَةِ أَنْ يُؤْتُوا
أُولِي الْقُرْبَى وَالْمَسَاكِينَ وَالْمُهَاجِرِينَ فِي سَبِيلِ اللَّهِ
وَلْيَعْفُوا وَلْيَصْفَحُوا أَلَا تُحِبُّونَ أَنْ يَغْفِرَ اللَّهُ لَكُمْ
وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ
உங்களில் செல்வந்தரும் (பிறருக்கு உதவி செய்யும்) தயாள குணமும் உடையோர், தங்கள் உறவினர்களுக்கோ, ஏழைகளுக்கோ, இறைவழியில் புலம்பெயர்ந்தவர்களுக்கோ
(தர்மம்) கொடுக்க மாட்டேன் என்று சத்தியம் செய்ய வேண்டாம். (அவர்களால் உங்களுக்கு ஏதேனும்
வருத்தம் ஏற்பட்டிருந்தால்) அதை நீங்கள் மன்னித்துப் புறக்கணித்துவிடுக. அல்லாஹ் உங்களுக்கு
மன்னிப்பளிப்பதை நீங்கள் விரும்ப மாட்டீர்களா? அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனும்
மிகுந்த கருணையாளனும் ஆவான். திருக்குர்ஆன்:- 24:22
நம்மீது நல்ல அபிப்பிராயம் கொண்டவர்கள் தவறுகள் செய்வதை நாம் காணும்போது,
அதை அவர்கள் சரி செய்து கொள்ள
வேண்டுமே என்ற நல்லெண்ணத்துடன் அவர்களுக்கு நாம் அறிவுறுத்தலாம். நாம் சொல்லி அவர்கள்
கேட்கவா போகிறார்கள்? என்று பொடுப்பாக்காய்
எண்ணி அதைப்பற்றி எடுத்துரைக்காமல் இருப்பது சிறந்ததல்ல.
அறிஞர் முஹம்மத் அப்துர்ரஹ்மான் அல்அரீபீ அவர்கள் கூறுகிறார்கள். தைரியம் என்பது நம்முடைய தவறுகளில் பிடிவாதம் கொள்வது அல்ல; மாறாக, நாம் தவறு செய்திருந்தால் ஒத்துக்கொண்டு அந்தத் தவறை மீண்டும் செய்யாமலிருப்பதாகும். நூல்:- இஸ்தம்திஃ பிஹயாதிக்க
ஒரு தொழிலைக் கற்றுக் கொடு!
மேலும் அவருக்கு (நபி தாவூதுக்கு) இரும்பை (மெழுகுப்போல்) மெதுவாக்கித் தந்தோம். திருக்குர்ஆன்:- 34:10
நபி தாவூத் (அலை) அவர்கள் அரசராக இருந்தபோது இரவு நேரங்களில் மாறு வேடத்தில் வெளியே செல்வார்கள். பார்ப்பவர்களிடம் அரசரைப் பற்றி அபிப்பிராயம் கேட்பார்கள். இவ்வாறு ஓர் இரவில் அவர்கள் ஒருவரிடம் வினவியபோது அவர், "அரசர் தாவூத் மிகவும் நல்லவர் தான்; எனினும் அவர் தமக்கும் தமது குடும்பத்தாருக்குமான உணவாதாரத்தை பொது நிதியிலிருந்தே பெறுகிறார். அது ஒன்று தான் அவரிடமுள்ள குறை என்றார்.
அப்போது தான் தாவூத் (அலை) அவர்கள் இறைவனிடம் பிரார்த்தனையில் ஈடுபட்டு, ( أَنْ يُعَلِّمهُ عَمَلًا بِيَدِهِ يَسْتَغْنِي بِهِ وَيُغْنِي بِهِ عِيَاله )
“தமக்கும் தம் குடும்பத்தாருக்கும் தன்னிறைவைத் தரும்படியான
கைத்தொழில் ஒன்றைத் தமக்குக் கற்றுத்தருமாறு” கோரினார்கள். அதையடுத்து அல்லாஹ் அவருக்கு
இரும்பின் மூலம் கவச ஆடைகள் தயாரிக்கும் தொழில் நுட்பத்தைக் கற்றுக் கொடுத்தான். அதன்பிறகு தாவூத் (அலை) அவர்கள்
அந்த தொழில் மூலம் தமது வாழ்வாதாரத்தைப் பெற்றுக்கொண்டார்கள். நூல்:- தஃப்சீர் இப்னு கஸீர்
அனுபவம் கற்றுத்தரும் பாடம்
கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لاَ يُلْدَغُ الْمُؤْمِنُ مِنْ جُحْرٍ وَاحِدٍ مَرَّتَيْنِ ) இறைநம்பிக்கையாளர்
ஒரே புற்றில் இரண்டு முறை தீண்டப்படமாட்டார். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள்
நூல்:- புகாரீ-6133, முஸ்லிம்-5725
ஓர் இறைநம்பிக்கையாளர் ஒருமுறை ஏமாந்தாலும் மறுமுறை சுதாரித்துக் கொள்ள வேண்டும்.
உலக விவகாரங்களிலாகட்டும். மார்க்க விவகாரங்களிலாகட்டும். ஒரு இறைநம்பிக்கையாளர் தொடர்ந்து
இரண்டு தடவை ஏமாறக்கூடாது. எப்போதும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். ஒரு தடவை
பட்ட அனுபவம் அடுத்த தடவை அவருக்கு பாடமாக அமைய வேண்டும்.
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஓர் அடிமை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, நாடு துறந்து (ஹிஜ்ரத்) செல்ல உறுதிமொழி அளித்தார்.
அவர் அடிமை என்பது அண்ணலாருக்குத் தெரிந்திருக்கவில்லை. பின்னர் அவருடைய உரிமையாளர்
அண்ணலாரை தேடிவந்(து, அதைப்பற்றி முறையீடு செய்)தார்.
அண்ணலார் அவரிடம், ( بِعْنِيهِ ) "அவரை எனக்கு விற்றுவிடு"
என்று கூறிவிட்டு, இரு கறுப்பு அடிமைகளைக் கொடுத்து
அவரை வாங்கிக் கொண்டார்கள். அதன் பின்னர், (தம்மிடம் உறுதிமொழி
அளிக்க வருபவர்) எவரிடமும் அண்ணலார், ( أَعَبْدٌ هُوَ ) “நீ அடிமையா?” என்று கேட்காமல் உறுதிமொழி பெறவில்லை. நூல்:- முஸ்லிம்-3275, நஸாயீ-4113, திர்மிதீ-1160, இப்னு மாஜா-2859, முஸ்னது அஹ்மத்-14245
ஒருவர் ஹிஜ்ரத் தொடர்பாக ஆட்சித் தலைவரிடம் உறுதிமொழி அளிக்க வந்தால் அவர் அடிமையா, சுதந்திரமானவரா என்று தெரிந்து கொண்ட பிறகு அவர்
சுதந்திரமானவராக இருந்தால்தான் அவரிடம் உறுதிமொழி பெற முடியும். அடிமையாக இருந்தால்
பெற முடியாது. எனவேதான், தம்மிடம் உறுதிமொழி
அளித்தவர் அடிமை எனத் தெரிந்ததும் அவருடைய உறுதிமொழியை முறிக்க மனமில்லாமல், அவருக்குப் பதிலாக இரு அடிமைகளைத் தொடர்புடைய உரிமையாளரிடம்
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் விலையாக வழங்கினார்கள். (அதன் பிறகுதான் உறுதிமொழி அளிக்க
வருபவர் அடிமையா? அல்லது சுதந்திரமானவரா என்று
விசாரித்த பிறகு அவரது உறுதிமொழியை ஏற்றார்கள். இதன் மூலம் அண்ணலாருக்கு ஓர் அனுபவமும்
கிடைத்தது.) நூல்:- துஹ்ஃபத்துல் அஹ்வதீ
நம்முடைய பழக்க வழக்கங்களில் ஒரு சிறிய தவறு உள்ளது என்று நம்முடைய வாழ்க்கையில்
நடந்த மற்றொரு நிகழ்வு சுட்டிக்காட்டும்போது அதை திருத்திக்கொள்வதே சிறந்ததாகும்.
உதவியை நிறுத்த மாட்டேன்
அபூபக்ர் (ரலி) அவர்கள் மிஸ்தஹ் என்ற நபித்தோழருக்கு மனிதாபிமான முறையில் உதவி செய்து வந்தார்கள். இதற்கிடையில் தன் மகள் ஆயிஷா (ரலி) அவர்களின் கற்பொழுக்கத்தின் மீது நயவஞ்சகர்கள் அவதூறு பேசத் துவங்கியபோது அம்மாபாதகச் செயலில் ஈடுபட்ட சில நபித்தோழர்களுள் மிஸ்தஹ் என்பவரும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதைச் செவியுற்ற அபூபக்ர் (ரலி) அவர்கள் (மனம் நொந்தவர்களாக)
( وَاللَّهِ لاَ أُنْفِقُ عَلَيْهِ
شَيْئًا أَبَدًا بَعْدَ الَّذِي قَالَ لِعَائِشَةَ ) "அல்லாஹ்வின் மீதாணையாக! என் (மகள்) ஆயிஷா
குறித்து 'மிஸ்தஹ்' அவதூறு கூறிய பின்பு
ஒருபோதும் அவருக்காக நான் சிறிதும் செலவிடமாட்டேன்" என்று (சத்தியமிட்டுக்) கூறினார்கள்.
தலைப்பில் காணும் திருவசனம் அருளப்பெற்றதும் உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள்,
( وَاللَّهِ إِنِّي لأُحِبُّ
أَنْ يَغْفِرَ اللَّهُ لِي
) "அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்
எனக்கு மன்னிப்பு வழங்க வேண்டுமென்றே நான் விரும்புகிறேன்" என்று கூறிவிட்டு,
மிஸ்தஹுக்கு ஏற்கனவே தாம்
செலவிட்டு வந்ததைத் திரும்பவும் தொடரலானார்கள். "அவருக்கு(ச் செய்யும் இந்த உதவியை)
ஒருபோதும் நான் நிறுத்த மாட்டேன்" என்றும் சொன்னார்கள். நூல்:- முஸ்லிம்-5349,
திர்மிதீ-3094
இரவுத் தொழுகை
இறைநம்பிக்கை கொண்ட ஆண்களும் இறைநம்பிக்கை கொண்ட பெண்களும் (தங்களுக்குள்)
ஒருவருக்கொருவர் உற்ற தோழர்களாய் இருக்கின்றனர். அவர்கள் (ஒருவர் மற்றவருக்கு)
நன்மையானவற்றை கட்டளையிடுகின்றார்கள். தீயவற்றை தடைசெய்கின்றார்கள். திருக்குர்ஆன்:-
9:71
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில், ஒருவர் கனவு கண்டால் அதை அண்ணலாரிடம் எடுத்து வைப்பது வழக்கம். ஆகவே, (ஒருநாள்) நான் பள்ளிவாசலில் உறங்கிக்கொண்டிருந்தபோது இவ்வாறு கனவு கண்டேன்: இரு வானவர்கள் என்னைப் பிடித்து நரகத்திற்கு கொண்டு சென்றார்கள். அந்த நரகத்தில் எனக்குத் தெரிந்த சில மனிதர்களும் இருந்தனர். உடனே நான் "நரகத்திலிருந்து பாதுகாக்கும்படி அல்லாஹ்விடம் வேண்டுகிறேன்" என்று பிரார்த்திக்கலானேன். அப்போது எங்களை மற்றொரு வானவர் சந்தித்தார். அவர் என்னிடம் "இனி ஒருபோதும் நீர் பீதியடையமாட்டீர்" என்று கூறினார்.
இதை நான் (என் சகோதரியும் அண்ணலாரின் துணைவியுமான) ஹஃப்சா (ரலி) அவர்களிடம் விவரித்தேன். அவர் அதை அண்ணலாரிடம் விவரித்தார்கள்.
அப்போது அண்ணலார், ( نِعْمَ الرَّجُلُ عَبْدُ اللَّهِ، لَوْ كَانَ يُصَلِّي مِنَ اللَّيْلِ ) "அப்துல்லாஹ் (பின் உமர்) சிறந்த மனிதர். அவர் இரவின் ஒரு பகுதியில் தொழுபவராயிருந்தால் நன்றாக இருக்கும்" என்று கூறினார்கள்.
(அண்ணலார் இப்படி சொன்னதிலிருந்து) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் இரவில் சிறிது நேரம் மட்டுமே உறங்குபவராயிருந்தார்கள் என அவரது மகனார் சாலிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். நூல்:- புகாரீ-1121,1122
அழகைப் பேணுதல்
சஹ்ல் பின் ஹன்லளா (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்கள், ( نِعمَ الرَّجُلُ خُرَيمٌ الاَ سَدِيُّ لَولَا طُولُ جُمَّتِهِ وَاِسبَالُ اِزَارِهِ ) "குரைம் அசதீ (ரலி) அவர்கள் நல்ல மனிதர். அவரின் தலை முடி நீளமானதாகவும், அவரின் கீழாடை கரண்டைக் காலுக்கு கீழும் இல்லையென்றால் நன்றாக இருக்கும்" என்று கூறினார்கள். இச்செய்தி குரைம் (ரலி) அவர்களுக்கு தெரிய வந்ததும், கத்தியை எடுத்து காதுக்குக் கீழ் தொங்கிக்கொண்டிருந்த தலைமுடியை வெட்டிக் கொண்டார்கள். கீழாடை கெண்டைக்காலின் பாதி அளவு தூக்கிக் கட்டிக்கொண்டார்கள். நூல்:- முஸ்னது அஹ்மத், ஹயாத்துஸ் ஸஹாபா பாகம்-2, பக்கம்-461
எனவே, நாம் பிறரின் பிழைகளை
காணும்போது அதை அழகிய முறையிலும், நல்லெண்ணத்துடனும்
சுட்டிக்காட்ட தயங்கக்கூடாது. மேலும், நம்மீது நல்லெண்ணம் உள்ளவர்கள் நம்முடைய குறைகளைச் சுட்டிக்காட்டும்போது,
அதை ஏற்றுகொண்டு அவர்களுக்கு
நன்றி தெரிவித்துவிட்டு, அந்த குறைகளை சரிசெய்து
கொண்டு வாழும் நற்பண்புள்ளவர்களாக அல்லாஹுத்தஆலா நம்மை வாழச் செய்வானாக! ஆமீன்!
மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ
இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்:
9840535951
No comments:
Post a Comment