கனம் நீதிபதி அவர்களே!
وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَنْ تَحْكُمُوا بِالْعَدْلِ
மக்களிடையே நீங்கள் தீர்ப்புக் கூறினால் (பாரபட்சமின்றி ) நீதமாகவே தீர்ப்பு வழங்க வேண்டும். திருக்குர் ஆன்:-4:57
இனப்படுகொலை, குற்றம் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் போன்ற சம்பவங்களில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி வழங்குவதன் முக்கியத்துவத்தை குறிக்கும் வகையில் ஜூலை 17 ஆம் தேதி சர்வதேச நீதி தினமாகக் கொண்டாடப்படுகிறது.
இஸ்லாத்திற்கு முந்தைய அறியாமைக் காலத்தில் அரபியரிடையே தீர்ப்பு வழங்குவதற்கென முறையான அமைப்பேதும் இருந்ததில்லை. ஒவ்வொரு அரபுக் குலத்திற்கும் ஒரு வழக்கம் இருந்து வந்தது. அது வாழையடிவாழையாக முன்னோரிடமிருந்து கிடைத்து வந்த வழக்கமாகும். அதன்படியே குலத்தலைவர்கள் தீர்ப்பு வழங்கிவந்தனர்.
இஸ்லாம் நீதித்துறை சார்ந்த தீர்ப்புகளையும் தீர்ப்பு வழங்கும் போது கடைபிடிக்கவேண்டிய நெறிமுறைகளையும் கற்றுத் தருகிறது.
இஸ்லாம் வந்தபின் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிர் வாழ்ந்த காலம் வரை நபியவர்களே நீதிபதியாக இருந்து தீர்ப்பு வழங்கி வந்தார்கள். தேவையை அனுசரித்து சில வழக்குகளில் நபித்தோழர்களை அனுப்பி வைத்துத் தம் சார்பாக அவர்களைத் தீர்ப்பு வழங்கச் செய்தும் உள்ளார்கள்.
அலீ (ரலி), முஆத் பின் ஜபல் (ரலி), அபூமூசா அல்அஷ்அரீ (ரலி), அலாஉ பின் அல்ஹள்ரமீ (ரலி), அத்தாப் பின் அசீத் (ரலி), திஹ்யா அல்கலபீ (ரலி), ஆகியோர் இதற்கு உதாரணங்கள் ஆவர். இவர்கள், தாம் அனுப்பி வைக்கப்பட்ட பகுதிகளில் நீதி வழங்கியதோடு ஆட்சியும் செலுத்தினர்.
பளுவானப் பணி
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நீதிபதிகள் மூவகையினர் ஆவர். அவர்களில் இருவர் நரகத்திற்கும் ஒருவர் சொர்க்கத்திற்கும் செல்பவர்கள் ஆவர்: ஒருவர், உண்மை இன்னதெனத் தெரிந்திருந்தும் அதற்கு எதிராகத் தீர்ப்பளித்தவர். அவர் நரகம் செல்வார். மற்றொருவர், தமக்கு அறிவில்லாத ஒன்றில் தீர்ப்பளித்து அதனால் மக்களின் உரிமைகளை பாழாக்கியவர். அவரும் நரகம் செல்வார். இன்னொருவர், உண்மையின் படி (நேர்மையாகத்) தீர்ப்பளித்தவர். அவர் (மட்டுமே) சொர்க்கம் செல்வார். அறிவிப்பாளர்:- புரைதா பின் அல்ஹசீப் (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-1244
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மறுமை நாளில் (உலகில் நீதி செலுத்திய) நீதிபதி விசாரணைக்கு அழைக்கப்படுவார். அவரிடத்தில் கடுமையான முறையில் கேள்வி கணக்கு கேட்கப்படும். அப்போது, "நான் என்னுடைய வாழ்நாளில் எந்த இருவருக்கிடையிலும் தீர்ப்பளிக்காமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே!" என்று கூறுவார். அறிவிப்பாளர்:- ஆயிஷா (ரலி) அவர்கள் நூல்:-இப்னுஹிப்பான், பைஹகீ, புலூகுல் மராம்-1422
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ وَلِيَ الْقَضَاءَ أَوْ جُعِلَ قَاضِيًا بَيْنَ النَّاسِ فَقَدْ ذُبِحَ بِغَيْرِ سِكِّينٍ ) மக்களிடையே தீர்ப்பு வழங்கும் பொறுப்பை ஏற்றவர் அல்லது தீர்ப்பு வழங்கும் பொறுப்பில் அமர்த்தப்பட்டவர் கத்தியின்றி (கழுத்து) அறுக்கப்பட்டவர் ஆவார். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- திர்மதீ-1247
அதாவது நேர்மையாக தீர்ப்பு வழங்கினார் எதிர்தரப்பின் தொலைக்கும், நேர்மை தவறி தீர்ப்பு வழங்கினால் மறுமையின் தண்டனைக்கும் ஆளாக நேரிடும். அல்லது இது மக்களுடைய உரிமைகள் நிலை நிறுத்தப்படுவதை உறுதி செய்யும் பணி என்பதால் இதில் பளுவும் சுமையும் கூடுதலாக இருக்கும் என்பதையே இவ்வாறு உவமித்து நபியவர்கள் கூறியுள்ளார்கள் எனலாம்.
தவிரவும் கத்தியால் அறுக்கப்பட்டால் எளிதில் உயிர் பிரியும். ஆனால், கத்தியின்றி கழுத்து நெரிபட்டோ வேறு வகையிலோ உயிர் பிரிவதானால் அது சித்தரவதை ஆகும். மக்களிடையே தீர்ப்பு வழங்கும் பொறுப்பை ஏற்றவர் அந்தச் சித்தரவதைக்கு இணையான துன்பத்தைச் சந்திக்க நேரிடும் என்பதை இது குறிக்கிறது எனலாம்.
ஜனாதிபதி உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் "நீர் சென்று (நீதிபதி பொறுப்பேற்று) மக்களிடையே தீர்ப்பு வழங்குவீராக!" என்று சொன்னார்கள். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள் ( أَوَتُعَافِينِي يَا أَمِيرَ الْمُؤْمِنِين ) "இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! (தயவுசெய்து) என்னை விட்டு விடுங்களேன்!" என்று கூறினார்கள்.
அதற்கு ஜனாதிபதி அவர்கள் "உம்முடைய தந்தை (உமர் அவர்கள் நீதிபதியாக இருந்து) தீர்ப்பளித்திருக்க, நீர் ஏன் அதை வெறுக்கிறீர்? என்று கேட்டார்கள்.
அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள் ( مَنْ كَانَ قَاضِيًا فَقَضَى
بِالْعَدْلِ فَبِالْحَرِيِّ أَنْ يَنْقَلِبَ مِنْهُ كَفَافًا ) "யார் நீதிபதியாக
இருந்து நேர்மையோடு தீர்ப்பளித்தாரோ அவர் அதிலிருந்து (நன்மையும் பாவமும்) சரிக்குச்
சமமாக உள்ள நிலையில் திரும்புவதே பெரிய விஷயமாகும்" என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்;
எனவே இ(தைக் கேட்ட)தற்கு பிறகு
வேறு எதை நான் எதிர்பார்க்க முடியும்? என்று (மறு கேள்வி) கேட்டார்கள். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின்
மவ்ஹப் (ரஹ்) அவர்கள் நூல்:- திர்மிதீ-1243
தாயுள்ளம்
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முற்காலத்தில்) இரண்டு பெண்கள் வாழ்ந்தனர் அவர்களில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு புதல்வர்கள் இருந்தனர். ஒரு நாள் ஓநாய் ஒன்று வந்து அவ்விருவரின் புதல்வர்களில் ஒருவரை கொண்டு சென்றுவிட்டது. அவர்களில் ஒருத்தி தன் தோழியிடம் "உன் மகனைத்தான் ஓநாய் கொண்டு சென்றுவிட்டது" என்று கூற, அதற்கு மற்றவள் "உன் மகனைத்தான் ஓநாய் கொண்டு சென்று விட்டது" என்று கூறி சண்டையிட்டுக் கொண்டனர்.
எனவே இருவரும் நபி சுலைமான் (அலை) அவர்களிடம் தீர்ப்பு கேட்டுச் சென்றனர். அப்போது சுலைமான் (அலை) அவர்கள், ( اِئْتُونِي بِالسِّكِّينِ أَشُقُّهُ بَيْنَكُمَا ) "என்னிடம் ஒரு கத்தியை கொண்டு வாருங்கள் நான் உங்கள் இருவருக்குமிடையே (மீதியுள்ள ஒரு மகனை ஆளுக்கு பாதியாக) பிளந்து (பங்கிட்டு) விட்டுவிடுகிறேன்" என்று கூறினார்கள்
உடனே இளையவள், ( لاَ يَرْحَمُكَ اللَّهُ هُوَ ابْنُهَا ) “(பதறிப்போய்) அல்லாஹ் உங்களுக்கு கருணை புரியட்டும். அவ்வாறு செய்து விடாதீர்கள். இவன் அவளுடைய மகன் தான்” என்று கூறினாள். (இவ்வாறு தீர்ப்பளித்த போதும் மூத்தவள் எந்த சலனமும் இல்லாமல் இருந்தாள்) ஆகவே சுலைமான் (அலை) அவர்கள் (தாயுள்ளத்தை அறிந்துகொண்டு) குழந்தை இளையவளுக்குரியது எனத் தீர்ப்பளித்தார்கள். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல் முஸ்லிம்:-3543
பெற்றெடுத்தவள் தான், தன் குழந்தை இறந்து விடுவதை விட; அது எங்கிருந்தாலும் உயிருடன் நல்ல விதமாக இருக்கட்டும் என்று நினைப்பாள். எனவே இந்த விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இளையவளிடம் இருந்தது. மூத்தவளிடம் இந்த மனப்பான்மை இல்லை. எனவே இளையவள் தான் இந்தக் குழந்தையின் தாய் என்று நபி சுலைமான் (அலை) அவர்கள் சரியாக தீர்ப்பளித்துள்ளார்கள்.
நபி சுலைமான் (அலை) அவர்கள் அதிபுத்திசாலித்தனமாக வழக்குகளை தீர்த்து வைத்து நீதியை நிலைநாட்டியதற்காக இன்று வரை நினைவு கூறப்படுகிறார். ஆங்கில உலகம் இவரை Solomon the Wise என்று புகழ்கிறது.
இருதரப்பு விசாரணை
அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது (யமன் தேசத்திற்கு என்னை நீதி நிர்வாக பணிக்காக அனுப்பியபோது) என்னிடம் கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள், ( إِذَا تَقَاضَى إِلَيْكَ رَجُلاَنِ فَلاَ تَقْضِ لِلأَوَّلِ حَتَّى تَسْمَعَ كَلاَمَ الآخَرِ فَسَوْفَ تَدْرِي كَيْفَ تَقْضِي ) "உம்மிடம் இருவர் வழக்கைக் கொண்டு வந்தால், (வாதியின் வாதத்தைக் கேட்டது போன்றே) பிரதிவாதியின் வாதத்தையும் கேட்காமல் வாதிக்குச் சாதகமாக நீர் தீர்ப்பளித்து விடாதீர். ஏனெனில், பின்னர் தான் எவ்வாறு தீர்ப்பளிக்க வேண்டும் என்பதை உமக்கு புலப்படும்" என்று கூறினார்கள். அதற்குப் பின் நான் சரியான முறையில் தீர்ப்பு வழங்குபவராக இருந்து வருகிறேன். நூல் திர்மிதீ-1252
உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். தனது ஒரு கண் பிடுங்கப்பட்ட
நிலையில் ஒருவன் இரத்தம் வடிய வடிய வந்து நீதி கேட்டாலும், அவனது எதிரி வரும்வரை அவனுக்கு நீதி வழங்கி விடாதே!
ஏனெனில் அவனது எதிரி, ஒருவேளை இரண்டு கண்களும்
பிடுங்கப்பட்ட நிலையில் வரக்கூடும்.
இழப்பீடு இல்லை
இம்ரான் பின் ஹுசைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(சண்டையின் போது) ஒரு மனிதர் மற்றொரு மனிதரின் கையை கடித்தார். அவர் தமது கையை இழுக்க,
(கடித்த) அவருடைய முன் பற்கள்
விழுந்துவிட்டன. அவர் நபிகள் நாயகம் (ஸல்)
அவர்களிடம் உதவியை நாடினார்.
அப்போது அண்ணலார் ( مَا تَأْمُرُنِي تَأْمُرُنِي أَنْ آمُرَهُ أَنْ يَدَعَ يَدَهُ فِي فِيكَ تَقْضَمُهَا كَمَا يَقْضَمُ الْفَحْلُ ادْفَعْ يَدَكَ حَتَّى يَعَضَّهَا ثُمَّ انْتَزِعْهَا ) "என்னை என்ன செய்யச் சொல்கிறாய்? கடா ஒட்டகம் கடிப்பதை போன்று நீ கடித்துக் கொண்டு இருக்கும் வரை அவர் தமது கையை உனது வாய்க்குள் வைத்திருக்க வேண்டும் என உத்தரவிட சொல்கிறாயா? நீ உனது கையை அவர் கடித்து முடிக்கும் வரை அவர் வாய்க்குள் விட்டு வை. பிறகு இழுத்து பார் (தெரியும். எனவே இதற்கு இழப்பீடு கிடையாது) என்று கூறி அந்த வழக்கை தள்ளுபடி செய்தார்கள். நூல்:- முஸ்லிம்-3459
ஒருவர் மற்றவரின் பல்லை சேதாரப்படுத்தி விட்டால் அதற்காக அவர் இழப்பீடு வழங்க வேண்டும் என்பது இஸ்லாமிய சட்டமாகும். ஆனால் இம்மனிதரின் பல் சேதாரமானதற்கு இவரோடு சண்டையிட்டவர் காரணமல்ல. மாறாக இவர்தான் அதற்கு காரணம். எனவே சேதாரமடைந்தவருக்கு இழப்பீடு இல்லை என்று அண்ணலார் அற்புதமாக தீர்ப்பு வழங்கியுள்ளார்கள்.
மாற்று வழி
திருமணம் ஆகாத பலவீனமான சிறிய மனிதர் ஒருவர் எங்கள்
வீடுகளில் இருந்து வந்தார். (ஒரு முறை) அவர் எங்கள் அடிமைப் பெண்கள் ஒருத்தியுடன் தகாத
முறையில் நடந்து கொண்டார். இதைப்பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் என் தந்தை சஅத்
(ரலி) அவர்கள் முறையிட்டார். அதற்கு ( اِضْرِبُوهُ حَدَّهُ ) "அந்த பலகீனமான மனிதருக்கு
அதற்கான கசையடி கொடுங்கள்" என்று அண்ணலார் கூறினார்கள்.
"நாயகமே! அவர் மிகவும் பலவீனமானவர்" என்று மக்கள் சொன்னார்கள். அண்ணலார் ( خُذُوا عِثْكَالًا فِيهِ مِائَةُ شِمْرَاخٍ, ثُمَّ اِضْرِبُوهُ بِهِ ضَرْبَةً وَاحِدَةً ) “நூறு கிளைகள் கொண்ட பெரிய மரக்கிளை அல்லது குச்சி ஒன்றை பிடுங்கி அதனால் அவரை ஒரு அடி அடியுங்கள்” என்று கூறினார்கள். அம்மக்களும் அவ்வாறு செய்தனர். அறிவிப்பாளர்:- சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்னது அஹமது, நசாயீ, இப்னுமாஜா, புலூகுல் மராம்-1242
இஸ்லாமிய சட்டம் திருமணமாகாதவர் விபச்சாரம் செய்து விட்டால் அவருக்கு 100 சாட்டையடி கொடுக்க வேண்டும். திருமணமானவர் விபச்சாரம் செய்தால் அவரை கல்லால் அடித்து கொல்ல வேண்டும். இதுவே இஸ்லாமிய சட்டமாகும்.
இந்த பலஹீனமான மனிதரோ திருமணமாகாதவர் அவருக்கு நூறு சாட்டையடி கொடுக்க வேண்டும். அதையும் அவரால் தாங்க முடியாது. மேலும் அவரை அப்படி அடித்தால் இறந்து போவார் என்ற ஒரு நிலை இருந்ததால் சட்டத்தையும் நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் இருப்பதாலும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இப்படி ஒரு மாற்று வழியை சொல்லி அவர் விஷயத்தில் அழகான தீர்ப்பு வழங்கியுள்ளார்கள் என்று அறிய முடிகிறது.
இந்திய நீதிமன்ற தீர்ப்புகளை எண்ணிப் பார்க்கையில் தனி மனித ஒழுக்க வீழ்ச்சியை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணைந்துவிட்டது என்பதே நிதர்சன உண்மையாகும்.
ஒழுக்கக்கேட்டை ஊக்குவிக்கும் விதமாக இந்திய நீதிமன்றங்கள் மூலம் ஓரினச்சேர்க்கையும், கள்ள உறவுகளையும் குற்றச் செயலாக கருத முடியாது; இவை மனித சுதந்திரம் என்று தப்பான அர்த்தம் வைத்து வித்தியாசமான தீர்ப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இந்தத் தீர்ப்பை எழுதுபவர்கள் உண்மையாகவே படித்தவர்களா? அல்லது படித்த முட்டாள்களா? என்று சாமானியனுக்கும் எண்ணத் தோன்றுகிறது. படித்த மற்றும் படிக்காத நடுநிலையாளர்கள் இந்தத் தீர்ப்பை ஒழுக்கத்திற்கு உகந்ததல்ல என்கின்றனர்.
மனிதன் இயற்றிய சட்டங்களும், தீர்ப்பும் காலத்திற்கேற்ப மாறுபடலாம். மாற்றம் ஒன்றே மாறாதது என பேசித் திரியலாம். ஆனால், ஏக இறைவன் அல்லாஹுத்தஆலா மற்றும் இறைத்தூதர் நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்கள் இயற்றிய சட்டங்களும் மார்க்கத் தீர்ப்புகளும் என்றைக்கும் கால ஓட்டத்தால் கரைந்து போவதில்லை. இறைச்சட்டத்தில் மாற்றம் கொண்டுவரவும் இயலாது முடியாது. இவை யுக முடிவு நாள் வரை தொடரும் என்பதில் சந்தேகமில்லை.
எந்த மனிதராலும், எந்தச் சட்டத்தாலும் இஸ்லாம் அனுமதித்ததை விலக்க முடியாது. விலக்கியதை அனுமதிக்க முடியாது. (அதாவது ஹலாலானவை ஹராமாக்க இயலாது. ஹராமானவை ஹலாலாக்க இயலாது.) என்பது கவனிக்கத்தக்கது.
நீதிபதிகளாக இருப்பவர்களுக்கு பல்கலைக்கழகங்களின் படிப்புகளும் பட்டங்களும் மட்டும் போதாது. நற்பண்புகளும், போதிய சிந்தனைத் திறனும், தொலைநோக்குப் பார்வையும், உலக நடைமுறையும் தெரிந்திருக்க வேண்டும்.
நீதிபதிகளுக்கான தகுதி பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டங்கள் மட்டும் போதும் என்று எண்ணியதன் விளைவு தான், அருவருப்பான காரி உமிழும் விசித்திரமான தீர்ப்புகள் வெளிவந்து கொண்டிருப்பதற்குக் காரணம் ஆகும்.
தவிர்க்க வேண்டும்
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது. ( لَعَنَ رَسُولُ اللَّهِ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الرَّاشِي وَالْمُرْتَشِي فِي الْحُكْمِ ) (சாதகமான) தீர்ப்புக்காக
இலஞ்சம் கொடுப்பவனையும் இலஞ்சம் வாங்குபவரையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.
நூல்:- திர்மிதீ-1256
குறுக்கு வழியில் காரியம் சாதிக்க, அதிகாரமோ செல்வாக்கோ உள்ள ஒருவருக்கு முறைகேடாக
வழங்கப்படும் பணம் அல்லது பொருளே இலஞ்சம் அல்லது கையூட்டு எனப்படுகிறது. உண்மையைப்
பொய்யென்றும் பொய்யை உண்மையென்றும் நிறுவுவதற்காக வழங்கப்படும் அன்பளிப்பே இலஞ்சம்
ஆகும். நீதிபதிகள் மற்றும் ஆட்சியாளர்களைப் பொறுத்தமட்டில் அவர்கள் நீதியை நிலைநாட்டுவதற்காக
அன்பளிப்பு பெற்றாலும் நீதியை வளைப்பதற்காக அன்பளிப்புப் பெற்றாலும் அது இலஞ்சம் தான்.
அருமை நாயகம் அவர்கள் கூறினார்கள். ( لاَ يَحْكُمُ الْحَاكِمُ بَيْنَ اثْنَيْنِ وَهُوَ غَضْبَانُ ) "ஒரு நீதிபதி கோபமாக இருக்கும் போது இருவரிடையே தீர்ப்பளிக்க வேண்டாம். அறிவிப்பாளர்:-அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-7158, முஸ்லிம் 3539, திர்மிதீ-1254
மனிதன் கோபப்படும்போது நிதானம் இழக்கிறான். இச்சந்தர்ப்பத்தில் முறையான விசாரணை செய்து உண்மை நிலையை கண்டறிந்து தீர்ப்பளிப்பதில் தடங்கல் ஏற்படுவது இயல்பாகும். கோபம் மட்டுமின்றி, நிதானத்தை இழக்கச் செய்யும் கடும் பசி, மிதமிஞ்சிய உணவு, அளவுக்கு அதிகமான தூக்கம் அல்லது மகிழ்ச்சி போன்ற எல்லா நிலைகளுக்கும் இந்த உத்தரவை பொருந்தும். நூல்:- அல்மின்ஹாஜ், துஹ்ஃபத்துல் அஹ்வதீ
பொதுப்பாதை விவகாரம்
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِذَا تَشَاجَرْتُمْ فِي الطَّرِيقِ فَاجْعَلُوهُ سَبْعَةَ أَذْرُعٍ ) பொதுப்பாதை விஷயத்தில் நீங்கள் கருத்து வேறுபாடு கொண்டால் ஏழு முழம் (அகலமுள்ள) நிலத்தை பொதுவாக ஆக்குங்கள். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-1276
பலருக்குச் சொந்தமான நிலத்தில் பொதுப்பாதைக்கான தேவை ஏற்பட்டு அதற்காக எவ்வளவு நிலம் ஒதுக்கலாம் என்பதில் அவர்களுக்கிடையே ஒத்த கருத்து உருவானால் சரி. அவ்வாறு இல்லாமல் பிரச்சனை ஏற்பட்டால், பாதைக்காக ஏழு முழம் அகலமுள்ள நிலத்தை அவர்கள் ஒதுக்க வேண்டும். இது காலத்தின் தேவையைக் கருதி சொல்லப்பட்ட ஓர் அளவாகும். ஒவ்வொரு சமயத்திலும் அந்தந்தக் காலச் சூழலுக்கு ஏற்ப பொது நலம் கருதி நிலத்தை ஒதுக்கிக் கொள்ள வேண்டியது தான்.
திருட்டு வழக்கு
இரண்டு பேர் நபி தாவூது (அலை) அவர்களிடம் பசு மாட்டைப் பற்றிய ஒரு வழக்கோடு வந்தார்கள். தன் மாட்டை பலவந்தமாக எடுத்துக் கொண்டதாக ஒருவன் மற்றவன் மீது குற்றம் சாட்டினான்.
குற்றம் சாட்டப்பட்டவனோ அதை மறுத்தான். விசாரணையில் ஒரு முடிவுக்கு வரமுடியாத நிலையில் இரவு வரை தாவூது (அலை) அவர்கள் வழக்கை ஒத்தி வைத்தார்கள்.
அன்றைய இரவில் தாவூது (அலை) அவர்களுக்கு ஒரு கனவு வந்தது. அதில் குற்றம் சாட்டியவனை கொலை செய்து விடுமாறு
சொல்லப் பட்டது. நபிமார்களின் கனவு வஹி எனும்
இறைச்செய்தியின் ஒரு வகையாகும்.
அந்தக் கனவு தாவூத் (அலை) அவர்கள் அவர்களுக்கு ஆச்சரியத்தை தந்தது. புகார் செய்தவனையே கொலை செய்வதா? மாட்டை இழந்தவனுக்கு மற்றுமொரு தண்டைனையா? என்று யோசித்த தாவூது (அலை) இது பற்றி புகார் செய்தவனிடமே கேட்டுவிட முடிவு செய்து, அவனை அழைத்து தனக்கு கிடைத்த இறையுத்தரவை சொல்லிக்காட்டி உண்மையைச் சொல்லுமாறு கேட்டார்.
அதற்கு அவன் “ அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் சொன்னது போல் மாடு திருடப்பட்டது உண்மை. ஆனால், இதற்கு முன் நான் இவனது தந்தையை கொன்றேன். அது யாருக்கும் தெரியாது” என்றான். தாவூது (அலை) அவர்கள் அவனை கொல்லுமாறு உத்தரவிட்டார்கள்.
அன்றிலிருந்து எந்த உண்மையை தாவூது (அலை) அவர்களிடம் மறைத்தாலும் அது இறைவன் அருளைக்கொண்டு அவருக்கு தெரிய வந்து விடும் என்பதை உணர்ந்த மக்கள் மிகவும் அஞ்சி நடந்தார்கள். அவருடைய ஆட்சியை நாம் பலப்படுத்தினோம் என்பதற்கு இதுவே அர்த்தம் என அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
நீதியாக நடந்து கொள்ள நினைக்கும் நீதிபதிகள் எப்போதாவது சருகி விடுகிற சந்தர்ப்பங்கள் உருவானாலும்கூட இறைவன் அவர்களது நெற்றியைப் பிடித்து நல்வழிப்படுத்துவான்,
நல்ல நீதிபதிகளுக்கு இறைவன் செய்கிற இந்த உதவிகள் கண்ணுக்குத் தெரியாத உண்மையை வெளியே கொண்டு வரவும் நீதியை நிலை நாட்டவும் துணை செய்யும்.
சாதுரியமிக்கவர்
உம்மு சல்மா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது: அன்சாரித்
தோழர்களில் இருவர் பழைய வாரிசு சொத்தை தங்களுக்கு மத்தியில் பங்கிடுவது தொடர்பான வழக்கை
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தார்கள். ஆனால் அவ்விருவரிடமும் தன் வாதங்களை
நிரூபிக்க எந்த ஆதாரமும் இருக்கவில்லை.
அப்பொழுது அண்ணலார் "(மக்களே!) நீங்கள் உங்கள் வழக்குகளை என்னிடம் கொண்டு வருகிறீர்கள். நான் ஒரு மனிதன் தான். உங்களில் ஒருவர் மற்றவரை விடத் தமது ஆதாரத்தை எடுத்துரைப்பதில் வாக்கு சாதுரியமிக்கவராக இருக்கக்கூடும். எனவே (வழக்கின் போக்கைக் கவனித்து உங்களில் ஒருவருக்குச் சாதகமாக, அவருடைய சகோதரரின் உரிமையில் ஒன்றை நான் தவறுதலாக தீர்ப்பளித்து விட்டால், அவருக்கு நான் நரகத்தின் ஒரு பகுதியையே ஒதுக்கித் தருகிறேன். எனவே, அவர் அதில் எதையும் பெற்றுக் கொள்ள வேண்டாம். அப்பகுதி அவரது கழுத்தில் மாட்டப்பட்ட நிலையிலேயே மறுமை நாளில் அவர் வருவார்" என்று கூறினார்கள்.
அப்போது அவ்விருவரும் இது கேட்டு அழுது விட்டனர். எனது பங்கையும் என் சகோதரருக்கு விட்டுக் கொடுக்கிறேன் என்று இருவருமே கூறினர். அப்போது அண்ணலார், “இதோ இவ்வாறு நீங்கள் இருவரும் கூறிவிட்ட பிறகு நீங்கள் சென்று சொத்தைப் பங்கிட்டுக் கொள்ளுங்கள். நேர்மையாக நடந்து நடந்துகொள்ள முயற்சியுங்கள். பின்னர் அவரவர் பங்கைப் பெற்றுக் கொள்ளுங்கள். பின்னர் உங்களில் ஒருவர் மற்றவருக்கு தமது இசைவைத் தெரிவித்து விடுங்கள்" என்று கூறினார்கள். நூல்:- திர்மிதீ-1259, முஸ்னது அஹ்மது
ஒரு வழக்கில் வாதியின் ஆதாரத்தையும் அவருடைய சாட்சிகளையும்
வைத்து, அல்லது பிரதிவாதி
செய்யும் சத்தியத்தை வைத்து வெளிப்படையான நிலையைக் கருத்தில் கொண்டு நீதிபதி தீர்ப்பளித்துவிடலாம்.
அது உண்மைக்குப் புறம்பாகவும் அமையலாம். இது நீதிபதியின் குற்றமாகாது.
ஏனெனில், அவர் மறைவானவற்றை அறிந்தவர்கள் அல்லர். அவர் ஒரு மனிதரே. வெளிப்படையான ஆதாரத்தையோ சூழலையோ வைத்தே அவர் தீர்ப்பளிக்க முடியும். இதில் பொய் சாட்சிகளையும் பொய் சத்தியத்தையும் வைத்துச் சாதுரியமாக வழக்காடி உண்மையை அறிய விடாமல் நீதிபதியின் கவனத்தைத் திசை திருப்பியவரே குற்றவாளியாவார். நீதிபதி தீர்ப்பளித்த தாலேயே ஒரு பொய் உண்மையாகிவிடாது அனுமதி மறுக்கப்பட்ட ஒன்று (ஹராம்) அனுமதிக்கப்பட்டதாக (ஹலால்) ஆகிவிடாது. நூல்:- அல்மின்ஹாஜ், துஹ்ஃபத்துல் அஹ்வதீ
ஆய்வு செய்தல் அவசியம்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களை (நீதி மற்றும் நிர்வாகப் பொறுப்பேற்கே) எமன் நாட்டுக்கு அனுப்பினார்கள். அப்போது, ( كَيْفَ تَقْضِي ) "எவ்வாறு நீர் தீர்ப்பு வழங்குவீர்" என்று அவரிடம் கேட்டார்கள். அதற்கு அவர், "இறை வேதத்தில் உள்ளபடி தீர்ப்பளிப்பேன்" என்று கூறினார்கள்.
பிறகு அண்ணலார் ( فَإِنْ لَمْ يَكُنْ فِي كِتَابِ اللَّهِ ) "அது குறித்து இறைவேதத்தில் (தீர்வு எதுவும் உமக்குத் தென்பட) இல்லையெனில்?" என்று அவரிடம் கேட்டார்கள். அதற்கு அவர், "இறைத்தூதர் (ஆகிய தங்களின்) வழிமுறைப்படி (தீர்ப்பளிப்பேன்)" என்று பதிலளித்தார்.
பிறகு ( فَإِنْ لَمْ يَكُنْ فِي سُنَّةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ )"அது குறித்து இறைத்தூதர் (ஆகிய எனது) வழிமுறையிலும் (உமக்கு தீர்வேதும் தென்பட) இல்லையெனில்?" என்று அண்ணலார் கேட்டார்கள். அதற்கு அவர், ( أَجْتَهِدُ رَأْيِي ) “(இறை வேதம் குர்ஆன், நபிவழி ஆகிய இரண்டுக்கும் இயைந்த வகையில்) ஆய்வு செய்து சுயமாக முடிவெடுப்பேன்" என்று பதிலளித்தார்.
அப்போது அண்ணலார் ( اَلْحَمْدُ لِلَّهِ الَّذِي وَفَّقَ رَسُولَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ ) "அல்லாஹ்வின்
தூதருடைய தூதுவருக்கு நல்வழி காட்டிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்" என கூறினார்கள். நூல்:- திர்மிதீ-1249
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அருமை நாயகம் (ஸல்) அவர்களின் அடிமைப் பெண்ணுடன் இணைத்து ஒரு மனிதர் அவதூறு சொல்லப்பட்டார். அப்போது அண்ணலார் அலீ (ரலி) அவர்களிடம், ( اِذْهَبْ فَاضْرِبْ عُنُقَهُ ) "நீங்கள் சென்று அவருடைய கழுத்தை வெட்டிவிடுங்கள்" என்று கூறினார்கள்.
அவ்வாறு அலீ (ரலி) அவர்கள் சென்றபோது, அவர் சுற்றுச் சுவர் இல்லாத ஒரு கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தார். அவரிடம் அலீ (ரலி) அவர்கள், "மேலே வா" என்று தமது கையை கொடுத்து அவரை வெளியேற்றினார்கள். அப்போது அவர் இன உறுப்பு துண்டிக்கப்பட்ட வராக, இன உறுப்பே அற்றவராக இருந்தார்.
ஆகவே, அலீ (ரலி) அவர்கள் அவரை(க் கொல்லாமல்) விட்டுவிட்டார்கள். பிறகு அண்ணலாரிடம் வந்து, ( يَا رَسُولَ اللَّهِ إِنَّهُ لَمَجْبُوبٌ مَا لَهُ ذَكَرٌ ) "நாயகமே! அவர் இன உறுப்பு துண்டிக்கப்பட்டவர்; இன உறுப்பே அற்றவர் ஆவார்" என்று (கூறி தான் அவரை கொல்லாமல் விட்டதற்கான காரணத்தை) கூறினார்கள். நூல்:- முஸ்லிம்-5352
மற்றொரு அறிவிப்பில் "பிரசன்னமாக இருப்பவருக்கு தெரிவதெல்லாம் மறைந்து இருப்பவருக்கு தெரிவதில்லை" என்று அண்ணலார் கூறியதாக அதிகமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட அம்மனிதரை விசாரித்த பிறகு உண்மையெனில், அவர் கொல்லப்பட வேண்டும் என்பது அண்ணல் நபி (ஸல்) அவர்களின் உத்தரவு. எனவே அம்மனிதரின் நிலையை கண்ட பிறகு அதற்குரிய காரணமில்லாததால் அலீ (ரலி) அவர்கள் அம்மனிதரை கொல்லாமல் விட்டுவிட்டார்கள். இதை அண்ணலாரும் நியாயமானதாகவே கருதினார்கள்.
ஒரு மனிதரைப் பற்றி என்னத்தான் குற்றம்சாட்டப்பட்டாலும், தீர விசாரிக்காமல் அவரைப் பற்றி ஒரு முடிவுக்கு வரக்கூடாது.
முறையாக விசாரிக்கப்படாமல் எழுதப்படும் தீர்ப்புகள் அனைத்தும் குப்பையே! அதனை எழுதியவரும் அதே தரத்தை சார்ந்தவர் ஆகும்.
அனைவரும் சமமே!
ஜனாதிபதி அலீ (ரலி) அவர்களின் கேடயம் ஒன்று காணாமல் போய்விட்டது. பலமுறை தேடியும் அது கிடைக்கவில்லை. கடைசியாக அந்த கேடயம் ஒரு யூதனிடம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஜனாதிபதி அவர்கள் அந்த யூதனிடம் தனது கேடயத்தை தருமாறு கேட்டபோது, அதை அவன் மறுத்து, கேடயம் தன்னுடையது என அவன் சாதித்தான். சுற்றியிருந்த நண்பர்களுக்கெல்லாம் கோபம் வந்துவிட்டது. அந்த யூதனை மிரட்டிப் பார்த்தார்கள். ஆனால் ஜனாதிபதி அவர்கள், நண்பர்களை உடனடியாக கண்டித்து தடுத்துவிட்டார்கள்.
ஜனாதிபதி அவர்கள் நகரத்தின் நீதிமன்றத்தில் இது சம்பந்தப்பட்ட வழக்கை தாக்கல் செய்தார்கள். சாமானியனான யூதனுக்கும் ஜனாதிபதி அவர்களும் மத்தியில் நடைபெறுகின்ற வித்தியாசமான வழக்காக இருந்தது.
நீதிமன்றத்தில் நீதிபதி தமது இடத்தில் அமர்ந்திருந்தார். ஜனாதிபதி அவர்கள் நீதிமன்றத்துக்குள் நுழைந்தபோது, நீதிபதி ஷுரைக் பின் ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் சலாம் சொல்லவோ, தமது இடத்திலிருந்து எழுந்து நிற்கவோ இல்லை. ஜனாதிபதிக்காக எந்தத் தனி மரியாதையையும் அளிக்கவில்லை. பிரதிவாதியான யூதனுடன் வாதியான ஜனாதிபதி அவர்களும் சாதாரணமான இடமொன்றில் தான் அமர்ந்திருந்தார்கள் வழக்கு தொடங்கியது.
நீதிபதி: யூதனை நோக்கி கேட்டார். உன் மீது இந்நாட்டின் ஜனாதிபதி அவர்கள் தமது கேடயத்தை திருடிவிட்டதாக வழக்கு தொடர்ந்துள்ளார். நீர் கேடயம் திருடியது உண்மைதானா?
யூதன்: இல்லை நான் திருடவில்லை. என் மீது பொய்யாக இந்த வழக்கு ஜோடிக்கப்பட்டுள்ளது. கேடயம் என்னுடையதுதான். அது என்னிடம் தான் இருக்கிறது.
நீதிபதி: ஜனாதிபதி அவர்களே இந்த கேடயம் உங்களுடையதுதான் என நிரூபிக்க சாட்சிகள் யாரேனும் உண்டா?
ஜனாதிபதி: உண்டு எனது மகனார் ஹசன் (ரலி) அவர்களும் எனது ஊழியரும் எனது சாட்சிகள் ஆகும்.
நீதிபதி: ஜனாதிபதி அவர்களே! தந்தைக்கு ஆதரவான மகனுடைய சாட்சியையும், முதலாளிக்கு ஆதரவான ஊழியரின் சாட்சியையும் ஏற்கக் கூடாது என்பது இஸ்லாமியச் சட்டம். எனவே சரியான சாட்சி இல்லாததால் உங்கள் வழக்கை தள்ளுபடி செய்கிறேன்.
அந்த சமயத்தில் நிசப்தத்தில் நீதிமன்றம் அழுந்திக் கிடந்தது. எந்தவொரு முணுமுணுப்போ, சலசலப்போ அங்கே காணமுடியவில்லை. அப்போது பிரதிவாதியான யூதன் அவசரமாக எழுந்து ஜனாதிபதி அவர்களை நோக்கி, ஜனாதிபதி அவர்களே! என்னை மன்னித்து விடுங்கள். இந்த கேடயம் உங்களுடையது தான். நான் வேண்டுமென்றே இந்த வழக்கை உண்டாக்கினேன். முஸ்லிம்களான உங்களுடைய நீதியுணர்வை சோதிக்க நினைத்தேன். உங்களின் சமுதாயத்தின் நீதி உணர்வை என்னவென்று புகழ்வேன்! என்று கூறி அந்த யூதர் இஸ்லாத்தில் இணைந்து விட்டார். நூல்:- தாரிகுல் குலபா , சுவரும் மின் ஹயாத்துத் தாபிஈன்
நீதித்துறையின் மீது எந்தவிதமான அரசாங்க, அரசு நிர்வாகத் தலையீடு இருக்கக்கூடாது என்பது இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளில் உள்ள முக்கிய அம்சமாகும்.
நீதிபதிகள் இறைவனுக்கு மட்டுமே பயந்து தம்முடைய மனசாட்சியின் படி செயல்பட வேண்டும் அதைத் தவிர வேறு எந்த வகையிலும் அவர்கள் கட்டாயப்படுத்த படக்கூடாது. எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் நீதித்துறை விவகாரங்களில் செல்வாக்கை செலுத்தக்கூடாது. எந்த அளவுக்கு என்றால், ஆட்சியாளர்களுக்கு எதிராகக் கூட தீர்ப்பு கூறும் அளவுக்கு நீதிபதிகளுக்கு சுதந்திரம் இருக்க வேண்டும்.
சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானவை. சாதாரண ஒரு பாமர மனிதனிலிருந்து உயர் நிலையிலுள்ள ஆட்சியாளர் வரை அனைவரையும் சட்டம் சமமாகவே கருத வேண்டும். தனிப்பட்ட விசேஷ சலுகை யாருக்குமே இருக்கக் கூடாது என்பது திருக்குர்ஆனின் கூற்றாகும்.
(நபியே கூறுவீராக!) உங்களிடையே நீதியை நிலைநாட்ட நான் ஆணையிடப்பட்டுள்ளேன். திருக்குர்ஆன்:-42:15
பேரறிஞர் ஹசன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
நீதிபதிகளிடம் அல்லாஹ் மூன்று உறுதிமொழிகளைப் பெறுகிறான். அவர்கள் நீதியை அற்ப விலைக்கு
விற்கக் கூடாது. தீர்ப்பளிப்பதில் மன விருப்பங்களைப் பின்பற்றக் கூடாது. நீதி விஷயத்தில்
அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் அஞ்சக் கூடாது.
இதைக் கூறிவிட்டு பின்வரும் திருக்குர்ஆனின்
வசனங்களை ஓதிக் காட்டினார்கள்.
தாவூதே! உம்மைப் பூமியில் பிரதிநிதியாக நாம் நியமித்தோம்.
எனவே நீர் மக்களிடையே நியாயமான தீர்ப்பு வழங்குவீராக. மன விருப்பங்களைப் பின்பற்றாதீர்.
அது அல்லாஹ்வின் (நேரிய) வழியிலிருந்து உண்மை வழி தவறச் செய்துவிடும். (38:26)
மனிதர்களைக் கண்டு அஞ்சாதீர்கள்; என்னையே அஞ்சுங்கள். (5:44)
என் வசனங்களைச் சொற்ப விலைக்கு விற்று விடாதீர்கள்.
(2:41) நூல்:- தஃப்சீர் இப்னு அபீஹாத்திம்,
தஃப்சீர் இப்னு கஸீர்
தன் இனத்தை சார்ந்தவர்கள் அல்லது தனக்கு பொருளாதாரம் மற்றும் பதவி உயர்வு கிடைக்க வேண்டும் அல்லது ஆட்சியாளர்களின் அன்பை பெற வேண்டும் என்றெண்ணியே இன்றைய பெரும்பாலான நீதிபதிகளின் தீர்ப்புகள் நியாயமற்றதாக அமைந்து வருகிறது.
சாமானியனோ ஆட்சியாளனோ யார் செய்தாலும் “குற்றம் குற்றமே” என்று, தீர்ப்பு வழங்கும் நீதிபதிகளால் மட்டுமே நீதி நியாயங்கள் நிலைநாட்டப்படும். மக்களும் நிம்மதியோடு வாழ முடியும்.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِنَّ اللَّهَ مَعَ الْقَاضِي مَا لَمْ يَجُرْ فَإِذَا جَارَ تَخَلَّى عَنْهُ وَلَزِمَهُ الشَّيْطَانُ ) நீதிபதி (தமது தீர்ப்பில்) அநீதி இழைக்காத வரையில் அவருடன் அல்லாஹ் இருக்கிறான். அவர் அநீதி இழைக்கும் போது அவரிடமிருந்து அல்லாஹ் விலகி விடுகிறான்; அவருடன் ஷைத்தான் ஒட்டிக் கொள்கிறான். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் நூல்:-திர்மிதீ-1251
சாதகம் பாதகமின்றி
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு திராட்சைத் தோட்டத்தினுள் ஆடுகள் புகுந்து அங்கு முளைத்திருந்த திராட்சை கொலைகளை
நாசப்படுத்தி விட்டது. அது தொடர்பாக தொடர்பான வழக்கு நபி தாவூத் (அலை) அவர்களிடம் வந்தபோது
அன்னார் அந்த ஆடுகள் பாதிக்கப்பட்ட தோட்ட உரிமையாளருக்குரியவை என்று தீர்ப்பளித்தார்கள்.
அப்போது (அன்னாரின் மகனார்) சுலைமான் (அலை) அவர்கள்
( غَيرُ هَذَا يَا نَبِيَّ اللَّهِ ) "அல்லாஹ்வின் தூதரே!
இந்த வழக்கில் வேறு விதமாக தீர்ப்பளிக்கலாம்" என்றார். ( وَمَا ذَاكَ؟ ) “அது என்ன?” என்று தாவூத் (அலை)
அவர்கள் கேட்க, சுலைமான் (அலை) அவர்கள், ( تَدْفَعُ الْكَرْمَ إِلَى صَاحِبِ الْغَنَمِ، فَيَقُومُ عَلَيْهِ حَتَّى
يَعُودَ كَمَا كَانَ ) "திராட்சைத் தோட்டத்தை
ஆடுகளின் உரிமையாளரிடம் ஒப்படைக்க வேண்டும். அத்தோட்டம் பழைய நிலைக்குத் திரும்பும்
வரை அதை (முறையாக செப்பனிட்டு) அவர் பராமரிப்பார்.
( وَتَدْفَعُ
الْغَنَمَ إِلَى صَاحِبِ الْكَرْمِ فيُصيب مِنْهَا حَتَّى إِذَا كَانَ الْكَرْمُ كَمَا
كَانَ
) அவ்வாறே ஆடுகளை தோட்ட உரிமையாளரிடம் ஒப்படைக்க வேண்டும். தோட்டம் பழைய நிலைக்குத்
திரும்பும் வரை அந்த ஆடுகளிலிருந்து அவர் பயனடைந்து கொள்ளலாம்" என்று கூறினார்.
(அவ்வாறே தீர்ப்பளிக்கப்பட்டது. தோட்டமும் பழைய
நிலையை அடைந்தது. பின்னர்) தோட்டம் அதன் உரிமையாளரிடமும் ஆடுகள் அதன் உரிமையாளரிடமும்
அளிக்கப்பட்டன. நூல்:- தஃப்சீர் தபரீ, தஃப்சீர் இப்னு கஸீர்
நபி தாவூத் (அலை) அவர்களும், சுலைமான் (அலை) அவர்களும் வேறு தீர்ப்புகளை அளித்திருந்தாலும், அவரவர் ஆய்வின்படி இரண்டுமே சரிதான். இருப்பினும், சுலைமான் (அலை) அவர்கள் அளித்த தீர்ப்பு வாதி, பிரதிவாதி ஆகிய இருவரில் யாருக்குமே தமது பொருள்
தம் கையை விட்டுப் போகாத வகையில் அமைந்திருந்தது சிறப்பாகும்.
இத்தீர்ப்பின் மூலம் தோட்டக்காரரின் இழப்புக்கு
ஈடும் கிடைத்துவிடும். தோட்டமும் பழைய நிலையிலேயே
அவரது கைக்கு வந்துவிடும். ஆடுகளின் உரிமையாளர் ஆடுகள் ஏற்படுத்திய சேதத்தைச் சீர்படுத்தி, சேதத்திற்கான இழப்பீட்டையும் வழங்கிவிடுகிறார்.
அத்துடன் ஆடுகளும் அவரது கைக்குத் திரும்பி வந்துவிடும்
இந்நிகழ்ச்சியைப் பற்றி திருக்குர்ஆன்
(21:78,79) விவரிக்கிறது.
வாதி, பிரதிவாதிக்கு மத்தியில் தீர்ப்பு வழங்கும் போது சாதகம் பாதகம் இல்லாமல் நடுநிலையாக தீர்ப்பு வழங்கும் அளவிற்கு நீதிபதிகள் போதிய அறிவாற்றல் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
இஸ்லாமிய தீர்ப்பு முறைகள் மட்டுமே அனைத்துக் கால மக்களுக்கும் ஏற்புடையவையாகும். எனவே, அதன் பிரகாரம் செயலாற்றி வாழ அல்லாஹுத்தஆலா நம் அனைவருக்கும் அருள்புரிவானாக! ஆமீன்!
மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951
👍💐
ReplyDelete